தமிழ் அரங்கம்

Saturday, March 17, 2007

காஷ்மீர்:இந்திய இராணுவத்தின் கொலைக்களம்!

காஷ்மீர்:

இந்திய இராணுவத்தின் கொலைக்களம்!


""ஜம்முகாசுமீர் போலீசு சிறப்பு நடவடிக்கை அதிரடிப் படையும், மத்திய ரிசர்வ் போலீசு படையும் இணைந்து பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவனைச் சுட்டுக் கொன்றதோடு, அத்தீவிரவாதியிடமிருந்து ஆயுதமொன்றையும் கைப்பற்றினர்'' இப்படியொரு முதல் தகவல் அறிக்கை டிச.9, 2006 அன்று, ஜம்முகாசுமீர் மாநிலத்தில் உள்ள கந்தேர்பால் போலீசு நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. இந்த முதல் தகவல் அறிக்கையே, மறுநாள் பத்திரிகைகளில் செய்தியாகவும் வெளிவந்தது.


இந்தச் சம்பவம் நடந்து முடிந்து இரண்டு மாதங்கள் கழித்து, இந்த "மோதல் கொலை'யின் பின்னே உள்ள உண்மை, அந்தத் "தீவிரவாதி'யின் கல்லறையில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. சிறப்பு நடவடிக்கை அதிரடிப் படையாலும், துணை இராணுவப் படையாலும் சுட்டுக் கொல்லப்பட்டவர் பாக். தீவிரவாதி இல்லை என்பதும்; அவர், ஜம்முகாசுமீர் மாநிலத்தில் உள்ள லர்னூ கிராமத்தைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான் பத்தர் என்ற தச்சுத் தொழிலாளி என்பதும் தற்பொழுது அம்பலமாகியிருப்பதோடு, இப்போலி மோதல் கொலை காசுமீர் பள்ளத் தாக்கில் பெரும் போராட்டப் புயலையே உருவாக்கி விட்டது.


அப்துல் ரஹ்மான் பத்தர், தனது நண்பனும், சிறப்பு நடவடிக்கை அதிரடிப் படையில் தலைமைக் காவலராக வேலை பார்த்துவரும் ஃபரூக் அகமது பத்தரிடம், காசுமீர் மாநில போலீசு துறையில் தனக்கு ஏதாவது ஒரு வேலை வாங்கித் தருவதற்காக, 75,000/ ரூபாய் இலஞ்சம் கொடுத்திருந்தார். நாட்கள் நகர்ந்ததேயொழிய, அப்துல் ரஹ்மான் பத்தருக்கு போலீசு துறையில் வேலை எதுவும் கிடைக்கவில்லை. இதனால் அப்துல் ரஹ்மான் பத்தர், தான் இலஞ்சமாகக் கொடுத்தப் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடும்படி போலீசுக்காரன் ஃபரூக் அகமதுவிடம் கேட்கத் தொடங்கினார். இதனையடுத்து, ஃபரூக் அகமது, தன்னை டிச.8, 2006 அன்று சிறீநகரில் வந்து சந்திக்கும்படி அகமது ரஹ்மானுக்குத் தகவல் கொடுக்க, அவரும் ஃபரூக் அகமதுவைச் சந்திக்கக் கிளம்பிச் சென்றார். அந்தப் பயணமே, அப்துல் ரஹ்மான் பத்தரின் இறுதிப் பயணமாகி விட்டது.


சிறீநகருக்குக் கிளம்பிச் சென்ற அப்துல் ரஹ்மான் பத்தர் ஆறு நாட்கள் கழிந்த பிறகும் வீடு திரும்பாததையடுத்து, அவரது உறவினர்கள் சிறீநகர் தெற்கு மண்டல போலீசு கண்காணிப்பாளரிடம் புகார் செய்தனர். அப்துல் ரஹ்மான் பத்தர் காணாமல் போனது பற்றிய விசாரணை ஒரு பெரும் பூதத்தைக் கிளப்பிவிடப் போவதை அறியாமலேயே, போலீசாரும் விசாரணையை நடத்தினர்.


அப்துல் ரஹ்மானின் செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டபொழுது, அது செயல்படாமல் முடங்கிப் போயிருப்பது தெரிய வந்தது. எனினும், பாரத் சஞ்சார் நிகாம் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர், அப்துல் ரஹ்மானின் செல்போன் எண் முடங்கிப் போய்விட்ட பிறகும், அவரது செல்போன், வேறொரு எண்ணில் இயங்கி வருவதைக் கண்டுபிடித்து, போலீசுக்குத் தகவல் கொடுத்தார். அப்துல் ரஹ்மானின் செல்போனை வைத்திருந்த அப்துல் ரஷீத் வாகே என்பவரை போலீசார் விசாரித்தபொழுது, அவர், தான் அந்த செல்போனை, கந்தேர்பால் நகரில் தீவிரவாத எதிர்ப்பு போலீசு பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் ஃபரூக் அகமது குட்டுவிடமிருந்து வாங்கியதாக கூறினார். தீவிரவாத எதிர்ப்பு போலீசு உதவி ஆய்வாளர் குட்டு விசாரிக்கப்பட்ட பொழுது, பூதம் வெளியே வந்தது.


""அப்துல் ரஹ்மான் பத்தர், ஃபரூக் அகமது பத்தர் கூறியபடி, டிச.8, 2006 அன்று ஃபரூக்கைப் பார்க்க சிறீநகருக்கு வந்து, ஃபரூக்கின் வீட்டில் தங்கியிருந்ததாகவும்; அன்று மதியம் தனது தலைமையில் ஒரு போலீசு படை

ஃபரூக்கின் வீட்டிற்குச் சென்று, அப்துல் ரஹ்மான் பத்தரை அங்கிருந்து கந்தேர்பாலுக்குக் கடத்திச் சென்று மறுநாள் சுட்டுக் கொன்றுவிட்டு, கையோடு சடலத்தைப் புதைத்து விட்டதாகவும்; அதன்பிறகு பாக். தீவிரவாதியைச் சுட்டுக் கொன்றதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததாகவும்'' தீவிரவாத எதிர்ப்பு உதவி ஆய்வாளர் ஃபரூக் அகமது குட்டு, போலீசிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.


இலஞ்சப் பணத்தைத் திருப்பிக் கேட்டதற்காக, அப்துல் ரஹ்மான் பத்தர் சுட்டுக் கொல்லப்படவில்லை. காசுமீர் பள்ளத்தாக்கில் தீவிரவாதிகளை வேட்டையாடுவதற்காக இறக்கி விடப்பட்டிருக்கும் இராணுவம் துணை இராணுவப் படைகள் சிறப்பு அதிரடிப் படைகள் தங்களுக்குள் கூட்டணி வைத்துக் கொண்டு, அப்பாவிகளை இரகசியமாகக் கடத்திக் கொண்டு போய் போலி மோதலில் சுட்டுக் கொன்றுவிட்டு, அவர்களை பாக். தீவிரவாதிகள் என்றோ, அடையாளம் தெரியாத தீவிரவாதி என்றோ முத்திரை குத்தி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துவிட்டு, இந்தக் கொலைக்கு கிடைக்கும் பரிசுப் பணத்தையும், பதவி உயர்வையும் பங்கு போட்டுக் கொள்ளும் கொலை திட்டத்தை வெகு காலமாகவே நடத்தி வருகின்றன. அப்துல் ரஹ்மான் பத்தரைப் போலி மோதலில் சுட்டுக் கொன்றதன் மூலம், சிறப்பு அதிரடிப் படை மற்றும் மத்திய ரிசர்வ் போலீசு படையைச் சேர்ந்த அரசு பயங்கரவாதிகள் பங்கு போட்டுக் கொண்ட பரிசுத் தொகை ரூ. 1,30,000/


ஒவ்வொரு மாதமும் இத்தனை தீவிரவாதிகளை "மோதலில்' சுட்டுக் கொன்றிருக்கிறோம் எனக் கணக்குக் காட்டுவதற்காகவே, இராணுவமும் போலீசும் அப்பாவி முசுலீம்களை போலி மோதலில் சுட்டுக் கொல்வதை சர்வ சாதாரணமாக நடத்தி வருகின்றன. போலீசாரால் புதைக்கப்பட்டு, இப்பொழுது மறு பிரேதப் பரிசோதனைக்காகத் தோண்டி எடுக்கப்படும் "தீவிரவாதிகளின்' பிணங்கள் இந்த உண்மையை மீண்டும் நாறடித்து விட்டன.


· 13ஆவது தேசிய துப்பாக்கிப் படை பிரிவைச் சேர்ந்த சிப்பாய்களும், போலீசாரும் இணைந்து நடத்திய தாக்குதலில் ஜெய்ஷ்இமுகம்மது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த, ஜாஹித் அலி என்ற பாக். பயங்கரவாதி இறந்து போனதாக அக்.5, 2006 அன்று சும்பல் போலீசு நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. "மோதலில்' கொல்லப்பட்ட அந்த பாகிஸ்தான் பயங்கரவாதி, தோடா மாவட்டத்தில் உள்ள பனிஹல் கிராமத்தைச் சேர்ந்த ஷெளகத் கான் என்பது தற்பொழுது அம்பலமாகியிருக்கிறது.


· 5ஆவது தேசிய துப்பாக்கி படைப்பிரிவு சிப்பாய்களும், போலீசும் இணைந்து அடையாளம் தெரியாத தீவிரவாதியைச் சுட்டுக் கொன்றுவிட்டதாகவும்; அந்தத் தீவிரவாதியிடமிருந்து ஒரு ""ஏ.கே.'' இரக துப்பாக்கி, ஒரு கைத்துப்பாக்கி மற்றும் வெடி மருந்து பொருட்களைக் கைப்பற்றியதாகவும் பிப்.17, 2006 அன்று கந்தேர்பால் போலீசு நிலையத்தில் முதல் தகவல் பதிவாகி இருக்கிறது.


அடையாளம் தெரியாத அந்தத் தீவிரவாதி சிறீநகர் தெருக்களில் நறுமணத் திரவியங்களை விற்கும் நஸிர் அகமது தேகா என்ற நடைபாதை வியாபாரி என்றும்; அவர் கோகேர்நாக் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தற்பொழுது அடையாளம் காணப்பட்டிருக்கிறது. அவர் நறுமணத் திரவியங்களைத் தெருத்தெருவாக எடுத்துச் சென்று விற்பதற்காகப் பயன்படுத்தி வந்த பெட்டி, துணை ஆய்வாளர் ஃபரூக் அகமது குட்டுவின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.


· மார்ச் 14, 2006 அன்று 24ஆவது தேசிய துப்பாக்கிப் படை சிப்பாய்களால் சுட்டுக் கொல்லப்பட்ட அடையாளம் தீவிரவாதி, துணி வியாபாரியான குலாம் நபி வானி என்பதும்; மார்ச் 8, 2006 அன்று 24ஆவது தேசிய துப்பாக்கிப் படை சிப்பாய்களால் சுட்டுக் கொல்லப்பட்ட அடையாளம் தெரியாத தீவிரவாதி, ஜம்முகாசுமீர் மாநில அரசில் கடைநிலை ஊழியர் அலி முகம்மது பத்தர் என்பதும் தற்பொழுது நிரூபணமாகியிருக்கிறது.


···


""போலி மோதல் கொலைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்; ஜம்முகாசுமீர் மாநில போலீசு துறையைச் சேர்ந்த சிறப்பு நடவடிக்கைகள் அதிரடிப் படையை முழுமையாகக் கலைக்க வேண்டும்; ஜம்மு காசுமீரில் இருந்து இராணுவமும் துணை இராணுவமும் வெளியேற வேண்டும்'' எனப் போராடிக் கொண்டிருக்கும் அம்மாநில மக்களின் ஆத்திரத்தில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக, இந்த ஐந்து போலி மோதல் கொலைகள் பற்றி நீதி விசாரணை நடத்தப்படும் என அறிவித்திருக்கிறது, காங். கூட்டணி ஆட்சி. சிறப்பு நடவடிக்கைகள் அதிரடிப் படையைச் சேர்ந்த முதுநிலை போலீசு கண்காணிப்பாளர், துணை போலீசு கண்காணிப்பாளர் உள்ளிட்டு ஐந்து காக்கிச் சட்டை கிரிமினல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கொலைகள் பற்றி இராணுவத்திற்குள் விசாரணை நடத்தப்படும் என்று இராணுவ அமைச்சரும், இராணுவ அதிகாரிகளும் அறிவித்துள்ளனர். அரசாங்கம் இப்படி முண்டா தட்டுவதை வைத்துக் கொண்டு அரச பயங்கரவாதக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு விடுவார்கள் என நம்பிவிட முடியுமா?


பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள தெலினா என்ற ஊரைச் சேர்ந்த மன்சூர் அகமது மிர், செப்.7, 2003 அன்று, தேசிய துப்பாக்கிப் படைப் பிரிவைச் சேர்ந்த கேப்டன் ஷர்மாவால், அவரது வீட்டில் இருந்து இழுத்துச் செல்லப்பட்டார். அதன்பிறகு மன்சூர் அகமது மிர் ""காணாமல்'' போய்விட்டார். மூன்று ஆண்டுகள் கழித்து, தெலினாவில் ஒரு மருத்துவமனை கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டப்பட்ட பொழுது, அந்த இடத்தில் மிர் புதைக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்தன. மிர்ரின் படுகொலைக்கு நீதி கேட்டு காசுமீர் மக்கள் 15 நாட்கள் போராடிய பிறகு, காங். கூட்டணி ஆட்சி நீதிமன்ற விசாரணைக் கமிசனை அமைத்தது. இந்த கமிசன் அமைக்கப்பட்டு எட்டு மாதங்கள் கழிந்து விட்டாலும், விசாரணை ஒரு அங்குலம் கூட முன்னேறவில்லை.


""இராணுவம் விசாரணை நடத்த ஒத்துழைக்க மறுக்கிறது; குறைந்த பட்சம், கேப்டன் ஷர்மா இப்பொழுது எங்கு இருக்கிறார் என்ற தகவலைக் கூடச் சொல்ல மறுக்கிறது'' என ஜம்மு காசுமீர் மாநில தலைமை போலீசு அதிகாரியே குற்றஞ் சுமத்தியிருக்கிறார்.


2002ஆம் ஆண்டு சிட்டிசிங்புரா என்ற கிராமத்தில், ஐந்து அப்பாவி முசுலீம்களை, பாக். பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி இந்திய இராணுவம் கொன்றொழித்தது. இந்தப் படுகொலை அம்பலமாகி மக்கள் போராடிய பிறகு, மையப் புலனாய்வுத் துறையின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இராணுவத்தின் இழுத்தடிப்பால், சி.பி.ஐ. விசாரணையை முடிக்கவே நான்கு ஆண்டுகளாகி விட்டது. கடந்த ஆண்டு மே மாதம், இப்படுகொலை தொடர்பாக, சி.பி.ஐ. ஐந்து இராணுவ அதிகாரிகள் மீது குற்றப் பத்திரிகைத் தாக்கல் செய்துவிட்டாலும், கடந்த ஒரு ஆண்டில், அந்த ஐந்து அதிகாரிகள் ஒருமுறை கூட நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் ஏறி நிற்கவில்லை.


ஜம்முகாசுமீர் மாநிலத்தில் தீவிரவாதிகளை ஒழிப்பது என்ற பெயரில் போலி மோதல்களை நடத்தியிருக்கும் அரசு பயங்கரவாதிகளை விசாரித்துத் தண்டிப்பதில், இந்திய ஆளுங் கும்பல் காட்டி வரும் "அக்கறைக்கு' இவை போல ஆயிரத்தெட்டு வழக்குகளை உதாரணமாக எடுத்துக் காட்டலாம். அம்மாநில மனித உரிமை கமிசனின் தலைவராக நியமிக்கப்பட்ட நீதிபதி அலி முகம்மது மிர், ""இந்த கமிசன் சர்வதேச சமூகத்தை முட்டாளாக்குவதற்கான கண்துடைப்பு நடவடிக்கை தவிர, வேறொன்றுமில்லை'' எனக் குறிப்பிட்டுப் பதவி விலகியதை, மனித உரிமை மீறல் பற்றிய ஆளும் கும்பல்களின் பசப்பல்களுக்கு முத்தாய்ப்பாகக் குறிப்பிடலாம்.


தற்பொழுது அம்பலமாகியுள்ள இந்த ஐந்து படுகொலை நடவடிக்கைகளிலும், தேசிய துப்பாக்கிப் படையைச் சேர்ந்த மூன்று படைப் பிரிவுகள் பங்கெடுத்துக் கொண்டிருப்பது நிரூபணமாகியிருக்கிறது. இப்படிப்பட்ட போலி மோதல் கொலைகளை, ""தாளிப்பு நடவடிக்கை'' எனப் பெயரிட்டு அழைக்கிறது, இராணுவம். ""1989ஆம் தொடங்கி இன்று வரை, ஏறத்தாழ 10,000 அப்பாவிகள் பாதுகாப்பு படைகளால் இழுத்துச் செல்லப்பட்ட பின் காணாமல் போய்விட்டதாக''க் குறிப்பிடுகிறது. ""காணாமல் போனவர்களின் பெற்றோர் அமைப்பு.'' காசுமீரில் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடங்கிய பிறகு 60 பேர் மட்டுமே காணாமல் போயிருப்பதாகக் கூறி வந்த காங்.கூட்டணி ஆட்சி, இப்பொழுது 1,017 அப்பாவிகள் காணாமல் போய் விட்டதாகக் கணக்குக் காட்டுகிறது.


ஜம்முகாசுமீர் போலீசு துறையைச் சேர்ந்த ""சிறப்பு நடவடிக்கைகள் குழு'' என்ற அதிரடி படைப் பிரிவு, இரகசிய கொலைக் குழுவாகவே செயல்பட்டு வருகிறது. இராணுவமும், துணை இராணுவமும் ஆள் காட்டி வேலை செய்வதற்காகவே சரணடைந்த போராளிகளைப் பயன்படுத்தி வருகின்றன. தீவிரவாதி என முத்திரை குத்திவிடுவோம் என மிரட்டியே அப்பாவி மக்களிடம் பணம் பறிப்பதை, ஒரு தொழிலாகவே இராணுவமும், துணை இராணுவமும் நடத்தி வருகின்றன. ஜம்முகாசுமீர் மாநிலத்தில் மட்டுமின்றி, பனி படர்ந்த சியாச்சின் மலைப் பகுதியில் எல்லைப் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருக்கும் இராணுவத்தினர் கூட, பரிசு பணத்திற்காகவும், பதவி உயர்வுக்காகவும் போலி மோதல் நடவடிக்கைகளை நடத்தி வருவதும் ஏற்கெனவே அம்பலமாகி நாறியிருக்கிறது.

···

""அடையாளம் தெரியாத தீவிரவாதி'' என பாதுகாப்பு படைகள் முத்திரை குத்துகின்றனவே, அதைவிட அயோக்கியத்தனம் வேறெதுவும் இருக்க முடியாது. ஒருவரின் அடையாளமே தெரியாத பொழுது, அவரை எப்படி தீவிரவாதியாக முத்திரை குத்த முடியும்? இந்தக் கேள்வியை எழுப்பும் பொழுது, இராணுவம் போலீசின் கட்டுக்கதையும், மோதல் நாடகமும் உடனடியாக அம்பலத்துக்கு வந்து விடும். ஆனால், பத்திரிகைகள் தொடங்கி நீதிமான்கள் வரை ஒருவரும் இந்தச் சாதாரண கேள்வியை எழுப்ப மறுக்கிறார்கள்.


மாறாக, ""பாதுகாப்புப் படைகள் கடுமையான சூழ்நிலையில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றன; இந்தக் கொலைகளுக்காக பாதுகாப்புப் படையினரை விசாரித்தால் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடும் அவர்களின் முனைப்பு மழுங்கிவிடும்'' என ""சோ'' முதலான பாசிஸ்டுகள் இராணுவத்தின் இந்தக் கொலைவெறியைப் பொது மக்களிடம் நியாயப்படுத்துகிறார்கள். அரசாங்கமோ, பரிசுப் பணம், பதவி உயர்வு என்ற தீனியைப் போட்டு, இந்தக் கொலைவெறியை வளர்த்து விடுகிறது. மேலும், இப்படிப்பட்ட கொலைகளில் ஈடுபடும் இராணுவத்தினரை விசாரணை தண்டனையில் இருந்து பாதுகாக்க ""ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை'' நடைமுறைப்படுத்தி வருகிறது.

சட்டபூர்வமாகவே கிடைக்கும் இந்தப் பாதுகாப்புதான், ஜம்முகாசுமீர் மாநிலத்தில் யாரையும், எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் குருவி சுடுவது போல சுட்டுக் கொல்லலாம் என்ற பாசிசத் திமிரை இராணுவத்திற்கும் போலீசிற்கும் வழங்கியிருக்கிறது.


""ஜம்முகாசுமீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படைகள் நடத்திவரும் அட்டூழியங்களை, பிற மாநில மக்கள் ஏன் கண்டிப்பதில்லை?'' என்ற கேள்வியை முன்வைக்கிறார், பெர்வேஸ் இம்ரோஸ் என்ற வழக்கறிஞர். நேர்மையான மனசாட்சி கொண்ட ஒவ்வொருவரும் எதிர்கொள்ள வேண்டிய கேள்வி இது. ஆனால், இதற்குப் பதில் சொல்ல வேண்டிய நடுத்தர வர்க்கமோ குருட்டு தேசபக்தியில் மூழ்கிப் போய் கிடக்கிறது. கூலிக்குக் கொலை செய்யும் கிரிமினல் மாஃபியா கும்பலைப் போலச் சீரழிந்துவிட்ட இந்திய இராணுவத்தை, இந்த குருட்டு தேசபக்திதான் புனிதப்படுத்தித் தண்டனையில் இருந்து பாதுகாக்கிறது. ஜம்முகாசுமீர் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை, பயங்கரவாதம் என நாக்கூசாமல் அவதூறு செய்கிறது.

· செல்வம்

Thursday, March 15, 2007

அரசியல் அமைப்பு முழுவதும் புரையோடிப் போனது!


இந்தியாவிலுள்ள சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்காரர்கள் பற்றி பி.பி.சி யின் ஒலி பரப்பு




அரசியல் அமைப்பு முழுவதும் புரையோடிப் போனது!



டுத்தர வர்க்கத்தினர், எப்போதுமே மற்ற வர்க்கத்தினரை விட அறிவாளிகளாகத் தங்களை எண்ணி சுயதிருப்தியில் மிதக்கிறார்கள். ஆனால், உண்மையில் அவர்கள் அற்பவாதிகள். அவர்கள் அறிவோ மிகவும் மேலோட்டமானதுதான்; ஆழமானதல்ல. சமீபத்தில் வெளியான சில வழக்குமன்றத் தீர்ப்புகளைக் கண்டதும், தமது அரசியலற்ற பார்வையுடன் துள்ளிக் குதிக்கத் தொடங்கிவிட்டார்கள். ""பார்த்தீர்களா, எல்லாம் அரசியல்வாதிகளால்தான் நாடே கெட்டுப் போகிறது. இதை நீதிமன்றம் மீண்டும் நிரூபித்து விட்டது'' என்று கூச்சல் போடுகின்றனர்.





பிரியதர்சினி மட்டூ, மற்றும் ஜெசிகாலால் கொலை வழக்குகளில் அரசியல் தலையீடு காரணமாக குற்றவாளிகள் முதலில் விடுவிக்கப்பட்டனர். பின்னர் செய்தி ஊடகம் மற்றும் சமூக அமைப்புகளின் முயற்சிகள் காரணமாக நீதி நிலைநாட்டப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர். இவ்வளவு காலமும் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்திக் கொலைக்குற்ற வழக்கிலிருந்த தப்பிவந்த மத்திய நிலக்கரி அமைச்சரும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான சிபு சோரன், சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தால் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு, ஆயுள் தண்டனை பெற்றுள்ளார். பாரதீய ஜனதா கட்சியின் எம்.பி.யும் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவஜோத்சிங் சித்து ஒருவரை அடித்துக் கொன்ற வழக்கில் மூன்றாண்டு கடுங்காவல் தண்டனை பெற்றுள்ளார்.





""மேற்கண்ட வழக்குகளில் தாமதமாகத் தீர்ப்புகள் வந்தாலும் நீதி நிலைநாட்டப்பட்டு விட்டது. நீதித்துறையின் மீது மக்கள் நம்பிக்கை, உறுதியாகி விட்டது'' என்கிறார்கள் நடுத்தர வர்க்க அறிவுஜீவிகள். ""இவை அரசியல்வாதிகள் மீது நீதித்துறை அடைந்த வெற்றி'' என்கின்றனர். இதற்குத் துணையாக இன்னொரு சான்றையும் எடுத்துக் காட்டுகிறார்கள். ""ஓட்டுவங்கியை நோக்கமாகக் கொண்டு இடஒதுக்கீடு அதிகரிப்பு, இசுலாமியர்களுக்கு இடஒதுக்கீடு போன்ற நடவடிக்கைகளை அரசியல்வாதிகள் மேற்கொள்வதை எதிர்த்து நீதிமன்றங்கள் தீர்ப்புகள் கூறுகின்றன. நாடாளுமன்ற முடிவுகளை நீதிமன்றப் பரிசீலனைக்குட்படுத்துவதைத் தடுக்கும் ஒன்பதாவது பிரிவின் கீழ் சட்டங்கள் இயற்றுவதை உச்சநீதி மன்றம் எதிர்த்துள்ளது. ஆகவே, அரசியல்வாதிகள் ரொம்பவும் ஆட்டம் போட முடியாதவாறு மூக்கணாங்கயிறு போடுகிறது, உச்சநீதி மன்றம்'' என்று நடுத்தர வர்க்க அறிவுஜீவிகள் குதூகலிக்கின்றனர்.





இவர்கள் படித்த அறிவுஜீவிகள்தாம்; ஆனால், இவர்களுக்கு அரசியல் என்றால் என்னவென்று தெரியவில்லை. படிக்காத பாமரர்களைப் போன்றே இந்த விசயத்தில் சிந்திக்கிறார்கள். உள்ளூராட்சி முதல் நாடாளுமன்றம் வரை நடக்கும் பல்வேறு வகைத் தேர்தல்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் மட்டும்தான் அரசியல்; அவற்றில் பங்கேற்கும் கட்சிகள், அமைப்புகள் தாம் அரசியல் கட்சிகள், அரசியல் அமைப்புகள்; அவற்றின் பிரமுகர்கள், தலைவர்கள்தாம் அரசியல்வாதிகள் என்று நினைக்கிறார்கள்.





அதிகார வர்க்கம், போலீசு, இராணுவம், சிறைச்சாலை, நீதிமன்றம் மற்றும் இவை சார்ந்த அனைத்துத் துணை நிறுவனங்களும் அரசு அமைப்புதான். இப்போது புதிதாக ""அரசு சாரா தொண்டு நிறுவனங்கள்'' என்ற பெயரில் அவதாரம் எடுத்துள்ள அமைப்புகளும் உண்மையில் அரசியல் அமைப்புகள்தாம். இந்த நிறுவனங்கள் அமைப்புகள் சம்பந்தப்பட்ட எல்லா விவகாரங்களும், நடவடிக்கைகளும் அரசியல்தான். இவற்றில் பங்கேற்கும் எல்லா நபர்களும் அரசியல்வாதிகள்தாம். ஆனால், இவையெல்லாம் நிர்வாக அமைப்புகள், நேர்மையாகவும், தூய்மையாகவும் இயங்கக் கூடியனவென்றும், மக்களின் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவை அதாவது மற்ற யாரும் இவற்றின் மீது குறைகூறக் கூடாது என்றும், தேர்தல் அரசியல்வாதிகள்தாம் கேடானவர்கள்; எல்லாவிதமான அரசியல் தவறுகளுக்கும் காரணமானவர்கள் என்றும் படித்த அறிவுஜீவிகள் கருதுகின்றனர். இந்த வாதத்துக்கு ஆதாரமாக சிபு சோரன், சித்து போன்றவர்கள் நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்டதைக் காட்டுகிறார்கள்.





ஆனால், உண்மையோ வேறுவிதமாக உள்ளது. இராணுவ அமைப்புதான் நாட்டிலேயே மிகப்பெரிய மக்கள் விரோத ஊழல் அமைப்பு; நாட்டிலுள்ள சிறைச்சாலைகள் எல்லாம் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளின் பாதுகாப்பான சொர்க்க புரிகளாக உள்ளன. நாட்டிலேயே மிக உயர்ந்ததாகப் போற்றப்படும் போலீசு அமைப்பான சி.பி.ஐ.யும், உச்சநீதி மன்றமும் நாடறிந்த குற்றவாளிகளுக்குத் துணை செய்யும் அமைப்புகளாகவே உள்ளன. இதற்கான ஆதாரங்களை வேறு எங்கும் தேட வேண்டியதில்லை. சிபு சோரன், சித்து விவகாரங்களிலேயே புதைந்துள்ள உண்மை இதுதான்.





சிபு சோரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படுவதற்குக் காரணமாக அமைந்த குற்றம் நடந்தது 1994ஆம் ஆண்டு. நவஜோத் சிங் சித்துவுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை வழங்குவதற்குக் காரணமாக இருந்த குற்றம் நடந்தது 1988ஆம் ஆண்டு. இதற்கிடையே சிபு 12 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராகவும், சில ஆண்டுகள் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். சித்துவோ, இந்தியக் கிரிக்கெட் அணி வீரராகவும், வானொளியில் விமர்சகராகவும், பின்னர் எம்.பி. ஆக சில ஆண்டுகளும் இருந்து கோடிகோடியாக சம்பாதித்து சுதந்திரமாக வாழ்ந்துள்ளார். ""தாமதமாக வழங்கப்படும் நீதி, உண்மையில நீதி மறுக்கப்படுவதாகும்'' என்று படித்த அறிவுஜீவிகள் அடிக்கடி பிதற்றும் வசனம் இந்த வழக்குகளுக்குப் பொருந்தாதா? போலீசும் நீதித்துறையும் தானே இதற்குக் காரணம்! ""அரசியல்'' தலையீடுதான் தாமதத்திற்குக் காரணமென்றால் முதுகெலும்பில்லாத போலீசுக்கும், நீதித்துறைக்கும் படித்த அறிவுஜீவிகள் ஏன் வக்காலத்து வாங்கவேண்டும்?





1994ஆம் ஆண்டு, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி.யாக இருந்த சிபுசோரனும் மற்றும் நான்கு பேரும் சேர்ந்து அவரது தனிச்செயலாளராக இருந்த சசிநாத் ஜா என்பவரை புதுதில்லியிலிருந்து கடத்தி ராஞ்சி நகரின் ஒரு குடியிருப்புக்குக் கொண்டுபோய் கொன்றுவிட்டனர். கொல்லப்பட்டவரின் சகோதரர் கொடுத்த புகாரின் பேரிலும் அவரது தாயார் தொடுத்த வழக்கில் தில்லி உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பின்படியும், வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்குப் போனது. நான்காண்டுகளுக்குப் பிறகு, அதாவது 1998இல் குற்றப் பத்திரிக்கை தாக்கலாகியது; கொலை நடந்த 12 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2006 டிசம்பரில் கொலையாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது, சி.பி.ஐ.யின் சிறப்பு நீதிமன்றம்.





இந்த விவகாரத்தில் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, கொலைக்கான காரணம், பின்னனி என்னவென்பதுதான். 1993ஆம் ஆண்டு, நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரசின் சிறுபான்மை அரசுக்கு எதிராக வலதுசாரி பா.ஜ.க. மற்றும் சி.பி.எம். தலைமையிலான இடதுசாரிகள் ஆகியோர் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தனர். அரசு நிச்சயம் கவிழ்ந்துவிடும் என்ற நிலை இருந்தது. ஆனால், பல கோடி ரூபாய் இலஞ்சம் பெற்றுக் கொண்டு சிபு சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் சிபு, மகத்தோ உட்பட ஐந்து எம்.பி.க்கள் நரசிம்மராவ் அரசுக்கு ஆதரவாக வாக்களித்து, நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. காங்கிரசுக்கும் ஜா.மு.மோ.வுக்கும் இடையிலான இரகசிய பேரம் பற்றிய உண்மைகளை அறிந்திருந்த சிபு சோரனின் தனிச் செயலர் சசிநாத் ஜா, இலஞ்சத் தொகையில் பங்கு கேட்டிருக்கிறார். அப்போது தான் இலஞ்சம் வாங்கியது எங்கே அம்பலமாகிவிடுமோ என்று அஞ்சிய சிபுசோரன் தனது தனிச் செயலாளரை தில்லியிலிருந்து கடத்திக் கொண்டு போய் ராஞ்சியில் வைத்துக் கொன்றுவிட்டார்.





இந்தக் கொலைக்கு மூலகாரணமாக இருந்த இலஞ்ச விவகாரம் பின்னர் அம்பலமாகியது. நரசிம்மராவின் ஆட்சிக் காலமும் முடிந்துவிட்ட பிறகு நரசிம்மராவ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி.க்கள் மற்றும் முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் மகன் அஜித் சிங் மீது கிரிமினல் இலஞ்ச ஊழல் வழக்குப் போட்டது, பின்னர்வந்த ஐக்கிய முன்னணி அரசு. சி.பி.ஐ. நடத்திய இந்த வழக்கில், இலஞ்சம் வாங்கியதை மறுக்க முடியாத நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துரிமை மற்றும் வாக்குரிமை மீது கிரிமினல் வழக்குப் போடமுடியாது என்று வாதிட்டனர். சி.பி.ஐ. நீதிமன்றமும், தில்லி உயர்நீதி மன்றமும் இந்த வாதத்தை நிராகரித்தன.





ஆனால், நரசிம்மராவுக்கு எதிராக சி.பி.ஐ. நடத்திய வழக்கில் இலஞ்சம் வாங்கியவர் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் அங்கு பேசியதற்கும் ஓட்டளித்ததற்கும் வழக்குப் போட முடியாது; அது அவரது சிறப்புரிமை என்றும் இலஞ்சம் கொடுத்தவர் மீது மட்டும் வழக்குப் போடலம் என்றும் உச்சநீதி மன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் சிபு சோரன் மற்றும் அவரது கட்சி எம்.பி.க்கள் மீதான வழக்கை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. ஆனால், தனது தீர்ப்பின்படியேகூட, இலஞ்சம் கொடுத்த நரசிம்மராவின் மீது எந்த நடவடிக்கையும், தண்டனையும் விதிக்கவில்லை. மேலும் பல இலஞ்ச ஊழல் தில்லுமுல்லு மோசடி வழக்குகளில் இருந்து நரசிம்ம ராவை விடுதலை செய்தது.





இந்த வழக்கில் உச்சநீதி மன்றம் மேலும் கோமாளித்தனமான தீர்ப்பு வழங்கியது. இலஞ்சம் பெற்றவர்கள் குற்றவாளிகள் அல்லவென்று விடுவிக்க வகை செய்த உச்சநீதி மன்றம், இலஞ்சம் வாங்கியதற்காக அஜித் சிங் மீது குற்ற விசாரணை நடத்தலாம் என்று அனுமதித்தது. இலஞ்சம் பெற்றுக் கொண்டு நாடாளுமன்றத்தில் வாக்களிப்பதில் இருந்து அவர் விலகி இருந்தார் என்று காரணம் கூறியது, உச்சநீதி மன்றம்; அவர் ஓட்டுப் போடவில்லை; ஆதலால் வாங்கிய இலஞ்சம் அவரது ஓட்டைப் பாதிக்கவில்லை என்று வினோதமான விளக்கம் வேறு கொடுக்கப்பட்டது. இத்தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும்படி அஜீத்சிங் கோரியதையும் உச்சநீதி மன்றம் நிராகரித்தது. இதே வாதத்தின் அடிப்படையில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றமும் அஜித் சிங் மீதான குற்றவிசாரணையிலிருந்து அவரை விடுவிக்க மறுத்துவிட்டது.





ஆனால், உச்சநீதி மன்றத்தின் அடிமுட்டாள்தனத்தை, அறிவுநேர்மையற்ற செயலை அஜித் சிங் விவகாரம் மேலும் நிரூபித்து விட்டது. அதாவது நரசிம்மராவிடம் இலஞ்சம் வாங்கிய அஜித் சிங் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்தபோது உச்சநீதி மன்றம் கூறியதைப்போல வாக்களிக்காமல் இருந்து விடவில்லை. அத்தீர்மானத்தை ஆதரித்து, இலஞ்சம் கொடுத்த நரசிம்மராவுக்கு எதிராக வாக்களித்திருக்கிறார். இந்த உண்மையைச் சொல்லி தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரியபோதும் உச்சநீதி மன்றம் நிராகரித்து விட்டது. அதாவது இலஞ்சம் வாங்கிக் கொண்டு ஒப்பந்தப்படி வாக்களித்தவர்கள்மீது குற்றவிசாரணை நடத்த முடியாது; இலஞ்சம் வாங்கிக் கொண்டு ஒப்பந்தப்படி வாக்களிக்காமலோ எதிர்த்து வாக்களித்தாலோ அவர்மீது குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்பதுதான் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பின் சாரம். மொத்தத்தில், இலஞ்சம் கொடுத்தவருக்கு இலஞ்சம் வாங்கியவர் விசுவாசமாக இருக்கவேண்டும்; வேறுவிதமாக நடக்கக் கூடாது என்பது உச்சநீதி மன்றம் போட்டுள்ள புதிய சட்டம்!





நாடாளுமன்ற விவாதங்களில் பயமின்றி அதன் உறுப்பினர்கள் பேசவும், வாக்களிக்கவும் அதற்காக அவர்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்குத் தொடுக்க முடியாது என்று தடைவிதிக்கிறது 105 (2)வது சட்டப் பிரிவு. ஆனால், இதை 1998ஆம் ஆண்டு உச்சநீதி மன்றம் வழங்கிய இத்தீர்ப்பு கையுங்களவுமாகப் பிடிபட்ட இலஞ்ச ஊழல் பேர்வழிகளைத் தப்புவிப்பதற்காகப் பயன்படுத்திக் கொண்டது, உச்சநீதி மன்றம். அதே உச்சநீதி மன்றம்தான் 2006ஆம் ஆண்டு இறுதியில் வழங்கிய ஒரு தீர்ப்பில் இதையே புரட்டிப் போட்டுப் பேசுகிறது. நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கு இலஞ்சம் வாங்கியதற்காக, பதவி நீக்கம் செய்யப்பட்ட பதினொரு எம்.பி.க்கள் அதற்கு எதிராக வழக்குப் போட்டனர். அந்த வழக்கைத் தள்ளுபடி செய்த உச்சநீதி மன்றம் இலஞ்சம் வாங்கிக் கொண்டு கேள்வி கேட்ட எம்.பி.க்களைப் பதவி நீக்கம் செய்தது சரிதான் என்று தீர்ப்புக் கூறியது. அதன்பிறகு வேறொரு வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு அப்பால் வைக்கும் சட்டப்பிரிவு ஒன்பதின் கீழ் வைக்குமாறு நிறைவேற்றப்படும் சட்டங்களையும் நீதிமன்றம் விசாரிக்க உரிமை உண்டு என்று தீர்ப்புக் கூறியுள்ளது.





அப்போது, இலஞ்ச ஊழல் பேர்வழிகளான நரசிம்ம ராவ் மற்றும் அவரது கூட்டாளிகளுக்குச் சாதகமாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்பு உரிமைகளை வளைத்துத் தீர்ப்புச் சொன்ன உச்சநீதி மன்றம், இப்போது அந்த சிறப்பு உரிமைகளை ஏற்க முடியாது, தலையீடு செய்வோம் என்கிறது. ஏனென்றால் இப்போது, நாடாளுமன்றம் கொண்டு வரும் இடஒதுக்கீடு போன்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சில்லரை சீர்திருத்தங்களைக் கூட சகித்துக் கொள்ளாது நாடாளுமன்றத்துக்குள்ள சிறப்பு உரிமைகளையும் மறுப்போம் என்கிறது உச்சநீதி மன்றம்.





நடுத்தர வர்க்க அறிவுஜீவிகளில் மிகமிகப் பெரும்பான்மையினர் காங்கிரசு மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை (இடது சாரி கூட்டணியும் இதில் அங்கும்) ஆதரிப்பவர்கள் அல்லது ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. மற்றும் அதன் கட்டணி கட்சிகளை ஆதரிப்பவர்கள். நரசிம்மராவ், இந்திரா, ராஜீவ் உட்பட காங்கிரசுத் தலைவர்கள் பலரின் இலஞ்ச ஊழல் அதிகார முறைகேடுகளில் உச்சநீதி மன்றம் துணை போயிருக்கின்றது.





சிபு சோரன் அவரது கூட்டாளிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் பெருங்கூச்சல் போடும் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. கட்சியோ சிபு சோரனுடன் சேர்ந்து இலஞ்சம் வாங்கிய மகத்தோ என்ற ஜா.மு.மோ.வின் இன்னொரு எம்.பி.யை இலஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்கியது. அவர் பேரங்கள் படியாமல் ஒரு சில மாதங்களிலேயே பா.ஜ. கட்சியை விட்டு வெளியேறினார். குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டவர்கள் பதவி விலக வேண்டும் என்று சிபு சோரன் உட்பட எதிர்த்தரப்பினர் விவகாரங்களில் கூச்சல் போட்டு நாடாளுமன்றத்தைச் செயல்படவிடாமல் முடக்கி வைக்கும் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. ""யோக்கியவான்கள்'' நவஜோத் சிங் சித்து விவகாரத்தில் பொது இடத்தில் கார் நிறுத்தும் தகராறில் ஒருவரை அடித்துக் கொன்ற வழக்கு 1988இல் இருந்து நடந்தபோதும் அவரை எம்.பி. ஆக்கினர். இப்போது கொலைவழக்கில் மூன்றாண்டு சிறைத் தண்டனை பெற்ற சித்து, பெயருக்குப் பதவி விலகி, உச்சநீதி மன்றத்தில் தண்டனையை நிறுத்தி வைக்கும் உத்தரவு பெற்றவுடன், மீண்டும் பா.ஜ.க.வால் எம்.பி. தேர்தலில் நிறுத்தப்படுகிறார்.





பா.ஜ.க. ஆளும் இராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு ஜெர்மானியப் பெண்ணைக் கற்பழித்துவிட்டான், அதன் கூட்டணி கட்சி ஆளும் ஒரிசா மாநில போலீசு பொது இயக்குநர் (டி.ஜி.பி.) மகன். அதற்காக ஏழாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட தன் மகனை சொந்த ஜாமீனில் பரோலில் அழைத்து வந்த ஒரிசா டி.ஜி.பி அவனை தலைமறைவாக வைத்துக் கொண்டிருக்கிறார். சுமார் இரண்டு மாதங்களாகியும் டி.ஜி.பி.யையும் பதவி நீக்கம் செய்யாமல், குற்றவாளியையும் பிடிக்காமல் இரு மாநில அரசுகளும் ஆட்டங்காட்டி வருகின்றன. புத்தாண்டு கேளிக்கையில் கலந்து கொண்டு, பெண்களிடம் தகாத முறையில் நடந்த இரண்டு இராணுவ அதிகாரிகளைக் கடந்தமாதம் கைது செய்தது கொல்கத்தா போலீசு. உடனே இராணுவப் படையொன்று போலீசு நிலையத்துக்குள் நுழைந்து சூறையாடி, போலீசுக்காரன்களையும், அடித்து நொறுக்கிவிட்டு குற்றவாளிகளான இராணுவ அதிகாரிகளை மீட்டுச் சென்றது இப்போது மத்திய மாநில அரசுகள் (சி.பி.எம். அரசுதான்) சமரசம் செய்து விவகாரத்தை மூடி மறைக்க எத்தணிக்கின்றன.





இதுவரை பார்த்த விவரங்கள் காட்டுவது என்னவென்றால், தேர்தல் கட்சிகளும், அதன் பிரமுகர்கள் தலைவர்கள் மட்டுமல்ல உச்சநீதி மன்றம் உட்பட நீதிதுறையும் போலீசும், இராணுவமும் மொத்தத்தில் ஒட்டு மொத்த அரசு எந்திரமே செல்லரித்துப் போயிருக்கின்றன. இதில் ""அரசியல்வாதிகளை'' மட்டும் குறைகூறி, ஒட்டு மொத்த அரசு அமைப்பைப் பாதுகாக்க எத்தணிப்பது பச்சையான மோசடியும் பித்தலாட்டமும் ஆகும்.





· மாணிக்கவாசகம்

Wednesday, March 14, 2007

கொலைகார பாபாவை வள்ளலாக்கும் நரித்தனம்

மு.க-சாய்பாபா சந்திப்பு

கொலைகார பாபாவை வள்ளலாக்கும் நரித்தனம்


சென்னைக்கு ஆந்திரமாநிலத்தின் கிருஷ்ணா ஆற்றில் இருந்து குடிநீர் கொண்டு வரும் கால்வாயைப் பலப்படுத்த 200 கோடி ரூபாயை வழங்கிய மர்மச் சாமியார் சாய்பாபாவுக்குப் பாராட்டு விழா சென்னையில் இவ்வாண்டு ஜனவரியில் நடந்துள்ளது. இதை முன்னிட்டு சென்னை வந்த சாய்பாபா கோபாலபுரம் சென்று "பகுத்தறிவு'ப் பாரம்பரியத்தில் வந்த கருணாநிதியைச் சந்தித்தார்.



அங்கே, பகுத்தறிவு திராவிடத்துக்குத் திவசம் நடத்திவிட்ட கருணாநிதியின் முன்பாகவே, அவரின் மனைவி தயாளு அம்மாள் சாய்பாபாவின் காலில் விழுந்து வணங்கினார். இதனை இந்து முன்னணி தலைவர் இராமகோபாலன் வரவேற்றுள்ளார்.



சாய்பாபா தனது ஆன்மீக சக்தியால் தங்களுக்கு மோதிரம் வரவழைத்துத் தந்தார் என்று துரைமுருகனும், தயாநிதி மாறனும் சாய்பாபாவைப் பாராட்டி நடத்தப்பட்ட கூட்டத்தில் கூறியுள்ளனர். அந்த மோதிரத் தங்கத்துக்கு வரி கட்டப்பட்டுள்ளதா? இல்லை கடத்தல் தங்கமா என்று தெரியவில்லை.



தனது அமைச்சர் ஒருவர் தீக்குழி இறங்கியபோது, அதனைக் காட்டுமிராண்டித்தனம் எனச் சரியாக விமர்சித்த கருணாநிதி, இப்போதோ மவுனம் சாதிக்கிறார்.



""பகுத்தறிவு என்பதே மோசடிதான்'' என்றும், ""பகுத்தறிவால் ஒரு பிரயோஜனமும் இல்லை. காரணம் ஜாதகம், ராசி, விதி என எல்லாமே உண்டு'' என்று சொல்கிறார், பெண்ணடிமைத்தனத்தையும் பார்ப்பனீயத்தையும் தமிழ் நாடெங்கும் பரப்பிக் கொண்டிருக்கும் ""சோ'' ராமசாமி என்கிற உலக மகா அறிவாளி!



தயாளு அம்மாள் சாய்பாபாவின் காலில் விழுந்த மூடத்தனத்தையோ, துரைமுருகன், தயாநிதி மாறனின் "ஆன்மீக அற்புத' உளறல்களையோ கருணாநிதி கண்டிக்காமல் இருந்தது அவரின் கொள்கை சமரசத்தைக் காட்டுகிறது. இதன் மூலம் ""சோ'' போன்ற காட்டுமிராண்டிகளும், பகுத்தறிவு என்பதை மோசடி எனச் சொல்லி முற்போக்காளர்கள் அத்தனை பேரையும் அவதூறு செய்ய வாய்ப்பை வழங்கியிருக்கிறார்.



உண்மையிலே கருணாநிதி நேர்மையான பகுத்தறிவாளர்தானா? பெரியாரின் இயக்கமும், தாங்களும் இரட்டைகுழல் துப்பாக்கிகள் என்று சொல்லிக் கொண்டே "ஒன்றே குலம்; ஒருவனே தேவன்' என்று கொள்கைக் கோவணத்தைக் காற்றில் பறக்கவிட்டவர்கள்தான் கருணாநிதியும், அவரின் வழிகாட்டி அண்ணாதுரையும்.



"பிள்ளையாரையும் உடைக்க மாட்டோம்; பிள்ளையாருக்குத் தேங்காயும் உடைக்கமாட்டோம்' என்று வெட்கமின்றிப் பேசிய பாரம்பரியத்தை சேர்ந்த கருணாநிதியோ, தனது மணிவிழாவில் அன்பழகன் முன்னிலையில் தனது துணைவியார் ராஜாத்திக்கு தாலியை இரண்டாம் முறையாகக் கட்டி, ஆயுளைக் கூட்டும் மூடநம்பிக்கை சடங்கை செய்தவர்தான்.



மனைவியார் தயாளு சாயிபாபாவின் காலில் விழுகிறார் என்றால், துணைவியார் ராஜாத்தியோ மயிலை முண்டகக்கன்னி அம்மன் கோவிலில் அதிகாலைப் பனியில் உருகி நிற்கிறார்.



""குங்குமம்'' என்று "மங்களகரமான' பெயரை தன் குடும்பம் நடத்தும் பத்திரிகைக்கு வைத்துக் கொண்டு, ஆண்டுதோறும் பத்திரிகை அலுவலகத்தில் ஆயுதபூசை நடத்துவதும், மூடத்தனங்களை பிரச்சாரம் செய்யும் ஆபாச தொலைக்காட்சித் தொடர்களை தன் குடும்ப தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதும்தான் கருணாநிதியின் குடும்பம் செய்யும் பகுத்தறிவுப்பணி!



பராசக்தி போன்ற திரைப்படங்கள் மூலம் போலிச் சாமியார்களின் முகத்திரையை அன்று கிழித்தெறிந்த கருணாநிதி, இன்று மாடிவீட்டு ஏழையாகி தென்னகமெங்கும் வியாபார சாம்ராஜ்யம் கட்டி, மத்தியிலும், மாநிலத்திலும் பதவி ருசியை அனுபவிக்கும்போது அதே போலிச் சாமியார்களை ""ஆண்டவனுக்கே ஒப்பானவர்கள்'' என்றும் புகழ ஆரம்பித்துள்ளார்.



பகுத்தறிவாளர்கள் பலரும் கருணாநிதியின் இச்செயலைக் கண்டிக்கத் தொடங்கியதும் மெல்ல முடியாமலும், விழுங்க முடியாமலும் கருணாநிதி தவித்தபோது, சங்கராச்சாரிக்கு வரவேற்புக் கொடுத்து மார்க்சியத்தை அடகு வைத்த போலி கம்யூனிஸ்டுகளின் ""தீக்கதிர்'' நாளேடு அவரின் செயலை நியாயப்படுத்தி ஒரு கட்டுரையை வெளியிட்டது. வேலிக்கு ஓணான் சாட்சி. கருணாநிதிக்கு சி.பி.எம். சாட்சி. போலிகளின் சித்தாந்த குருவாகிய இ.எம்.எஸ். நம்பூதிரிபாடு, தனது மனைவியுடன் கோவிலுக்குப் போன முற்போக்கு ஜனநாயகத்தை உதாரணம் காட்டி, கருணாநிதி தன் குடும்பத்துடன் ஜனநாயக உறவு வைத்திருப்பதாய்க் கண்டுபிடித்துக் கட்டுரை தீட்டியுள்ளது, அந்நாளேடு. இப்படியெல்லாம் ""தீக்கதிர்'' தனது "பகுத்தறிவை'ப் பறைசாற்றி அரசியல் உணர்வூட்டி வருவதால்தான், சி.பி.எம்.மின் தொண்டர்கள் கொத்துக் கொத்தாய் "மாபெரும் புரட்சிக் கலைஞரின்' கட்சியான தே.மு.தி.க.வில் போய்ச் சேருகின்றனர்.



ஜால்ராவை ஓங்கி ஒலிக்கும் கி.வீரமணியின் ""விடுதலை''யும் ""சாய்பாபா கருணாநிதி வீடு தேடி வந்தது பெரியார் கொள்கைக்கு கிடைத்த வெற்றி'' எனப் பெரியாரின் பகுத்தறிவையும் பலி கொடுத்தது. உடனே கருணாநிதிக்கு தெம்பு வந்துவிட்டது. ""மரியாதையின் பேரில் பெரியவர்கள் காலில் விழுவது தவறில்லை. என் மனைவி சாய்பாபாவின் காலில் விழுந்ததும் அவ்வாறே'' என்று இந்த மானங்கெட்ட செயலை நியாயப்படுத்திப் பேசியுள்ளார். "இனமானப் பேராசிரியர்' கருணாநிதியை விட வயதில் மூத்தவர்தானே! பேராசிரியரின் பிறந்தநாளில் என்றைக்காவது கருணாநிதியோ அல்லது அவரின் குடும்பமோ காலில் விழுந்து வணங்கியது உண்டா என்று கேட்டால், இந்தப் போலி பகுத்தறிவுவாதியிடம் பதில் இருக்காது.



கருணாநிதியின் குடும்பத்தினராலும் துரைமுருகனாலும் நற்சான்றிதழ் வழங்கப்படும் சாய்பாபாவின் யோக்கியதைதான் என்ன?



தந்திரங்கள் பலவற்றைக் கற்றுக் கொண்டு, வாயில் இருந்து லிங்கம் வரவழைப்பது, வெறும் கைகளில் இருந்து மோதிரம், விபூதி வரவழைப்பது போன்றவற்றைச் செய்து, இவற்றை எல்லாம் ஆன்மீக சக்தி என்று மோசடி செய்யும் கோடீசுவர கருப்புப் பணப் பேர்வழிதான் சாய்பாபா. பகுத்தறிவுச் சிந்தனையாளரான டாக்டர் கோவூர் இந்த விளையாட்டுகளை எல்லாம் சாய்பாபா முன்னிலையில் தன்னாலும் செய்து காட்ட முடியும் என்று சவால் விட்டு பாபாவை பொதுமேடைக்கு வருமாறு சவால் விட்டு பல ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. மோசடி பாபா, இந்தச் சவாலுக்கு இன்று வரை முகம் கொடுத்ததில்லை.



பாபா, மோதிரங்கள் போன்றவற்றை எவ்வாறு வரவழைக்கிறார் என்பதை ""ரீவைண்டு'' செய்து பார்த்த அவரின் வீடியோ படங்கள் தெளிவுபடுத்தி விட்டன. மக்கள் பாடகரான கத்தார் கூட ""சிவலிங்கம் வரவழைக்கும் பாபா! திண்ண, பூசணிக்காய் வரவச்சு தாதா!'' என்று தனது பாடலில் கேட்கிறார். பி.பி.சி. ஒளிபரப்பின் தமிழாக்க குறுந்தகட்டின் மூலம் மேட்டூர் அணையைச் சேர்ந்த பெரியார் படிப்பகத்தினர் பாபாவின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தி வருகின்றனர்.



இந்த மோசடி மன்னனுக்கு உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பலர் சீடர்களாகி அன்னாரின் ஆசிரமத்தில் வந்து தங்கி இருந்தார்கள். அப்படிப்பட்ட சீடர்களில் ஒருவர் பாபாவின் ஓரினப்புணர்ச்சி அசிங்கங்களை பி.பி.சி. தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் அம்பலப்படுத்தி இருக்கிறார்.



அவரின் மர்ம ரகசியங்களை அம்பலப்படுத்த முயன்ற ஆறு மாணவர்களை பாபாவின் ஆசிரமத்தில் 1993ஆம் ஆண்டு சுட்டுக் கொன்று விட்டு "பாபாவைக் கொல்ல முயன்ற அறுவர் சுட்டுக் கொலை' என்று அக்கொலைகளை மூடி மறைத்தனர்.



கிரிமினல் பின்னணி, மோசடித்தனம், ஓரினப்புணர்ச்சி எனும் கழிசடைத்தனம் ஆகியவற்றின் கூட்டுக்கலவையான சாய்பாபாவை ஏன் கருணாநிதி, பகுத்தறிவுவாதத்தை எல்லாம் கை கழுவி விட்டு ஆதரிக்கிறார்?



திடீர்ப் பணக்காரர்களின் கருப்புப் பணத்தை மடைமாற்றி விடுவதற்கென்றே அமிர்தானந்தமாயி, சாய்பாபா போன்ற ஆன்மீகப் பித்தலாட்டக்காரர்கள் உருவாகி உள்ளனர். உண்மையிலேயே சாய்பாபா 200 கோடி நிதி உதவி செய்தார் என்றால், தமிழக அரசே விழா எடுத்திருக்கலாமே? பொதுவாகவே நன்றி சொல்பவர்கள், நன்றிக்கு உரியவர்களைத் தேடிச் சென்று நன்றி சொல்வதுதானே உலக வழக்கம். நன்றிக்குரியவராய் சித்தரிக்கப்படும் பாபாவே நன்றியைப் பெற்றுக் கொள்ள கோபாலபுரம் ஏன் போனார்? ஏன் அந்தச் சந்திப்பின் போது அரசு அதிகாரிகள் உடன் இருக்கவில்லை? என்ற கேள்விகளுக்கெல்லாம் சரியான பதில் அரசிடம் இல்லை.



மேலும் மக்களுக்குக் குடிநீர் வழங்க வேண்டிய தன்னுடைய அரசின் பொறுப்பைத் தட்டிக் கழித்து விட்டு, அதனைச் செய்யச் சொல்லி இம்மோசடிச் சாமியாரிடம் மண்டியிடுகிறார் கருணாநிதி. அரசின் கடமைகளில் ஒன்றுதான் குடிநீர் விநியோகம் எனும் அடிப்படையைப் பற்றி மக்களைச் சிந்திக்க விடாமல், "மந்திரத்தில் மோதிரம் வரவழைத்த' விசயத்தைப் பேச வைத்துப் பிரச்சினையைத் திசை திருப்புகிறார்.



பொதுமக்களுக்குக் குடிநீர் வழங்க வேண்டியது அரசின் கடமையா? கிரிமினல் சாயிபாபாவின் கடமையா? என்று ""தீக்கதிருக்கும்'' சிந்திக்கத் தெரியவில்லை. ""ஒரு மாநிலத்தின் குடிநீர்த் திட்டத்துக்கு உதவிய ஒருவரை அவர் சந்நியாசியாக இருப்பினும் பாராட்டுவது அரசின் கடமை; அதைத்தான் முதலமைச்சர் கலைஞர் செய்துள்ளார்'' என்று கலைஞருக்கு அது முதுகு சொறிந்துள்ளது.



உலகவங்கி, கோக், பெக்டல் போன்ற பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகளும் நம் மக்களின் குடிநீர்ப் பஞ்சத்தைப் போக்குவதாகக் கூறிக் கொண்டுதான் இங்கு சுத்திகரிப்பு, விநியோகம், விற்பனை ஆகியவற்றில் நுழைகின்றன. இதற்காக "மார்க்சிஸ்டு' கட்சி உலக வங்கியையும், பன்னாட்டு நிறுவனங்களையும் இனிப் பாராட்டிக் கூட்டம் நடத்தினாலும் ஆச்சரியம் இல்லை.



பார்ப்பனியத்துடன் சமரசம் செய்து கொள்ளாமல் தன் வாழ்வுவசதிகளை மேம்படுத்திக் கொள்ள முடியாது எனும் உண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொண்ட கருணாநிதி போன்ற பிழைப்புவாதிகள், தனக்கு லாபம் கிடைக்கும்போது அடிப்படைக் கொள்கைகளைக் கூட நீர்த்துப் போகச் செய்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் பெரியார், சுயமரியாதை எனும் வார்த்தைகள் எல்லாம், பதவிக்கு வரும் ஏணிகள் மாதிரிதான்.



வீரமணி, தீக்கதிர், பார்ப்பனப் பத்திரிக்கைகள் என எல்லோருமே சாய்பாபா விசயத்தின் பின்னால் இருக்கும் குடிநீர் அரசியலைப் பற்றிப் பேசாமல் அதை ஆத்திகநாத்திகப் பிரச்சினையாக மாற்றி ஒட்டு மொத்த தமிழகத்தையே ஏமாளிகளாக்குகின்றனர். இயற்கையின் கொடையான குடிநீரை விற்பனைப் பண்டமாக்கும் உலகமயமாக்கலின் சதியில் நம்மை வீழ்த்துகினறனர். நம்மிடம் வரியை மட்டும் வசூலித்துக் கொண்டு நம் தாகத்தைத் தீர்க்கவும், சென்னையில் நாறும் கூவத்தைச் சுத்தம் செய்யவும் சாய்பாபாவிடம் மண்டியிடச் சொல்கிறது மு.க. அரசு.



வரி வசூலிப்பதும், போலீசுக்கு தீனிபோடுவதும் மட்டும்தான் அரசின் வேலை என்றால், அந்த அரசு நீடிக்கத்தான் வேண்டுமா?



· கவி

ஆர்.எஸ்.எஸ்.இன் சட்டபூர்வ அடியாள்! போலீசு

போலீசு:

ஆர்.எஸ்.எஸ்.இன் சட்டபூர்வ அடியாள்! போலீசு


ர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த மங்களூர் நகரிலும்; அதன் புறநகர்ப் பகுதிகளிலும்; அந்நகரையொட்டி அமைந்துள்ள உல்லால், கோனாஜே ஆகிய ஊர்களிலும் கடந்த அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் தொடர்ந்து ஐந்து நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட நேரங்களில் கூட, அப்பகுதிகளில் 144 தடையுத்தரவு அமலில் இருந்தது.


மங்களூர் நகரம் அமைந்துள்ள தெற்கு கன்னட மாவட்டத்தின் பல பகுதிகளில், அக்.4ந் தேதி தொடங்கி 6ந் தேதி முடிய பஜ்ரங்தள், ராமா சேனை ஆகிய இந்து மதவெறி அமைப்புகள் நடத்திய முசுலீம் எதிர்ப்புக் கலவரங்கள்தான் இதற்குக் காரணம். அந்தக் கலவரத்தில் இரண்டு முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்டனர்; முசுலீம்களுக்குச் சொந்தமான கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் குறி வைத்துத் தாக்கப்பட்டன; கொள்ளையடிக்கப்பட்டன. கலவரத்தை அடக்குவது என்ற பெயரில் நூற்றுக்கணக்கான முசுலீம்கள் கைது செய்யப்பட்டனர்.


அரசோ, போலீசோ எதிர்பாராமல், திடீரென்று நடந்துவிட்ட தாக்குதல் அல்ல இது. 1992இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்து மதவெறி அமைப்புகள் சிறிதும், பெரிதுமாக பல கலவரங்களை கர்நாடக மாநிலத்தில் நடத்தி வந்துள்ளன. இதன் மூலம் தங்களின் செல்வாக்கை வளர்த்துக் கொண்டுள்ள இந்து மதவெறி அமைப்புகள், 2004 சட்டமன்றத் தேர்தலில் தெற்கு கன்னட மாவட்டத்தில் மட்டும் 11 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டன.


""பசு வதையைத் தடுத்து நிறுத்துவது; மதமாற்றம் நடைபெறுவதைக் கண்காணித்துத் தடுப்பது; முசுலீம் இளைஞர்கள், இந்துப் பெண்களுடன் பேசுவதைக் கூடத் தடை செய்வது'' ஆகிய மூன்று சனாதனக் கட்டளைகளை நடைமுறைப்படுத்துவதில், இந்து மதவெறி அமைப்புகள், இம்மாவட்டத்தில் இணையான அரசாங்கத்தையே நடத்தி வருகின்றன. முசுலீம்களின் வழிபாட்டுத் தலம் அமைந்துள்ள பாபா பூதான்கிரி மலையை, ""இந்து'' வழிபாட்டுத் தலமாக மாற்ற முயற்சித்து வரும் இந்து மதவெறி அமைப்புகள், இதனை, ""தெற்கு அயோத்தி'' என அறிவித்துள்ளன. இந்தப் பின்னணியில் வைத்துதான், இந்து மதவெறி அமைப்புகள் அக்டோபரில் நடத்திய தாக்குதலைப் பார்க்க வேண்டும்.


மங்களூர் நகரின் புறநகர் பகுதியான பாஜ்பே எனுமிடத்தில், இந்துமதவெறி அமைப்புகள், அக். 3ந் தேதியன்று துர்க்கை அம்மன் ஊர்வலத்தை, பாஜ்பே மசூதி அமைந்துள்ள வீதி வழியாக நடத்தத் திட்டமிட்டன. இந்த ""மத'' ஊர்வலம், மசூதி வழியாக செல்வதற்கு முசுலீம்களிடமிருந்து எதிர்ப்பு வரவில்லை. எனினும், அவர்கள் இந்த ஊர்வலத்தில் பப்பா பேரி என்ற பெயர் கொண்ட முசுலீம், துர்க்கையை வணங்குவது போன்ற படத்தை எடுத்துச் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போலீசிடம் புகார் மனு கொடுத்தனர்.


நெடுங்காலத்திற்கு முன்பு, மங்களூர் வட்டாரத்தில் பேரி மொழி பேசும் பப்பா என்ற முசுலீம் வணிகர் வாழ்ந்து வந்ததாகவும், அவர் ஒருநாள் ஆற்றில் படகில் சென்று கொண்டிருக்கையில், அந்த ஆறு இரத்தமாக மாறி, அவரது படகு மேலே செல்ல முடியாமல் நின்று விட்டதாகவும்; அவரது கனவில் துர்க்கை அம்மன் தோன்றியதையடுத்து, அவர் துர்க்கை அம்மனின் பக்தராக மாறி விட்டதாகவும் ஐதீகக் கதையொன்று இப்பகுதியில் வாழும் இந்துமுசுலீம் மக்களிடையே நிலவி வருகிறது. மதச்சகிப்புத்தன்மை, மத நல்லிணக்கத்தின் அடையாளமாக இருந்துவரும் இந்தக் கதையை, இந்து மதவெறியர்கள் இப்பொழுது முசுலீம்களை நக்கல் செய்யப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, துர்க்கை ஊர்வலத்தில், பப்பா பேரி என்ற பெயரில், ஒரு ஏழை முசுலீம் மதகுரு துர்க்கையிடம் இறைஞ்சுவது போன்று வரைந்து, முசுலீம்களை மதரீதியாகப் புண்படுத்த முயன்றனர்.


இந்தப் படத்தை ஊர்வலத்தில் எடுத்து செல்வோம் என இந்து மதவெறிக் கும்பல் பிடிவாதமாக இருந்ததால், ""குறைந்தபட்சம் ஊர்வலம் மசூதிக்கு அருகே வரும் பொழுதாவது, அந்தப் படத்தை காட்சிக்கு வைக்கக்கூடாது'' என முசுலீம்கள் வேண்டுகோள் வைத்தனர். இந்து மதவெறியர்கள் இந்தச் சமரசத்திற்கு ஒப்புக் கொள்ள மறுத்துவிட்டனர்.

""இந்தப் பிடிவாதம் ஒரு கலவரத்திற்குத் தூபம் போடும் சதிச் செயல்'' என நன்கு தெரிந்திருந்தும் கூட, அதிகாரவர்க்கம் ஊர்வலத்திற்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்காமல், பப்பா பேரி படத்தோடு ஊர்வலம் மசூதி வழியாகச் செல்ல அனுமதித்தது.


போலீசு அதிகாரிகளின் இந்த ஒத்துழைப்பு, கள் குடித்த (இந்து மதவெறி) குரங்குகளுக்கு, தேள் கடித்த நிலையை உருவாக்கிவிட்டது. ஊர்வலத்தின்பொழுதே, 1,000 பேர் கொண்ட இந்து மதவெறிக் கும்பலொன்று, கைகளில் வாள், குண்டாந்தடி, சோடா பாட்டில்களைத் தூக்கிக் கொண்டு, ஏழு முசுலீம் கடைகளுக்குள்ளும், இரண்டு இந்து கடைகளுக்குள்ளும் புகுந்து கொள்ளையடித்தது. (கொள்ளையடிக்கும் பொழுதுதான் ஆர்.எஸ்.எஸ்.க்கு மதச்சார்பின்மை நினைவுக்கு வரும் போலும்) முகம்மது ஹனிஃப் என்பவருக்குச் சொந்தமான துணிக் கடையில் மட்டும் 15 இலட்ச ரூபாய் பணம் ரொக்கமாக இந்தக் கும்பலால் கொள்ளையடிக்கப்பட்டது.


ஆறு துணை ஆய்வாளர்கள், மாவட்ட போலீசு கண்காணிப்பாளர், மாவட்ட போலீசு கமிசனர் ஆகிய அதிகாரிகள் அடங்கிய 200 பேர் கொண்ட போலீசுப் பட்டாளமே இக்கொள்ளைக்குச் சாட்சியாகவும், பாதுகாப்பாகவும் இருந்தனர். நடந்தது மத ஊர்வலம் அல்ல; இந்து மதவெறியர்கள் நடத்திய பகற்கொள்ளை என்பதற்கு ஒளிப்பேழை பட ஆதாரங்கள் இருந்தபோதும், முதலாளித்துவப் பத்திரிகைகளோ, தமிழ்நாட்டு தினமலர் பாணியில், ""மத நல்லிணக்கத்தின் குறியீடான, பப்பா பேரி துர்க்கை அம்மனை வணங்கும் படத்திற்கு முசுலீம்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, மத ஊர்வலத்தையும் தடுத்து நிறுத்திவிட்டதாக'' அவதூறையே, செய்தியாக வெளியிட்டன.


அக்.3 அன்று பாஜ்பேயில் நடத்தப்பட்ட கலவரத்தை, பல பகுதிகளுக்கும் விரிவாக்கும் நோக்கத்தோடு, ராமசேனை என்ற இந்து மதவெறி அமைப்பு அக்.6 அன்று கடையடைப்புப் போராட்டத்தை நடத்தியது. அன்று மங்களூர் நகருக்கு அருகில் உள்ள உல்லால் பகுதியில், மூன்று "இந்து'க் கடைகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. இச்சம்பவம் பற்றி முறையான விசாரணை நடத்தாமல், முசுலீம்கள் மீது குற்றம் சுமத்திய போலீசார், இதற்குத் தண்டனையாக உல்லால் முசுலீம்கள் அனைவரின் மீதும் அரசு பயங்கரவாதத்தை ஏவிவிட்டனர்.


அன்று மாலை, ரமலான் நோன்பை முன்னிட்டு ஆண்கள் மசூதிக்குச் சென்றிருந்த நேரமாகப் பார்த்து, முசுலீம்களின் வீடுகளுக்குள் அத்து மீறி, அதிரடியாக, கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த போலீசார், வீட்டில் இருந்த பெண்களையும், சிறுவர்களையும், முதியவர்களையும் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கினர். ""தீவிரவாதிகளை''ப் போல முகத்தை மூடிக் கொண்டு வீடுகளுக்குள் நுழைந்த போலீசு கும்பல், கையில் எடுத்துச் செல்லக் கூடிய பொருட்கள் செல்ஃபோன்கள், தங்கநகைகள், ரொக்கப்பணம் அனைத்தையும் கொள்ளையடித்தனர். கமுக்கமாக எடுத்துச் செல்ல முடியாத பொருட்களை தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி அடித்து நொறுக்கினர்.


இந்தச் சட்டவிரோதத் தாக்குதலையும், திருட்டையும் ""தேடுதல் வேட்டை'' என்ற பெயரில் மூடி மறைக்கும் முகமாக, 70 பேரை அவர்களுள் பெரும்பாலோர் சிறுவர்கள் கைது செய்து, பொய் வழக்கு போட்டு, மங்களூரில் இருந்து 400 கி.மீ தொலைவில் உள்ள பெல்லாரி சிறையில் அடைத்தனர். ""கைது'' செய்யப்பட்ட முசுலீம்களை ஏற்றிச் செல்வதற்கு கொண்டு வரப்பட்ட பேருந்தில் இருந்த காலியிடங்களை நிரப்புவதற்காகவே மீண்டும் ""தேடுதல் வேட்டை'' நடத்தப்பட்டு, ஆறு முசுலீம்கள் கைது செய்யப்பட்டனர். போலீசிடம் நிரம்பி வழியும் முசுலீம் வெறுப்புக்கு இதுவொரு சான்று.


முசுலீம்களின் காலனியாகக் கருதப்படும் பந்தரில், தாக்குதலோ, எதிர்த்தாக்குதலோ நடக்காதபொழுதும், அக்.8 அன்று நள்ளிரவில் பந்தர் பகுதியில் வசிக்கும் பேரி மொழி பேசும் முசுலீம்களின் வீடுகளுக்குள் நுழைந்த போலீசார், வீட்டில் இருந்த ஆண்கள் அனைவரையும் சட்டவிரோதமாகக் கைது செய்தனர். அப்படி கைது செய்யப்பட்ட முசுலீம்களுள், அப்துல் ரஷீத், முகம்மது இம்ரான் என்ற இரு இளைஞர்களை பொய் வழக்கில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என்றால், ""அவர்கள் இருவரும், மங்களூர் நகரின் பல இடங்களில் நடந்த கலவரங்களை அந்நகர மேயர் அஷ்ரஃப்தான் தூண்டிவிட்டதாக எழுதித்தர வேண்டும்'' என போலீசாரே பேரம் நடத்தினர்.


மங்களூர் நகரின் புறநகர் பகுதியான ஃபைசல் நகரில், அப்துல் காதர் நடத்தி வரும் ""ஏ.கே.ஸ்டோர்ஸ்'' என்ற மளிகைக் கடை, அக்.6 அன்று, இந்து மதவெறியர்களால் சூறையாடப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டது. இது பற்றி அப்துல்காதர் கொள்ளையடித்தவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு புகார் கொடுத்த பிறகும், போலீசார் குற்றவாளிகளுள் ஒருவரையும் கைது செய்யவில்லை.


மாறாக, அன்று மாலை அப்துல்காதரின் வீட்டுக்குள் அதிரடியாகப் புகுந்த போலீசார், அவரின் இரண்டாவது மகன் பர்வேஷைக் கைது செய்தனர். அப்துல்காதரின் இரண்டாவது மருமகள் போலீசாரின் அத்துமீறலை எதிர்த்து நின்று கேள்வி கேட்ட பொழுது, அதற்கு போலீசார், ""உங்க வீட்டு வாலிப பசங்களுக்குக் கொள்ளையடிக்கவும், பொதுச் சொத்தை நாசப்படுத்தவும் ஏன் கற்றுக் கொடுக்கிறீர்கள்?'' என ஆர்.எஸ்.எஸ். பாணியில் அவதூறு செய்து அவமானப்படுத்தினர்.


ஃபைசல் நகரில் வசித்து வரும் இந்துக்களில் சிலரது வீடுகள் அக்.6 அன்று முசுலீம் இளைஞர்களால் தாக்கப்பட்டன. போலீசார், இந்தத் தாக்குதலைக் காட்டி, இந்துக்களின் உயிருக்கும், உடமைக்கும் ஆபத்து நெருங்கி விட்டதாகப் பீதியூட்டி, அந்நகரைச் சேர்ந்த 30 இந்து குடும்பத்தினரை, வீராநகருக்கு இடம் பெறச் செய்தனர்.


கர்நாடகா மத நல்லிணக்க மன்றம் என்ற அமைப்பு, இந்த இடப்பெயர்ச்சி குறித்து விசாரித்தபொழுது, அந்த "இந்து'க்கள் ""போலீசின் அச்சுறுத்தல், நிர்பந்தத்தினால் தான் தாங்கள் வீரா நகருக்கு இடம் பெயர்ந்திருப்பதாக''த் தெரிவித்தனர். ஆனால், பத்திரிகைகளும், தொலைக்காட்சி நிறுவனங்களும் இந்த உண்மையை மூடி மறைத்து விட்டு, ""இடம் பெயர்ந்த இந்துக்களை அடிக்கடி காட்டி'' ஆர்.எஸ்.எஸ்.இன் சமூக விரோதக் கலவரத்திற்குத் தூபம் போட்டன.


இந்து மதவெறிக் கும்பல் கடையடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த மறுநிமிடமே, பஜ்ரங் தள்ஐச் சேர்ந்த 100 குண்டர்கள், கூதினாபாலி என்ற இடத்தில் மூடப்பட்டிருந்த 11 முசுலீம் கடைகளின் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்து அக்கடைகளைச் சூறையாடினர். கூதினாபாலி போலீசு நிலையத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் பட்டப்பகலில் பலர் கண் முன்னால் இந்தக் கொள்ளை நடந்த போதிலும் போலீசார் இதனைத் தடுத்து நிறுத்த முயலவில்லை.


மாறாக, அக்.13 அன்று கூதினாபாலியில் உள்ள ""பி.சி.சாலை பேருந்து நிலையம்'' அருகே ஒரு குண்டு வெடித்தவுடன், அன்று மாலையே முசுலீம் குடியிருப்புக்குள் புகுந்து, பெண்கள், குழந்தைகளைக் கூட விட்டு வைக்காமல் தாக்கியதோடு, பீடி சுற்றி பிழைக்கும் 20 முசுலீம் தொழிலாளர்களைக் கைது செய்தனர்.


கூதினாபாலியில் பஜ்ரங்தள் நடத்திய பகற்கொள்ளையை மதக் கலவரமாகப் பூசி மெழுகி எழுதிய பத்திரிகைகள், அங்கு நடந்த குண்டு வெடிப்பை ""முசுலீம் தீவிரவாதம்'' எனப் பீதியூட்டி எழுதின.


ஆர்.எஸ்.எஸ். நடத்திய இந்தக் கலவரத்தில், அதற்குத் துணையாக போலீசார் நடந்து கொண்டு, முசுலீம்களைத் தாக்கியதை வெறும் மனித உரிமை மீறல் பிரச்சினையாகச் சுருக்கிப் பார்க்க முடியாது. ஆர்.எஸ்.எஸ்.இன் முசுலீம் எதிர்ப்பு இந்து மதவெறி பாசிச அரசியல், போலீசு துறை முழுவதும் வேரோடி போயிருப்பதைத்தான் இது எடுத்துக் காட்டுகிறது. 1992இல் நடந்த மும்பய் கலவரத்திலும்; 2002இல் நடந்த குஜராத் இனப்படுகொலையிலும்; 1987இல் நடந்த மீரட் கலவரத்திலும் இந்த உண்மை ஏற்கெனவே அம்பலமாகியிருக்கிறது. இராணுவம், நீதித்துறை, போலீசுத் துறை என அரசின் முக்கிய உறுப்புகள் அனைத்தும் காவிமயமாகி வரும் வேளையில், இந்திய அரசை மதச்சார்பற்ற அரசாகக் கருத வாய்ப்பே இல்லை. ஆர்.எஸ்.எஸ்.இன் இந்து மதவெறி அரசியலை நடைமுறைப்படுத்த, அக்கட்சிதான் ஆட்சியில் இருக்கவேண்டும் என்ற கட்டாயமும் இல்லை!


·கவி


Monday, March 12, 2007

ஆங்கிலேய காலனியாதிக்கம் தந்த அவமானச் சின்னம்

சென்னை மாநகர போலீசு

ஆங்கிலேய காலனியாதிக்கம் தந்த அவமானச் சின்னம்


சென்னை போலீசு துறை ஆரம்பிக்கப்பட்டு 150ஆவது ஆண்டு நிறைவடைவதை ஒட்டி ஜனவரி 5ஆம் நாளன்று சென்னையில் கோலாகலமான விழாவைத் தமிழக அரசு கொண்டாடியது. அரசுத் தலைவர் அப்துல் கலாம் நேரில் வந்திருந்து சிறப்பித்து, போலீசாரை ஒன்பது உறுதிமொழிகள் ஏற்க வைத்தார். சாகச நிகழ்ச்சிகள், கண்காட்சி மற்றும் போலீசுக்கு பதக்கங்கள், புது வீடுகள் என மக்கள் வரிப்பணத்தில் மஞ்சள் குளித்தது போலீசு. இக்கொண்டாட்டங்களுக்கெல்லாம் தகுதியானதுதானா தமிழக போலீசுதுறை?



சென்னை போலீசு துறையின் வரலாறே, அன்னிய ஆட்சிக்கு எடுபிடி வேலை செய்வதில் இருந்து தொடங்குகிறது. 150 ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கிந்திய கம்பெனி, சென்னப் பட்டணக் கோட்டையின் பின்புறம் ஒரு மார்க்கெட்டை நடத்தி வந்தது. அம்மார்க்கெட்டைக் கண்காணிக்க உருவாக்கப்பட்ட "போலீசு' எனும் அமைப்பே பின்னாளில் ஆங்கிலேய அதிகாரிகளின் தலைமையில் "சென்னை போலீசு துறை'யாகப் பரிணமித்தது. காலனி ஆட்சியாளர்களின் நலனைக் காக்கவும், விடுதலைக்காகக் குரல் எழுப்பிய சொந்த நாட்டு மக்களின் குரல்வளையை நெறிக்கவும் பாசிச முறையில் பயிற்றுவிக்கப்பட்ட அத்துறை இன்னமும் காலனியத்தின் நீட்சியாகவே திகழ்கின்றது.



சொந்த நாட்டு மக்களைச் சந்தேக வட்டத்துக்குள்ளே வைத்திருக்கவும், அவர்களைத் தேவைப்படும்போது ஒடுக்கி வதைக்கவும் தயாரிக்கப்பட்ட இப்பாசிசப் படை, 1947க்குப் பிறகும், மாற்றம் ஏதுமின்றி ஆட்சியாளர்களால் மேலும் கொம்பு சீவி விடப்பட்டு, நம் நாட்டு மக்களின் வெறுக்கத்தக்க எதிரியாகவே இன்றும் திகழ்கிறது. ஆட்சியாளர்களின் அநீதிக்கு எதிராக மக்கள் திரளும்போதெல்லாம், அரசின் உறுப்பான இராணுவத்துக்கு நிகராய் போலீசும், போராடும் மக்களை மிருகத்தனமாகச் சித்திரவதை செய்து ஒடுக்குகிறது. போலி மோதல்கள் மூலம் கம்யூனிசப் புரட்சியாளர்களையும், தேசிய இனங்களின் விடுதலைக்காகப் போராடுபவர்களையும் கொன்றொழிப்பதில் முன்னிலையில் இருக்கின்றது.



அரசு பணத்திலிருந்து இவர்களுக்குத் தீனி போடவென்றே மது விலக்குப் பிரிவு, கியூ பிரிவு, வரதட்சணைக் கொடுமைப் பிரிவு, தீண்டாமை ஒழிப்புப் பிரிவு, திருட்டு விசிடி பிரிவு என ஆயிரத்தெட்டு பிரிவுகளாகப் பிரித்து, நூற்றுக்கணக்கான பதவிகளை ஏற்படுத்தியும், மேலும் பலருக்குப் பதவி தருவதற்கென்றே மாவட்டங்களைப் பல துண்டுகளாகப் பிரித்தும், ஆட்சியாளர்கள் இந்த மிருகத்தை செல்லப் பிள்ளையாக வளர்த்து விடுகின்றனர்.



இவ்வாறு வளர்க்கப்பட்ட மிருகம், அவசரநிலை பாசிச ஆட்சிக் காலத்தில் தனது முழு அதிகாரத்தை மக்கள் மீது ஏவி வெறியாட்டம் போட்டது. ஓட்டுக் கட்சித் தலைவர்களும் இதில் இருந்து தப்ப இயலவில்லை. நெருக்கடி நிலைக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த பாசிச எம்.ஜி.ஆரோ, தேவாரம் போன்ற கொலைகார போலீசு கும்பலுக்கு அளவு கடந்த அதிகாரமும், சுதந்திரமும் தந்து, வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களைத் துப்பாக்கிச் சூட்டில் கொல்வது, நக்சல்பாரி இயக்கத்தின் ஆதரவாளர்களைக் கூட விட்டு வைக்காமல் கடத்திச் சென்று கொல்வது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளை நிரந்தரமாக்கினார்.



அதன் பின்னர் மாறி மாறி ஆட்சிக்கு வந்த கருணாநிதியும், ஜெ.வும் போலீசுக்கு போட்டிப் போட்டுக் கொண்டு எண்ணற்ற சலுகைகளை வாரி வழங்கியும், அவர்கள் மேலும் சம்பாதித்துக் கொள்வதற்கு என்றே கந்துவட்டித் தடை சட்டம் போன்ற புதுப்புதுச் சட்டங்களையும் உருவாக்கித் தருகின்றனர்.



நாளடைவில், சமூக விரோதச் செயல்களைச் செய்ய, தனியாகக் கும்பல் ஒன்று இயங்கி வந்த நிலைமை மாறிப் போய், போலீசே அதன் பாத்திரத்தை ஏற்பதுதான் அதிகரித்துள்ளது. தணிக்கைக்கு உட்படாத பெருந்தொகையைக் கொண்டு பொதுமக்களிடையே ஆட்காட்டிகளை உருவாக்குவதும், இருவேறு ரவுடிகளிடையே உள்ள பகையை வளர்த்து விடுவதும், அவர்களில் ஒரு பிரிவை தனக்கும், ஆட்சியாளர்களுக்கும் பயன்படுத்திக் கொண்டு, தேவை நிறைவேறியதும் "போலி மோதல்' மூலம் ஆளைத் தீர்த்துக் கட்டுவது என்பதுமாக நவீன கிரிமினலாக தமிழகப் போலீசு சீரழிந்துள்ளது.



150ஆவது ஆண்டு விழாவின்போது அப்துல்கலாம், ""பொது மக்களின் நண்பனாக இருப்பேன்'' என உறுதிமொழி ஏற்கச் சொன்ன அதே போலீசுதான், "வீரப்பனைத் தேடுகிறோம்' என்ற பேரால் மலைவாழ் மக்களில் நூற்றுக்கணக்கானோரைச் சித்திரவதை செய்து பலரை ஊனமாக்கியது. பலரைக் கொன்று எரித்துத் தடயமே இல்லாமல் சாம்பலாக்கியது. பல பெண்களை வன்புணர்ச்சிக்குள்ளாக்கியது. அதன் வக்கிரம் உச்சத்துக்குப் போய், பெற்ற தாயையும், மகனையும் அம்மணமாக்கி, அவர்களைப் பலர் முன்னால் உறவு கொள்ளச் செய்து ரசித்தது.



அந்தியூர் விஜயா, அண்ணாமலை நகர் பத்மினி என நூற்றுக்கணக்கான அபலைப் பெண்களைக் கொடூர முறையில் வன்புணர்ச்சி செய்து வக்கிர விளையாட்டு ஆடிய போலீசு துறையிடம் போய் ""பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும்'' என்று உரையாற்றுகிறார் அரசவைக் கோமாளி கலாம்.



ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள், கால் சென்டரில் பணிபுரியும் பெண்ணைக் கடத்திப் பாலியல் வன்முறை செய்ய முயல்வதாகவும் அவ்வோட்டுநர்களை "என்கவுண்டர்' செய்து கொன்று, பெண்ணின் கற்பைக் காப்பாற்றுவதாகச் சித்தரித்து, உழைக்கும் ஆட்டோ தொழிலாளரை இழிவுபடுத்திடும் வகையில் ""காவலர் உங்கள் சேவகர்'' என்ற சினிமாவைத் தயாரித்த போலீசுதான், சமீபகாலமாக ""கள்ளத் தொடர்பு காரணமாக, மதுரை இன்ஸ்பெக்டர் மனைவியிடம் விளக்குமாத்துப் பூசை வாங்கிய பெண் எஸ்.ஐ.', "ஜெயலட்சுமியுடன் குடும்பம் நடத்திய டஜன் கணக்கான போலீசார்'' என வணிகப் பத்திரிகைகளிலேயே தலைப்புச் செய்தியாகிப் பல்லை இளித்து நிற்கிறது.



"மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக' இருக்கவும், "லஞ்ச லாவண்யம் இல்லாமல்' செயல்படவும் போலீசிடம் வேண்டுகோள் வைத்த அப்துல்கலாமுக்கு, ஆதம்பாக்கத்தில் பொதுஜனம் ஒருவரிடம் 1000 ரூபாய் பறிக்க ஒரு போலீசு முயன்றபோது, அங்கே வந்த மற்றொரு போலீசு "என் ஏரியாவில் வந்து எப்படி வாங்கலாம்' என்று பணத்தைப் பங்கிடப் போய், நடுரோட்டில் கட்டிப் புரண்டு சண்டை போட்டதும், எழும்பூர் அல்சாமாலில் நிறுவன அதிபர் ஒருவரிடம் லஞ்சம் வாங்க முயன்ற போலீசு இன்ஸ்பெக்டர், லஞ்ச ஒழிப்புப் போலீசாரிடமிருந்து தப்பித்துத் தெருவில் ஓடியதும் தெரிந்திருக்குமா?

கோவை நகைக்கடை ஊழியர்களிடம் தங்கக் கட்டியைக் கொள்ளையிட்ட சென்னை போலீசு, சென்னைக்கு வந்து நகைகளைக் கொள்ளையிட்ட மதுரை போலீசு, பெசண்ட்நகர் கடற்கரையில் நாலாயிரம் ரூபாயை வழிப்பறி செய்த சென்னை போலீசு, ஓடும் பேருந்தில் பெண்ணைக் கேலி செய்து பொதுமக்களிடம் தர்மஅடி வாங்கிய சென்னை போலீசு, குற்றாலத்தில் குடிபோதையுடன் வெறும் ஜட்டியுடன் குளிக்க முயன்று தகராறு செய்த நெல்லை போலீசு, பொதுமக்களின் புகார்களை ஏற்க மறுத்து சென்னை உயர்நீதி மன்றத்தின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ள போலீசு, வடசென்னையிலுள்ள கழிப்பறைகளை பினாமிகளை வைத்து கைப்பற்றி, ரௌடிகளைக் கொண்டு அடாவடி கட்டணக் கொள்ளையடிக்கும் போலீசு எனப் பல அவதாரங்களை எடுத்து வருகிறது தமிழ்நாடு போலீசு. இவர்களின் கேடுகெட்ட இத்தகைய செயல்களை முழுமையாகச் சொல்ல வேண்டுமானால், இதற்கென்றே தனியாக சிறப்பு மலர்தான் வெளியிட வேண்டும்.

பாசிச முறையில் பயிற்றுவிக்கப்பட்ட தமிழகப் போலீசு மிருகம் 1995இல் கொடியங்குளத்தில், தலித் மக்களின் உடைமைகளைச் சூறையாடியும், குழந்தைகள், வயோதிகர்களை வன்மமாய்த் தாக்கியும், அவர்களின் குடிநீர்க் கிணற்றில் மலத்தைப் போட்டு நிரப்பியும் தனது கோரமான சாதிவெறியைக் காட்டியது. நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடிய மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 17 பேரை, 1999இல் ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு இணையாக ஆதிக்க சாதிவெறியுடன் தாக்கிக் கொன்று தாமிரபரணி ஆற்றில் வீசி எறிந்தது. குண்டுபட்டி கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்தபோது அந்த ஊரையே தாக்கிச் சூறையாடியது.



கோயம்புத்தூரில் 1997 நவம்பரில் இந்து முன்னணிக் குண்டர்களுடன் கை கோர்த்துக் கொண்டு, 19 முஸ்லிம்களைக் கொன்றும், அவர்களின் உடைமைகளைக் கொளுத்தியும், தனது இந்துவெறிப் பாசிசத்தை உலகுக்குக் காட்டியது, தமிழக போலீசு. பாபர் மசூதி தகர்க்கப்பட்ட 1992ஆம் ஆண்டு தொடங்கி, முஸ்லிம்கள் பெருவாரியாய் வாழும் கோவை கோட்டைமேடு பகுதியை "அறிவிக்கப்படாத திறந்தவெளிச் சிறைக் கொட்டடி' யாக்கி தடுப்பரண்கள், சோதனைச் சாவடிகள் அமைத்து ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் தினமும் வாட்டி வதைத்து வருகிறது.



அன்னிய செலாவணி மீது கட்டுப்பாடுகள் பல விதித்து வந்த காபிபோசா, ஃபெரா போன்ற சட்டங்கள், உலகமயப் பொருளாதார கொள்கைக்கு ஏற்ற வண்ணம், 1990க்குப் பின்வந்த ஆட்சியாளர்களால் திருத்தப்பட்டன. சில சட்டங்கள் விட்டொழிக்கப்பட்டன. தனியார்மய, தாராளமய நோக்கங்களுக்கேற்றவாறு தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப்பட்டன. ஆனால் 150 ஆண்டுகளாக ஒரே மாதிரியான வேலையைச் செய்து வரும் போலீசுக்கு என்று போலீசு சட்டங்களில் எந்தவிதத் திருத்தமும் அரசுக்கு தேவையாய் இருக்கவில்லை.



அன்னியன் அஞ்சி நடுங்கிடக் கப்பல் விட்ட சிதம்பரனாரை "ராஜதுரோகி'யாகப் பார்த்த போலீசு துறைதான், இன்று அந்நிய "கோக்'கை எதிர்த்திடும் தேசபக்தர்களையும் தேசத்துரோகிகளாகப் பார்க்கிறது. "கோக்'கிற்கு எதிராகப் போராடுபவர்களை "பயங்கரவாதிகள்' என மக்களிடம் போலீசே பிரச்சாரம் செய்கிறது.



பிரிட்டிஷாரை எதிர்த்துக் கூடிய ஆயிரக்கணக்கானோரை ஜாலியன் வாலாபாக்கில் சுட்டு வீழ்த்திய பிரிட்டிஷ் இந்திய போலீசுக்கும், குர்கானில் ஜப்பான் நாட்டு ஹோண்டா நிறுவனத்தில் வேலை நிறுத்தம் செய்த தன் சொந்த நாட்டுத் தொழிலாளர்களின் மண்டையைப் பிளந்த இந்திய போலீசுக்கும் "ஏகாதிபத்திய நலன் காக்கும்' செயலில்தான் எவ்வளவு ஒற்றுமை!



நாளை, தமிழ்நாட்டில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் போன்ற ஏகாதிபத்திய நலன்காக்கும் திட்டங்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து போராடினால், அவர்களை அடித்து நொறுக்கத்தான், இன்றே தமிழக போலீசுக்கு 100 சொகுசு கார்களை ஹூண்டாய் நிறுவனம் "எலும்புத் துண்டாக'க் கொடுத்துள்ளது.



வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்டு, இந்திய சிப்பாய்கள் மாண்ட முதல் சுதந்திரப் போரின் 150வது ஆண்டையும் கொண்டாடுகிறது, அரசு. அதேநேரத்தில் இந்த நாட்டில் ஆங்கில ஏகாதிபத்தியம் தொடங்கி வைத்து இன்னமும் ஏகாதிபத்திய நலன் காத்து வரும் அடியாள் படையான போலீசுக்கும் 150வது ஆண்டையும் அதே அரசுதான் கொண்டாடுகிறது. இதுதான் வேற்றுமையில் ஒற்றுமைபோலும்! இதைவிட பித்தலாட்டம் எதுவும் இருக்க முடியாது; ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல் புரட்சியை முன்னெடுக்காமல், ஏகாதிபத்திய நலன் காக்கும் அடியாள் படையான தமிழகப் போலீசு எனும் வக்கிர மிருகத்தைத் தாக்கி அழிக்கவும் முடியாது.

· இரணியன்

Saturday, March 10, 2007

(கிழக்கு) மக்களின் பிரச்சனைகள் என்ன?

(கிழக்கு) மக்களின் பிரச்சனைகள் என்ன?

பி. இரயாகரன்
10.03.2007


கிழக்குவாழ் மக்களின் பிரச்சனைகளை அடிப்படையாக கொண்ட விமர்சனம், காலத்தின் முக்கியத்துவம் கருதி முன்வைக்கப்படுகின்றது. புலிக்கு பதிலாக கருணா என்ற ஒரு பாசிட், பேரினவாதத்தின் கூலிப்படையாக வெளிப்பட்டது முதல் அந்த அரசியல் இழிநிலையை அம்பலப்படுத்துவதை காலம் கோருகின்றது. புலியெதிர்ப்பு மற்றும் புலிக்கு மாற்றாக கருணா என்ற மற்றொரு பாசிட்டை முற்போக்காக காட்டுகின்ற வரலாற்று ஒட்டத்தின் ஆரம்பத்திலேயே, இதை அரசியல் ரீதியாக முறியடிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. யாழ் மேலாதிக்கத்துக்கு நிகராக கிழக்கு பிரதேசவாதத்தை முன்வைத்து, அந்த மக்களின் முதுகில் சவாரி செய்வதை அனுமதிக்க முடியாது. போலியாகவும் புரட்டாகவும் அரசியலை திரித்துப் புரட்டி, மக்கள் அரசியல் செய்வதாக பீற்றுகின்ற இந்த பாசிட்டுக்களை இனம் காண்பது அவசியமானது. இந்த வகையில் கிழக்கு மக்களின் வாழ்வு சார்ந்த பிரச்சனைகள் என்ன என்ற ஆய்வுடன் கூடிய விமர்சனம், உள்ளடக்கத்தில் முழு இலங்கை வாழ் மக்களுக்கும் பொருந்தி வரும் அம்சம் அதிகமானது.


புலிகள் என்ற வலதுசாரிய குறுந்தேசிய அமைப்பு அதன் அரசியல் நீட்சியில் இயல்பாகவே பாசிச வடிவத்தை எடுத்துக் கொண்டது. இதன் நீட்சியில் ஒரு கொலைகார, ஒரு கொள்ளைக்கார மாபியா கும்பலாக சீரழிந்தது. ஓட்டு மொத்த மக்களையும் தனக்கு அடிமைப்படுத்தி, அவர்களின் வாழ்வை சீரழித்து சிதைத்து சின்னாபின்னமாக்கியுள்ளது. இந்த வரலாற்று ஓட்டத்தில், அதன் அனைத்து பாசிச மாபியா நடத்தைகளில் தீவிர பங்கு கொண்ட அதன் முக்கிய புள்ளியாக செயல்பட்ட கருணா, அதிகார முரண்பாடுகளால் முரண்பட்ட போது பிளவு நிகழ்கின்றது. உண்மையில் புலிகளின் ஜனநாயகமின்மை, கருணாவின் தனிப்பட்ட அதிகார முரண்பாட்டால் ஏற்பட்ட பிளவு தவிர்க்க முடியாத ஒன்றாகியது. புலிகள் அமைப்பில் இது போன்ற பல உதிர்வுகளும், விலகல்களும் தொடர்ச்சியாக நடந்து வந்துள்ளது. இதற்கு அப்பால் துரோகியாகவும், இராணுவ மோதலில் வீர மரணங்களாகவும், திடீரென காணாமல் போன நிகழ்வுகள், பாசிச மாபியா கும்பலின் வளர்ச்சியுடன் ஓட்டிப் பிறந்ததாகவே காணப்படுகின்றது.


இந்த வகையில் உள் நிகழ்ந்த அதிகார மோதலில் தோற்ற கருணாவின் பிளவு, தவிர்க்க முடியாதது தான். உள்ளடகத்தில் அவரின் தனிப்பட்ட உரிமையும் கூட. பிளவு நிகழ்ந்த பின்பாக 14.3.2004, 20.03.2004 நாம் எழுதிய கட்டுரைகளில், சரியாகவும் தெளிவாகவும் இதை மதிப்பிட்டோம். (பார்க்க வடக்கு-கிழக்கு என்ற பிரதேசவாத பிளவு, ஏன் புலிக்குள் நடந்தது?


பாசிச அமைப்புக்குள்ளான கருணாவின் அதிகார நலன்கள், அதுவே தனிமனித பிளவாகிய போதும், அதற்குள் ஒரு ஜனநாயகக் கோரிக்கை இருந்தது. புலிகள் போன்ற பாசிச மாபியா இயக்க நடைமுறையில், உள்ளியக்க ஜனநாயக மறுப்புக்கு எதிரான உயிர்வாழ்வு சார்ந்த பிரச்சனை கூட ஜனநாயகக் கோரிக்கை தான். கருணா தனிநபர் அதிகார நலனை முன்வைத்து பிரிந்த அந்த அதிகார நலன் சார்ந்த அரசியல் உள்ளடகத்தை மறைத்து, அதை இயல்பாக காலகாலமாக நீடித்த யாழ் மேலாதிக்கத்துக்கு எதிரான பிளவாக தனது பிளவை சித்தரித்தார்.


இந்த வகையில் யாழ் மேலாதிக்கத்தை எதிர்த்து போராட வேண்டிய அரசியல் பணிக்கு இது உற்ற துணையாகவும், அதேநேரம் இதன்பால் ஆழமான அரசியல் தெளிவு ஏற்படும் போது கருணா போன்றவர்கள் கூட சரியான மக்கள் நிலையை எடுக்க முடியும் என்ற அரசியல் உண்மையை நாம் நிராகரித்து இருக்கவில்லை. இந்த வகையில் யாழ் மேலாதிக்கம் பற்றியும், மக்களின் நலனை முன்னிலைப்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றியும், நாம் விமர்சன ரீதியாக தொடர்ந்து இடித்துரைத்தே வந்தோம். ஆனால் கருணா மக்களுக்கு எதிராக அதே பாசிச வழியில், யாழ் மேலாதிக்கத்தை இனம் காணத் தவறி, வடக்கு மக்களை எதிரியாக சித்தரித்து, சொந்த மக்களையே ஒடுக்கத் தொடங்கினார். உள்ளடகத்தில் தனது அதிகாரத்தையும், அந்த அதிகார மேலாதிக்கத்தை பெறுவதற்காக யாழ் மேலாதிக்கத்தை முன்னிறுத்தி, பிரதேச பிளவை முன்தள்ளி, மக்களை எதிராக நிறுத்தி, ஒரு அதிகார வெறியன் என்பதை நிறுவியுள்ளார். புலிகளின் உள்ளான முரண்பாட்டில் எது அவரின் முரண்பாடோ, அதை இப்படி சாதித்துக் கொண்டார். அதே புலிப்பாசிச மாபியா வழியில், அந்த அரசியல் சாக்கடை மூலம் தன்னை நிறுவிக் கொண்டார். யாழ் மேலாதிக்கத்தை அரசியல் ரீதியாக இனம் காணத் தவறி, குறும் பிரதேச பிளவை முன்தள்ளிய கருணா, மக்களிடையே பிளவை விதைத்ததன் மூலம் மற்றொரு பாசிச மாபியா புலியை உருவாக்கினார். இப்படி கிழக்கு மக்கள் புதிய பாசிச புலிக்கு அடிமையாகி, தம் வாழ்வை இழக்கின்றனர். இந்த புலி பேரினவாதத்தின் எடுபிடி குண்டர் படையாக, கிழக்கு மக்கள் மத்தியில் தனது சூறையாடலை நடத்துகின்றது. கிழக்கு மக்களின் வாழ்க்கைக்கு எதிராக இந்த பாசிச மாபியா கும்பல் செயல்படுகின்றது.


இதை அம்பலப்படுத்துவது அனைவரினதும் உடனடிக் கடமையாக உள்ளது. அதன் ஆரம்பத்திலேயே இது இனம் காணப்பட்டு, அரசியல் ரீதியாக அழிக்கப்பட வேண்டும். இந்த வகையில் யாழ் மேலாதிக்கத்தை அரசியல் ரீதியாக அடையாளம் காண்பதும், கிழக்கு மக்களின் நலனை முன்னிலைப்படுத்தி போராடுவதும் அவசியமானது. இது மட்டும் தான் முற்போக்காக இருக்கும். அதுவே மக்களின் நலனை முன்னிலைப்படுத்தும். ஆனால் கருணா கும்பல் இதற்கு எதிராகவே செயல்பட்டது. படிப்படியாக மற்றொரு புலி பாசிட்டுக்களாக மாபியாவாகவே தன்னை வெளிப்படுத்த தொடங்கியது. இந்த நிலையில் பேரினவாதத்துடன் அங்குமிங்குமாக ஓட்டி உறவாடியது வெளிப்படத் தொடங்கியது. இந்தியாவின் கைக் கூலியாக அடையாளப்படுத்திக் கொண்ட நிகழ்ச்சிகள் நிகழ்ந்தன. அதேநேரம் இலங்கை இந்திய அரசுகளின் கூலி அமைப்புக்களாக, அவர்களின் வளர்ப்பில் வாழ்ந்த மக்கள் விரோத கும்பல்களுடன் தம்மை இணைத்துக் கொண்டு செயல்படுவதை அறிவித்தனர். இருந்த போதும் கூட, அதை விமர்சிப்பதில் தெளிவாகவும், ஆனால் மக்கள் நலனை முன்னிலைப்படுத்தி சரியான வழிக்கு வரும் வகையில், மென்மையான அணுகுமுறையை கையாண்டோம். குறைந்த பட்சம், மக்களின் அடிப்படையான வாழ்வியல் நலனை அவர்கள் முன்னெடுக்க வேண்டும் என்ற எமது ஆவல் காரணமாக, அதற்கு இசைவான வகையில் விமர்சன முறையைக் கையாண்டோம்.


ஆனால் கருணா கும்பல் மற்றொரு புலியாக, பேரினவாதத்தின் கூலிக் கும்பலாகவே, இந்தியாவின் அரசியல் எடுபிடிகளாகவே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது. எந்த விதத்திலும் புலிக்கும், இந்த கிழக்கு புலிக்கும் இடையில் மக்கள் பற்றிய நிலைப்பாட்டில் வேறுபாடில்லை என்பதை மெய்ப்பித்து வந்தது. குறிப்பாக புலியை விட மோசமான அரசியல் நிலையை எடுத்து, எதிரியுடன் கூட்டு சேர்ந்து தனது பாசிசத்தை மக்கள் மேல் கையாண்டது. இந்த பாசிச மாபியா கும்பலை ஆதரிப்பதில் புலியெதிர்ப்பு கும்பல் முற்றுமுழுதாக முழுமூச்சாக செயல்படத் தொடங்கியது. இந்த அரசு சார்பு கும்பலின் பாசிச நடவடிக்கையை முற்று முழுதாக இருட்டடிப்பு செய்தலில், புலியெதிர்ப்பு கும்பலின் பங்கு முதன்மையானது. பல புலியெதிர்ப்பு நபர்கள் கருணா கும்பலின் பேச்சாளராக, பிரச்சாரகராகவும் மாறினர். கருணா அரசுடன் சேர்ந்து ஈடுபட்ட பாசிச நடிவடிக்கைகளை, மூடிமறைத்தபடி அதை முற்போக்காக காட்டத் தொடங்கினர். இந்த நிலையில் அதனை முழுமையாக அம்பலப்படுத்தும் வரலாற்று கால கட்டத்தில், நாம் தொடாச்சியாக அதனை அம்பலப்படுத்துகின்றோம்.


இந்த கருணா என்ற பாசிச மாபியா கும்பல் பேரினவாதத்தின் இராணுவத் தேவையை பூர்த்தி செய்யும் கூலிக்கும்பலின் செயல்களை நாம் புரிந்துகொள்ள, மக்களின் நலன்கள் என்ன என்பதை தெளிவுபடுத்துவதும் அவசியமாகின்றது.


மக்களின் நலன்கள் என்பது, அரசியல் ரீதியாக அதற்காக போராடுவதைக் குறிக்கின்றது. மக்களுக்காக போராடுவதாக கூறிக் கொள்ளும் யாரும், மக்களை நலனை இனம் கண்டு போராட மறுப்பது, உள்ளடகத்தில் மக்களுக்கு விரோதமான செயலை அடிப்படையாக கொண்டது. மக்களின் நலன்களை எப்படி இனம் காண்பது.


1. மக்கள் எப்படியான பொருளாதாரத்தில்,


2. எப்படியான சூழலில்


3. எந்த வகையான உழைப்பில்


4. எந்த வகையான உற்பத்தி உறவில்


5. எந்த வகையான சமூக முரண்பாடுகளில்


6. எந்த வகையான வர்க்க முரண்பாடுகளில்


7. எந்த வகையான அடக்குமுறைகளின் கீழ்


எப்படி வாழ்கின்றனர் என்ற தெளிவும், அதை களையும் போராட்டத்தையும் அடிப்படையாக கொண்டது. மக்களின் வாழ்வுசார் முரண்பாடுகளை தீர்க்கும் உள்ளடகத்தில் நின்று போராடுவது தான் மக்கள் போராட்டம். வர்க்க மற்றும் சமூக முரண்பாட்டின் அனைத்தும் தழுவிய உள்ளடகத்தில் போராட மறுப்பது மக்கள் விரோதத் தன்மை கொண்டது. இதில் ஒன்றை மட்டும் மையப்படுத்தி போராடுவது என்பது, உள்ளடகத்தில் பிற்போக்குக் கூறைக் கொண்ட ஒரு போராட்டமாகவே இருக்கும். இது படிப்படியாகவே சீரழியும்.


இந்த வகையில் கிழக்கு மக்களின் பிரச்சனைகள் இனம் காணப்பட்டு, அந்த மக்களின் வாழ்வுக்காக அவர்களுடன் இணைந்து நின்று யாரும் போராடவில்லை. கிழக்கு வாழும் மக்களின் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் மிகமிக வறிய மக்கள். அன்றாடம் ஒரு நேரக் கஞ்சிக்கே வாழவழியற்ற உழைக்கும் மக்களாவர். அன்றாடம் தனது தேவையை பூர்த்தி செய்யாத, உழைப்பு என்ற சகதிக்குள் உருத்தெரியாது மாண்டு போகின்றவர்கள். ஒரு உயிரின் தேவைகளைக் கூட வெளிப்படுத்த முடியாத வகையில், அவர்களின் அடிமைத்தனம் காணப்படுகின்றது. இந்த விளைவால் குழந்தைகளின் எதிர்காலம் முதல் நவீன அறிவியல் கண்டு பிடிப்புகள் என எதையும் நுகரமுடியாத, உலகமயமாதல் சமூக அமைப்பில் உயிர்வாழ்வதற்கு அவசியமற்ற ஒரு உறுப்பாக வாழ்பவர்கள்.


இந்தளவுக்கும் அந்த மக்கள் வாழும் பூமி அதீதமான இயற்கை வளம்கொண்டது. ஆனால் அந்த மக்கள் வாழ முடியாத அவலம். ஒரு நேர கஞ்சிக்காக அவர்கள் விடும் கண்ணீர், வற்றாத நதிகளாகவிட்டன. ஒருபுறம் சொந்த நிலத்தைக் கொண்டு வாழமுடியாத அவலம், மறுபக்கம் கூலிக்குச் சென்று வாழமுடியாத அவலம். பெரும்பாலான கிழக்கு மக்களின் நிலை இது. மக்களின் வாழ்க்கை அனைத்தும் இந்த சகதிக்குள் தான் உழலுகின்றது.


ஆனால் அரசியல் செய்தவர்கள், செய்பவர்கள் இந்த உண்மையை மறுத்தபடி, தமது வெட்கக் கேடான இழிந்து போன அரசியலை செய்கின்றனர். இந்த மக்கள் மத்தியில் அரசியல் செய்பவர்களின் வாழ்க்கை முறையோ, இதற்கு நேர்மாறானது. பகட்டுத்தனங்கள், ஆடம்பரங்கள் முதல் அனைத்தும் இந்த மக்களின் இரத்தத்தை உறிஞ்சி வாழ்கின்றவர்களின் சொகுசு வாழ்க்கை தான், அவர்களின் அரசியலாகி நிற்கின்றது.


பேரினவாதம் தமிழ் மக்களை ஒடுக்குகின்றது என்பதை மேலெழுந்தவாரியாக இனம் கண்ட ஒரு போராட்டம், அந்த குறித்த சமூக முரண்பாட்டினுள் மக்களின் வாழ்வு சார்ந்த நிலையை மறுதலித்து அதை முன்னெடுக்கவில்லை. மாறாக இதை பயன்படுத்திக் கொண்டு, அந்த மக்களை ஒடுக்குகின்ற ஒன்றாகவே மாறியது. இது உள்ளடகத்தில் யாழ் மேலாதிக்கமாகவும் அடையாளம் காணப்பட்டது. இதை மறுப்பதாக கூறிக் கொண்டு யாழ் மேலாதிக்கத்தை எதிர்ப்பதாக பாசாங்கு செய்தவர்கள், அதை வெறும் பிரதேச ரீதியாக வரையறுத்தனர். யாழ்மேலாதிக்கத்தை எதிர்ப்பதின் பின் உள்ள மக்கள் வாழ்வு சார்ந்த வாழ்வியலை நிராகரித்தது. மக்களின் மற்றொரு எதிரியுடன், மற்றைய சமூக முரண்பாடுகளை களையமறுத்து, அந்த முரண்பாட்டின் ஒடுக்குமுறைக்கு சார்பாக நின்று, மக்களை ஒடுக்குவதில் தான் இவர்களின் அரசியலே அடங்கிக் கிடக்கின்றது. மக்களின் உழைப்பிலான செல்வத்தை உறிஞ்சுவதில் தான், இவர்களின் அரசியல் அடங்கிக்கிடக்கின்றது. அந்த மக்களை அடக்கியொடுக்கி, அவர்களின் உழைப்பைப் புடுங்கி வாழும் வாழ்க்கையைத்தான், அவர்களின் வாழ்க்கையின் பின்னணியில் காண்கின்றோம். தமக்காக, தமது வாழ்வை மேம்படுத்துவதற்காக மக்களின் பெயரில் போராடுகின்றனர்.


மக்களின் வாழ்வு சார்ந்த வறுமையும், அதனுடன் கூடிய இழிநிலைமை என்பது, இலங்கை தழுவிய சமூக பொருளாதார சுரண்டல் ஆட்சி அமைப்பினால் உருவானது. ஏகாதிபத்திய நலனை பூர்த்தி செய்யும் தரகு முதலாளிகளையும், நிலப்பிரபுக்களையும் கொண்ட இலங்கை அரசு, இலங்கை பூராகவும் மக்களின் வாழ்வை அழித்து வாழ்பவர்களின் நலனைத் தான் ஜனநாயகம் என்கின்றது. பொதுவான இந்த நிலைமையால் ஏற்படும் விளைவு, பிரதேசத்துக்கு பிரதேசம் வேறுபடுகின்றது. ஒப்பீட்டளவில் கிழக்கு மக்களின் நிலைமையும், அவர்களின் வாழ்க்கைத் தரமும், மற்றைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது மிகவும் கீழ்நிலைப் பாத்திரத்தை வகிக்கின்றது. கிழக்கு மக்களின் வாழ்வில் ஒரு விடுதலை வேண்டும் என்றால், அது இலங்கை அரசுக்கு எதிரான போராட்டத்தை அடிப்படையாக கொண்டது. இது உள்ளடகத்தில் அனைத்தும் தழுவிய வகையில் நடத்தப்பட வேண்டும். இதை மறுக்க முனைவதே அபத்தம்.


இந்த நிலையில் தமிழ் மக்கள் மேல் இனவொடுக்கு முறையை பேரினவாதம் கையாண்ட போது, அந்த மக்கள் இரண்டு பிரதானமான ஒடுக்குமுறையைச் சந்தித்தனர், சந்திக்கின்றனர்.


1. பொதுவாக இலங்கை முழுவதுமாக காணப்படும் சுரண்டலும், சூறையாடலும்


2 .இனவொடுக்குமுறை ஊடாக காணப்படும் அடக்குமுறையும் சூறையாடலும்


இரண்டாவதை மட்டும் எதிர்த்து போராடி தலைமைகள் இயல்பாகவே சுரண்டும் முதலாவது போக்குடன் இணங்கிச் சென்றன. தமிழ் ஆதிக்க சுரண்டும் பிரிவுகளின் போராட்டமாக மாற்றியதால், கிழக்கு மக்கள் மூன்றாவது மற்றும் நான்காவது ஒடுக்குமுறையைச் சந்தித்தனர்.


3. அது யாழ் மேலாதிக்கமாக, குறுந் தேசியமாக, சொந்த மக்களை அடக்கியொடுக்கி சூறையாடும் ஒரு போராட்டமாக மாறியது.


4. கிழக்கு மக்கள் பிரதேச ரீதியான இழிவாடலையும், சமூக ரீதியான புறக்கணிப்பையும், வெறுமனே பயன்படுத்துப்படுவதையும், பிரதேசரீதியான புறக்கணிப்பையும், மற்றைய இன மக்களுடன் சேர்ந்து வாழ வேண்டிய நிலையில் இணக்கமற்ற தொடர் மோதலையும், இது போன்று பலவற்றை சந்தித்தனர்.


இப்படி தமிழ் மக்கள் மூன்று சிறப்பான ஒடுக்குமுறையையும், கிழக்கு மக்கள் மேலதிகமான நாலாவது சிறப்பு ஒடுக்குமுறைiயும் ஒரே நேரத்தில் அனுபவித்தனர். இந்த மக்களின் மேலான ஒடுக்குமுறைகளை இனம் கண்டு போராடத் தவறுகின்ற எந்த தலைமையும், எந்த அரசியலும் அந்த மக்களுக்கே எதிரானது. இதில் ஒன்றை அல்லது பலவற்றை ஒருங்கே கொண்டு மக்களை அடக்கியொடுக்கும் செயல் தான் கிழக்கில் நடக்கின்றது. உண்மையில் எந்த மக்களுக்காக போராடுவதாக பீற்றிக்கொள்கின்றனரோ, அந்த மக்களின் மேலான ஒடுக்குமுறையை, இவர்கள் மக்களுக்கு அடையாளம் காட்டுவது கிடையாது. ஒன்றை முதன்மைப் படுத்தி, இதன் ஒரு பக்கத்தை மட்டும் முன்னிலைப்படுத்தி, மக்களை ஒடுக்குவது தான் இவர்களின் அரசியலாகும்.


இந்த மக்களின் விடுதலைக்காக குறித்த பிரதேசத்தை உள்ளடக்கிய யாழ் மேலாதிக்கமோ, கிழக்கு மேலாதிக்கமோ போராடவில்லை. தேசியம் என்ற பெயரில் சிங்கள மக்களை எதிரியாக காட்டி வந்த யாழ் மேலாதிக்கம் போல், யாழ் மேலாதிக்கம் என்ற பெயரில் வடக்கு மக்களை கிழக்கு மேலாதிக்கம் எதிரியாக காட்டுகின்றது. உள்ளடகத்தில் மக்களை எதிரியாக காட்டி, மக்களிடையே பிளவை விதைத்து அதில் சிலர் தத்தம் நலனையே அடைகின்றனர்.


ஒரு தேசம், தேசிய மக்கள், பிரதேச மக்கள் என்று எந்தக் கோட்பாடும், மக்களின் இந்த அவல நிலைக்கு காரணமான அரசை எதிர்த்துப் போராடவில்லை. மாறாக அந்த அரசின் பெயரில் மக்களை இழிவாக்கி, சுரண்டுகின்ற அதே கொள்கையை அடிப்படையாக கொண்டு, மக்களுக்காக போராடுவதாக கூறுவது நகைப்புக்குரியது. உண்மையில் இவர்கள் எல்லோரும் மக்களின் அடிமைத்தனத்தில், வாழவிரும்புகின்ற ஒரு வர்க்கத்தின் நலனை மட்டும் தான், இந்த மக்கள் விரோதக் கும்பல் கையிலெடுக்கின்றது.


ஒரு பிரதேச மக்களின் வாழ்க்கை என்பது வர்க்க முரண்பாடுகளால், சமூக முரண்பாடுகளால் சின்னாபின்னப்படுத்தப்படுகின்றது. இப்படித் தான் இலங்கையில் மக்கள் கூட்டம் வாழ்கின்றது. இந்த மக்களை பிரதிநித்துவம் செய்வதாக கூறிக் கொள்வோர் முதல் அரசியல் செய்வோர் ஒவ்வொருவரும், நிச்சயமாக இந்த வர்க்க மற்றும் சமூக முரண்பாட்டின் ஒரு பிரிவை சார்ந்து நிற்கின்றனர். இந்த வகையில் தான் யாழ் மேலாதிக்கம் முதல் கருணாவின் பிரதேசவாதம் வரை, ஒரு வர்க்கத்தின் நலனை பிரதிநிதித்துவம் செய்கின்றது. இந்த இரண்டும் சுரண்டும் வர்க்கத்தின் நலனை அடிப்படையாகக் கொண்டு, பெரும்பான்மை மக்களின் உழைப்பைச் சுரண்டும் ஒரு பிரிவுக்கு தலைமை தாங்குகின்றது. பரந்துபட்ட மக்களின் வர்க்க நலனையும் கணக்கிலெடுத்து, அந்த மக்களை பிளக்கும் சமூக ஒடுக்குமுறைகளை இது களைவதில்லை. இந்த வகையில் தான் இது உண்மையில் காணப்படுகின்றது. இதனிடம் மக்கள் நலன் என எதையும் எதிர்பார்க்க முடியாது. மக்களைச் சுரண்டி வாழ்கின்ற, யுத்தம் மூலம் உருவாகும் அராஜகவாத புதுப் பணக்காரக் கும்பலாகத்தான் இருக்கின்றது. அத்துடன், அந்த யுத்த பொருளாதார மூலம் உருவாகும் புதுப்பணக்கார ரவுடிகளின் பாசிச நலனை அடிப்படையாக கொண்டு இயங்குகின்றது. இந்த புதுப் பணக்கார வர்க்கம் மக்களின் அவலத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, அவர்களை மிகக் கோரமாகவே சுரண்டி உருவான ஒரு இழிந்த அராஜகவாத வர்க்கம். இந்த வகையில் உருவான வர்க்கத்தின் உருவாக்கத்துக்கும் இருப்புக்கும், பாசிசமே அதன் சமூக விதியாக இருந்தது.


இந்த நிலையில் இந்த வர்க்கத்தின் சார்பாக போராடிய இந்தக் கும்பல்கள், சமூகத்தில் இழையோடிப் போயுள்ள வர்க்க முரண்பாட்டை சமூக முரண்பாட்டைக் கண்டு கொள்வதில்லை. அப்படி ஒன்று சமூகத்தில் இருப்பதாக கருதுவதைக் கூட அங்கீகரிப்பதில்லை. மாறாக இவர்கள் எதை ஆயுதமாக எடுக்கின்றனர் என்றால், சமூக முரண்பாட்டின் ஒன்றை ஒற்றைப்பரிணாமத்தில் முன்னெடுக்கின்றனர். அதன் முழுமையையும், மற்றைய முரண்பாடுகளையும் கண்டு கொள்வதில்லை. யாழ் மேலாதிக்கம் தமிழ் தேசியத்தில் பேரினவாதமாகவும், கிழக்கு மேலாதிக்கம் பிரதேசவாதத்தில் யாழ் மேலாதிக்கமாகவும் உள்ளது.


இந்த இரண்டும் அந்த மேலாதிக்க உள்ளடகத்தில் உள்ள, வர்க்க முரண்பாட்டையும், மற்றைய சமூக முரண்பாடுகளையும் கூட நிராகரிக்கின்றது. தன்னளவிலும், அதாவது தனக்குள்ளும் எதரிக்குள்ளும் உள்ள வர்க்க முரண்பாட்டை மறுதலிக்கின்றது. இது தனக்குள் உள்ள வர்க்க முரண்பாட்டை மட்டும் மறுக்கவில்லை, எதிரிக்குள் உள்ள வர்க்க முரண்பாட்டையும் மறுதலிக்கின்றது. போராடுபவன் மட்டுமின்றி, எதிரியும் கூட, இதைத்தான் தனது அரசியலாக கொள்கின்றான். மாறாக ஒரு மக்கள் கூட்டத்தை, இன்னொரு மக்கள் கூட்டத்துக்கு எதிராக நிறுத்தி, வழிநடத்த முனைகின்றனர். இது தான் சிங்கள மேலாதிக்கம், யாழ் மேலாதிக்கம் மற்றும் கிழக்கு மேலாதிக்கத்தின், நடைமுறை சார்ந்த அரசியல் நிலையாகும். சொந்த மக்களை வர்க்க மற்றும் சமூக முரண்பாட்டில் ஒடுக்கியபடி, மற்றைய மக்கள் கூட்டத்தை எதிரியாக காண்பித்து கற்பிக்கின்றது.


இந்த வகையில் தான் குறிப்பாக புலியெதிர்ப்பும் செயல்படுகின்றது. இந்தப் பிரிவு மேற்கூறிய பிரிவுகளினால் கழித்துவிடப்பட்ட அல்லது அந்த போக்கில் அதிகாரத்தை பெறமுடியாது தோற்றவர்கள் முதலாக கொண்ட, சுயமாக மக்கள் நலனை முன்னெடுக்க, ஆதரிக்க முடியாதவர்களின் தங்குமிடமாகும். இது அறவே மக்களின் வர்க்க முரண்பாட்டையும், சமூக முரண்பாட்டையும் நிராகரிக்கின்றது. ஏதாவது ஒரு சமூக முரண்பாட்டில் பகுதியாக தொங்கிக் கொண்டு, அனைத்தையும் புலியாக காண்கின்றது. இலங்கையில் வாழும் அனைத்து மக்களின் எதிரியாக இனம் காணப்பட்ட ஏகாதிபத்தியம், பிராந்திய ஆதிக்க சக்தியான இந்தியா, இலங்கை ஆளும் பேரினவாத அரசு முதல் அரசியல் ரீதியாக இலங்கை இந்திய அரசின் கூலிக் குழுக்களாக உள்ளவர்களை சார்ந்து நிற்கின்றனர் அல்லது அவர்களின் கருத்தை முன்னிலைப்படுத்துகின்றனர். மக்களின் வாழ்வை அழிக்கும் வர்க்க முரண்பாடு, சமூக முரண்பாட்டை நிராகரிக்கின்றனர். இதை அரசியலாக கொண்ட மேற்கொண்ட பிரிவுகளின் அரசியல் தேவையை முன்னெடுப்பவர்களின் அரசியல் தான் புலியெதிர்ப்பாகும். இவர்கள் புலியை நிராகரிக்கும் போது கூட, புலியை வர்க்க ரீதியாகவோ, சமூக ரீதியாகவோ அம்பலப்படுத்துவது கிடையாது.


இந்த வகையில் முரணற்ற வகையில் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களை, ஒடுக்கப்பட்ட சமூக முரண்பாடு பிரிவுகளை இவர்கள் சார்ந்து நிற்பதில்லை. மாறாக ஒடுக்கும் வர்க்கத்தையும், ஒடுக்கும் சமூக பிரிவுகளையும் சார்ந்து நிற்கின்றனர். புலியின் நடத்தைகள் மீதும், ஏகாதிபத்திய வரையறைகளை அடிப்படையாக கொண்டு, தமது அரசியல் தளத்தை தக்கவைக்கின்றனர்.


மறுபக்கத்தில் இவர்கள் சார்ந்து நிற்கின்ற பிரிவுகளின் நடத்தைகளை விமர்சிப்பதில்லை. ஜனநாயக வேஷதாரிகளாக காட்டிக்கொள்ளும் நிர்ப்பந்தம் காரணமாக, புலியல்லாத தரப்புகளின் செயல்பாட்டை மென்மையாக அணுகுகின்றனர். இந்தவகையில் இவர்களின் இணைய இணைப்புகள், கருத்துகளை வெளியிடுவது முதல் ஒன்றாக விவாதிப்பது வரை, ஒன்றை ஒன்று சார்ந்து செயல்படுகின்றது. மக்களின் எதிர்காலம் பற்றி இவர்கள் அனைவரும் ஒன்றாக ஒரே இடத்தில், ஒரு நோக்கத்தில் கூடி மக்களுக்கு எதிராக விவாதிக்க முடிகின்றது. இந்த விவாதங்களில், சமூகத்தின் உள்ளான வர்க்க முரண்பாட்டை பற்றியோ, சமூக முரண்பாடுகளைப் பற்றியோ அதாவது ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக எதுவும் விவாதிப்பதில்லை. புலிகளை வர்க்கத்துக்கு அப்பாலான ஒரு சக்தியாக நிலைநிறுத்துவதும், கூடுவோர் வர்க்கங்கள் மற்றும் சமூக முரண்பாடுகள் கடந்த ஒரு நிலையில் புலி எதிர்ப்பில் மிதப்பதுமாக கும்மாளமிடுகின்றனர்.


மக்களின் பிரச்சனைகள் என்ன என்பதை இனம்காண மறுக்கின்றனர். அதை ஒவ்வொன்றாக இனம் கண்டு, அதை முன்னிலைப்படுத்தி போராட மறுக்கின்றனர். இந்த வகையில் இந்த புலியெதிர்ப்பை தெளிவாக, அரசியல் ரீதியாக அடையாளப்படுத்த முடியும், முடிகின்றது. இந்த வகையில் கிழக்கு மேலாதிக்கத்தையும், புலிகளை எதிர்க்கும் சகல பிற்போக்கு கூறுகளையும் ஆதரித்து நிற்கின்றது. மக்களின் ஐக்கியத்தை முன்னிலைப்படுத்துவதை எதிர்க்கும் இவர்கள், பிளவை அகலமாக்குகின்றனர். இலங்கையில் வாழும் அனைத்து மக்களிடையேயான ஜக்கியம், ஜக்கியத்துக்கு எதிரான அனைத்துக்குமான முன்நிபந்தனையாகும். மக்களிடையே ஐக்கியத்தை உருவாக்குவது, இதனடிப்படையில் சமூகங்கள் இணங்கி வாழும் வழிவகைகளை உருவாக்குவது அவசியமானது. இதை சிங்கள மேலாதிக்கம், யாழ் மேலாதிக்கம், கிழக்கு மேலாதிக்கம் முதல் புலி எதிர்ப்பு வரை மறுதலிக்கின்றது.


உண்மையில் சமூகத்தின் வர்க்க முரண்பாடுகளை, சமூக முரண்பாடுகளை ஒட்டு மொத்தமாக மறுத்தபடி, மக்களின் ஐக்கியத்துக்கான முன்னிபந்தனைகளை மறுத்தபடி தான், இந்தப் பிரிவுகள் செயல்படுகின்றது. இந்த அடிப்படையில் மக்கள் நலன் என்று எதையும், இதனிடம் தோண்டியும் எடுக்கமுடியாது. இந்த கும்பலுக்கு இடையிலான அதிகார மோதல்கள் எதுவும், மக்களுக்கான எந்த நலனையும் பிரதிபலிப்பதில்லை.


மக்கள் இடையேயான வர்க்க முரண்பாடு, உள்ளடகத்தில் சுரண்டலை அடிப்படையாகக் கொண்டது. பெரும்பகுதி மனிதர்களின் உழைப்பை, சிறிய பகுதி திருடி வாழ்வது தான் சுரண்டல். இதன் போதான உற்பத்தி உறவுகள், ஒருவருக்கு எதிராக மற்றவரை நிறுத்துகின்றது. இதன் மூலம் ஒருவனின் உழைப்பை சுரண்டி மற்றொரு பிரிவு வாழ்கின்றது. மனித இனத்தின் அடிமைத்தனம் இதனூடாக கட்டமைக்கப்படுகின்றது. சமூகத்தில் வறுமையும், இல்லாமையும் பெருகுகின்றது. சமூகத்தின் கடைக்கூறில் எஞ்சிக் கிடக்கும் ஜனநாயகத் தன்மை படிப்படியாக சீரழிக்கப்படுகின்றது. உலகம் தழுவிய இந்த நிகழ்வால், சமூக உறுப்புகள் எதையும் சுயமாக நுகர முடியாது. உதாரணமாக சுரண்டப்படும் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தையும், சுரணடும் குடும்பத்தின் குழந்தையும் ஒரேவிதமான ஒரே கல்வியை, ஒரே கல்விச் சூழலில் பெறமுடியாது. ஓரேவிதமான பொழுதுபோக்கை அனுபவிக்கவோ, நுகரவோ முடியாது. பண்பாடு கலாச்சாரம் என அனைத்தும் இரண்டு துருவமாக வேறுபடுகின்றது. எப்படி பிரதேசங்களுக்கு இடையில் பண்பாடுகள், கலாச்சாரங்கள் வேறுபடுகின்றதோ, அப்படித்தான் ஒரு சமூகத்தினுள்ளும் உள்ளார்ந்த வர்க்க வேறுபாடுகள் காணப்படுகின்றது. இது ஒருபுறம்.


மறுபுறம் இதன் காரணமாக சமூக முரண்பாடுகள் காணப்படுகின்றது. மனிதர்களை பிளந்து புதிது புதிதாக கற்பிக்கப்படுகின்றது. அது இனவாதமாக, நிறவாதமாக, பிரதேசவாதமாக, ஆணாதிக்கமாக, சாதியமாக, மதவாதமாக, பற்பல வகையில் காணப்படுகின்றது. இவற்றுக்கான உள்ளார்ந்த தோற்றுவாய்க்கான மூலங்களுக்கு அப்பால், சக மனிதனை ஒடுக்கி, அடக்கி வாழ்கின்ற உள்ளடகத்தில், அவர்களின் உழைப்பு சுரண்டப்படுகின்றது என்பதே உண்மை. இந்த ஒடுக்குமுறைகள் மீதான சமூக இழிவுகள் மீதான போராட்டத்தை முன்னெடுக்க தவறுகின்ற, இதற்குள்ளான முரண்பாட்டை முன்னெடுக்க தவறுகின்ற அனைத்தும் மக்கள் விரோதமானவை. அதாவது இன்று இவைகள் எதையும் முன்னெடுக்க தவறுகின்ற யாழ் மேலாதிக்கம் முதல் கிழக்கு மேலாதிக்கம் வரை, உள்ளடகத்தில் படு பிற்போக்கானவை. இந்த எல்லைக்குள் தான் புலியெதிர்ப்பும் அரங்கேறுகின்றது.


மக்கள் பிரச்சனைகள் இதற்குள் தான், முழுமையாக காணப்படுகின்றது. இந்த மக்களின் பிரச்சனைகளை நிராகரித்துவிட்டு வௌவெறு அதிகாரப் பிரிவுகள், தத்தம் பாசிச முகத்துடன் ஒன்றையொன்று எதிராக காட்டி முட்டி மோதிக் கொள்வதன் மூலம், தத்தம் குறுகிய நலனை மட்டும் அடைவதை நோக்கமாக கொணடது. இதன் பின்னால் எந்த மக்கள் நலனும் இருப்பதில்லை. இந்த வகையில் சிங்கள மேலாதிக்க தேசியமோ, யாழ் மேலாதிக்க தேசியமோ, கிழக்கு மேலாதிக்க பிரதேசவாதமோ, உள்ளடகத்தில் மக்கள் நலனை அடிப்படையாக கொண்டதல்ல. அனைத்தும் ஒரே அரசியலைக் கொண்டதும், ஒன்றுபடவே மக்கள் விரோதத்தையே அடிப்படையாக கொண்டது. இந்த வகையில் இவை அனைத்தும் புழுத்துக் கிடக்கின்றது.


சின்னசின்ன மக்களின் அன்றாட துயரங்கள் மீதும் கூட அக்கறை காட்டுவதில்லை. இந்த நிலையில் இலங்கை பேரினவாதத்துக்கு எதிரான யாழ் மேலாதிக்கம், யாழ் மேலாதிக்கத்துக்கு எதிரான கிழக்கு மேலாதிக்க போக்குகள் முதன்மை பெற்ற ஒரு முரண்பாடாக முன்னிலைப்படுத்தப்பட்டு, ஒடுக்குமுறைகள் உச்சத்தில் காணப்படுகின்றது. இதிலிருந்து மக்களை மீட்பதாக கூறிக் கொள்வது என்பதுவும், அனைத்தையும் பூசி மெழுகி நடத்திய மோசடிகளும் அம்பலமாகி சிதைந்து சின்னாபின்னமாகி வருகின்றது. உண்மையில் தாம் போராடுவதாக கூறிக் கொள்ளும் சிங்களப் பேரினவாதமாகட்டும், யாழ் மேலாதிக்கமாகட்டும், அதை ஒழித்துக் கட்டும் எந்த போராட்டத்தையும், இவர்கள் கோட்பாட்டு ரீதியாகவோ, நடைமுறை ரீதியாகவோ கொண்டிருக்கில்லை. சிங்கள பேரினவாதம் என்பதை சிங்களவனின் ஆதிக்கமாக விளக்குவதும், யாழ் மேலாதிக்கம் என்பதை யாழ்ப்பாணத்தானின் ஆதிக்கமாக விளக்குவதும், கிழக்கு மேலாதிக்கத்தை கிழக்கு மக்களின் ஆதிக்கமாக காட்டுவதும் நிகழ்கின்றது. உண்மையில் இதன் மூலம், இதை ஒழித்துக்கட்ட முடியாது. எந்த சமூக சார் மேலாதிக்கத்தையும், முழுமையாக சமூக பொருளாதார அரசியல் ரீதியாக மக்களை அணிதிரட்டி, அந்த மக்களின் தலைமையில் போராடாத வரை இதை ஒழிக்கமுடியாது. மாறாக சில சமூகம் சார்ந்த பொறுக்கிகளின் சுயநலனுக்கான போராட்டமாக எஞ்சுகின்றது.


இது ஆயுதம் ஏந்தும் போது இயல்பாகவே, பாசிச மாபியா குழுக்களின் நலனுக்கானதாக மாற்றம் காண்கின்றது. தத்தம் சொந்த தனிமனித அதிகாரத்துக்கான, தமது பொருளாதார நலனுக்காக, மக்கள் கூட்டங்களை எதிராக காட்டியபடி மனித உறவுகளை சிதைக்கின்றனர். இதுதான் இலங்கையில் ஆதிக்கம் பெற்ற அரசியலாக உள்ளது. இதற்குள் மக்கள் நலன், மனித நேயம் என எதையும் பூதக்கண்ணாடி வைத்துக் கூட, நாம் தேடமுடியாது.


ஒரு மக்கள் கூட்டத்தில் இருக்கின்ற படுபிற்போக்கான பாசிச ஆதிக்கப் பிரிவுகளை, மற்றைய ஆதிக்க பிரிவு அகற்றுவது, அந்த மக்களின் விடுதலையை குறிப்பதாக கூறுவதே, அனைத்து மேலாதிக்க சக்திகளின் அரசியலாக உள்ளது. இந்த கோட்பாட்டாளர்கள் அரசியல் ரீதியாக செய்வது, உண்மையில் அந்த மக்களின் அடிமைத்தனத்தை மற்றைய ஆதிக்க குழுவின் கையில் தாரைவார்ப்பதைத்தான். இதன் மூலம் சில எலும்புகள் கிடைக்கும் என்ற ஒரே காரணத்தினால், மக்களுக்கு எதிராக குலைக்கின்றனர்.


கிழக்கு மக்களின் விடுதலையை மறுக்கும் உள்ளார்ந்த முதன்மை எதிரி, கருணா என்ற பாசிட்டே


கருணா புலியில் இருந்த போதும் சரி, இன்று இலங்கை அரசின் கைக் கூலியாக புது அவதாரம் எடுத்து தனித்துவம் பெற்ற போதும் சரி, கிழக்கு மக்களின் உள்ளார்ந்த பிரதான எதிரி கருணாவாக இருந்தது, இருப்பது வெளிப்படையானது. கிழக்கு மக்களுக்கு எதிராக அன்று யாழ் மேலாதிக்கத்தின் கோவணமாக இருந்தவர், இன்று சிங்கள மேலாதிக்கத்துக்கு கோவணமாக இருக்கின்றார். இப்படித்தான் கிழக்கு மக்கள் அங்குமிங்குமாக, கருணா என்ற பொறுக்கியின் தலைமையில் மிகக் கேவலமாக இழிவாடப்பட்டனர், இழிவாடப்படுகின்றனர்.


கிழக்கை எடுத்தால் தேசியத்தின் பெயரில் இயங்கிய யாழ் மேலாதிக்க பாசிச மாபியா கும்பலிடமிருந்து, கிழக்கு மேலாதிக்க கருணா என்ற மாபியாக் கும்பலிடம் அதிகாரத்தை இடம்மாற்றுவதன் மூலம், அந்த மக்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை. சொந்த உள்ளுர்வாசி என்ற அடையாளத்தைத் தவிர, வேறு எதையும் புதிதாக மக்கள் அனுபவிப்பதில்லை. கிழக்கு மக்களுக்கு மாற்றம் வரும் என்று நம்ப வைப்பவர்கள், அவரின் பிறப்பை வைத்து (கிழக்கைச் சேர்ந்தவர் என்பதால்) அரசியல் மாற்றத்தை எதிர்வு கூறுகின்றனர். என்ன அரசியல் மக்களுக்கு சேவை செய்யும் என்பது பற்றி, எந்த சமூக அக்கறையும் இவர்களிடம் கிடையாது.


கிழக்கு மக்கள் என்று நாம் கதைத்தால், அன்றாடம் உழைத்து வாழும் கிழக்கு மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சனைக்கு தீர்வுகளை முன்வைக்க வேண்டும். அந்த மக்களின் சொந்த அதிகாரத்தை ஏற்படுத்துகின்ற எந்த அரசியல் வேலைத்திட்டத்தையும் முன்வைக்காத யாரும், மக்களின் எதிரிகள் தான். கடந்த எமது 30 வருட போராட்ட காலத்தில், உள்ளியக்க முரண்பாடுகளிலும், இயங்கங்கள் முன்வைத்த அரசியல் கருத்துக்களில் திட்டங்களில் மக்கள் நலன் சார்ந்த சிறிய முளைகள் இணங்காணக் கூடியவை. குறைந்தபட்சம் அதைக் கூட முன்னிறுத்த முடியாத, புதிய செயல்பாடுகள் பழையபடி பாசிசத்தின் வழியில் தொடர்வதை அங்கீகரிக்க முடியாது. கடந்தகாலத்திய மக்கள் நலன் சார்ந்த கூறுகளை இனம் காண்பதே, முதல்படியாக இருக்க வேண்டும்.


கருணா புலிகளில் இருந்து பிரிந்த பின்னால், தான் இருந்த இயக்கமே பாசிச மாபியா இயக்கம் என்பதையோ, அது ஒரு மக்கள் விரோத இயக்கம் என்பதையோ, இன்று வரை ஏற்றது கிடையாது. மாறாக அதில் சில தனிநபர்கள் தான், பிரச்சனைக்குரியவராக காட்டப்பட்டனரே ஒழிய அதன் அரசியல் அல்ல. இன்று வரை அது தான் கருணா குழுவின் நிலையாகும். எந்த அரசியல் மாற்றமும் கிடையாது.


தமக்கு இடையிலான அதிகார மோதலில் சம்பந்தப்பட்டவர்களை எதிரியாக காண்பதும், அவர்களை மக்களின் எதிரியாக காட்டுவதே அரசியலாக உள்ளது. புலிகளை அரசியல் ரீதியாக காணமறுப்பதும், அந்த அரசியலை மறுபடியும் முன்னெடுப்பதும் வெளிப்படையானது. கூறப் போனால் புலிகளில் இருந்து பிரிந்த போது காணப்பட்ட ஜனநாயக உரிமை சார்ந்த ஜனநாயகக் கூறு கூட, அர்த்தமிழந்து சிதைந்து விடுகின்றது.


முதலில் பிரிந்து வந்த இயக்கத்தை அரசியல் ரீதியாக விமர்சிக்க தவறுகின்ற யாராலும், புதிதாக ஒன்றை உருவாக்க முடியாது. புலிகள் பாசிச மாபியா இயக்கமாக இருந்ததை அரசியல் ரீதியாக விமர்சிப்பது தான், சுயவிமர்சனமாக இருந்திருக்கும். இதற்கு வெளியில் சுயவிமர்சனம் என்று எதுவும் கிடையாது. இதைச் செய்ய மறுத்தவர்கள், சுயவிமர்சனத்தை எப்படி செய்ய முன்வரவில்லையோ, அப்படி கடந்தகால மக்கள் விரோத அரசியலையே இன்றும் கொண்டிருப்பது தெளிவானது.


மாறாக தான் இருந்த காலத்தை மக்கள் இயக்கமாக பீற்றிக் கொள்கின்றனர். அண்மையில் வெளியாகிய அவரின் தொலைக்காட்சி பேட்டியில், தான் பிரிந்த பின்பாகத்தான் அது மக்கள் இயக்கமாக இல்லாமல் போனது என்கின்றார். தாங்கள் இப்போது ஒரு மக்கள் இயக்கம் என்கின்றார். கடைந்தெடுத்த பாசிட்டுகளுக்கே உரிய அரசியல் வக்கிரம்.


கடந்தகாலம் முழுக்க அதாவது தொடக்கம் முதலே மக்களுக்கு எதிராகவே செயல்பட்ட ஒரு இயக்கம், எப்படி மக்கள் இயக்கமாகும். இவை மக்கள் இயக்கமல்ல என்பது 1970 அடிப்படையாக கொண்ட பத்தாண்டுகளின் இறுதியிலேயே கடுமையான விமர்சனம் இருந்து வந்தது. இதனடிப்படையில் நடந்த முதலாவது புலிக்குள்ளான பிளவு, மக்கள் இயக்கம் தொடர்பான விவாதத்தில் நிகழ்ந்தது. தனிமனித சர்வாதிகாரம் ஆரம்பம் முதலாகவே அதன் பின்னால் கட்டமைக்கப்பட்டது. கருணா இதற்கெல்லாம் ஒத்தேதான் அந்த இயக்கத்தில் ஒட்டிக் கொண்டு, இதைத் தீவிரமாக கடைப்பிடித்ததன் மூலம் தளபதியானவர். முதன்மையான மக்கள் விரோதிகள் தான், தலைமைக்கு வரமுடியும். இது புலி இயக்கத்தின் பாசிச விதி. இப்படித்தான் கருணா என்ற பாசிட் புலிகளின் அம்மானாகி தளபதியானவர்.


புலிகள் இயக்கம் தொடக்கம் முதலாகவே அதன் அரசியல் பொருளாதார கூறுகள் அனைத்தும், மக்கள் விரோதமாகவே இருந்து வந்துள்ளது. அதை அரசியல் ரீதியாக விமர்சிக்க முடியாதவர்கள், கட்டுகின்ற இயக்கமும் அதே வழிப்பட்டதே. புலிகளின் மக்கள் விரோத தலைவர்களின் இழிசெயல்களை கவுரவப்படுத்த வழங்கப்படும் 'அம்மான்" என்ற அடையாளத்தை தக்கவைத்தபடி, அண்மையில் சிங்கள தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியின் பின்னணியில் உள்ள கார்த்திகைப் பூ செடியும் எதைக்காட்டுகின்றது. கடந்தகால மக்கள் விரோத இயக்கத்தின் அடையாளங்களைக் கூட துறக்க மறுக்கின்ற, சுய தற்பெருமை பேர்வழிகளின் வக்கிரம் தான் பிரதிபலிக்கின்றது.


மக்கள் இயக்கம் வேறு, பாசிச இயக்கம் வேறு என்பதை பிரித்தறிய முடியாதவர்கள், ஒருபுறம் மக்கள் மேல் கும்மாளம் அடிக்கலாம். கருணா குறித்த பேட்டியில் குறிப்பிடும் போது, பாசிசத்துக்கு ஒரு ஒப்பீட்டைச் செய்தார். கம்பூச்சியாவின் பொல்பொட்டை பிரபாகரனுக்கு ஒப்பிட்டார். கடைந்தெடுத்த வலதுசாரிய பொறுக்கிகளின், பாசிச நாற்றங்கள் தான் இவை.


பாசிச படுகொலையையே ஜனநாயமாக கொண்ட வலதுசாரிகள், வரலாற்றில் இடதுசாரிகள் மீது சேறு அடிப்பதே அதன் அரசியலாகும். இன்றைய ஜனநாயக உலகில் வருடம் 10 கோடி பேர் மருந்தும், நீரும், உணவுமின்றி இது போன்ற காரணங்களால் கொல்லப்படுகின்றனர். எந்த பாசிட்டுகளால் இவை நடக்கின்றது. இப்படி வரலாறு இருக்க, இந்த அரசியல் பொறுக்கிகளுக்கு பொல்பொட் தேவைப்படுகின்றது.


கண்ணுக்கு முன்னால் நன்கு தெரிந்த சம்பவங்கள் உண்டு. சொந்த நாட்டில் அதாவது இலங்கையில் 1970க்கு பின் குறைந்தது 2 லட்சம் மக்களை இந்த சிங்கள அரசு இலங்கையிலேயே கொன்றுள்ளது. 1990க்கு பிந்தைய ஈராக்கில் அமெரிக்க தலைமையிலான நாடுகள் விதித்த பொருளாதாரத் தடையின் மூலம் 20 லட்சம் ஈராக்கிய குழந்தைகளை கொன்றுள்ளது. ஈராக்கில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட பின் குறைந்தபட்சம் 5 லட்சம் ஈராக்கியரின் மரணத்துக்கு காரணமாக இருந்துள்ளது. சமகாலத்தில் உங்கள் எஜமானர்களின் சொந்த இரத்தக் கறை படிந்த உதாரணங்கள் நிறைய இருக்க, அதை மூடிமறைத்த அவர்களின் வாரிசுகள் பொல்பொட்டை வாந்தி எடுக்கின்றனர்.


கடைந்தெடுத்த பொறுக்கிகள். மக்களுக்காக உண்மையில் போராடியவர்கள் மீது சேறு அடிப்பதே, இந்த கயவாளிப் பயல்களின் அரசியல் நடத்தையாகும். நீ கொன்று குவித்த கிழக்கு மக்கள், முஸ்லீம் மக்களின் எண்ணிக்கை எத்தனை? யாருக்கு கதை சொல்லுகின்றீர்கள். கம்பூச்சியாவில் பொல் பொட் தலைமையிலான ஆட்சியில் மனிதப்படுகொலைகள் நடந்தாக கூறுவது, அடிப்படையற்ற ஆதாரமற்ற ஒன்று. அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராக நடந்த போரில் கொல்லப்பட்டவர்கள், அதன் பின்னர் அமெரிக்கா உள்ளிட்ட சோவியத் ஏகாதிபத்திய பொருளாதார தடையால் கொல்லப்பட்டவர்கள் (பார்க்க ஈராக்கை), பட்டியலை கூட்டியள்ளி பொல் பொட்டின் தலையில் அரைக்கின்றனர்.


உண்மையில் அந்த மக்களின் நலனுக்காக போராடியவர் பொல் பொட். தவறு இழைத்தாரா எனின், ஆம் பல தவறுகள் இழைத்தார். குறிப்பாகவும் முக்கியமாகவும் அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பு நடந்த காலத்தில், கிராமங்கள் மீதான அமெரிக்காவின் கொடூரமான தாக்குதலுக்கு பயந்து, நகரங்களை நோக்கி குவிந்த இளைஞர்கள் விடையத்தில் தவறு இழைத்தார். கடுமையான பொருளாதாரத் தடை, யுத்தத்தில் இருந்து நாட்டை மீட்டு கட்டியெழுப்ப வேண்டிய நிலையில் பொல் பொட் பதவி ஏற்றார். இந்த நிலையில் உழைப்பே அறியாது அமெரிக்க இராணுவ பொருளாதாரத்தில் பொறுக்கி வாழ்ந்தபடி உதிரியாக சிதறிக் கிடந்த இளைஞர்களை, மறுஉழைப்புக்கு கொண்டு செல்வதில் கடுமையான தவறு நிகழ்ந்தது. உழைப்பவனுக்குத் தான் உணவு. அந்த வகையில் பொல்பொட் தலைமையிலான அரசு இந்த இளைஞர்களை கிராமங்களுக்கு திரும்பிச் செல்லவும், உழைப்பில் ஈடுபடவும் கோரியது. நகர்ப்புற உதிரிகள் தமது அராஜகத்தை அடிப்படையாக கொண்டு மறுத்தலித்து. உடல் உழைப்பையே அறியாது பொறுக்கி வாழ்வதையே வாழ்க்கையாக கொண்ட இந்த இளைஞர்களை, மீண்டும் உழைப்பில் ஈடுபடுத்த முனைந்த போது, அதை எதிர்த்து அவர்கள் கிராமங்களுக்குச் திரும்பிச் செல்ல மறுத்த போது, ஒடுக்குமுறை ஊடாக உழைப்பை பெற முனைந்தனர். இதன் போது பலர் கொல்லப்பட்டனர். இதை வைத்துத் தான், அமெரிக்க ஆக்கிரமிப்பாளன் நடத்திய கொலை எல்லாம் மூட்டை கட்டி, அதை பொல்பொட் தலையில் காறி துப்புவது கடைந்தெடுத்த வலதுசாரிய நாற்றமாகும். அக்காலத்தைய கம்பூச்சிய மக்கள் தொகைக் கணக்கெடுப்புகள் கூட, இந்தப் பொய் புனைவை மறுதலிக்கின்றது.


கருணா அனைத்து குற்றத்தையும் பிரபாகரனின் தலைமையில் சுமத்தி தான் நடத்திய கொலையை மறுப்பது போல், ஏகாதிபத்திய சதிக் கதைகள் தான் இவை. இந்த நிலையில் அதை கருணா என்ற பாசிட், பொல்பொட்டை பிரபாகரனுக்கு ஒப்பிட்டு வக்கரிக்கின்றான். கிழக்கு தமிழ் மக்களையும், முஸ்லீம் மக்களையும் கொன்று அம்மான் என்ற கவுரவ அந்தஸ்துடன் பிரதேச தளபதியாகியவர், தன்னையும் தனது கடந்தகால கொலைகார வரலாற்றையும் சுயவிமர்சனம் செய்யவில்லை. மாறாக ஏகாதிபத்தியம் அரைத்து வைத்த பொல்பொட் கதையை, பிரபாகரனுக்கு ஒப்பிட்டு, தனது கொலைகார முகத்தை மினுக்க முனைகின்றார். அன்று நீங்கள் செய்த கொலைகள், இன்றும் நாள் தோறும் தொடருகின்றது.


அண்மையில் அம்பாறையில் புலிகளின் முகாமில் இருந்து இராணுவம் கைப்பற்றிய கம்பியிலான சிறைகள் அனைத்தும் கருணா காலத்தவை கூட. இன்றும் சித்திரவதையையும், சிறைக் கூடத்தையும் கொண்டு வாழ்கின்றவர்களே நீங்கள், உங்களுக்கு எதிரான மக்களின் கண்ணீரையும் அவர்களின் அவலங்களையும் சதா கேட்கின்றோம்.


நீங்கள் எல்லாம் கிழக்கு மக்களின் வாழ்வுக்காக போராடுவதாக நடிப்பது, கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். இந்த வகையில் கிழக்கு மக்களின் பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாக கொண்ட கல்வி மற்றும் அவர்களின் அபிவிருத்திக்காக செயல்படப் போவதாக அதே பேட்டியில் கூறுகின்றார். எப்படி என்கின்றீர்களா? அவரே கூறுகின்றார், பேரினவாத சிங்கள அரசு இதற்காக நிதி ஒதுக்க வேண்டும் என்கின்றார். ஒரு கேள்வி. இடையில், நீ ஏன் இருக்கவேண்டும். அதில் ஒரு பகுதியை விழுங்கவா! சிங்கள அரசிடம் இவற்றைக் கோருவதே நகைப்புக்குரிய ஒரு வாதம். இங்கு இதுதான் கிழக்கு மக்களின் பிரச்சனையாக காட்ட முனைகின்றார். அவர் இதன் மூலம் கிழக்கு மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க முடியும் என்கின்றார்.


இலங்கையில் கிழக்கின் நிலையில் தான் பெரும்பாலான மாவட்டங்கள் உள்ளன. இதில் வடக்கின் சிலபகுதிகள் முதல் தென்னிலங்கையின் பல பகுதிகள் இப்படித்தான் உள்ளது. இலங்கையின் மக்கள் விரோத அரசாங்கம் இரங்கி ஒதுக்கும் பணத்தில், கிழக்கை முன்னேற்ற முடியும் என்ற கருணாவின் அலட்டல், நகைப்புக்குரிய ஒன்று. சிங்கள பேரினவாத அரசு இனவாதத்துடன் சிங்களவனுக்கு அதிக சலுகையுடன் ஒதுக்கிய பணத்தில் கூட, சிங்கள மக்களின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சி என்பதே, ஒப்பீட்டளவில் கிழக்கின் நிலையில் தான் காணப்படுகின்றது. அந்த மக்களின் பிரச்சனையை தீர்க்க முடியாது இருக்க, கிழக்குக்கு பணத்தை ஒதுக்கி இந்த பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்று கூறுவது, கேடுகெட்ட அரசியல் பிழைப்பாகும்.


பிரச்சனைக்கான தீர்வும் வழியும் வேறு எங்கோ இருக்க, அரசு ஒதுக்கும் நிதி உதவி தான் தீர்வு என்று கூறுவது மக்களின் அடிமைத்தனத்தில் சவாரி விடுவதாகும். ஏன் சிங்கள மாணவர்களின் கல்வியை, இந்த அரசு எந்தவிதத்தில் கிழக்குக்கு மாறாக பூர்த்தி செய்துள்ளது. நீங்கள் எப்படி மாற்றாக பூர்த்தி செய்வீர்கள். சிங்கள மண்ணில் பொருளாதாரம் அந்த மக்களை வளப்படுத்தி உள்ளதா? இனங்களையும், பிரதேசங்களையும் பிளந்து அரசியல் செய்யும் வக்கிரம் பிடித்த கூட்டத்துக்கு, இவையெல்லாம் தமது பணப் பையை நிரப்பும் பொற்காசுகள் தான். மக்களுக்கு இவர்கள் கொடுப்பதோ அடக்குமுறையுடன் கூடிய மனித அவலத்தைத் தான்.


கிழக்கு மக்களின் கல்வி வளர்ச்சிக்காக உழைக்கப் போவதாக பீற்றி அலம்பும் கருணா, முழு இலங்கையிலும் அது முரணற்ற வகையில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்ற அடிப்படைக் கேள்விக்கு பதிலளிக்க வேண்டும். அதை விடுத்து சினிமா பாணியில் கதாநாயகர் வேசம் போட்டு ஆடுவது அபத்தமாகும்.


இலங்கை வாழ் மாணவர்கள் அனைவருக்கும் அடிப்படைக் கல்வியையும், கல்விக்கான பொது சூழலையும் பூர்த்தி செய்கின்ற வகையிலான சமூக பொருளாதார அமைப்பை கோருவதன் மூலம் தான், குறைந்தபட்சம் கிழக்கு மக்களின் கல்வியை பூர்த்தி செய்யமுடியும். பல்கலைக்கழக அனுமதி பெற தகுதியான அனைத்து மாணவர்களுக்கும் கல்வியை வழங்கும் உரிமையை மறுக்கும் இந்த அரசு, அதை நியாயப்படுத்தும் தமிழ் குறுந்தேசிய மற்றும் பிரதேசவாத வக்கிரங்களே மாணவர்களுக்கு எதிராக அரங்கேறுகின்றது. இலங்கையில் அனைத்து பல்கலைக்கழக தகுதியுடைய மாணவர்களுக்கும் கல்வியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏன் இவர்கள் உயர்த்த முடிவதில்லை. இதற்கு மாறாக தரப்படுத்தல், அதி திறமைக்கு மட்டும் கல்வி என்ற நிலைப்பாடும், அதை நியாயப்படுத்துதலும் உண்மையில் மக்கள் சார்ந்தவையா? எந்த வகையில்!


கிழக்கில் இது எப்படி கல்வியை, வேலை வாய்ப்பை மேம்படுத்தும். கிழக்கில் கல்வி வாய்ப்பை மேம்படுத்த வேண்டும் என்றால், அந்த மக்களின் பொருளாதார வாழ்வு மேம்பட வேண்டும். இதற்கான அவரின் வேலைத்திட்டம் என்ன? குறைந்தபட்சம் இந்த பிற்போக்கான மக்கள் விரோத உள்ளடகத்தில் கூட, எந்த வேலைத் திட்டமும் இந்த பாசிச கும்பலிடம் கிடையாது. இவர்கள் மக்கள் நலன் பற்றி நகைப்புக்குரிய வகையில் புலுடா விடுகின்றனர். கிழக்கு மக்களின் கல்வி பொருளாதார முன்னேற்றத்துக்கு உழைக்க அரசை நம்பி இருப்பதாக கூறுவதன் மூலம், இவர்களின் அரசியல் வேலைத் திட்டமும் இது தான்.


தாங்கள் ஜனநாயகத்துக்கு வந்துள்ள சட்டப்படியான கட்சி என்கின்றனர். சரி அந்த கட்சியின் அரசியல் வேலைத்திட்டம் என்ன? எங்கே இவர்களால் வைக்க முடியுமா? வைக்க முடியாது. மக்கள் நலன் எதுவுமற்ற எந்த பாசிச கும்பலிடமும் எதுவும் இருப்பதில்லை. மாறாக இருப்பது பாசிசமும் மாபியாத்தனமும் தான். நெருக்கடிகளில் இருந்து தப்ப, வார்த்தை ஜாலங்களை அள்ளி எறிகின்றனர். புலிகளின் அதே பாசிசம் அதே உத்தி.


கருணா என்ற குழுவின் அரசியல் பேச்சாளர், தம் மீதான குற்றச்சாட்டுக்கு அடிக்கடி மறுப்பு விடுகின்றார். இதையே தான் தமிழ்ச்செல்வனும் செய்கின்றார். இருவருக்கும் இடையில் என்ன வேறுபாடு?


ஒரு மக்கள் இயக்கம் தனது அரசியல் வேலைத்திட்டத்தில் புலிகளை அரசியல் ரீதியாக விமர்சிக்க வேண்டும். அதை விடுத்து மேலெழுந்தவாரியாக பூசிமெழுகித் திரிவது, தமது பாசிச வழியை முன்வைப்பதாகும். கிழக்கு பிரிவினை பற்றி அப்பேட்டியில் கேட்டபோது, மகிந்த சொன்ன அதே வழிதான் தமது என்கின்றார்.


மகிந்த கிழக்கு மக்களின் விரும்பம் தான், தனது விரும்பம் என்கின்றார். இதுவே தனதுமென்கின்றார் கருணா. நீங்கள் ஒன்றாகி ஒரு கூலிக்குழுவாகிய பின் இப்படிச் சொல்வது ஆச்சரியமல்ல. கிழக்கு மக்களை பிரிப்பதில் யாழ் மேலாதிக்கத்துக்கு எந்தளவு முக்கிய பங்கு இருந்ததோ, அந்தளவுக்கு சிங்கள மேலாதிக்கத்துக்கும் முக்கிய பங்கு இருந்தது.


இந்த வகையில் இதை பிரதேச பிளவாக்கியதில் கருணாவின் பங்கு மிக முக்கியமானது. புலியில் இருந்தது முதல், அரசின் ஒரு கூலிக் குழுவாக வெளிவந்தது வரையிலான அவரின் பங்கு தனித்துவமானது. கிழக்கு மக்களுக்கு எதிராக கடந்த 15 வருட காலத்திய அனைத்து செயல்பாட்டிலும், கருணாவின் பங்கு தனித்துவமானது. இவை தான் இன்றைய பிளவுக்கு வழிகாட்டியது.


அதை அறுவடை செய்பவனும் அதே கயவாளிப்பயல்தான். இன்று அதை கிழக்கு மேலாதிக்கமாக்கி, பிளவை விதைப்பதில் கருணா கும்பலின் பங்கும் பணியும் முக்கியமானது. இவை அனைத்துக்கும் பின்னாலும், கிழக்கு மக்களின் நலனின் அடிப்படையில், இந்த கிழக்கு மக்களின் விருப்பம் எதையும் இந்த அரசியல் சூழ்ச்சிகள் கொண்டிருப்பதில்லை. மாறாக குறுகிய நலன்கள் முதன்மை பெற்று, தமிழ் இனத்தில் அழிப்பு என்ற பேரினவாத சதி இங்கு யாழ் மேலாதிக்கம் ஊடாக அரங்கேறுகின்றது. அதை கருணா சொன்னாலும் ஒன்று தான், மகிந்த சொன்னாலும் ஒன்றுதான்.


இலங்கையில் இனப்பிரச்சனை முதன்மையான முரண்பாடு என்ற அடிப்படையில், இனங்களின் பிரச்சனையை தீர்ப்பதற்கு பதில், புதிய முரண்பாடுகளால் மக்கள் கூட்டத்தை பிளந்து வாழ நினைக்கும் கும்பல்களின் சதிகளே அரங்கேறுகின்றது. அவை தான் இன்றைய மொழியாக, கூக்குரலாக ஆதிக்கம் பெற்று நிற்கின்றது. எல்லா மக்கள் விரோத பிற்போக்கு வாதிகளும் இதைத் தான் செய்கின்றனர். கருணா குறித்த பேட்டியில் தாம் பேரினவாதத்தின் கூலிக் குழுவாக சேர்ந்து இயங்கவில்லை என்கின்றார். இந்தக் கூற்றே எவ்வளவு பெரிய பொய் என்பதை அனைவரும் அறிவர். இவர்களின் நேர்மையை இவைகள் மூலம் சாதாரணமாக உரசிப்பார்க்க முடியும்..


இதில் உள்ள முரண்பாடே, இந்த போலிகளின் கபட வேடத்தை தெளிவாக்குகின்றது. ஆயுதங்களுடன், பெரும் குண்டர் படையாக உள்ள இவர்களின் இருப்பை எப்படி இராணுவம் அனுமதிக்கின்றது. பேரினவாதத்துடன் கூட்டு, கூலித்தனமும் தெளிவானது. மக்களுக்காக போராடும் ஓரு இயக்கம், மக்களுக்கு எதிரான இராணுவத்துடன் இணங்கி செயல்படுவது என்பதும், பரஸ்பர இருப்பை அங்கீகரிப்பது என்பதுவும் எந்தவகையில் சாத்தியமானது!


எதிர்காலத்தில் இராணுவத்துடன் எலும்புக்கான சண்டையை கருணாதரப்பு நடத்தினால் கூட, அங்கு மோசடியும் சுயநலமும் தான் அடிப்படையாக இருக்கும். புலிகளின் அதே உத்தி தான். அமைதி சமாதானம் என்று பெயரில் நடத்துகின்ற நரித்தனங்கள், சூழ்ச்சிகள் பரஸ்பரம் இணையானவை. மக்களை நேசிப்பதில் நேர்மையற்ற பொறுக்கித்தனம், மக்கள் அரசியலாகிவிடாது. மக்கள் எப்படி புலிகளை இன்று கிழக்கில் தோற்கடிக்கின்றனரோ, அப்படி கருணா கும்பலை தோற்கடிப்பர்.


மாற்று சினிமாவிற்கான தேடல்...ஈரானியத்திரைப்படம்



மாற்று

சினிமாவிற்கான

தேடல்...

ஈரானியத்திரைப்படம்

அனைவரையும் தேடலிற்கு அழைக்கிறேம் இடம்: ஸ்காபரோ சிவிக் சென்ரர்


தமிழர் வகைதுறை வள நிலையம் -தேடகம்


காலம்: பங்குனி 11. 2007, மாலை: 5:00 மணி


மேலதிக விபரங்களுக்கு: 647 891 8597

தமிழ் மக்கள் இசைவிழா : விடுதலைப் போரின் வீரமுழக்கம்

காலனியாதிக்க எதிர்ப்பு மரபு! மறுகாலனியாக்கம் எதிர்த்து முழங்கு!!"

தமிழ் மக்கள் இசைவிழா :
விடுதலைப் போரின் வீரமுழக்கம்


றுகாலனிய, பார்ப்பனிய பண்பாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிரான போர் முழக்கமாக மக்கள் கலை இலக்கியக் கழகம் நடத்தி வரும் தமிழ் மக்கள் இசைவிழாவுக்கு இது 14வது ஆண்டு. கடந்த இரண்டு ஆண்டுகளில் சுனாமி மற்றும் வெள்ளப் பேரழிவையொட்டி மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பணிகள் காரணமாக தமிழ் மக்கள் இசைவிழா ரத்து செய்யப்பட்டிருந்தது. இவ்வாண்டு மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இசைவிழா பிப்ரவரி 24ஆம் தேதி மிகச் சிறப்பாக நடந்தேறியது.


ஒரு மக்கள் விழாவாகவும், மாற்று அரசியல் கருத்துக் கொண்டோரும் விருப்பத்தோடு கலந்து கொள்ளும் நிகழ்வாகவும் பரிணாமம் பெற்றிருக்கும் தமிழ் மக்கள் இசை விழாவின் இவ்வாண்டு நிகழ்வு, "காலனியாதிக்க எதிர்ப்பு மரபு! மறுகாலனியாக்கம் எதிர்த்து முழங்கு!' என்ற முழக்கத்தின்கீழ் நடைபெற்றது.


1806 வேலூர் சிப்பாய் புரட்சியின் 200வது ஆண்டு, 1857 வட இந்திய சுதந்திரப் போரின் 150வது ஆண்டு, 1906 வ.உ.சிதம்பரனார் சுதேசிக் கப்பல் கம்பெனி துவக்கியதன் நூற்றாண்டு மற்றும் 1906இல் பிறந்த ஏகாதிபத்திய எதிர்ப்புச் சிங்கம் பகத்சிங்கின் பிறந்தநாள் நூற்றாண்டு.


பெயரளவு சுதந்திரத்தையும் இழந்து நாடே மீண்டும் அடிமைப்பட்டு வரும் சூழலில், காலனியாதிக்க எதிர்ப்பு மரபின் வரலாற்று உணர்வை மக்களிடையே கொண்டு செல்வதன் மூலம் இன்றைய மறுகாலனியாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்திற்கு செயலூக்கம் வழங்கும் வகையில் இவ்வாண்டு நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டிருந்தன.


விழாவின் முதல் நிகழ்வாக பறையொலி அதிர ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. தோழர்கள் கீழவாசல் காமராசர் சிலையிலிருந்து பேரணியாய்ப் புறப்பட்டனர். செம்பதாகைகள் காற்றில் அசைய, அவற்றின் நடுவே உயர்ந்த காலனியாதிக்க எதிர்ப்புப் போராளிகளின் உருவச் சித்திரங்கள், அந்தப் போராளிகளின் உண்மையான வாரிசுகள் நக்சல்பாரிப் புரட்சியாளர்களே என்பதைப் பறைசாற்றின.


""வேலூர் சிப்பாய் தியாகிகளே, விடுதலை மரபின் விடியல்களே, காளையார் கோயில் காடுகளே, காலனி எதிர்ப்பு ஓடைகளே, வீரவணக்கம் வீரவணக்கம்'' என்ற முழக்கம் நமது வீரமரபின் பெருமிதத்தையும் நெகிழ்ச்சியையும் ஒருங்கே தோற்றுவித்தது. ""பகத்சிங்கின் மண்ணிலே மன்மோகன் சிங் அவமானம்'', ""வ.உ.சிதம்பரம் வாழ்ந்த மண்ணில் ப.சிதம்பரம் வெட்கக்கேடு!'' என்ற முழக்கங்கள் நிகழ்காலத் துரோகிகளை அம்பலப்படுத்தின. ""திப்பு, மருது, கட்டபொம்மன் வாழ்ந்த வாழ்வைப் பாரடா; துப்பு கெட்ட நடிகனுக்கு ரசிகனா, நீ கூறடா'' என்ற முழக்கம் இளைய தலைமுறையின் வருந்தத்தக்க நிலையை உரிமையுடன் இடித்துரைத்தது. இரு மருங்கும் திரண்டு நின்ற மக்களை இசைவிழாவை நோக்கி ஈர்த்தவாறே பேரணி திருவள்ளுவர் திடலை வந்தடைந்தது.


விடுதலைப் போராட்டத் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்திய ம.க.இ.க. மையக் கலைக்குழுவின் உணர்ச்சிபூர்வமான பாடலுடன் காலை அமர்வு தொடங்கியது.


இசைவிழாவின் வழக்கமான எளிமைக்கும் கம்பீரத்துக்கும் பதிலாக பகட்டைப் பறைசாற்றும் விதத்தில் அரங்கம்அமைய நேர்ந்ததற்கான விளக்கத்தைத் தன் வரவேற்புரையில் கூறினார் தோழர் காளியப்பன். பிப்ரவரி 22ஆம் தேதியன்று முதலமைச்சர் கருணாநிதி பங்கேற்ற அரசு விழாவுக்காக உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான அரங்கத்தைப் பிரித்து முடித்த பின்னர், புதிதாக பந்தல் போட்டு நாம் நிகழ்ச்சி நடத்துவது என்றால், அதற்காகவே இசைவிழாவைத் தள்ளி வைக்க வேண்டியிருக்கும் என்ற சூழலில், வேறு வழியின்றி இந்த அரங்கிலேயே நடத்திக் கொள்வது என்று முடிவெடுக்க நேர்ந்ததை விளக்கினார்.


ம.க.இ.க.வின் மா.செ.கு. உறுப்பினர் தோழர் கதிரவன் தலைமையில் கருத்தரங்கம் துவங்கியது. தமது எழுச்சிகரமான தலைமையுரையில் 1800-01 காலகட்டத்தின் தென்னக சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவு கூர்ந்த தோழர் கதிரவன், அத்தியாகிகளின் வரலாறு இருட்டடிப்பு செய்யப்பட்டிருப்பதையும், இன்றைய மறுகாலனியச் சூழலில் அவர்களை நினைவு கொள்ள வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்தார். தென்னிந்திய வரலாற்றை அலட்சியப்படுத்துவது, இசுலாமியர்களை புறக்கணிப்பது என்ற இந்து தேசியக் கண்ணோட்டத்தின் காரணமாக 1800-01 போராட்டம், முதல் இந்திய சுதந்திரப் போராக அங்கீகரிக்கப்படாமலிருப்பதைச் சுட்டிக் காட்டி, அவ்வாறு அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட வேண்டும்; பாடநூல்களில் பாடமாக சேர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.


"தென்னிந்தியக் கிளர்ச்சி 1800-01, முதல் சுதந்திரப் போர்' என்ற ஆங்கில நூலின் ஆசிரியரும், தென்னிந்திய வரலாற்றுப் பேராயத்தின் முன்னாள் தலைவருமான பேரா.ராஜய்யன், போதிய ஆய்வாதரங்களுடன் தனது நூல் 1971இலேயே வெளியிடப்பட்டிருந்த போதிலும், இந்நூலை அரசு அலட்சியப்படுத்தியது குறித்து எடுத்துரைத்தார். 1800-01 கிளர்ச்சி, முதல் இந்திய சுதந்திரப் போராக அரசு அறிவிக்க வேண்டும் என 1980இல் தான் வழக்கு தொடுத்ததையும், உயர்நீதி மன்றம் இவ்விசயத்தில் தலையிட மறுத்து விட்டதையும் தெரிவித்தார். இந்த வரலாற்று உண்மையை நிலைநாட்ட உங்களைப் போன்ற புரட்சிகர அமைப்புகள் முயலவேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.


அவரைத் தொடர்ந்து பேசிய பெங்களூர் திப்பு சுல்தான் பிரச்சார சமிதியின் தலைவரான தலகாடு சிக்கே ரங்க கவுடா அம்மாபெரும் வரலாற்று நாயகனின் பன்முகப்பட்ட ஆளுமையை அறிமுகப்படுத்தினார். ஆங்கிலேயர்களை விரட்டியடிப்பதையே தமது வாழ்க்கை இலட்சியமாக திப்பு கொண்டிருந்ததையும், அதனால் மராத்திய பேஷ்வா மன்னர்கள், ஹைதராபாத் நிஜாம், திருவிதாங்கூர் சமஸ்தானம் முதலிய மன்னர்களோடு ஒரு ஐக்கிய முன்னணியை கட்ட முயன்றதையும் குறிப்பிட்டார். ஆனால், அவர்கள் "மதவேறுபாடின்றி' கிழக்கிந்தியக் கம்பெனிக்கு விசுவாசமாக இருந்ததையும் திப்புவுக்கு எதிராக இருந்ததையும் குறிப்பிட்டார். மேலும், மூன்று உக்கிரமான போர்களுக்கு இடையிலும் அவர் அயராது சமூகத்தில் மேற்கொண்ட சீர்திருத்தங்களை எடுத்துக்காட்டுக்களுடன் விளக்கினார். குறிப்பாக, பல்லாயிரக்கணக்கில் நிலங்களை வளைத்துக் கொண்ட பார்ப்பனர்களின் கொட்டத்தை ஒடுக்கிய திப்பு சுல்தான் அந்நிலங்களை அவர்களிடமிருந்து பறித்தெடுத்து நிலமற்ற கூலிஏழை விவசாயிகளிடம் அவற்றை விநியோகித்ததை விளக்கினார். மேலும், ராக்கெட் ஏவுகணைகளை உலகிலேயே முதன்முறையாக உருவாக்கிய திப்பு சுல்தான், அவற்றை தமது போர்க்களங்களில் பயன்படுத்தி கிழக்கிந்தியக் கம்பெனியைத் திகிலுறச் செய்ததையும், உலகளாவிய ராக்கெட் ஏவுகணை தொழில்நுட்ப வல்லுனர்கள் இன்றளவும் திப்பு சுல்தானது முன்முயற்சியையும், பங்களிப்பையும் வியந்து போற்றுவதையும் குறிப்பிட்டார். சிறீரங்கப்பட்டினம் கைப்பற்றப்பட்டவுடன், முதற்கணமாக வெள்ளையர்கள் திப்புவின் நூலகத்தைக் கைப்பற்றி அவரது நூல்கள், ஆவணங்கள், குறிப்புகள் முதலானவற்றை கவர்ந்து சென்றதைக் குறிப்பிட்டார். மதத்தின் சாயல் இம்மியளவும் இன்றி ஆட்சி புரிந்த திப்புவை இன்று இசுலாமிய மதவெறியராக சித்தரிக்க முயன்று வரும் பார்ப்பனர்களின் பொய்ப் பிரச்சாரங்களை புள்ளி விவரங்களோடு அம்பலப்படுத்தினார்.


"அடிமை மோகம் அழியும் வரையில் விடிவு இல்லை, விடுதலையும் இல்லை!' என்ற தலைப்பில் உரையாற்றிய ம.க.இ.க. தோழர் துரை.சண்முகம், விடுதலைப் போராட்ட வீரர்களின் வீர மரபுக்கு நேர் எதிராக இன்று சமூகத்தில், குறிப்பாக இளைஞர்களிடத்தில் குடிகொண்டிருக்கும் பிழைப்புவாதத்தையும், கோழைத்தனத்தையும் வேதனையோடு குறிப்பிட்டார். மறுகாலனியத்தின் விளைவாக உணவு, உடை, கலை ரசனை, வாழ்க்கைக் கண்ணோட்டம் என ஒவ்வொரு அம்சத்திலும் அடிமைத்தனம் கோலோச்சுவதை எள்ளலும், சினமும் பொங்க குறிப்பிட்ட அவர், கல்வி அமைப்பும், அனைத்து நிறுவனமயமாக்கப்பட்ட அமைப்புகளும் கட்சிகளும், ஏன் போலி கம்யூனிஸ்டுகளும் கூட இச்சூழலை மாற்றுவதற்கான அடிப்படைக் கண்ணோட்டமின்றி இருப்பதையும், இதற்கான மாற்று மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனை கொண்ட புரட்சிகர அமைப்புகள்தாம் என்பதை அறைந்து கூறினார். நாட்டுப்பற்றும், மான உணர்வும் கொண்ட மாணவர்களும், இளைஞர்களும் இத்தகைய புரட்சிகர அமைப்புகளின் அணிதிரள வேண்டுமென அறைகூவல் விடுத்தார்.


மதிய அமர்வின் முதல் உரையாக தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியரும், "பகத்சிங் ஆவணங்களின் முழுமையான தொகுப்பு' நூலாசிரியருமான பேரா.சமன்லால், பகத்சிங்கின் அரசியல் ஆளுமை உருவான வரலாற்றுச் சூழல் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். சேகுவேராவுக்கு இணையான ஆளுமையாக பகத்சிங் விளங்கிய போதும், அவரது கருத்துக்கள் மக்களிடம் விரிவாக கொண்டு செல்லப்படாததை குறிப்பிட்டார். அவ்வகையில் இசை விழா குறித்த தமது மகிழ்ச்சியை வெளியிட்ட அவர், தமது குறுகிய வாழ்விற்குள்ளாக காதல், சாதி, மதம், ஏகாதிபத்தியம், மார்க்சியம் என பல தலைப்புகளில் தீர்க்கமான கருத்துக்களை பகத்சிங் வழங்கியிருப்பதையும், அவற்றை மேலும் விரிவாக மக்களிடம் கொண்டு செல்வதன் அவசியத்தையும் விளக்கினார். சாதி, மத எல்லைகளைத் தாண்டி நின்ற பகத்சிங்கிற்கு மட்டுமே நமது நாட்டு மக்களின், குறிப்பாக இளைஞர்களின் நாயகனாக கொண்டாடப்படுவதற்கான தகுதி உண்டு என்பதையும், ஏகாதிபத்தியம் கோரத் தாண்டவமாடும் இன்றைய சூழலில், இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ள உண்மையான பகத்சிங்கை மக்களிடம் கொண்டு செல்வதன் மூலம் மட்டுமே விடுதலைக்கு வழிகோல இயலும் என்பதையும் வலியுறுத்தினார்.


"மறுகாலனியாக்கம் விடுதலைப் போர் இன்னும் முடியவில்லை' என்ற தலைப்பில் உரையாற்றிய ம.க.இ.க. பொதுச்செயலர் தோழர் மருதையன், இரண்டு நூற்றாண்டு முந்தையதும், மிகச் சமீபத்தியதுமான விடுதலை வீரர்களின் இந்த வரலாறு இருட்டடிப்பு செய்யப்படுவதும், துரோகிகளின் வாரிசுகள் கொண்டாடப்படுவதும் தற்செயல் நிகழ்வுகள் அல்ல என்பதையும், துரோகிகளின் வாரிசுகளே இன்றைய ஆளும் வர்க்கத்தினர் என்பதையும் அம்பலப்படுத்தினார். வரலாற்று உணர்வு என்பது ஏன் அவசியம் என்பது விளக்கியதுடன் தியாகிகளின் வரலாற்றுப் பாத்திரத்தைப் புரிந்து கொள்வதென்பது அவர்களைத் துதி பாடுவதற்காக அல்ல, அவர்கள் வழியில் இன்றைய நமது வரலாற்று கடமையை ஆற்றுவதற்குத்தான் என்பதை வலியுறுத்தினார். பகத்சிங் என்ற 23 வயது இளைஞனின் சிறப்பு, இந்திய விடுதலையை, தான் ஏற்றுக்கொண்ட தனிப்பட்ட பொறுப்பாகவே கருதி அவன் செயல்பட்டதுதான் என்று குறிப்பிட்ட அவர், அத்தகையதொரு பண்பைத்தான் இன்றைய சூழல் இளைஞர்களிடம் கோருகிறது என்று கூறி முடித்தார்.


மாலை 7.00 மணியளவில் கலை நிகழ்ச்சிகள் துவங்கின. துவக்க உரையாற்றிய திரைப்பட இயக்குனர் இராம்ஜி எஸ்.பாலன், மிகவும் இயல்பாகவும் மனம் திறந்தும் பேசினார். ம.க.இ.க.வின் பாடல் ஒலிப்பேழைகள் தனது அரசியல் பார்வையையும் வாழ்க்கைக் கண்ணோட்டத்தையும் மாற்றியதை விளக்கினார். விழாவுக்கு வந்திருக்கும் ஒவ்வொருவரும் ம.க.இ.க.வின் பேழைகளைப் பரவலாகக் கொண்டு செல்வதை ஒரு பணியாகச் செய்வதன் மூலமே பல்லாயிரக்கணக்கானோரை அணிதிரட்டி விடமுடியும் என்று தான் ஆணித்தரமாக நம்புவதாகக் கூறினார். பிற அரசியல் கலாச்சார அமைப்புகளின் சீரழிந்த நிலையை குறிப்பிட்டு, இச்சூழலில ம.க.இ.க. மற்றும் அதன் தோழமை அமைப்புத் தோழர்களின் குன்றாத உணர்வையும், உறுதியையும் கண்டு தான் வியந்து போனதாகவும், இத்தகைய அமைப்பு இன்று நம் நாட்டை விழுங்கிக் கொண்டிருக்கும் மறுகாலனியத்தை நிச்சயம் முடிவுக்கு கொண்டு வரும் எனத் தான் உறுதிபட நம்புவதாகவும் குறிப்பிட்டார்.


முதல் நிகழ்ச்சியாக ரெட்டிப்பாளையம் வீரசோழத் தப்பாட்டக் குழுவினரின் தப்பாட்டம், அரங்கம் அதிர்ந்த போர் முழக்கமாக துவங்கியது. பிறகு புதுக்கோட்டை இ.எம்.பாஷா குழுவினர் கிழக்கிந்தியக் கம்பெனியை குலை நடுங்க வைத்த மாமன்னர்கள் ஹைதர் அலி, திப்பு குறித்த உணர்ச்சிபூர்வமான பாடல்களை இசைத்தனர். ஆதிக்கச் சாதிப் பிழைப்புவாதிகள் மருதிருவருக்குச் சாதிச்சாயம் பூசி சிறுமைப்படுத்தி வரும் இன்றைய சூழலில், சின்னமருதம்பட்டியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் நிகழ்த்திய மருதிருவர் கும்மி, அந்தப் போராளிகளின் உண்மையான ஆளுமையை வெளிப்படுத்துவதாக அமைந்தது.


"மருதுவின் போர்க்களம்' எனும் மேடை நாடகம் ஊமைத்துரையின் பாளையங்கோட்டை சிறை உடைப்பு சாகசம் முதல் மருது தூக்கிலிடப்பவது வரையிலான கொந்தளிப்பான நிகழ்வுகளை இன்றைய சூழலுக்குப் பொருத்தப்பாடுடைய எள்ளலான வசனங்களோடு காட்சிப்படுத்தியது. ""உடம்பில் ஐரோப்பியனின் இரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள்!'' என்ற சின்ன மருதுவின் பிரகடனம் இன்றைய சூழலில் மக்களைச் செயலில் இறங்கக் கோரும் அறைகூவலாக ஒலித்தது. 1806 வேலூர் புரட்சியை மக்கள் மத்தியில் பரப்புவதில் பெரும்பங்கு ஆற்றிய இசுலாமிய நாடோடிப் பாடகர்களைக் கண்முன் கொண்டு வந்தது, வேலூர் ஃபக்கீர்களின் குழு. அரங்கத்தை அதிரச்செய்த அந்தப் பறையொலியின் வலிமை, அன்று வேலூர் சுற்று வட்டாரம் முழுவதும் ஒலித்து கிளர்ச்சியை மூண்டெழச் செய்த காட்சி மனக்கண் முன் விரிந்தது.


கட்டபொம்மனையும், சுந்தரலிங்கத்தையும், பூலித்தேவனையும், ஒண்டி வீரனையும் எதிர்எதிராக நிறுத்தி அவர்களை சாதி அடையாளங்களாக சிறுமைப்படுத்திவரும் இன்றைய சூழலில், அவர்களை மீட்டெடுக்கும் முயற்சியாக அமைந்தது தூத்துக்குடி கைலாசமூர்த்தி குழுவினர் நிகழ்த்திய "வீரத்திற்கு ஏது சாதி' என்ற ஒயிலாட்டம். அந்தச் சிறுவர்களின் ஒயிலும் கம்பீரமும் மக்களின் பலத்த கரவொலியைப் பெற்றது.


ஜிம்ப்ளா மேளம் என அழைக்கப்படும் எருது கட்டும் மேளத்தின் போர்க் குணமும், சிதம்பரம் அன்பரசன் குழுவினரின் தமுரு மேளமும், தீரன் சின்னமலையின் வீரத்தைப் போற்றிய உடுக்கடிப் பாடலும், வ.உ.சி.யின் தியாக வரலாற்றைச் சொல்லும் வில்லுப்பாட்டும் கூடியிருந்த மக்களின் வரவேற்பைப் பெற்றன. தமிழ் நாடக வரலாற்றில் நாட்டுப் பற்றும், மொழிப் பற்றும் கூடிய நாடகக் கலைஞராக விளங்கிய விஸ்வநாததாசின் நினைவோடு விடுதலைப் போரின் வீரநினைவுகளை வழங்கிய பாவலர் ஓம்.முத்துமாரி குழுவினரின் நிகழ்ச்சி, பின்னிரவின் கண் அயர்ச்சியையும் கலைத்து, அரங்கத்துக்கே புத்துணர்வு ஊட்டியது.


மெத்த படித்த மேதாவிகள் தமது வீடுகளில் தொலைக்காட்சி பெட்டிகளில் சரணடைந்து கிடக்கையில், "வெட்டரிவாள் எடடா' என சிறுவர்கள் தமது கலைநிகழ்ச்சியில் உரத்துக் குரலெழுப்பியது உணர்ச்சியைத் தூண்டுவதாக இருந்தது.


உழைக்கும் மக்களைக் கருவறுக்கும் மறுகாலனியாக்கத்தின் கொடூரத்தையும், அமெரிக்க பயங்கரவாதத்தையும், பார்ப்பனியக் கோர முகத்தையும், ஏகாதிபத்திய அடிமைத்தனத்தையும், எள்ளலோடும் ஆவேசத்தோடும் தீயில் கிழித்த வரிகளாக வழங்கியது ம.க.இ.க. மையக்கலைக் குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி.

ம.க.இ.க. வழங்கிய "தூக்குமேடை' இசைச்சித்திரத்தில், தூக்குமேடை ஒரு இரத்த சாட்சியமாக, திப்புசுல்தான் முதல் பகத்சிங் வரை நீடிக்கும் வீர மரபை, செயல் வடிவம் பெறாத கனவின் மீட்டப்படாத இசையை வழங்கி பார்வையாளர்களை உறையச் செய்தது. இந்நிகழ்ச்சி நிறைவுற்ற பின்னும் அரங்கில் நிரம்பி நின்ற மௌனம் தமிழ் மக்கள் இசை விழாவின் நோக்கம் வெற்றி பெற்றதை பறைசாற்றியது.


இறுதியாக கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த 1857 வட இந்திய சுதந்திரப் போர் குறித்த மையக் கலைக்குழுவினரால் இசைக்கப்பட்ட பாடல், இன்று ஆட்சிபுரியும் பல நூறு கிழக்கிந்தியக் கம்பெனிகளை முழுமையாக விரட்டியடிப்பதற்கான இறுதிச் சுதந்திரப் போர் துவங்கி விட்டது என்பதை அறிவிக்கும் போர் முரசாக அரங்கில் நிறைந்தது.


பச்சை மூங்கில்களால் அமைக்கப்பட்ட எளிமையும் கம்பீரமும் கொண்ட நுழைவாயில், உள்ளே நுழைந்தவுடன் பார்வையாளர்களை வரவேற்கும் சின்ன மருதுவின் போர்ப் பிரகடனம், விடுதலை வீரர்களையும் அவர்களுடைய போர்க்களங்களையும் சித்தரித்து அரங்கின் உட்புறமெங்கும் வைக்கப்பட்டிருந்த ஓவியங்கள், மறுகாலனியாக்கத்தின் வக்கிரமான வெளிப்பாடான தண்ணீர் தனியார்மயத்தையும், அதன் கோரமுகங்களில் ஒன்றான கோக்கோகோலாவையும் அம்பலப்படுத்தும் ஓவியக் காட்சி, இன்னொரு புத்தகக் கண்காட்சியோ என்று வியக்கும் வண்ணம் அரங்கில் விரவியிருந்த புத்தகக் கடைகள், தரமான மலிவான உணவு, தொலைவில் அமர்ந்திருப்போருக்கும் மேடை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கும் வண்ணம் அரங்கில் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சி திரைகள், பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்தும் எத்தகைய சலசலப்பும் இல்லாமல் பொறுப்புணர்ச்சியுடன் தொடர்ச்சியாக 16 மணி நேரம் நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்த மக்கள் கூட்டம்...


விழாவிற்குரிய மகிழ்ச்சியையும் போர்க்களத்தின் கட்டுப்பாட்டையும் ஒருங்கே வெளிப்படுத்திய தமிழ் மக்கள் இசைவிழா, விடுதலைப் போரில் முதல் குரலெழுப்பிய தமிழகம் மறுகாலனியாக்கத்துக்கு எதிரான போராட்டத்திலும் முன் நிற்கும் என்ற நம்பிக்கையைத் தோற்றுவித்தது.

— பு.ஜ.பு.க. செய்தியாளர்கள்