தமிழ் அரங்கம்

Tuesday, June 26, 2007

மேட்டுக்குடிகளின் வீடுகளுக்கே..

மேட்டுக்குடிகளின் வீடுகளுக்கே சென்று சேவை செய்யக் கோரும் தேசியம்

பி.இரயாகரன்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற பெயரில், சமூகப் பண்பாட்டுச் சிதைவை அரசு திட்டமிட்டு செய்கின்றது. அரசுசாரா நிறுவனம் ஒன்றின் அறிக்கை இலங்கையில் 10000 பாலியல் வன்முறைகள் குடும்பத்தில் நடப்பதாக அறிவித்துள்ளது. இதில் அரைவாசி தந்தைமாரால் நடத்தப்படுகின்றது. இதில் 100 மட்டுமே சட்டத்தின் முன் வருகின்றது. இதில் 54.5 தந்தைமாருக்கு எதிரான புகாராகும். இந்த நிலையில் கரு அழிப்பு இலங்கையில் வருடம் 9 லட்சமாகியுள்ளது. இதில் 15 சதவீதம் திருமணமாகாத கரு அழிப்பாக உள்ளது. பல லட்சம் குடும்பங்கள் பிரிந்த தனிமையில் வரைமுறையின்றி சிதைகின்றது. கணவன் மனைவி பிரிந்து வௌ;வேறு நாடுகளில் வாழ்வது, நிரந்தரமான சமூக போக்காகியுள்ளது. ஒழுக்கம் மீதான பரஸ்பர சந்தேகங்கள் மன உளைச்சலையும், உளவியல் சிதைவையும் ஏற்படுத்தியுள்ளது. விவாகரத்துகள் பெருக்கெடுக்கின்றது. உழைப்பைப் பகிர்வதில் ஏற்படும் முரண்பாடுகள் சமூக உறவாக்கத்தையே பிளக்கின்றது. குழந்தைகள் தாய் இன்றி வாழ்வதன் மூலம், வக்கிரமடைந்து வருகின்றனர். குழந்தைகள் மேலான பாலியல் ரீதியான வக்கிரங்கள் தலைவிரித்தாடுகின்றது. பாலியல் குற்றங்கள் அதிகரிக்கின்றது. குழந்தைகள் மேலான பாலியல் வன்முறை தேசிய பண்பாகின்றது. குற்றங்களின் தன்மை வக்கிரமடைகின்றது. தற்கொலைகள் என்றுமில்லாத அளவில் அதிகரித்து, ஆசியாவிலேயே முதன்மை நாடாகியுள்ளது. இவற்றை தனித்தனியாக விரிவாகக் கீழே பார்ப்போம்.

வெளிநாட்டை நோக்கி செல்லும் ஒவ்வொரு பெண்ணும், பாலியல் ரீதியான பாதுகாப்பற்ற ஒரு நிலையில் தள்ளப்படுகின்றனர். இது அவர்களுக்கு மட்டுமல்ல, ஐரோப்பா நோக்கி தமிழ் ஏஜென்சி மூலம் வரும் ஒவ்வொரு பெண்ணின் தலைவிதியும் கூட. தனிப்பட்ட ஆண்கள் திட்டமிட்டு உருவாக்கும் நான்கு சுவர்களைக் கொண்ட சமூகச் சிறைக்குள், பாலியல் மிருகங்களின் வன்முறைக்கு உட்படுகின்றனர். சிலர் தவிர்க்க முடியாத வகையில் இணங்கிப் போகின்றனர். எதிர்த்தால் மரணம் அவர்களின் தலைவிதியாகின்றது. இறந்த பெண்களின் பிரதேசங்களை விமானம் மூலம் ஏற்றி இறக்கப்படுவது அதிகரிக்கின்றது. வீட்டு வேலைக்குச் செல்லும் பெரும்பாலான பெண்களின் கதி இது. இந்த வகையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்;ற பெண்களில், 91 சதவீதம் பேர் வீட்டு வேலைக்கே இலங்கை அரசால் ஏற்றுமதி செய்யப்படுகின்றனர். 2000 முதல் 2003 ஐப்பசி வரை வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்றவர்களின்; 400 இறந்த உடல்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது. பெரும்பாலாவை பெண்களின் சடலங்களாக இருந்தது.

மத்திய கிழக்கில் 37 இலங்கையரின் பிரேதங்கள் 2003 ஜூலை மாதத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியதை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவித்தது. இந்த 37 பேரில் 22 பேர் பெண்களாவர். இந்தப் பெண்கள் அனைவரும் பணிப் பெண்களாக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றவர்களாவர். இறந்த இந்த 37 பேரில் 16 பேர் சவூதி அரேபியாவில் இருந்து சடலமாக மீள அனுப்பப்பட்டவர்கள். 9 பேர் உடல் லெபனான் நாட்டில் இருந்து அனுப்பப்பட்டது. இவற்றைவிட ஹெங்ஹொங்கில் கொலை செய்யப்பட்ட ஒரு பணிப்பெண்ணின் சடலமும், தற்கொலை செய்துகொண்ட மூன்று பணிப்பெண்களின் சடலமும், திடீர் விபத்துக்களில் இறந்த 8 பேரின் சடலமும் தேசிய சொத்தாக மீண்டன.
சடலங்களை பெறுவது, அதை எற்றி இறக்குவதும், சடலங்கள் அனாதையாகாது உறுதி செய்வதும் தமது தேசியக் கடமையாக பீற்றி, அவர்கள் மேல் அக்கறை உள்ளதாக அரசு தம்பட்டம் அடிக்கின்றது. ஆனால் சொந்த நாட்டில் சொந்த மக்கள்; உழைக்கவும் வாழவும் வழிகாட்டவும் வக்கற்றவர்கள், அன்னிய நாட்டில் தொழில் புரிவோரின் தொழில் பாதுகாப்பு உட்பட மனித உரிமையை பாதுகாக்க வக்கற்றவர்களின் அரசை தெரிவு செய்வதையே, நாம் ஜனநாயகம் என்று பீற்றுவது இன்றைய சமூக அறிவாகிப் போன உலகத்தில் நாம் மந்தைகளாக வாழ்கின்றோம் என்பதை நாம் உணரத் தவறுகின்றோம்.

12 லட்சம் பேர் அரபு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் தொழில் புரிகின்றனர். இதில் 65 சதவீதம் பேர் வீட்டுப் பணிப் பெண்களாக வேலை செய்கின்றனர். 2002 இல் வீட்டுப் பணிப் பெண்கள் இலங்கை அரசாங்கத்திடம் தமது நிலை தொடர்பாக 7103 முறைபாடுகள் செய்துள்ளனர். இலங்கை அரசிடம் செய்த முறைப்பாடுகளே இவ்வளவு என்றால், குற்றத்தின் அளவு பல மடங்காகும். இதை மேலும் ஆழமாகப் புரிந்து கொள்வது அவசியம். 2000 ஆண்டு முதல் ஆறு மாதத்தில் நாடு திரும்பிய பெண்களில் 240 பேர் பாலியல் வன்முறை தொடர்பாக, கொழும்பு விமான நிலையத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் முறையிட்டுள்ளனர். இந்த முறையீடுகள் 2002 இல் முதல்; ஆறு மாதத்தில் 70 சதவீதத்தில் அதிகரித்தது. இவை சமூக ஆணாதிக்க ஒழுக்கப் பண்பாட்டுக் கோவைகளை மீறி முறையிடப்பட்டவை. உண்மையில் குற்றம் பல மடங்காக இருப்பதை நாம் காணவேண்டும். இதற்கு வெளியில் மனித அவலங்கள் பன்மைத் தன்மை வாய்ந்தவை. 2002-இல் 1704 முறைப்பாடுகள் சம்பளம் தரப்படாமை பற்றி முறையிட்டுள்ளனர். இது 45 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. அலைக்கழிய வைத்து தொல்லை கொடுத்த முறைபாடு 2002-இல் 1041 கிடைத்துள்ளது. இவை அனைத்தும் நாடு திரும்பும் போது, பல தடைகளைத் தாண்டி கொழும்பு விமான நிலையத்தில் முறையிடப்பட்டவை மட்டுமே இவை. 2002-இல் 44 கற்பழிப்பு பற்றி முறைப்பாடு செய்துள்ளனர். 2002-இல் 20 பேர் தந்தைகளற்ற குழந்தைகளுடன் நாடு திரும்பியுள்ளனர். இது 2002-இல் முதல் ஆறு மாதத்தில் 157 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

2002 இல் கிடைக்கப் பெற்ற 7103 முறைபாட்டில் 3191 முறைபாடுகள் சவுதியில் சென்று திரும்பியோர் செய்துள்ளனர். இதைவிட குவைத்தில் தொழில் புரிந்தோர் 1041யும், லெபனானில் தொழில் புரிந்தோர் 800யும், அரபு ஐக்கிய இராச்சியத்தில் தொழில் புரிந்தோர் 497யும், Nஐhர்டனில் தொழில் புரிந்தோர் 467 முறைபாடுகளையும் செய்திருந்தனர். இதைவிட பலவித இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்ட அண்ணளவாக 1300 பெண்கள் 2003 முதல் 6 மாத கால எல்லைக்குள் திரும்பி வந்தாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த வகையில் குவைத் நாட்டிலிருந்து 503 பேரும், சவூதி அரேபியாவிலி ருந்து 406 பேரும் திரும்பி வந்தனர்.
குற்றங்கள், மனித அவலங்கள், பிரேதங்களையும் இறக்குமதியாக்கும் அரசு, தொடர்ந்து மனித உழைப்பை ஏற்றுமதியாக்குவதில் பின் நிற்கவில்லை.
இதை மூடிமறைக்க முறைப்பாட்டு மையங்கள், உதவித் திட்டங்கள், தீர்வற்ற விசாரணைகள், காப்புறுதித் திட்டங்கள், பயிற்சிகள் என்று தன்னை அலங்கரிக்கின்றது. இதன் மூலம் மனித உழைப்பின் ஏற்றுமதியை அதிகரிக்கின்றது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் 2002-இல் பணிப் பெண்களுக்கான பயிற்சி என்ற பெயரில், 29761 பேருக்கு உழைப்பை எப்படி முகம் சுளிக்காது குண்டி கழுவி சம்பாதிப்பது என்ற பயிற்சியை அளித்துள்ளது. 2002 முதல் ஆறு மாதத்தில் இது 20 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இந்த மனித ஏற்றுமதியில் 571 வெளிநாட்டு வேலைவாய்ப்பு தரகர்கள் செயல்படுகின்றனர். இந்த மனித விரோதத் தொழிலைச் செய்ய, 2002-இல் புதிதாக 50 நிறுவனங்கள் இதற்கான அனுமதியைக் கோரியது.
மறு தளத்தில் அரசு மனித ஏற்றுமதியைச் செய்யப் புதிதாகக் கையெழுத்திட்ட ஒப்பந்தம் ஒன்று, 191581 பேருக்கான ஏற்றுமதியை உறுதி செய்துள்ளது. இதைவிட மலேசிய அரசாங்கத்துடன் செய்த ஒப்பந்தம் ஒன்று, வருடம் 20000 கூலித் தொழிலார்களை ஏற்றுமதி செய்யக் கோருகின்றது. இதில் சிறந்த பயிற்சி பெற்ற தோட்ட தொழிலாளர்கள் முதன்மையாக அனுப்பப்பட உள்ளனர். அத்துடன் தற்பொழுது மலேஸியாவில் தொழில் புரியும் பத்தாயிரம் பேரின் சட்டவிரோதத் தன்மை அகற்ற ஒப்பந்தம் வழிவகுக்கின்றது.

மனிதனை ஏற்றுமதி செய்வதே தேசியக் கடமை என்று கொக்கரிக்கும் அரசின் சட்டபூர்வமான ஜனநாயக பூர்வமான சமூக அமைப்பில், இதை நாம் அங்கீகரிப்பது எமது சுதந்திரம் என்றால், எமது உணர்வு மனித விரோத வக்கிரமானதே. இந்த மனித ஏற்றுமதியை ஊக்குவிக்கும் போது, அதன் மனித விரோத சமூகக் கட்டமைப்பு நிறுவனமயமாகும் போது, கொழுத்த பணத் திரட்சியே இதன் அடிப்படையாக உள்ளது.

1998 முதல் 2002 வரையான காலத்தில் வீட்டுப் பணிப் பெண்கள் மற்றும் அரபு நாட்டில் தொழில்; செய்யும் பெண்கள் 47800 கோடி ரூபாவை இலங்கைக்காக உழைத்துத் திரட்டினர். இதில் 1998 இல் 7900 கோடி ரூபா திரட்டிய மனித உழைப்பு, 2002 இல் 12000 கோடியாக அதிகரித்தது. 10 லட்சம் உடல் உழைப்பாளிகளின்; அவலமான உழைப்பைச் சூறையாடிய போது இது கிடைத்துள்ளது. இதில் 4000 கோடி ரூபாவை இலங்கை வங்கிகளில் போட்டனர். மிகுதியில் பெரும் பகுதியை உலகெங்கும் கடைவிரித்துள்ள பன்னாட்டு ஆடம்பர நுகர்வுச் சந்தையில் தொலைத்தனர். மறுபுறத்தில் சேமிப்பை உலக வங்கியும், பெரும் முதலீட்டாளர்கள் மிகக் குறைந்த வட்டி விகிதங்களில் அவற்றை அபகரிப்பதுடன், பணவீக்கம் மூலம் அவற்றைப் பெறுமதி அற்றதாக்கி செல்லாக் காசாக்கின்றனர். மனித ஏற்றுமதி மூலம் கிடைக்கும் பணத்தைக் கூட தேசிய உற்பத்தியில் முதலிடவில்லை. அவை பன்னாட்டு நிறுவனங்களுக்கு சென்று அடைவதை அரசு உறுதி செய்கின்றது. தேசிய சமூகங்களின் மனித அவலங்கள் மூலதனமாகத் திரட்டப்படுகின்றது. தேசிய பாடசாலைகள் மூடப்படுகின்றன. மக்களை குடிகாரர்களாக்கி, பிரச்சனைகளை அதற்குள் முடிவுகட்ட மதுவிற்பனை நிலையங்களைத் திட்டமிட்டு அரசுத் திறக்கின்றது.

உ.பி.:தலித் ஆட்சியா?பார்ப்பன மீட்சியா?

உ.பி.:தலித் ஆட்சியா?பார்ப்பன மீட்சியா?

உத்தரப் பிரதேச மாநில சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 402 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சி 206 இடங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. அக்கட்சியின் தலைவியான மாயாவதி, உ.பி.யில் 4வது முறையாக முதல்வராகியுள்ளார்.

பத்திரிகைகளும் கருத்துக் கணிப்பு நிறுவனங்களும் உருவாக்கிய மணற்கோட்டைகள் அனைத்தும் சரிந்து, காங்கிரசு, பா.ஜ.க., சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் இத்தேர்தலில் படுதோல்வியடைந்துள்ளன. கடந்த தேர்தலில் 143 தொகுதிகளைக் கைப்பற்றிய சமாஜ்வாதி கட்சி இம்முறை 97 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பா.ஜ.க. 51 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியுள்ளது. ராகுல்காந்தி சூறாவளிப் பிரச்சாரம் செய்தும் கூட காங்கிரசு கட்சி 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. "இடதுசாரிகள்' 46 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெற்றி பெறமுடியவில்லை. உ.பி.யில் பிரபலமான கட்சிகள் அனைத்தும் குப்பைத் தொட்டியில் வீசியெறியப்பட்டு விட்டன என்று முதலாளித்துவப் பத்திரிகைகளே குறிப்பிடுமளவுக்கு இத்தேர்தலில் மாயாவதி அலை சுழன்று வீசியது.

தனிப்பெரும்பான்மையுடன் பகுஜன் சமாஜ் கட்சி வெற்றி பெற்றதன் மூலம் கடந்த 16 ஆண்டுகாலமாக உ.பி.யில் நிலவி வந்த கூட்டணி ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

""இது மகத்தான வெற்றி; இந்திய நாடாளுமன்ற அரசியல் வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ள வெற்றி; ஈராயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒரு தலித் அதிலும் ஒரு பெண், கட்சியின் நிறுவனரான கன்ஷிராம் மறைந்துவிட்ட நிலையில், எந்தக் கட்சியுடனும் கூட்டணி சேராமல் தனித்து நின்று, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவியான மாயாவதி இம்மாபெரும் வெற்றியைச் சாதித்துள்ளார். ஒடுக்கப்பட்ட தலித் சாதியைச் சேர்ந்த மாயாவதி, இந்தியாவிலேயே மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தைக் கட்டியாளப் போகிறார்'' என்று பார்ப்பன பத்திரிகைகளே வியந்து பாராட்டுமளவுக்கு இந்தியாவையே தனது தேர்தல் வெற்றியால் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் மாயாவதி.

""மாயாவதியின் வெற்றியானது, இந்தியாவின் அரசியல் போக்குகளையும் சமூக உறவுகளையும் மாற்றப் போகிறது; 2008இல் சட்டப் பேரவைத் தேர்தல் நடக்கவுள்ள ம.பி., ராஜஸ்தான், டெல்லி ஆகிய மாநிலங்களில் இந்த வெற்றியானது தீவிரமான தொடர் விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது'' என்றெல்லாம் முதலாளித்துவ அரசியல் நோக்கர்கள் ஆரூடம் சொல்கிறார்கள். ""உ.பி.யில் மட்டுமின்றி இந்திய நாடெங்கும் இந்த வெற்றியின் தாக்கம் தீயாய்ப் பற்றிப் பரவும்'' என்கிறார் திருமாவளவன்.
சாதி அரசியலும் கிரிமினல் அரசியலும் கொடிகட்டிப் பறக்கும் உ.பி. மாநிலத்தில், தனித்து நின்று ஒரு தலித்திய கட்சியால் எப்படி இந்த வெற்றியைச் சாதிக்க முடிந்தது? பெரும்பான்மையினரான ஆதிக்கசாதி மக்களை எவ்வாறு மாயாவதியால் ஈர்க்க முடிந்தது? ஒரே வரியில் சொல்வதாயின், மே.வங்க போலி கம்யூனிஸ்டு முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா பகிரங்கமாக அறிவித்ததைப் போல, மாயாவதியும் தனது கட்சியின் கொள்கைகளைத் தலைகீழாக மாற்றிக் கொண்டு விட்டார்.
அதனாலேயே அவரால் இவ்வெற்றியைச் சாதிக்க முடிந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை ""திலக், தராஜு, அவுர் தல்வார், இன்கோ மாரோ ஜூட்சார்'' என்று மேடைகளில் முழங்கியவர்தான் மாயாவதி. அதாவது, திலக் நெற்றியில் பொட்டு வைக்கும் பார்ப்பனரையும், தராஜு பனியா எனும் வணிக சாதியினரையும், தல்வார் தலைப்பாகை அணியும் ராஜபுத்திர சத்திரிய சாதியினரையும் செருப்பால் (தாழ்த்தப்பட்டோரில் ஒரு பிரிவினரது தொழில்) அடிப்போம் என்று அவர் முழங்கி வந்தார். ஆதிக்கசாதி இந்துக்களுக்கு எதிராக, குறிப்பாக பா.ஜ.க. வுக்கு எதிராக ஆவேசமாக முழங்கி வந்தார். ""எங்கள் ஓட்டு; உங்கள் ஆட்சியா? இனி அது நடக்காது'' என்று மேடைகளில் நெருப்பைக் கக்கினார்.

""சாதியத்தை உடைப்போம்; ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை ஒருங்கிணைப்போம்'' என்று கன்ஷிராமை நிறுவனராகக் கொண்டு முழங்கிவந்த பகுஜன் சமாஜ் கட்சியின் கொள்கையும் லட்சியமும் மாயாவதியின் வீரவசனங்களும் ஓட்டுப் பொறுக்கி அரசியல் களத்தில் இன்று காலிப் பெருங்காய டப்பாவாகிவிட்டன. ""தலித் பிரச்சினையை தலித் மக்களால் மட்டுமே உணர முடியும்; தலித்துகளுக்கு தலித்துகள்தான் தலைமை தாங்க வேண்டும். தலித்துகளே, பிற கட்சிகளில் சேராதீர்கள்; பிற ஆதிக்க சாதியினரை எமது கட்சியில் சேர்க்கவே மாட்டோம்'' என்றெல்லாம் சவடால் அடித்து வந்த ""பகுஜன்'' சமாஜ் கட்சி இன்று பார்ப்பனர்களும் பிற ஆதிக்க சாதியினரும் முக்கிய பொறுப்புகளில் அங்கம் வகிக்கும் ""சர்வஜன்'' (அனைத்து சாதியினருக்குமான) கட்சியாகி விட்டது. மாயாவதியும் தமது கட்சி ""சர்வஜன்'' கட்சிதான் என்று பெருமையுடன் குறிப்பிடுகிறார்.
ஆதிக்க சாதியினரையும் அவர்களது கட்சிகளையும் மனுவாதிகள் என்று சாடிவந்த பகுஜன் சமாஜ் கட்சி, இப்போது அதே மனுவாதிகளைத் தமது கட்சியின் முக்கிய பிரமுகர்களாக பொறுப்புகளில் அமர்த்தியுள்ளது. பார்ப்பன எதிர்ப்பு ஆதிக்க சாதி எதிர்ப்பு என்றெல்லாம் சவடால் அடித்து வந்த அக்கட்சி, இன்று மனுவாதிகளின் நம்பகமான கூட்டாளியாகி விட்டது.

கடந்த 2002 உ.பி. மாநில சட்டமன்றத் தேர்தலின்போது பார்ப்பனர்களுடன் சங்கமித்த மாயாவதி, தமது கட்சியின் சார்பில் 36 பார்ப்பனர்கள் உள்ளிட்டு 96 ஆதிக்க சாதியினரை வேட்பாளராக நிறுத்தினார். தற்போதைய 2007 தேர்தலில் 86 பார்ப்பனர்கள் உள்ளிட்டு 139 ஆதிக்க சாதியினரை தமது கட்சியின் வேட்பாளராக நிறுத்தினார். தலித்துகளுக்குத் தலித்துகள்தான் தலைமை தாங்க வேண்டும் என்று சவடால் அடித்துவந்த மாயாவதி, சதிஷ்சந்திர மிஸ்ரா என்ற பார்ப்பனரையே தமது கட்சியின் பொதுச் செயலாளராக்கினார். இதுதவிர, ஒவ்வொரு மாவட்டத்திலும் 25 பேர் கொண்ட ""சகோதரத்துவ மேம்பாட்டு கமிட்டி''களை பகுஜன் சமாஜ் கட்சி நிறுவியுள்ளது.
இக்கமிட்டிகளின் தலைவர், துணைத் தலைவர் பொறுப்புகளில் பார்ப்பனர்கள் இருக்க, தாழ்த்தப்பட்டோர் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். எந்தவொரு கட்சியும் பார்ப்பனர்களுக்கு இப்படி அரசியல் மேடையை அமைத்துக் கொடுத்ததில்லை என்று பார்ப்பனர்களே புகழும் அளவுக்கு மாயாவதியின் பார்ப்பன சேவை நாலு கால் பாய்ச்சலில் முன்னேறியது.
இது மட்டுமா? உ.பி.யில் "சிறுபான்மை'யினரான பார்ப்பனர்கள் பாதுகாப்பற்ற நிலையில் பரிதவிக்கிறார்களாம். எனவே "ஒடுக்கப்பட்ட', "சிறுபான்மை'யினரான பார்ப்பனர்களைப் பாதுகாக்கவும் முன்னேற்றவும் மாநிலமெங்கும் 22 வட்டார மாநாடுகளை நடத்திய மாயாவதி, கடந்த 2005ஆம் ஆண்டில் லக்னோ நகரில் மிகப்பெரிய பார்ப்பன மாநில மாநாட்டையும் நடத்தினார். அம்பேத்கரின் புகழ்பாடி ""ஜெய் பீம்'' என்று முழங்கி வந்த தாழ்த்தப்பட்டோர், இம்மாநாட்டுப் பேரணியில் பார்ப்பனரோடு சேர்ந்து ""ஜெய் பரசுராம்'' என்று முழங்கினர். இம்மாநாட்டில் பார்ப்பனர்கள், பரசுராமனின் நினைவாக வெள்ளிக் கோடாரியை மாயாவதிக்குப் பரிசளித்து கௌரவித்தனர்.

இந்தப் பரசுராமன் என்ற பார்ப்பனர், சத்திரியர்களை (சூத்திரர்களை) கோடாரியால் தாக்கி அழித்து பார்ப்பனச் சாதியைப் பாதுகாத்து, அதன் ஆதிக்கத்தை நிலைநாட்டினார் என்பது பார்ப்பன புராணக் கதை. ஏடறிந்த வரலாற்றில் புஷ்யமித்ர சுங்கன் என்ற பார்ப்பன மன்னன், சத்திரிய மன்னனைக் கொன்று பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநாட்டியவன் என்பதால், பார்ப்பன ஆதிக்கச் சின்னமாகக் கருதப்படுவதைப் போல, புராண காலத்தின் பார்ப்பன ஆதிக்கச் சின்னமாக பரசுராமன் கருதப்படுகிறான். பரசுராமனைப் போல, தலித் சகோதரி மாயாவதியும் பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காகவே பார்ப்பனர்கள் இம்மாநாட்டில் அவருக்கு வெள்ளிக் கோடாரியைப் பரிசளித்தனர்.

வேத மந்திரங்கள் முழங்க பார்ப்பனர்கள் இம்மாநாட்டில் தனக்களித்த வரவேற்பைக் கண்டு பூரித்துப் போன மாயாவதி, ""எங்கள் கட்சியின் தேர்தல் சின்னம் வெறும் யானை அல்ல; பார்ப்பனர்களின் முழுமுதற் கடவுளாகிய கணேசமூர்த்தியின் அவதாரம்; அது பிரும்மா, விஷ்ணு, மகேசனின் ஒருங்கிணைந்த உருவம். எங்கள் கட்சியை பார்ப்பனர்களுக்கும் மேல்சாதியினருக்கும் எதிரான கட்சி என்று சிலர் பொய்ப்பிரச்சாரம் செய்து வருகின்றனர். எமது நடைமுறையே இந்த அவதூறுகளை வீழ்த்தி விடும். இனிமேலும் பார்ப்பனர்கள் இதர கட்சிகளை நம்பி ஏமாற மாட்டார்கள். பார்ப்பனர்தலித் கூட்டணியானது உ.பி.யில் புதிய மாற்றங்களையும் அனைத்து மக்களுக்கும் நல்வாழ்வையும் கொண்டு வரும்'' என்று முழங்கினார். பின்னர், இதுவே அவரது தேர்தல் பிரச்சாரமாகியது.

சாதி அரசியல் கொடி கட்டப் பறக்கும் உ.பி. மாநிலத்தில், வெறும் தலித்முஸ்லீம் கூட்டணியை வைத்துக் கொண்டு சாதிய ஓட்டு வங்கிகளைத் தகர்த்து அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது என்பதைப் புரிந்து கொண்டதாகவும், எனவேதான் தலித்முஸ்லிம்பார்ப்பனர் மற்றும் பிற சாதியினருடன் புதிய கூட்டணி அமைத்துள்ளதாகவும் தமது பிழைப்புவாதத்துக்கு சித்தாந்த விளக்கமளிக்கிறார் மாயாவதி. இது வெளியே தெரிந்த உண்மை. தமது சாதிய ஆதிக்கத்துக்கும் அதிகாரத்துக்கும் பகுஜன் சமாஜ் கட்சியால் எந்த இடையூறும் ஏற்படாது என்ற உத்தரவாதமும் நம்பிக்கையும் கிடைத்ததால்தான், பார்ப்பனர்களும் மற்றும் பிற ஆதிக்க சாதியினரும் பகுஜன் சமாஜ் கட்சியை தமது சொந்தக் கட்சியாகக் கருதி ஆதரிக்கின்றனர். இது வெளியே தெரியாத உண்மை.

பகுஜன் சமாஜ் கட்சியின் பொறுப்புகளில் உள்ள பார்ப்பனர்களும் ஆதிக்க சாதியினரும் தாங்கள் தீண்டாமையை எதிர்ப்பதாகவோ, தமது சாதியினர் தாழ்த்தப்பட்டோர் மீது ஏவிவரும் அடக்குமுறை சுரண்டலை எதிர்ப்பதாகவோ வாயளவில் கூட வாக்குறுதி அளிக்கவில்லை. ஆனாலும், பார்ப்பனஆதிக்க சாதியினருடன் கூட்டணி கட்டிக் கொண்டு சமூக நீதியை நிலைநாட்டப் போவதாகச் சூளுரைக்கிறார் மாயாவதி.

மாயாவதியின் பார்ப்பன சேவை இன்னும் ஒருபடி முன்னேறி, இப்போது மேல்சாதியினரில் பொருளாதார ரீதியில் ஏழ்மை நிலையில் உள்ளோருக்கும் இடஒதுக்கீடு சலுகை அளிக்கவும் அவர் கிளம்பியுள்ளார். அதேநேரத்தில், ஒடுக்கப்பட்டுள்ள தாழ்த்தப்பட்டோரைக் கை தூக்கி விடுவதற்கு, நிலச் சீர்திருத்தத்தை நடைமுறைப் படுத்துவதைப் பற்றி அவர் வாயே திறக்கவில்லை.

எனவேதான், ""இன்று உ.பி.யில் இரண்டாவது பா.ஜ.க. உருவாகியிருக்கிறது. "உயர் ஜாதியினரை செருப்பால் அடி' என்ற போர்க்குரல் மாறி, ஹிந்துக் கடவுள்களான "விநாயகர், பிரம்மா, விஷ்ணு, சிவன்' இவர்களைத் துதிக்கும் பாடலாக மாறி, உயர் ஜாதியினரின் மனதை குளிர வைத்திருக்கிறது. திராவிடர் கழகம் போல் கசப்பை வளர்த்துவந்த ப.ச.க. (பகுஜன் சமாஜ் கட்சி) "பா.ஜ.க.2' ஆக மாறியுள்ளது, உ.பி. மாநிலத்துக்கும் நாட்டுக்கும் நல்லதே'' என்று ""வருகிறது பா.ஜ.க. ஐஐ'' எனும் தலைப்பில் துக்ளக் ஏட்டில் (16.5.07) எழுதியுள்ளார், இந்துவெறி அறிவுஜீவியான எஸ்.குருமூர்த்தி. மாயாவதி அரசில் பார்ப்பனர்களுக்கு உயர்பதவிகள் அளிக்கப்பட்டுள்ளதைப் பாராட்டியும், இந்த நிலைமை மேலும் தொடர வேண்டும் என்றும் மாயாவதியின் ஆட்சி நீண்டகாலம் நீடிக்கவும் வேண்டி காசியில் வைதீக பார்ப்பன சங்கம் சிறப்பு பூசைகளையும் வழிபாடுகளையும் நடத்தியுள்ளது. இந்துத்துவத்துடன் மென்மையாக அணுகுமுறை கொண்ட நவீன இந்திரா காந்தி என்று மாயாவதிக்குப் புகழாரம் சூட்டுகிறது, இந்துவெறி ஆர்.எஸ்.எஸ்.இன் பத்திரிகையான ""ஆர்கனைசர்''.

முலயம்சிங்கின் ஊழல்ஒடுக்குமுறை ஆட்சியின் மீதான மக்களின் வெறுப்பு; முலயம்சிங்கின் சமாஜ்வாதி கட்சியுடனான பா.ஜ.க.வின் சமரசம் கள்ளக்கூட்டைக் கண்டு பார்ப்பனமேல் சாதியினரின் அதிருப்தி, காங்கிரசு, "இடது'சாரிகள் மற்றும் பிற ஓட்டுக் கட்சிகளின் கையாலாகாத்தனம், வானவில் கூட்டணியை உருவாக்கி அனைத்து சாதிகளும் அரசாங்கப் பதவி, சலுகைசன்மானங்களைப் பொறுக்கித் தின்ன மாயாவதி உருவாக்கிய புதிய ஏற்பாடு — ஆகிய அனைத்தும் சேர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியின் மிகப் பெரிய வெற்றிக்குக் காரணமாகியுள்ளனவே தவிர, இது தலித் அரசியலின் செல்வாக்குவலிமையினால் ஏற்பட்ட விளைவு அல்ல.

பகுஜன் சமாஜ் கட்சியின் வெற்றியை தலித்திய பிழைப்புவாதிகளும் பார்ப்பன பத்திரிகைகளும் பலவாறாக வியந்து போற்றினாலும், இது அரசாங்கப் பதவிகளையும் சன்மானங்களையும் பொறுக்கித் தின்பதற்காக உருவாகியுள்ள சர்வஜன சாதியக் கூட்டணிதான். சமுதாயத்தை சாதி அடிப்படையில் மேலும் உறுதிப்படுத்தி, சாதியக் கலவரங்களுக்கு வித்திடும் பிற்போக்குக் கூட்டணி தான்.

இருப்பினும், உ.பி.யில் பகுஜன் சமாஜ் கட்சியின் வெற்றியானது, சமூக நீதிக்குக் கிடைத்த வெற்றி என்கிறார் பா.ம.க.வின் ராமதாசு. உ.பி. மக்கள் மதவெறிக் கட்சியான பா.ஜ.க.வை நிராகரித்து விட்டனர் என்று கூத்தாடுகிறது, சி.பி.எம். கட்சி. மாயாவதியோ, டெல்லிக்குச் செல்வதற்கான பாதை தெளிவாகிவிட்டது என்கிறார். திருமாவளவனோ, உயர்சாதி இந்துக்கள் மாயாவதியின் தயவை நடுமளவுக்கு, மாயாவதியின் தலைமை வலிமை மிக்கதாக வளர்ந்துள்ளது என்கிறார்.

உண்மைதான்; சாதிவெறியர்களுடன் கூட்டணி கட்டிக் கொண்டு ""சாதிக்காக இனி ரத்தம் சிந்த நாங்கள் தயாராக இல்லை'' என்று முழங்கிய திருமாவுக்கு "தமிழ்ப் பாதுகாப்பு இயக்க'த்தின் தலைமைப் பதவி கிடைத்தது. பார்ப்பனஆதிக்க சாதிகளுடன் கூட்டணி கட்டிக் கொண்டு சர்வஜன கட்சித் தலைவியாகிவிட்ட மாயாவதிக்கு முதல்வர் பதவி கிடைத்திருக்கிறது. இதுதான் "வலிமையான' தலித் தலைமையின் மகிமை!

புரட்சிகர அரசியல்சித்தாந்தம் எதுவுமின்றிச் சீரழியும் இத்தகைய தலித்திய பிழைப்புவாத இயக்கங்களை நிறுவனமயமாக்கிக் கொண்டு ஆதாயமடையும் ஆளும் வர்க்கங்களும் ஆதிக்க சாதிகளும், ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட மனிதனுக்கும் தலைநிமிர்வைத் தந்துள்ளதாக மாயாவதியின் வெற்றியை ஏற்றிப் போற்றுகின்றன. நாமும் மாயாவதியின் வெற்றியைப் பாராட்டத்தான் வேண்டும் தலித்தியம் என்றால் பார்ப்பனஆதிக்க சாதி சேவையுடன் கலந்த கடைந்தெடுத்த பிழைப்புவாதம்தான் என்பதை மீண்டும் நிரூபித்துக் காட்டியதற்காக.

தனபால்

Monday, June 25, 2007

மே நாள் முற்றுகை!

மே நாள் முற்றுகை!
ரிலையன்ஸே வெளியேறு!!


மே நாள். ஆசியாவிலேயே மிகப் பெரிய காய்கனிச் சந்தையான சென்னை கோயம்பேடு வணிக வளாகம். பச்சைப் பசேலென்ற காய் களைத் தம் முதுகில் சுமந்தபடி அந்த மாபெரும் வணிக வளாகத்தின் உயிர்த் துடிப்பாய் இயங்கிக் கொண்டிருந்தனர் தொழிலாளிகள். அவர்களுடைய உரிமைக் குரலாய் செங்கொடிகளையும் பதாகைகளையும் தமது தோளில் சுமந்த வண்ணம் அந்தச் சந்தை முழுவதும் பரவிக் கொண்டிருந்தார்கள் எமது தோழர்கள். பசுமையில் பதிந்த அந்தச் சிவப்புத் தீற்றல்களை, தீக்கொன்றை களாய்த் தீட்டிக் காட்டின விடியலின் இளங்கதிர்கள்.

""சிறுவணிகம் சிறு தொழில்கள் உயர்த்திப்பிடி! சூறையாடும் ரிலையன்ஸைத் துரத்தியடி!'' என்ற முழக் கத்தின் கீழ் ஒரு மாத காலமாக மேற் கொள்ளப்பட்ட பிரச்சார இயக்கத்தின் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டிருந்தது மேநாள் பேரணி. முந்தைய நாளின் இரவு முதலே தமிழகத்தின் பல பகுதி களிலிருந்தும் கோயம்பேட்டில் வந்து குவியத் தொடங்கினார்கள் எமது தோழர்கள். இருள் பிரிந்து மேநாளாக விடியத் தொடங்கியபோது கோயம் பேடு முழுவதும் சிவந்திருந்தது.

காலை 10 மணி. பறை முழங்கத் தொடங்கியது.தொழிலாளர்களும், காய்கனி கொள்முதல் செய்ய வந்தி ருந்த வியாபாரிகளும் இருமருங்கிலும் நூற்றுக் கணக்கில் திரளத் தொடங்கினர் மேநாள் தியாகிகளுக்கும் நக்சல்பாரிப் போராளிகளுக்கும் வீரவணக்கம் செலுத்தும் முழக்கங்களுடன் பேரணியைத் துவக்கி வைத் தார் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தலைவர் தோழர். முகுந்தன்.

""கூடையில் சுமந்து காய்கனி விற்கும் சிறுவணிகர்களை ஆதரி! கோடிகோடியாய்க் கொள்ளை யடிக்கும் ரிலையன்ஸைத் துரத்தி யடி!'' ""ஓட்டுக்கட்சிகள் எல்லோ ரும் ரிலையன்ஸோடு கூட்டணி! சிறுவணிகத்தைக் காப்பாற்ற நக்சல் பாரியே நம் அணி!''.. என்று பன்னாட்டு நிறுவனங்களுக்கும் மறு காலனியாக்கக் கொள்கைகளுக்கும் எதிரான முழக்கங்கள் அந்த வணிக வளாகத்தின் நெடிய சுவர்களில் மோதி எதிரொலிக்க, பேரணி முன்னோக்கி நகர்ந்தது.

செஞ்சட்டை அணிந்த தோழர்கள், அவர்களுடைய உடலின் நீட்சியாய் கரங்களிலிருந்து உயர்ந்த செங்கொடி கள், ம.க.இ.க கலைக்குழுவின் பறை முழக்கம், ஒயிலாட்டம், போர்க்குணம் தெறிக்கும் சிலம்பாட்டம், விண்ணில் படபடத்த முழக்கங்கள் பொறிக்கப் பட்ட செம்பதாகைகள், பேரணியின் துவக்கம் முதல் இறுதி வரை தளராமல் ஒலித்த முழக்கங்கள், ஒரு கையில் தந்தையின் விரலையும் மறுகையில் முழக்க அட்டைகளையும் ஏந்தி நடந்த சிறுவர் சிறுமிகள், கைக்குழந்தைகளு டன் அணிவகுத்து வந்த தாய் மார்கள்.. உடலால் 2000 பேராகவும் உணர்ச்சி யால் ஒரே மனிதனாகவும் ரிலை யன்ஸை முற்றுகையிட விரைந்து கொண்டிருந்தது பேரணி.

கோயம்பேட்டிலிருந்து தென் சென்னையை இணைக்கும் விருகம் பாக்கம் மார்க்கெட் சாலை. அங்கிருக் கும் "ரிலையன்ஸ் ஃபிரஷ்' கடை முற்றுகைப் போராட்டத்தை எதிர்பார் த்து ஏற்கெனவே மூடப்பட்டிருந்தது. கடைக்கு 50 அடி தூரம் முன்னால் சாலையில் தடையரண்களை வைத்து ரிலையன்ஸுக்குக் காவல் நின்றிருந்தது போலீசு. முற்றுகை தொடங்கியது. தார்ச்சாலை முழுவதும் படர்ந்து விரிந்தன செங்கொடிகள். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் முழக்கங்கள் தொடர்ந்தன.

ம.க.இ.க இணைச்செயலர் தோழர் காளியப்பனும், பொதுச்செயலர் தோழர் மருதையனும் போராட்டத்தின் நோக்கத்தை மக்களுக்கு விளக்கு முகமாக உரையாற்றினர். அந்த வட்டாரம் முழுவதும் வீடுவீடாக ஏற்கெனவே பிரச்சாரம் செய்யப் பட்டிருந்ததால், மக்கள் போராட்ட த்தைக் கவனிப்பதில் வழக்கத்தை விட அதிகமாக ஆர்வம் காட்டினர். போக்கு வரத்து நெரிசல் மிக்க அந்தச் சாலை 3 மணி நேரத்திற்கு முற்றிலுமாக மூடப் பட்டதால் ஏற்பட்ட சிரமத்தையும் சகித்துக் கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட தோழர் கள் கைது செய்யப்பட்டு வேன்களில் ஏற்றப்படும்போது அங்கே நேரில் வந்த கோயம்பேடு வணிகர் சங்க நிர்வாகி கள் அமைப்புத் தோழர்களுக்கு நெகிழ்ச்சியுடன் வாழ்த்து கூறினர். ""எங்களுக்கும் இந்த ரிலையன்ஸ் கடைக்கும் இருக்கும் இடைவெளி வெறும் 50 அடி தூரம்தான். சிறு வணிகத்தை விழுங்கும் பன்னாட்டு நிறுவனங்கள் எனும் பேரபாயத்திற்கும் அது குறித்த வணிகர்கள் மற்றும் மக்களின் புரிதலுக்கும் உள்ள இடை வெளிதான் இதனினும் பெரி தாக இருக்கிறது. அந்த இடை வெளியைக் குறைப்பதுதான் தற்போதைய போராட்டத் தின் எமது நோக்கம். ரிலை யன்ஸை வீழ்த்த வேண்டுமென்றால் கோயம்பேடு எழுந்து நிற்க வேண்டும்.'' என்று கூறி அவர் களுடைய வருகைக்கு நன்றி தெரிவித் தார் தோழர் மருதையன்.

கோயம்பேடு சந்தை அதிகாலை 2 மணிக் கெல்லாம் எழுந்து விடுகிறது. உண்மையில் அது உறங்காச் சந்தை. தமிழகத்தின் எட்டில் ஒரு பங்கு மக்கட் தொகை
யைத் தன்னிடம் கவர்ந்து வைத் திருக்கும் சென்னை மாநகரத்தின் பசிக் கும் ருசிக்கும் ஆரோக்கியத்துக்கும் அது பொறுப்பேற்றிருக்கிறது.

ஆந்திரத்திலிருந்து வெங்காயம், பீன்ஸ், பச்சை மிளகாய், மாம்பழம்; கர்நாடகத்திலி ருந்து முட்டைக் கோஸ், பீட்ரூட், காரட், வெங்காயம், சௌசௌ, முள்ளங்கி; மத்தியப் பிரதேசத்திலிருந்தும் ஆக்ராவிலிருந் தும் உருளைக்கிழங்கு; மகாராட்டி ரத்திலிருந்து திராட்சை, வெங்காயம்; நாக்பூரிலிருந்து ஆரஞ்சு; ஊட்டி யிலிருந்து தக்காளி மற்றும் இங்கிலீஷ் காய்கனிகள், திண்டுக்கல்லிலிருந்து அவரை, முருங்கை, சேனை; வேலூரி லிருந்து புடலை; திருச்சி, தூத்துக்குடி, கோவைப் பகுதிகளிலிருந்து வாழை, செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதிகளி லிருந்து பச்சைக் காய்கறிகள், கீரைகள்.. எல்லா மாநிலங்கள் மாவட்டங்களிலி ருந்தும் இரவு முழுதும் வருகின்ற 500 க்கும் மேற்பட்ட லாரிகள் கோயம் பேட்டை காய்களாலும் பழங்களாலும் பூக்களாலும் நிறைக்கின்றன.

காய், கனி, பூச்சந்தை வியாபாரி களின் எண்ணிக்கையோ சுமார் 5000. இந்தப் பசுமைத் தேக்கத்திலிருந்து மாநகரம் முழுவதற்கும் காய்கனி களைச் சுமந்து செல்லும் வாய்க்கால் களும் ஓடைகளும்தான் சிறுவணிகர் கள். உணவு விடுதிகள், மளிகைக் கடை கள், காய்கனிக் கடைகள், தள்ளுவண்டி க்காரர்கள், தலைச்சுமை வியாபாரிகள் என ஆயிரக் கணக்கானோர் காலை 6 மணிக்குள் அனைத்தையும் கொண்டு சென்று விடுகின்றனர். காசு கொடுத்துக் கொள்முதல் செய்ய முடியாமல், சந்தை யில் விழுந்து சிதறும் காய்கனிகளைக் கழுவி விற்கும் ஏழைகள் 500 பேருக் கும் சோறு போடுகிறது கோயம்பேடு.

கோயம்பேட்டின் தொழிலாளர் களும் பெரம்பலூர், திருச்சி, தென் ஆற்காடு, காஞ்சிபுரம், மதுரை எனப் பல மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். கோயம்பேட்டில் மூட்டை தூக்கிச் சம்பாதித்த காசை வைத்து விவசாயக் கடன் அடைக்க வந்த விவசாயிகள், பஞ்சம் பிழைக்க வந்த கூலி விவசாயிகள், பணம் தொலைத்தவர்கள் என உழைக்கத் துணிந்த அனைவருக் கும் கோயம்பேடு ஒரு புகலிடம். இடுப்பில் செருகிய ஒரு கொக்கியைத் தவிர வேறு கருவிகள் எதையும் எடுக்காத அந்தத் தொழிலாளிகள், நான்கு வாழைத்தார்களை அனாயாச மாகத் தூக்கிச் செல்கிறார்கள். இரண்டு வெங்காய மூட்டைகளை முதுகில் சுமந்தபடியே லாரியில் ஏறி, கலை நுட்பம் ததும்பும் ஒரு அசைவில் ஒரு மூட்டையை மட்டும் லாரிக்குள் உதறு கிறார்கள். தேங்காய்கள் இறக்கப்படும் லாரிகளை நெருங்கக் கூட முடியாமல் அதிலிருந்து பறக்கும் தும்புகள் நம் கண்ணை மறைக்கின்றன. ஆனால் லாரியில் உள்ள தேங்காய்களோ அதனினும் வேகமாக நம் கண்களி லிருந்து மறைகின்றன.

ஒரு மனிதன் சுமக்கக் கூடிய சுமையின் அளவு, சுமையைத் தாங்கி நடக்கும் உடலின் கோணம், வேகம், துடிப்பு அனைத்துக்கும், மனித உழைப்பின் பிரமிக்கத் தக்க அழகுக்கும் அன்றாடம் அங்கே புதிய இலக்கண ங்கள் படைக்கப்படுகின்றன. தாயுடன் அமர்ந்து பூத் தொடுக்கப் பழகும் 5 வயதுச் சிறுமி முதல் இட்லி வியாபாரம் செய்யும் 85 வயதுக் கிழவி வரை, மூட்டை தூக்கப் பயிலும் 15 வயதுச் சிறுவன் முதல் 75 வயதிலும் லோடு இறக்கும் முதியவர் வரை மனித உழைப்பின் மறக்கவொண்ணாத பதிவு கள் அனைத்துக்கும் அது இருப்பிடம்.

எந்த ஒரு மையப்படுத்தப் பட்ட திட்டத்தின் கீழும் இந்தச் சந்தை தோன்றி வளரவில்லை. சங்கு பிடிக் காமலேயே துவங்கும் அந்த மனித ஆலையின் சுறுசுறுப்பும், மாநகரத்தின் வேகம் அனைத்துக்கும் கட்டியம் கூறும் அதன் அதிவேக இயக்கமும் கூட அது தன் இயல்பில் வரித்துக் கொண்டது தான். பரிணாமத்தில் வளர்ந்த மனித உடலின் உறுப்புக்கள் போல, சென்னை மாநகரத்தின் ஒரு உறுப்பாகத் தானே தோன்றி வளர்ந்த சந்தையே கோயம்பேடு.

அந்த உறுப்பிற்குள் ரிலையன்ஸ் ஃபிரஷ் என்ற கிருமி நுழைந்ததால் எற்படக் கூடிய விளைவுகளை வணிகர்களோ, தொழிலாளர்களோ துவக்கத்தில் உணரவில்லை. நக ரெங்கும் தொடங்கப்பட்ட ரிலையன்ஸ் கடைகளால் சில்லறை வணிகர்களின் வரத்து கோயம்பேட்டில் குறையத் தொடங்கியது. விவசாயிகளிடமிருந்து ரிலையன்ஸ் நேரடியாகக் கொள்முதல் செய்யத் தொடங்கியதால் கோயம் பேட்டுக்கு வரும் லாரிகளின் எண் ணிக்கை குறையத் தொடங்கியது. இந்த வீழ்ச்சி சுமார் 20,30 விழுக்காட்டை எட்டவே விழித்துக் கொண்ட வணிகர்கள் மார்ச் 23ம் தேதியன்று கடையடைப்பும் உண்ணாவிரதமும் நடத்தினார்கள். பகத்சிங் என்ற மாபெ ரும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி யின் நினைவு நாளில்தான் தங்களது போராட்டத்தை நடத்துகிறோம் என்பதை அவர்கள் அறிந்திருக்க வில்லை.

சிறுவணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களையும் தரகு முதலாளி களையும் அனு மதிக்கும் இந்தக் கொள்கை மறுகாலனியாக்கம் எனும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பின் ஒரு அங்கம்தான் என்பதை யும் கூட அவர்கள் புரிந்திரு க்கவில்லை. இந்தச் சதித் திட்டத்தில் எல்லா ஓட்டுக் கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்கி றார்கள் என்ற கசப்பான உண்மையையும் அவர்கள் உணர்ந்திருக்கவில்லை. எனவே கோயம்பேடு சந்தையின் வணிகர்களை யும் தொழிலாளர்களையும் தட்டி யெழுப்பும் பிரச்சாரத்துடன் எமது மே நாள் இயக்கம் துவங்கியது.

மார்ச் 23ம் தேதியன்று தமிழகம் தழுவிய அளவில் காய்கனி வணிகர்கள் நடத்திய கடையடைப்பிற்கு 10 நாட்கள் முன்னதாகவே சென்னை நகரில் எமது பிரச்சாரம் தொடங்கி விட்டது. "சிறு வணிகத்தை விழுங்க வரும் ரிலை யன்ஸ் வால்மார்ட்டே வெளியேறு' என்ற தலைப்பில் அச்சி டப்பட்ட சிறு வெளியீடு மிகக் குறுகிய காலத் திலேயே 5000 பிரதிகள் விற்றுத் தீர்ந்தது. கோயம்பேடு சந்தைக்குள் கலைக்குழு தொடர்ந்து நடத்திய பிரச்சாரம் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

கடை யடைப்புக்கு ஆதரவாக மார்ச் 21ம் தேதியன்று ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு ஆகிய அமைப்புகளின் சார்பில் நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் சிறு வணிகர்களும் கலந்து கொண்டனர். சிறுவணிகர் சங்கத் தலைவர்களும், விடுதலைச் சிறுத்தை களின் தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் பொதுக்கூட்டத்தில் ரிலையன்சுக்கு எதிராக உரையாற்றினர்.

நிலைமையைப் புரிந்து கொண்ட ஓட்டுக் கட்சிகள் விழித்துக் கொண்டன. மக்களுக்கு எதிரான கொள்கைகளை அமல்படுத்தும் மந்திரி பதவியில் மகனை அமர்த்திவிட்டு, மக்கள் பிரச் சினைகளுக்காகக் குரல் கொடுக்கும் பொறுப்பைத் தான் ஏற்றுக்கொண்டி ருக்கும் பாமக தலைவர் ராமதாசு ""இன்னும் 10 நாட்களுக்குள் ரிலை யன்ஸ் மூட்டையைக் கட்டவில்லை என்றால் நடப்பதே வேறு'' என்று எச்சரிக்கை விடுத்தார். 23ம் தேதி கோயம்பேடு வணிகர்கள் நடத்திய உண்ணாவிரதத்தில் திமுக காங்கிரசு தவிர்த்த சர்வகட்சிப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு "ஆதரவு' தெரி வித்தனர்.சில்லறை வணிகத்தில் வால் மார்ட் நுழைவதை கிழக்கிந்தியக் கம்பெனியுடன் ஒப்பிட்டு அதிபுரட்சி கரமாகச் சண்டமாருதம் செய்தார் ஜெயலலிதா.

ஆனால், அடுத்த சில நாட் களுக்குள்ளாகவே எல்லா ஓட்டுக் கட்சிகளின் யோக்கியதையும் அழுகி நாறத் தொடங்கிவிட்டது. ரிலையன்ஸ் கடைக்குச் செல்லும் வாடிக்கையாளர் களின் காலில் விழுந்து "ரிலையன்சு க்குப் போகாதீர்கள்' என்று மன்றாடினர் பாமக மகளிர் அணியினர். விடுதலைச் சிறுத்தைகளின் சட்டமன்ற உறுப்பினர் களோ ரிலையன்சை ஆதரித்து சட்ட சபையில் உறுமினர். மே.வங்கத்தில் ரிலையன்சுக்கு சிவப்புக் கம்பளம் விரித்துக் கொண்டே, இங்கே அதனை எதிர்ப்பதாகப் பம்மாத்து காட்டிய மார்க்சிஸ்டுகள் முடிந்தவரை அடக்கி வாசித்தனர். ஜெயலலிதாவின் சில்லறை அறிக்கைகளுக்கெல்லாம் முழ நீள வியாக்கியானத்தைப் பதிலாகத் தரும் கருணாநிதி இந்தச் சில்லறை வணிகப் பிரச்சினையில் மட்டும் வாயே திறக்க வில்லை.

தனியார்மய, தாராளமயக் கொள் கைகள் அமல்படுத்தப் படும்போதெல் லாம் எதிர்த்துப் போராடும் மக்களுடன் சேர்ந்துகொண்டு சவடால் அடிப்பது, பிறகு நீண்டதொரு கள்ள மவுனம் சாதிப்பது, அடுத்த தேர்தல் வரை காத்திருந்து மக்களின் அதிருப்தியை வாக்குகளாக அறுவடை செய்து கொள்வது என்ற தந்திரத்தைக் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வெற்றி கரமாகப் பின்பற்றி வரும் ஓட்டுக் கட்சிகள் இந்தப் பிரச்சினையிலும் அதையேதான் செய்தன.

ரிலையன்ஸோ தன் னுடைய பிரச்சாரத்தை ஊடகங்களின் வழியே மிகவும் தந்திரமாக முடுக்கி விட்டுக் கொண்டிருந்தது. ""சில்லறை வணி கத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைவதால் வேலைவாய்ப்பு கள் பெருகும், விவசாயம் செழிக்கும்'' என்று அட்டைப் படக் கட்டுரை வெளியிட்டது இந்தியா டுடே. ரிலையன்ஸ் அதிகாரிகளையும் கோயம் பேடு வணிகர்களையும் சந்திக்க வைத்து வணிகர் களின் ஆதாரமற்ற அச்சங்களுக்கு ஆணித்தரமான பதில் களை ரிலையன்ஸ் அதிகாரிகள் வழங்குவது போல கட்டுரையைத் தொகுத்து வெளி யிட்டது நாணயம் விகடன். வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையனின் கேள்விகளுக்கு ரிலையன்ஸ் திருப்தி கரமாகப் பதிலளிப்பது போல கட்டுரை வெளியிட்டது குங்குமம். ரிலையன்ஸ் ஆதரவுப் பிரச்சாரம் ஊடகங்களில் தீவிரமாக நடந்து கொண்டிருக்க ரிலையன்ஸ் கடைகளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டிருந்தது.

கடந்த பத்தாண்டுகளில் தனியார் மய தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராக ஏராளமான மக்கள் போராட் டங்கள் நடந்திருந்த போதிலும், இந்தக் கொள்கைகளெல்லாம் எதிர்ப்பே இல்லாமல் அமலாகிக் கொண்டிருப் பதைப் போன்ற தோற்றம் திட்டமிட்டே உருவாக்கப் பட்டிருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் ஏகபோக முத லாளிகளுடன் அரசும், அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் இணைந்து கொண்டு இத்தகையதொரு தோற்றத் தைத் திட்டமிட்டே உருவாக்கியிருக் கின்றன. இதன் விளைவாக எதிர்த் துப் போராடும் மக்கள் வெகு சீக்கிர மாகவே சோர்வுக்கும் அவநம்பிக்கைக் கும் கையறு நிலைக்கும் ஆளாவதும் நடக்கிறது.

அவரவர் கோரிக்கைக்கு அவரவர் போராடுவது, அடுத்தவன் பிரச்சினை யைக் கண்டுகொள்ளாமலிருப்பது, அனைவரது பிரச்சினைகளுக்கும் காரணமான பொது எதிரியை அடை யாளம் காணத் தவறுவது போன்ற குறைபாடுகள் எதிரிகளின் வெற்றியை எளிதாக்கி வந்திருக்கின்றன. எதிரியின் கருத்துக் களில் மக்கள் மூழ்கடிக்கப் பட்டிருக் கின்றனர். அவற்றில் ஆழ்ந்து தனக்கெதிரான கருத்தைத் தன் வாயா லேயே பேசும் நிலைக்கு மக்கள் ஆளாக்கப் பட்டிருக்கின்றனர். இந் நிலையை மாற்ற வேண்டுமானால் மக்கள் மத்தியிலான கருத்துப் பிரச் சாரம் மிகவும் அவசியம் என்பதால் உடனே எமது பிரச்சாரத்தைத் துவங்கினோம்.

1,50,000 பிரசுரங்கள், ஆயிரக் கணக்கான சுவரொட்டிகள், சுவ ரெழுத்துக்கள், 25,000 சிறு வெளியீடு களுடன் தமிழகம் தழுவிய அளவில் பிரச்சாரம் செய்வது; சிறுவணிகர்கள், ரிலையன்ஸ் கடைகளின் சுற்று வட்டார த்தில் வாழும் மக்கள், அதன் வாடிக்கை யாளர்களாக மாறிக்கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கத்தினர் ஆகியோர் மத்தி யில் வீடு வீடாகப் பிரச்சார இயக்கம் மேற்கொள்வது; அதன் இறுதியில் மேநாளன்று முற்றுகைப் போராட்டம் நடத்துவது என்று திட்டமிட்டோம். இப்பிரச்சாரம் தமிழகம் தழுவிய அளவில் நடைபெற்றதெனினும் போராட்டப் பகுதியான சென்னையில் கூடுதல் கவனம் கொடுத்துப் பிரச்சாரம் செய்தோம். பரந்து விரிந்த சென்னை முழுதும் மிகக் குறுகிய காலத்தில் பிரச்சாரம் செய்ய வேண்டியிருந்ததால் தோழர்கள் பலர் முழுநேர மாகப் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டனர்.

சென்னையின் காய் கனிச் சந்தைகள் அனைத்தை யும் கண்ணீர்ச் சந்தைகளாக மாற்றியிருக்கிறான் அம் பா னி.

சென்னை நகரில் காய் கனிச் சந்தைகள் இருக்கு மிடங்களையும் தனியார் காய்கனி அங்காடிகள் இருக்கு மிடங்களையும் குறி வைத்துத்தான் ரிலையன் ஸின் எல்லாக் கடைகளுமே திறக்கப் பட்டிருக்கின்றன. மூன்று நான்கு மடங்கு வாடகையும் பத்து மடங்கிற்கு மேல் முன்பணமும் கொடுத்து இத்தகைய இடங்களில் கடைகள் பிடிக்கப் பட்டிருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட காய்க்கு சென்னை முழுவதும் ஒரே விலையை ரிலை யன்ஸ் நிர்ணயிப்பதில்லை. அருகாமை யில் உள்ள காய்கனிச் சந்தையில் விலை விசாரித்து, வேண்டுமென்றே அதைக் காட்டிலும் 10,20 காசுகள் குறைவாக விலை நிர்ணயிக்கப்படுகிறது.
போரூர், பாண்டி பஜார், எல்டாம்ஸ் சாலை, புரசைவாக்கம் போன்ற பகுதி களின் காய்கனிச் சந்தைகள் ஒரே மாதத்தில் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கின்றன. சாப்பாட்டை இரண்டு வேளையாகக் குறைத்துக் கொண்டு விட்டோம் என்றார் ஒரு பாண்டி பஜார் வணிகர்; இன்னொரு குடும்பம் வாடகை கொடுக்க முடி யாமல் தெருவிலேயே குடியேறி விட்டது; மீட்டர் வட்டிகட்டமுடியா மல், கந்துவட்டிக் காரனின் வசவையும் கேட்க முடியாமல் இந்த வயதுக்கு மேல் எந்த வேலைக்குப் போவது என்று தவிக்கிறார்கள் எல்டாம்ஸ் ரோடு மார்க்கெட்டின் பெண்கள்.

""விலையில பெரிய வித்தியாசம் கிடையாது. அவன் ஏசியில வச்சிருக் கான். நாங்க தூசியில வச்சிருக்கோம். அதான் வித்தியாசம்'' ""பவுடர் போட்ட பொண்ணைப் பாத்து மயங்குற காலம் தான இது'' ""அவன்கிட்ட பணம் இருக்குது, கடை போட்டு உக்காந் திருக்கான். நம்ம கிட்ட பணமில்ல, ரோட்டுல இருக்குறோம். இடம் நம்மளுதில்ல, சரக்கு நம்மளுதில்ல, கடனும் பட்டினியும்தான் நம்மளுது'' ""புருசன் குடிகாரன், வருமானமில்ல, இப்ப வியாபாரமுமில்ல, எங்க போயி வாழறதுன்னே தெரியல'' ""எத்தனை வருசமா பழகியிருக்குறோம், உங்க வீட்டு நல்லது கெட்டதுக்கு வந்திருக்கு றோம். பாக்கி வைப்பீங்க. கொடுத்தா உண்டு இல்லன்னா இல்ல. அம்பானி கிட்ட கடன் சொல்லுவியா'' ""நாம சனங்கள எப்பிடிக் கேக்க முடியும்? நம்மை எதிர்பார்த்து அவுங்க வாழல. நாமதான் அவுங்கள எதிர்பார்த்து வாழறோம்''.. ஏழை வியாபாரிகளின் கோபங்களும் குமுறல்களும் ஒவ் வொரு சந்தையிலும் விதம் விதமாக வெடித்துத் தெறித்தன.

தங்கள் துயரங்களைக் கேட்கவும் தங்களுக்காகப் பேசவும்கூட ஒரு அமைப்பு இருக்கிறதா என்று அதி சயித்து நெகிழ்ந்து போனார்கள் காய்கனிச் சந்தைகளின் பெண்கள். சமூகத்துயரத்தைப் பேச வந்த நம்மிடம் உழைக்கும் மக்களுக்கே உரிய வெகு ளித்தன்மையுடன் சொந்தத் துயரையும் கலந்து பேசினார்கள். உணவைப் பகிர்ந்து உபசரித்தார்கள். ""அரசாங்கமே அவன் பக்கம் இருக்கும்போது உங்களால என்னப்பா செய்ய முடியும்'' என்று நம்மீது இரக்கப் பட்டார்கள். ""அரசாங்கம் அவன் பக்கம்தான் இருக் கிறது, மக்களை நம் பக்கம் கொண்டு வருவதற் குத்தான் நாங்கள் வேலை செய் கிறோம்'' என்று அவர் களுக்குப் புரிய வைத்தோம்.

உற்பத்தி செய்கின்ற விவ சாயியையும், விற்பனைக்குக் கொண்டு செல்லும் வியா பாரியையும், விலைக்கு வாங்கும் மக்களையும் இணைக்கின்ற பொது முழக்கம் ஒன்று இல்லாமல் வியாபாரிகளின் கோபமும், விவசாயிகளின் ஏமாளித் தனமும், வாடிக்கையாள னின் பாமரத்தனமும் தனித் தனியாக அம்பானியிடம் சரணடைந்து கொண்ட ருந்தன.

தன் வீட்டு வாயிலுக்கே வந்து காய்களையும் கீரைக ளையும் வழங்கிய கூடைக் கா ரப் பெண்ணின் நெடுநாள் பழ க்கம்,""அம்மா கீரைம்மா..'' என்று ஒலிக்கும் அந்தக் குரலில் இழைந்து வழியும் சோகம், காய்கனிகள் வழி யாகவே நோய்நொடிகளுக் குக் கைவைத்தியம் கூறும் அந்தப் பெண்ணின் நேசம்... அனைத்தையும் ஒரே கணத் தில் உதறிவிட்டு, தன்னை நோக்கி வருமாறு வாடிக்கையாள னுக்கு அம்பானி போடும் சொக்குப் பொடி என்ன என்று தெரிந்து கொள்ளாதவரை, ரிலையன்ஸுக்கு மயங்கும் மக்களைத் தெளிய வைக்க இயலாதென்பதால் ஆங்காங்கே ரிலையன்ஸ் கடைகளுக்குள்ளேயும் நுழைந்தோம்.
ரிலையன்ஸ் ஃபிரஷ் கடையின் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தால் சில்லென்ற குளிர் காற்று முகத்தில் அடிக்கிறது. கோயம்பேடு சந்தையில் காய்கனிகளிலிருந்து வீசும் நறுமணம் அவற்றைப் புதியவை என்று அறிமுகம் செய்கிறது. இங்கோ வாடிக்கையா ளரின் தோலுக்குப் புத்துணர்ச்சி யூட்டுவதன் மூலம் அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் காய்கனிகள் "ஃபிரஷ் ஷானவை' என்று நம்ப வைக்கிறான் அம்பானி.

காய் கனிகளின் மீது மட்டும் வீசும் விளக்கொளி, அவ்வப்போது அவற்றை அடுக்கி வைக்கும் பணி யாளர்கள்; வெட்டி உரையிலிட்டுச் சமையலுக்குத் தயாராக வைக்கப்பட்டி ருக்கும் காய்கள்; காபூல் மாதுளை, அமெரிக்க இனிப்புச் சோளம், ஸ்ட்ரா பெர்ரி பழங்கள், ஆஸ்திரேலிய திராட்சை என்று சர்வதேசச் சுவைக்கு அலையும் நாக்குகளைச் சுண்டியிழுக்கும் தூண் டில்கள்; சமையலறை உபகரணங்கள், பாத்திரங்கள், விதம்விதமான துடைப்பங்கள்! மகாராட்டி ரத்தின் பண்ணையில் விளைந்து கிண்டியில் பாக்கிங் செய்யப்பட்ட ரிலையன்ஸ் பொன்னி, ரிலையன்ஸ் பாசுமதி, துவரை, உளுந்து, பயறு முதல் அரிசி வரை அனைத்தும் ரிலையன்ஸ் பிராண்டுகள்.

அந்தக் கடையில் செல்போன் ரீசார்ஜ் கார்டு வாங்கினால் தள்ளுபடி, தொடர்ச்சியாக அங்கே வாங்குபவர் களுக்கு இலவசமாக ரிலையன்ஸ் வாகன இன்சூரன்சு, கோக், பெப்சி, சாக்லெட்டுகள் போன்ற அற்பத் தனமான இலவசங்கள், கடைக்கு உள்ளே நுழையும் ஒவ்வொரு வாடிக் கையாளரையும் ரிலையன்ஸ் கடையின் நிரந்தர உறுப்பினராக மாற்றுவதற்கான விண்ணப்பப் படிவத்துடன் இனிமை யாக நச்சரிக்கும் விற்பனைப் பெண்கள், ஒரு கடையில் ஒரு கிலோ தக்காளி வாங்கினால் உடனே மொத்தக் கையிருப்பில் ஒரு கிலோ குறைந்து விட்டதைக் காட்டும் அளவுக்கு மையப் படுத்தப்பட்ட கணினி நிர்வாகம், பொருட்களைக் கொண்டு செல்லும் தள்ளுவண்டிகள், நடுத்தர வர்க்கத்தின் அசட்டு அதிகாரத்துக்குப் பணிவுடன் பதிலளிக்கும் சீருடைப் பணியாளர்கள், இவற்றில் மதிமயங்கி ஒரேயொரு 10 ரூபாய் அவல் பாக்கெட்டைக் கையில் வைத்துக் கொண்டு பில் போடு வதற்காக வரிசையில் காத்து நிற்கும் அறிவாளிகள்.. இதுதான் ரிலையன்ஸ்.

ரிலையன்ஸ் கடைகளின் சுற்று வட்டாரத்தில் வீடுவீடாப் பிரச்சாரம் செய்தபோது,""அப்படியா, அங்கே வாங்கக் கூடாதா?'' என்று வெகுளித் தனமாகப் பலர் கேள்வி எழுப்பினார் கள். அப்படி ஒரு கருத்தையே பெரும் பாலான மக்கள் அப்போதுதான் முதன் முறையாகக் கேள்விப் படுகிறார் கள். ""உங்களுடைய காசு நம்முடைய மக்களை வாழவைப்பதற்குப் பயன்பட வேண்டும். அவர்களை அழிக்கப் பயன் படக்கூடாது'' என்ற ஒரேயொரு நியாயமே பல பேருக்கு உண்மையைப் புரிய வைக்கப் போதுமானதாக இருந் தது.

பிரச்சினையை ஆழ மாகப் புரிந்து கொள்ளாத போதிலும் ""அந்தக் கடைக் குப் போகும் பாவத்தை இன் னொரு முறை செய்ய மாட்டேன்'' என்று நிலப் பிரபுத்துவ இரக்கவுணர்ச்சி யுடன் சிலர் வருத்தம் தெரி வித்தார்கள். மலிவு என்று வாதாடியவர்கள், ""அது ஏக போக முதலாளிகளின் தந்திரம்'' என்பதை கோக், பெப்சி உதாரணங்களி லிருந்து கூறியவுடன் புரிந்து கொண்டார்கள். ""ஏன் அவன் மலிவாகத் தருகிறான் வாங் கினால் என்ன?'' என்று இரக்கமின்றி வாதாடியவர்களிடம் ""உன்னை வேலை நீக்கம் செய்து விட்டு, உன்னை விட மலிவாக பாதி சம்பளத்துக்கு ஆள் கிடைத்தால் வைத்துக் கொள்ளலாமா, அதை ஒத்துக் கொள்வாயா?'' என்று திருப்பிக் கேட்டோம். வாயடைத்துக் கொண்டார்கள்.

பார்ப்பனர்கள் மிகுதியாக வாழும் மடிப்பாக்கம், பழவந்தாங்கல் பகுதிகளில்தான் ரிலையன்ஸ் ஆதரவு குரூரமாக வெளிப்பட்டது. பிரசுரத்தை வாங்கினால்கூடத் தீட்டுப் பட்டுவிடும் என்பதைப் போல விரட்டினார்கள். நாம் பேசத் துவங்குவதற்கு முன்னரே "எல்லாம் எங்களுக்குத் தெரியும்' என்று கதவைச் சாத்தினார்கள். அந்தப் பகுதிகளில் கடை திறப்பதற்கு முன் வீடு வீடாகச் சென்று சந்தனமும் சர்க்கரையும் கொடுத்து அவர்களை வரவேற்றிருக்கிறது ரிலையன்ஸ் நிர்வாகம். வர்க்க வெறுப்பும் சாதிய வெறுப்பும் ஒருங்கே வெளிப்பட்ட இந்தத் தீவுகளைத் தவிர வேறெங்கும் இத்தகைய இரக்கமின்மையை நாம் எதிர்கொள்ளவில்லை.

""ரிலையன்ஸுல ஷாப்பிங் பண்ணப் போனேன்'' என்று பீற்றிக் கொள்ளும் அற்பத்தனம், கண்ணாடிக் கதவையும் ஏ.சி அறையையும் தரத்தின் அளவுகோல்களாகக் கருதி மயங்கும் மடமை, காசு பண உறவைத் தவிர வேறு எதையும் ஒரு பொருட்டாகக் கருதத் தேவையில்லை என்று மறு காலனியாக்கம் பயிற்றுவித்திருக்கும் பண்பாட்டுத் தடித்தனம், ""அதற்கு நான் என்ன செய்ய முடியும்'' என்று தோளைக் குலுக்கும் ஐ.டி வர்க்கத்தின் சமூக உணர்வற்ற திமிர்த்தனம், இதனை முன்னேற்றம் என்று கூறி வாதாடும் அரசியல் தற்குறிகளின் ஆணவம்.... மக்களிடம் நிலவும் இத்தகைய போக்கு கள்தான் ரிலையன்ஸைப் பாதுகாக்கும் கவசங்களாக இயங்குகின்றன. இந்தக் கவசத்தைப் பிளக்காமல் இன்று கடை விரித்திருக்கும் ரிலையன்ஸையோ, நாளை வரவிருக்கும் வால் மார்ட்டையோ நாம் முறியடிக்க முடியாது.

மக்களிடம் நிலவும் இந்தக் கருத்துக்கள் எல்லாம் அம்பானி உருவாக்கிய கருத்துகள் அல்ல. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தனியார் மய, தாராளமயக் கொள்கைகளைத் திணித்து வரும் ஆளும் வர்க்கங்களும் அவர்கள் பிடியில் உள்ள ஊடகங் களும் உருவாக்கிப் பரப்பியுள்ள கருத்துகள். இந்த மறுகாலனியாக்கக் கொள்கைகளை மாறி மாறி அமல் படுத்தும் ஓட்டுக்கட்சிகளால் உலவ விடப்பட்டுள்ள கருத்துகள். "ரிலை யன்ஸே வெளியேறு' என்ற குரல் வணிகர்களின் குரலாக மட்டும் இருக்கு மானால், ஏகபோக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் குரலுக்குள் ஒளிந்து கொண்டு, "மலிவு, தரம், இலவசம்' என்று மக்களை மயக்க முடியும். அதுவே மறுகாலனியாக்கத் துக்கு எதிரான முழக்கமாக மாறும் போதுதான் அது மக்கள் முழக்கமாக மாறமுடியும்.

இந்தப் பிரச்சார இயக்கத்தின்போது நாம் சந்தித்த சிறு வணிகர்கள் அனைவரிடமும் கோபத்தைக் கண்டோம். ஆனால் அந்தக் கோபத்துக்கு இலக்கு இல்லை. அதற்கு இலக்காக வேண்டிய ஓட்டுக்கட்சிகள் வணிகர்களின் போராட்ட மேடையில் கொலுவிருந் தார்கள். அவர்களுடைய ஆர வாரப் பேச்செல்லாம் பொய் என்று தெரிந்திருந்தும் வணிகர் களும் தொழிலாளர் களும் அவற்றைக் கேட்டு ஆறுதல் அடைந்து கொண் டார்கள். அடுத்த தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம் என்று தம்மைத்தாமே சமாதானப் படுத்திக் கொண்டார்கள்.

வணிகர்கள் மட்டுமல்ல, வலிமை யான தொழிற்சங்கங்களைக் கொண்ட தொலைபேசி, வங்கி, பொதுத்துறை ஊழியர்களும் கடந்த பத்து ஆண்டுகளில் இதைத்தான் செய்திருக் கிறார்கள். இவையெதுவும் எந்தத் துறையையும் காப்பாற்றவில்லை. இந்த வழிமுறைகளின் தோல்வி கடந்த பத்து ஆண்டுகளில் பலமுறை நிரூபிக்கப் பட்டிருக்கிறது. ஓட்டுக் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட ஒரு மக்கள் இயக்கத் தைக் கட்டியமைப்பது ஒன்றுதான் மறுகாலனியாக்க நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவதற்கான ஒரே வழி.

தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் மக்கள் தற்கொலையை நோக்கித்தான் தள்ளப்படுவார்கள். நாங்கள் சந்தித்த காய்கறிச் சந்தைகளில் வியாபாரம் பாதியாகக் குறைந்திருந்தது. போரூர் காய்கறிச் சந்தைக்கு நாளொன்றுக்கு 3 வேன்கள் காய்கனி வருவதாகச் சொன் னார்கள் வணிகர்கள். அருகிலுள்ள ரிலையன்ஸ் கடைக்கும் நாளொன் றுக்கு 3 வேன் வருகிறது. பிழைப்பதற்கு வேறு தொழில் தேடு வதைத் தவிர அந்த ஏழை வியாபாரிகளுக்கு வேறு வழியில்லை. அடுத்த தேர்தல் எனும் கானல் நீரை நம்பி அவர்கள் காத்திருக்க முடியாது.

கடன், பட்டினி, மரணம்.. ஒரு இலட்சம் விவசாயிகளைத் தற்கொலைக் குத் தள்ளிய விஷச்சுழல் இதுதான். ஒரு இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட பிறகும் மாகாராட்டிர விவசாயிகளின் பருத்திக்கு நியாய விலை கிடைத்து விடவில்லை. ஆனால் துப்பாக்கித் தோட்டாக்களுக்குப் பலி யான கலிங்கநகரின் 13 பழங்குடி மக்கள், தங்களுடைய நிலத்தில் கால் வைக்க விடாமல் டாடாவைத் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்; போலீசையும் மார்க்சிஸ்டுகளின் குண்டர் படையை யும் துணிவுடன் எதிர்கொண்ட நந்திக் கிராமத்து மக்கள் சிறப்புப் பொருளா தார மண்டலத்தை வெளியேற்றி இருக்கிறார்கள்; சிறப்புப் பொருளாதார மண்டலங்களை எதிர்த்துப் போராடும் மக்கள் அனைவருக்கும் நம்பிக்கை ஊட்டியிருக்கிறார்கள்.

கோயம்பேட்டின் சுமை தூக்கும் தொழிலாளிகளும், தரைக்கடை தள்ளு வண்டி வியாபாரிகளும், மளிகைக் கடையிலேயே மக்கி மடியும் அண்ணாச்சிகளும் அஞ்சுவதற்கு ஏது மில்லை. எனினும், அன்று எமது மே தினப் பேரணியை அருகில் நின்று ஆதரித்த அவர்கள் அனைவரும் அப்படியே அணிதிரண்டு வந்துவிட வில்லை. அவ்வாறு அந்தக் கணமே வந்து விடுவார்கள் என்று நாம் எதிர்பார்க்கவுமில்லை.

அவர்கள் அருகில்தான் இருந்தார்கள்; எனினும் சற்றுத் தொலைவில் இருந்தார்கள். அன்று முற்றுகைக்கு உள்ளான ரிலையன்ஸ் கடையும் கூட எமக்கு அருகில்தான் இருந்தது; எனினும் சற்றுத் தொலைவில் இருந்தது. அந்த இடைவெளியை நிரப்புவதற்கு வணிகர்களும் தொழிலாளர்களும் வருவார்கள். அதுவரை எமது முற்றுகையும் தொடரும்.
· பு.க செய்தியாளர்கள், சென்னை

Sunday, June 24, 2007

பாலஸ்தீனத்தின் Hebron தெருவழி.

பாலஸ்தீனத்தின் Hebron தெருவழி.

ள்ளிச் சிறார்கள் நாளாந்தம் பாடசாலை செல்லும் வழி


இராணுவ சோதனைச்சாவடிகளில் வழிமறிக்கப்படும் இவர்கள் வீட்டிற்கு திரும்பிச் செல்லுமாறு துப்பாக்கி முனையில் விரட்டப்படுகிறார்கள்.




கட்டளைக்கு கீழ்ப்படிய மறுக்கும் இச்சிறார்கள் சவாலுடன் தடையை மீறி செல்கிறார்கள்.





அவர்கள் முயற்சியை நெஞ்சை நோக்கி அழுத்தும் துப்பாக்கிக் குழல்கள் தடுக்கின்ற போது தெருவிலேயே பாடம் நடாத்தப்படுகின்றது.




ஆண் சிறார்கள் ஆக்ரோசமாக சற்றுக் கடுமையாக போராட முனையும் வேளை துப்பாக்கிகள் சீறுகின்றன. பலர் காயப்படுகிறார்கள். பலர் கைது செய்யப்படுகிறார்கள் கைது செய்யப்பட்ட வேளையிலும் கூட இச் சின்னஞ்சிறார்களின் கண்களில் மிளிரும் சுயகவுரவத்திற்கான அவர்களின் போராட்டக் கனலைப் பாருங்கள்.





பருத்தி வீரன் பொறுக்கித்தனத்தின் இரசனையா யதார்த்தத்தின் ருசி?

பருத்தி வீரன்

பொறுக்கித்தனத்தின் இரசனையா

யதார்த்தத்தின் ருசி?

சூலில் வெற்றியடைந்திருக்கும் பருத்தி வீரனை மண்வாசனை கமழும் கதை, அசலான பாத்திரங்கள், தெற்கத்தியப் பண்பாட்டைப் படம் பிடித்துக் காட்டும் காட்சிகள் என எல்லா அம்சங்களிலும் போற்றும் இரசிகர்கள் திரைப்படத்தின் இறுதியில் வரும் கற்பழிப்புக் காட்சி குறித்து மட்டும் வருத்தப்படுகிறார்கள்.

பின்கழுத்தில் கொக்கி குத்தியதால் இரத்தம் சிந்திச் சாகும் தறுவாயிலுள்ள முத்தழகை லாரி ஓட்டுநர்கள் கதறக் கதறக் கற்பழிக்கிறார்கள். எல்லாம் முடிந்தபிறகு வரும் பருத்தி வீரனிடம் இதுவரையிலும் அவன் செய்திருக்கும் பாவம்தான் தன் தலைமீது இறங்கியிருக்கிறது என்று கதறும் முத்தழகு, இந்த அசிங்கம் ஊருக்குத் தெரியாதவாறு தன்னைக் காணாப்பொணமாக்குமாறு கேட்டுக் கொண்டு கண்ணை மூடுகிறாள். நிலைகுலைந்த பருத்திவீரனும் அவளைக் கண்டதுண்டமாக வெட்டி கவுரவத்தைக் காப்பாற்றுகிறான். தன்னையும் பலி கொடுக்கிறான்.


சென்டிமென்டால் போட்டுத் தாக்கும் இயக்குநரின் இந்த மலிவான உத்தியில் இரசிகர்களின் பிரச்சினை வேறு மாதிரி. முத்தழகு கூறுவது போல் அவர்கள் பருத்திவீரனின் முன்வினை அவளைச் சுட்டது என்று கருதவில்லை. ஜாலியான ஒரு காதல் ஜோடி சேர முடியாமல் இரக்கமின்றிப் பிரிக்கப்பட்டதே அவர்களின் கவலை. சித்தப்பா செவ்வாழையுடன் பருத்திவீரன் செய்யும் குடி, கூத்து, ஆட்டம், பாட்டத்தை அவர்கள் பாவமாகக் கருதவில்லை. சொல்லப்போனால் பார்வையாளர்கள், குறிப்பாக ஆண்கள், அந்தக் கேளிக்கைகளில் மனதளவில் கலந்து கொள்கிறார்கள். காட்சிக்கு ஒரு நகைச்சுவை என்று செதுக்கித் தீட்டப்பட்ட திரைக்கதை பொதுவில் கலகலப்பாகச் செல்கிறது. பருத்திவீரனது வக்கிரங்கள் எவையும் பொதுப்புத்திக்கு அதிர்ச்சி தராததோடு அவற்றை இரசிக்கும் வண்ணம் தரப்பட்டுள்ளது.


விபச்சாரி ஒருத்தியை அழைத்துவரும் லாரி ஓட்டுநர்களைக் கத்தியால் மிரட்டிவிட்டு அவளுடன் உறவு கொள்கிறான் பருத்தி வீரன். வெளியே காத்திருக்கும் ஓட்டுநர்கள் ""அண்ணே காசு குடுத்து கூட்டியாந்துட்டம்ணே, நாங்களும் கொஞ்சம் தொட்டுப் பாத்துக்கிறம்ணே, நீங்களும் யாரையாவது கூட்டிட்டு வந்தீகன்னா ஒன்னா புழங்கிக்கலாம்ணே'' என்கிறார்கள். இந்த வக்கிரத்தின் மீது அருவெறுப்பு கொள்ளுவதற்குப் பதில் இரசிகர்கள் பருத்தி வீரனோடு சேர்ந்து சிரிக்கிறார்கள். ஒருவேளை அந்தப் புழக்கத்தில் அவர்களும் பங்கு கொள்ள விரும்பியிருக்கலாம். இந்தப் புழக்கத்திற்கு சித்தப்பா செவ்வாழை மட்டும் கவனமாகத் தவிர்க்கப்படுகிறார். சித்தப்பனும் மகனும் மற்ற எல்லா விசயங்களிலும் ஒன்றாக சுற்றினாலும், ஒரே விபச்சாரியிடம் உறவு கொள்ளும் "புரட்சியை' ஏற்குமளவுக்கு இரசிகர்கள் தயாராகவில்லை என்பதால் இயக்குநர் அதைத் தவிர்த்துவிட்டார் போலும்.


ஒவ்வொரு முறையும் புதிது புதிதாகப் பிழைக்க முயலும் டக்ளசை இருவரும் ஏமாற்றுகிறார்கள், பணம் பறிக்கிறார்கள். இதிலும் ஒரு கிராமத்து அப்பாவியை இரக்கமின்றி பருத்தி வீரன் மோசடி செய்வதாக இரசிகர்கள் உணருவதில்லை. கவுண்டமணி பாணியிலான இந்தக் காமெடி பார்வையாளர்களைச் சிரிக்க வைப்பதற்கான அரதப் பழசான உத்தி. நிஜ வாழ்வில் அரட்டி, மிரட்டி, ஏமாற்றிப் பிழைக்கும் இத்தகைய பேர்வழிகளை மக்கள் வெறுக்கிறார்கள். படத்தில் இரசிக்கிறார்கள். யதார்த்தத்திற்காகப் போற்றப்படும் இந்தப் படத்தின் இலட்சணம் இதுதான்.


தன்னை சிறுவயதில் காப்பாற்றியவன் என்பதால் முத்தழகு வளர்ந்து ஆளானபிறகும், ஜாலியான பொறுக்கியாக வாழும் பருத்தி வீரனை துரத்தித் துரத்தி வம்படியாகக் காதலிக்கிறாள். ஆரம்பத்தில் பிகு செய்யும் பருத்தி வீரனும் பிறகு காதலிக்கிறான். நெஞ்சில் பச்சை குத்திக் கொள்கிறான். சாதியில் தந்தை வழியில் சேர்வையையும், தாய் வழியில் குறத்தியையும் கொண்டு கீழ்ச் சாதியில் பிறந்திருப்பதால் கதாநாயகியின் தந்தையும் பருத்தி வீரனின் மாமனுமான கழுவச்சேர்வை மகளின் காதலை வன்மம் கொண்டு எதிர்க்கிறார். அதனால் பருத்தி வீரனை கொலை செய்யவும் ஏற்பாடு செய்கிறார். இந்த முட்டாள்தனமான காதலும், எதிர்ப்பும் பல சினிமாக்களில் உருட்டப்படும் வழக்கமான சங்கதிதான்.


இப்படி எல்லாச் சினிமாத்தனங்களும் செயற்கையான பாத்திரப் படைப்பும் கொண்டு நகைச்சுவையின் உதவியுடன் நேர்த்தியாகப் பின்னப்பட்ட சராசரி மசாலாதான் பருத்தி வீரன். என்ன, இந்த மசாலாவில் வானுயர்ந்த கட்டிடங்கள், வழுக்கும் சாலைகள், கர்ணமடிக்கும் கார்கள், நூறு பேருடன் ஆடப்படும் குத்தாட்டம், வெளிநாட்டில் பாடப்படும் காதல் முதலான நகரத்து நெடி இல்லை. நகரத்து மசாலாவையே பார்த்துச் சலித்திருந்த கண்களுக்கு இந்தப் படம் சற்று நெகிழ்வைத் தருகிறது. ஆனாலும் இதுவும் ஒரு கிராமத்து மசாலா என்பதுதான் முக்கியம். ஆனால் சிறியபெரிய பத்திரிக்கை அறிவாளிகள்தான் இந்தப் படம் தமிழ் கிராம வாழ்வின் யதார்த்தத்தைச் சித்தரிப்பதாகக் கொண்டாடுகிறார்கள்.


இந்த யதார்த்தம் போலியானது. படத்தில் வழக்கு மொழி, உடலசைவு, காட்சிக்களன்கள், நாட்டுப்புறக் கலைகளில் மண்வாசனை அடித்தாலும், கதையில், கதை சித்தரிக்கும் வாழ்வில் உண்மையான கிராமம் இல்லை. உண்மையான கிராமம் இங்கே கேலி செய்யப்படுகிறது. தேவர் சாதியினர் ஆதிக்கம் செய்யும் கிராமத்தில் குறத்திப் பெண்ணொருத்தி சாராயம் காய்ச்சி தாதா ராச்சியம் செய்கிறாள். தொழிலில் போட்டிக்கு வரும் ஆதிக்கசாதி நபர்களை தனியாளாய் நின்று கொலையும் செய்கிறாள். இத்தகைய கிராமத்தை எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மேல்சாதியினரால் நிறுத்தப்பட்டு வெற்றியடையும் தலித் பஞ்சாயத்துத் தலைவர்கள் அற்ப விசயங்களுக்காகக் கொலை செய்யப்படும் நாட்டில் இப்படி ஒரு சினிமாக் கற்பனை.


சாதியில் கீழான பருத்திவீரனைக் காதலிக்கும் முத்தழகு அதை இரகசியம் காக்காமல் ஊரறிய, பெற்றோரறிய செய்கிறாள், சண்டை போடுகிறாள். வம்படியாகப் பேசும் கிராமத்து மேல்சாதிப் பெண்களைப் பார்த்திருக்கிறோம். அந்தப் பெண்கள்கூட, கீழ்ச்சாதியென்ன, சமமான மற்ற சாதி ஆண்களைக் காதலிப்பதாக இருந்தால் கூட அதை ஊரறியச் செய்ய முடியாது. கலப்புமணம் புரிவதால் கட்டியெரிக்கப்படும் மண்ணில் அதைப் பயந்து பயந்து யாருமறியாமல்தான் செய்ய முடியும்.

ஆக, படத்தில் ஆதிக்க சாதி, அடக்கப்படும் சாதி குறித்த பிரச்சினைகளை நுனிப்புல் அளவுக்குக் கூட பேசாமல் தப்பித்துக் கொள்கிறார் இயக்குநர். அன்றாடம் சாதிவெறிச் சருகில் காய்ந்து கொண்டிருக்கும் உண்மையான கிராமம் இங்கே இருட்டடிப்பு செய்யப்படுகிறது. எடுத்ததற்கெல்லாம் கத்தியைத் தூக்கும் பருத்தி வீரனின் காதில் அவன் சாதியை இழித்துரைக்கும் அத்தி பூத்தாற் போன்ற ஒரு சில வார்த்தைகள் தவறியும் கூட விழுவதில்லை. நிஜத்தில் இறங்கத் துணிவற்ற இயக்குநரின் தந்திரமிது. ஆயினும் இதே தந்திரம்தான் பருத்தி வீரனது வீரத்தை வெள்ளித் திரையில் கொண்டுவர அவனது கண்களை உருட்டுவதற்கும், தலையை ஆட்டுவதற்கும் துள்ளித் துள்ளி நடப்பதற்கும் சிரமப்பட்டிருக்கிறது. உயிரற்ற உடலுக்கு அலங்கார ஆலாபனைகள்!


படத்தில் சேர்வைக்காரர்களாக தெளிவாக அடையாளம் காட்டப்படும் பாத்திரங்கள் தேவர் சாதிப் பெருமையினை, வீரத்தை, ஆணவத்தை பிறவிக் கடன் போலப் பேசுகிறார்கள். அதன் உண்மை நிலை பற்றியோ, மறுக்கும் வாதப்பிரதிவாதங்களோ, காட்சிகளோ கதையில் இல்லை. அவர்களது சித்தரிப்பில் ஒருவகை அப்பாவித்தனம் இருப்பதுபோல் கவனமாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர். அதனால்தான் அண்டிப்பிழைத்து வாழும் பிணந்தின்னி, பருத்திவீரனைக் கொன்று விட்டு, மூன்று மாதம் சிறையில் இருந்து வெளிவந்தபின் முத்தழகை தனக்கு கட்டிக் கொடுக்க வேண்டும் என்று கழுவச் சேர்வையிடம் பேரம் பேசும் இளைஞன் முதலான பாத்திரங்கள் தேவர் சாதிப் பெருமையின் பிழைப்புவாதத்தை உணர்த்துவதாகப் பார்வையாளர்கள் எடுத்துக் கொள்ளவில்லை.


மேலும் இந்த அப்பாவித்தனமான சாதிப் பிதற்றல்களுக்குப் பதிலாக நல்ல தேவர்சாதிப் பண்பினை எடுத்துக் கூறும் வசனமும் படத்தில் உண்டு. குறத்தியுடனான சகவாசத்தை விட்டுவிட்டு நம் சாதிக்காரர்களோடு சாராயம் காய்ச்சிப் பிழைக்கலாமே என்று கேட்கும் மச்சான் கழுவச் சேர்வைக்கு பதிலளிக்கும் பருத்தி வீரனின் தந்தை காட்டிக் குடுப்பதும், கூட்டிக் கொடுப்பதும் தேவர்சாதிப் பண்பல்ல என்று மீசையை முறுக்குகிறார். குறத்தி கொல்லப்பட்டவுடன் குறத்தியின் மகளை திருமணம் செய்து கொண்டு அதை அசிங்கம் என்று பேசும் உறவினர்கள் மத்தியில் தலைநிமிர்ந்து வாழ்கிறார். நல்ல தேவர் சாதிப் பெருமைக்கு ஒரு முன்னுதாரணம்!


இதன்மூலம் வரம்புமீறும் தேவர்சாதிப் பெருமையை சமநிலைப்படுத்துகிறாராம் இயக்குநர். அது என்ன தேவர்சாதிப் பெருமையில் நல்லது, கெட்டது? பார்ப்பனர்களில் நல்ல பார்ப்பனர்களை பல தமிழ்ச் சினிமாக்கள் சித்தரித்திருப்பது போலத்தான் இதுவும். பாம்பில் ஏது நல்லது கெட்டது? கீழ்ச்சாதிகளை அடக்கி ஒடுக்க நினைக்கும் மனப்பான்மையிலிருந்தே தேவர்சாதியின் பெருமையும், ஆணவமும், வீரமும் புடைத்து நிற்கிறது. இவை தவிர அதன் இருப்புக்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்?


பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் போல பட்டையும் பாகவதர் முடியும், வீரமும், மனிதாபிமானமும் கொண்டு தேவர் சாதியினர் வாழவேண்டும் என்று ஒரு புத்திமதிக் கருத்து நிலவுகிறது. ஆனால் பசும்பொன் தேவரின் யோக்கியதை இம்மானுவேல் கொலையிலும், முதுகுளத்தூர் கலவரத்திலும் வெளிப்பட்டிருக்கிறது. ஆயினும் தேவரது படம் எல்லா தேவரின மக்கள் மத்தியிலும் கடவுளைப் போல வணங்கப்படுகிறது அவரது குருபூஜைக்கு ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகள் போட்டி போடுகின்றன. இந்தப் போற்றிப்பாடுதலை அம்பலப்படுத்துவதற்கு எந்த இயக்குநருக்காவது துணிச்சல் உள்ளதா?


மாறாக, தேவர்மகன் தொடங்கி வைத்த தேவர்சாதிப் பெருமையை தென்தமிழ்நாட்டின் மண்வாசனையை வெளிப்படுத்துவதாக வெளிவந்த எல்லாப் படங்களிலும் அட்சத்திர சுத்தமாகக் காட்டுகிறார்கள். ஏதோ பிறக்கும்போதே அரிவாளுடன் பிறந்தது போலவும் சில்லறைப் பிரச்சினைகளுக்குக் கூட வெட்டுக்கத்தியை வீசுவது போலவும் பிறகு இந்த வீரத்தை துறந்துவிட்டு அமைதியாக வாழவேண்டும் எனவும் போதிக்கிறார்கள். மறவர் குலத்தின் வீரம் குறித்த இந்தச் சித்தரிப்பே எதார்த்தத்திற்குப் புறம்பானது.


சந்தர்ப்பவாதம், பிழைப்புவாதம், கோழைத்தனம் ஆகியவற்றில் தேவர் சாதி பெருமை பேசும் பிரமுகர்கள் முன்னணியிலிருக்கின்றனர். இதை நிரூபிப்பதற்குச் சிரமப்பட வேண்டியதில்லை. பாசிச ஜெயா, சசிகலா, தினகரன், மகாதேவன் எனும் மன்னார்குடி கும்பலின் பாதங்களில் விழுந்து அடிமைத்தனச் சேவகம் புரிகிறது இன்றைய தேவர் சாதிப் பெருமை. இதில் அ.தி.மு.க. தேவர்சாதிக் கட்சி என்ற பெருமை வேறு. ஆண்டாண்டு காலம் கிடா வெட்டி சாமி கும்பிட்டு வந்த இந்த சாதி வீரர்கள், கிடாவெட்ட தடைச்சட்டம் வந்தபோது அதை மீறி ஒரு கோழிக் குஞ்சைக் கூட அறுக்கத் துணியவில்லை. அரிவாளுடன் பிறந்த தேவர் சாதி வீரத்தின் நிஜம் இதுதான்.

கிராமப்புற மக்களிடத்தில் அரிவாள் தூக்கியதால் பலநூறுபேர் சிறையில் இருப்பது உண்மைதான். ஆயினும் இவர்கள் தொழில் முறைச் சண்டியர்கள் இல்லை. இவர்களில் பெரும்பான்மையினர் ஆத்திரத்தில் அறிவிழந்து, உணர்ச்சிவசப்பட்டு, சாதிவெறிக்காகவோ, சொத்துப் பிரச்சினைக்காகவோ, காதல் கள்ள உறவு காரணமாகவோ கணநேரத்தில் தவறிழைத்தவர்கள். இதன் விழுமியங்கள் குறித்த குழப்பம் நிலவுடைமைச் சமூகம் எனும் பாரிய நோயில் உள்ளது. இந்தத் தனிநபர் விபத்துக்களுக்கு சாதிப் பெருமையோ, குலப் பெருமையோ காரணமல்ல.


ஆனால் சண்டியர்களின் கதை வேறு. வேலைவெட்டிக்குப் போகாமல் பெண்களின் காசில் குடித்துவிட்டு ஊர் சுற்றும் கிராமப்புறத்தின் எச்சங்கள்தான் பருத்தி வீரன் போன்ற அழுக்குகள். இந்த அழுக்கையே அலங்காரமாய், அழகாய், கலகலப்பாய்க் காட்டுகிறார் இயக்குநர். இதை எவ்விதச் சுரணையுமின்றி இரசிக்கும் இரசனைதான் நமக்கு நெருடலைத் தருகிறது.


ஒரு கிராமத்து ரவுடியின் வாழ்க்கையில் இத்தனைக் கொண்டாட்டங்களா என்று வியந்து பாராட்டுகிறார் சிறு பத்திரிக்கை அறிவாளி சாரு நிவேதிதா. ஏய் என்று கூப்பிட்டாலோ, சிறிய கம்பொன்றைத் தூக்கினாலோ ஓடிவிடக் கூடிய இவர் போன்ற பேடிகள் ரவுடி வாழ்வை இரசிக்கிறார்களாம்! அற்பவாத உணர்ச்சியில் திளைப்பதை நியாயப்படுத்துவதற்காக அறிவின் பெயரால் வேடமிடும் சாருநிவேதிதாவை விட வெறுமனே உணர்ச்சிவசப்பட்டு விசிலடிக்கும் ரஜினி இரசிகர்கள் மேலானவர்கள்.


பருத்தி வீரன் போன்ற சில்லறை ரவுடிகள் பணக்காரர்கள், பண்ணையார்களுக்கு எடுபிடிச் சேவகம் செய்து பிழைப்பார்கள். அடிமைகளுக்கு கலகலப்பான சுயேச்சையான வாழ்வு இருக்க முடியுமா என்ன? பருத்தி வீரன் உள்ளூரில் மட்டும் சண்டித்தனம் செய்வதால் ஊர் சுற்றி வம்பளப்பதற்கு அவனுக்கு நேரம் இருக்கிறது. அவன் விரும்பியபடி சென்னை ஜெயிலுக்குச் செல்லுமளவுக்கு பெரிய ரவுடியாக மாறியிருந்தால் அவன் வாழ்க்கையில் ஆட்டமும் பாட்டமும் முடிவுக்கு வந்திருக்கும். போலீசு போடுமா, எதிரி போடுவானா என்று பீதியிலும் அச்சத்திலும் வாழவேண்டியிருக்கும்.


கட்டப்பஞ்சாயத்து, மாமூல், ரியல் எஸ்டேட், கூலிப்படை என்று தொழில் விரிவடைவதற்கேற்ப பிரச்சினைகளும் அதிகரிக்கின்றன. எங்கு எப்போது என்ன நடக்கும் என்று தெரியாத நிலையில் எந்நேரமும் அடியாட்களின் பாதுகாப்பில் வாழும் கோழையாகி விடுவான் அவன். பாசிஸ்டுகள் மட்டுமல்ல, ரவுடிகளும் அடிப்படையில் கோழைகள்தான். சாதிச் செல்வாக்கு, அரசியல் கட்சிகளின் அரவணைப்பு, போலீசுடன் கூட்டு என்ற பாதுகாப்பில்தான் அவர்கள் வீரம் எழும். ஆனால் ரவுடிகளெல்லாம் எதற்கும் அஞ்சாத மாவீரர்கள் போன்று தமிழ்ச் சினிமாக்கள் சித்தரிக்கும் கொடுமை எப்போது முடியுமோ தெரியவில்லை.

உண்மையில் கிராமங்களின் வாழ்க்கையிலும், ரவுடிகளின் இயக்கத்திலும் இந்தக் கலகலப்பும், நகைச்சுவையும், சுறுசுறுப்பும் இல்லை. பல நூற்றாண்டுகளாய் தனக்குத்தானே சங்கிலியில் கட்டிக் கொண்டு மூடுண்ட கிராமங்கள் காலனிய ஆட்சிக்குப் பிறகு பல காரணங்களால் வெளியுலகத்தைத் தேடிச் சென்றன. விவசாயம் திட்டமிட்டு அழிக்கப்படும் இன்றைய உலகமயமாக்கச் சூழலிலோ கிராமங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன.


இராமநாதபுரத்தின் யதார்த்தம் மும்பை தாராவிக் குடிசைப் பகுதியில் சிறைப்பட்டிருக்கிறது. மதுரை, தேனி மாவட்டங்களின் யதார்த்தம் திருப்பூரின் பொந்துகளில் எந்திரமாய் இயங்கிக் கொண்டிருக்கிறது. தஞ்சை மாவட்டங்களின் யதார்த்தம் கேரளாவிற்கு கம்பி கட்டும் வேலைக்கு ஓடிக் கொண்டிருக்கிறது. தருமபுரி, கிருஷ்ணிகிரி மாவட்டங்களின் யதார்த்தம் பெங்களூரில் கட்டிடம் கட்டவும் தள்ளுவண்டியில் பிழைக்கவும் அலைந்து கொண்டிருக்கிறது. வட மாவட்டங்களின் யதார்த்தம் ஒவ்வொரு நாளும் சென்னை நகரில் ஆயிரக்கணக்கில் வந்து குவிந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு முதியவர்களும், வாழவழியற்ற பெண்களும்தான் வேறு வழியின்றி கிராமங்களில் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள். விவசாய வேலைகள் இல்லாத காலங்களில் கிராமங்கள் பாலைவனம் போல வெறிச்சோடித்தான் கிடக்கின்றன. சாகடிக்கப்பட்டு வரும் இந்தக் கிராமங்களில் சோர்வும், சலிப்பும், விரக்தியும், அவலமும், வெற்று அரட்டையும்தான் இருக்கின்றன.


அவ்வகையில், பருத்தி வீரன் கிராமங்களைக் கேலி செய்கிறது. எந்த உழைப்பாளிகள் கிராமங்களிலிருந்து நகரம் நோக்கித் துரத்தப்பட்டு நாடோடி வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்களோ அவர்களும் தாங்கள் இழிவுபடுத்தப்படுவது அறியாமல் இந்தத் திரைப்படத்தை இரசிக்கிறார்கள். இந்தப் பொறுக்கி வீரன் தங்களைக் கேலி செய்வதாக சாதாரண உழைப்பாளி மக்கள் முதல் படிப்பாளி ரசிகர்கள் வரை யாருமே உணர்வதில்லை.


ஒரு திரைப்படத்தின் நாயகன் விவசாயியாகவோ, தொழிலாளியாகவோதான் இருக்க வேண்டும் என்றில்லை. அவன் ஒரு நிலப்பிரபுவாகவோ, காமவெறி பிடித்த மிருகமாகவோ இருக்கலாம். ஒரு சொறிநாயாகக் கூட இருக்கலாம். அவனுடைய வாழ்க்கையை இயக்குநர் எப்படிப் பார்க்கிறார், எப்படிப் பார்ப்பதற்கு ரசிகனைப் பழக்குகிறார் என்பதுதான் பிரச்சினை. ஒரு சொறிநாயின் அழகை ரசிக்கக் கற்றுக் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.




· வேல்ராசன்

Saturday, June 23, 2007

குஜராத் 'மோதல்" படுகொலைகள்: இதுதான் இந்து ராஷ்டிரம்!

குஜராத் 'மோதல்" படுகொலைகள்: இதுதான் இந்து ராஷ்டிரம்!

குஜராத் மாநிலத் தலைநகர் அகமதாபாத்தின் புறநகர் பகுதியில், நவம்பர் 26, 2005 அன்று சோராபுதீன் ஷேக் என்பவர் குஜராத் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ""லஷ்கர்இதொய்பா என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த சோராபுதீன், முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்லும் நோக்கத்தோடு குஜராத்திற்கு வந்தபொழுது, போலீசாரோடு நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதாக'' குஜராத் போலீசு துறையைச் சேர்ந்த தீவிரவாத எதிர்ப்பு படை அதிகாரிகள் அறிவித்தனர்.

""சோராபுதீன் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றியும்; அவரது மனைவி கவுசர்பீ காணாமல் போனது பற்றியும் மையப் புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டும்'' எனக் கோரி, சோராபுதீனின் சகோதரர் ருபாபுதீன், உச்சநீதி மன்றத்திற்குக் கடிதமொன்று எழுதினார். அக்கடிதத்தைப் பொதுநல வழக்காக எடுத்துக் கொண்ட உச்சநீதி மன்றம், இம்மோதல் கொலையைப் பற்றி விசாரிக்குமாறு குஜராத் அரசிற்கு உத்தரவிட்டது. இம்மோதலைப் புலனாய்வு செய்த கீதா ஜோஹ்ரி என்ற அதிகாரி, ""இது போலி மோதல் கொலையாக இருக்கலாம்'' என அறிக்கை அளித்தார். இப்பொழுது இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, ""சோராபுதீன் போலி மோதலில்தான் சுட்டுக் கொல்லப்பட்டார்; அவரது மனைவி கவுசர்பீயும் கொல்லப்பட்டு, அவரது சடலம் இரகசியமாக எரிக்கப்பட்டு விட்டதாக'' குஜராத் அரசே உச்சநீதி மன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளது.

இவ்வழக்கில் குற்றவாளிகளாகக் கருதப்படும் வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன், எம்.என். தினேஷ் ஆகிய மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகளும்; ஆய்வாளர் என்.ஹெச்.தாபி, காவலர் சாந்தாராம் ஷர்மா; போலீசு கண்காணிப்பாளர் ராஜ்குமார் பாண்டியனின் தனி உதவியாளர் அஜய் பர்மர் உள்ளிட்டு ஆறு போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
""ஹைதராபாத் நகரில் இருந்து மகாராஷ்டிராவிற்குத் தனது மனைவி கவுசர்பீ, தனது நண்பர் துளசிராம் பிரஜாபதி ஆகியோரோடு பயணம் செய்து கொண்டிருந்த சோராபுதீன் வழி மறிக்கப்பட்டு, நவம்பர் 22, 2005 அன்று நள்ளிரவில் போலீசு கண்காணிப்பாளர் ராஜ்குமார் பாண்டியன் தலைமையில் சென்ற குஜராத் மற்றும் ஆந்திர மாநில போலீசாரால் கடத்தப்பட்டது தொடங்கி, நவம்பர் 26, 2005 அன்று அகமதாபாத் நகரில் குஜராத் மாநில தீவிரவாத தடுப்புப் படையால் சோராபுதீன் சுட்டுக் கொல்லப்பட்டது வரை அனைத்தையும்'' போலி மோதல் கொலையில் பங்கு கொண்ட காவலர் அஜர் பர்மர் வாக்குமூலமாக அளித்திருக்கிறார்.

சோராபுதீன் கொல்லப்பட்ட பிறகு, அவரது மனைவி கவுசர்பீ, பா.ஜ.க.வின் அகமதாபாத் நகர கவுன்சிலர் சுரேந்திரா ஜிராவாலாவுக்குச் சொந்தமான பங்களாவில் இரண்டு நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு, நவ. 28, 2005 அன்று அதே பங்களாவில் கொல்லப்பட்டு, பிறகு அவரது சடலம், (இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஐ.பி.எஸ். அதிகாரி) வன்சாராவின் சொந்த கிராமமான இலோலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு இரகசியமாக எரிக்கப்பட்டதை குஜராத் மாநில தீவிரவாத எதிர்ப்பு போலீசு படையைச் சேர்ந்த ஓட்டுநர் நாதுசிங் ஜடேஜா வாக்குமூலமாக அளித்திருக்கிறார்.

மேலும், கடத்தி வரப்பட்ட சோராபுதீன் கவுசர்பீ தம்பதியினரைத் தனியார் பண்ணை வீட்டில் சட்ட விரோதமாக அடைத்து வைத்திருப்பதற்கு உதவிய சதீஷ்பாய் ராம்ஜிபாய் ஷர்மா; கவுசர்பீயின் சடலத்தை எரிப்பதற்குத் தேவையான விறகினை போலீசுக்கு விற்ற பகவதி டிம்பர் மார்ட் என்ற நிறுவனத்தின் அதிபர்; கவுசர்பீயின் சடலம் எரிப்பதற்குக் கொண்டு செல்லப்பட்டபொழுது, சகதியில் சிக்கிக் கொண்ட வாகனத்தை மீட்பதற்கு போலீசாரால் அழைத்து வரப்பட்ட கிரேன் இயக்குநர் ஆகியோரும் கவுசர்பீயின் கொலை தொடர்பாகச் சாட்சியம் அளித்துள்ளனர்.
சோராபுதீன் போலி மோதலில் கொல்லப்பட்டதற்கு, கவுசர்பீ வலுவான சாட்சியமாக இருந்திருக்கிறார். குஜராத் போலீசார், இந்த வலுவான சாட்சியத்தைக் கலைப்பதற்காகவே, ""பணம் தருகிறோம்; பாகிஸ்தானுக்கு ஓடி விடு'' என கவுசர்பீயிடம் பேரம் நடத்தியுள்ளனர். அதற்கு கவுசர்பீ ஒத்துக் கொள்ளாததால்தான், அவர் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டு, அதற்குப் பின் கொல்லப்பட்டிருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.

இம்மோதல் கொலையின் மற்றொரு சாட்சியான துளசிராம் பிரஜாபதி, இராசஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களைச் சேர்ந்த ரோந்து போலீசாரால், டிச.26, 2006 அன்று குஜராத் மாநிலத்தின் எல்லைப்புற மாவட்டமான பனசகந்தாவில் உள்ள அம்பாஜி நகரில் நடந்த ""மோதலில்'' சுட்டுக் கொல்லப்பட்டார்.

சோராபுதீனைச் சுட்டுக் கொன்ற போலீசு படைக்குத் தலைமை தாங்கிய வன்சாரா, குஜராத் மாநில எல்லைப்புற போலீசு பிரிவின் போலீசு இயக்குநராகப் பதவியேற்றுக் கொண்ட இரண்டாவது வாரத்திலேயே, பிரஜாபதி அம்மாநிலத்தின் எல்லைப் பகுதியில் நடந்த "மோதலில்' சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார் என்பதும்; இம்மோதல் சோராபுதீன் கொலை பற்றிய விசாரணை ஆரம்பித்த ஒரு சில மாதங்களிலேயே நடந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், சோராபுதீன் கொலையின் மற்றொரு சாட்சியான சில்வஸ்டர் டானியல் கிறிஸ்டியன், பிரஜாபதி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு ""காணாமல்'' போய்விட்டதாகக் கூறப்படுகிறது.
சோராபுதீன் கொலை தொடர்பான சாட்சியங்களை ஐ.பி.எஸ். அதிகாரி வன்சாரா ஒருபுறம் அழித்துக் கொண்டிருந்த பொழுது, இன்னொரு புறம் குஜராத் அரசின் உள்துறை அமைச்சகம் கொலை தொடர்பான விசாரணையைத் தாமதப்படுத்துவதற்கு எல்லா உள்ளடி வேலைகளையும் செய்தது.

உச்சநீதி மன்றம், இம்மோதல் கொலையை விசாரிக்குமாறு சனவரி 21,2006 அன்று குஜராத் அரசிற்கு உத்தரவிட்டது. இதனையடுத்து போலீசு உயர் அதிகாரிகளின் கூட்டத்தை நடத்திய உள்துறை துணை அமைச்சர் அமித் ஷா, ""கவுசர்பீ, சோராபுதீனின் சட்டபூர்வ மனைவி கிடையாது; கவுசர்பீ பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என்பதால், பாகிஸ்தானுக்குத் தப்பியோடியிருக்கலாம்'' என அண்டப்புளுகை அவிழ்த்து விட்டார். உச்சநீதி மன்ற உத்தரவு வந்து ஆறு மாதங்கள் கழித்துதான், இம்மோதல் கொலை பற்றிய விசாரணை அதிகாரியாக கீதா ஜோஹ்ரி நியமிக்கப்பட்டார்.
""இது போலி மோதல் படுகொலை'' என அவர் அளித்த முதல் அறிக்கையை, உச்சநீதி மன்றத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்காமல், குஜராத் அரசு காலதாமதப்படுத்தியது. விசாரணை தொடர்பாக ஹைதராபாத் செல்ல திட்டமிட்டிருந்த கீதா ஜோஹ்ரிக்கு, அந்நகருக்குச் செல்லும் அனுமதி மறுக்கப்பட்டது. வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன், தினேஷ் ஆகிய மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகளைக் குற்றவாளிகளென கீதா ஜோஹ்ரி முடிவு செய்து அறிக்கை கொடுத்த பிறகு, அக்குற்றவாளிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக்கூடாது என கீதா ஜோஹ்ரிக்கு வாய்மொழி உத்தரவு இடப்பட்டது.

இறுதியாக, விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கத்துடன், கீதா ஜோஹ்ரிக்குப் பதிலாக அவரின் ""எதிரி'' ரஜ்னிஷ் ராய் என்பவர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக, ரஜ்னிஷ் ராய் அம்மூன்று அதிகாரிகளைக் கைது செய்ததோடு, அவர்களை உண்மை அறியும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப் போவதாக அறிவித்தார். இதே சமயத்தில், ""கீதா ஜோஹ்ரி ஏன் மாற்றப்பட்டார்?'' என உச்சநீதி மன்றம் கேட்டதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட குஜராத் அரசு, ரஜ்னிஷ் ராயைத் தூக்கியடித்துவிட்டு, கீதா ஜோஹ்ரியை மீண்டும் விசாரணை அதிகாரியாக நியமித்தது. எனினும், கீதா ஜோஹ்ரி தன்னிச்சையாகப் செயல்படுவதைத் தடுப்பதற்காக, அவருக்குச் சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது, குஜராத் அரசு.

குஜராத் மாநில காங்கிரசு கமிட்டியின் தலைவர் பரத்சிங் சோலங்கி, ""ராசஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மார்பில் கற்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் முதலாளிகளைப் பணம் கேட்டு மிரட்டி வந்த சோராபுதீனைப் போட்டுத் தள்ள அவர்கள் விரும்பியதாகவும்; அதற்கான பேரம், பா.ஜ.க. தலைவர்கள் மூலம் வன்சாராவிடம் நடந்ததாகவும்; இதற்காக 60 இலட்ச ரூபாய் பணம் கைமாறியதாகவும்'' குற்றஞ் சுமத்தியிருக்கிறார். குஜராத் மாநில போலீசு இந்தப் பின்னணி பற்றி விசாரணை நடத்தவேயில்லை.

···

இது போன்ற மர்மம் நிறைந்த ""தேச பக்த கொலைகள்'' இந்து ராஷ்டிரமான குஜராத்தில் இரண்டு மாதத்திற்கு ஒன்று நடப்பதாகவும்; நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமான போலீசு அதிகாரியான வன்சாரா 9 மோதல் கொலைகளை நடத்தி, 15 பேரைக் கொன்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன், அக். 22, 2002 அன்று சமீர்கான் என்ற முசுலீம் இளைஞர் குஜராத் மாநில குற்றப் பிரிவு போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். வன்சாரா தலைமையில் நடந்த இம்மோதல் படுகொலை, மோடியின் அரசியல் பயணத்தில் முக்கியமான ஒன்று.

""சமீர்கான் ஜெய்ஷ்இமுகம்மது என்ற பாக். தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவன்; பாக்.இல் பயங்கரவாதப் பயிற்சி பெற்றவன்; நரேந்திர மோடியைக் கொல்லவே குஜராத்திற்குள் நுழைந்திருக்கிறான்'' என வன்சாரா சமீர்கானைச் சுட்டுக் கொன்ற பிறகு பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது, குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் முழு வீச்சில் நடந்து கொண்டு இருந்தது. நரேந்திர மோடி, ""குஜராத் பெருமையைக் காப்பாற்ற உழைக்கும் என்னை முசுலீம் ஜிஹாதிகள் குறி வைக்கிறார்கள்'' எனக் கூறி, இம்மோதலைத் தனது அரசியல் செல்வாக்கை உயர்த்திக் கொள்ளப் பயன்படுத்திக் கொண்டார்.

இம்மோதல் படுகொலையை விசாரித்த குஜராத் உயர்நீதி மன்றம், ""சமீர்கான் எந்தவொரு தீவிரவாத அமைப்பையும் சார்ந்தவரோ, பாக்.இல் தீவிரவாதப் பயிற்சி பெற்றவரோ கிடையாது'' எனத் தீர்ப்பளித்தது. இப்படுகொலையை மோதலாகக் காட்ட முதலமைச்சர் அலுவலகமும், போலீசு அதிகாரிகளும் இணைந்து பல மோசடிகள் நடத்தியிருப்பதை, ஐ.கே.யாதவ், தீர்த் ராஜ் என்ற இரு உயர் போலீசு அதிகாரிகளே தங்களின் விசாரணையில் கண்டறிந்து அம்பலப்படுத்தியுள்ளனர்.

ஜூன் 15, 2004 அன்று அகமதாபாத் நகரின் நுழைவாயில் பகுதியில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹன் உள்ளிட்டு நான்கு முசுலீம்கள் குஜராத் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுவும், மோடியின் உயிரை ""தீவிரவாதிகளிடமிருந்து'' காப்பாற்ற, வன்சாரா நடத்திய மோதல்தான். இம்மோதல் கொலை பற்றி தேசிய மனித உரிமைக் கமிசன் குஜராத் போலீசாருக்கு எழுதிய கடிதத்தில், ""இம்மோதல் பற்றி போலீசார் விவரித்துள்ளதில் கடுகளவுகூட அடிப்படை ஆதாரம் இல்லை'' எனக் குறிப்பிட்டுள்ளது.

பி.ஜி. வர்கீஸ் என்ற பத்திரிகையாளர், ""குஜராத்தில் 2003க்கும் 2006ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்த 21 மோதல் படுகொலை பற்றி முறையாக விசாரணை நடத்தக் கோரி உச்சநீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருக்கிறார். ""இந்த 21 மோதல் படுகொலைகளில் ஒன்றில் கூடப் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை. சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் கூடக் கைது செய்யப்பட்டவுடன் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படவில்லை'' என அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

···

சோராபுதீன் கொலையை இந்து மதவெறியைத் தூண்டிவிட்டு நியாயப்படுத்தி வரும் இந்து மதவெறிக் கும்பல், இன்னொருபுறம், ""மற்ற மாநிலங்களில் போலி மோதல் கொலைகளே நடப்பதில்லையா?'' என்ற கேள்வியை எழுப்புவதன் மூலம் எதிர்க்கட்சிகளின் வாயை அடைத்து விட்டது.
""மோதல்'' கொலைகளின் மூலம்தான் தீவிரவாதிகளை ஒழிக்க முடியும் என்ற பொதுக் கருத்தை, ஓட்டுக் கட்சிகளும், போலீசு அதிகாரிகளும், பத்திரிக்கைகளும் இணைந்து உருவாக்கி வருகின்றன. மேலும், ""தீவிரவாதி யார்?'' என்ற கேள்விக்கு, வலதுசாரி பா.ஜ.க. தொடங்கி இடதுசாரி போலி கம்யூனிஸ்டுகள் வரை, அனைத்து ஓட்டுக் கட்சிகளின் பதிலும் ஒன்றுதான்.
அதனால்தான், காங்கிரசாலும் போலி கம்யூனிஸ்டுகளாலும் சோராபுதீன் கொலையை நியாயப்படுத்தும் மோடியின் ""தேச பக்த'' அரசியலை எதிர்த்து நிற்க முடியவில்லை. ""சோராபுதீன் கொலையை சி.பி.ஐ. விசாரிக்கத் தேவையில்லை'' என உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்து விட்டதால், காங்கிரசும், போலி கம்யூனிஸ்டுகளும் மூக்கறுந்து போய் நிற்கிறார்கள் என்பதே உண்மை.

மோதல் கொலைகள், தடா, பொடா போன்ற அரசு பயங்கரவாதத்தையும், ஆர்.எஸ்.எஸ்.இன் இந்து மதவெறி பயங்கரவாதத்தையும் எதிர்த்து நிற்க வேண்டும் என்றால், ""நக்சல்பாரிகள், தேசிய சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் போராளிகள், முசுலீம்கள் இவர்கள்தான் தீவிரவாதிகள்'' என இந்திய ஆளும் கும்பல் உருவாக்கி வைத்துள்ள கருத்தை முதலில் அடியோடு புறக்கணிக்க வேண்டும். இல்லையென்றால், மோடி போன்ற இந்து மதவெறி பயங்கரவாதிகள் வெற்றி பெறுவதையும், வன்சாரா போன்ற காக்கிச் சட்டை கொலைகாரர்கள் ""ஹீரோ''க்களாக வலம் வருவதையும் தடுக்க முடியாது.· குப்பன்

வெனிசூலாவின் போர்ப்பிரகடனம்!

வெனிசூலாவின் போர்ப்பிரகடனம்!


ரண்டாவது முறையாக தென் அமெரிக்க நாடான வெனிசூலாவின் அதிபராகப் பதவி யேற்ற ஹீயுகோ சாவேஸ், இவ்வாண்டு மே தினத்திற்குள் நாட்டின் முக்கியத் தொழிற் துறைகளை நாட்டுடைமையாக்கப் போவதாக அறிவித்திருந்தார். இதனை அமல்படுத்துவதற்கான அதிகாரத்தை அதிபருக்கு வழங்கும் வகையில் அரசியல் சாசனத் திருத்தத்தையும் நாடாளுமன்றத்தின் மூலம் நிறைவேற்றியிருந்தார்.



இந்த மே நாளன்று நடைபெற்ற தொழிலாளர்கள் பேரணியில் உரையாற்றிய சாவேஸ், ஒரினோகோ எண்ணெய்ப் படுகையில் இருக்கும் பன்னாட்டு முதலாளிகளுக்குச் சொந்தமான முக்கியமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை நாட்டுடைமையாக்கும் முடிவை வெளியிட்டிருக்கிறார். இந்நிறுவனங்களில்

பன்னாட்டு முதலாளிகளின் பங்குகள் சிறுபான்மையாகக் குறைக்கப்பட்டிருக் கின்றன. விலக விரும்புகிறவர்களுக்கு பழைய மதிப்பீட்டின்படி நட்ட ஈடு வழங்கப் படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கி, ஐ.எம்.எப் போன்ற ஏகாதிபத்திய நிதி நிறுவனங்களிலிருந்து விலகிக்கொள்வதாகவும் வெனிசூலா அறிவித்திருக்கிறது. இந்நிறுவனங்களை இனிமேலும் விட்டுவைத்தால் வெனிசூலாவைச் சூறையாடி விடுவார்கள் என்றும், இதுநாள் வரை அவர்கள் வெனிசுலாவிலிருந்து சுருட்டியதை திரும்பத் தரவேண்டும் என்றும் தேசியத் தொலைக்காட்சியில் முழங்கியிருக்கிறார் சாவேஸ்.



மேலும் மின்சாரம் தொலைபேசித்துறை போன்றவையும் நாட்டுடைமையாக்கப்பட இருக்கின்றன. உள்நாட்டுத் தொழில்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கொடுப்பதற்குப் பன்னாட்டு வங்கிகள் மறுத்தால், அவையும் வெளியேற வேண்டி வரும் என்ற எச்சரிக்கையும் விடப்பட்டிருக்கிறது. வெனிசூலாவின் இரும்புச் சுரங்கங்களைத் தம் பிடியில் வைத்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள், வெட்டி யெடுக்கும் இரும்பு அனைத்தையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விடுவதால், உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தமக்குத் தேவையான இரும்பு எஃகுப் பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் நிலை நிலவுகிறது. உற்பத்தியாகும் இரும்பை உள் நாட்டில் விற்க மறுத்தால், இரும்புக் கம்பெனிகளும் நாட்டுடைமை ஆக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் சாவேஸ்.



ஒடுக்கப்பட்ட நாடுகளைக் கேட்பாரின்றிச் சுரண்டி வரும் பன்னாட்டு முதலாளி கள் வெனிசூலாவின் இந்த அதிரடி நடவடிக்கைகளைக் கண்டு திகைத்து நிற்கின்றனர். அமெரிக்க அதிபர் புஷ்ஷும், ஏகாதிபத்திய ஊடகங்களும் சாவேஸை சர்வாதிகாரி யென்றும், வெனிசூலாவில் ஜனநாயகம் இல்லையென்றும் ஏற்கெனவே அவதூறுப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இனி அத்தகைய கூச்சலும் ஆட்சிக் கவிழ்ப்புச் சதிகளும் தீவிரமடையும் என்பதில் ஐயமில்லை.



90களிலேயே புதிய தாராளவாதக் கொள்ளைக்குப் பலியாக்கப்பட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளில், அவற்றுக்கு எதிராக மக்கள் நடத்திய வீரஞ்செறிந்த பல போராட்டங்களின் ஒரு விளைவுதான் சாவேஸ். பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளையைப் பாதுகாப்பதற்காக அமெரிக்காவால் நிறுவப்பட்ட பொம்மை அரசுகள், ஆட்சிக் கவிழ்ப்புகள், திவாலான பொருளாதாரங்கள், உணவுக் கலகங்கள்.. என்பவைதான் 90களில் லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தின் வரலாறு. வெனிசூலாவின் அரசு ஒரு கம்யூனிஸ்டு அரசு அல்ல என்ற போதிலும், சாவேஸின் நடவடிக்கைகள் முழு நிறைவான ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகள் அல்ல என்ற போதிலும் தனது நடவடிக்கைகளின் மூலம், மறுகாலனியாதிக்கத்துக்கு எதிராகப் போராடும் உலக மக்களுக்குப் பெரும் உத்வேகத்தை வழங்கியிருக்கிறார் சாவேஸ்.



பொதுத்துறைகளையும், காடுகளையும், கனிவளங்களையும் பன்னாட்டு நிறுவனங்களின் உடைமையாக்குவதன் விளைவு முன்னேற்றமல்ல, பேரழிவுதான் என்பதற்கு வெனிசூலா போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகளின் கடந்த கால வரலாறு ஒரு பாடம். ""இன்றைய உலக நிலைமைகளில் தனியார்மய, தாராளமயக் கொள்கைகள் தவிர்க்கவியலாதவை'' என்று கூறி நந்திக்கிராமத்தையும் சிங்குரையும் நியாயப்படுத்தும் மார்க்சிஸ்டுகளுக்கோ, சாவேஸின் நடவடிக்கைகள் ஒரு சாட்டையடி. தனியார்மய தாராளமயக் கொள்கைகள் வெல்லப்பட முடியாதவை என்றும் அவற்றின் முன் சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் ஆளும் வர்க்கங்களும் போலி கம்யூனிஸ்டுகளும் செய்து வரும் பொய்ப்பிரச்சாரத்தைத் தனது நடவடிக்கைகளின் மூலம் பொய்ப்பித்திருக்கிறார் சாவேஸ்.



உலக முதலாளித்துவம் வெல்லப்பட முடியாதது அல்ல. இறையாண்மைக்கும் சுயசார்புக்கும் சோசலிசத்துக்குமான போராட்டங்கள் மென்மேலும் தீவிரமடையுமே யன்றித் தணிந்து விடாது என்ற உண்மையையும் வெனிசூலா நிரூபித்திருக்கிறது.











Friday, June 22, 2007

மொழி வன்முறை மூலம், பெண் உருவாக்கும் குடும்ப அதிகாரம்

மொழி வன்முறை மூலம், பெண் உருவாக்கும் குடும்ப அதிகாரம்

பி.இரயாகரன்
22.06.2007


பெண்ணைச் சுற்றி உருவாகும் குடும்ப நெருக்கடிகள் பல, மொழி சாhந்த வன்முறை மூலம் கட்டமைக்கப்படுகின்றது. தம்மைச் சுற்றி ஒரு போலியான கற்பனை உலகை கட்டிவிட்டு, அதில் தத்தளிக்கும் ராணிகளும் ராஜாக்களும். இவர்களால் ஒரு சமூக உணர்வுடன் இணங்கி வாழ முடியாது, அலங்கோலமாகவே எதிரெதிரான முனைகளில் வாழ்கின்றனர். வாழ்வில் கிடைப்பதைக் கொண்டு மகிழ்சியாக வாழ முடியாது புலம்பும் இவர்கள், என்றுமே மகிழ்சியாக வாழமுடியாதவராகின்றனர். சதா அர்த்தமற்ற பூசல்களும் முரண்பாடுகளும். பொருள் சார்ந்த தனிமனித உலகில், கிடையாத வாழ்க்கை என்பது எல்லையற்றது. அது வரைவிலக்கணத்துக்கு உட்பட்டதல்ல.


பொதுவாக குடும்பங்களில் பெண்கள் தமது சொந்த மகிழ்ச்சியை தாமாக தொலைத்தபடி வாழ்கின்றனர். அடங்கியொடுங்கிய காலம் மலையேற, நுகர்வே வாழ்க்கையாக அதற்குள் சறுக்கி வீழ்கின்றனர். இதன் விளைவு கணவனைத் திட்டுவதும், உன்னைக்கட்டியதால் என்னத்தைக் கண்டேன் என்று அங்கலாய்ப்பதுமாகிவிடுகின்றது. இதுவே அனேக பெண்களின் வாழ்வாகிவிடுகின்றது. இதன் அர்த்தம் வேறு ஒருவனைக் கட்டியிருந்தால், நான் மகிழ்ச்சியாக வாழ்ந்து இருக்கமுடியும் என்பதே. பொதுவாக பெரும்பாலான பெண்களால் இப்படி நினைப்பதும், கூறுப்படுவதும், அன்றாட எதிர்வினையாகின்றது. இது வரையறுக்கப்பட்ட தெளிவான ஒரு சமூக அடிப்படையைக் கொண்டதல்ல. பூர்சுவா மன இயல்பில் ஏற்படும் அன்றாட தடுமாற்றங்கள் இவை. பெண்கள் தமக்குள் கொண்டுள்ள இந்த உரையாடல் சார்ந்த உணர்வே, பல குடும்பங்களின் மகிழ்ச்சியை அழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.


மற்றைய வீட்டில் உள்ளவர்கள் போல், பரஸ்பர கற்பனைகளை கட்டிக்கொண்டு சதா புலம்புகின்றனர். அந்த மற்றைய வீட்டிலும் இதே பல்லவியும், இதேநிலையும் தான். மற்றைய வீட்டில் நகை வாங்கினால் அதைப்போல் அல்லது அதைவிட உயர்வாக வாங்குவது, மற்றைய வீட்டார் ஒன்றைச் செய்தால் அதையே செய்வது, என்ற குறுகிய மனவியல்புகள், பெரும்பாலான பெண்களின் நிலையே இதுவென்றால், சிறியளவில் ஆண்களின் நிலையும் இதுதான். இணக்கமற்ற குடும்பங்கள் இதனடிப்படையில் உருவாகின்றது. தனது கணவன் பற்றி அல்லது மனைவி பற்றி, ஒப்பிட்டு இழிவை தமக்குள் தாமே உருவாக்குகின்றனர். தாழ்வுமனப்பான்மை கொள்கின்றனர். மற்றவர் எப்படி உள்ளனரோ அப்படி இருத்தல் பற்றி பொய்யான கற்பனையும், அது சார்ந்த பிரமைகளையும் தம்மைச் சுற்றி பரிவட்டமாக கட்டிவிடுகின்றனர். இப்படி மன உழைச்சலையும், திருப்தியற்ற வாழ்க்கை சார்ந்த உணர்வையும், தம்மைச் சுற்றி உருவாக்கிவிடுன்றனர். கற்பனை வாழ்க்கை, போலியான மனப்பாங்கை சிருஸ்ட்டிகின்றது.


சினிமாவில் நடத்தும் போலி நடிப்பை, வாழ்வின் உண்மையான அம்சமாக நம்பி அதுவாக மோசம் போகின்றனர். இது இயல்பில் மற்றவருக்கும் மோசம் செய்வதாகின்றது. சினிமா சார்ந்த கதாநாயக(கி) நினைப்பில், பிரிட்டிஸ் ராணிகளின் நினைப்பில் முத்தி, அதுவாக வாழ நினைக்கின்றனர். அங்கு காணப்படுவது போலியான நடிப்பு என்பதை காண்பதில்லை. தம்மைத் தாம் இப்பாத்திரங்களாக உருவகித்துக் கொண்டு வாழமுனைந்து கிடைக்கும் வாழ்வின் தோல்விகள், மீண்டும் மனவுழைச்சலை புகைச்சலைத் தருகின்றது. உண்மையில் கிடைத்த வாழ்வை மகிழ்ச்சியாக வாழத் தெரியாது, அதை துயரத்திலாழ்த்துகின்றனர். அந்தரத்தில் அங்குமிங்குமாக பொறுக்கும் நிலையற்ற வாழ்வியல் முறைகளால். எங்கும் வீங்கி வெம்பும் தனிமனித சீரழிவுகளையே வாழ்க்கையாக கற்பிக்கின்றனர். குடும்பத்தின் இணங்கி வாழும் சமூக கூறுகளையே, நஞ்சிட்டு அழிக்கின்றனர்.


இதில் இருந்து புலம்பெயர் சமூகம் சந்திக்கும் நெருக்கடிகள் சற்று வேறுபட்டு, மேலும் கூர்மையடைகின்றது. வலதுசாரிய தமிழ் சமூகத்தினதும், அதன் அரசியல் தலைமையினதும் மொத்த விளைவால், இது மேலும் கூர்மையாகி நிற்கின்றது. குறைந்தபட்சம் இரண்டு தலைமுறையாவது தனது வாழ்க்கையை இதற்குள் தொலைத்து நிற்கின்றது.


வாழ்வியல் பிரச்சனைகள் ஏன் ஏப்படி உருவாகின்றது என்பதைக் கூட தெரிந்துகொள்ள முடியாத விட்டில் ப+ச்சியாகி அதில் வீழ்ந்து மடிகின்றனர். இதற்கு தீர்வு அடங்கிப் போதல் அல்லது வன்முறை மூலம் விடைகாணல் என்பதே பொதுவான வழியாக உள்ளது. இதைத்தான் தமிழ் தேசிய அரசியல் வழிகாட்டுகின்றது. பொதுவாக தமிழ் சமூகத்தின் இன்றைய நிலை என்பது, வன்முறையும் அதற்கு அடங்கிப் போதலுமே தீர்வாக உள்ளது. இதுவே குடும்பத்திலும் கையாளப்படுகின்றது. ஆணாதிக்க சமூகத் தன்மைக்கு வெளியில், இதைக் கையாளுவதில் ஆண் பெண் வேறுபாடு கிடையாது. ஒரு விடையத்தை பேசித் தீர்த்தல், விவாதித்தல் என்பது அறவே கிடையாது. மொழி வன்முறை (பெருமளவில் பெண்கள்) பொதுவாக குடும்பத்தின் உச்சத்தில் உள்ளது. ஆணுக்கும் பெண்ணுக்கும் அப்பால், குழந்தைகள் மேல் கையாளும் மொழியில், இதை நீங்கள் இலகுவாக உணரமுடியும். இதன் விளைவே உடல் வன்முறையாக மாறுகின்றது.


குழந்தைக்கு விடையத்தை விளங்கப்படுத்துவதற்கு பதில், வன்முறையான மொழியாடல் மூலம் எதையும் சாதிக்க நினைக்கின்ற போக்கு, பொதுவாக அநேக குடும்பத்தில் காணப்படுகின்றது. இதன் பின் இருப்பது எதுமற்ற அலட்சியம், வெறுப்பு, சீற்றம், புறுபுறுப்பும் கோபமுமே. உண்மையில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கின்ற வாழ்க்கைக்கே, தம்மை அறியாது நஞ்சிடுகின்றனர். தனக்கு எதிரான வெறுப்பை, தமது இணக்கமற்ற நடத்தை மூலம் சாதிக்கின்றனர். மகிழ்ச்சியை தொலைத்தபடி தொல்லைப்டுகின்றனர். சதா மற்றவர் மீது பிழை கண்டுபிடித்தல் மூலம், எதிரியை குடும்பத்தினுள் உருவாக்கி வைத்துக்கொள்கின்றனர். இதில் விட்டுக்கொடுப்பற்ற அடாவடித்தனமான மொழி வன்முறை மூலம் தான், அனைத்து உரையாடலும் நடத்தப்படுகின்றது. இந்த மொழி வன்முறை சார்ந்த உணர்வும் உணர்ச்சியும் வெளிப்படுத்தும் எல்லையென்பது, எல்லா விடையத்துக்கும் ஒரே மாதிரியானதாகவே இருக்கின்றது. கடுமையானதும், மென்மையானதும் என்ற எந்தப் பாகுபாடும் இருப்பதில்லை. கற்றல், கற்பித்தல், உண்ணல், வீட்டை ஒழுங்குபடுத்தல், பிள்ளையின் நடத்தை என எதுவாக இருந்தாலும், மொழி வன்முறை மூலமே பதிலளிக்கப்படுகின்றது. அந்த உணர்வில் உணர்சியில் எந்த மாறுபாடும் கிடையாது. உணர்ச்சியை இழந்த அதிகாரமே வீட்டின் சொந்த மொழியாகின்றது.


அநேகமான புலம்பெயர் குடும்பத்தில் இதுவே நடக்கின்றது. ஆண்களில் சிறிய பகுதியும், பெண்களில் பெரும் பகுதியும் இப்படித்தான் குடும்பத்தை நிர்வகிக்கின்றனர். ஆண் பெண் உறவிலும் கூட இந்த மொழி சார்ந்த உரையாடல்தான் பொதுவாக காணப்படுகின்றது.


இப்படி அணுகுமுறையின் விளைவு என்பது பயங்கரமானது. தான் அல்லாத மற்றைய உறவுகளுடன் சதா முரண்பட்டு, தான் தனிமையில் தனித்து வாழ்கின்ற நிலை உருவாகின்றது. உண்மையில் தனிமைவாதத்திலும், சூனியவாதத்திலும் மூழ்கிவிடுவதும், அதற்குள் தீர்வுகளை காண்பதுமாக, உலகம் மிகக் குறுகியதாக தன்னளவில் சிறுத்துவிடுகின்றது. ஆண்கள் வீதிகளிலும், பெண்கள் வீட்டிலுமாக குறுகிய எல்லைக்குள், தம்மைத்தாம் கற்பித்து புளுத்து மனநோயாளராகின்றனர்.


ஆண்கள் குடியிலும், தாம் சம்பந்தப்படாத கற்பனையான (வீர, பாலியல்) வம்புகளிலும் வடிகால் தேடுகின்றனர். உலகத்தை நிமிர்ந்து பார்க்க முடியாது, கூனிக்குறுகி அறிவிழந்து, சுயசிந்தனை இழந்து விடுகின்றனர். இதற்கேற்ற தமிழ் வலதுசாரிய பாசிச அரசியல், இதற்கு ஊக்கத்தையும் ஆக்கத்தையும் அளிக்கின்றது.


பெண்கள் உலகமோ குறுகிய (நாடகங்கள்) உலகமாகின்றது. தன்னைச் சுற்றி குடும்ப எதிரிகளை கற்பிக்கும் மனப்பாங்கை சிருஸ்டித்துக் கொள்கின்றனர். இதற்கு ஏற்றாற்போல், எமது வாழ்வியல் அனுபவங்கள் மறுக்கப்பட்ட அரசியல் சூழல்.


சிதைந்து செல்லும் சமூகத்தின் அற்ப உணர்வை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழ் நாடகங்களின் வருகை அமைந்தது. குடும்பத்தையே எப்படி பிளப்பது என்பதே நாடகத்தின் சமூக நோக்கமாகும். இது உலகமயமாதலின் விதிக்கு உட்பட்டது. குடும்பத்தினுள் எதிரியை தேடத் தூண்டும், காணத்தூண்டும் கதை அம்சங்கள். எங்கும் எதிலும் எதிரி தன்னைச் சுற்றி உள்ளான் என்பதையே, சிந்திக்கத் தூண்டும் சுயவக்கிரத்தை உருவாக்குpன்றது. உணர்வியல் ரீதியாக, உளவியல் ரீதியாக பெண்கயே இதற்கு அடிமையாக்கப்படுகின்றனர். இயல்பற்ற குடும்பங்கள் இதனால் மொழி மற்றும் உடல் வன்முறைக்குள்ளாகின்றது. குடும்பம் தனது சொந்த நிம்மதியை மகிழ்ச்சியை இப்படியும், இதன் வழியிலும் இழந்து விடுகின்றது. நிம்மதியை இழக்க காரணமான பாத்திரமாகவே, புலம்பெயர் பெண்கள் தம்மை உருவாக்கி கொள்வது நிகழ்கின்றது. இதற்கேற்ற சூழலில் உந்தப்பட்டு நிம்மதியை அழிக்கின்ற பாத்திரங்களாக அவர்கள் மாறிவிடுகின்றனர்.


இதனால் இன்று பல ஆண்கள் வீதிகளில் வாழ நிர்பந்திக்கப்படுகின்றனர். சிலர் நிறை குடியில் மிதப்பவராக மாற்றப்படுகின்றனர். பல குடும்பங்கள் பிரிந்து விடுகின்றது. பல குழந்தைகள் அன்னியமாகின்றனர். வீட்டுச் சூழல் வெறுத்து, பலர் வீதிகளில் நிற்பதும் வசிப்பதுமாகி விடுகின்றனர். வீட்டில் நிம்மதியை இழந்துவிடுகின்றனர். கணவன் முதல் குழந்தைகள் வரை வீட்டை விட, வீதி நிம்மதியான இடமாக அடையாளம் காண்கின்றனர் அல்லது உணருகின்றனர். புதிய நபர்கள், வேறு வீடுகள் நிம்மதியான இடமாக கருதி நாடிச் செல்வது உருவாகின்றது. இதுவே புதிய பழக்கவழங்கங்களையும், சமூகச் சீரழிவுகளையும் வீட்டுக்கு வெளியில் தோற்றுவிக்கின்றது. சொந்த வீடு மகிழ்ச்சியாக இருக்காத போதே, இவை தவிர்க்க முடியாத பொது விளைவுகளாகின்றது.


வீடும், வீட்டு நிர்வாகமும் பொதுவாக பெண்ணின் நிர்வாகமாக இருப்பதால், பெண்ணின் ஒவ்வொரு செயலும் குடும்பத்தை வழிநடத்துவதில் முக்கிய பங்குவகிக்கின்றது. பெண்ணின் காய்தல் உவத்தலுக்கு ஏற்ப, குடும்பத்தின் மகிழ்ச்சி தீர்மானிக்கின்ற விடையமாகின்றது.


இதற்குள் புலம்பெயர் பெண்கள் விடையம் மேலும் நுட்பமாகின்றது. சமூகத்துடன் தொடர்சியான நெருக்கமான சமூகத் தொடர்பை புலம்பெயர் பெண்கள் சூழல் சார்ந்து இழந்துவிடுகின்றனர். திடீரென அனைத்தையும் நிர்வகிக்க பெண்கள் தொடங்குகின்றனர். இதில் ஏற்படும் இணக்கமற்ற விளைவுகள், குடும்ப அதிர்வுக்குள்ளாகி முழுக் குடும்பத்தையும் அழிக்கின்றது. குடும்பங்கள் என்பது பெண்களைச் சுற்றி இருப்பதனால், குழந்தை வரை அதன் விளைவை முழுமையாக பாதிக்கின்ற சமூக அவலங்கள்.


எதை எப்படி மொழிகளால் உரையாடுகின்றோம் என்பது மிக முக்கிமானது. அந்த மொழி வெளிப்படுத்தும் முகப்பாவனை கூட மிக முக்கியமானது. இவை குடும்பத்துக்கு எதிராக, எதிர்வினையாக அமைவதை நாம் அன்றாட வாழ்வில், பல குடும்பங்களில் காணமுடியும். இதை பெரும்பாலான பெண்கள் வீட்டின் பொது மொழியாகவே கையாளுகின்றனர். இந்த மொழி வன்முறையையே, வீட்டின் அதிகார ஊடகமாக பயன்படுத்துகின்றனர். தனது குழந்தையுடனான உரையாடல், கணவனுடனான உரையாடல், பெற்றாருடனான உரையாடல், மிக நெருங்கி வாழ்பவர்களுடனான உரையாடல், பெரும்பாலும் மொழி வன்முறை ஊடாகவே கையாளப்படுகின்றது. குடும்பத்தில் நெருங்கி வாழ்கின்றவர் மத்தியில், வீட்டு அதிகாரம் மொழி வன்முறை மூலம் கையாளப்படுகின்றது. அதாவது பெண்ணின் மொழியே, வன்முறை கொண்டதாக இருப்பதை பெரும்பாலான குடும்பத்தில் காணமுடியும்.


இந்தப் பொதுச் சூழலில் குடும்பத்தை வன்முறைக்குள்ளாக்கும் நாடகங்கள், பெண்ணை கவருகின்றது. நாடகங்கள் குடும்ப அதிகாரத்தையும், அதற்குள் எதிரியை தேடுவது பற்றி பேசுகின்றது. சமூகத்துக்கு எதிரான எதிரியை காணவிடாது, பெண்ணைத் திசை திருப்புவதே நாடகங்கள். குடும்பத்தினுள் இது பாரிய முரண்பாட்டை உருவாக்குகின்றது. நாடகங்கள் பெண்ணை முதலில் தனக்குள் அடிமையாக்கி விடுகின்றது. வெளியில் பகட்டும், குடும்பத்தில் சிடுசிடுப்பும், இதுதான் பெண்ணின் வாழ்வு, இதைத்தான் உலகமயமாதல் விரும்புகின்றது. இப்படி மொழியில் வாழ்வில் பெண் கொண்டுள்ள இரட்டை அணுகுமுறையை, வாழ்க்கையாக எப்படி வாழ்வது என்ற நடிப்பை நாடகங்கள் சிருஸ்டிக்கின்றது. உலகத்தை அதற்குள் சுற்றிச் சுற்றி காட்ட முனைகின்றது. குடும்பத்தின் பிளவுக்கு ஏற்றதும், மனநோய்க்கு ஏற்றதுமான இந்த நாடகங்கள், பெண்களின் உலகமாகின்றது. இது இருக்கின்ற நெருக்கடியான குடும்பங்களில், குடும்ப வன்முறையை தூண்டும் ஊடகமாகவே வீட்டினுள் அத்துமீறிப் புகுந்துவிடுகின்றது. தமிழ் நாடகங்கள் பெண்களுக்கு உளவியல் சார்ந்த மனநோயை உருவாக்குகின்றது. அவர்களைச் சுற்றிய ஒரு எதிரி உலகத்தை சிருஸ்ட்டித்து, கற்பிதங்களையும் கட்டளைகளையும் இடுகின்றது.


பெண்கள் பொதுவாகவே அதன் பாத்திரங்களாகவே மூழ்கிவிடுகின்றனர். தாம் ஒரு பாத்திரமாகவே மாறுகின்றனர். அவர்களை அறியாமலே குடும்பத்தினுள் எதிரியை எதிரிகளை தீவிரமாக தேடுகின்றதும், கற்பிக்கின்றதுமான ஒரு நிலை உருவாகிவிடுகின்றது. எதற்கும் கணவனையும், குழந்தைகளையும், பெற்றோரையும் குற்றம் காண்கின்ற, குற்றம் சாட்டுகின்ற நிலை உருவாக்கப்பட்டுவிடுகின்றது. எடுத்ததற்கெல்லாம் நச்சரிக்கின்ற தனக்கென்றதும், அதற்கெனவும் ஒரு சிறிய வட்டத்தை உருவாக்கிவிடுகின்றனர். குடும்ப உறுப்பினர்கள் தனக்கு எதிராக வாழ்வதாக கற்பிக்கின்ற மனப் பிரமை உருவாகிவிடுகின்றது. ஆணாதிக்க சமூக அமைப்பு சார்ந்து உருவாகும் பெண்களின் பின்தங்கிய அறிவை, நாடகங்கள் மேலும் சமூக குருடாக்கி, அதையே வாழ்வாக வாழக் கோருகின்றது. இப்படியாக குடும்பத்தின் குறைந்தபட்ச மகிழ்சியைக் கூட அது மறுதலித்து விடுகின்றது.


அசாதாரணமானதும், இனம் காண முடியாத ஆட்டம், மயக்கம், தயக்கம், அச்சம், பீதி குடும்பத்தினுள் உருவாகின்றது. குடும்பத்தினுள் ஒளித்து மறைத்து காரியமாற்றுகின்ற விடையங்கள் உருவாகின்றது. அநேகமான குடும்பங்களில் பெண்களின் மொழி சார்ந்த வன்முறை அதிகாரம், குடும்பத்தின் அதிகாரமாகிவிடுகின்றது. இந்தநிலையில் பெண்ணின் பாத்திரம் என்பது, முழுக் குடும்பத்தையும் மனக்கசப்பு கொண்டதாக, ஒருவருக்கு ஒருவரை எதிராக நிறுத்திவிடுகின்ற ஒன்றாக மாறிவிடுகின்றது. குடும்ப உறுப்பினருக்கு இடையில் நிலவுவது அசாதாரணமான வௌவேறு துருவங்கள் கொண்ட தனி உலகமாகவே இயங்குகின்றது.


பெண்களின் அதிகாரம் வெளிப்படுத்தும் போலித்தனத்தையும், அதன் பகட்டையும் எடுத்துக்காட்டுவது என்பதும், அந்த அம்சத்தை விமர்சனத்துக்கு உள்ளாக்குவதும் மிகக் கடினமானது. ஒரு ஆணாக நான் இருந்து கொண்டு செய்வதே முக்கியமான காரணமாகும். இருந்தும் இதை துல்லியமாக புரிந்துகொள்ள எடுப்பான சில உதாரணம் எம்முன்னுள்ளது.


ஆம், அது தான் புலம்பெயர் சமூகத்தின் இரண்டாவது புலம்பெயர்வு. இந்த இரண்டாவது புலபுபெயர்வை கோருபவள், நடத்துபவள் பெருமளவில் பெண்ணாக இருக்கின்றாள். ஆணின் தனி உழைப்பை நம்பிய குடும்பங்களிலும், ஆணின் உழைப்பு இன்றி பெண் வாழமுடியாத நிலையிலும், பெரும்பாலான புலம்பெயர்வு ஆண்களின் விருப்பமின்றி பெண்களால் வலுக்கட்டாயமாக நிகழ்த்தப்படுகின்றது. இதற்கு பெண்கள் கையாளும் வழி என்பது பெரும்பாலும் நச்சரிப்பு கொண்ட மொழி வன்முறை தான்.


இங்கு விசா போன்ற வாழ்வியல் எல்லைக்குள்ளான நெருக்கடி சார்ந்த புலம்பெயர்வைக் குறிப்பிடவில்லை. பெருமளவுக்கு பெண்களின் முடிவுக்கு அமைய நடக்கும் இந்த விடையத்தில், அறிவியல் பூர்வமாக இந்த இரண்டாவது புலம்பெயர்வு அமைவதில்லை. ஆணே தொடர்ந்தும் உழைக்க வேண்டிய நிலையில், புதிய சூழலில் அந்த ஆண் கடுமையாக துயரங்களுடன் மேலதிகமாக உழைக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றான். அத்துடன் புதிய சூழலில் ஆண் உழைப்பு ஆற்றலை இழப்பதும், மீண்டும் திரும்பும் சூழல் கணிசமாக நடக்கின்றது. பெண் திரும்ப மறுக்கும் போது, ஆண் மட்டும் திரும்புவதும் அல்லது அங்குமிங்குமாக ஓடி வாழ்வதும் தொடருகின்றது.


ஆணாதிக்க அமைப்பில் பெண் வீட்டு அடிமையாக ஆணுக்கு உழைப்பது அவசிமானதாக இருந்தது. நிலப்பிரபுத்துவ அமைப்பின் விதி இது. இதைக் கடந்த சமூக அமைப்பில், பெண் வீட்டின் நிர்வாகியாகி, குடும்பத்தை தனது மொழி அதிகாரத்தின் மூலம் கட்டுப்படுத்துபவளாக மாறுகின்றாள். இதன் போது ஆண் என்பவன் பெண்ணின் விருப்பத்துக்கும், ஆடம்பரத்துக்கும் உழைக்கும் ஒரு பொருள் இயந்திரமாக பெண் கருதி அணுகுகின்றாள். உலகமயமாதலில் ஆணாதிக்கம் என்பது பாலியல் அம்சத்திலும், உடல் பலத்திலும், உலக அனுபவத்திலும் தான் ஆணிடம் காணப்படுகின்றது. விட்டின் கடமை என்பது, பெண்ணின் மொழி அதிகாரத்துக்கு உட்பட்ட ஆணாதிக எச்சமாக மாறிவிடுகின்றது.


பெண்ணின் அதிகாரம் இப்படி நெருக்கடியான வழியில் திணிக்கப்படுகின்றது. ஆண் பெண்ணுக்கு இணங்கிப் போவதன் மூலம், மௌனமாகிவிடுவதன் மூலம், மாற்று அபிப்பிராயத்தை இழப்பதன் மூலம், தனது குடும்ப நிம்மதியை காப்பாற்றமுடியும் என்ற நிலை. இதை பல குடும்பத்தில் காணமுடியும். உண்மையில் மறுபுலம்பெயர்வை தூண்டும் காரணங்கள் பெரும்பாலானவை அறிவியலுக்கு புறம்பானவை. குறுகிய குருட்டுத்தனமான வாதங்கள், வீங்கி வெம்பும் பெண்ணின் பார்வைகள், தன்னாலாகாத இயலாமை, அவநம்பிக்கைகள், பெருமை பேசும் குறுகிய வட்டம், வாழ்கின்ற சமூகத்தை தெரிந்து கொள்ள முடியாத குறுகிய கண்ணோட்டம், சமூகத்துடன் இணைந்து வாழ மறுக்கின்ற தனிமைவாதம் போன்ற பல காரணங்கள் உள்ளன. வீம்பும், பகட்டும், மோகமும் குறிப்பான தூண்டும் காரணங்களாகும். இப்படித்தான் பல முடிவுகள் தவறானதாக எடுக்கப்படுகின்றது.


இது போல் மற்றொரு உதாரணம். இன்று அநேகமாக ஓடிவாங்கும் வீடுகள் ஒருபுறம். அந்த வீட்டை அழகுபடுத்துவதில் பெண்கள் செய்யும் கூத்து ஒருபுறம். பெண்கள் வீட்டின் வண்ணத்தை மாற்றுவதில் உள்ள மனப்பாங்கில், திருப்தியற்ற நிலையற்ற அவர்களின் மனதைப் பார்க்கமுடியும். பலத்த செலவுகொண்டதும், நிறங்களை அடிக்கடி மாற்றுவதில் பெண்ணின் முடிவு எதைக்காட்டுகின்றது. வேலை செய்பவர்கள் வேலையை முடிக்க முன்னமே, மீண்டும் வீட்டின் கலரை மாற்றியடிக்கின்ற பல சம்பவங்கள். இதை அண்மைக் காலத்தில் வீடுகளை திருத்திய பல தமிழ் வீடுகளில் காணமுடியும். இந்த முடிவை பெண் எடுக்கின்றாள். இதற்கு கணவன் இணங்கிப் போவதைத்தவிர வேறு வழிகிடையாது. இது ஒரு வன்முறை மூலம் பெண்ணால் சாதிக்கப்படுகின்றது. இதுவெல்லாம் தற்செயலானதல்ல. பெண்ணின் வக்கிரமாகிவிட்ட வாழ்வியல் முறை. அடிக்கடி வண்ணத்தின் நிறம் பிடிக்காத பெண் மனநிலை என்ன? அடிக்கடி பொருட்களை புதுசாக மாற்றும், மாற்றவிரும்பும் பெண்ணின் உணர்வு என்ன? தனது கணவன் மட்டும், மாறாது எப்படி வாழ்க்கை முழுக்க பிடித்துவிடும். பொருட்களை விரும்பியவாறு தனது அதிகாரத்தின் மூலம் பொருள் உலகில் மாற்றும் பெண், கணவனை குழந்தையை அப்படிச் செய்யமுடியாது. அவர்களை ஒரு பொருளாக விரும்பியவாறு விரும்பிய இடத்தில் வைக்கவும் எடுக்கவும் முடியாது. ஆகவே அந்தக் கற்பனைப் பிரமை, அதை நோக்கி மொழி வன்முறையாகின்றது. திட்டி தீர்க்கப்படுகின்றது. ஏன், எதற்கு, எதற்காக, நாம் திட்டுகின்றோம் என்று தெரியாது, திட்டிக்கொண்டே பெண்கள் இருக்கின்றார்கள். இதை புலம்பெயர் சமூகத்தில் அநேகமான குடும்பத்தில் காணமுடியும்.


அடிக்கடி எல்லாவற்றையும் மாற்றவிரும்புகின்றவர்கள், தனது கணவனை மனைவியை மாற்றுவதையே உள்ளார விரும்புகின்றனர் என்பதே உண்மை. ஆனால் அதைச்செய்ய முடியாது சமூகத்துக்கு நடிப்பவர்கள், கணவனை அல்லது மனைவியை திட்டுகின்றனர். திட்டுவதுக்கு காரணத்தைக் கண்டுபிடிக்கின்றனர்.


இதன் பின்னணியில் ஒரு ராணி, ஒரு மெடலிஸ்ராக இருக்கும் நினைப்பு. அவர்கள் எப்படிப்பட்ட கவர்ச்சி, அழகைக் கொண்டு இந்த உலகில் போலியாக நடித்து வாழ்கின்றனரோ, அப்படிப்பட்ட வாழ்வை நிஜத்தில் வாழ நினைக்கும் சொந்த மனப்பிரமை, குடும்பத்தினுள் பல முரண்பாடுகளை தூண்டுகின்றது. ஒரு மெடலிஸ்ற் தனது போலியான நடிப்பு சார்ந்த வாழ்வை கவர்ச்சி செய்து காட்ட விரும்புகின்றாள். முகப்பவுடர் பூசுவது முதல் தனது சப்பாத்து முதல் தலை வரை அணியும் அணிகலன்கள் வரை, கலர் முதல் விதவிதமாக அழகுபடுத்தியே, மற்றவனில் அற்ப உணர்வை ஏற்படுத்தி கவரமுடிகின்றது. இது நிஜவாழ்வில் சாத்தியமற்றது. அதை எமது பெண்கள் குடும்பத்தினுள் மற்றவருக்காக கோருகின்றாள். ஆனால் அதை குடும்பத்தினுள் அல்ல. வெளிப்பார்வைக்கு அதாவது மற்றவர்களுக்காக குடும்ப உறுப்பினரிடம் அதை கோருகின்றனர். உண்மையில் குடும்பத்தினுள் அவளால் கூட, பல்லைக்காட்டி போலியான மகிழ்ச்சியான வெளிப்பகட்டை உருவாக்க முடிவதில்லை.


வெளியில் உள்ளவர்களுக்கு காட்டவே பகட்டாக தன்னை அழகுபடுத்தும் பெண், தனது கணவனுக்கு முன்னால் தான் அழகாக இருப்பதில்லை. இதுவே வாழ்க்கையாக கருதும் பெண், கணவனுக்கு முன்னும் அப்படி இருக்க வேண்டும் என்று கருதுவது கூட கிடையாது. ஒரே விதியல்லவா எங்கும் காணப்படுகின்றது. வெளிப்பகட்டுக்கும், போலித்தனத்துக்கும் கொடுக்கும் முக்கியத்துவம், தனது கணவனுடனான குழந்தை உடனான வாழ்வில் பெண்ணால் கையாள முடிவதில்லை. நல்ல அழகான மொழியை கணவனுடன், குழந்தையுடன் உரையாடக் கூட பெரும்பாலான பெண்களால் முடிவதில்லை. இதை வெளியுலகுக்கு செய்கின்றனர்.


உண்மையில் விளம்பரத்தின் வெற்றி இது தான். போலியாக நடித்து வாழ்தல். நெருங்கி வாழ்வில் கவர்ச்சியையும், அழகையும் இழந்து சிடுமூஞ்சிக்காரியாக, கோபக்காரியாக, அலங்கோலமாக வாழ்வதே காணப்படுகின்றது. வாழ்வை போலியாக, மற்றவனுக்கு காட்டுகின்ற வாழ்வாக்கிய பின், உண்மையான மகிழ்ச்சி என்ன என்று தெரியாது போவதும், அதைத் தாமாகவே இழப்பதும் நிபந்தனையாகும். மற்றவனுக்கு காட்ட வாழ்வதும், தனக்காக வாழ மறுப்பதும், இதன் சாரமாக இருப்பதை அவர்களின் அறிவின் எல்லை உணர்த்துவதில்லை.


இதன் எதிர்மறையில் மனைவி என்ன நினைக்கின்றாள். கணவன் தனக்கு ஏற்றவனாக இல்லை என்று கருதுகின்ற மனப்பிரமையையும் உருவாக்கிவிடுகின்றாள். கணவனுக்கு எந்த தகுதியும், தான் நினைக்கும் எல்லையில் கிடையாது என்று பல பெண்கள் நம்புகின்றனர்.


பல ஆண்கள் வேலையின் சுமை தாங்கமுடியாது களைத்து வீழ்ந்து சோர்ந்து வருவதை, அவலட்சணமாக பார்க்கின்ற மனப்பிரம்மை பெண்களிடம் காணப்படுகின்றது. உழைப்பின் மதிப்பின் ஊடாக கணவனை மதிக்கின்ற மனப்பக்குவம் அவர்களிடம் அறவே இல்லாமல் போகின்றது. அவனின் உழைப்பு உருவாக்கும் பணத்தை நுகரவே, பெண்ணாக (பெண் உழைத்த போது கூட) குடும்பத்தில் அவள் இருக்கின்றாள். இயல்பாக தனக்கு ஏற்ற கணவன் அல்ல என்று கற்பிப்பதற்கு ஏற்ற, காரணத்தை பெண்கள் தாங்களாகவே கட்டமைக்கின்றனர். இதுவே சதா புறுபுறுப்பையும், தூற்றலையும் கொண்ட வாழ்வாக மாற்றுகின்றது.


பெண்ணின் வீட்டு வேலை தரும் அழுத்தம், அதன் சுமை, ஓரே வேலையை மீண்டும் மீண்டும் செய்யும் வாழ்க்கையின் சுழற்சி, கணவன் பற்றி இந்த அதிருப்தியை மேலும் பல மடங்காக்குகின்றது. இங்கு வீட்டு வேலை தவிர வெளியிலும் வேலை செய்யும் பெண்ணாக இருந்தால், அது தரும் மேலதிக சுமை வாழ்வின் மீதான சலிப்பை உருவாக்குகின்றது. இந்த நிலையில் வாழ்கின்ற ஒரு வாழ்வை, குறைந்தபட்சம் ரசிக்கத் தெரியவேண்டும். இதை புறுபுறுப்பாக, ஒரு புலம்பலாக மாற்றுவதால் என்ன பயன்? யாரையாவது திட்டித் தீர்ப்பதோ, கணவனையும் குழந்தையையும் தூற்றுவதாலோ, இதற்கு பரிகாரம் காணமுடியாது. ஆனால் பெரும்பாலான பெண்கள் இதையே செய்கின்றனர். குடும்பத்தினுள் நிலவவேண்டிய குறைந்தபட்ச மகிழ்ச்சியை இழப்பதன் மூலம், நெருக்கடியை தம்மைச் சுற்றி அதிகரிக்க வைக்கின்றனர். கணவன், குழந்தை மற்றும் தாய் தந்தை அல்லது மாமன் மாமி தமக்கு எதிராக செயல்படுவதாக கற்பித்துக்கொண்டு எதிர்வினையாற்றுகின்றனர். சதா அவர்கள் மேல் பிழை பிடிக்கின்றனர்.


குடும்பத்தில் இருந்து தன்னை அன்னியப்படுத்தியபடி, தனது கடமைகளாக இதை தலைவிதியாக கருதி, தனக்குள் ஒரு குறுகிய வட்டத்தைப் போட்டபடி சீரழிகின்ற நிலையே, பெரும்பாலான பெண்களின் உணர்வாகி விடுகின்றது. தன்னைச் சுற்றிய அதிருப்தியும், மற்றவர்கள் மேல் எரிந்து வீழ்வதும் வாழ்க்கையாகிவிடுகின்றது.


Thursday, June 21, 2007

சிங்கள இனவாதத்தின் இனச் சுத்திகரிப்பு

சிங்கள இனவாதத்தின்

இனச் சுத்திகரிப்பு

லங்கை வரலாற்றில் கடந்த பல தசாப்தங்களாக சிங்கள இனவாத அரசு இனவாதக் குண்டர்களை வைத்தும், ஆயுதப் படைகளை ஏவியும் தமிழர்களை இலங்கையின் தெற்கில் வாழும் உரிமையை மறுத்து இனச்சுத்திகரிப்புச் செய்துள்ளது. ஆனால் இப்போது சிங்கள இனவாத அரசே உத்தியோகபூர்வமாக தமிழர்களை இலங்கையின் தலைநகரத்தில் இருந்து எதேச்சதிகாரமாக வெளியேற்றி தனது அதி உச்சகரமான மனித உரிமை மீறலை செய்து, உலகம் முழுவதின் கண்டனத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளது.


இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை புரிந்து கொள்ளவும், அந்த அபிலாசைகளை தீர்ப்பதற்கோ சிறிய அளவிலும் முயலாத இலங்கை அரசு மாறாக தேசிய இனப்பிரச்சனையை ஆயுத முனையால் தீர்த்துவிடலாம் என்று வெறித்தனமாக செயற்படுகின்றது. இச்செயல் மூலம் இலங்கையில் தொடர்ந்துவரும் இரத்தக் களரியையும், மனித உரிமை மீறல்களையும் உக்கிரப்படுத்துவதற்கான அடித்தளத்தையே ராசஐபக்ஷவின் அரசு ஏற்படுத்தியிருக்கிறது.


சிங்கள மேலாதிக்க சக்திகளின் உதவியுடன் ஆட்சிக்கு வந்த ராஜபக்ஷ அரசு தமிழ் மக்கள் மீதும் அவர்களது வாழ்விடங்கள் மீதும் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தி உயிரிழப்புக்களையும் அவலங்களையும் உண்டாக்கி வருகிறது.


தமிழ்பேசும் மக்களின் வாரலாற்று வாழ்விடங்களில் இனவிகிதாசாரத்தை மாற்றி சிங்கள மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு முனைந்து வருகிறது




இதன் தொடர்ச்சியாகவே இலங்கையின் தலைநகரத்திலிருந்து "தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே" தமிழ் மக்களை வெளியேற்றியுள்ளது சிங்கள இனவாதம்.


உலகச் சமூகமே கண்டிக்கும் இச்செயலை இலங்கையில் சிங்கள இனவாதத்தையும், மேலாதிக்கத்தையும் அண்மைக்காலமாக தீனிபோட்டு தீவிரமாக வளர்த்துவருகின்ற இனவாதக் சக்திகளும் கண்டித்துள்ளன. இதில் வியப்பேதுமில்லை. "இலங்கையர்" என்ற பொதுவடையாளத்தை அனைத்து இனமக்களுக்கும் கொடுத்து, தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுத்து சிங்கள மேலாதிக்கத்தை ஒற்றையாட்சியின் கீழ் தொடர்வதே இவர்களது திட்டமாக இருந்து வருகிறது. இந்த இனவாத சக்திகள் வடிப்பது வெறும் முதலைக் கண்ணீரே!


தனது அரசே திட்டமிட்டு கட்டவிழ்த்துவிட்ட இனவாதச் செயலுக்கு, ராஜபக்ஷ வருந்துவதாக

தெரிவித்திருக்கிறார். இவரது வருத்தமும் மேலே குறிப்பிட்ட இனவாத சக்திகளின் முதலைக் கண்ணீரைப் போன்றதுதான். தனது அரசே உருவாக்கிய தீர்வுக்குழுவின் நியாமான தீர்வறிக்கையை கணக்கிலெடுக்காமல் குப்பையில் போட்டுவிட்டு உலகம்பூராகவும் ஆயுதக் கொள்வனவுக்கு அலைந்துதிரிகிறார் ராஜபக்ஷ.


ராஜபக்ஷ அரசின் அதியுச்சகரமான பாசிசச் செயலை கருமையம் கடுமையாகக் கண்டிக்கிறது.


இலங்கை அரசுக்கு இப்போது பொருளாதார உதவிகளை பகுதியாக நிறுத்தியிருக்கும் நாடுகள் தமது ஆயுத உதவிகளையும் முற்று முழுதாக நிறுத்தவேண்டும். தமிழ்பேசும் மக்களின் அடிப்படை உரிமைகளும் அபிலாசைகளும் மதிக்கப்பட வேண்டும். சமாதானத்துக்கும் நியாமன தீர்வுக்குமான அழுத்தத்தை சர்வதேச சமூகம் தொடர்ந்து இலங்கை அரசின்மீது செலுத்த வேண்டும்.


ஆனி 13, 2006 - கருமையம் -

சிங்கள இனவாதத்தின்

இனச் சுத்திகரிப்பு

தொடர்பு: karumaiyam@gmail.com


தாலிதான் பெண்ணுக்கு வேலி: ஒரு ஆணின் கூற்று

தாலிதான் பெண்ணுக்கு வேலி

ஒரு ஆணின் கூற்று. . .

சபேசன் கனடா

'மாங்கல்யம் தந்துதானே மமயேவனு. . ." என்கின்ற மந்திரச்சத்தமும், மணியோசையும், நாதஸ்வர இசையும், சந்தண சாம்பிராணிகளின் வாசனையும் அலங்கார சோடனைகளும் என்று எமது ஜம்புலன்களையும் ஆளுகின்ற ஒரு சூழ்நிலையில் வாழ்நாள் முழுவதும் உனக்கான உற்ற துணையுடன் வாழ்வின் ஆரம்பத்தை எட்டுகின்றோம் என்ற உணர்வலைகளின் எகத்தாழமான எதிர்பார்ப்புக்களுடனும் எனக்கு நீயே, உனக்கு நானே என்ற பரிபூரண ஆத்மதிருப்தியுடன் கழுத்தில் தாலியேறும் போது ஏற்படுகின்ற ஆனந்த உணர்வே எமது ஆண்களுக்கும் பெண்களுக்கும் வாழ்க்கையில் ஒரே ஒரு முறை ஏற்படுகின்றது.


இந்த கருத்தியலுக்கு எதிராக ஏங்கல்ஸ் சொன்ன வாசகம் 'திருமணம்" என்பது ஆண் பெண் இருபாலாருக்கிடையே ஏற்படுத்தப்பட்ட ஒரு (iவெரவைழைளெ) நிர்வாகம். இங்கு இருவரில் ஒருவரின் ஆதிக்கம் இருந்தே ஆகும். இந்தத்திருமணம் என்பது எங்கே நிச்சயப்படுத்தப்படுத்தப் படுகின்றது. . .? ஜயர், திருமணப்பதிவாளர் . . இல்லை ஒரு துண்டுக் கடுதாசி (திருமணப்பதிவுப்பத்திரம்) இந்த கடுதாசியை வைத்து இரண்டு மானுடங்களின் வாழ்வியலை ஒரு துண்டுக் காகிதத்தில் தீர்மானிக்கிறார்கள்.. இவற்றின் பின்னால் இந்த இரண்டு ஆண் பெண் என்ற மனித ஜீவன்களின் உணர்வுகளையும் உணர்சிகளையும் எப்படி கொலை செய்கிறார்கள் . . ?


தமிழர் வாழ்வில் காலம் காலமாக ஆணாதிக்கத்தின் விழுதுகளாக தொடரும் பெண்ணடிமைத்தனம் ரொறன்ரோ வரையும் தொடர்கின்றது. எத்தனை சந்தேகப் படுகொலைகள். . . ? எவ்வளவு குடும்ப வன்முறைகள். . ? இவற்றின் தோற்றுவாய்கள் எவை. . ?


தாலி பெண்ணுக்கு வேலி. .! உண்மைதான் எங்களது தோட்டத்து வேலி போன்றது. பாதுகாப்புக்காக இல்லை! நான் மட்டும்தான் மேயலாம் மற்றவனை மேய விடமாட்டன் . . ? இதே யதார்த்தத்தை எதிர் மறையாக மாத்திப் போட்டுப் பாப்பம். கலியாணம் கட்டினாப்பிறகு இவள் யாருடைய சொத்து என்று நிர்ணயம் செய்யும் சமூக அந்தஸ்தைக் கொடுக்கின்ற ஒரு அடையாளத்தை அந்த தாலியான அடையாளத்தை தாங்கி வருபவள் பெண்ணாக மட்டும் இருக்கின்றாள். இது கொடுமை. .! அப்படி ஒரு அடையாளம் ஆணாகிய எனக்கும் வேண்டும்.


ஆணாகிய நான் எத்தனை பெண்களிடமும் போகலாம் பெண்ணாகிய நீ எங்கும் யாரிடமும் போகமுடியாது. . எனது சொத்து நீ என்ற ஆணாதிக்கத்தை நிலை நிறுத்தும் வகையறாதான். அப்படியும் மீறிப் போனால் உனது கழுத்தில் தொங்கி மனச்சாட்சியான இதயத்துடன் தொட்டு உறவாடிக் கொண்டிருக்கும் 'தாலி" உன்னை மனச்சாட்சியாக நின்று கேள்வி கேட்கும். எவ்வளவு பெரிய பம்மாத்து. . ?


இதனை சமாளிக்க கூறுகின்ற சளாப்பல்தான் முந்தின காலத்தில ஆம்பிளையள் கலியாணம் கட்டினாப்பிறகு மெட்டி போட்டவையாம். உண்மையில் அப்படி ஒரு மெட்டிப்பழக்கம் இருந்ததேயில்லை. சரி இருந்தாலும் அது வந்ததும் தெரியாது போனதும் தெரியாமல் போனதெப்படி? ஏன் தாலியளவிற்கு முக்கியத்துவத்தை பெறவில்லை?


தமிழ் கலாச்சாரத்தில் அதிலும் முக்கியமாக இந்துக்கலாச்சாரத்தில் தாலிதான் ஆணாதிக்கத்தின் ஆணிவேர்.


இன்னமும் மோசமான நடைமுறை யதார்த்தம் என்னவென்றால் இந்த கேவலமான தாலியை மதிக்கவேண்டும் என்று வாதாடுவது ஆண்களிலும் பார்க்க பெண்கள்தான் எண்ணிக்கையில் அதிகம். ஆண் பெண் இருவகையினரின் மனங்களிலும் இது ஆழமாக பதியப்பண்ணுவதற்காக பாவித்த கருவிதான் மதம். திருமணம் என்ற மதச்சடங்கோடு இதனை இணைத்ததன் மூலம் இதனது வேர் ஆணிவேராக பாய்ந்துவிட்டது. இதனை ஆழப்பதித்ததன் காரணி இன்னுமொன்று 'தங்கம்". தங்கம் எமது வாழ்வியலில் ஒரு அழியாச்சொத்து. தாலி மஞ்சள் கிழங்கு, மஞ்சள் கொடியிலிருந்து ஏன் தங்கத்தை தேடிச் சென்றது? மதம், கலாச்சாரம், போன்று பொருளாதார அந்தஸ்து என்ற காத்திரத்தன்மையை ஆணாதிக்கத்துடன் இணைப்பதே அல்லாமல் வேறொன்றுமல்ல.


நடைமுறை யதார்த்தத்தில் தாலியை கட்டிய பல பெண்களிற்கு சில முற்போக்கான சூழ்நிலைகள் கிடைத்தும் அதன் பின்னர் இது ஒரு பிற்போக்கான 'ஆணாதிக்க அடையாளச்சின்னம்" என்று அறிவியல் ரீதியாக புரிந்த பின்னரும் கூட விடாப்பிடியாக தாலியை கைவிடத்தயாரக இல்லை. ஒன்று ஈகோ, தான் விட்ட பிழையை பிழையென்று ஒத்துக்கொள்ள முடியாமை. ஆல்லது அத்தின பேரும் அந்தமாதிரி புதுப்புடவை புதுநகை பெரிய தாலி என்று அடுக்கடுக்காக பெருமை காட்டும் போது நான் மட்டும் என்ன குறைந்தவளா? என்ற பொறாமையாக கூட இருக்கலாம். இதுவும் ஒரு வகையில் ஈகோதான்! அடுத்தது சுற்றம் சூழல் அப்பா அம்மா சமுதாயம் என்றவற்றிற்கான பயம்.


மற்றது முக்கியமானது பெண்களின் மனங்களில் இவர்களையும் அறியாமல் ஒட்டியிருக்கும் ஆணாதிக்கமே. உதாரணம், மாமியும் அம்மாவும் தங்கள் மகளுக்கும் மருமகளுக்கும் போதிக்கும் போதனை 'உன்ரை கணவனுக்காக வாழ்வதே உனது வாழ்க்கை"


எங்களது வாழ்வியலில் ஆணிலும் பார்க்க பெண்கள்தான் தாலியை காப்பாற்ற வேண்டும் என்ற பிற்போக்குத்தனத்pல் வாழ்வதற்கான காரணமே பெண்களின் மனங்களில் கூட ஆழமாக பதியவைக்கப்பட்ட ஆணாதிகம்தான். இது இவர்களையும் அறியாமல் எம்மைச் சுற்றிவர இருக்கும் 'சமூக ஒழுக்கங்கள்" ஏற்படுத்திய பாதிப்புகளே! இப்போது பெண்ணியவாதிகள் ஆத்திரமடையலாம் 'ஆண்கள் சுலபமாகக் கூறிவிடலாம் ஆனால் இங்கே கூறிய ஒழுக்கங்களை உடைப்பதற்கு முற்படும் போது ஆண்கள் சுலபமாக தப்பிவிட முடியும் ஆனால் சமூகத்தின் அழுத்தங்களும் பாதிப்புகளும் பெண்ணுக்குத்தானே அதிகம்" நிச்சயமாக மறுக்கவில்லை. . ! ஆனால் போராட்டத்தை ஏற்படுத்த . . மாற்றத்தை கொண்டுவர . . யாராவது முன்வந்தேயாக வேண்டும். முன்வருபவர்கள் பலவிதமான சவால்களையும் துன்பங்களையும் சந்திக்கவேண்டியும் நேரலாம்.


இது, எனது தோட்டம், . தான் மட்டும் மேயலாம் என்ற உரிமையை கொண்டதே 'தாலி" என்ற வேலியே அல்லாமல் பெண்ணுக்கு பாதுகாப்பிற்காக தோன்றியதல்ல தாலி.


சபேசன்