தமிழ் அரங்கம்

Sunday, October 30, 2005

ஏகாதிபத்திய தன்மை பெற்று

புலியெதிர்ப்பு அரசியலாக பரிணமிக்கும் பாரிஸ் இலக்கியச் சந்திப்பு


நவம்பர் 12-13 இல் பாரிசில் இலக்கியச் சந்திப்பாம். அங்கு அவர்கள் தமிழ் மக்களின் வாழ்வு சார்ந்தும், உலக மக்களின் வாழ்வு சார்ந்தும், தாம் படைத்த இலக்கியத்தையும் தமது அரசியலையும் பற்றி பேசப்போகின்றார்களாம். புலிக்கு மாற்றாக, புலி அல்லாத மக்கள் இலக்கியம் அரசியல் பற்றி பேசப்போகின்றார்களாம்;. எகாதிபத்தியத்தை எதிர்த்து, உலகமயமாதலை எதிர்த்து, பேரினவாத சிங்கள அரசை எதிர்த்து மக்கள் இலக்கியம், மக்கள் அரசியல் பற்றி பேசப் போகின்றார்களாம். நம்புங்கள் இந்த அரசியல் மோசடியை.

இந்த மோசடிக்காரர்களின் கடந்தகால அரசியல் வரலாறோ, புலம்பெயர் நாட்டில் எப்போதும் அற்பத்தனமானதாகவே இருந்துள்ளது. புலிகள் ஒருபுறம் என்றால், மறுபுறம் இவர்கள் மக்களின் முதுகில் எறி நிற்கவே எப்போதும் பிரயத்தனம் செய்கின்றனர். இலக்கிய சீராழிவுவாதிகளாகவே வாழ்ந்து சீராழிந்துபோன நிலையில், இன்று இதன் ஒரு பகுதி சர்வதேச ஆக்கிரமிப்புக்கு இசைவாகவே புலியெதிர்ப்பு அரசியல் வாதிகளாகவே புனர்ஜென்மம் எடுத்து நிற்கின்றனர்.

புலியைப் போல் புலியெதிர்ப்பு கும்பல் மக்கள் நலன்களென எதையும் மக்களுக்காக முன்வைப்பதில்லை. புலியின் மக்கள் விரோத நடத்தைகளை மட்டும் பொறுக்கியெடுத்து எதிர்க்கும் இவர்கள், அதை மக்கள் நலன் சார்ந்தாக பசப்புகின்றனர். இதை மக்களிடம் எடுத்துச் சென்று, அரசியல் ரீதியாக அவர்கள் தமது சொந்த அதிகாரத்துக்காக போராட அழைப்பதில்லை. மாறாக ஏகாதிபத்திய தயவில் புலியெதிர்ப்பு, இதுவே இவர்களின் அரசியல் குறிக்கோலாகியுள்ளது. இதை எடுத்தியம்பவே இங்கு கூடுகின்றனர்.

இவர்களின் சந்திப்புகள் முதல் அரசியல் மற்றும் இலக்கிய முன்னெடுப்புகள் அனைத்தும், மக்களுக்கானதாக மக்களைச் சார்ந்து நின்று முன்னெடுக்காதவரை, அவை நிச்சயமாக பிற்போகனவையே. மக்களின் சமூகப் பொருளாதார வாழ்வுடன் தொடர்புடையதாக அல்லாத ஒரு நிலையில், இவை உள்ளடக்க ரீதியாக பிற்போக்கு அரசியல் சக்திகளின் கால் பாதத்தையே துடைத்துவிட விரும்பும் முயற்சிகளே. புலியெதிhப்பு அணி என்ன செய்கின்றது என்றால் பேரினவாதத்தையும், எகாதிபத்தியத்தையும் மென்மையாக விமர்சித்தபடி, புலி அழிப்புக்கு அவர்களை அழைக்கின்றனர்.

அதாவது புலிகளை விட சிங்கள பேரினவாத்தையும், ஏகாதிபத்தியத்தை மென்மையானதாக காட்டுவதே புலியெதிர்ப்பின் மைய அரசியலாகும்.
புலியை பிரதான எதிரியாகவும், ஏகாதிபத்தியம் மற்றும் பேரினவாதத்தை மென்மையான எதிரியாகவும், அதேநேரம் நண்பனாக இருப்பதாக கட்டுவதே இவர்களின் அரசிலாகும்;. இதையே இச் சந்திப்பில் செய்யவுள்ளனர்.

அதாவது தன்னார்வக் குழுக்களின் அரசியல் செயல்பாட்டை ஒத்த ஒரு அரசியல் மோசடியைச் செய்கின்றனர். மிக நெருக்கமாக நெருங்கி நின்ற புலி அரசியலுக்கும் உங்களுக்கும் அரசியல் ரீதியாக என்ன வேறுபாடுகள் உண்டு என்று கேட்டால், கண்ணை உருட்டி முழிக்கின்றனர். உடனே புலிக்கொலை, ஜனநாயகமின்மை, சிறுவர்களை படைக்குச் சேர்த்தல் இவை தான் முரண்பாடு என்பர். இதை விட்டால் வேறு முரண்பாடுகள் இவர்களுக்கு இடையில் கிடையாது. இந்த கும்பல் அதிகாரத்தைப் பெற்றால் இதைத் தான் செய்வார்கள். உதாரணமாக புலியை அழித்தல் என்ற இவர்களின் கோட்பாடு, இவை அனைத்தையும் அப்படியே செய்யும். இதைவிட்டால் வேறு வழி எதுவும் இவர்களிடம் இல்லை. முன்பு இதைத்தான் புலியைப் போல் செய்தவர்கள் தான். இன்று செத்த சாரைப் பாம்பாகவே கிடந்தவர்கள், உயிர்த்தெழ துடிக்கின்றனர். புலிகளின் மனிதவிரோத நடத்தைகளே, இவர்களின் உயிர்துடிப்புள்ள அரசியலிலும் உள்ளது. புலியின் அரசியல் தான், புலியெதிர்ப்பு அரசியலும் கூட. மறுத்து மற்றாக உங்கள் அரசிiலை வைக்க முடியுமா? என்றால், விழிபிதுங்க எதுவும் கிடையவே கிடையாது என்கின்றனர். ஆனால் ஏகாதிபத்திய தலையீட்டை லட்சியமாக கொண்டு, தமது கருத்துகளையே பிதுக்கிவிடுகின்றனர். மக்களுக்காக அவர்களின் விடுதலைக்காக மட்டும், கருத்து எதுவும் சொல்ல முடியதவராக உள்ளனர்.

தமிழ்மக்களின் பெயரில், அவர்களின் மீட்பாளர்கள் என்று கூறிக் கொள்ளும் இந்த கும்பல்களின் மோசடிகள் பலவிதமானவை. இதில் இலக்கியச் சந்திப்பும் ஒன்று. கடந்த 15 வருடமாகவே இந்த இலக்கியச் சந்திப்பு, தமிழ் மக்களுக்காக எதைப் படைத்துள்ளது என்று நேர்மையாக ஒருவன் எழுப்பும் கேள்வி, அதன் உண்மை முகத்தைக் காணவே போதுமானது. மக்கள் நலன் என்ற அடிப்படையில் ஒருவன் நேர்மையாக நின்று இதைக் கேட்பனாகில், அவனுக்கு வேறு எந்த அரசியல் அடிப்படையும் புரிந்துகொள்ள தேவையற்றது. ஒரு தனிமனிதனின் சொந்த நேர்மையே போதுமானது, இந்த இலக்கிய சந்திப்பின் கபடத்தையும் அதன் நாடகத் தன்மையையும் புரிந்துகொள்ள.

இந்த இலக்கிய ஜம்பவான்கள் யாரும் யாரையும் கட்டுப்படுத்தா இலக்கியச் சந்திப்பு என்று தம்மைத்தாமே கூறிக் கொண்டாலும், இதற்குள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் நிழல் தலைமை ஒன்று செயல்பட்டது. உண்மையில் துதிபாடிகளும், பிரமுகர்களும், தன்னார்வக் குழுக்களுடன் தொடர்புகளை கொண்டுள்ளவர்களும், புலி எதிர்ப்புக் கும்பலுடன் கூடி நிற்பவர்களின் ஆதிக்கம் தான், இதனை வழிநடத்துகின்றது. இதற்கு பூதக் கண்ணடி தேவையில்லை.

இங்கு நீங்கள் வலைபோட்டு தேடினலும், யாரும் மக்கள் நலனை முதன்மைப்படுத்தி நிற்பதை இனங்காணவே முடியாது. மக்கள் நலன் சார்ந்து மூச்சு எழுவதைக் கூட, இவர்கள் இச் சந்திப்பில் அனுமதிப்பதில்லை. மக்கள் நலனை கோரிய பலரை, சந்திப்பு தனிமைப்படுத்தி துரத்தியடித்தது. இதுவே இலக்கியச் சந்திப்பின் சுதந்திரமும், ஜனநாயகம். புலிக்கு எப்படி கொலை வெறிகொண்ட ஒரு அரசியல் உண்டோ, அப்படி இதற்கு ஒரு அரசியல் உள்ளது. அது புலியைப் போல் மக்கள் நலன் என்பதை எட்டி மிதித்து, அதை சுடுகாட்டுக்கு அனுப்புவதுதான். முதலில் இவர்கள் செய்தெல்லாம் மக்களின் நலனைக்கோரிய 1987 க்கு முன் படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கனவரின் அரசியல் குறிக்கோலை, அரசியல் ரீதியாக புதைத்தது தான். பின் அப்படிப்பட்ட நபர்கள் வரலாற்றில் மக்களுக்காக வாழ்ந்து மடிந்த வரலாற்றையே, இருட்டடிப்பு செய்தது தான். மக்கள் விரோத கொலையாளிக்கு நிகரான ஒரு செயலையே, மீண்டும் இந்த இலக்கிய அரசியல் ஜம்பவான்கள் செய்து முடித்தனர். பின் தம்மைத் தாம் புனிதமானவராக காட்டி, சமூகத்தையே தம் பின்னால் அழைக்கின்றனர்.

தமிழ் பேசும் மக்கள் வாழ்வில் நீடித்த சமூகத் துயரங்கள், இந்த தேசிய போராட்டத்துடன் அக்கபங்கமாகவே சோடி சேர்ந்து நிற்கின்றது. சோடி சேர்ந்த போராட்டம் படிப்படியாக அக்கபக்கமாக வந்த மக்களின் வாழ்வை அழித்து, அதில் இன்று குதிராடடம் போடுகின்றது. மனித துயாரங்கள் எங்கும் எதிலும் புரையோடி நிற்கின்றது. இந்த நிலையில் தான், இந்த இலக்கிய அரசியல் ஜம்பவான்கள் கூடிக்கூத்தாடி திண்டு குடிக்கின்றனர். அந்த மனிதத்தையிட்டு எள்ளவும் கூட சமூக அக்கறையற்று முதுகுசொறிந்து பினாற்துவதே, இந்த சந்திபுக்களில் அன்றாடம் நடக்கின்றது.

புலிகளுடன் முரண்பட்டவர்கள் என்ற அடையளத்துடன் வந்து கூத்தாடிய இந்தக் கும்பலின் ஒரு பகுதி, இன்று புலியுடன் சங்கமித்து நிற்கின்றது. மற்றொரு பகுதி சாதாரண மனிதனை விடவும் மிகமோசமான பிழைப்பவாத சமூக விரோதிகளாகவே மாறிவிட்டனர். எஞ்சியோர் முதுகுசொறிவோரும், துதிபாடிகளுமாவர். இவர்கள் கூடி கூத்தாடுவதையே இலக்கியச் சந்திப்பாக்கினர். இன்று இதற்குள் புலியெதிர்ப்பு அணியினரும், புதிய புலியெதிர்ப்பு அணியினரும் புகுந்து, இதைக் கைப்பெற்றும் போராட்டம் தொடங்கியுள்ளது. இதுவே லண்டன் பெண்கள் சந்திப்பிலும் நடந்தது.
வழமையான இலக்கிய சந்திப்பையொட்டி பெண்களுக்கும், புலியெதிர்ப்பு பெண்களின் தலையிட்டுக்கும் இடையிலான போராட்டமே, பெண்கள் சந்திப்பு பற்றிய அண்மைய சர்ச்சையாகும். இதுவே சென்ற இலக்கியச் சந்திப்புக்கு பின் நடந்தது. தற்போது ஏகாதிபத்திய தலையீட்டுகள் மூலம், புலிக்கு மாற்றாக அதிகாரத்தில் உக்காரவிரும்பும் புலியெதிர்ப்பு கும்பல் கூடும் ஒரு கூட்டமாகவே பாரிஸ் இலக்கிய சந்திப்பு, அரசியல் சந்திப்பு மாறிவிட்டது. இது சென்ற கூட்டம் முதலே புது அவதாரம் பெற்று நிற்கின்றது. முன்கூட்டியே கருத்துரைக்க கேட்டவர்களுக்கு, இம்முறை இச்சந்திப்பு கருத்துக்கூறும் உரிமையையே மறுத்துரைத்துள்ளது. மேடையை அவர்கள் பயன்படுத்திவிடுவார்கள் என்று கூறியே, இந்த மறுப்புக்கு சுயவிளக்கம் வழங்கிநிற்கின்றது. இவர்கள் கூறும் ஜனநாயகம், சுதந்திரம் முதல் அனைத்தும் போலித்தனமானதே என்பதையே மீண்டும் இது அம்பலமாகி நிற்கின்றது.

மறுபக்கத்தில் கடந்த சந்திப்பு முதல் இரண்டுபட்ட குழுவாக பிளவுற்று வருகின்றது. பாரிஸ்; சந்திப்பு அதை மேலும் ஆழமாக பிளக்கும். கடந்த பதினைந்து வருடத்தில் புலியல்லாத தரப்பு, சர்வதேச தலையீட்டுக்கான சூழலுடன் தனக்குள் பிளவுறுகின்றது. தீவிர புலியெதிர்ப்பாகவும், மற்றையது புலி எதிர்ப்பு பேசாத சமூக சீராழிவு இலக்கிய கும்பலாக பிளவுற்று வருகின்றது. இதுவே இணையத்தளங்களில் கூட, ஒரு விவாவதத்தை கூட இதன் எல்லைக்குள் தான் புலம்பின.

இவர்களுக்கு இடையிலான இந்தப் பிளவை, பாரிஸ் இலக்கியச் சந்திப்பு தெளிவாக உருவாக்கும்;. புலிகளை எதிர்க்கும் புலியெதிர்ப்பு அணி, இம்முறை பலம் பொருந்திய தாக்குதல் திசையில் பாரிஸ் இலக்கியச் சந்திப்பையே இரண்டாக்குவர். இலக்கியச் சந்திப்பு மீதான அதிகாரத்தை பெறும் நோக்குடன், திட்டமிட்ட சதிகளுடன் அவர்கள் கூடுகின்னறனர். இதற்காக பல புதிய புலியெதிhப்பு அணியினர் களத்தில் இறங்கியுள்ளனர். பல புதிய புலியெதிர்ப்பு விதண்டவாத அரசியல் பேசுபவர்கள் களத்தில் உள்ளனர். எங்கும் பொய்யும் புரட்டும் இன்றைய மொழியாகிவிட்டது. செய்திகள் முதல் அனைத்தும் புனையப்படுகின்றது. கொலைகளைச் செய்துவிட்டு மற்றவன் மீது போடப்படுகின்றது. யாரும் அதை நம்பத் தயாரற்ற நேரத்திலும் கூட புனையப்படுகின்றது. புனைவை புலிகள் மட்டுமல்ல, புலியெதிர்ப்பு அணியினரும் கூட புனைகின்றனர். நம்பகத்தன்மை, நேர்மை என எதுவும் பொதுவான சமூக சிந்தனையோட்டத்தில் நலமடிக்கப்பட்டு விட்டது.

இந்த இலக்கியச் சந்திப்பும் இதைத்தான் செய்யவுள்ளது. மக்களை அரசியலில் முட்டாளாக்கி ஏகாதிபத்தியத்துக்கு சோரம் போகும் புலியெதிர்ப்பு அரசியலையே, இந்த இலக்கியச் சந்திப்பு நிலைநாட்ட முனைப்புக் கொண்டுள்ளது. புலிக்கு எதிரான சர்வதேச அழுத்தங்களால் எற்பட்டு வரும் தீர்மானகரமான முடிவுகளை ஒட்டி, இந்த இலக்கியச் சந்திப்பும் அதன் பின்னால் சரிந்து செல்வதை யாரும் தடுக்கமுடியாது. மக்கள் விரோத அரசியல் தளத்தில் நிற்கும் புலிகள், புலியல்லாத புலியெதிர்ப்பு அணியினர் கொண்டுள்ள சர்வதேச மக்கள் விரோத நிலைப்பாடு, அதிகாரம் பெற்ற ஒன்றாக மாறிவருகின்றது.

எம்முன்னுள்ள பணி என்ன?

இந்த மக்கள் விரோத புலியெதிர்ப்பு மற்றும் இலக்கிய சீராழிவு சந்திப்புகளைப் பகிஸ்கரிப்போம்!

மக்களின் சமூக பொருளாதார அரசியலை முன்வைத்து இதை அம்பலப்படுத்தி கிளர்ச்சி செய்வோம்!

இதை அம்பலப்படுத்தி இந்த சந்திப்புக்கு வெளியிலும், ஏன் சந்திப்பிலும் கூட கிளர்ச்சி செய்வதே, மக்கள் நலனை விரும்பும் ஒவ்வொருவர் முன்ளுள்ள நேர்மையான அரசியல் மற்றும் இலக்கிய பணியாகும்!

1 comment:

P.V.Sri Rangan said...

இரயாகரன் இச் சந்திப்புப்பற்றிய கருத்துக்களோடு முரண்பட எதுவுமேயில்லை.

இலக்கியச் சந்திப்பானது பெரிய ஆற்றலுள்ள ஒன்று அல்ல.அதைவிட அவர்களுடைய பிரச்சார ஊடகங்கள் இன்னும் வலுவானது.இச் சந்திப்பில் நீங்கள் உணர்கிற மாதிரப் பெரிய வலுவான அரசியல் முன்னெடுப்பு எதுவும் நிகழா!

வடிவாக மூக்கு முட்டப் பருப்புக்கறியம்,கோழிக்கறியும் சேர்த்துச் சோறு சாப்பிட்டுவிட்டு,குலைக்கவேண்டியதுதான்.

குலைப்பதற்கு ஏற்ற சிவலிங்கம் ஐந்து மணித்தியலமாக எதையோ கத்தப் போகிறாராம்.'புலி,புலி,புலி,பாசிசம்,பாசிசம்,பாசிசம்,இந்தியா,இந்தியா,இந்தியா.....இதுவே சிவலிங்கத்தின் வாயிலிருந்து வரும்'.

நல்லபதிவு.இந்தச் சந்திப்பை யாராவது மாற்றுக்குரல் ,அது-இதுவென்றால் அவருக்கு 95'க்குப் பின்பு நடந்த திருக்கூத்துத் தெரியாது!