தமிழ் அரங்கம்

Wednesday, April 12, 2006

சித்திரையில், இப்புத்திரன் மரணமா?

சித்திரையில், இப்புத்திரன் மரணமா?

சுதேகு
12.04.06

யேசுவின் பிறந்த நாளை மார்கழி 25 இலும் -தை 6 இலும் கொண்டாடுவது போல, இறந்த நாளான 'பெரிய வெள்ளியை' ஒரு நிலையான திகதியில் இவர்கள் கொண்டாடுவதில்லையே ஏன்? இயேசு இறக்கும் போது அவருடன் கூடவே இருந்த சீடர்கள் கூட இதைச்சொல்லவில்லை. தீர்க்கதரிசனங்களோ, வெளிப்படுத்தல்களோ கூட இதைச் சொல்லிவைக்கவில்லை. கத்தோலிக்கத்தின் ஞான உபதேச வகுப்புக்களில் இயேசு 30 வயதில் காணாமற்போய் பின்னர், 33 வயதில் சிலுவையில் அறையப்பட்டதாக கற்பிக்கப்படுகிறது. ஆனால் 'சூரிய ஒளியினர்' இயேசு சித்திரை மாதம் 7ம் திகதி 30ம் ஆண்டு சிலுவையில் அறையப்பட்டதாகக் கூறுகின்றனர் (07April 30). அன்றைய தினம் கருப்பு மேகங்கள் சூரியனை மறைத்ததாகவும், சுமார் 36 மணித்தியாலங்களாக பூமி சூடாகவும் அதிர்வுடனும் இருந்ததாகவும் கூறுகின்றனர்.

இயேசுவின் இறப்பு-உயிர்ப்பு நாட்களை பாஸ்காவின் கடைசி நாட்களில் கொண்டாடுகின்றனர். யூத வருடத்தின் முதல் மாதமாகிய நிசான், (சித்திரை) முதல் பிறை நிலாவின் தோற்றத்துடன் ஆரம்பமாகிறது. இந்த நாட்காட்டியின்படி நிசான் 14ம் தேதி அன்று இயேசுவின் இராப்போசனம் கணக்கிடப்படுகிறது. அன்று யூதர்கள் பழைய கிரேக்க கலண்டரையே பயன்படுத்தினர். இவர்களின் நோன்புகள் பூரண சந்திரனை ஒட்டியே பின்பற்றப்பட்டன. முக்கியமான கடன் திருநாட்கள், பாஸ்கா என்பனவும் பின்னர் கிறிஸ்தவர்களால் இவ்வழிமுறையிலேயே கடைப்பிடிக்கப்பட்டன.
கலண்டர் ஒரு வருடத்திற்கான படிவமாக பனிக்காலம், இலை துளிர்காலம், கோடைகாலம், இலையுதிர்காலம் என நான்கு காலங்களைக் கொண்டிருந்தது. ஒரு வருடம் 12 மாதங்களையும் கொண்டிருந்தது. இது சூரிய, சந்திர குடும்பங்களில் இருந்து பெறப்பட்டது. கலண்டர் இதுகாலவரை 3 விதமாகக் கணிக்கப்பட்டது.

1.பூமி தனது சுழற்றியில், அதன் நேர்கோட்டுக்கு சூரியன் வருதல்.இக்கணிப்பு உரு வருடம் -365 நாட்கள் 5மணி 48 நிமிடங்கள்
2.சூரியனையும்-மற்றைய கிரகங்களையும் வைத்து கணிப்பிடும் முறை. இது ஒரு வருடத்தில் 365 நாட்கள் 6மணி 9 நிமிடம் 10 செக்கண்டுகள்.
3.பூமி தனது சுழற்சியில் சூரியனுக்கு மிக அண்மையாக வருவதை வைத்துக் கணிப்பிடும் முறை. இது ஒரு வருடத்தில் 365 நாட்கள் 6மணி 13 நிமிடங்கள் 53 செக்கண்டுகள்

உலகின் முதலாவது கலண்டர் கி.மு 3000 வருடங்களாக பபிலோனியர்களால் பாவிக்கப்பட்டு வந்தது. இது 'யுனி சூரியக் கலண்டர்' என அழைக்கப்பட்டது. இது ஒவ்வொரு பௌர்ணமிகளை மாதங்களாகக் கணக்கிட்டு, 12 நிலா மாதங்களைக் கொண்ட வருடமாகக் கணிக்கப்பட்டது (கூடுதலாக ஒரு மாதம் இடையே வருவதுண்டு) .இவ் நிலா வருடம் 345 நாட்களைக் கொண்டது. (ஒரு மாதம் 29.5 சராசரி நாட்களைக் கொண்ட 12 மாதங்களை உள்ளடக்கிய ஒரு வருடம்) எகிப்த்தின் பழங் குடியினர் பபிலோனியரின் கலண்டரைத் தெரிந்து கொண்டிருந்தாலும், இவர்கள் நைல் நதி நாகரீக விவசாயப் பாரம்பரியத்தைக் கொண்டவர்கள் ஆகையால் இவர்கள் சூரிய வருடத்தையே கணக்கிட்டனர். வருடம் 365 நாட்களைக் கொண்டதாகவும், மாதம் 30 நாட்களைக் கொண்ட 12 மாதங்களாகவும் கணக்கிடப்பட்டது. கடைசி 5 நாட்களும் அவர்களின் ஐந்து தெய்வங்களின் பிறந்தநாட்களாகக் கணிக்கப்பட்டது.

1 Osiris
2 Horus
3 Sels
4.Nephthys
5. Isis

இக்கலண்டர் கி.மு 100-44 லூலிய சீசரால் மாற்றியமைக்கப்பட்டது. இவர் கிரேக்க வானிலை அறிஞர்களின் உதவியுடன் 355 நாட்களைக் கொண்ட குறுகிய வருடத்தை உருவாக்கினார். மேலதிக நாட்களும் மாதங்களும் சேர்க்கப்பட்டன. ரோமப் பேரரசின் அரசியல் பொருளாதார காரணங்களுக்காக குறைந்த நாட்களைக் கொண்ட வருடத்தை உருவாக்கி,மிக விரைவாக செல்வத்தைத் திரட்டி அரச கல்லாக்களை நிரப்புவதையே குறியாகக் கொண்டிருந்தனர். இதனூடாக உரோமப் பேரரசை விஸ்தரிக்கும் பேராசையையும் அது கொண்டிருந்தது.

கி.பி 325ம் ஆண்டளவில் கிறிஸ்தவ வானிலை ஆய்வாளர்களால் பாஸ்கா பவுர்ணமி அன்றைய தேவாலயங்களுக்காக கணக்கிட்டுக் கொடுக்கப்பட்டது. இந்தப் பவுர்ணமி - கிறிஸ்துசபைக்குரிய குருசங்கத்தாரின் பூரண சந்திரன் என்று அழைக்கப்பட்டது. அதாவது பூமி தன்னைத்தானே சுற்றி சூரியனையும் சுற்றிவரும் பாதையில், பூமியின் நிலைக்கோட்டுக்கு எதிராக சூரியன் அண்மித்துவரும் வசந்தகாலத்தில் ஏற்படும் முதலாவது பௌர்ணமி ஆகும். இந்நிகழ்வு வருடம் தோறும் மார்ச் மாதம் 21ம் திகதி பூமியின் நிலைக் கோட்டுக்கு எதிராக சூரியன் வருவதால், இதன் பின்னர் வரும் முதலாவது பூரண நிலவு 'விடுதலை உற்சவத்திக்குரிய பௌர்ணமி' -பாஸ்கா பௌர்ணமி- என்று அழைக்கப்படுகிறது. இப் பௌர்ணமி மார்ச் 22ம் திகதி முதல் ஏப்பிரல் 25ம் திகதிகளுக்கு இடையில் வருவதால், பாஸ்காவும் ஒரு நிலையான திகதியில் இவர்களால் கொண்டாட முடிவதில்லை. இப் பவுர்ணமிக்குப் பின்னர் வரும் முதலாவது ஞாயிறு இயேசுவின் 'உயிர்த்த ஞாயிறா'கக் கொண்டாடப்படுகிறது. இதிலிருந்தே பாஸ்கா கணிப்பிடப்படுகிறது.
இயேசுநாதரின் 40 நாள் நோன்பையும் பாடுகளையும் நினைவுகூரும் வகையில் இன்று பாஸ்கா கொண்டாடப்படுகிறது. இது 46 நாட்களைக் கொண்ட பாஸ்கா நோன்பாகும். இவ் நோன்பு நாட்களில் வரும் 6 ஞாயிறு - ஓய்வுநாட்கள் இதிலிருந்து விலக்கப்பட்டதாக இருந்தது. பாஸ்காவின் கடைசி வாரம் 'குருத்தோலை ஞாயிறு'டன் ஆரம்பமாகிறது. யூதர்களின் பாஸ்கா திருவிழாவுக்காக தங்கள் தூய்மைச் சடங்குகளை நிறைவேற்றும் பொருட்டு பலரும் நாட்டுப்புறங்களிலிருந்து யேருசலேமில் கூடுவது வழக்கமாக இருந்தது. இவ்வாறு கூடிய மக்கள் மத்தியில் இயேசு யெருசலேமுக்குள் நுழைகிறார் என்று கேள்விப்பட்டு குருத்தோலைகளை ஏந்தியவண்ணம் அவரை வரவேற்றதாகக் கூறப்படும் பாஸ்காவின் கடைசி வாரம், இக் 'குருத்தோலை ஞாயிறு'டன் ஆரம்பமாகிறது.

இக் குருத்தோலை ஞாயிறு உரோமப்பேரரசில் கி.பி 12ம் நூற்றாண்டுவரை வழக்கத்தில் இருந்திருக்கவில்லை. மேற்குலக நாடுகளில் முதன்முதலாக ஸ்பானியாவில் இது கொண்டாடப்பட்டதாக அறியமுடிகிறது. அதுவும் கி.பி நான்காம் , ஐந்தாம் நூற்றாண்டுகளிலேயே இது கொண்டாடப்பட்டது.

திங்கள்

யெருசலேமின் தேவாலயம் இந்நாளிலேயே தூய்மை செய்யப்பட்டதாக நம்பப்படுவதால், இந்நாளில் அதிக முக்கியமான விடயங்கள் எதுவும் இந்நாளில் நடைபெறுவதில்லை. மத்தேயு 21ம் அதிகாரம் 12ம்,13ம் வசனத்தை இதற்கு அறிக்கை இடுகின்றனர். அதாவது ''பின்பு இயேசு கோவிலுக்குள் சென்றார்: கோவிலுக்குள்ளேயே விற்பவர்கள், வாங்குபவர்கள் எல்லாரையும் வெளியே துரத்தினார். நாணயம் மாற்றுவோரின் மேசைகளையும் புறா விற்போரின் இருக்கைகளையும் கவிழ்த்துப்போட்டார்'' ,''என் இல்லம் இறைவேண்டுதலின் வீடு என அழைக்கப்படும் என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்குகிறீர்கள்'' என பரிசேயருக்கும் இயேசுவுக்கும் இடையில் நடைபெற்ற சம்பவமாக இதை நினைவு கூருகின்றனர்.

செவ்வாய்

இந்நாளில் இரண்டு சம்பவங்கள் நினைவு கூருவதாகச் சொல்லப்படுகிறது. ஒன்று -இயேசுநாதரை நாஸ்திகக் குறிப்பு ஒன்றை செய்ய ஆளாக்க முயன்றதாகவும் மற்றையது இயேசுநாதர் யெருசலேமின் அழிவுபற்றி ஒலிவமலைக் குன்றில் சமிக்ஞை தெரிவித்ததாகவும் இந்நாள் நினைவு கூரப்படுகிறதாம்.

முதாவது சம்பவம் அதிகாரப் போட்டியில் எழுந்த வினாக்களையே நாஸ்திகக் கருத்தாக இங்கு கூறப்படுகிறது. பரிசேயர்கள், தலைமைக்குருக்கள் மற்றும் மூப்பர்கள் ''எந்த அதிகாரத்தில் நீர் இவற்றைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தது யார்? என்ற தருக்கத்தில் இயேசுவை ஆளாக்கியதையே இங்கு கூறுகின்றர். இயேசு மறுமொழியாக ''யோவானுக்கு, திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் விண்ணுலகத்திலிருந்தா? அல்லது மனிதரிடமிருந்தா வந்தது? என்று திருப்பிக்கேட்டு, தனது அதிகாரம் எங்கிருந்து வந்தது என்று நானும் கூறமாட்டேன் என்று இயேசு சொன்னதான சம்பவத்தையே இங்கு குறிக்கின்றனர். ஒலிவ மலைமீது இயேசு அமர்ந்திருந்தபோது, அவரது சீடர்கள் எருசலேம் அழிவு எப்பொழுது நிகழும் என்று கேட்டபோது அவர் பதிலளித்ததையே இங்கு நினைவுகூருகின்றனர்.

ஆனால் 70ம் ஆண்டே யெருசலேம் கோவில் அழிவுக்கு உள்ளானது. 63ம் வருடம் வரையும் எந்த எருசலேம் வாசிகளும் இவ் அழிவை அறிந்திருக்கவில்லை. 63ம் வருடம் எருசலேமில் இருந்த ஒரு தனிமனித விவசாயி முதன் முதலாக எருசலேம் அழிவுபற்றி இக்கோவிலில் ஒவ்வொரு நாளும் பெரும் குரலெடுத்து அழுதார். ஊர்வாசிகளும், சில தலைவர்களும் அவரைத் தடுத்தும் அவர் இவ்வாறு தினமும் அழுதுகொண்டிருந்தார். அவரைப் 'பைத்தியக்காரன்' என்று நையாண்டி செய்து அவரைப் புறந்தள்ளி வைத்திருந்தனர். ஆனாலும் அவரின் இச்செயல் தொடரவே, அவர் தாக்கப்பட்டார். இருந்தும் இவர் சாகும்வரை இதைத் தொடர்ந்தார். இவர் இறந்து 7வருடங்களும் 5 மாதங்களும் முடிந்தவேளை எருசலேம் தேவாலயம் அழிக்கப்பட்டது (70).

புதன்

இப்புதன் 'ஒற்றர் புதன்' என்றும் 'விபூதிப் புதன்' என்றும் அழைக்கப்படுகிறது. இந்நாளில் தான் இயேசுவை காட்டிக் கொடுக்க யூதாஸ் ஒத்துக்கொண்டு, திடடம் தீட்டப்பட்டதாகவும், விபூதிப் புதன் மனிதன் தன்னை புதிப்பித்துக் கொள்ளும் - தன்னை ஆன்ம மீட்புக்குப் தயார்ப்படுத்தும் நாளாகவும் நினைவு கூரப்படுகிறது

வியாழன்

இது 'பெரிய வியாழன்' என்று அழைக்கின்றனர். இயேசு தனது கடைசி இராப்போசனத்தை தம் சீடர்களுடன் நடத்தியதாக நினைவு கூரப்படுகிறது.

வெள்ளி

இது 'பெரிய வெள்ளி' என்றும் 'நல்ல வெள்ளி' என்றும் அழைக்கப்படுகிறது. அது இயேசுவை சிலுவையில் அறைந்த நாளாக நினைவு கூரப்படுகிறது. கி.பி 4ம் நூற்றாண்டிலேயே இவ்வெள்ளி தனியாகக் கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதுவரை இயேசுவின் உயிர்ப்புடன் சேர்த்தே இது கொண்டாடப்பட்டது. இயேசுவின் மரணத்தைவிட உயிர்ப்பே பிரதானப்படுத்தப்பட்டது. உயிர்ப்பு ஓய்வுநாளில் வருவதும் இதற்கு ஒரு காரணமாகும். மற்றும் இயேசுவின் உயிர்ப்பு பற்றி யாக்கோப் போன்றவருக்கு கருத்து முரண்பாடு இருந்ததால் பவுல் போன்றவர்கள் உயிர்ப்பை பிரதானப்படுத்தினர் என்பதும் இதற்கு ஒரு காரணமாகும்.

சனி

இயேசுவின் திருப்பாடுகளின் 5 காயங்களைக் குறித்தும், அவர் உடலில் பூசப்பட்ட வாசனைத் தைலங்களைக் குறித்தும் இந்நாள் நினைவு கூரப்படுகிறது.

ஞாயிறு

இது 'உயிர்த்த ஞாயிறு' என்று அழைப்பர். இது இயேசுவின் உயிர்ப்பை நினைவுபடுத்தும் முகமாகவும், பாஸ்காவின் கடைசி நாளாகவும் கொண்டாடப்படுகிறது.

இப்பாஸ்கா பண்டிகையுடன் பல மரபார்ந்த வடிவங்களும் இணைக்கப்பட்டு இன்றுவரை கொண்டாடப்படுகிறது. இதன் முக்கிய சின்னமாக 'பாஸ்கா முட்டை' இன்றுவரை பிரபல்யமாகவுள்ளது. கிறிஸ்தவ உலகம் முழுவதும் பரந்த மதமாக தமது ஆக்கிரமிப்புக்களால் ஆக்கப்பட்டபோது, பண்டைய இந்தியா முதற் கொண்டு பொலிநீசியா வரைக்கும், மற்றும் ஈரான் உள்ளீடாக கிரீசில் இருந்து லற்வியா - எஸ்ரோனியா , பின்லாந்து வரையும், மத்திய அமெரிக்காவிலிருந்து தென் அமெரிக்காவின் மேற்கு கரையோரப் பகுதிகள் வரைக்கும் எல்லாப் பண்டைய பண்பாடுகளிலும் முட்டை மக்களின் வாழ்வின் சின்னமாகவே இருந்து வந்திருக்கிறது.

பழைய லத்தீன் பழமொழிகளில், சகல உயிர்ப்பும் முட்டையிலிருந்து உருவாவதாக எடுத்துரைக்கப்பட்டது. பண்டைய காலத்து பழங்குடியினரின் கருத்துப்படி, வசந்தகால மரபார்ந்த கிருகைகள் இந்த உலகம் முட்டையிலிருந்து உருவானதாக ஒருவகையில் உலகம் முழுவதும் நம்பப்பட்டது. முட்டை வடிவமான இந்த பூமியில் வசந்தகாலம் இம் முட்டையின் உயிர்ப்பாக பெரும்பகுதியான மக்கள் கூட்டத்தினர் நம்பினர். இவ் ஆரம்பகாலத்தில் இவ் வசந்தகாலத்தை பிரதிபலிக்கும் முகமாக முட்டைகள் வர்ணம் தீட்டப்பட்டு, ஒருவருக்கொருவர் பரிசளிக்கும் வழக்கமாக வளர்ந்த பூமியின் நிலைக்கோட்டுக்கு எதிராக சூரியன் அண்மித்துவரும் வசந்தகாலத்தில் பண்டைய பேஸியர் முட்டைகளை பரிசளிக்கும் இந் நம்பிக்கை கலாச்சார வடிவமாக பின்னர் பாஸ்காவுடன் இணைக்கப்பட்டது. கிறிஸ்தவம் பரப்பப்பட்ட காலத்தில், பெரிய வெள்ளி தனியாகக் கொண்டாடப்பட்ட காலத்தில் - பெரிய வெள்ளியன்று இடப்படும் முட்டையை 100 வருடங்கள் வரை பாதுகாத்து வைத்திருப்பின், அதன் மஞ்சட் கரு வைரமாக மாறும் என்ற நம்பிக்கை இவர்களால் மதம் சார்ந்து மக்களிடம் பரப்பப்பட்டது. பெரிய வெள்ளியில் இடப்படும் முட்டையை, உயிர்த்த ஞாயிறன்று சாப்பிட்டால் சடுதியான மரணங்கள் நிகழாது பாதுகாக்கப்படுவதோடு, விவசாய பயிர்கள் மற்றும் மரம் செடி கொடிகள் வளமாகச் செழிக்கும் என்றும் பரப்பப்பட்டது.

பண்டைய பேஸியர் முதற் கொண்டு எகிப்து, கிரீஸ், ரோம் நாடுகளில் முட்டைகளுக்கு நிறமூட்டுதல் ஊடாக வசந்தகாலத்தை நினைவூட்டுதல் வழக்கத்தில் இருந்து வந்தது. 15ம் நூற்றாண்டளவில் மேற்கு ஐரோப்பிய மிசனரிகளால் இவை பரப்பப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஐரோப்பாவில் புதுவருட மரங்களான வைகாசி வசந்த மரங்களிலும், சென்.ஜொன்ஸ் மரங்களிலும் நட்ட நடுக் கோடை காலத்திலும் முட்டைகள் வண்ணமிடப்பட்டு இதில் தொங்கவிடப்பட்டன.

இவ்வாறு வண்ணமிடப்படும் இம் முட்டைகள் வசந்தகால வரவை நினைவு கூருவதிலிருந்து விலக்கப்பட்டு, மதசார்பான வடிவங்களைப் பெறத்தொடங்கின. கிறிஸ்துவின் மரணப்பாடுகளை உணர்த்தும் முகமாக பெரிய வெள்ளியில் சிவப்பு நிற முட்டைகளும், பெரிய வியாழனில் இராப்போசனத்தை நினைவுபடுத்தும் முகமாக பச்சை நிறத்திலும் வண்ணம் தீட்டப்படது. பின்னர் இவை அதிகார வர்க்கத்தால் விற்பனைப் பொருளாக மாற்றப்பட்டது. முட்டை மட்டுமன்றி வசந்தகால பண்டைய தெய்வங்களுடன் தொடர்பிலிருந்த முயலும் கூட சின்னமாக இருந்தது. முயல்கள் அதிக இனப்பெருக்கத்தை உடையதாலும், நிலாத் தெய்வங்களில் நம்பிக்கை கொண்ட மரபினர், முயல் இமைப்பதற்குக் கூட கண்களை மூடுவதில்லை என்றும், பிறக்கும் போதும் கண்களைத் திறந்தபடியே தமது நிலவுத் தெய்வத்தைப் பார்ப்பதற்காகப் பிறப்பதாகவும் நம்பினர். பின்னர் இவையும் பாஸ்காவுடன் கலந்தது. இதைவிட வசந்தகால மலரான 'லில்லி' மலர்களும் இப்பாஸ்காவுடன் இணைக்கப்பட்டன. இருப்பினும் விற்பனையில் பாஸ்கா முட்டையே சந்தையில் பெரும் மூலதனத்தை ஈட்டிக் கொடுத்தது.
ரசியப் புரட்சிக்கு முன்னர் சென்.பெத்தர்பேர்கின் 'காரால் தொழிற்சாலை'யில் 600 நிரந்தர வேலையாட்களைக் கொண்டு பாஸ்கா முட்டை தயாரிக்கப்பட்டது. 1872ல் 140 விதங்களான வண்ணங்களில் இம்முட்டை தயாரிக்கப்பட்டது. இங்கே ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மிக விலையுயர்ந்த முட்டைகள் தயாரிக்கப்பட்டன. தங்கம், வைரம், இரத்தினம், பவளம், முத்து,....போன்ற நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட 6-36 சென்ரி மீற்றர் உயரம் கொண்ட ஒரு முட்டை தயாரிப்பதற்கு ஒரு வருடங்கள் கூட முடிந்திருக்கிறது. 1913ம் வருடம் 3,000 சிறிய வைரக்கற்களைக் கொண்ட முட்டை தயாரிக்கப்பட்டது. இது அந்தத் தொழிற்சாலையில் வேலைசெய்யும் ஒரு தொழிலாளியின் வருட வருமானத்தை போல் 125 மடங்கு பெறுமதியானது. இது இன்று 97,500 மில்லியாடர் இலங்கை ரூபாவுக்குச் சமமாகும்.

மதங்களின் பொதுச் சங்கத்தின் காலத்திலிருந்து 16 நூற்றாண்டுக்கு முன்னர், எகிப்திலிருந்த யூதர்கள் பெரிய விடுதலையை அனுபவித்ததை நினைவூட்டுகின்ற ஒரு பண்டிகையாக இப் பாஸ்கா நாள் இருந்ததாம். அந்தச் சமயத்தில் தலை ஈற்றான வெள்ளாட்டுக் குட்டியொன்றை இதற்குப் பலியாகச் செலுத்தினார்களாம்.

10,000 வருடங்களுக்கு முன்பிருந்தே, மனிதன் நல்ல நிலம் சார்ந்த உற்பத்தியில் ஈடுபட்ட போது அவர்களது வீட்டுப்பிராணியாகவும், நல்ல நண்பனாகவும் வெள்ளாடு இருந்து வந்திருக்கின்றது. வெள்ளாடு இனத்தைப்பற்றிய பரிசோதனை முடிபுகளில் இருந்து, மூன்று விதமான வௌ;வெறு இனம் கொண்ட ஏழு மில்லியன் வெள்ளாடுகள் மனிதர்களின் உற்ற நண்பனாக, அவர்களுடன் இணைந்து நீண்ட காலங்கள் வாழ்ந்து வந்ததாக விஞ்ஞானம் கண்டறிந்துள்ளது. வெள்ளாட்டை இவர்கள் பலியிடும் போதோ, அல்லது உணவுக்காக வெட்டும் போதோ அதன் இதயம் மனித இதயத்தோடு ஒத்திருந்தது. மற்றும் இனவிருத்தியிலும் ஒத்திசைவைக் கண்டனர்.வெள்ளாட்டைப் பலி கொடுப்பது என்பது தமது உற்ற நண்பனை, தமது உறவுகளில் ஒன்றைப் பலி கொடுப்பதாகவே அவர்கள் அன்று கருதியிருக்க வேண்டும்.

யூத முதற்பேறானவற்றின் இரட்சிப்பில் விளைவடைந்தது: அதற்கு மாறாக, எகிப்தின் முதற்பேறு அனைத்தையும் யெகோவாவின் தூதர் கொன்று போட்டார்.

(யாத்திராகமம் 12:21 24:27)

இக்கருத்தின் வழித் தோன்றலே பிற்காலத்தில் கடவுளின் தலைப்பேறான இயேசு பலி கொடுக்கப்பட்டு, உலகம் இரட்சிக்கப்பட்டதாக பைபிளை எழுதத் தூண்டுகோலாக அமைந்தது.

சிலுவை மரணம், அன்று அதி உயர் தண்டனையாக இருந்தது. யூதர்கள் கல்லால் அடித்துக் கொல்வதையே நீண்டகாலமாக வழக்கத்தில் கொண்டிருந்தனர். விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டதற்காக ஒரு பெண்ணை கல்லாலடித்து கொல்ல முற்பட்டபோது, உங்களில் பாவஞ் செய்யாத எவனோ அவனே முதலில் கல்லெறியட்டும் என்று இயேசு சொன்னதாக 'பைபிள்' சொல்கிறது. அப்படியானால் இயேசுவின் காலத்தில் கல்லால் அடித்துக் கொல்வது வழக்கத்தில் இருந்தது தெரியவருகிறது. உரோமரின் ஆட்சியதிகாரத்துக்குள் உட்பட்ட பிரதேசத்தில் சிலுவை மரணங்கள் அங்கீகரிக்கப்பட்ட போதிலும், இவ் யூதப்பிரதேசங்கள் கி.மு 63 இலேயே இவ்வதிகாரத்தைப் பெற்றிருந்தது. ஆயினும் இப்பிரதேசங்களில் சிலுவை மரணங்கள் நிகழ்த்தப்பட வேண்டுமென்றால் எல்லா மதக்குழுத் தலைவர்களினாலும் ஒருமித்த தீர்ப்பாகவே அவை இருக்கவேண்டும், அவ்வாறு ஒருவருக்கு வழங்கங்கப்படும் தண்டனையாகவே இவ்விடங்களில் இது அனுமதிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு ஒருமித்த கருத்தில்லாத எந்தவொரு வழக்குக்கும் சிலுவை மரணத்தை தண்டனையாக வழங்குவதற்கு இவர்களுக்கு உரிமை கிடையாது. அவ்வாறானால் ஏன் இயேசுவை யூதர்கள் கல்லாலடித்துக் கொல்லவில்லை?

ரோமப் பிரதிநியான பிலாத்துவுடன் அன்றைய மதத்தலைவர்கள் இணைந்து இத்தண்டனையை வழங்கியதாக 'பைபிள்' கூறுகிறது. இதுமட்டும் இல்லாமல் இயேசுவை சிலுவையில் அறைந்து கொல்லுங்கள் என மக்கள்கூட்டத்தினரின் ஒரு பகுதியினர் கூவியதாகவும் கூறுகின்றது. ஆனால் இக்காலத்தில் ரோமரின் ஏனைய பெரும்பாலான பிரதேசங்கள் அமைதியாகக் காணப்பட்டபோதிலும் கலிலேயாவும், யூதேயாவும் அமைதி குலைந்த நிலையிலேயே இருந்தது. ஏனைய பிரதேசங்கள் ரோமரின் நேரடி அதிகாரத்தின் கீழ் இருந்தபோதும், யூதேயாவும், கலிலேயாவும் பல மதக் கூட்டுத்தலைமை அதிகாரத்தின் கீழிருந்தது. இவ் அமைதி குலைந்த பிரதேசத்தில் 'செலோத்தேனா' ஆயுதக்கிளர்ச்சி இயக்கத்தினரின் நடவடிக்கைகள் மிகத் தீவிரமாகக் காணப்பட்டது என்பது இங்கு முக்கியமாகிறது. அதுமட்டுமல்லாது கிளர்ச்சி இயக்கத்தினரான செலோத்தினருக்கும் இயேசுவின் கருத்துகளுக்கும் நெருங்கிய தொடர்புகள் இருந்ததாக தெரிகிறது.

இது மட்டுமல்லாமல் அன்று பாஸ்கா ஜெருசலேமில் மிக விமர்சிகையாகக் கொண்டாடப்படும் ஒரு கொண்டாட்டமாகும். ஜெருசலேம் 20,000 குடிமக்களைக் கொண்ட ஒரு பிரதேசமாகும். ஆனால் இக் கொண்டாட்டத்தின் போது, சுமார் இரண்டு இலட்சம் பேர் வரை இக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வார்கள். உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள், மற்றும் ஜெருசலேமைச் சூழவுள்ள குக்கிராமத்து மக்கள் அனைவரும் இங்கு கூடுவர். இயேசு பிறப்பதற்கு முன்பே அலெஸ்சாண்டிரியா போன்ற பிற நகரங்களில் நூற்றாண்டுகாலமாக இடம்பெயர்ந்து வாழும் யூதர்கள் அனைவரும் இங்கு வந்து கூடுவது வழக்கம். இந்த வருகையானது தாய்நாட்டு வருகைக்கான முக்கியத்துவமும், தமது கலாச்சார மற்றும் புனித மதக்கோவில் திருவிழாவாகவும், இது அவர்களின் ஒரு கடன் திருநாளாகவும் மிகவும் முக்கியம் பெற்றிருந்தது. அத்தோடு குக் கிராமவாசிகளுக்கும் இது ஒரு புதிய உலகமாக இருந்தது. யூதேயா, கலிலேயா பெற்ற உறவுகள் எல்லாப் பிரதேசங்களில் இருந்தும் ஒரு பிணைப்பான தொடர்பாக இப் பாஸ்கா இருந்தது. இவர்கள் கோவில் வளவில் அல்லது அடிமைகளுக்கான சிலுவைத் தண்டனை கொடுக்கும் வெளியில் கூடுவர். இவ்வாறான ஒரு சம்பிரதாய நாளில் தமது மதத்தைச் சேர்ந்த பெறுமதியான ஒருவரை, தமது மீட்பரை, ஒரு குறைந்தளவு மக்கள் தீர்ப்பின் அடிப்படையில், எல்லா மதத் தலைவர்களின் கூட்டுச் சம்மதத்தில் இப் பெருந்தொகையான மக்கள் சன்னிதானத்தை மீறி இயேசுவை சுலபமாகச் சிலுவையில் அறைந்திருக்க முடியுமா?

அன்று சிலுவை மரணம் ஒரு நாளிகை என கணக்கிடப்பட்டது. ஒருவர் சிலுவையில் அறையப்பட்டு ஒருநாள் தொங்கவிடப்படுவார். மறுநாள் அவர் அகற்றப்படும் போது இறக்கவில்லையானால், அவரது கால்கள் முறிக்கப்பட்டு சாகடிக்கப்படுவர். இதுவே உரோம இராணுவத்தின் வழமையாக இருந்தது. இத்தண்டனை இரண்டு விதமாக வழங்கப்பட்டது. ஒன்று சிலுவையில் ஆணிகொண்டு அறைவது, மற்றது சிலுவையில் கயிற்றால் கட்டுவது. மரணத்துக்கு உரியவரை சிலுவையில் தொங்கவிடும் நிலையே இங்கு முக்கியமாகக் கணிக்கப்பட்டது. 'பைபிளின்' கருத்துப்படி இயேசுவோடு அன்று வேறு இருவருக்கும் தண்டனை வழங்கப்பட்டது. யேசு சிலுவையில் அறையப்பட்ட பின் அவர் தண்ணீர் கேட்டதாகவும் ஏரிக் என்பவன் காடியை கடற் காளானில் தோய்த்து அவருக்கு பருகக்கொடுத்தபின்னர், அவர் உயிர் துறந்தார் என்றும் இருக்கிறது. அங்கு வைக்கப்பட்டிருந்த 'காடி' என்ன திரவத்தினால் ஆனது என்பது இங்கு தெளிவுபடுத்தப் படவில்லை. ஒரு வேளை மயக்கமருந்துக் கலவையாகக் கூட அது இருந்திருக்கலாம். இக்காலத்தில் மருத்துவத்தில் மயக்க மருந்துக்கு அபின் கலந்த பழச்சாறே பயன்படுத்தப்பட்டதாக அறிவியல் கூறுகிறது. அபின் எனப்படும் ஒருவகை 'பொப்பி' மரம் அப்பொழுது தாராளமாக கலிலேயாவிலும், யூதேயாவில் இருந்தது. இருப்பினும் இயேசுவுக்கு இவ்வகையான போதைப்பொருள்தான் கொடுக்கப்பட்டதா என்பது தெரியாதபோதும், அவர் ஏதோ குடித்தார் என்பது தெளிவாகிறது.

இயேசுவைச் சிலுவையில் அறைந்த இராணுவ வீரர்கள், அவரின் உடையைச் சீட்டுப்போட்டுப் பங்கிட்டதாகவும், அவரை சிலுவையில் அறைந்து விட்டு , இவர் மீட்பரானால் இவர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளட்டும் என்று இறுமாப்புடன் சொன்ன இவ் வீரர்கள் அவரின் தாகத்துக்குத் தண்ணீர் கொடுத்தனர் என்பது உப்புப் சப்பற்ற ஒரு வாதமாகும். இது ஒரு புறமிருக்க, இவர்கள் (பைபிள்) இயேசுவை சிலுவையில் அறைவதற்கான காரணமாக சுட்டிக்காட்டும் குற்றம் அதைவிட இன்னும் வேடிக்கையானது. ''இயேசு யூதரின் அரசன்!, இவன் தன்னையே இறைமகன் என உரிமை கொண்டாடுகிறான். ஜெருசலேம் கோவிலை இடித்து மூன்று நாட்களில் கட்டுவானாம்'' இவைகளே பைபிள் காட்டும் இயேசுவின் தண்டனைக்கான குற்றம். இங்கே விசித்திரம் என்னவென்றால் இக்காலத்தில் அனைத்து யூதத்தலைவர்களும் ரோமர்களுடன் அன்னியோன்னியமாக இணைந்து கடமையாற்றினர். மதத் தலைவர்களின் ஆட்சிக்காலம் ஆகக் கூடியது ஒரு வருடமாகவே இருந்தது. வருடத்துக்கு வருடம் புதிப்பிப்பதே உரோமப்பேரரசின் இராஜதந்திரமாக இருந்தது. இந்த இலட்சணத்தில் யூதனின் அரசன் என்று சொல்லுவது எப்படிக் குற்றமாகும்? ரோமர்கள் யூதசட்டத்தை மதித்தனர். பாஸ்கா கடன் திருநாளில் சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும் உடல்களை அகற்றுவதை அலட்சியம் செய்திருக்கவில்லை. சம்மதித்தார்கள். யோவான் 18ம் அதிகாரம் 28ம் வசனத்தைப் பாருங்கள். ''அதன் பின் அவர்கள் கயபாவிடமிருந்து ஆளுநர் மாளிகைக்கு (பிலாத்துவிடம் - பிலாத்து யூதனல்ல) இயேசுவைக் கொண்டு சென்றார்கள். அப்போது விடியற்காலம். பாஸ்கா உணவை உண்ணும்முன் தீட்டுப்படாமலிருக்க ஆளுநர் மாளிகையில் அவர்கள் நுழையவில்லை'' அவர்கள் பாஸ்காவை எப்படி மதித்தனர் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. என்ன கோவிலை இடித்து மூன்று நாட்களில் கட்டுவேன் என்றது ஒரு குற்றமாம். ஜெருசலேம் கோவில் உண்மையில் இடிந்தபோது, இந்த யூதச்சட்டம் யாருக்கு மரணதண்டனையை வழங்கியது?
(ஜெருசலேம் கோவில் எரிக்கப்பட்டதற்காக இயேசுவின் குழுவினர் எனக்கூறப்பட்ட ஒருவரே பழிவாங்கப்பட்டார். இயேசு சிலுவையில் அறையப்பட்டதாகக் கூறப்படும் காலத்தின் பின், கிட்டத்தட்ட 40 வருடங்களின் பின்னர் இவர் பழிவாங்கப்பட்டார். இவர் எருசலேம் மக்களால் நகருக்கு வெளியே துரத்தி விரட்டப்பட்டு, இம்மக்களாலேயே யூதச்சட்டப்படி கல்லாலடித்துக் கொல்லப்பட்டார். இவரின் மரணச்சடங்கில் கலந்துகொண்ட இயேசு குழுவினர் ரோம் இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டனர். இது பற்றி மேலும் விபரமாக வேறு அத்தியாயத்தில் ஆராய்வோம்.)

அப்போஸ்தலர் பவுலின் கருத்துப்படி, இயேசுவை சிலுவையில் இருந்து அகற்றிய இராணுவக்குழுவுக்கு தலைமைதாங்கியது லொகின் (Longin) என்று கூறியுள்ளார். அப்படியெனின் இயேசு இறந்ததற்கான அத்தாட்சி வழங்கியவர் இவரே. இயேசுவை சிலுவையில் இருந்து அகற்றும் போது, இவரோடு அறையப்பட்ட ஏனைய இருவரும் உயிருடனேயே இருந்தனர். அவர்களின் கால்கள் முறிக்கப்பட்டு, சாகடிக்கப்பட்டனர். இயேசுவின் விலாவில் ஈட்டியால் குத்தி, இறந்துவிட்டதாக, அரிமத்தியா வாசியான ஜோசேப்பிடமும், நிக்கோதேமு என்பவனிடமும் அவரின் சடலத்தை கையளித்ததாகக் கூறப்படுகிறது. இயேசுவை விலாவில் குத்தும் போது இரத்தம் ஓடியதாகக் கூறப்பட்டது. இயேசு சிலுவையிலிருந்து இறக்கப்பட்டபின் இருக்கும் சில காட்சிப்படங்களில் சிலுவையில் அறையப்பட்ட நிலையிலிருந்து மாறுபட்ட நிலையில் இருப்பதையும் காணலாம். இறந்தபின் ஒருவரின் உடலில் இரத்தம் பாய்வதும், இறந்த நிலையிலிருந்து மாறுபடுவதும் நடைமுறைக்கு ஒவ்வாத விடயங்கள். இங்கே இயேசு இறந்ததாக அத்தாட்சி வழங்கிய இராணுவ அதிகாரி லொகின், பின்னாளில் ஒரு கிறிஸ்துவ மேற்றாணியாராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

யோவான் அதிகாரம் 18, 38-39ம் வசனங்களின் படி, அரிமத்தியா வாசியான ஜோசேப் இயேசுவின் அந்தரங்க சீடர்களில் ஒருவன் என்று சொல்லப்படுகிறது. ஆகவே இயேசுவுக்கு 12 சீடர்கள் என்பது பொய்யாகிறது. அப்படியாயின் இயேசுக்கு இன்னொரு அந்தரங்க வரலாறும் இருக்கவேண்டும், அது என்ன? இந்த நிக்கோதேமு என்பவன் இயேசு பிடிபடுவதற்க முன்னர் ஒரு இரவு வேளையில் 100 இறாத்தல் நிறையுள்ள வெள்ளைப்போளமும் கரியபோளமும் கலந்த சுகந்தத்தை இயேசுவிடம் கொண்டுவந்ததாக கூறப்படுகிறது. இச்சுகந்தத்தை கலந்த துணியால் சுற்றியே, இவ்விருவரும் இயேசுவை அடக்கம் பண்ணியதாக பைபிள் கூறுகிறது. இத்துணியே இன்று கத்தோலிக்க திருச்சபையால், இயேசுவின் திருவுடல் அடையாளத்துணியாக மக்கள் காட்சிக்கு வைத்துள்ளது. இவ் அத்தசி நூல் ஆடையை திரளான மக்கள் புனிதப் பொருளாக இன்று தரிசித்து வருகின்றனர்.

இது ஒருவகை சணல் நூலால் நெய்யப்பட்ட ஆடை, அல்லது அத்தசி நூலால் நெய்யப்பட்ட ஆடை என்று சொல்லலாம். இவ் ஆடையானது இயேசுவை அடக்கம் செய்த கல்லறையில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இயேசுவை சிலுவையில் அறைந்து இறக்கப்பட்டதன் பின்னர், அவரது உடலைச் சுற்றி அடக்கம் பண்ணிய துணியாக இது கருதப்படுகிறது. இத்துணி 1990ல் இரசாயனப் பகுப்பாய்வுக்கு உட்;படுத்தப்பட்டது.
இந்த அத்தசி நூல் ஆடை கிட்டத்தட்ட 100 இறாத்தல் நிறையுள்ள (33.3 கில்லோக் கிராம்) ஒரு வகை தாழை இனத்தைச் சோந்த கரியபோளத்தாலும், வெள்ளைப்போளத்தாலும் கலவை செய்யப்பட்டிருந்தது. ஜெருசலேம் பல்கலைக்கழக மாணவர்களான இஸ்ரேல், அல்மேனியரின் கருத்துப்படி இத்துணியானது முதல் 100 வருடங்கள் எடேஸ்சால்வில் (இன்றைய துருக்கியா) கொண்டு சென்று வைத்ததாகக் கருதுகின்றனர். எடேஸ்சா முதல் 100 ஆண்டுகள் ரோமப் பேரரசின் கீழ் இருந்திருப்பினும், இங்கு உத்தியோகபூர்வ மதமாக கிறிஸ்தவம் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. இரண்டாவது யூத யுத்தத்தின் போது, யூதர்கள் இங்கே புலம் பெயர்ந்து வாழ்ந்தார்கள். இவர்கள் இங்கிருந்து வருடத்துக்கு ஒருமுறை ஜெருசலேம் கோவிலுக்கு வந்து போனார்கள். சத்தியம் தவறாத இந்த நினைவு நாளில், உலகில் இருந்து அனைத்து யூதர்களும் இந்தப் பெரிய நாளில் Yom Kippur ல் ஒன்று கூடுவர். இது அவர்களின் ஒரு வெளியேற்ற நாளாகவும், தண்டனைக்குரிய நாளாகவும், நோன்புக்குரிய நாளாகவும் கருதப்பட்டது.

யூத அகதிகள் தாம் வெளியேறிய போது, இத்துணியைத் தம்முடன் எடுத்துக் கொண்டு இன்றைய துருக்கியாவான எடேஸ்சாவுக்குச் சென்றனர். பின்னர் இத்துணி 1944 ல் கொன்சன்ரைன் ஒப்பிளில் வைக்கப்பட்டு, பயத்தின் காரணமாக இது பிரான்சுக்குக் கொண்டு செல்லப்பட்டது. 1350 களிலே இத்துணி பற்றி உத்தியோகபூர்வமாக விபரிக்கப்பட்டது. நூறு வருடங்களின் பின்னர் இத்தாலிய Savoy மன்னர் குடும்பத்தினருக்கு பரிசில் பொருளாக இது வழங்கப்பட்டது. இவர்கள் தொடர்ந்தும் பிரான்சில் வசித்து வந்ததால், 1532 ல் சம்பெரி நகரம் எரிந்தபோது இதன் சில பகுதிகள் பழுதுக்குள்ளானது. பின்னர் முதன் முதலாக 1578 ல் இத்தாலிக்கு (Torino)-ரொர்ரினோவுக்கு - மாற்றப்பட்டது. கடைசியாக 1983 ல் கத்தோலிக்க பாப்பாண்டவருக்கு இத்தாலிய மன்னனால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இம்மன்னன் இரண்டாம் உலகயுத்தத்தின் போது போத்துக்கல்லில் வாழ்ந்து வந்தார்.
1990 ல் கத்தோலிக்கக் கோவிலின் இரண்டாயிரமாம் ஆண்டு நினைவுக் கொண்டாட்டத்தின் போது பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. இத்துணி 1.1 மீற்றர் அகலமும் 4.36 மீற்றர் நீளம் கொண்டதாகவும் காணப்பட்டது. ஒரு மனித உடலின் முன் பின் பாகங்கள் இதில் பதிந்து காணப்படுகிறது. இந்த மனிதனின் உருவம் 1.81மீற்றர் உயரங் கொண்டதாகவும், தாடியும் நீண்ட தலைமுடியும் கொண்ட கோலமாகக் காட்சி தந்தது. இந்த மனிதனின் முகம் வலதுபுறம் சாய்வாகவும் காட்சி தருகிறது.
இயேசுவின் திருமுகம் கிறிஸ்தவ காலத்தில் பலவிதமாக வரையப்பட்டது. இதன் பெரும் பகுதி ரோமப்பேரரசின் கிழக்குப்பகுதியிலிருந்து தொகையாக வெளியிடப்பட்டது. துணியில் காணப்படும் முகம், தலைமுடி சிறு சுருளைக் கொண்டதாகக் காணப்படுகிறது. 500களில் இயேசுவின் முக அச்சினைக் கொண்ட முத்திரைச் சின்னங்கள் பல காணப்பட்டன. சில வெள்ளி நாணய அச்சினை கூட இன்றைய துருக்கியாவில் அப்போது கண்டெடுக்கப்பட்டது. இவைகளை வைத்து இப்பொழுது பரிசிலுள்ள Louvre இயேசுவின் இராப்போசனப்படம் வரையப்பட்டிருக்கலாமெனக் கருதப்படுகிறது. இது சின்னையில் (Sinai) யில் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறுகின்றனர். 600ம் ஆண்டுக்குரியது. இப்படத்தை, இத்துணியிலுள்ள முகத்துடன் ஒப்பிட முடியாத, நம்பகத் தன்மையற்றதாக இருப்பதாக கணிக்கப்படுகிறது. துணியில் இருக்கும் மனிதனின் முகம் ஒரு வாலிப இளைஞனுக்குரியதாக இருப்பதாகவும், ஆனால் படத்தில் தலைமயிரில் சுருள் அற்றதாகவும் இருப்பதாக ஒப்பீட்டாளர்கள் கூறுகின்றனர்.

ஐரோப்பாவுக்கு இத்துணி கொண்டுவரப்பட்டதும், இயேசுவின் முகம் இதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. 1209 ல் இயேசு சிலுவையில் அறையப்பட்ட படம் வரையப்பட்டது. இது ஸ்டுடேனிக்காவில் இருந்து வெளிவந்தது. இதில் இயேசுவின் தலைமயிரின் சிறு சுருள், நீட்டு மூக்கும் வரையப்பட்டிருந்தது. 1100 ஆண்டுக்குரிய மற்றைய ஒரு படமான ஊயகயடல படமும் நம்பகத்தன்மை அற்றதாக இருப்பதாகவும் கருதப்படுகிறது.
இத்துணியின் இயல்பைப் பொறுத்தவரை இத்துணி மிகமிகத் தரம் வாய்ந்ததாகவும், மன்னர் பரம்பரையினர் பாவிக்கும் மிக விலையுயர்ந்த பொருளாகவும் இருக்கிறது. இத்துணியின் ஆயுட்காலம் 5000 வருடங்களையும் தாண்டக்கூடியதாகவும் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது எகிப்தின் அகழ்வுகளில் இருந்து தெரிய வருகிறது. இத்துணி மருத்துவரீதியாக கரியபோளம், வெள்ளைப்போளம் கலக்கப்பட்ட துணியாகவும், மூச்செடுக்கக் கூடிய விதத்திலும், கடுங்காய்ச்சலுக்குப் பயன்படுத்தப்படும் ஒன்றாகவும் இருந்ததாகவும் நோக்கப்படுகிறது. இத்துணி பற்றி மத்தேயு, மார்க்கு, லூக்காஸ் போன்றோர் குறிப்பிடும் போது, இதற்கு கிரேக்க சொல்லான Sidon என்ற சொல்லை பாவித்துள்ளனர். ஆனால் யோவான் othonium என்ற சொல்லைப் பாவித்துள்ளார். Sidon என்ற சொல்லை லத்தினுக்கு மொழி பெயர்க்கும் போது மூடும் துணி எனப் பொருள்பட மொழி பெயர்க்கப்பட்டது. ஆனால் பழைய விவிலியமான எரேபிய மொழியிலுள்ள Sidon என்ற சொல்லுக்கு சாதாரண துணியான 'போர்வை' என்ற அர்த்தமே உள்ளதாக மொழி வல்லுனாகள் கூறுகின்றனர். போர்வை என்ற அர்த்தமானது உயிருள்ள மனிதர்களின் பாவனைக்குரிய சொல்லாகவே எழுதப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். லாசரு பற்றிய எழுத்துக்களில் லாசரசுக்குப் பாவிக்கப்பட்ட துணியை குறிக்கும் போது keiriaj என்ற சொல்லே பாவிக்கப்பட்டடுள்ளது. இது இறந்தவர்களுக்குப் பாவிக்கப்படும் துணியாகவே அர்த்தம் கொள்கிறது. யோவான் அதிகாரம் 20 ல் பயன்படுத்தும் othonia என்ற சொல்லுக்கு 'உடுப்பு' என்றே பொருள் படும் என்று இவர்கள் கூறுகின்றனர். இது லத்தினில் Sidon என்ற சொல்லாக பேசவும், மொழிபெயர்க்கவும் பட்டிருக்கிறது. இது இறந்தவர்களின் மீது போடும் மிக அழகான துணியாகப் பொருள்படும். ஆயினும் இலத்தீனில் குறிப்பிட்ட காலம் வரை இச்சொல் வழக்கத்தில் இருக்கவில்லை என்றே மொழி ஆய்வாளர்கள் மறுத்து வருகின்றனர்.

புதிய ஏற்பாட்டில் யோவான் 11ம் அதிகாரத்தில் கூறப்படுவதைக் கவனித்தால்...... பெத்தானிய கிராமத்தவரான லாசரு வியாதியால் இறந்திருந்தார். அவர் நோய்வாய்ப்பட்டு, இறக்கும் தருவாயில் இருந்தபோது, அவரின் சகோதரிகளான பெத்தானியா மரியாளும், மார்தாளும் இச்செய்தியை இயேசுவிடம் ஆளனுப்பித் தெரிவித்தனர். இயேசு இதைக் கேள்விப்பட்டு இரு தினங்களின் பின்னர் ,யூதேயாவுக்குச் செல்வோமென தம் சீடர்களிடம் சொன்னபோது: ''ரபி, இப்போதுதான் யூதர்கள் உம்மைக் கல்லால் எறியத் தேடினார்களே, மறுபடியும் நீர் அவ்விடத்திற்குப் போகலாமா?'' என்றார்கள். இயேசுவை சிலுவையில் அறைந்ததாக் கூறப்படம் காலத்துக்கு மிகச்சமீபமாகவே இது கூறப்பட்டுள்ளது. அவ்வாறானால் ஏன் இயேசுவை சுலபமாகக் கல்லாலடித்துக் கொல்லவில்லை. பிலாத்துவிடம் இயேசுவைக் கொண்டு சென்றபோது கூட பிலாத்து, ''நீங்கள் இவனைக் கொண்டுபோய் உங்கள் சட்டப்படி இவனுக்கு தீர்ப்பு வழங்குங்கள்'' என்ற வார்த்தை மட்மே போதுமானது, இயேசுவை கல்லாலடித்துக் கொல்வதற்கு.
இதே அதிகாரம் 43ம் 44ம் வசனங்களின் படி, லாசருசே வெளியே வா! இயேசு உரத்துச் சத்தமிட்டார். அப்போது மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது. அவன் முகம் சீலையால் சுற்றப்பட்டிருந்தது. லாசரு யூதமுறைப்படியே அடக்கம் பண்ணப்படிருந்தார். இவ்வாறான யூதமுறைப்படியே இயேசுவும் அடக்கம் பண்ணப்பட்டதாக இதே யோவான் 19 ம் அதிகாரம், 40 வசனம் உறுதிப்படுத்துகின்றது. ஆனால் லாசருடைய அடக்கத்தில் 'பிரேதச்சீலை' எனவும், இயேசுவின் அடக்கத்தில் பிரேதச்சீலை என்ற சொல்லை இவர்கள் பாவிக்கவில்லை. வெறும் துணி என்ற அர்த்தத்திலேயே பாவிக்கப்பட்டுள்ளது.
யோவான் 12ம் அதிகாரத்தில்,பாஸ்கா பண்டிகைக்கு ஆறு நாட்களுக்கு முன், பெத்தானியாவிலுள்ள லாசருசின் வீட்டில் இயேசு இராப்போசனம் ஒன்றில் கலந்து கொள்கிறார் (கடைசி இராப்போசனம் அல்ல) அப்போது லாசரசின் சகோதரியான மரியாள், விலையேறப்பெற்ற கலங்கமில்லாத நளதம் என்னும் பரிமளதைலம் ஒரு இறாத்தலை இயேசுவின் பாதங்களில் பூசி,தனது கூந்தலால் துடைத்தாள். இதைப் பார்த்த யூதாஸ் கரியோத் (இயேசுவைக் காட்டிக் கொடுத்தவன்) இத்தைலத்தை 300 வெள்ளிக்கு விற்கலாம், இக்காசைத் தரித்திரியருக்குக் கொடுக்கலாம் என விசனப்படுகிறார். அதற்கு இயேசு இவளை விட்டுவிடு, என்னை அடக்கம் பண்ணும் நாளுக்காக இதை வைத்திருந்தாள் என்று கூறுகிறார். இயேசுவைக் காட்டிக் கொடுத்ததற்காக யூதாசுக்குக் கிடைத்த பணமோ வெறும் 30 வெள்ளிக் காசுகள். யூதாஸ் பெற்ற 30 வெள்ளிக் காசில், அவன் ஒரு நிலத்தை வாங்கியதாகவும், அவ் நிலம் பின்னர் 'இரத்த நிலமாக' அழைக்கப்பட்டதாகவும் பைபிள் சொல்கிறது. இயேசுவின் காலத்தில் ஒர் அடிமையின் விலை வெறும் 30 வெள்ளிக் காசுதான். அக்காலத்தில் ஒர் அடிமையின் விலைக்கு ஒரு நிலத்தை வாங்கக்கூடிய நிலைமை இருந்தது என்று சொல்லுவது வெறும் கற்பனைவாதமே! லாசரசின் சகோதரி இயேசுவின் கால்களில் பூசிய தைலத்தின் பெறுமதியோ இதைவிடப் பத்துமடங்கானது. யூதாசின் நிலத்தைப் போல் பத்துமடங்கு நிலம் வாங்கும் பெறுமதியை இயேசுவின் கால்களில் பூசுவதாக பைபிள் கூறினால், இயேசுவின் நண்பர்கள் எவ்வளவு பெரிய கோடீஸ்வரர்களாக அவர்கள் இருந்திருக்க வேண்டும்! என்று நீங்கள் உணரலாம்.

இயேசு அறையப்பட்டு, ஞாயிறு அதிகாலை மரியாள் கல்லறைக்கு வருகிறாள். அதிகாலை இருட்டாக இருந்தும் மரியாள் கல்லறையைச் சுலபமாகக் கண்டுபிடிக்கிறாள். கல்லறை திறந்திருப்பதையும், இயேசுவின் உடலை அங்கு காணாமலும் பேதுருவிடத்திலும், யோவானிடத்திலும் இதை ஓடிவந்து சொல்லுகிறாள். இவர்களும் ஓடிப்போய்ப் பார்க்கிறார்கள். இறுதியாக வந்த பேதுருவானவர் கல்லறைக்குள் நுழைந்துபோய் பார்க்கிறார். இங்கு இயேசுவின் தலைக்கு மூடியதுணி தனியே பிறம்பாக சுற்றி வைக்கப்பட்டிருப்பதைக் காண்கிறார். உடலைப் போர்த்த துணி இன்னொரு பக்கமாகப் பிறம்பாக இருக்கிறது என்று சொல்கின்றனர். பிரேதச்சீலை என்று சொல்லவில்லை. ஆனால் மரியாள் இவர்களிடம் வந்து சொன்னபோது,''இயேசுவைக் கல்லறையில் காணவில்லை அவரை எங்கே வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்று சொன்னதாக சிறுபிள்ளைத்தனமாக எழுதியுள்ளனர். மரியாளுக்கு இயேசுவை அரிமத்தியா ஜேசேப்பும் மற்றவரும் அடக்கம் பண்ணியது அவர்களுக்கு நன்கு தெரிந்ததே. அவர்களிடம் கேட்டுப்பார்க்கலாமே என்று ஒரு வார்த்தை கூட இவர்கள் கூறவில்லை. பேதுருவும், யோவானும் அவர்களை விசாரிக்காமலே இயேசு உயிர்த்தெழுந்து விட்டார் என வெளிப்படுத்திய சுவிசேசமென எழுதுகிறார்கள்.
அத்தசிச் துணியில் இருக்கும் படத்தின் கழுத்துப் பகுதி சலவை செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. யூதர்களின் சவ அடக்க முறைப்படி, தண்டிக்கப்பட்டவர்களின் பிணம் கழுவப்படுவதில்லை. இதனால் இவர்கள் இயேசுவின் அடக்க முறை பற்றி இக்காரணத்தையே விளக்கமாகக் கூறுகின்றனர். வழக்கத்தில் பிணத்துக்கு மூடப்படும் துணியானது, இரண்டு நாட்களின் பின்னரே கல்லறையில் இருந்து அகற்றப்படும். ஆனால் ஞாயிறு காலையே யேசுவின் உடலைக் காணவில்லை. மரியாள் வந்து பார்த்தபோது, தலையில் சுற்றிய துணி பிறம்பாகவும் போர்வை பிறம்பாகவும் இருந்ததாகக் கூறுகிறார். அப்படியாயின் தலையைப் பிறிதொரு துணியால் சுற்றியிருப்பின் அத்துணி எங்கே? பிணத்துக்குச் சுற்றிய இயேசுவின் உருவம் பதிந்த அத்தசி துணியில் எவ்வாறு முகம், மற்றும் தலைமயிர்களின் தோற்றம் பதிந்துள்ளது?
இத்தாலியின் 50வது யூபிலியம் நடந்தபோது (1898), படப்பிடிப்பாளரும், வழக்கறிஞருமான Secondo Pia வுக்கு முதன்முதலாக படம்பிடிக்கும் அனுமதி வழங்கப்பட்டது. இப்படம் வெளியானதும், பலதரப்பட்ட அபிப்பிராயங்களும் வெளிவரத் துவங்கின. பலதரப்பினரும் இதுபற்றிய தத்தமது அபிப்பிராயங்களை வெளியிட்டனர். 1900ல் தனது கடைசி ஆறுமாதகால பரிசோதனை முடிபுகளை இயற்கை விஞ்ஞானம் வெளியிட்டது. அதன் முக்கிய கேள்வியாக அத்தசித் துணியில் இருக்கும் முகம் உண்மையானதா? அல்லது அது பின்னர் சேர்க்கப்பட்டதா? என்பதேயாகும். ஆனால் இத்துணி 2000 வருடங்களுக்கான பழைமை வாய்ந்தது என்ற கருத்தை இயற்கை விஞ்ஞானம் மறுத்தது. நம்பமுடியாது என்று கூறியது. பின்னர் முதல் தடவையாக இத்துணி, 1988ல் சி14 பரிசோதனையான -றேடியோ நுண்ணிழைக் காபன் 14 - பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, இது 1296 -98 இடைப்பட்ட காலத்துக்குரியது என முடிவு செய்யப்பட்டது. இம் முடிவு பைபிளையும் அது சார்ந்த இயேசுவின் முக சின்னங்கள், படங்கள், நாணயங்கள் அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கின.

இத்துணியானது பருத்தியாலும், சணல் நூலினாலும் இணைத்து நெய்யப்பட்டது என்ற சந்தேகம் எழுந்தது. இதில் நெய்யப்பட்டுள்ள சணல் நூலானது, பருத்தி நுண் இழைகளுடன் இணைப்புக் கொண்டுள்ளதா என்ற பரிசோதனை முயற்சி மேற்கொள்ள முற்பட்டபோது, கத்தோலிக்க திருச்சபை இவ்விவகாரத்தை இடைநிறுத்தியது. மேற்படி தொடரவும், பரிசோதனைக்கு உட்படுத்தவும் மறுத்தது. மேற்படி தொடரப்படும் பரிசோதனைகள், இரசாயனப் படங்களுக்கான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட இருக்கிறது.
கி.மு 100ம் ஆண்டு தொடக்கம், கி.பி 200ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் யூதேயா மற்றும் ஜெருசலேம் போன்ற பிரதேசங்களில் பங்கசு, பற்றிரியா போன்றவற்றை அடிமைகள் பயன்படுத்தி இருந்ததை இரண்டு அமெரிக்க மைக்கிரொ இரசாயன ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். கலிலேயா, யூதேயாவிலுள்ள பூஞ்செடிகளின் புந்தூள்-மகரந்தங்களையும், வசந்தகால மஞ்சள் பூவினத்தையும் கலந்து செய்யப்பட்ட சிலும்பலான ஒரு வகை காற்சட்டை ஜெருசலேமில் கண்டெடுக்கப்பட்டது. இச்சிலும்பல்கள் 4 மில்லி மீற்றர் நீளமுள்ளதாகக் கண்டறியப்பட்டது. 1996ல் கண்டெடுக்கப்பட்ட நாணயம் மின்னிழைய நுண் பூதக்கண்ணாடியால் பரிசோதிக்கப்பட்டு, இது கி.பி 29ம் ஆண்டுச் சக்கரவத்தி Tiberi காலத்துக்குரியதென்றும் கண்டறியப்பட்டது. இக்காலத்தில் பிலாத்து யூதேயாவின் அரச ஆளுநராக இருந்தது குறிப்பிடத் தக்ககது.

அத்தசி துணியில் இருக்கும் இயேசுவின் முகமானது, வர்ணம் இடப்பட்டதாக இருக்கலாம் என முதன் முதலில் கருதப்பட்டது. பின்னர் இவை நவீன நுண்பரிசோதனைகள் மூலம் அழியாத ஒருவகை வர்ண நெசவுத்தன்மை, வர்ணப் பவுடர்கள் அல்லது ஊசி முனை கூரியமுள்ளால் குற்றுக்களால் ஆன வர்ணமுறையில் செய்யப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. உறுதியாக இது வர்ணம் கொண்டு தீட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது.
1532ல் இத்துணி தீவிபத்துக்கு உட்பட்டடிருந்ததை வைத்து இதை ஓர் வெப்ப உடையாகக் கணிக்கப்பட்டது. நீரை இதன் மீது தெளித்த போது, இது வேகமாக உறிஞ்சும் தன்மை கொண்டதாகக் காணப்பட்டது. இதனால் இம் முகம் இதில் பதியப்பட்டிருக்கலாம் எனவும் கருதப்பட்டது. வர்ணக்கலையில் ஆவிமுறை (Burn mark) பதிதலை இதில் ஏற்படுத்தியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. துணியில் கரியபோளமும், வெள்ளைப்போளமும் பூசப்பட்ட துணியாக இது இருப்பதால் உயர்ந்த சுடுநிலையில் முகம் பதியப்பட்டிருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. இத்துணி 1983 வரை ஒரு தனிமனிதருக்குச் சொந்தமாக இருந்தது. இத்தாலிய மன்னரான Um berto 2 ஆல் இரண்டாவது உலக யுத்தத்தின் போது பாதுகாக்கப்பட்டு, பாப்பாண்டவருக்குக் கொடுக்கப்பட்டது. பாப்பாண்டவர் இதை இயற்கை விஞ்ஞான பரிசோதனைக்குப் பயன்படுத்த பலதடவைகள் மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஆய்வுகளின் முடிவுகள், இத்துணியிலிருக்கும் இரத்தத்துளிகளில் இருந்து இப்போர்வைக்குரியவர் இறக்காத -உயிருடனிருந்த ஒரு மனிதனுக்குரியது என்பதை திட்டவட்டமாக நிரூபித்துள்ளது.

இந்த அத்தசி துணி ஒன்று மட்டும் தான் உலகில் காணப்பட்ட ஒரேயோரு இயேசுவின் போர்வையாக இருந்திருக்கவில்லை. 1353ம் ஆண்டு இத்துணியின் சொந்தக்காரரும் பெரும் பணக்கார வயோதிபருமான Geoffroy de Charny இத்துணியே உண்மையான இயேசுவின் துணியென பிரகடனப்படுத்தியபோது, சுமார் 40க்கு மேற்பட்ட போர்வைகள் உலகில் காணப்பட்டன. எனினும் இதுவே உண்மையான போர்வை என இவர் கூறியபோதும், இது எவ்வாறு தன் கைகளுக்கு வந்தடைந்தது என்பதைக் கூறமறுத்துவிட்டார். இக்காலத்தில் சிறிய கண்ணாடியில் அடைக்கப்பட்ட இயேசுவின் தலைமயிர், இயேசுவுக்கு ஊட்டியதாக மரியாளின் தாய்ப்பால், இயேசுவின் சிலுவையில் இருந்த மாபிள் வாசகத் துண்டு உட்பட இன்னும் பல காட்சிப் பொருட்களாக தேவாலயங்களில் வைக்கப்பட்டன. இவைகளைப் பார்ப்பதற்கான நுழைவுச்சீட்டுகள் கொடுக்கப்பட்டு பணமாக்கப்பட்டு வந்தது. இந்நேரத்தில் Troyes விசப்பாக இருந்த Peter D'Arcis இது உண்மையான துணி அல்ல எனவும், இது வரையப்பட்டதென்றும், இவைகளை காட்சிப்படுத்த அனுமதிக்க வேண்டாமெனவும் பாப்பாண்டவரான Clemens க்கு எழுதியதால் இத்துணி தேவாலயத்தில் பார்வைக்கு வைப்பதற்கு விலக்கப்பட்டது.
1453ல் Geoffroy de Charny ன் பேத்தியான மாக்கிரட் இத்துணியை பல இடங்களுக்குக் கொண்டு சென்று காட்சிப்படுத்தினார். இவருக்கான தேவாலயம் இல்லாததால் இவர் இதை விற்பனை செய்யமுற்பட்டார். இவர் Savoy குடும்பத்தினருக்கு இதை விற்கமுற்பட்டபோதும், இது பரிசுப் பொருளாகக் கொடுக்கப்பட்டதாவே கூறப்பட்டது. ஆயினும் மாக்கிரட் பெரும் நிலத்தை இதற்கீடாகவும் பெற்றதாகக் கூறப்படுகிறது. மாக்கிரட் ஒரு தேவாலயத்தின் நிர்வாக அதிகாரத்தைப் பெற விருப்பம் கொண்டிருந்தபோதும், இத்துணியின் உரிமைப்பிரச்சனையில் குழப்பம் விழைவிக்காது 1460 ல் சமாதானமான மரணம் எய்தியதாகக் கூறப்படுகிறது.
இத்தாலியின் 50வது யூபிலியம் நடந்தபோது (1898), படப்பிடிப்பாளரும், வழக்கறிஞருமான Secondo Pia வுக்கு முதன்முதலாக படம்பிடிக்கும் அனுமதி வழங்கப்பட்டது. இப்படம் வெளியானதும், இதன் 'நெக்கட்டிவ்'வை 1930 இல் Pierre Barbet பரிசோதனைக்கு எடுத்தார். இவர் தனது 'ஸ்கனர்' முறையினூடாக நுணுக்கமாவும் விரிவாகவும் ஆராய முற்பட்டார். இத்துணியின் கைப்பகுதியை ஆராய்ந்த இவர் பெரும் தருக்கம் ஒன்றைக் கிளப்பினார். உள்ளங்கைகளில் ஆணி அடிக்கப்பட்டிருப்பதால் இச்சிலுவையில் தொங்கிய நபர் இளம் பிராயத்துக்குரிய 30 -33 வயதுக்குரிய வாலிபனாக இருக்கமுடியாது என வாதிட்டார். வாலிபரின் உடல்பாரத்தை உள்ளங்கை தாங்காது என வாதிட்டார். இவரின் வாதத்தை பல அறிஞர்கள் மறுத்துரைக்க முடியாமல் ஏற்றுக் கொண்டனர். அத்துடன் உள்ளங்கையில் அறையப்டும் போது விரல்களின் நிலை அத்தசி துணியில் இருப்பதைப் போல இருந்திருக்க விஞ்ஞான ரீதியான வாய்ப்புக்கள் எதுவுமில்லை எனவும் வாதிட்டார். இதனால் 1969ல் கத்தோலிக்கத் தேவாலயம் உத்தியோகபூர்வமான பரிசோதனைக்கு முதல்முதலாக விருப்பத்தை வெளியிட்டது. ஆயினும் விசேட உடன்படிக்கையின் அடிப்படையிலேயே இச்சம்மதம் வெளியிடப்பட்டது. 1976ல் தேவாலயங்களுக்கு ஆன கமிட்டி தமது ஆய்வுகளை முடித்ததுடன், இத்துணி சந்தேகத்துக்கு இடமானதால் ஆய்வுகளை இடைநிறுத்தியது. 1978ல் மீண்டும் 4 குழுவினர் வௌவேறாக ஆய்வுகூடத்தில் ஆய்வுகளைத் தொடங்கினர். இக்குழு ஒன்றில் உலகப் பிரசித்திபெற்ற அமெரிக்க மைக்கிரொ ஆய்வாளரான Walter McCrone யும் இடபெற்றிருந்தார். ஆய்வுகளின் முடிவில் இவர் ஏனைய குழுவினர் பலரின் முடிவுகளுடன் முரண்பட்ட ஒரிருவரில் இவர் முதன்மையானவராகக் காணப்பட்டார். இவர் இத்துணியில் இரத்தத்துளிகளை கண்டறிய முடியவில்லை என்றும், இது சிவப்பு நிறத்தால் தீட்டப்பட்டதாகவும் முரண்பட்டார். இதனால் வத்திக்கான் தான் விதித்த விசேட உடன்படிக்கையின்படி இவர் தனது முடிவுகளை தன்னிச்சையாக வெளியிடமுடியாது எனத் தடைசெய்தது. எம்முடிவுகளும் உடன்படிக்கையின்படி தம்மூடாவே வெளியிட முடியுமென கடும் உத்தரவைப் பிறப்பித்தது. பின்னர் சில நாட்களின் பின்னர் இவரும் தாம் இரத்தத்துளிகளை கண்டறிந்ததாகவும், இத்துணி உண்மையான போர்வை எனவும் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

எல்லாம் முடிந்தபின்னர், இன்று இத்துணிக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது. 2002ம் ஆண்டு , 62ம் ஆண்டுக்குரிய யாக்கோப்பின் கல்லறை வாசகக் கல்லு ஆய்வுகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் வாசகத்தை பிரான்சைச் சேர்ந்த அராமிஸ்க் மொழியியல் ஆய்வாளரானAndr'e Lemaire வாசித்து ''ஜேசேப்பின் மகனும், இயேசுவின் சகோதரனுமான யாக்கோப்'' பின் கல்லறை இதுவென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 50 செ.மீ நீளமும் , 30 செ.மீ அகலமும், 25 செ.மீ உயரமும் கொண்ட இக்கல்லறை வாசகக் கல்லும், யக்கோப்பின் எலும்புச் சிதைவுகளும்Royel Ontario Museum - Toronto வில் 2002ம் ஆண்டு நவம்பர் மாதம் வைக்கப்பட்டுள்து. யாக்கோப்பின் எலும்புச் சிதைவுகளும், அத்தசித் துணியிலுள்ள இரத்தத்துகள்களும் மரபணு சோதனைக்கு உட்படுத்தப்பட இருப்பதே இப்புதிய சிக்கலாகும். DNA பரிசோதனைகளின் முடிவுகள் அறிவியலின் நேர்மையான பாய்ச்சலை எட்டுமா? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

தொடரும்

No comments: