தமிழ் அரங்கம்

Wednesday, October 11, 2006

இறுகுகிறது மறுகாலனிய சுருக்கு

வருகிறது சிறப்புப் பொருளாதார மண்டலம் (SENs) இறுகுகிறது மறுகாலனிய சுருக்கு

""வாங்கண்ணா, வாங்க! அதிருஷ்டம் உங்களை அழைக்கிறது!'' இது, சிறிது காலத்திற்கு முன்பு தடைசெய்யப்படும்வரை எங்கெங்கும் ஒலித்த லாட்டரி சீட்டு வியாபாரிகளின் குரல் அல்ல. மைய அரசின் வர்த்தகத் துறை அமைச்சரான கமல் நாத், லாட்டரி சீட்டு வியாபாரிகளையே விஞ்சும் வகையில் இப்படி அறைகூவி அழைக்கிறார். உழைக்கும் மக்களாகிய நம்மை அவர் அழைக்கவில்லை. தரகுப் பெருமுதலாளிகளையும், நிலமுதலைகளையும் பன்னாட்டு ஏகபோகக் கம்பெனிகளையும்தான் அவர் இப்படி அறைகூவி அழைக்கிறார்.


""தலைவா, இது உங்களோட சமஸ்தானம்; இங்க நீங்க உங்க இஷ்டப்படி ராஜ்ஜியம் நடத்தலாம்; நாங்க எந்தக் கேள்வியும் கேட்கமாட்டோம்; வாங்க தலைவா, வந்து உங்க தொழில நடத்துங்க!'' என்று காலில் விழாத குறையாக தனது எஜமானர்களை உபசரித்து அழைக்கிறார் கமல்நாத். தமது பகற்கொள்ளைக்கும் ஆக்கிரமிப்புக்கும் ஆதிக்கத்துக்கும் காங்கிரசு கூட்டணி அரசு பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்பதைக் கண்டு பூரித்துப் போகும் ஏகாதிபத்தியவாதிகள், ""எங்க காட்டுல மழை பெய்யுது; எங்க கோட்டையில் கொடி ஏறுது'' என்று மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கும்மாளமடிக்கின்றனர். நாட்டை ஏகாதிபத்தியவாதிகளுக்குக் கூறுபோட்டுக் கொடுக்கும் இந்தத் திட்டத்தையே காங்கிரசு கூட்டணி அரசு, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (SEZs) என்றழைக்கிறது.


""செஸ்'' என்று ஆங்கிலத்தில் சுருக்கமாகக் குறிப்பிடப்படும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (Special Economic Zones - SEZs) எனும் திட்டம், கடந்த 2000வது ஆண்டில் ஏற்றுமதி இறக்குமதிக் கொள்கையில் அறிமுகப்படுத்தப்பட்டு, நாடாளுமன்ற ஒப்புதலுக்குப் பிறகு கடந்த ஜூன் 23, 2005இல் அரசுத் தலைவரின் அங்கீகாரத்துடன் சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் நான்குநேரியிலும் குஜராத்தில் பாசிட்ராவிலும் முதன்முதலாக சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்க அரசு அனுமதி வழங்கியது. தற்போது சென்னை எண்ணூரில் 2,500 ஏக்கர் பரப்பளவில் மிகப் பெரிய சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இங்கு டிட்கோ, சிப்காட் ஆகிய அரசுத் துறை நிறுவனங்களோடு அம்பானி குடும்பத்தின் ரிலையன்ஸ் நிறுவனமும் கூட்டுச் சேர்ந்து தொழில் தொடங்க முன்வந்துள்ளது. இது தவிர, மும்பையில் 12 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பிரம்மாண்டமாகவும், அரியானா மாநிலத்தில் 45 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலும் இத்தகைய மண்டலங்கள் நிறுவப்படவுள்ளன.


சென்னையில் ஏற்கெனவே மெட்ராஸ் ஏற்றுமதி பொருளுற்பத்தி மண்டலம் (""மெப்ஸ்''), மகிந்திரா சிட்டி ஆகிய சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உள்ளன. இவை தவிர, சென்னையை அடுத்துள்ள திருப்பெரும்புதூர், ஓசூர், கோவை, மதுரை ஆகிய இடங்களிலும் இத்தகைய மண்டலங்களை அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மாநிலத்தைத் தொழில்மயமாக்குவது என்ற பெயரால் போலி கம்யூனிஸ்டுகள் முதல் அனைத்து மாநில முதல்வர்களும் வேகவேகமாக இத்தகைய மண்டலங்களை நிறுவ முயற்சித்து வருகின்றனர். ஏறத்தாழ ஒரு நாளைக்கு ஒன்று என்ற வேகத்தில் நாடெங்கும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கான அனுமதி வழங்கப்பட்டு வருவதாக ""பிசினஸ் அண்டு எக்கானமி'' என்ற ஆங்கில வாரப் பத்திரிகை குறிப்பிடுகிறது. அந்நிய முதலீடுகள் வெள்ளமெனப் பாய்ந்து, தொழிலும் வர்த்தகமும் வேலைவாய்ப்பும் பெருகி, நாட்டை வல்லரசாக மாற்றுவதற்கான ஏற்பாடுதான் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்பதாக ஆட்சியாளர்கள் சித்தரிக்கின்றனர்.


ஆனால், இது நாட்டை வல்லரசாக்க ஆட்சியாளர்கள் மூளையைக் கசக்கிக் கண்டுபிடித்துள்ள புதிய திட்டம் அல்ல. பழைய கள்ளைப் புதிய மொந்தையில் ஊற்றிக் கவர்ச்சிகரமாக வியாபாரம் செய்வதற்கான ஏற்பாடுதான். ஏற்கெனவே நடைமுறையில் உள்ள ஏற்றுமதி பொருளுற்பத்தி மண்டலங்களின் (Export Processing Zones) புதிய பரிமாணம்தான் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்!


1980களில் இந்தியா மட்டுமின்றி உலகின் பல ஏழை நாடுகளில் இத்தகைய மண்டலங்கள் உருவாகி, இன்று 116 நாடுகளில் 3000க்கும் மேற்பட்ட ஏற்றுமதி பொருளுற்பத்தி மண்டலங்கள் பெருகி விட்டன. இப்படி எல்லா நாடுகளும் ஏற்றுமதி மண்டலங்களைப் பெருக்கத் தொடங்கியதும், ஒவ்வொரு நாடும் ஏகாதிபத்திய முதலீட்டாளர்களுக்குச் சலுகை மேல் சலுகைகளை வாரியிறைத்து முதலீட்டைத் தக்கவைத்துக் கொள்ள முயன்றன. இவ்வாறு வளர்ந்துவரும் போட்டியைச் சமாளிக்கவும், அன்னிய நேரடி முதலீட்டை உயர்த்தி அதைத் தக்க வைத்துக் கொள்ளவும் சீனாவின் முதலாளித்துவ ஆட்சியாளர்களால் 1980களின் இறுதியில் உருவாக்கப்பட்டவைதான் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள். மற்ற நாடுகள் சில சலுகைகளைத் தருவார்கள்; நாங்கள் ஒரு சமஸ்தானத்தையே அமைத்துத் தருகிறோம் என்று சீனாவின் முதலாளித்துவ ஆட்சியாளர்கள் உருவாக்கிய இம்மண்டலங்கள்தான், உலகமயச் சூழலில் வளர்ச்சிக்கான ஒரே வழி என்பதாக முதலாளித்துவப் பொருளாதாரவாதிகள் காட்டுகின்றனர். ஒரு காலத்தில் சாதாரண மீன்பிடி கிராமமாக இருந்த சென்ஷென், இன்று பல்லாயிரம் கோடி அமெரிக்க டாலர் முதலீட்டைப் பெற்றுள்ள மாபெரும் சிறப்புப் பொருளாதார மண்டலமாக வளர்ந்துள்ளது. இதேபோல சீனாவின் ஷாங்காய், காண்டன், ஹாங்காங் ஆகிய நகரங்களின் வளர்ச்சியைக் காட்டி, சீனாவைப் போல அன்னிய முதலீட்டைப் பெருமளவில் குவித்து, சீனாவைப் போலவே இந்தியாவையும் "வல்லரசாக' மாற்ற, அதேபாணியில் உருவாக்கப்பட்டவைதான் இச்சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்.


இந்தியாவில் உருவாக்கப்படும் இத்தகைய சிறப்புப் பொருளாதார மண்டலங்களைத் தனியார் நிறுவனங்கள் மட்டுமின்றி, அன்னிய நிறுவனங்களும் அமைத்துக் கொள்ளலாம் என்று தாராள அனுமதி தரப்பட்டுள்ளது. அம்பானியின் ரிலையன்ஸ், டாடா, மஹிந்திரா, ஹிந்துஸ்தான் கட்டுமான நிறுவனம், சஹாரா, யுனிடெக், அடானிஸ், டி.எல்.எஃப் ஆகிய பெரு முதலாளித்துவ நிறுவனங்கள் இச்சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைக்க அனுமதி பெற்றுள்ளன. நாடெங்கும் 94 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அடுத்த 18 மாதங்களில் செயல்பட ஆரம்பித்து விடும் என்றும்; நாடெங்கும் மொத்தமாக 300 சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைக்க வேண்டும் என்றும் மைய அரசு கூறி வருகிறது.


முந்தைய ஏற்றுமதி பொருளுற்பத்தி மண்டலங்களிலிருந்து சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் வேறுபட்டவை; இதன் பெயரிலேயே இப்போது பொருளுற்பத்தி என்ற வார்த்தை நீக்கப்பட்டு விட்டது. அதாவது, பொருளுற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்கள் மட்டுமின்றி, வர்த்தக நிறுவனங்களும் சேவை நிறுவனங்களும் இங்கு தொழில் நடத்தலாம். எல்லா சலுகைகளும் இந்நிறுவனங்களுக்குத் தரப்படும். இதனாலேயே வீட்டுமனைத் தொழில், அடுக்குமாடி கட்டிடத் தொழில், மருத்துவமனைகள், பேரங்காடிகள் (""ஷாப்பிங் மால்'') முதலான தொழில்களில் ஈடுபட்டு வரும் தரகுப் பெருமுதலாளித்துவ நிறுவனங்களும் அன்னிய ஏகபோக நிறுவனங்களும் இத்தகைய மண்டலங்களை அமைக்கப் படையெடுக்கின்றன. இவற்றுக்காகவே விவசாய நிலங்கள் அடிமாட்டு விலைக்குக் கையகப்படுத்தப்படுகின்றன. டெல்லியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் 4.20 லட்சம் ஏக்கர் நிலங்கள், ஒரு சதுர மீட்டர் ரூ. 50 வீதம் விவசாயிகளிடமிருந்து அரசால் பறிக்கப்பட்டுள்ளன; ஆனால், சந்தை விலையோ இதைவிட பலமடங்கு அதிகமானதாகும்.

இச்சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் தொழில் நடத்தும் தரகுப் பெருமுதலாளித்துவ அன்னிய ஏகபோக நிறுவனங்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு 100% வரி விலக்கு அளிக்கப்படும்; அடுத்த ஐந்தாண்டுகளுக்கு 50% வரி விலக்குத் தரப்படும். கச்சாப் பொருட்கள், மூலதனப் பொருட்களை இறக்குமதி செய்து கொள்ள முழுமையான சுங்க வரி விலக்கு, சிறுதொழில்களுக்கென ஒதுக்கப்பட்ட உற்பத்திப் பொருட்களை இங்கு தயாரித்துக் கொள்ள தாராள அனுமதி, உள்நாட்டுச் சந்தையிலிருந்தே வாங்கப்படும் உதிரி பாகங்களுக்கு மத்திய கலால் வரியிலிருந்து முழுமையான விலக்கு, மத்திய விற்பனை வரி ரத்து, உற்பத்திப் பொருட்களை மற்ற நிறுவனங்களிடம் துணை ஒப்பந்த முறையில் தயாரித்துக் கொள்ளவும், ஒப்பந்த மறையில் தொழிலாளர்களைக் கூலிக்கு அமர்த்திக் கொள்ளவும், பெண்களை இரவு நேர வேலைகளில் பணியமர்த்திக் கொள்ளவும் தாராள அனுமதி எனக் கணக்கற்ற சலுகைகள் வாரியிறைக்கப்பட்டுள்ளன.


ஆட்சியாளர்கள் தலையில் வைத்துக் கொண்டாடும் இச்சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அனைத்தும் செயல்பாட்டுக்கு வந்தால், அதன் மூலம் 1,00,000 கோடி ரூபாய் அந்நிய முதலீடு நாட்டுக்குக் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. அதேசமயம், இச்சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் முதலீடு செய்யப் போகும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் இறக்குமதி வரிச் சலுகையின் மூலம் மட்டும் மைய அரசுக்கு 90,000 கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்படுகிறது. அதாவது, முதலீடு செய்யும் நிறுவனங்கள் உற்பத்தி விற்பனையைத் தொடங்கு முன்பே, தங்களின் முதலீட்டில் ஏறத்தாழ 90 சதவீதத்தை வரிச் சலுகையாகத் திரும்ப எடுத்துக் கொண்டு போய் விடுவார்கள். உமியைக் கொண்டு வந்தவன் அவலைத் தின்னப் போகும் அநியாயத்தைத்தான் நாடு சந்திக்கப் போகிறது.


இச்சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் இந்தியத் தொழிற்சங்க சட்டங்கள் எதுவும் செல்லாது; தொழிற்சங்கங்களும் இங்கு நுழைய முடியாது; தொழிலாளர்கள் சங்கமாக அணிதிரளவோ போராட முடியாது. இச்சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் "அன்னியர்கள்' நுழையவும் முடியாது. உதாரணமாக, ஓசூர் தொழிற்பேட்டையிலுள்ள ஒரு சிறுதொழில் நிறுவனத்துக்குள் நுழைய ஒருவர் அனுமதி பெறவேண்டும்; ஆனால், தொழிற்பேட்டைக்குள் நுழையவே அனுமதி பெற வேண்டும் என்றால், அது இந்திய நாட்டைச் சேர்ந்த பகுதியா அல்லது வேறு நாடா என்று சந்தேகம் வந்துவிடும். சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இந்தியாவில் நிறுவப்பட்டாலும், அவை அன்னிய பிரதேசங்கள்; தனி சமஸ்தானங்கள் என்கிறது அரசு. இந்தியக் குடிமகனாக இருந்தாலும், இந்த சமஸ்தானத்துக்குள் நுழைய அனுமதி அதாவது, ""விசா'' வாங்க வேண்டும்!


"அன்னிய' குறுக்கீடுகளற்ற இந்த சமஸ்தானத்திற்கு 1000 ஏக்கருக்கும் குறையாமல் நிலம் ஒதுக்கப்பட வேண்டும் எனும் விதியின் நோக்கமே, அது நிலக்கொள்ளைக்கான ஏற்பாடுதான் என்பதைக் காட்டுகிறது. ஏற்கெனவே மும்பை சாண்டாகுரூசில் 93 ஏக்கர் பரப்பளவில் உள்ள சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் 2002ஆம் ஆண்டில் இயங்கிய ஏறத்தாழ 197 நிறுவனங்கள் இப்போது ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் இல்லாமல், படிப்படியாகக் குறைந்துவிட்டன. 93 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்ட இத்தகைய மண்டலங்களே தொழில் வளர்ச்சியின்றி முடங்கிக் கிடக்கும்போது, 1000 ஏக்கருக்கு மேல் நிலத்தைக் கொடுப்பது ஏன்? பிலிப்பைன்ஸ், மலேசியா, பிரேசில், மெக்சிகோ, கொலம்பியா, சிறீலங்கா, வங்கதேசம் என உலகின் பல நாடுகளில் இத்தகைய சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் நிறுவப்பட்டு படுதோல்வி அடைந்துள்ள நிலையில், அதை இந்தியாவில் நிறுவுவது ஏன்? விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி ரியல் எஸ்டேட் திட்டங்கள் மூலம் தரகுப் பெருமுதலாளிகளும் அன்னிய ஏகபோக நிறுவனங்களும் கொள்ளையடிப்பதற்காகவே இத்தகைய மண்டலங்களை நிறுவுவதில் ஆட்சியாளர்கள் போட்டி போடுகின்றனர்.


சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைக்கச் சுற்றுச்சூழல் பசுமையானதாகவும், தொழிற்சாலைகளுக்கும் அடிக்கட்டுமான சேவைகளுக்கும் தண்ணீர் வசதி நிறைந்ததாகவும் இருக்க வேண்டும் என்று ஏகாதிபத்தியவாதிகள் விதித்துள்ள நிபந்தனையை ஆட்சியாளர்கள் விசுவாசமாக ஏற்றுக் கொண்டுள்ளனர். இப்பகுதியில் நிலத்தடிநீரை வரைமுறையின்றி உறிஞ்சவும், மூல வளங்களைக் கட்டுப்பாடின்றி அள்ளிச் செல்லவும் தாராள அனுமதி தரப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இம்மண்டலங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் போகும்; பின்னர் அந்த நிலங்களும் மானாவாரி நிலங்களாக அறிவிக்கப்பட்டு அவையும் இக்கொள்ளையர்களால் சூறையாடப்படும்.


மேலும், இம்மண்டலங்களில் விவசாயத்தை வர்த்தகமாக்கும் உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட தாராள அனுமதி தரப்பட்டுள்ளது. தனி சமஸ்தானத்தில் இயங்குவதாலும், கொள்முதல் செய்யும் பொருட்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாததாலும், இந்நிறுவனங்கள் செயற்கையான உணவுத் தட்டுப்பாட்டை உருவாக்கி நாட்டையும் மக்களையும் கொள்ளையடிக்க முடியும். ஏற்கெனவே அர்ஜெண்டினாவிலும் ஆப்பிரிக்க நாடுகளிலும் இத்தகைய நிறுவனங்கள் செயற்கையான உணவுப் பஞ்சத்தை உருவாக்கிச் சூறையாடியுள்ளன.


ஏற்கெனவே தனியார்மய தாராளமயத் தாக்குதலால் விவசாயம் நாசமாக்கப்பட்டு, விவசாயிகள் நிலத்திலிருந்து வேரோடு பிடுங்கி எறியப்பட்டு வரும் நிலையில், விவசாயிகளைக் கிராமப்புறங்களிலிருந்து முற்றாக வெளியேற்றும் ஆக்கிரமிப்புப் போரை சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயரில் ஆளுங் கும்பல் தொடுத்துள்ளது. நாட்டின் அரைகுறை சுயாதிபத்திய உரிமையையும் ஏகாதிபத்தியங்களிடம் அடகு வைத்துவிட்டு மறுகாலனிய சுருக்கை வேகமாக இறுக்கி வருகிறது காங்கிரசு கூட்டணி அரசு. அன்று ஒரு கிழக்கிந்திய கம்பெனி வந்து நாட்டைக் காலனியாக்கியது என்றால், இன்று நூற்றுக்கணக்கான அன்னிய ஏகபோகக் கம்பெனிகள் படையெடுத்து வருகின்றன. இந்தக் காலனிய ஆக்கிரமிப்பை எதிர்த்து, ஒரிசாவின் பழங்குடியின மக்கள் கடந்த ஓராண்டு காலமாகப் போராடி வருகிறார்கள். இன்று, சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு எதிராக நாடெங்கும் விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.


பாலஸ்தீன மண்ணை ஆக்கிரமிக்கும் யூதக் குடியேற்றம், ஈழத்தை ஆக்கிரமிக்கும் சிங்களக் குடியேற்றம் ஆகியவற்றுக்கும், விவசாய நிலங்களையும் புறநகர் சேரிப் பகுதிகளையும் ஆக்கிரமிக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கும் வேறுபாடில்லை. மறுகாலனிய ஆக்கிரமிப்பு எனும் உள்நாட்டுப் போரை நம்மீது பிரகடனம் செய்திருக்கிறார்கள் எதிரிகள். போரை, போரினால் எதிர்கொள்வதைத் தவிர வேறென்ன வழி இருக்கிறது?


கவி


1 comment:

அசுரன் said...

நாடு அடிமையாகிறது. அடிவருடிகள் குறைக்கும் சத்தமும் அதிகமாகிறது.

பகத்சிங் பிறந்த நாளையொட்டி அசுரன் தளத்தில் பிரசுரித்த ஒரு கட்டுரையிலிருந்து பின்வரும் பகுதிகளை இங்கு பின்னூட்டுவது சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.


மறுகாலனியாதிக்கமும், மாவீரன் பகத்சிங்கும்

http://poar-parai.blogspot.com/2006/09/blog-post_28.html

*****///
1612-ல் வணிகம் செய்ய வந்த கிழக்கிந்திய கம்பெனியார், ஜஹாங்கீர் மன்னனை பல்வேறு பரிசுப் பொருட்கள் கொடுத்து வளைத்துப் போட்டு சூரத்தில் தனது முதல் கம்பெனியை(வணிக மையம்) தொடங்கினான். கமிசன் பணத்திற்க்கு மயங்கிய ஜஹாங்கீர் மன்னன், பிரிட்டிஸாருடன் தனது உறவை குறிப்பிட்டு சிலாகித்து எழுதிய கடிதம் இன்றைய இந்திய தரகு வர்க்கத்தின் பிறந்த தேதி என்ன என்பதற்க்கு சாட்சியாக இன்றும் நிற்கிறது:

"உங்களது ராஜாங்கத்தின் அன்பிற்க்கு இணங்கி, எனது ஆளுமையின் கீழுள்ள அரசுகள், துறைமுகங்கள் அனைத்திலும் வந்திறங்கும் ஆங்கிலேய தேசத்து வியாபாரிகள் எனது நண்பர்களாக கருதி வரவேற்க்கப்பட வேண்டும் என்று கட்டளை பிறப்பித்துள்ளேன். இங்கு அவர்கள் எங்கு வாழ விரும்புகிறார்களோ அங்கு முழு சுதந்திரத்துடன், எந்த தடையுமின்றி வாழலாம். அவர்கள் எந்த துறைமுகத்தில் வந்திறங்குகிறார்களோ அங்கு போர்த்துகீசியர்களோ அல்லது வேறு யாரும் அவர்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்க துணிய மாட்டார்கள். அதே போல அவர்கள் தங்கும் இடத்திலும் கூட யாரும் அவர்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்க துணிய மாட்டார்கள். அவர்கள் விருப்பம் போல விற்க்கலாம், வாங்கலாம், அவர்கள் நாட்டுக்கு எதையும் கொண்டு செல்லலாம் என்பதற்க்கு உத்திரவாதம் கொடுக்குமாறு எனது ஆளுனர்கள், தளபதிகளுக்கும் கட்டளை பிறப்பித்துள்ளேன். இதே போல நமது நட்பையும், அன்பையும் பறைசாற்றும் நடவடிக்கையாக, எனது அரண்மனையை அலங்கரிக்க உதவும் அனைத்து விதமான பரிசுப் பொருட்களையும், கலைப் பொருட்களையும் கப்பல்களில் கொண்டு வருவதற்க்கு மேதகு அரசாங்கம் தனது வியாபாரிகளுக்கு உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்...."

இன்றைக்கு ஸ்பெசல் எக்கானாமிக் சோன்(SEZ) என்ற பெயரில் அதே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஜஹாங்கீருக்குப் பதில் நாம் வோட்டு போட்டு தேர்ந்தெடுத்த புரோக்கர்கள். இதை வெறுமனே கட்டுரையின் வசதிக்காக SEZயையும், அன்றைய பிரிட்டிஸ் வணிக மையங்களையும் ஒப்பீட்டு கூறவில்லை. உண்மையில் அதன் அனைத்து அம்சங்களிலும் SEZ என்பவை இந்தியாவுக்குள் இருக்கும் அன்னிய தேசங்கள். அவை ஆரம்ப கால கிழக்கிந்திய கம்பேனியின் வணிக மையங்களிலிருந்து எந்த வகையிலும் மாறுபட்டதில்லை.

1600 களில் மன்னரிடம் சலுகைகளை கெஞ்சிப் பெற வேண்டிய நிலையிலிருந்த கிழக்கிந்திய கம்பேனி. 1700 களில் தனக்கென சொந்த ராணூவத்துடன் தனது வணிக மையங்களில் முழு கட்டுப்பாட்டை உறுதி செய்த, அரசை நிர்ப்பந்திக்கும் சக்தி பெற்றவையாக மாறின. இதனைக் கொண்டு 1717-ல் முழுமையான சுங்க வரி விலக்கைப் பெற்றனர்.

இதே நடைமுறை இன்றும் நடைபெறுகிறது. நிதி அமைச்சர் மன்மோகன் சிங், தனது பொருளாதார திட்டங்களின் ஒரு இலக்காக சேவை வரி ராஜாங்கத்தைச் சொல்கிறார். அதாவது சுங்க வரியை முற்றிலுமாக ஒழித்து, வெறும் சேவை வரி மட்டும் இருக்கும் வரி அமைப்பை நோக்கி போவதுதான் அவ்ரது திட்டம். இதற்க்காக வருடம் 1% வீதம் சேவை வரியை உயர்த்துவது, சேவை வரியின் கீழ் வரும் துறைகளின் எண்ணிக்கையை உயர்த்துவது, சுங்க வரியின் கீழ் வரும் துறைகளை குறைத்துக் கொண்டே வந்து முற்றிலும் அதை ஒழிப்பது. இதுதான் திட்டம். ஆக, ஏகாதிபத்தியங்கள் கட்ட வேண்டிய வரிகளையும் நாம்தான் கட்ட வேண்டும் என்பதுதான் இதன் அர்த்தம்.

பிளாசிப் போரின் வெற்றிக்குப் பிறகு கிழக்கிந்திய கம்பேனி தனது ராணுவ வலிமையைக் கொண்டே இந்திய தேசங்களை தனது பொருளாதார, அரசியல் நலன்களுக்கு அடிபணியச் செய்தது. அதில் இரண்டு விதமான தேசங்கள் உருவாகின. ஜான்ஸி ராணி போன்றவர்களிடமிருந்து பிடுங்கிய நேரடி ஆட்சியில் உள்ள பகுதிகள். பகுதி ராஜாக்களிடமிருந்து வரி விதிப்பு, வெளியுறவுத் துறை, ராணூவம் போன்ற துறைகளைக் கட்டுப் படுத்தும் அதிகாரங்களைப் பெற்றுக் கொண்ட பதிலி அரசு உள்ள பகுதிகள். அதாவது ராஜாக்கள் எல்லாம் கம்பேனியின் பிரதினிதிகளாயினர். இதை எதிர்த்து விடுதலைப் போரில் மாண்ட மாவீரர்கள்தான் வீரபாண்டிய கட்ட பொம்மன், சின்ன மருது முதலானோர்.

இதில் இந்த இரண்டாவது விசயம்தான் தற்பொழுது இந்தியாவில் நடந்து வருகிறது. அதாவது உள்ளூர் ராஜாக்கள் ஏகாதிபத்திய பிரதினிதிகளாக நம்மை சுரண்டக் கொடுப்பது. இதற்க்கு ஜன நாயகம் எனும் கவர்ச்சிகரமான பெயர் வேறு.

வரி விதிப்பைப் பொறுத்தவரை ஏகாதிபத்தியத்துக்கு வருமான வரிச் சலுகை, குறைந்த விலை மின்சாரம், இலவச நிலம், சுங்க வரி ரத்து என ஒரு பக்கம் கொடுத்து இன்னொரு பக்கம் மக்களின் பெயரில் கடன் வாங்கி அவர்களுக்கான உள் கட்டுமானங்களை கட்டி வருகிறார்கள். இதே நேரத்தில் உள்ளூர் போட்டியை ஒழிப்பதற்க்கு VAT வரி விதிப்பை திணித்து முற்று முதலாக நமது வரிவிதிப்பின் பலன்களை அவர்களின் வியாபார நலன்களுக்கு மாற்றி விட்டார்கள்.

வெளியுறவுத் துறை:ஈரானுக்கு எதிராக நாம் ஐ.நா. வில் போட்ட வோட்டு, நட்வர் சிங் பிரச்சனை, சமீபத்தில் இந்தியாவின் நிலைப்பாடுகளை வெளிப்படையாக விமர்சித்து கண்டனத்துக்காளான அமெரிக்க தூதுவர், முசாரபின் சமீபத்திய புத்தகமான- தீச் சுவட்டின் நான்(In the Line of fire) - அவர் ஏதோ ஒரு சக்தி இந்திய பாகிஸ்தான் ஒப்பந்தத்தை நிறைவேறாமல் கெடுத்ததாக கூறியிருந்தது ஆகியன மிகத் தெளிவாக இந்திய வெளியுறவுத் துறை நமது கட்டுப்பாட்டில் இல்லை என்பதைக் கூறியது.

ராணுவம்:சமீபத்தில் போடப்பட்ட ராணுவ ஒப்பந்தம் நமது ராணுவத்தை அமெரிக்க ராணுவத்தின் துணை ராணுவமாக மாற்றி விட்டது. இது தவிர்த்து அணு ஆயுத ஒப்பந்தம் நம்து நாட்டின் பாதுகாப்பு அமெரிக்காவின் கையில் என்ற நிலையை உருவாக்கியுள்ளது. ஆக இந்த விசயத்திலும் கூட நாமது நாடு எந்த வகையிலும் பிரிட்டிஸ் ஆட்சியின் கீழ் இருந்த எட்டப்பரின் சமஸ்தானத்தில் இருந்த சுய உரிமையின் அளவைத் தாண்டி ஒரு எட்டு அடிகூட போகவில்லை.

அன்றைக்கு பிரிட்டிஸாரின் வரி சுரண்டலை ஈடுகட்ட விவசாயிகளைச் சுரண்டியதால் பல இடங்களில் விவசாய கிளர்ச்சிகள் வெடித்துக் கிளம்பின. மாப்ளா கலகம்(1805), முதல் இந்திய சுதந்திரப் போர்(1857), முதல் தென்னிந்திய சுதந்திரப் போர்(1805) இவையெல்லாம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ விவசாயிகளின் கோபத்துடன் தொடர்பு கொண்டிருந்தன.

இந்தியா அரசர்களைப் பற்றிய பாடங்களில் நாம் இன்றும் படிப்பது அசோகர் மரம் நட்டினார், குளம் வெட்டினார் என்பதைத்தான். இதன் பொருள் என்னவென்றால் இந்தியாவில் பொது பணித்துறை என்பது அரசின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. இதில் செலவாகும் பணத்தை மிச்சப்படுத்தி பிரிட்டிசார் கொழுக்கலாம் என்று பொதுப்பணித்துறையை முற்றிலுமாக பிரிட்டிஸ் அரசு கைகழுவியது. இதன் விளைவாக விவசாயம் பொய்த்து பல கொடுமையான பஞ்சங்கள் வந்து லட்சங்களில் காவு கொண்டன.

இன்றைய அரசும் தனது பொதுப் பணீத்துறையை கைகழுவிக் கொண்டு வருகிறது. அது மட்டுமின்றி இயற்கை வளங்களை ஏகாதிபத்தியத்துக்கு பட்டயம் வேறு எழுதிக் கொடுத்து வருகிறது. ஆறு, குளம் முதலான அனைத்து வளங்களும் அவனது சந்தைக்கு சேவை செய்ய தாரை வார்க்கிறது. விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

அன்றைக்கு தனது துணி தொழிற்சாலைகளுக்கு தேவையான் சாய பயிர்களை பயிரிட நிர்பந்தித்து விவசாயிகளை கொன்று குவித்தான் கும்பினிக்காரன். இன்று அரிசி, கோதுமை, கரும்பு என்று நாட்டு மக்களுக்கு தேவையான விவசாய பொருட்களை விளைவிப்பவர்களை நஸ்டத்திற்க்கு தள்ளி அவர்களை பூ பயிரிட செய்து தனது சென்ட் வியாபரத்திற்க்கான பின் நிலமாக மாற்றிக் கொண்டிருக்கிறான்.

"ஊரன் ஊரான் தோட்டத்திலே ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்காய் காசுக்கு ரெண்டு விற்க்க சொல்லி காயிதம் போட்டான் வெள்ளக்காரன்" -என்பதுதான் இன்றைய தேசிய முதலாளிகளின் நிலை. தனது சொந்த முதலீட்டில் ஆரம்பிக்கும் பனியன் தொழிற்சாலையில் உற்பத்தியாகும் பனியனுக்கு ஒரு பன்னாட்டு கம்பேனி வந்து விலை வைப்பான்.

பிரிட்டிஸின் நேரடி ஆதிக்கதில் இருந்தது முதல் இந்தியா, தற்பொழுது WTO, உலக வங்கி, மற்றும் பன்னாட்டு நிதி ஆதிக்க கும்பல்களின் நேரடி ஆதிக்கதில் இருப்பது இரண்டாவது இந்தியா. இரண்டுக்கும் ஒரேயொரு வித்தியாசம்தான். முதலில் வைப்பாட்டி, இரண்டாவதில் பொட்டு கட்டி விடப்பட்ட தேவதாசி. வேறு வித்தியாசம் எதுவும் இல்லை.
////********



காலங்கருதி வெளியிடப்படும் கட்டுரை. கட்டுரைக்கு மிக்க நன்றி,
அசுரன்