தமிழ் அரங்கம்

Saturday, December 9, 2006

நாகரிக பொறுக்கிகளால் விளையும் விபரீதங்கள்

தாராளமயம் பெற்றெடுத்த நாகரிக பொறுக்கிகளால் விளையும் விபரீதங்கள்

வர்கள் அனைவரும் சாலைப் பணியாளர்கள். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவிலிருந்து சொந்த மண்ணையும், வீடுவாசலையும் விட்டு பிழைப்புத் தேடி மராட்டியத்தின் மும்பைப் பெருநகருக்கு விரட்டப்பட்டவர்கள். மும்பை நகரின் செல்வச் சீமான்களின் சொகுசுக் கார்கள் வழுக்கிச் செல்லும் நெடுஞ்சாலைகள் அமைப்பதுதான் அவர்களின் வேலை. ஆனால், அந்தச் சாலையிலேயே, அத்தகை சொகுசுக் கார்களில் ஒன்றாலேயே தாம் நசுக்கிக் கொல்லப்படுவோம் என்று கொஞ்சமும் எண்ணிப் பார்த்திருக்க மாட்டார்கள்!


முன்னிரவில் கொதிக்கும் தாரோடு கலந்த கருங்கல் ""ஜல்லி''களோடு கைகால் வெந்து நெக்குறுகிப் போயிருந்தார்கள். அதன்பிறகு வாட்டி எடுக்கும் கடுங்குளிரில், வெட்டவெளியில் அதே சாலையோரத்தில் அடித்துப் போட்ட மனிதர்களாய் துவண்டு கிடந்தார்கள். அது மும்பை பெருநகரின் பாந்த்ரா பகுதி; கார்ட்டர் சாலை. அதிகாலை 3.45 மணி. பேய்கள்தாம் களிவெறியாட்டம் முடித்து உறங்கப் போகும் நேரம். திடீரென்று பாய்ந்து வந்த ""டொயோட்டோ கோரல்லா'' என்ற சொகுசுக்கார் அவர்கள் மீது ஏறி ஓடியது. ஐந்து வயதுச் சிறுவன், ஏழு வயதுச் சிறுமி, மூன்று பெண்கள், இரண்டு ஆண்களை நசுக்கிக் கொன்றது. மேலும் பதினான்கு பேரை சாவின் விளம்பிற்குத் தள்ளியது.


காரை ஓட்டியவர் உட்பட காரிலிருந்த ஆறு பேரும் 18 முதல் 21 வயதேயாகியவர்கள், எல்லோரும் குடிபோதையில் மிதந்தார்கள். போதை இறங்கிவிட்டால் மேலும் ஏற்றிக் கொள்ள சீமைச் சாராயப் புட்டிகளும் காரில் கிடந்தன. அவர்கள் அனைவரும் மும்பையில் செல்வச் சீமான் வீட்டுக் குலக்கொழுந்துகள். பெற்றோர்களின் தொழில் நிர்வாகிகள் அல்லது மேட்டுக்குடிக் கல்லூரி மாணவர்கள்.


இந்தக் கொலைகாரர்கள் எல்லாம், மும்பையின் முதன்மையான நட்சத்திர விடுதியான தாஜ் ஓட்டலில், வயிறு முட்டக் குடித்தும், தின்றும், ஆட்டம் பாட்டம் என்று கும்மாளமிட்டு விட்டுத் திரும்பியிருக்கிறார்கள். இவர்கள் குடித்துக் கூத்தடித்துக் கொண்டிருந்த அந்த நள்ளிரவிலும், இந்தத் தொழிலாளர்கள் சாலை போட்டுக் கொண்டிருந்தார்கள். அதிகாலை இரண்டு மணிக்குத்தான் பணி முடித்துக் களைப்பாற்றத் தூங்கப் போனார்கள். இந்தக் கோரமான முடிவைச் சந்தித்தார்கள். இந்தக் களிவெறித் தாக்குதலில் இருந்து தப்பிப் பிழைத்த அவர்களின் உறவினர்கள் மொழி அறியாத அந்த இடத்தில் கதறி அழும் காட்சி நெஞ்சை அறுக்கும் துயரம்மிக்கதாகவே இருந்தது.


அந்த ஏழைஎளிய உழைப்பாளிகளின் உயிர்கள் அற்பமாக மதித்துப் பறிக்கப்பட்டதைப் போலவே, கொலைகாரர்களுக்கான தண்டனையும் அற்பமாகவே இருக்கப் போகிறது. மும்பைபாந்த்ரா சாலைத் தொழிலாளர்களுக்கெதிரான இந்தக் கோரமான கொலைக்குற்றம், குடித்துவிட்டு மோட்டார் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்குரிய அலட்சியத்தால் இழைக்கப்படும் குற்றமாகக் கருதித் தண்டிக்கும் குற்றப்பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, இந்தியத் தண்டனைச் சட்டம் 304(அ) அலட்சியம் காரணமாக மரணம் விளைவிக்கும் குற்றம் இதன்படி குற்றவாளி பிணையில் வந்துவிடமுடியும்; அதிகபட்சம் தண்டனை இரண்டு ஆண்டு சிறையும், அபராதமும் விதிக்கப்படும்.


ஆனால், நடந்திருப்பது ஒரு கொலைக்குற்றம். தாழ்த்தப்பட்ட மக்களை சாதிவெறியர்கள் படுகொலை செய்வதற்கு சாதி ஆதிக்கவெறி அடிப்படையாக இருப்பதைப் போல, ஏழை எளிய மக்களைக் கிள்ளுக்கீரையாக எண்ணி மிகவும் அலட்சியமாகப் பலியிடுவதற்கு அடிப்படையாக, செல்வமிகு மேட்டுக்குடித் திமிர்த்தனம் இருக்கிறது. ஆண்டைகள் தமது செல்லப்பிராணிகளுக்கு அடிமைகளை இரையாக்கி, அதைக் கண்டு மகிழ்வதைப் போன்ற வக்கிரம் இந்த மேட்டுக்குடித் திமிர்த்தனத்தில் வெளிப்படுகிறது.


இதுவொன்றும் வழக்கம் போல குடித்துவிட்டு மோட்டார் வாகனங்களை ஓட்டும் அலட்சியம் அல்ல; தனி ஒரு சம்பவமும் அல்ல. மும்பை மட்டுமல்ல, பிற பெருநகரங்களிலும் இத்தகைய கிரிமினல் குற்றங்களில் மேட்டுக்குடிசெல்வச்சீமான்களின் குலக் கொழுந்துகள் ஈடுபடுவது ஒரு பொதுப்போக்காகவே இப்போது வளர்ந்து வருகிறது. இந்த ஆண்டு துவக்கத்தில் ஸ்டாண்டார்டு வங்கியின் உயர் அதிகாரி நீல் சட்டர்ஜி மும்பையின் பிரபாதேவி பகுதியில் ரமாகாந்த் தூரி என்ற காவலாளியை கார் ஏற்றிக் கொன்றார். இதே பாந்த்ரா பகுதியில் இந்தி நடிகர் ராஜ்குமாரின் மகன் புரு ராஜ் குமார் நடைபாதை மக்கள் மீது கார் ஏற்றிப் பலரைப் படுகாயமுறச் செய்துவிட்டு, வெறும் அபராதத்தோடு தப்பித்துக் கொண்டார்.


இந்தியக் கடற்படை தலைமைத் தளபதி எஸ்.எம். நந்தாவின் பேரனும், கடற்படை தளபதி சுரேஷ் நந்தாவின் மகனும் கிரௌன் கார்ப்பரேசன் கம்பெனியின் ஆயுதங்கள் விற்பனைத் தலைமை அதிகாரியுமான சஞ்சீவ் நந்தா, தனது பி.எம்.டபிள்யூ என்ற சொகுசுக்காரை ஏற்றி ஆறு பேரைக் கொன்றுவிட்டு, தண்டனையின்றித் தப்பித்துக் கொண்டார். கடந்த ஆண்டு, பிரபல கட்டாவ் துணி ஆலை முதலாளி மகேந்திரா கட்டாவின் மகன் மணிஷ் கட்டாவ் மும்பையின் பிரதான சாலையான மரைன் டிரைவில் நின்றிருந்த ஜிதேந்திரா ரோகடே என்ற போலீசுக்காரரை காரேற்றிக் கொன்றுவிட்டு, தண்டனையின்றி விடுதலை செய்யப்பட்டார்.


மும்பை சிவசேனாத் தலைவர் பால்தாக்கரேயின் உதவியாளர் ரவீந்திர மகத்ரே காரேற்றி இரண்டு பேரைக் கொன்று இரண்டு பேரைப் படுகாயமுறச் செய்தார். பிரபல இந்தி நடிகர் சல்மான்கான், தனது டயோட்டா சொகுசுக் காரை தலைத்தெறிக்க ஓட்டி சென்று ரொட்டிக் கடையின் முன்பு உறங்கிக் கொண்டிருந்த ஒருவரைக் கொன்றும் நான்கு பேரைப் படுகாயமுறவும் செய்தார்.


இத்தகைய குற்றங்கள் தொடர்வதற்குக் காரணமென்ன? எப்படிப்பட்டவர்கள் இத்தகைய குற்றங்களைச் செய்கின்றனர். தங்குதடையற்ற கொண்டாட்டமும் பரபரப்பான வாழ்க்கையும் இலக்காகக் கொண்டவர்கள்; கத்தை கத்தையாக பணக் கட்டுகளும், கடன் அட்டைகளும், மின்னணுக் கைச் சாதனங்களும், பேய்த்தனமாகப் பாய்ந்து செல்லும் விலையுயர்ந்த மோட்டார் வாகனங்களுமாகப் பெருநகர சாலைகளிலும், நட்சத்திர நடன விடுதிகளிலும் திரிபவர்கள்; தான்தோன்றித்தனமான கேளிக்கைகளிலும் கனவுகளிலும் மிதப்பவர்கள்; சுருக்கமாகச் சொன்னால், தாராளமயம்உலகமயம் பெற்றெடுத்த செல்வச்சீமான்களின் கொழுப்பேறிய செல்லப் பிள்ளைகள்; அதாவது, நவநாகரீகப் பொறுக்கிகள்.


இந்த ""இளைஞர்கள் போதிய பணம் வைத்திருக்கிறார்கள்; அந்தப் பணபலமே தமது அதிகார உரிமை என்று அவர்கள் கருதுகிறார்கள். வெறித்தனம், அதிகாரம், போதை மற்றும் கிறுக்குத்தனமான ஆணவம் திமிர்த்தனம் ஆகியவை ஒரு கொடிய உயிர்க் கொல்லி ஆயுதமாக அமையும் உலகமயமாக்கம் கூட இம்மாதிரியான நடத்தைகளுக்கு ஒரு காரணமாக அமைகிறது'' என்கிறார் மும்பையின் பிரபல மான மனநல மருத்துவர் ஹரீஷ் ஷெட்டி.


இத்தகைய நச்சுப் பண்பாடு, மும்பை மட்டுமல்ல, தில்லி, சென்னை, பெங்களூர், ஐதராபாத் என்று நாட்டின் பெருநகரங்களிலெல்லாம் தொற்று நோயாகப் பரவி வருகிறது. சென்னை மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலையின் இருபுறமும் புற்றீசல்களாய் புறப்பட்டுள்ள சொகுசு மாளிகைகளில் சனிக்கிழமை பின்னிரவு வரை குடித்துக் கும்மாளமிட்டு, கூத்தடித்துவிட்டு பாய்ந்து செல்லும் கார்களை ஓட்டிவரும் மேட்டுக்குடி புதுநாகரிகப் பொறுக்கிகளால் ஏற்படும் ""விபத்துகள்'' அங்கே வாழும் மக்களைப் பீதியடைச் செய்து வருகின்றன. இந்தச் சாலையில் நடக்கும் சாவுகள் மட்டும், சென்னையின் பிற பகுதிகளில் நடப்பவைகளைவிட அதிகமென்று விவரங்கள் தெரிவிக்கின்றன.


இதற்குக் காரணமானவர்கள் வழக்கமாக நாம் காணும் பரம்பரை பணக்கார வீட்டுச் செல்லப் பிள்ளைகள் அல்ல. கடந்த 15 ஆண்டுகளாக அடுத்தடுத்துவந்த ஆட்சியாளர்கள் பின்பற்றிய தாராளமயம் தனியார்மயம் உலகமயம் என்ற புதிய பொருளாதாரக் கொள்கை காரணமாகப் பெய்த டாலர் மழையில் நனைந்த புதுப்பணக்காரர்கள். குறிப்பாக கணினி தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதைச் சார்ந்த தொழில்களில் அதன் உண்மை மதிப்புக்குமேல் பன்மடங்கு வரும் வருவாயினால் ஊதிப் பெருத்துப்போன செல்வத்தில் மிதிப்பவர்கள்தான் கண்மண் தெரியாமல் தறிகெட்டு ஆட்டம் போடுகிறார்கள்.


சில நாட்களுக்கு முன் குடிவெறியில் காரை ஓட்டிச் சென்ற ஒருவர் சாலைத்தடுப்புக் கம்பிகள் மீது மோதி மாண்டார். அதனால், குடிபோதையில் கார் ஓட்டுபவர்களைப் பிடிப்பதற்காக போலீசார் சோதனைகளில் ஈடுபட்டபோது, நள்ளிரவுக்குப் பின்னரும் குடித்துக் கும்மாளமிட்டுவிட்டு இளம் ஜோடிகள் கார்களில் பறப்பதைக் கண்டனர். இதைத் தொடர்ந்து சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் விதிகளை மீறி நடத்தப்படும் சில ""பார்கள்'' மற்றும் நடன அரங்குகள் மீது திடீர் சோதனைகள் நடத்தப்பட்டன. நட்சத்திர விடுதிகளில் நள்ளிரவுக்குப் பிறகும் சீமைச் சாராயம் பரிமாறப்படுவதும், இளம்ஜோடிகள் குடிவெறியில் விளக்குகள் அணைக்கப்பட்டும், மங்கிய ஒளியிலும், வரைமுறைகள் இல்லாமல் ஆபாசமாக நடனமாடுவதும் நடப்பதைக் கண்டார்கள்.


சோதனையிட வந்த போலீசாரைக் கண்டதும், பலர், ஏற்கெனவே "புக்' செய்திருந்த தமது அறைகளில் பதுங்கிவிட்டனர். மேலும் பலர் பின்புறவழியாகத் தப்பி ஓடினர். போலீசார் வந்ததும் போதையில் ஆடிக் கொண்டிருந்தவர்களைப் பிடித்து விசாரித்த போது அவர்கள் ""நல்ல வேலையில் உள்ளவர்கள்; நல்ல குடும்பப் பின்னணி உள்ளவர்கள்'' என்று தெரிந்ததால் அவர்களின் ""எதிர்கால நலன்களை கருதி எச்சரித்து அனுப்பப்பட்டனர்'' என்கிறார்கள், போலீசார். ஆனால், விதிகளை மீறியும் அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு மேலும் பார்களையும் நடன அரங்குகளையும் நடத்தியதற்காக விடுதி ஊழியர்கள் 17 பேர் மட்டும் கைது செய்யப்பட்டனர்.


""சென்னையில் தெருவுக்குத் தெரு கம்ப்யூட்டர் நிறுவனங்கள் பெருகி வருகின்றன. இவற்றில் நான்கைந்து ஷிப்டுகளில் வேலை நடக்கிறது. நள்ளிரவில் "ஷிப்டு' முடிந்து செல்பவர்களைக் கவர்வதற்காகவே ஒட்டல்களில் பார்கள் நள்ளிரவைத் தாண்டியும் திறந்து வைக்கப்படுகின்றன. கம்ப்யூட்டர் நிறுவனங்களுக்கு தங்கள் மகன், மகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோர், வேலை முடித்து அவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் வீட்டுக்கு வருகிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும். நள்ளிரவில் வெகுநேரம் குடித்துவிட்டு அதிகாலையில் வீடு திரும்புபவர்கள் வேகமாக கார் ஓட்டிச் செல்கின்றனர். இதனால், நிறைய விபத்துக்கள் நடக்கின்றன என்பதையும் பெற்றோர் உணரவேண்டும்'' என்கிறார், ஒரு போலீசு அதிகாரி.


என்னவொரு அக்கறை! என்னவொரு பொறுப்பு! எல்லோரும் ""நல்ல வேலையில் இருப்பவர்கள், நல்ல குடும்பப் பின்னணி உள்ளவர்கள்'' அல்லவா, அதுதான்! ஆனால், பிடிபட்ட பெண்களோ, ""நாங்கள் எவன்கூடப் போனால் இவர்களுக்கென்ன?'' என்று கொழுப்புக் கொப்பளிக்கக் கேட்கிறார்கள். தாங்கள் அவ்வளவாகக் குடித்திருக்கவில்லை என்றும் குடிபோதையில் இருந்த 15,16 வயதுப் பெண்களை மட்டும் தப்பிப் போகவிட்டார்கள்; (மைனர் பெண்கள் ஆதலால் வழக்கும் குற்றமும் கடுமையாகக் கருதப்படும் என்பதால் போலீசின் கரிசனம் நிரம்பி வழிந்திருக்கிறது போலும்!) அடையாள அட்டைகளைக் காட்டியபோதும் காக்க வைத்து பெற்றோரை அழைத்து எச்சரித்துவிட்டுத்தான் வெளியே விட்டார்கள்'' என்று குறைபட்டுக் கொண்டார்கள்.


இரவு நேரங்களில் இப்படிக் குடித்துக் கூத்தடிப்பது ஒன்றும் தவறில்லை; ஒளிவுமறைவானதுமில்லை, கூச்சத்துக்குரியதுமில்லை, தகுந்த அடையாளத்தைக் காட்டி பகிரங்கமாகவே இப்படிச் செய்வதில் தயக்கமில்லை என்று அவற்றில் ஈடுபட்டவர்கள் காட்டிக் கொள்கிறார்கள். இப்படிச் செய்வது தங்கள் உரிமை என்றும் வாதிடுகிறார்கள். அதை மறுக்காத போலீசுக்காரர்களும் நடன அரங்கின் புகையும் சூழலும்தான் நல்லதில்லை என்று கூறி அவர்களைச் சமாதானப்படுத்த முயன்றிருக்கிறார்கள்.


போலீசார் மேற்கொண்ட நடவடிக்கை முஷ்டியை மடக்கி மிரட்டுவதாகும் என்று ஐதீகமான ""இந்து'' நாளேடு சித்தரிக்கிறது. பெண்களை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்துக்குக் கொண்டு போய் ஒருமணிநேரம் காத்திருக்கச் செய்தது பயபீதியூட்டுவதாகும் என்று பொருமுகிறது அந்த நாளேடு. கூடவே, இம்மாதிரியான ஆட்டங்களில் பாடுவதைத் தொழிலாகக் கொண்ட ஒருவரைப் பேட்டி கண்டு, ""இப்படிக் கட்டுப்பெட்டித்தனமாக இருக்கக் கூடாது, மின்னணு இசையை இரசிக்கும் புதிய போக்கை வளர்ப்பதற்காக இன்னும் தாராளமாக நடந்து கொள்ள வேண்டும்'' என்று எழுதியது அந்த நாளேடு.


அடுத்தநாளே கூடிய தென்னிந்திய ஓட்டல்கள் உணவகங்களின் உரிமையாளர் சங்கம், ""அந்நிய விமான சேவைகள், அந்நிய நேரடி முதலீட்டாளர்கள், அந்நிய சுற்றுலாப் பயணிகள் ஆகியவர்களுக்காக அரசு தனது கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும். குடிக்கவும், ஆடவுமான நேரத்தை அதிகரிக்க வேண்டும். தகவல் தொழில் நுட்பம், அது சார்ந்த சேவை நிறுவனங்கள், கணினிவெளி வேலைகளுக்கான நிறுவனங்கள், கால்சென்டர்கள் போன்றவை பெருகிவரும் சென்னையில் இரவு வாழ்க்கை பற்றித் தெளிவான கொள்கையை அரசு வகுக்க வேண்டும்'' என்று கோரியுள்ளனர்.


""இரவு வாழ்க்கை'' என்பது மேலே குறிப்பிடப்பட்ட தொழில்களின் நீட்டிப்பாகவும், புதிய பண்பாடாகவும் அந்நிய, உள்நாட்டுக் கூட்டுப்பங்குத் தொழில் கழகங்களால் திட்டமிட்டு வளர்க்கப்படுகின்றது என்பது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது. தமது பணியாளர்களின் இரவு வாழ்க்கைக்காக இந்தக் கூட்டுப்பங்குத் தொழில் கழகங்கள், தாமே கூடுதல் சம்பளம், சுற்றுப் பயணங்கள் வசதிகள் மற்றும் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்கின்றன. ""என்.ஐ.ஐ.டி.'' மற்றும் ""விப்ரோ'' ஆகிய இரண்டு கணினி மென்பொருள் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்கள் சேர்ந்து ""தேதி வைத்து'' உல்லாசமாகக் கழிப்பதற்கு சிறப்புப் படி (டேட்டிங் அலவன்ஸ்) வழங்குகின்றன. இதனால் தனது மணவாழ்க்கை சிதைவதாக ""விப்ரோ'' நிறுவனப் பணியாளர் ஒருவரின் மனைவி வழக்குத் தொடுத்துள்ளார்.


தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற இந்த மறுகாலனியாக்கம் நமது நாட்டுப் பொருளாதாரத்தை மட்டுமல்ல, நமது நாட்டின் பண்பாட்டையும், குடும்பங்களை மட்டுமல்ல, ஏழை எளிய மக்களின் வாழ்வையும், உயிரையும் பறிக்கும் விபரீதங்களாக உருவெடுத்து வருகிறது என்பதையே இவை காட்டுகின்றன.

· ஆர்.கே.


12 comments:

மாசிலா said...

நல்ல பதிவு.

பகிர்ந்தமைக்கு நன்றி.

Anonymous said...

கருத்தாழமிக்க, கலப்படமற்ற சமூக அககறை தொனிக்கும் ஒரு உன்னதப் பதிவு..மககளே...கொஞ்சம் உற்சாகப்படுத்துங்கப்பா?

மிதக்கும்வெளி said...

தோழர் இது எங்கேயோ புதிய சனநாயகத்தில் படித்ததுபோலத் தெரிகிறதே..?

╬அதி. அழகு╬ said...

//இத்தகைய குற்றங்கள் தொடர்வதற்குக் காரணமென்ன?//

//இந்தியத் தண்டனைச் சட்டம் 304(அ) அலட்சியம் காரணமாக மரணம் விளைவிக்கும் குற்றம் இதன்படி குற்றவாளி பிணையில் வந்துவிடமுடியும்; அதிகபட்சம் தண்டனை இரண்டு ஆண்டு சிறையும், அபராதமும் விதிக்கப்படும்.//

Anonymous said...

உயிரை சொற்பமாக மதிக்கும் சமூகத்தால்தான் இத்தகைய அசம்பாவிதம் நடைபெறுகிறது.

உயிர் ஓர் உன்னதமென்று உண்ர்வுகள் பிறக்குமாயின், உதவாத நாகரிக சீரழிவுகளும், அதன் பின்னூட்டமாய் விளங்கும் உயிர்ச்சேதமும் ஓடி ஒளிந்துக் கொள்ளும்.

இவன் said...

//""என்.ஐ.ஐ.டி.'' மற்றும் ""விப்ரோ'' ஆகிய இரண்டு கணினி மென்பொருள் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்கள் சேர்ந்து ""தேதி வைத்து'' உல்லாசமாகக் கழிப்பதற்கு சிறப்புப் படி (டேட்டிங் அலவன்ஸ்) வழங்குகின்றன. இதனால் தனது மணவாழ்க்கை சிதைவதாக ""விப்ரோ'' நிறுவனப் பணியாளர் ஒருவரின் மனைவி வழக்குத் தொடுத்துள்ளார்.//

இது மிகவும் வேதனை அளிக்கக்கூடிய கலாச்சார சீர்கேடு.

தேவையற்ற விசயங்களுக்கு எல்லாம் ஆர்பாட்டம் செய்யும் சில அரசியல் மற்றும் சமூக அமைப்புகள் எல்லாம் என்னதான் செய்து கொண்டுயிருக்கின்றன?

தமிழ் வட்டாரம்! இது கருத்து ஆழம்மிக்க சமுக பதிவு. பாரட்டுக்கள்.

தமிழரங்கம் said...

இது புதியஜனநாயக கட்டுரைதான். நீங்கள் பதியஜனநாயகம், புதியகலச்சாரம் இதழ்கள் முதல் அவர்களின் நூல்களை படிக்க www. tamilcircle.net என்ற எமது இணையத்துக்கு செல்லம்.

இது தற்போது பாமின் எழுத்துருவிலும், யூனிக்கொட்டிலும் இயங்குகின்றது. விரையில் பூரணமான யுனிக்கோட் முறையுடன் முறைப்படுத்தி வரவுள்ளது.

தமிழ்சேக்கிள்

Krishna (#24094743) said...

""என்.ஐ.ஐ.டி.'' மற்றும் ""விப்ரோ'' ஆகிய இரண்டு கணினி மென்பொருள் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்கள் சேர்ந்து ""தேதி வைத்து'' உல்லாசமாகக் கழிப்பதற்கு சிறப்புப் படி (டேட்டிங் அலவன்ஸ்) வழங்குகின்றன. இதனால் தனது மணவாழ்க்கை சிதைவதாக ""விப்ரோ'' நிறுவனப் பணியாளர் ஒருவரின் மனைவி வழக்குத் தொடுத்துள்ளார்//

விப்ரோவில் இப்படி ஒரு படி கிடையாது. இது அப்பட்டமான பொய். விப்ரோ 'integrity' என்று சொல்லப்படும் வார்த்தைக்கு மிக்க மதிப்பளித்து நடக்கும் ஒரு உன்னதமான ஸ்தாபனம். எனக்குத் தெரிந்து அரசியல்/அதிகார வர்க்கத்தினருக்கே லஞ்சம் கொடுக்காமால் நடத்தப்படும் ஒரே ஸ்தாபனம் விப்ரோ மட்டுமே. இதை நீங்கள் அதிகார வட்டத்தில் வேண்டுமானால் கேட்டுத் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

தமிழரங்கம் said...

'விப்ரோவில் இப்படி ஒரு படி கிடையாது. இது அப்பட்டமான பொய். விப்ரோ 'iவெநபசவைல' என்று சொல்லப்படும் வார்த்தைக்கு மிக்க மதிப்பளித்து நடக்கும் ஒரு உன்னதமான ஸ்தாபனம். எனக்குத் தெரிந்து அரசியல் அதிகார வர்க்கத்தினருக்கே லஞ்சம் கொடுக்காமால் நடத்தப்படும் ஒரே ஸ்தாபனம் விப்ரோ மட்டுமே. இதை நீங்கள் அதிகார வட்டத்தில் வேண்டுமானால் கேட்டுத் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்."

நீங்கள் என்ன அப்பாவியோ? யாரிடம் கேட்டு தெரிந்து கொள்வது? அந்த அதிகார வாக்கமே இந்த சமூகத்தின் ஓழுக்க கேடு அல்லவா. ஒரு நிறுவனம் அதிக சம்பளம், குறைந்த சம்பளம் என்ற ஊழியரை தரம் பிரிக்கும் போது அது லஞ்சம் தான். லஞ்சம் ஊழல் என்பது பல வகைப்பட்டது.

மற்றவன் உழைப்பை சுரண்டும் போதே, அதன் எணிப் படியாக இருப்பது லஞ்சமும் ஊழலும் தான். இது இன்றி மனிதனை முழுமையாக சுரண்டவே முடியாது.

சக மனிதனின் உழைப்பை ஒரு சுரண்டும் அமைப்பு அதிகார வர்க்கத்துக்கு லஞ்சம் கொடுப்பது கொடுக்காமல் விடுவது கூட, அதன் ஓழுக்ககேட்டின் பலத்தைப் பொறுத்ததே. அதன் உயர்ந்த ஒழுக்ககேடுதான் இதை நிர்ணயம் செய்கின்றது. அதிக ஓழுக்கக் கேடு கறராக, லஞ்சத்தை சட்டபூர்வமாக்கின்றது. அதை லஞ்சமில்லை என்று அப்பாவிகள் நம்பலாம்.

சக மனிதனின் உழைப்பை ஊறுஞ்சிக் கொழுப்பது ஒழுக்கமோ? இதில் என்ன உன்னதம் இருக்கிறது? ஒரு நாட்டின் சட்டத்தையே தமக்கு இசைவாக்கி கொழுப்பது உன்னதமான ஒழுக்கமோ?

பி.இரயாகரன்

தமிழரங்கம் said...

'தனிமனித சுதந்திரத்தில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை." என்று சொல்லும் நீங்கள் தான், மற்றவனின் உழைப்பைக் கொள்ளையிட்டு சுதந்திரமாக வாழ்பவர்கள். உங்களால் தான் பிச்சை எடுப்பவர்களின் தேசமாக்க இருக்கின்றது. உங்களிடம் தமது உழைப்பை இழப்பதால் அவன் பிச்சை எடுக்கின்றான். தனிமனித சுதந்திரத்தின் பெயரில் தான் இவை நடக்கின்றது. இப்படி மற்றவன் உழைப்பை தின்பவன் தான், அந்தச் சுதந்திரம் பற்றி பினாற்றுகின்றான்.

அட உங்கடை 'தனிமனித சுதந்திரத்தில்" அளவை கூட, பன்னாட்டு நிறுவனங்கள் ஆடிக்காட்டுகின்ற விபச்சாரத்தில் தான் பிறக்கின்றது.. மனிதனை மனிதனாக மதிக்கின்ற கலச்சாரத்தில் அல்ல. சுதந்திரத்தின் பெயரில் பொறுகளைக் கொண்ட சமூகமாகவே உள்ளது.

'வேலை நிறுதங்கள்" செய்வது ஒரு மனிதனின் சொந்த உரிமை. நீ யார் அதை தடுக்க? வேலை நிறுத்தம் தனது சொந்த உழைப்பை எப்படி விற்பது விற்காது தொடர்பானது. அது அவனின் உரிமை தொடர்பானது? இதை மறுக்கின்ற நீங்கள் தனிமனித சுதந்திரவாதி;கள்;. சாதியின் பெயரால் மற்றவனின் அடக்கியாளும் பார்பனிய அமைப்பையே பாதுகாக்கும் உங்கடை சுதந்திரம், மலத்துக்குச் சமமானது.

'கம்யூனிச வாடை வீசும் பதிவு" ஆம் இது கம்யூனிச பதிவுதான். எங்களின் உழைப்பை கொள்ளையிடுபனுக்கு எதிரான பதிவு தான். யாரெல்லாம் சமூகத்தின் பொறுக்கினளோ, சமூகத்தின் ஓட்டுண்ணிகளோ, மற்றவன் உழைப்பை சூறையாடி அதில் ஆட்டம் போடுகின்றனரோ, அவர்களுக்கு எதிரான பதிவுதான். உங்களை போன்றவர்களுக்கு எதிரான பதிவு தான்.

பி.இரயாகரன்

சல்மான் said...

கணினி சமூகத்தில் பெருத்த கூலி என்பது சாராசரி இந்தியனின் ஆண்டு வருவாயை பார்க்கையில் மிகவும் உண்மை. இவர்களுக்கு இவ்வளவு கூலி கிடைக்க கூடாது என்று அர்த்தமல்ல. இந்திய சமூகத்தின் அடித்தள பிறபட்ட மக்களுக்கும் இவர்களுக்கும் பெருகி வரும் இடைவெளியானது மிகப் பெரும் சமுக பொருளாதார தீங்குகளை கொண்டு வருமோ என் அச்சத்தின் அடிப்படையே இங்கு முக்கியம். பொருளாதார ஏற்ற தாழ்வுகள் குறைவாக உள்ள, பெரும்பாலாருமே நல்ல கூலி பெறக்கூடிய ஒரு அமைப்பை நோக்கி சம்பந்தப்ப்ட்ட அனைவரும் இந்தியாவை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்

தமிழரங்கம் said...

'உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கவில்லை என்றால் கிடைக்குமிடம் தேடிச்செல்பவரை யாரும் தடுப்பதில்லை. திறமை எல்லா இடத்திலும் செயிக்கும்" கடந்த 2000 ஆண்டுகளாக இதை மதத்தின் பெயரில் சட்டம் போட்டு பார்னியத்துக்காக தடுத்தவர்கள், இன்றும் அதே நிலையில் தான் உழைக்கும் மக்கள் வாழ்கின்றார். உழைப்பக்கேற்ற ஊதியத்தை இந்த ஜனநாயகம் தான் மறுக்கின்றது. ஜனநாயகம் என்பது உழைப்பக்கு எற்ற ஊதியத்தை கொடுப்பதல்ல. அத தான் ஜனநாயகம். இப்படி கிடைக்காமல் இருப்பதற்கான ஜனநாயக காரணத்தை தடுக்காமல், விபச்சாரி தேடி அலையம் கூட்டம் போல் மக்களை அலையக் கோருகின்றனா இந்த தனிமனித சுதந்திரவாதிகள். ''உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கவில்லை என்றால்" என்ற கூறும் இவாகள் தான் 'திறமை எல்லா இடத்திலும் செயிக்கும்" என்று உளறுகின்றார்.

' திறமை எல்லா இடத்திலும் செயிக்கும்" திறமை என்பது சதியும் சூழ்ச்சியம் தான். மற்றவனை திறமையற்றதாக காட்டுகின்ற மனிதவிரோத கொப்பளிப்பு. திறமை என்பது மற்றவனை எப்படி எமாற்றி சம்பதிப்பதாகிவிட்டது. திறமையானவன் நேர்மையானவன் ஆட்சிக்கு வந்தான் ஜனநாயகமும், நாடு செழிக்கும் என்ற சொன்னவர்கள் எல்லாம் அந்த அமைப்பை விபச்சாரமாக்கி அதை கொள்ளையிட்டது தான்;. திறமை மற்றவன் உழைப்பில் சோக்க பண்ணம்; வித்தை தான்.

' பொத்தாம் பொதுவான விமர்சனம். எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்களின் உளரல். தோழரே எளிதில் உணர்ச்சிவப்படுகிறீர்கள். இவைகள் என்னுடைய பதிவுகள்" ஐயோ பாவம். நீங்கள் உங்கடை ஜனநாயக சாதிய அமைப்பின் மேல், உங்கடை திறமை, உங்கடை கல்வி அறிவை பாதுகாக்க வெளிக்கிட்டால், உளறால் உணர்ச்சிவசப்படல் என்ற முத்தி குத்தி தப்பிவிடலாம் என்பதே உங்கள் அகாரதி பேசுகின்றது. எனது பதிவு இத அல்ல என்றால், உங்கடை ஜனநாயகம் சாதிய சுரண்டல் அமைப்ப இல்லையோ? உங்கடை திறமை சுரண்டல் அமைப்பின் விபச்சாரமல்லையோ?

' அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும்போது தட்டிக்கேட்பதை தவறு என்று நான் சொல்லவில்லை. மறுக்கவும் இல்லை." இது ஜனநாயகத்துக்கு கொடுக்கம் மோசடி விளக்கம். வாழ்க்கiயில் இதை மறுப்பதே, சுரண்ட அமைப்பினை பாதுகாப்பவனின் அனுதின செயல்பாடு. இதைத் தான் உங்களை போன்றவர்கள் 'சனநாயகத்தில் இது சகசம்." என்பர்.

' பணக்காரர்களை எதிரிகளாக காண்பித்தே வளர்ந்த இயக்கம் கம்யுனிஸ்ட்.
இதே டாட்டா உழஅpயலெ ல்தான் ஊதியம் அதிகமாகக் கொடுக்கிறார்கள் என்று குறைபட்டுக்கொள்கிறீர்கள். கல்வியறிவு ஒன்று மட்டும்தான் சமூகத்தை மாற்றும்..உங்கள் உணர்ச்சிவசப்பட்ட கூக்குரல் அல்ல. கம்யுனிசம்தான் மேற்கு வங்காளத்தில் வயவய வுக்காக நில ஆர்ஜிதம் செய்து கொடுக்கிறது." மேற்கு வங்கத்தில் நடப்பது சுரண்டல் ஆட்சி ஐயா. அது பார்பனீய ஆட்சி. கம்யூனிசத்தின்; பெயரில் நடக்கின்றது. உங்களுக்கு கம்யூனிசம் என்றால் என்னவென்று தெரியவில்லை. அதை கற்றக முனையவும்;. மேற்கு வங்கத்தில் இருப்பத பூனூல் கம்யூனீநம் தான். இரண்டொலு தினத்தில் போடவுள்ள பதிவு அதை மேலும் தெளிவாக்கும்;

இங்கு டாட்டா அதிக சம்பளத்தை அவர்கள் கொடுப்பதில்லை. லஞ்சம் தான் சில ஓட்டுண்ணி கொடுப்பவர்கள். டாட்டா போன்ற கம்பனிகள் அரசுக்கு கட்ட வேண்டிய கோடிக்கணக்கான பணத்தை முதலில் கொடுகட்டும். அரசு சொத்துகளை லஞ்சம் கொடுத்து அடிமாட்டு விலைக்கு அபகரிப்பதை நிறுத்தட்டும். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஒட்டுண்ணிகளாவே காட்டிக்கொடுத்து வாழ்ந்த கும்பல், தன்னை போல் கைக் கூலிகளுக்கு அதிகமான சதை உள்ள எலும்பை எறிகின்றது. அதை கவ்விக் கொணடு வள்ளென்று குலைக்காமல், நாய்கள் என்ன செய்யும்.

' கல்வியறிவு ஒன்று மட்டும்தான் சமூகத்தை மாற்றும்" மகராஸ்ட்ட மாநிலத்தில் நடந்தது என்ன என்பதை, இதற்கு பிந்திய எமது பதிவு உங்களின் கேளிகையான கோமளித்தனத்துக்கு பதிலளிக்கின்றது.

இந்த ஜனநாயக பார்பனியம் எல்லோரை மனிதனாக அங்கிரித்த பின், எல்லோரும் படித்துவிட்டால் என்ன நடக்கும். ஒன்றும் நடவாது. படிப்பு எதையும் அமைப்பு ரீதியாக மாற்றாது. சுரண்டுவது உள்ளவரை, படிப்பு சுரண்டலுக்கு பின்னால் நின்று வாலட்டி வள்ளென்று குலைக்கும். சுரண்டல் அமைப்கு ஒழியும் வரை, மனித இனத்துக்கு விடிவில்லை அவலம் தான் தனிமனித சதந்திர ஜனநாயகமாகும்;. இந்த 'சனநாயகத்தில் இது சகசம்" உங்களிடம் பிச்சை கேட்பலைனை உள்ளடக்கியதே.

சுரண்டல் அமைப்பில் ப+ணுலை பாதகாத்துக் கொண்டு, அதை ஜனநாயகம் என்று குலைப்பது உங்களைப் பொறுத்த வரையில் 'சனநாயகத்தில் இது சகசம்". எம்மைப் பொறுத்தளவில் அப்படியல்ல அது தான் வேறுபாடு.

பி.இரயாகரன்