தமிழ் அரங்கம்

Tuesday, September 16, 2008

அகமதாபாத் குண்டு வெடிப்புகள் : நீதி மறுக்கப்பட்டோர் தொடுத்த போர்

ஜூலை 25, 2008 அன்று பெங்களூருவின் எட்டு ஒதுக்குப்புறமான இடங்களில் குறைந்த வீரியம் கொண்ட குண்டுகள் வெடித்தன. அதில் ஏழுபேர் காயமடைய, ஒருவர் கொல்லப்பட்டார். அதற்கு அடுத்த நாள் குஜராத்தின் சவுராஷ்ட்ரா பகுதியில் பொதுக்கூட்டமொன்றில் பேசிய நரேந்திர மோடி "ஜெய்ப்பூரிலும், பெங்களூருவிலும் குண்டுகள் வெடிக்கலாம், ஆனால், குஜராத்தின் மண்ணில் பயங்கரவாதிகள் அடியெடுத்து வைக்க முடியாது'' என்று முழங்கினார். அன்று மாலையே அகமதாபாத்தின் பல்வேறு இடங்களில் 21 தொடர் குண்டுகள் வெடித்தன. அதில் நான்கு இடங்கள் மோடியின் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்தவை.

2002 குஜராத் கலவரத்தின் எதிர்வினை எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று மற்ற எவரையும் விட மோடிக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். ஆனாலும் பாசிஸ்ட்டுகள் தமது அதிகார பலத்தை மட்டுமே அபரிதமாக நம்புவார்களே ஒழிய, மற்றெதனையும் சட்டை செய்யமாட்டார்கள். மோடியின் மண்ணில் நடந்த குண்டு வெடிப்பில் 56 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டும், 200க்கும் மேற்பட்டோர் காயமும் அடைந்தார்கள். அதற்கும் அடுத்த நாளே சூரத்தில் 17 இடங்களில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கப்பட்டன.

சூரத்தில் குண்டுகளை வைத்து பயங்காட்டியது மோடியின் கைவரிசை என்று பூரி சங்கரசாச்சாரியார் குற்றம் சாட்டியிருக்கிறார். தனது ஆசிரமத்தில் இரண்டு சிறுவர்களை நரபலி கொடுத்த ஆஸ்ரம் பாபு எனும் சாமியாருக்கு மோடி ஆதரவளிப்பதால், பூரி சாமியார் இப்படிச் சொல்லியிருப்பதாகக் கருதலாமென்றாலும் அகமதாபாத் குண்டுவெடிப்பிலிருந்து கவனத்தை திசைதிருப்பவே போலீசு டம்மி குண்டுகளை வைத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஒரு வேளை இசுலாமியத் தீவிரவாதிகளே வைத்திருப்பார்கள் எனக் கருதினாலும், மொத்தத்தில் ஒரு பயபீதியை ஏற்படுத்தும் அவர்கள் நோக்கம் வெற்றியடைந்திருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

No comments: