தமிழ் அரங்கம்

Wednesday, November 5, 2008

பாரக் ஒபாமா: அமெரிக்காவின் மாயாவதி!

அமெரிக்காவின் அதிபர் பதவிக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தல், உலகெங்கிலும் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது. தற்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ் நடத்திவரும் ஈராக் போருக்கு எதிரான அமெரிக்க மக்களின் கருத்தை இத்தேர்தல் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுவதோடு, அமெரிக்காவின் வரலாற்றில் முதன் முறையாக அமெரிக்கக் கருப்பினத்தைச் சேர்ந்த பாரக் ஒபாமா என்பவர், ஜனநாயகக் கட்சியின் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்படவிருப்பதும், அதிபர் தேர்தலின் முக்கியத்துவத்தை அதிகரித்திருக்கிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈராக், ஆப்கான் மீது நடத்திவரும் ஆக்கிரமிப்புப் போரினாலும்; உள்நாட்டில் நிலவிவரும் பொருளாதார மந்தத்தாலும் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க மக்கள், ஒரு மாற்றத்தை விரும்புவதாகவும்; அம்மாற்றத்தைப் பிரதிபலிப்பவராக ஒபாமா இருப்பதாகவும் பெரும்பாலான முதலாளித்துவப் பத்திரிகைகள் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. மேலும், அமெரிக்காவில் வெள்ளை இனவெறி முன்னைப்போல கோலோச்சவில்லை என்பதற்கு பாரக் ஒபாமாவின் தேர்வு எடுப்பான சான்று என்றும் கூறப்படுகிறது.

ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ள பாரக் ஒபாமாவை எதிர்த்து, ஜான் மெக்கெய்ன் என்ற வெள்ளை இன கிழட்டு நரியைக் குடியரசுக் கட்சி களத்தில் இறக்கிவிட்டுள்ளது. நவம்பரில் நடைபெறவுள்ள அதிபர் தேல்தலில், ஒபாமா தோற்று, ஜான் மெக்கெய்ன் வெற்றி பெற்றால், அது ஜார்ஜ் புஷ் மூன்றாம் முறையாக பதவியேற்பதற்குச் சமமானதாகும். ஏனென்றால், உலகெங்கிலும் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை விரிவுபடுத்த, ஜார்ஜ் புஷ் எட்டடி பாய்ந்தால், ஜான் மெக்கெய்னோ பதினாறு அடி பாயக் கூடியவர்.

No comments: