தமிழ் அரங்கம்

Friday, March 9, 2007

அமெரிக்காவின் மேலாதிக்கத் திமிரும் இரட்டை வேடமும்

சதாம் படுகொலை!

அமெரிக்காவின் மேலாதிக்கத் திமிரும் இரட்டை வேடமும்



மெரிக்கா என்றால் நாகரிகம்; அமெரிக்கா என்றால் ஜனநாயகம் என அப்பாவித்தனமாக நம்பிக் கொண்டிருப்பவர்களின் பித்தைக் கூடத் தெளிய வைக்கும் வகையில், சதாமின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. சதாம் அவமானப்படுத்தப்பட்டுத் தூக்கில் தொங்கவிடப்பட்டதைத் தொலைக்காட்சியில் பார்த்தவர்களுக்கு, அமெரிக்காவின் வன்மமும், திமிரும் புரிந்திருக்கும். அந்தக் காட்சியைப் பார்த்த பிறகும், அமெரிக்காவின் வக்கிரமான கொலைவெறியைப் புரிந்து கொள்ள முடியாதவர்களுக்குப் புரிய வைப்பதற்காக, ஜார்ஜ் புஷ், ""சதாமின் தூக்கு, ஈராக்கின் ஜனநாயகத்தை நோக்கிய பயணத்தில் இன்னொரு மைல் கல்'' என்ற பொன்மொழியை உதிர்த்தார். ஈராக்கின் ஜனநாயகத்தை மதிப்பிட வேண்டும் என்றால், அங்கு அமெரிக்கா நடத்திவரும் படுகொலைகளைக் கணக்கிட வேண்டும் போலும்!


முசுலீம்களுக்கு உரிய புனிதமான நோன்பு நாளில் சதாமைத் தூக்கில் போட்டதன் மூலம், ஜார்ஜ் புஷ், தனது முசுலீம் எதிர்ப்பு கிறித்தவ மதவெறியை மீண்டும் பகரங்கமாக உலகிற்குக் காட்டிக் கொண்டிருக்கிறார். இந்த மதச் சகிப்புத்தன்மையற்ற காட்டுமிராண்டித்தனத்துக்கு எதிராக உலகெங்கிலும் கண்டனக் குரல்கள் எழுந்தது ஒருபுறமிருக்க, தூக்கு தண்டனையை சதாம் எதிர்கொண்ட விதமும்; தன்னை ஏளனம் செய்தவர்களை சதாம் மடக்கிய விதமும், பொதுமக்கள் மத்தியில் அவர் மீதான மதிப்பையும், அனுதாபத்தையும் உயர்த்திவிட்டது. சதாமின் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து ஜனநாயகத்திற்காகப் போராடிய ஈராக்கியர்கள் கூட, சதாமிற்கு அமெரிக்கா வழங்கிய தூக்கு தண்டனையை ஆதரிக்க மறுத்துள்ளனர். சதாமின் தூக்கு, தனது முகத்தில் இப்படிக் கரியைப் பூசிவிடும் என ஜார்ஜ் புஷ்ஷே எதிர்பார்த்திருக்க மாட்டார்.


""ஒரு நாடு இன்னொரு நாட்டை ஆக்கிரமிக்கும் பொழுது, ஆக்கிரமிக்கப்பட்ட நாட்டின் அதிபரை, ஆக்கிரமித்த நாடு விசாரிக்கக் கூடாது'' என போர் பற்றிய ஜெனிவா ஒப்பந்தம் குறிப்பிடுகிறது. ஜார்ஜ் புஷ் இந்தச் சர்வதேச ஒப்பந்தத்தை மயிரளவிற்குக் கூட மதிக்கவில்லை என்பது ஒருபுறமிருக்க, சதாமைத் தூக்கில் போட வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே, ஈராக் கிரிமினல் உச்சநீதி மன்றத்தையும் அதற்கான விதிகளையும் உருவாக்கினார்.


போர்க் குற்றங்களை விசாரிப்பதற்காகவே இந்தச் சிறப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், ""ஜூலை 17, 1968க்கும், மே 1, 2003க்கும் இடைபட்ட காலங்களில் நடத்தப்பட்ட போர்க் குற்றங்களை, மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை மட்டுமே விசாரிக்கும் அதிகாரம் கொண்டதாக,'' இந்நீதிமன்றத்தின் அதிகார வரம்பை மட்டுப்படுத்தும் சட்டம் உருவாக்கப்பட்டது.


ஈராக் மீது அமெரிக்கா தொடுத்த இரண்டாவது வளைகுடா போர் மே 1, 2003 அன்றோடு முடிவடைந்துவிட்டதாக ஜார்ஜ் புஷ் அறிவித்தார். எனவே, அந்த தேதிக்குப் பிறகு, ஈராக்கை ஆக்கிரமித்துத் தங்கியிருக்கும் அமெரிக்கப் படைகள் நடத்தி வரும் போர்க் குற்றங்களை, படுகொலைகளை ஈராக்கின் எந்தவொரு நீதிமன்றமும் விசாரிப்பதைத் தடுப்பதுதான் இந்தச் சட்டத்தின் நோக்கம்.


சதாமின் ஆட்சியின்பொழுது, ஈரானுக்கு எதிராகவும், குர்து இன மக்களுக்கு எதிராகவும் நடத்தப்பட்ட போர்க் குற்றங்களின் பின்னே அமெரிக்காவின் கை இருந்தது என்பது உலகமே அறிந்த உண்மை. எனவே, சதாமின் போர்க் குற்றங்களை விசாரிக்கும் பொழுது, அக்குற்றங்களோடு தொடர்புடைய அமெரிக்கர்களை விசாரிப்பதைத் தடுப்பதற்காக, போர்க் குற்றம் சுமத்தப்பட்ட நபர், ஈராக்கில் வசிப்பவராக இருந்தால் மட்டுமே, நீதிமன்றம் விசாரிக்க முடியும் என்ற விதியும் உருவாக்கப்பட்டது.


அமெரிக்காவின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக உருவாக்கப்பட்ட இந்தச் சிறப்பு நீதிமன்றத்தில், ஈராக்கிலுள்ள துஜைல் கிராமத்தைச் சேர்ந்த 148 ஷியா முசுலீம்கள், சதாம் ஆட்சியின் பொழுது படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இவ்வழக்கில் சதாமும், அவரது அரசாங்கத்தைச் சேர்ந்த ஏழு அதிகாரிகளும் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர். ஷியா முசுலீம் நாடான ஈரானுக்கு எதிராக, அமெரிக்கா ஆதரவோடு சதாம் போர் நடத்தி வந்தபொழுதுதான் இப்படுகொலை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


ஏறத்தாழ ஒரு ஆண்டுகாலம் நடந்த இந்த வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் அடுத்தடுத்து நியமிக்கப்பட்டனர். இந்நீதிபதிகளுக்கு இவ்வழக்கை எப்படி நடத்துவது என்பது குறித்து இங்கிலாந்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. எனினும், முதலாவதாக நியமிக்கப்பட்ட ""நீதிபதி'' ரிஸ்கர் முகம்மது அமின் வழக்கை விசாரிப்பதில் சற்று தாராளமாக நடந்து கொண்டதால், பதவியில் இருந்து விலகி விடுமாறு நிர்பந்திக்கப்பட்டார். இரண்டாவதாக நியமிக்கப்பட்ட ""நீதிபதி'', ""என்ன காரணத்தினாலோ'' பதவியை ஏற்றுக் கொள்ளவே மறுத்துவிட்டார். மூன்றாவதாக நியமிக்கப்பட்ட குர்து இனத்தைச் சேர்ந்த ""நீதிபதி'' ராஃப் அப்துல் ரஹ்மான் வெளிப்படையாகவே ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டார். ஈராக்கின் அமெரிக்கத் தூதரகத்தில் இருந்து கொண்டு செயல்பட்டு வரும் ""கிரிமினல் குற்றங்கள் விசாரணை அலுவலகம்'' இவ்வழக்கு விசாரணையைக் கண்காணித்து வந்தது.


சதாம், தான் விருப்பப்படும் வழக்குரைஞர்களை நியமித்துக் கொள்ள கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதேவேளையில், சதாமுக்காக வாதாடிய வழக்குரைஞர்களுள் இரண்டு பேர் மர்மமான முறையில் கொல்லப்பட்டனர். சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்ய சதாம் அனுமதிக்கப்படவில்லை. இந்தக் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டியதோடு, ""இந்த வழக்கு விசாரணையே கயவாளித்தனமானது'' எனப் புகழ் பெற்ற அமெரிக்க மனித உரிமை வழக்குரைஞர் ராம்ஸே கிளார்க் சாடியதால், (சதாமுக்காக வாதாடிய) அவர், விசாரணை நடந்து கொண்டிருந்தபொழுதே "நீதிமன்றத்தில்' இருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டார்.


துஜைல் படுகொலையில் சதாமுக்கு நேரடி தொடர்புண்டு என அமெரிக்கா சுமத்தியிருந்த குற்றச்சாட்டு, போதிய சாட்சிகளோடும், ஆதாரங்களோடும் நீதிமன்ற விசாரணையில் நிரூபிக்கப்படவில்லை. எனினும், இப்படுகொலை தொடர்பாக அவருக்கு அதிகபட்ச தண்டனை மரண தண்டனை விதிக்க வேண்டும் என்பதற்காகவே, ""சதாம் அளவுக்கு அதிகமான பலப் பிரயோகத்தைப் பயன்படுத்தினார்'' என்ற வாதம் முன் வைக்கப்பட்டது. இந்த வாதப்படி சதாமுக்கு மரண தண்டனை விதிக்கலாம் என்றால், ஈராக்கில் 1,30,000 துருப்புகளை இறக்கிவிட்டு போர்க் குற்றங்களைப் புரிந்துவரும் ஜார்ஜ் புஷ்ஷûக்கும் மரண தண்டனை விதிக்கலாம்.


""உள்நோக்கத்தோடு திட்டம் போட்டு குடிமக்களைக் கொல்லவில்லை என்ற வாதத்தை முன்வைத்து சதாமின் போர்க் குற்றங்களை நியாயப்படுத்த முடியாது'' என சதாமை விசாரித்த நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. சதாமுக்கு இந்த வாதம் பொருந்தாது என்றால், ஈராக்கில் அமெரிக்கப்படை நடத்தி வரும் போர்க் குற்றங்களில் இருந்து தப்பிக்க, இதே வாதத்தை ஜார்ஜ் புஷ் கேடயமாகப் பயன்படுத்தி வருவதையும் அனுமதிக்க முடியாது.

···

சதாமுக்கு மரண தண்டனை அளிக்கப்படுவதற்குச் சில நாட்கள் முன்னதாக, ஈராக்கின் ""பிரதமர்'' நௌரி அல்மாலிகி, ""அமெரிக்காவின் ஒப்புதல் இன்றி, தனது அரசால் ஒரு படையணியைக் கூட நகர்த்த முடியாது'' என்று கூறி, ஈராக்கின் இறையாண்மையை வெட்ட வெளிச்சமாக்கினார். இப்படிப்பட்ட ஒரு பொம்மை அரசு, அமெரிக்காவின் சம்மதமும், உத்தவும் இன்றி சதாமுக்கு மரண தண்டனை வழங்கியிருக்க முடியுமா?


சதாம் தூக்கு தண்டனை கூடத்திற்குள் அனுப்பி வைக்கப்பட்ட கடைசி நிமிடம் வரை அமெரிக்க இராணுவக் கைதியாகத்தான் வைக்கப்பட்டிருந்தார். சதாம் இறந்த பிறகு, அவரது சடலத்தைக் கூடத் தனது கட்டுப்பாட்டின் கீழ் எடுத்துக் கொண்டது, அமெரிக்க இராணுவம். நீதிமன்ற விசாரணை தொடங்கி சதாமின் சடலம் மண்ணுக்குள் போடப்பட்டு மூடப்படும் வரை, அனைத்துமே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கண்காணிப்பின் கீழ் நடந்திருக்கும் பொழுது, சதாம் தூக்கு மேடையில் ஷியா முசுலீம்களால் அவமதிக்கப்பட்டது மட்டும் அமெரிக்காவின் சம்மதம் இன்றி நடந்திருக்க முடியுமா?


""சதாம் தூக்கு மேடையில் கண்ணியமாக நடத்தப்பட்டிருக்கலாம்'' என முதலைக் கண்ணீர் வடிக்கிறார், ஜார்ஜ் புஷ். ஆனால், கண்ணியத்தையும், பண்பாட்டையும், மனித உரிமைகளையும் பற்றிப் பேச, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு என்ன தகுதி இருக்கிறது?


சதாம் அமெரிக்க இராணுவத்தால் பிடிக்கப்பட்ட பொழுது, பரிசோதனை என்ற பெயரில், அவர் தலையில் பேன் ஊறுகிறதா என்பது தொடங்கி, அவரை நிர்வாணப்படுத்தாதது மட்டும்தான் பாக்கி என்ற வகையில் அமெரிக்க ஏகாதிபத்தியம் அவரை அவமானப்படுத்தியது.


சதாமின் ஆட்சியின்பொழுது, ஈராக் மீது அமெரிக்கா திணித்த பொருளாதாரத் தடையுத்தரவால் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான ஈராக்கிய குழந்தைகள் இறந்து போயின. இந்தப் பிஞ்சுக் குழந்தைகளின் சாவை, ""ஈராக் கொடுக்கத்தக்க விலைதான்'' என்று கூறி வக்கிரமாக நியாயப்படுத்தியது, கிளிண்டன் ஆட்சி.


அமெரிக்க இராணுவம் அபுகிரைப் சிறைச்சாலையில் நடத்திய வக்கிரமான சித்திரவதைகள், ஃபலுஜா, ஹதிதா நகரங்களில் நடத்திய பச்சைப் படுகொலைகள் இவையெல்லாம் ஒருபுறமிருக்க, கடந்த மூன்று ஆண்டுகளில் அமெரிக்க ஆக்கிரமிப்பினாலும், அது தூண்டிவிட்டு நடத்தி வரும் இனக் கலவரத்தாலும் ஏறத்தாழ ஆறரை இலட்சத்துக்கும் அதிகமான ஈராக்கியர்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டுள்ளனர். 18 இலட்சம் ஈராக்கியர்கள் நாட்டைவிட்டு வெளியேறி, அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். 16 இலட்சம் ஈராக்கியர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக அலைகின்றனர்.


அறிவுத்துறையினர் என்ற வர்க்கமே ஈராக்கில் இருக்கக்கூடாது எனக் கங்கணம் கட்டிக் கொண்டு அலைகிறது, அமெரிக்க ஏகாதிபத்தியம். பேராசிரியர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், பத்திரிகையாளர்கள் என அறிவுத்துறையின் பல்வேறு பிரிவைச் சேர்ந்த 592 அறிஞர்கள், அமெரிக்க இராணுவத்தாலும், அதன் கூலிப் படைகளாலும் கொன்றொழிக்கப்பட்டுள்ளனர். ""ஈராக்கியர்களைக் கொன்று குவிப்பதில் சதாமைச் சுண்டைக்காயாக்கி விட்டார், ஜார்ஜ் புஷ்'' என்கிறார் ஹாய்தா ஜங்கானா என்ற நாவலாசிரியர்.


ஈராக்கின் மீது ஆக்கிரமிப்புப் போரை நடத்துவதற்காகவே ""பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்கள்'' என்ற பொய்யை, அமெரிக்க கோயபல்சுகள் கட்டியமைத்தனர். அந்தப் புளுகு அம்பலமான பிறகு, ஆக்கிரமிப்பை தொடர்வதற்காக, ""சதாம் அல்காய்தாவின் தோழனாகவும், உலக அமைதியின் வில்லனாகவும்'' அமெரிக்காவால் சித்தரிக்கப்பட்டார். சதாமின் கதையும் முடிந்த பிறகு, ""மேற்காசியா முழுவதுமே அமெரிக்காவைத் தாக்குவதற்கான உந்துவிசைப் பலகையாக மாறி வருவதால், அமெரிக்கப் படைகளை உடனடியாக விலக்கிக் கொள்வது சாத்தியம் இல்லை'' என ஆக்கிரமிப்பு தொடர்வதை நியாயப்படுத்துகிறார், ஜார்ஜ் புஷ்.


ஆங்கிலேய காலனியாதிக்கவாதிகள் இந்தியாவை ஆளப் பிரித்தாளும் சூழ்ச்சியைப் பயன்படுத்தியதைப் போல, அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈராக்கில் ஷியாசன்னி முசுலீம்களிடையே இனமோதலைத் தூண்டிவிட்டு நடத்தி வருகிறது. இந்த இனமோதலை மேலும் ஊதிவிடும் நோக்கத்தோடுதான், சதாம் ஷியா முசுலீம்களால் தூக்கில் போடப்படுவதையும்; தூக்கு மேடையில் அவர் ஷியா முசுலீம்களால் அவமானப்படுத்தப்பட்டதையும் அனுமதித்ததோடு, அக்காட்சியை ஒளிபரப்பவும் செய்தது, அமெரிக்கா. ஈராக்கின் எண்ணெய் வயல்களை அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களின் தனிச் சொத்தாக மாற்றுவதற்காகவே, ஈராக் நாட்டை, ஷியாசன்னி குர்து பகுதிகளாகக் கூறுபோடவும் சதி செய்து வருகிறது.


ஈராக் மட்டுமின்றி லெபனானில் ஹிஸ்புல்லா போராளிகளுக்கு எதிராகப் போராட, அந்நாட்டின் அரசுக்கும், ஹிஸ்புல்லா எதிர்ப்புக் குழுக்களுக்கும் சி.ஐ.ஏ., மூலம் பணத்தைக் கொடுத்துக் கொம்பு சீவிவிடுகிறது; பாலஸ்தீனத்தில் ஹமாஸ் குழுவினருக்கு எதிராக ஃபதா குழுவினருக்கு ஆதரவும் ஆயுதமும் வழங்கி வருகிறது. இதன் மூலம், மேற்காசியாவில் நடந்துவரும் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களைச் சகோதர யுத்தங்களாக மாற்றிவிடச் சதி செய்து வருகிறது, அமெரிக்கா.


அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில், குடியரசுக் கட்சி தோல்வியடைந்ததையடுத்து, ஜார்ஜ் புஷ் தனது ஈராக் கொள்கையை மாற்றிக் கொண்டு விடுவார் என முதலாளித்துவப் பத்திரிகைகள் அனைத்தும் ஆருடம் கூறி வந்தன. ஆனால், ஜார்ஜ் புஷ், ஈராக்குக்கு மேலும் 20,000 துருப்புகளை அனுப்ப உத்தரவிட்டிருப்பதன் மூலம் அமெரிக்க ஜனநாயகத்தின் மாயையை உடைத்தெறிந்து விட்டார். மேலும் சோமாலியாவைத் தாக்கியதன் மூலம் "தீவிரவாதத்துக்கு எதிரான போரை' ஆப்பிரிக்கா கண்டத்துக்கும் ஏற்றுமதி செய்துள்ளார்.


அமெரிக்க மக்களின் ஈராக் போர் எதிர்ப்பை ஓட்டுக்களாக அறுவடை செய்து கொண்ட ஜனநாயகக் கட்சியோ, இந்த ஆக்கிரமிப்பு போருக்கு ஒரு மனித முகமூடியை மாட்டிவிடும் நரித்தனத்தில் இறங்கியிருக்கிறது. ஈராக் எண்ணெய் வயல்களை அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்கள் ஏக போகமாக்கிக் கொள்ளும் வண்ணம், அந்நாட்டின் எண்ணெய் வயல்களை அரசிடமிருந்து பிடுங்கித் தனியார்மயமாக்கிவிட்டு, அதன் பிறகு மெல்ல மெல்ல அமெரிக்கப் படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் எதிர்த்தரப்பின் திட்டம்.


அமெரிக்க ஏகாதிபத்தியம், தனது முன்னாள் கூட்டாளியான சதாமை, ""கண்ணியமற்ற முறையில்'' தூக்கில் போட்டதன் மூலம், தனது ""நட்பு நாடுகளுக்கு'' மறைமுகமாக எச்சரிக்கை விட்டிருக்கிறது. அதனால்தான், இந்தியா உள்ளிட்ட அதன் அடிவருடி நாடுகளின் ஆளும் வர்க்கங்கள் அனைத்தும் அமெரிக்காவின் மேலாதிக்க திமிரைக் கண்டிப்பதில் அடக்கியே வாசிக்கின்றன.


எனவே, உலகெங்கிலும் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் விரும்பும் உழைக்கும் மக்கள், ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி அமைப்புகள், கம்யூனிசப் புரட்சியாளர்கள் தலைமையில் அணிதிரண்டு, ஆயுதமேந்திப் போராடினால் மட்டுமே, அமெரிக்காவின் மேலாதிக்கப் போர்வெறியை முறியடிக்க முடியும்; இரண்டாம் உலகப் போர் தொடங்கி இன்றுவரை; கொரியா ஆக்கிரமிப்புப் போர் தொடங்கி ஈராக் ஆக்கிரமிப்புப் போர் வரை, அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் நடத்தியிருக்கும் போர்க் குற்றங்களை விசாரித்து, அக்குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களைக் ""கண்ணியமான'' முறையில் தண்டிக்கவும் முடியும்!

· அழகு

Thursday, March 8, 2007

மறுகாலனியாக்கத்திற்கு எதிராக மாடுகள் நடத்திய ஊர்வலம்

மறுகாலனியாக்கத்திற்கு எதிராக மாடுகள் நடத்திய ஊர்வலம்

தை மாட்டுப் பொங்கல் திருநாளில் மாடுகளுக்குப் பொங்கல் வைத்து, மாலையில் மாடுகளை அலங்கரித்து ஊர்வலமாக அழைத்து வருவதும் குலவையிடுவதும் தமிழக விவசாயப் பெருமக்களின் பண்பாடாக உள்ளது. உசிலம்பட்டி வி.வி.மு. தோழர்கள், இம்மாட்டுப் பொங்கல் விழாவை மறுகாலனியாக்கத்திற்கெதிரான விழிப்புணர்வுப் பிரச்சாரமாக மாற்றி மாடுகளின் ஊர்வலத்தை நடத்தியுள்ளனர்.


மாட்டுப் பொங்கலன்று மாலையில், ""மறுகாலனியாக்கத்திற்கு எதிராக மாடுகள் நாங்க பொங்கப் போறோம்! மனுசங்க நீங்க...? என்ற கேள்வியுடன் கொம்புகளுக்கிடையே கட்டப்பட்ட அட்டையுடன் மாடுகளை ஊர்வலமாக அழைத்து வந்த வி.வி.மு. தோழர்கள், மாட்டின் முதுகின் இருபுறமும், ""அமெரிக்கா, ஜப்பானில் மாட்டுக்கு மானியம் பல ஆயிரம் ரூபாய்; இங்கே ஒன்றுமில்லை. தீனியில்லாம நாங்க சாகறோம். பால் பவுடர் இறக்குமதியால பாலுக்குக் கொள்முதல் விலை குறையுது. மாடுகளாகிய நாங்க நசிகிறோம். மறுகாலனியாக்கத்தால விவசாயம் அழியுது. விவசாயிங்க தவிக்கிறாங்க. அதனால, ஐந்தறிவு உள்ள மாடுங்க நாங்க மறுகாலனியாக்கத்துக்கு எதிராகப் போராடப் போறோம். ஆறறிவு உள்ள நீங்க...?'' என்ற முழக்கங்களை எழுதி கருக்கட்டான்பட்டியலிருந்து உசிலம்பட்டி வரை இந்தப் புதுமையான ஊர்வலத்தை நடத்தினர்.


வழியெங்கும் உழைக்கும் மக்கள் திரண்டு வரவேற்க, அவர்களது சந்தேகங்களுக்குத் தோழர்கள் அளித்த விளக்கம் தெருமுனைக் கூட்டங்கள் போல நடந்து புதுமையான பிரச்சாரமாக அமைந்தது. பொங்கல் விழா என்ற பெயரில் ஓட்டுக்கட்சிகளும் இதர அமைப்புகளும் கூத்தடித்துக் கொண்டிருந்த வேளையில், நாடும் மக்களும் எதிர்கொண்டுள்ள மையமான பிரச்சினைகளை முன்வைத்துப் புதிய பாணியில் நடந்த இந்தப் பிரச்சாரம் இப்பகுதிவாழ் மக்களிடம் பெருந்தாக்கத்தையும் புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.


பு.ஜ. செய்தியாளர்கள்.

Wednesday, March 7, 2007

விஜிதரன் போராட்டம்

விஜிதரன் போராட்டம்








Tuesday, March 6, 2007

மூதூர் வெளியேற்றம் 01 August 2006

மூதூர் வெளியேற்றம் 01 August 2006

Monday, March 5, 2007

சிறுநீரகத்திருட்டு

சிறுநீரகத்திருட்டு
அன்று கொன்றது சுனாமி!
நின்று கொல்கிறது அரசு!


சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்க்கை அவலமான நிலையில் இருப்பதை, சென்னை பகுதி மீனவர்களிடம் நடந்துள்ள சிறுநீரகத் திருட்டு அம்பலப்படுத்திக் காட்டிவிட்டது. பட்டினியில் இருந்தும், கடனில் இருந்தும் தப்பித்துக் கொள்வதற்காகவே, தங்களின் சிறுநீரகங்களை விற்று விட்டதாக மீனவப் பெண்கள் கூறியிருக்கிறார்கள்.



மேகலா என்ற மீனவப் பெண்ணுக்கு உயர் இரத்த அழுத்த நோய் இருந்ததால், அவரின் சிறுநீரகத்தை விலைக்கு வாங்கத் தனியார் மருத்துவமனைகள் மறுத்துவிட்டன. இதனால், அவர் தனது தலைமுடியை ரூ. 500க்கு விற்று, நிலைமையைச் சமாளித்திருக்கிறார். ""முடி வளர்ந்த பிறகு மீண்டும் விற்பேன்'' என்கிறார், அவர். மானத்தைத் தவிர, மற்ற எதையும் விற்று வாழ வேண்டிய கட்டாயத்தில் மீனவர்களின் வாழ்க்கை தள்ளப்பட்டுள்ளது.



சுனாமிக்குப் பிறகு, தமிழக அரசால் வட சென்னையில் உருவாக்கப்பட்ட சுனாமி நகரில்தான் சிறுநீரகக் கொள்ளை கொடி கட்டிப் பறந்து வருகிறது. எனினும், சுனாமிக்கும் சிறுநீரகக் கொள்ளைக்கும் தொடர்பில்லை என்று காட்டுவதற்காக, சிறுநீரகத்தை விற்றுள்ள 30 பெண்களுள் 4 பெண்கள்தான் சுனாமிக்குப் பிறகு சிறுநீரகத்தை விற்றிருப்பதாக, ஒரு சொத்தையான வாதத்தை தமிழக அரசு முன் வைத்துள்ளது.



தமிழகத்தை சுனாமி தாக்கியவுடனேயே, ஜெயா தலைமையில் இருந்த தமிழக அரசும்; தி.மு.க. அங்கம் வகிக்கும் மைய அரசும் போட்டி போட்டுக் கொண்டு நிவாரண உதவிகளை அறிவித்தன. இதோடு, அரசு சாரா நிறுவனங்களும் நிவாரணப் போட்டியில் குதித்தன. மேலும், மீனவர்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுப்பதற்காகவும்; அவர்களின் சமூக மேம்பாட்டுக்காகவும் உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கிகளிடம் கடன் வாங்க ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இரண்டு ஆண்டுகள் கழிந்த பிறகு, கூட்டிக் கழித்துப் பார்த்தால், மீனவர்களிடம் சிறுநீரகக் கொள்ளை நடந்திருப்பதும்; தற்காலிகக் குடியிருப்புகள் என்ற பெயரில் மாட்டுக் கொட்டகைகளைவிட கேவலமான இடங்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டிருப்பதும்தான் கண் முன் தெரிகிறது.



தமிழகத்தில் சுனாமியால் 66,400 வீடுகள் சேதமடைந்ததாக அரசின் புள்ளி விவரம் கூறுகிறது. சுனாமி தாக்கி இரண்டு ஆண்டுகள் முழுமையாக முடிந்த பிறகும் கூட, வீடு வாசலை இழந்தவர்களுள் மூன்றில் ஒரு பகுதியினருக்குக் கூடத் தமிழக அரசால் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்க முடியவில்லை. கட்டி முடிக்கப்பட்ட தொகுப்பு குடியிருப்புகளில் கூட அடிப்படையான வசதிகள் முழுமையாக செய்து தரப்படவில்லை.



""கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு குடிநீர் வசதியும், கழிவுநீர் வெளியேற்றும் வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை. புதிய குடியிருப்புகளில் பள்ளிக்கூட வசதிகள், மருத்துவ சுகாதார வசதிகள்; அக்குடியிருப்புகளை நகரத்தோடு இணைக்கும் போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படவில்லை'' எனத் தமிழக அரசே ஒப்புக் கொண்டுள்ளது. (தி இந்து, 26.12.07, பக்.5)



சென்னை மெரீனா கடற்கரையையொட்டி வாழ்ந்து வந்த மீனவர்களை, கூலித் தொழிலாளர் குடும்பங்களை நகரில் இருந்து 2530 கி.மீ. தள்ளி துரைப்பாக்கம், செம்மஞ்சேரி போன்ற பகுதிக ளில் குடியமர்த்தினார், ஜெயா. துரைப்பாக்கத்தில் குடியமர்த்தப்பட்டவர்கள் போக்குவரத்து வசதி கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொழுது, போலீசை ஏவிவிட்டு அவர்களின் மண்டையை உடைத்தார், ஜெயா. ஆட்சி மாறிய பிறகும், இந்த அவல நிலை மாறவில்லை.



செம்மஞ்சேரியில் குடியமர்த்தப்பட்டவர்கள் நகருக்கு வர பேருந்தைப் பிடிக்க வேண்டும் என்றால், தங்களின் வீடுகளில் இருந்து 3 கி.மீ. தூரம் நடந்து வர வேண்டும். அடையாறு, திருவான்மியூர், புரசைவாக்கம் ஆகிய பகுதிகளுக்கு அன்றாடம் கூலி வேலை தேடிச் செல்லும் தொழிலாளர்கள், காலை 9 மணிக்குள் அந்தப் பகுதிக்குச் செல்லவில்லை என்றால் அவர்களுக்கு வேலை கிடைக்காது. ""வேலைக்காக, பல நேரங்களில் பேருந்தை நம்பாமல், 50 ரூபாய் கொடுத்து ஆட்டோ பிடித்துச் செல்வதாகக் கூறுகிறார்'' ராஜாமணி என்ற தச்சுத் தொழிலாளி.



வடசென்னையில் சுனாமி நகரில் தங்க வைக்கப்பட்டுள்ள மீனவர்கள், தொழிலுக்குச் செல்ல வேண்டும் என்றால் 5 கி.மீ தள்ளியுள்ள காசிமேடு கடற்கரைக்கு, அதிகாலை 23 மணிக்குள் செல்ல வேண்டும். அந்த நேரத்தில் போக்குவரத்து வசதி இருக்காது. ஆட்டோவில் செல்ல வேண்டும் என்றால் குறைந்தது முப்பது ரூபாய் வேண்டும். இதன் காரணமாகவே, பல மீனவர்கள் தங்களின் பரம்பரைத் தொழிலையே கைகழுவி விட்டதாகக் கூறப்படுகிறது.



மீனவ சமுதாயத்தில், குடும்பத்தை நடத்துவதில், ஆணின் வருமானத்தைவிட, பெண்ணின் வருமானத்திற்கு முக்கியப் பங்குண்டு. ஆண், தனது வருமானத்தைக் குடியிலும், சீட்டாட்டத்திலும் தொலைத்துவிட்டால் கூட, மீனவப் பெண்கள், அன்றாடம் சந்தைக்கு மீனை எடுத்துக் கொண்டு போய் விற்றுக் கிடைக்கும் வருமானத்தில் குடும்ப வண்டியை ஓட்டி விடுவார்கள். ஆனால், சுனாமிக்கு பிறகு மீனவக் குடும்பங்கள் கடற்கரையில் இருந்து வெகு தொலைவில் விசிறியெறியப்பட்டு விட்டதால், மீனவப் பெண்களின் வருமானம் நின்று போய்விட்டது. இதனால்தான், மீனவப் பெண்கள், வாங்கிய கடனை அடைக்கவோ, பட்டினியில்லாமல் குடும்பத்தை நடத்தவோ, தங்களின் சிறுநீரகங்களை விற்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுவிட்டனர்.



தென் சென்னைப் பகுதியில் புதிது, புதிதாக முளைத்துவரும் கால்சென்டர் நிறுவனங்களின் வசதிக்காக, பல கோடி ரூபாய் செலவில், பளபளப்பான அகன்ற தார்சாலைகளைப் போட்டுத் தரும் தமிழக அரசு, துரைப்பாக்கத்திலும், செம்மஞ்சேரியிலும், சுனாமி நகரிலும் குடியமர்த்தப்பட்ட மீனவர்களும், தொழிலாளர்களும் வேலைக்குப் போய் திரும்புவதற்கு ஒரு பேருந்தைக் கூட விட மறுக்கிறது. இதன் மூலம், அவர்களின் வேலை வாய்ப்பினைத் தட்டிப் பறித்துவிட்டு, இன்னொருபுறம் நிவாரணம், உதவி எனப் பேசுவதெல்லாம் மோசடித்தனமாகாதா? தமிழகத் தலைநகர மீனவர்களின் வாழ்க்கையே இவ்வளவு மோசமானதாக இருக்கும்பொழுது, பிற பகுதி மீனவர்களின் வாழ்க்கை வேறெப்படி இருந்து விட முடியும்?



தமிழகத்தில் நடந்துள்ள சுனாமி நிவாரணப் பணிகளை ஆய்வு செய்திருக்கும் இந்தியத் தலைமை தணிக்கை அதிகாரியே, நிவாரணம் என்ற பெயரில் மோசடிகள் நடந்தியிருப்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார்.



· சுனாமியால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாகப்பட்டிணம் மாவட்டத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்குக் கட்டப்பட்ட வீடுகள், பள்ளமான நீர் தேங்கும் பகுதிகளில் இருந்ததால், எவரும் அதில் குடியேறவில்லை. இதனால் பாழான தொகை இரண்டரை கோடி ரூபாய்.



· விழுப்புரம் மாவட்டத்தில் கட்டப்பட்ட 3,026 தற்காலிக வீடுகளில் ஒருவரும் குடியேறாததால், ஒன்றே முக்கால் கோடி ரூபாய் விரயமானது.



· சுனாமியால் இறந்து போனவர்களின் சடலங்களைப் புதைப்பது தொடங்கி, உணவுப் பொருட்கள் வழங்குவது வரையான ஒவ்வொரு நிவாரண நடவடிக்கையிலும் நடந்துள்ள மோசடிகள், குளறுபடிகளை அந்த அறிக்கை பட்டியல் இட்டுள்ளது.



சுனாமிக்குப் பிறகு, தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் மீன் பிடிக்கப் பயன்படுத்தப்படும் படகுகளின் எண்ணிக்கை அதிகரித்த அளவிற்கு, பிடிக்கப்படும் மீன்களின் அளவு அதிகரிக்காததால், மீனவ சமுதாயத்தின் பொருளாதார நிலைமை நசிந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், படகு வாங்குவதற்குக் கொடுக்கப்பட்ட கடன் குட்டி போட்டதுதான் கண்ட பலன் என்கிறார்கள் மீனவர்கள்.



உலக வங்கி உத்தரவுப்படி மீனவர்களை கடற்கரையில் இருந்து அப்புறப்படுத்தவும்; மீனவ சமுதாயத்தில் அரசு சாரா நிறுவனங்கள் ஊடுருவி வேலை செய்யவும்; அதிகாரிகள் இலஞ்சம் ஊழல் மோசடிகளில் ஊறித் திளைக்கவும்தான் சுனாமி நிவாரணம் பயன்பட்டிருக்கிறது. மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை, அப்பல்லோ மருத்துவமனை போன்ற தனியார் ஐந்து நட்சத்திர மருத்துவமனைகள், மீனவர்களின் இந்த அவல நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, சிறுநீரகத் திருட்டு வியாபாரத்தை நடத்தி வருகின்றன. அரசு, தனது அலட்சியத்தை மூடி மறைக்க, இந்தத் தனியார் மருத்துவமனைகள் மீது பாயப் போவதாக ""பாவ்லா'' காட்டுகிறது. மீனவர்களோ, தங்கள் சிறுநீரகங்களை இதைவிட நல்ல விலைக்கு வாங்க யாராவது வருவார்களா எனக் காத்துக் கிடக்கிறார்கள்!

Sunday, March 4, 2007

முல்லைப் பெரியாறு: தீர்வு என்ன?

முல்லைப் பெரியாறு: தீர்வு என்ன?

ழை பொய்த்துப் போகும் காலங்களில்தான் காவிரியில் நீர்கேட்டு கர்நாடகாவிடம் கையேந்தும் நிலைமை உள்ளது என்றால், நல்ல மழை பெய்தும் கூட, தமிழகமே கட்டிப் பராமரித்து வரும் முல்லைப் பெரியாறு அணையில் அதன் கொள்ளளவு நீரைத் தேக்கி வைத்துப் பயன்படுத்தும் உரிமையைக் கூட அடாவடியாக மறுக்கிறது, கேரள அரசு. இப்படியே போனால் பாலாறு, காவிரி ஆகியவற்றைத் தொடர்ந்து வைகையும் வறண்டு போய் தமிழ்நாட்டின் பெரும்பாலான நிலப்பரப்பு பாலைவனமாகிவிடும் என்பதில் சந்தேகமில்லை.


இருப்பினும், தேர்தல் நலனுக்காக ஓட்டுக் கட்சிகளும் தமிழக நலனில் அக்கறையுள்ள சில சிறிய அரசியல் அமைப்புகளும் கட்சிகளும் மட்டுமே இது குறித்துப் பேசி வருகின்றன. தமிழகத்தின் பெரும்பான்மையான மக்கள் இது குறித்து அதிகம் தெரிந்து கொண்டு அக்கறைப்படுவதாகத் தெரியவில்லை. இதற்குக் காரணம், தமிழக மக்களிடம் அதிகம் செல்வாக்கு செலுத்தும் ஓட்டுக் கட்சிகளும் செய்தி ஊடகங்களும் இந்த எரியும் பிரச்சினையை பரந்துபட்ட மக்களிடம் கொண்டு செல்வதில்லை.


அதே நேரத்தில் கேரளத்து அரசியல் கட்சிகளோ (இடதுசாரிகள் உட்பட) இப்பிரச்சினையை அடித்தட்டு மக்களிடம் திரித்துச் சொல்லி தேசியஇனவெறியைக் கிளப்பி விட்டுள்ளனர். தமிழக அரசியல் கட்சிகளோ, இப்பிரச்சினையை குறைந்தபட்சம் சாமான்ய மக்களுக்குப் புரிய வைக்கவும் முயலவில்லை. இது எப்படி இருக்கிறது என்றால், ""பறித்தவன் பதறியதும், பறிக் கொடுத்தவன் ஊமையாகி விட்டான்'' என்ற வாய்மொழிக்கேற்ப தமிழக ஓட்டுக் கட்சிகளும் அமைதியாகி விட்டன.


முல்லைப் பெரியாறு பிரச்சினையில், உச்சநீதி மன்றத் தீர்ப்பான 142 அடி நீர் அளவு உயர்த்த வேண்டும் என்ற ஆணையை கேரள அரசு நிராகரித்து விட்டது.உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு பிறகு ஆட்சிக்கு வந்த கருணாநிதியும் சரி, அதற்கு முன்பிருந்த ஜெயாவும் சரி இது குறித்து எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இவர்கள் மௌனம் சாதிப்பது ஏன்? பேசி தீர்க்கலாம் என்று இழுத்தடிப்பது ஏன்?


தேசிய இனவெறியைக் கிளப்பிவிடும், நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் கேரள அரசு மீது உச்சநீதி மன்றம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசையும் வலியுறுத்தவும் இல்லை. மத்திய அரசும் இதில், "கழுவும் மீனில் நழுவும் மீனாகவே' செயல்பட்டு தமிழகத்தின் நியாயமான உரிமையைப் புறக்கணித்து வருகிறது.


அப்படி என்றால் இதில் நமக்கு உரிமையில்லையா? முழு உரிமை உண்டு. இதில் சந்தேகத்திற்கே இடமில்லை. இதன் உண்மை நிலவரம் தான் என்ன?


ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பருவ மழையானது, அடிக்கடி பெய்யாமல் போனதால், விவசாயம் பாதிக்கப்பட்டது. இப்பாதிப்பைப் போக்க, அன்றைய ஆங்கிலேய அரசு அதாவது, சென்னை மாகாண அரசு, மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உருவாகும் நீரானது, வீணாக அரபிக்கடலில் கலப்பதைத் தடுத்து, தென் மாவட்டங்களின் நீரின் தேவையைப் பூர்த்தி செய்ய முடிவு செய்தது.


இதற்கான இடத்தைத் தெரிவு செய்து, திருவிதாங்கூர் மன்னருடன் சென்னை மாகாண அரசு ஒரு ஒப்பந்தம் போட்டது. (அணை இருக்கும் இடம் திருவிதாங்கூர் மன்னனுக்கே சொந்தமில்லை என்பது வேறு விசயம்). இதனடிப்படையில் உறுதி செய்து கொண்ட பின்பே சென்னை மாகாண அரசு அணையைக் கட்ட முடிவு செய்தது. பென்னி குக் என்ற ஆங்கிலேய பொறியாளர் தலைமையில் 1874ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணையைக் கட்ட துவங்கியது.


1895இல் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்ட இந்த அணையின் நீரை, ஒரு குகையின் மூலமாக திருப்பி, தமிழகத்தின் தென் மாவட்ட விளைநிலங்களுக்கு பயன்படுத்தி கொள்ளும் உரிமையை 999 ஆண்டுகள் வரை 1886இல் அக். 9ஆம் தேதி திருவிதாங்கூர் மன்னருக்கும் சென்னை மாகாண அரசுக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தம் மூலம் உறுதி செய்யப்பட்டது.


முல்லைப் பெரியாறு நீர் தமிழ்நாட்டில் நுழையும் இடத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யத் திட்டமிட்டது தமிழக அரசு. அதனடிப்படையில், கேரள அரசுடன் 1970 மே 29இல் தமிழக அரசானது, பழைய ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு புதிய ஒப்பந்தத்தை செய்து கொண்டது. இந்த புதிய ஒப்பந்தத்தின் போது, கேரள அரசோ, ஒரு கோரிக்கையை முன் வைத்தது.


அதாவது, ஏற்கெனவே போட்ட முதல் ஒப்பந்தத்தில் அணைக் கட்டுவதால் நீரில் மூழ்கும் 8000 ஏக்கர் நிலத்திற்கு வாடகையாக, ஒரு ஏக்கருக்கு
ரூ. 5 வீதம் ரூ. 40,000த்தை தமிழக அரசு செலுத்தி வந்தது. அதை தற்போது ஒரு ஏக்கருக்கு ரூ. 30 வீதம் உயர்த்தி தரும்படி கேரள அரசு கோரியது. தமிழக அரசும் இதற்கு ஒப்புக் கொண்டு நீரில் மூழ்கும் 8000 ஏக்கருக்கு ரூ. 30 வீதம் 2,40,000 ரூபாயை ஆண்டுதோ றும் இன்றுவரை செலுத்தி வருகிறது.


இந்த ஒப்பந்தத்திற்கு பிறகு, கேரள அரசோ, 1976இல் தமிழகத்திற்கு வரும் நீரை தடுத்து நிறுத்தி, அதைதானே எடுத்து செல்லும் நோக்கத்தில், 1976இல், 555 அடி உயரத்தில் (முல்லைப் பெரியாறு அணையை விட 7 மடங்கு பெரியது) இடுக்கி அணையைக் கட்டியது.


இடுக்கி அணைக்குப் போதிய நீர் கிடைக்காததால், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாகக் குறைக்க, கேரள மின்வாரியத் தலைமைப் பொறியாளர் அறிவுறுத்தியுள்ளார். இடுக்கி அணையில் தேக்கி வைக்கப்படும் நீரைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யலாம் என்றும் ஆலோசனைக் கூறியுள்ளார். இடுக்கி அணைக்குத் தேவையான அளவு நீரைப்பெறும் நோக்கத்தில் தான் கேரள அரசு பல சதிவேலைகளையும், புரளியைக் கிளப்புவதையும் செய்கின்றது.


இடுக்கி அணைக்கு நீரைக்கொண்டு செல்வதற்காக தமிழக வனப் பகுதியில் இருந்த செண்பகவள்ளி அணையை சதித்தனமாக உடைத்து விட்டது, கேரள அரசு. நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு மீண்டும் அந்த அணையைக் கட்டித் தர ஒப்புக் கொண்டு அதற்காக தமிழக அரசிடமிருந்து பணமும் பெற்றுக் கொண்டு இன்னமும் அணையைக் கட்டித் தராமல் ஏய்த்து வருகிறது.


இடுக்கி அணைக்கு நீரைக்கொண்டு செல்வதற்காக பெரியாறு அணைக்கான இயற்கையான நீர்வரத்துப் பாதையை மறித்து கெவி அணை, பம்பா அணை, ஆணைத்தோடு அணை, கட்கி அணை ஆகிய புதிய சிறு அணைகளை கட்டி இயற்கை நீரோட்டத்திற்கு எதிராக உயரமான இடங்களுக்கு இராட்சத "பம்பு'கள் கொண்டு மலைகளைத் தாண்டி நீரேற்றி இடுக்கி அணைக்கு நீரைக் கொண்டு சென்றது. முல்லைப் பெரியாறு அணையைப் பலப்படுத்தும் ஒப்பந்தத்தை மீறி கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள், பொறியாளர்களைக் கைது செய்தும் வழக்குப் போட்டும் வாகனங்களை பறிமுதல் செய்தும் தொடர்ந்து தொல்லைகள் கொடுத்துக் கொண்டேயிருந்தது. இருந்தபோதும் எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய ஆட்சியாளர்கள் பொறியியலாளர்கள், அதிகாரிகளின் முறையீடுகளை கண்டு கொள்ளாது தொடர்ந்து கேரள அரசுக்குத் துணையாக தமிழகத்திற்கு துரோகமிழைத்தே வந்திருக்கின்றனர். அணையை இயக்குவது, படகு விடுவது, அணைக்கான பாதைகளை பயன்படுத்துவது — என்று பல உரிமைகளை தாரை வார்த்திருக்கின்றனர்.


அணை பலவீனம் அடைந்து விட்டதாகக் காரணம் காட்டி, கேரள அரசும் தமிழக அரசும் போட்ட ஒப்பந்தபடி அன்றைய எம்.ஜி.ஆர். அரசு முல்லைப் பெரியாறு அணையைப் பலப்படுத்த 1.6 கோடி ரூபாயை ஒதுக்கி, 1241 அடி நீளம் கொண்ட அணைக்கு 10 அடிக்கு ஒரு பில்லர் வீதம், 125 அழுத்தமானப் பில்லர்களை உள்பக்கம் எழுப்பி, 55 அடி அகலம், 155 அடி உயரத்தில், ஒரு சப்போர்ட் அணையை (பேபி டேம்) கட்டி உபரியாக 3 செட்டர்களையும் பொருத்தி மேலும் பலப்படுத்தியது. அவ்வப்போது ஏற்படும் கசிவையும் நிறுத்த சுண்ணாம்பு, சிமெண்டுப் பாலை அணையின் உட்புறத்தில் இறக்கி தொடர்ந்து பலப்படுத்தியும் வந்துள்ளது.


இதை மைய மண் இயங்கியல் வல்லுநர்கள் (இந்த வல்லுநர் குழுவில் கேரள அரசு சார்பில் எம்.கே.பரமேஸ்வரன் இருந்தார்) அதிநவீன கருவிகள் கொண்டு ஆய்வு செய்து பேபி டேமுக்கு வலிமை இருக்கிறது என்று 14 ஜூன் 2000த்தில் சான்றும் அளித்தனர். இதனடிப்படையில் அணையின் நீர்மட்டத்தை 142 அடி உயர்த்திக் கொள்ள சான்றும் அளித்து விட்டது.


இந்த சான்றை ஏற்றுக் கொண்ட உச்சநீதி மன்றம் 142 அடி நீரை உயர்த்தலாம் என்று .2006இல் தீர்ப்பும் அளித்து விட்டது. நீதிமன்ற தீர்ப்பை ஏற்க மறுத்து, தீர்ப்பை மறுசீராய்வு செய்யும்படி மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது, கேரள அரசு. மனு செய்தவர்கள் அதன் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை ஏற்பது தானே நியாயமானது. சாதகமாக இருந்தால் ஏற்பது, இல்லையெனில் மறுப்பது என்பது அயோக்கியத்தனம் இல்லையா? மேலும் அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை கூட்டி, கேரள நீர்ப் பாசனம் நீர் சேமிப்புச் சட்டம் என 2003இல் திருத்தம் கொண்டு வந்தது மோசடி இல்லையா?


இந்த மனுவையும் தள்ளுபடி செய்துவிட்டது உச்சநீதி மன்றம். உச்சநீதி மன்ற தீர்ப்பை ஏற்க மறுப்பதோடு, தமிழகத்தின் நியாயமான பாதிப்பைக் கூடப் பார்க்க மறுக்கிறது.


136 அடியாக நீர் குறைப்பதால், தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீர்வரத்து குறைந்து, 1,25,000 ஏக்கர் விளைநிலங்கள் தரிசாகி விட்டன. மின்சாரமும் 140 மெகாவாட் மின் உற்பத்தியானது 56 மெகாவாட் மின் உற்பத்தியாக குறைந்து விட்டது. இதனால் தமிழகத்திற்கு 130.80 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதோடு 1980 முதல் 2006 வரை ஏறக்குறைய ரூ. 3561.6 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.


மேலும், இந்த நிலத்தையே நம்பி வாழ்ந்து வந்த மதுரை, தேனி, இராமநாதபுரம் மாவட்டத்து மக்களும் வயிற்றுப் பிழைப்புக்காக அண்டை மாநிலங்களைத் தேடி ஓடுகின்றனர். ஆனால், கேரள மக்களுக்காக, தமிழகம் உற்பத்தி செய்து அனுப்பும் உணவுப் பொருட்களுக்கு தேவையான நீரின் அளவோ 511 டிஎம்சியாகும். அந்த நீரையாவது தரவேண்டுமென்ற எண்ணம் கூட இவர்களுக்கு இல்லை.


உலகத் தொழிலாளர்களை ஒன்றுபடச் சொல்லும் மார்க்சிய கோட்பாட்டை சொல்லிக் கொண்டே, இந்திய தொழிலாளர்களைப் பிளவுப்படுத்தும் முதலாளித்துவ தேசிய இனவெறியைப் புகுத்தி கொண்டதன் விளைவுதான் இது என்பதை இவர்கள் உணர மறுக்கின்றனர்.


இவர்களின் தேசிய இனவெறிக்கு ஒத்து ஊதும் வேலையைத்தான் தமிழக சி.பி.எம். நாடாளுமன்ற உறுப்பினர் மோகன் அவர்களும், "உச்சநீதி மன்ற தீர்ப்பை நாடாளுமன்றத்தில் விவாதிப்பது தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும்' என்கிறார். இதற்கு சபாநாயகரும் ஒத்து ஊதுகிறார். அதேபோல் தமிழ் மாநிலத் தலைவர்கள் வரதராஜனும், எம்.பாலகிருஷ்ணனும் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகும் பேசி தீர்க்க வேண்டும் என்று மடையை மாற்றி விடுகின்றனர்.


படித்தவர்கள் நிரம்பிய கேரள மக்களிடையே அறிவியல்பூர்வமான ஆதாரங்களை மறுத்து, மேலோட்டமான சில வாதங்களை முன் வைத்து பீதியூட்டும் பிரச்சாரம் நடக்கிறது. முல்லைப் பெரியாறு அணை கட்டி முடிக்கப்பட்டு 102 ஆண்டுகளாகி விட்டன; பழங்கால தொழில்நுட்பத்தைக் கொண்டு கட்டப்பட்டது; பூமி அதிர்ச்சி நிகழ வாய்ப்புள்ள பகுதியில் உள்ளது; அணை உடைந்தால் கேரளத்தின் ஐந்து மாவட்டங்களில் வாழும் 35 இலட்சம் மக்களின் உயிரும், பல ஆயிரம் கோடி சொத்துக்களும் அழியும் என்று கூறுகிறார்கள்.


உலகின் எல்லாப் பகுதிகளிலுமே ஏதாவது ஒரு அளவு அதிர்ச்சிக்குள்ளாகும் வாய்ப்புள்ளது; ஆனால் முல்லைப் பெரியாறு அணைக்கு அவ்வாறான வாய்ப்பிருப்பதாக யாரும் நிரூபிக்கவில்லை. மகாராட்டிரம் கொய்னா அணைப்பகுதியில் பல கிராமங்களை விழுங்கிய பூமி அதிர்ச்சி நிகழ்ந்துள்ள போதிலும் அந்த அணை இடிக்கப்படவில்லை, பழமையான தொழில் நுட்பங் கொண்ட அணைகள் இடிக்கப்பட்டதற்குச் சான்றுகள் இருப்பதைப் போலவே, ஆயிரம் ஆண்டுகளாகியும் பாதுகாப்பாகவும் உறுதியாகவும் தற்போதும் உள்ள அணைகளுக்கும் சான்றுகள் உள்ளன.


ஒப்பந்த காலமான 999 ஆண்டுகளுக்கு, நூறு சதவீதம் எந்தவித ஆபத்தும் பாதிப்பும் இல்லாமல் முல்லைப் பெரியாறு அணை நீடித்திருக்கும் என்று எந்த முட்டாளும் வாதிட மாட்டான். அதேசமயம் நிபுணர்களின் ஆய்வு முடிவுப்படி 152 அடி உயரத்துக்கு நீரைத் தேக்கினாலும் உடனடி ஆபத்தில்லை என்பதுதான் உண்மை. உலகிலுள்ள எல்லா அணைகளுக்கும், பலநூறு மாடிகள் கொண்ட வானுயரக் கட்டிடங்களுக்கும் கூட இது பொருந்தும். சொல்லப் போனால் மனிதனின் கட்டுமானங்கள் எல்லாமே காலத்தாலும் இயற்கை பேரழிவுகளாலும் பாதிக்கப்படக் கூடியவைதாம். எரிமலைப் பூமியாகிய ஜப்பானில், குறிப்பாக டோக்கியோவில் எந்த உத்திரவாதத்தில் வானுயரக் கட்டுமானங்களும் அணு உலைகளும் நிர்மாணிக்கப்படுகின்றன. நவீன காலத்தில் ஆபத்து விளைவிக்கக் கூடிய கட்டுமானங்கள் எல்லாமே நிபுணர்களால் கண்காணிக்கப்படுவதும், தேவையானபோது தகுந்த பாதுகாப்பு ஏற்படுத்தப்படுவதும்தான் நடைமுறையாக உள்ளது.


அந்த வகையில் முல்லைப் பெரியாறு அணையும் கருத்தப்பட வேண்டும்; ஆனால் கேரள மக்களிடையே மூட நம்பிக்கை வகையிலான பீதியூட்டப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணை தகுதியுடைய நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளதால், 152 அடி உயரத்துக்கு ஆபத்தின்றி நீரைத் தேக்க முடியும். இதுதவிர தகுதியுடைய பொறியியலாளர்களால் கண்காணிக்கப்பட்டு, இயக்கப்படுகிறது. தேவையான பலப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 15 கோடி கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் ஏதாவது ஆபத்து ஏற்படுமானால் தேவையான அளவு நீரை தகுந்தநேரத்தில் சீராக வெறியேற்றவும் முடியும்; பெரியாறு அணைக்கு கீழே அதைவிட ஐந்து மடங்கு அதிகமான கொள்ளளவு கொண்ட இடுக்கி அணையும் உள்ளது. இரண்டு அணைக்கும் இடையுள்ள 48 கிலோ மீட்டர் தூரத்திற்கு பல சிறிய தடுப்பணைகள் கட்டி மேலும் உத்தரவாதமாக்கிக் கொள்ள முடியும். எதிர்காலத்தில் கூட, 999 ஆண்டுகளுக்கு தற்போதுள்ள முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக நீடிக்காது என்றாலும், தேவையான போது மாற்று அணைகட்டிக் கொள்ளவும் 1886ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி உரிமையுண்டு.


ஆனால் யோக்கியவான்களாகக் காட்டிக் கொள்ளும் சிலர், தற்போதுள்ள முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக புதியதொரு அணையைக் கட்டிவிடலாம் என்று யோசனைக் கூறுகிறார்கள். இப்படிக் கூறுவது தற்போதுள்ள அணை பாதுகாப்பற்றது என்ற கேரளாவின் நிலையை எவ்வித தொழில்நுட்ப ஆதாரமுமின்றி ஆதரிப்பதாகும். அப்படிப் புதிய அணையைக் கட்டி, பழைய ஒப்பந்தத்திற்குப் பதிலாக புதிய ஒப்பந்தம் போட்டுக் கொண்டு, இடுக்கி அணைக்குத் தேவையான அளவு தண்ணீரைப் பெறுவதை நிபந்தனையாக்குவது; எஞ்சிய தண்ணீரைத் தமிழ்நாட்டிற்கு விற்பது என்ற கேரளாவின் உள்நோக்கத்தையும் ஆதரிப்பதாக உள்ளது. புதிய அணை கட்டினால், தற்போதுள்ள முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி உயரத்திற்கு நீரைத் தேக்குவதால் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் அதே அளவு தண்ணீரையும் மின்சாரத்தையும் எவ்வித நிபந்தனையுமின்றி வழங்குவதாக கேரளா உறுதி கூறவில்லை என்பது முக்கியமானது.


கேரளம், கர்நாடகம் ஆகிய இரண்டு மாநிலங்களுமே தமிழ்நாட்டிற்கு தண்ணீரைத் தானம் செய்வதைப் போலவும், ஆகவே தமிழகம் அதை உரிமையாகக் கோர முடியாது; யாசகமாகத்தான் கோர முடியும் என்பதைப் போலவும் நடந்து கொள்கின்றன. காவிரிப் பிரச்சினையில் நீர்ப் பிடிப்பு மேல்கை பகுதியைக் கர்நாடகம் கொண்டிருந்தாலும், சர்வதேச நதிநீர் விதிகளின்படி, கடைமடைப் பகுதியான தமிழகத்திற்கு இயற்கையான உரிமையுண்டு. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் 1886ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி தமிழகத்திற்கு உரிமை உண்டு. மேலும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை ஏற்றுக் கொண்டுள்ள கேரளமும் கர்நாடகமும் அதன்படியான நடுவர்மன்றம் மற்றும் உச்சநீதி மன்றத் தீர்ப்புகளை ஏற்று அமலாக்கியே தீரவேண்டும்.


நடுவர்மன்ற மற்றும் உச்சநீதி மன்றத் தீர்ப்புகளை அமலாக்க மறுக்கும்போது, மத்திய அரசு அம்மாநில அரசுமீது இராணுவ நடவடிக்கைகள் உட்பட எல்லாவிதமான நடவடிக்கைகளையம் மேற்கொள்ள வேண்டும்; இதை மத்திய அரசு செய்யாதபோது, மத்திய அரசின் எல்லா அதிகாரங்களையும் தமிழகம் ஏற்க மறுப்பதற்கு எல்லாவித நியாயமும் உரிமையும் உண்டு. இந்த நியாயத்தையும் உரிமையையும் உறுதி செய்வதுதான் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையாகும். இதுவொன்றுதான் இரு வேறு தேசிய இனங்களைக் கொண்ட அண்டை மாநிலங்களுக்கிடையிலான சிக்கல்களை நிரந்தரமாகத் தீர்ப்பதற்கான வழியாகும். அவ்வாறின்றி, ""இந்திய தேசிய ஒருமைப்பாட்டை காக்கும் வகையில் மாநில மக்கள் அமைதித் தீர்வு காணவேண்டும்'' என்று பாதிக்கப்படும், பாதிப்பை ஏற்படுத்தும் இரண்டு தரப்பையும் பார்த்து ""தேசிய வாதிகள்'' உபதேசம் செய்கின்றனர்.


பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை என்னும் ஆயுதத்தைக் கையிலெடுப்பது ஒரு நிரந்தர, நீண்டகாலத் தீர்வாக இருக்கும் அதேசமயம் கேரளம், கர்நாடகம் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் எதிராக, பொருளாதார முற்றுகை, பரம்பிக் குளம், ஆழியாறு, மண்ணாறு போன்ற ஆறுகள் வழியே கேரளத்துக்குச் செல்லும் தண்ணீரை மறுப்பது, சபரிமலை உட்பட கேரளாவுக்கான சாலை மற்றும் இரயில் பாதைகளை மறிப்பது போன்ற நடவடிக்கைகளை தமிழக மக்கள் மேற்கொள்ள வேண்டும். அண்டை மாநிலங்களில் இருந்து வரும் தண்ணீர் தமிழகத்திற்கு எவ்வளவு அவசியமோ அதைப்போலவே தமிழகத்திலிருந்து அம்மாநிலங்கள் அடையும் பொருளாதார உதவிகள் அவற்றுக்கு அவசியமானவை என்பதை உணர்த்தியே தீரவேண்டும். இது பழிவாங்கும் செயலல்ல; படிப்பிக்கும் செயலாகும்.

· ஆர்.கே.

Saturday, March 3, 2007

தேனீ எமக்கு சொல்ல முனைவது என்ன?

புலியெதிர்ப்பை அரசியலாக கொண்டவர்கள் சார்பாக, தேனீ எமக்கு சொல்ல முனைவது என்ன?

பி.இரயாகரன்
03.03.2007


ங்களைப் போல் எப்படி அரசியல் விபச்சாரத்தை செய்வது என்பதை, எமக்கு விளக்க முனைகின்றனர். தேனீ தனது ஏழாவது வருட நிறைவை ஓட்டிய இணையச் செய்தியில், எமக்கு பதில் சொல்ல முனைவதன் மூலம், தமது சொந்த விபச்சார அரசியல் என்ன என்பதையும் எடுத்துக்காட்ட முனைகின்றனர். மக்களின் முதுகில் எப்படி தாங்களும், தங்கள் வழி வந்தவர்களும் சவாரி செய்கின்றனர் என்பதை சொல்லி, அதை எமக்கும் கற்றுத்தர முனைகின்றனர். இதில் வேடிக்கை என்னவென்றால், எமது கருத்துக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் கிடையாது என்கின்றனர். அதாவது "திரும்பத்திரும்ப ஒரே விடயத்தை வெவ்வேறு வசனங்களில் கூறுவது, சும்மா கிறுக்குவதுபோன்று எழுதுவது, திட்டு எழுத்துகள் போன்றவற்றுக்கு தேனீ ஒருபோதும் மதிப்பளியாது." என்றவர்கள், அதே செய்தியில் எமக்கு எதிராக நீண்ட ஒரு பதிலை முன்வைக்கின்றனர். அவர்களின் ஏழாவது வருட அறிக்கை, எமக்கு எதிராக அமைந்ததன் மூலம், புலிகளையல்ல எம்மை எதிர்கொள்வதே அவர்களுக்கு இன்று சவாலாகவுள்ளது. அவர்கள் அதை சவாலாக கொண்டு, முன்வைத்த நீண்ட கருத்தைப் பார்ப்போம்.


"ஜனநாயகத்தின் குரல்களான ரி.பி.சி. வானொலி மற்றும் தேனீ இணையத்தளத்தின் வருகையின் பின்னர் இன்று தமிழிலும் ஆங்கிலத்திலும் குறிப்பாக பல புதிய இணையத்தளங்கள் வெளிவந்துள்ளன. இவ்விணையத்தளங்களில் பெரும்பாலானவற்றை தேனீயின் இணைப்புகளில் பார்வையிடலாம். இவ்விணையத்தளங்களின் பல்வேறு பரிமாணங்களையும் பிரித்தறிந்து தனித்தனியே உற்றுநோக்காது கண்மூடித்தனமாக அனைத்துமே வெறும் புலி எதிர்ப்பு இணையத்தளங்களென முத்திரை குத்துபவர்களும் எம்மிடையே இருக்கத்தான் செய்கின்றார்கள். தமிழ் சமூகத்தினை புலி எதிர்ப்பு, புலி ஆதரவென இரண்டாகப்பிரித்துவிட்டு தாங்கள் இரண்டு பிரிவினரையும் ஒப்புநோக்கும் திறனாய்வாளர்களாக (அதுவும் தாங்கள் மாத்திரம்தான் ஏதோ அங்கீகாரம் பெற்ற "இடது" என்கின்ற நினைப்புடன்) இவர்கள் வலம் வருகின்றார்கள். புலிப்பாசிசத்திற்கெதிராகவும் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காகவும் போராடுபவர்களை புலி எதிர்ப்பென்ற வகையறாக்களாக வர்ணிக்கும் இவர்களின் நோக்கம் எமக்கு புரியாதல்ல. ""புலிகளை முற்று முழுதாக அழிப்பது என்பது தமிழ்த்தேசிய விடுதலைப்போராட்டத்தை முற்றுமுழுதாக அழிப்பதாகிவிடும்" என்ற தமிழ்த்தேசியத்தின் மீதான அளவற்ற காதலால் (தீவிர தேசிய வாதம்) புலிகளை திருத்த வேண்டுமென்று கருதும் இவர்கள், தமிழ் ஊடகங்களின் புலிப்பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தை புலி எதிர்ப்பென குறுக்கிவிடப் பார்க்கின்றார்கள். இதன் மூலம் நேரடியாவே புலி எதிர்ப்பென்ற வகைக்குள் தங்களை அடக்க வேண்டாம் என்றும் கோருகின்றார்கள். அப்படியானால் இவர்கள் யார்? புலி எதிர்ப்புக்கும் புலி ஆதரவுக்கும் இடையிலிருப்பதாக கூறும் இவர்கள் யார்? புலி எதிர்ப்புக்கும் புலி ஆதரவுக்கும் இடையில் என்ன இருப்பதாக இவர்கள் கூற முற்படுகின்றனர்? ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் நடுவில் எந்தக்கருத்தோட்டத்தை புகுத்த விளைகின்றனர்? கடந்த இரு தசாப்தகால புலிகளின் நடவடிக்கைகள் அனைத்தையும் வரிசைப்படுத்துவதன் மூலம் புலிகளை ஒரு பாசிஸ இயக்கமென பகிரங்கமாக அறிவிக்க முன்வருவார்களா? அல்லது புலிகள் ஒரு ""தேசிய விடுதலை இயக்கம்" என்பதையாவது பகிரங்கமாக தெரிவிப்பார்களா? ""மக்கள் நலன், மக்கள் நலன்" எனக்கூறிவிட்டு, முழு இலங்கை மக்களினதும் விரோத இயக்கமான வேலுப்பிள்ளை பிரபாகரனை தலைமையாகக் கொண்ட புலிகளின் பிடிகளிலிருந்து மக்களை விடுவிக்கப்போராடும் ஜனநாயக சக்திகளைப் பார்த்து புலியெதிர்ப்பென்றும், இன்னும் சொல்லப்போனால் ஆதாரங்கள் எதுமில்லாமல் இலங்கை அரசு ஆதரவென்றும் பொய்க்கதைகள் புனைகின்றார்கள். புலியெதிர்ப்பென்பதே புலியென்ற இருத்தலை அங்கீகரிக்காதவர்கள். பாசிசத்திற்கென்ன அங்கீகாரம்? பாசிசத்தை நிர்மூலமல்லவா செய்யவேண்டும்.


இந்த மக்கள் நலன் அதிகாரிகள் வெறும் குழப்பல்வாதிகள். புலிகள் தொடர்பாகவும் இலங்கையிலுள்ள தேசிய இனங்களின் பிரச்சனை தொடர்பாகவும் சரியான நிலைப்பாடு எடுக்கத்தெரியாதவர்கள். 1972 ஆண்டின் பின்னர் உருவாகிய தமிழ்த்துரோகிகள் ஒழிப்பு அலை, 1980களில் ஆயுதமேந்திய தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டமென வர்ணிக்கப்பட்டு, 1986 ஆண்டு ரெலோ அழிப்பின் பின்னர் தமிழ்த்துரோகிகள் ஒழிப்பு போராட்டமாகவே தொடர்ந்தது. ""புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்" என்பது ""புலிகளின் தாகம் தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்களின் குருதி" என்பதாக மாற்றங்கொண்டுள்ளது. இதனால் இலங்கையிலுள்ள தேசிய இனங்களின் பிரச்சனையென்பது புலிப்பாசிஸ்டுகளால் முற்றுமுழுதாக உருமாற்றப்பட்டுள்ளது. (இதைப்பற்றி மிகவும் விரிவாக எழுதப்பட வேண்டும், பரந்தளவில் விவாதிக்கப்பட வேண்டும்) இப்போது பாசிஸம் என்ற தடையை அகற்றாமல் இலங்கையிலுள்ள தேசிய இனங்களின் பிரச்சனை முற்றுமுழுதாக தீர்க்க முடியாது என்ற நிலைக்கு நாங்கள் வந்தடைந்துள்ளோம் என்பதே யதார்த்தம். கடந்த இரு தசாப்த காலத்தில் இலங்கையிலுள்ள தேசிய இனங்களின் பிரச்சனை தொடர்பாக தென்னிலங்கை ஆளும்வர்க்கங்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் இலங்கையிலுள்ள தேசிய இனங்களின் பிரச்சனையை தீர்ப்பதற்கான ஓரளவிற்கேனும் சாதகமான சூழலையே ஏற்படுத்தியுள்ளது. தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள இச்சாதகமான சூழலை, இலங்கையிலுள்ள தேசிய இனங்கள் நுகர முடியாமல் இருப்பதற்கும் புலிகளே காரணம். எந்தவொரு சமூகத்திலும் பிரதானமாக நிலவும் ஒரு கருத்தோட்டத்திற்கு எதிராக ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கருத்தோட்டங்களும், அவ்வாறான பல்வேறு வகைப்பட்ட கருத்தோட்டங்களை சீர்தூக்கிப்பார்க்கும் மேலும் பல கருத்தோட்டங்கள் நிலவுவது சர்வசாதாரணமானதே. ஆனால் தமிழ் சமூகத்தில் பிரதானமாக புலி எதிர்ப்பு, புலி ஆதரவென இரண்டு பிரதான கருத்தோட்டங்கள்தான் நிலவுவதாக இந்த மூன்றாம் பாதையாளர்களுக்குத் தெரிகின்றது. புலி எதிர்ப்பு, புலி ஆதரவு என்ற இரண்டையும் நிராகரித்து தமது மூன்றாம்பாதையை கவனத்திற்கொள்ளுமாறு, அவரவர்கள் தம்பாணியில் வேண்டுகோள் விடுக்கின்றார்கள். மூன்றாம்பாதையை நிராகரிக்கும் நாலாம் பாதையும், நாலாம்பாதையை நிராகரிக்கும் மேலும் பல நூறு, ஆயிரம் கருத்தோட்டங்களினூடாகவே சரியான கருத்தென்பதை நாம் வந்தடைய முடியும் என்பதை இந்த சித்தம் கலங்கியவர்கள் மறந்து விடுகின்றனர்.


தேனீ இணையத்தளத்தின் அபரீதமான வளர்ச்சியையும் கடந்த ஆறு வருட காலத்தில் தமிழ் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தினையும் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் தொடர்ச்சியாக தேனீ மீது அவதூறுகளையும் வசைகளையும் பொழிந்து வருகின்றனர். புலிகளிலிருந்து புலி அல்லதாவர்களென தங்களைக் கூறிக்கொள்பவர்கள்வரை அவதூறுகளையும் வசைகளையும் பொழிவதில் முன்னிற்கின்றார்கள். தேனீயை வம்புக்கிழுத்து ஜனநாயகக்குரலினை மழுங்கடிக்கும் திட்ட அட்டவணையைக் கொண்டவர்களின் சூழ்ச்சிகளுக்கு தேனீ ஒருபோதும் பலியாகாது. தேனீயைப்போன்றே, தேனீயின் பல இலட்சம் வாசகர்களும் பண்பாடற்றவர்களின் கூச்சல்களை எளிதில் அசட்டை செய்துவிடுகின்றார்கள். தேனீயில் வெளியாகும் கருத்துகளுக்கு விமர்சனப்பண்புடன் தெரிவிக்கப்படும் எதிர்வினைகளுக்கு மாத்திரமே தேனீ பதிலளிக்க கடமைப்பட்டுள்ளது. திரும்பத்திரும்ப ஒரே விடயத்ததை வௌவேறு வசனங்களில் கூறுவது, சும்மா கிறுக்குவதுபோன்று எழுதுவது, திட்டு எழுத்துகள் போன்றவற்றுக்கு தேனீ ஒருபோதும் மதிப்பளியாது."


இப்படி முதன் முதலாக, முக்கி முனங்கி, அதுவும் பெயர் குறிப்பிடாது, (நாங்கள் மட்டும்தான், அதாவது தமிழ் அரங்கமும் ஒருசில எழுத்தாளர்களும் தான், இக்கருத்து சார்ந்த எழுத்துலகில் உள்ளனர்.) எமக்கு எதிராக தேனீ முன்வைத்த கருத்து. தேனீ தனது ஏழாண்டு நினைவையொட்டி வெளியிட்ட அறிக்கையில், தமிழரங்கம் அவர்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருப்பதை வெளிப்படுத்தி நிற்கின்றது. எமது கருத்தை எதிர்கொள்ள முடியாது, அவர்கள் பாணியில் பல கேள்விகளை எழுப்புகின்றனர். முத்திரை குத்துகின்றனர். பல விளக்கத்தை, பரிதாபகரமாக எமக்கு எதிராக முன்வைக்கின்றனர்.


எம்மிடம் இப்படிக் கேட்கின்றனர் "கடந்த இரு தசாப்தகால புலிகளின் நடவடிக்கைகள் அனைத்தையும் வரிசைப்படுத்துவதன் மூலம், புலிகளை ஒரு பாசிஸ இயக்கமென பகிரங்கமாக அறிவிக்க முன்வருவார்களா?" இப்படி கேட்கும் இவர்கள், எமது கருத்துகள் தெரியாத வண்ணம், ஊர் உலகத்தின் கண்ணையே புலியைப் போல் கட்டி வைத்துவிட்டு, மற்றவன் கேனயன் என்ற நினைப்பில் இப்படி உளறுகின்றனர். எமது புலம்பெயர் சமூக செயல்பாடாக வெளிவந்த சமர் முதல் முதலிலேயே, புலிப்பாசிசத்தை அம்பலப்படுத்த தொடங்கியவர்கள் நாங்கள். நீங்கள் இலக்கியம் என்ற பெயரில், வம்பளந்து கொசுறு அடித்த காலத்தில் எல்லாம், தன்னந் தனியாக பாசிசத்தக்கு எதிராக போராடியவர்கள். புலம்பெயர முன்பு, புலிக்கும் மற்றைய இயங்கங்களுக்கும் எதிரான போராட்டங்கள் பலவற்றை நடத்தியவர்கள் மட்டுமல்லாது தலைமை தாங்கியவர்கள். அனைத்து இயக்க பாசிசத்தையும் எதிர்த்து, அந்த மண்ணில் மக்களுடன் மக்களாக நின்று முன்னெடுத்தவர்கள். எந்த மாற்று இயக்கமும் இதற்காக போராடவில்லை. நாங்கள் சுயாதீனமாகவும், அமைப்பு ரீதியாகவும் தலைமை தாங்கி போராடியவர்கள். இதனால் மக்களுக்காக மட்டும் போராடிய எம்மில், பலர் கொல்லப்பட்டனர்.


நாங்கள் சந்ததியார் நடத்திய போராட்டத்தின் பின்னணியில், தீப்பொறி நடத்திய போராட்டத்தின் பின்னணியில், புளாட் நடத்திய பின்தளமகாநாட்டின் உள்ளேயும், ரெலோவில் நேரு (நேரு பின் எம்முடன் இணைந்த போது ரெலோவால் கொல்லப்பட்டவர். இதற்கு எதிராக ஒரு இலட்சம் துண்டுப் பிரசுரத்தை விநியோகித்தோம். இதன் போது பலர் தாக்கப்பட்டனர்.) போன்றவர்கள் நடத்திய போராட்டத்தில், ரெலோ தாஸ்சுக்கு அரசியல் ரீதியாக வழிகாட்டும் பின்னணியில், ஈ.பி.ஆர்.எல்.எப் செழியன் தாஸ் நடத்திய போராட்டத்தின் பின்னணியில் எல்லாம், இப்படி பல நூறு போராட்டங்களின் மக்கள் நலனை முன்னிலைப்படுத்திய போராட்டத்தில், நாம் அவர்களுக்கு துணை நின்று அக்கம்பக்கமாக மக்கள் நலனை முன்னிறுத்தி போராடியவர்கள்.


புலிப்பாசிசம் என்பதை நீங்கள் சொல்லும் முன்னமே, நாம் தான் கோட்பாட்டு ரீதியாக முன்வைத்தவர்கள். எம்மிடமிருந்து இந்த புலிப்பாசிசம் என்ற சொல்லை இரவல் எடுத்தவர்கள், இன்று அதைத் தாமே முதன் முதலாக முன்வைத்ததாக கரடி விடுகின்றனர். அத்துடன் எம்மிடமே பாசிசத்தை பற்றி கதைக்க முடியுமா, என்று எதிர்க்கேள்வி கேட்கின்றனர். வரலாற்றை இருட்டடிப்பு செய்து மிதக்கின்ற இந்தப் பொறுக்கி அரசியல் பிழைப்புவாதிகள், கண்ணை மூடிக் கொண்டு பால் குடிக்கும் பூனைகளுக்கு வேண்டுமானால் கதை சொல்லலாம். ஆனால் உண்மை அதுவாகிவிடாது.


இவை எல்லாம் அரசியல் வேடிக்கைதான். புலிப் பாசிசத்தை தொடர்ச்சியாக எதிர்த்து போராடியதில் நாங்கள் மட்டும் தான் தனித்துவமானவர்கள். புலிப் பாசிசத்தின் கடந்தகால நிகழ்வுகள் மீது, வேறு யாரும் எதிர்வினையாற்றியதை விட, நாங்கள் தான் முழுமையான அதன் வரலாறு முழுக்க எதிர்வினையாற்றியவர்கள். புலிகளை மட்டுமல்ல, அனைத்து இயக்கத்துக்கும் எதிராக நாம் போராடியுள்ளோம். புலி இயக்கம் இன்று வெறும் பாசிச இயக்கம் மட்டுமல்ல. அது கொள்ளைக்கார, கொலைகார, மாபியா இயக்கம் கூட. இதை வெறும் சம்பவ ரீதியாக நாங்கள் வகைப்படுத்தவில்லை. அரசியல் ரீதியாக, உங்களிடமிருந்து வேறுபட்ட வகையில் அறிவித்தவர்கள்.


பாசிச இயக்கமாக அறிவிக்க முடியுமா? என்று கேட்கின்றனர். எமது போராட்ட வரலாறு நீண்டு கிடக்கும் போது, புலியைப் போல் புலியெதிர்ப்பை மட்டும் தான் படிப்பவரா? என்ற சந்தேகத்தை நாம் முன்வைக்கமுடியும். புலிகள் ஒரு பாசிச இயக்கம் என்பதை, அனைத்து புலியெதிர்ப்புக் கும்பலையும் விட தெளிவாக முதன்முதலாக முன்வைத்தவர்கள் நாங்கள். இவர்களின் புலியெதிர்ப்பு, புலியின் பாசிசத்தை அது கொண்டுள்ள சமூக பொருளாதார கொள்கை அடிப்படையின் கூறியதேயில்லை. எம்மிடம் இருந்து அதை வெறும் சொல்லாக பொறுக்கி அதை ஒப்புக்கு புலம்புகின்றனர். புலி கொண்டுள்ள சமூக பொருளாதார பாசிச கொள்கையைத் தான், புலியெதிர்ப்பும் கொண்டுள்ளது. இதை மீறி புலி அரசியலுக்கு வெளியில் புலியெதிர்ப்பிடம் வித்தியாசங்கள் எதுவும் கிடையாது.


".. "மக்கள் நலன், மக்கள் நலன்" எனக்கூறிவிட்டு, முழு இலங்கை மக்களினதும் விரோத இயக்கமான வேலுப்பிள்ளை பிரபாகரனை தலைமையாகக் கொண்ட புலிகளின் பிடிகளிலிருந்து மக்களை விடுவிக்கப்போராடும் ஜனநாயக சக்திகளைப்பார்த்து புலியெதிர்ப்பென்றும், இன்னும் சொல்லப்போனால் ஆதாரங்கள் எதுவுமில்லாமல் இலங்கை அரசு ஆதரவென்றும் பொய்க்கதைகள் புனைகின்றார்கள். புலியெதிர்ப்பென்பதே புலியென்ற இருத்தலை அங்கீகரிக்காதவர்கள். பாசிசத்திற்கென்ன அங்கீகாரம்? பாசிசத்தை நிர்மூலமல்லவா செய்யவேண்டும்." என்கின்றனர்.


மக்கள் நலனை தூக்கினால் புலியெதிர்ப்பு என்கின்றனர்.


எம்மைப் பார்த்து இவ்வாறு கேட்கின்றனர். புலியை நிர்மூலமல்லவா செய்ய வேண்டும். பாசிசத்தை எப்படி அங்கீகாரம் செய்யமுடியும்? நல்லதொரு வேடிக்கை. தேனீ ஆசிரியர் நித்திரை கொள்கின்றார் போலும். புலி அரசியலை ஒழிக்க வேண்டும், பாசிசத்தை எதிர்த்து போராட வேண்டும் என்பதை, புலியெதிர்ப்புக் கும்பல் கும்பகர்ணன் நித்திரையில் கனவு கண்டு எழ முன்னமே, அதற்கு எதிராக போராடியவர்கள் நாங்கள். வரலாற்றை இருட்டடிப்பு செய்து, திரித்து உண்மைக்கு மாறாக அனைத்தையும் புனையலாம்.


பொய்யர்களாக, புரட்டுப் பேர்வழிகளாக கடந்தகால போராட்டத்தையே திரிப்பதைப் பார்ப்போம்.


"புலிப்பாசிஸ்டுகளால் மாற்றுக்கருத்துக்கொண்ட பல்லாயிரக்கணக்கானவர்களின் குரல்வளைகள் அறுத்தெறியப்பட்டு, ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்ட ஒரு காலகட்டத்தில்தான் மாற்றுக்கருத்துக்களின் ஒரேயொரு குரலாக தேனீ இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டது." என்கின்றனர்.


இதில் இரண்டு அப்பட்டமான பொய்களை இந்த புரட்டுப் பேர்வழிகள் முன்வைக்கின்றனர்.


1."மாற்றுக்கருத்துக்களின் ஒரேயொரு குரலாக" தாம் தான் போராட்டத்தை தொடங்கியதாக ஊருக்கும் உலகத்துக்கும் கதைவிடுகின்றனர்.


2."மாற்றுக்கருத்துக்களின் ஒரேயொரு குரலாக" முதல் இணையத்தை தொடங்கியதும், தாமே என்கின்றனர்.


இரண்டுமே அப்பட்டமான வெளிப்படையான பொய். மாற்றுக் கருத்துக்கான எமது மக்களின் போராட்டம் தொடர்ச்சியானது. பல்வேறு வகையில் பலதரப்பினர் அதற்காக போராடியுள்ளனர். எமது மண்ணிலும் சரி, புலம்பெயர் சமூகத்திலும் சரி, தேனீயின் கூற்று அப்பட்டமான புரட்டை அடிப்படையாக கொண்ட பொய்யாகும். இதை நாங்கள் நிருபிக்க வேண்டிய அவசியம் கிடையாது.


இரண்டாவது மாற்றுக் கருத்துக்கான இணையத்தில் தேனீயினதே முதலாவது என்பது அடுத்த பொய். இதற்கு முன்னமே எமது இணையம் இருந்து வந்தது. தேனீயின் இணைய தோற்றத்துக்கு முந்தைய சமர் இதழ்களில், இந்த இணைய வரவு பதிவாகியுள்ளது.


இப்படி பொய்யும் புரட்டுமாகவே போராடி வந்தவர்களின் வரலாற்றை திரித்து, சொந்த மக்கள் விரோத வரலாற்றை இட்டுக் கட்டுகின்றனர். பின் "தமிழ் பேசும் மக்களின் ஜனநாயகக்குரல் தேனீ இணையத்தளம்" என்கின்றனர். தாம் மட்டுமே, அதாவது புலியெதிர்ப்பு மட்டுமே புலிப்பாசிசத்தை எதிர்த்து போராடியதாக காட்டமுனைகின்றனர். அதைத் தான் முக்கி முனங்கி பேசுகின்றனர். இவர்கள் "ஜனநாயகக்குரல்" என்று சொல்வது என்ன?


1. புலியை எதிர்க்கின்ற கருத்துக்கள். ஆனால் அது


2. புலியெதிர்ப்பு கருத்தாக இருக்க வேண்டும்.


3. இந்த அசிங்கங்களை அம்பலப்படுத்தாததாக இருக்க வேண்டும்.


இதைத்தான் இவர்கள் தமிழ் மக்களின் "ஜனநாயகக்குரல்" என்கின்றனர். தமிழ் மக்களின் ஜனநாயகத்தை, இப்படி புலிக்கு எதிராக மட்டும் சுருக்குகின்றனர். தமிழ் மக்களின் பிரச்சனைகள் அனைத்தும், புலிப்பிரச்சனையாக காட்டி விடுகின்றனர். இதற்கு அப்பால் எதையும், இவர்கள் வெளியிட்டதாக கூறும் 1500 கட்டுரைகளும் வெளிக் கொண்டு வந்தது கிடையாது. அதை நாம் தான், எமது கருத்துநிலை மட்டும் தான் வெளிக்கொண்டு வருகின்றது.


"வேலுப்பிள்ளை பிரபாகரனை தலைமையாகக் கொண்ட புலிகளின்.." என்கிறீர்களே. வேலுப்பிள்ளை பிரபாகரனின் தலைமையால் தான் பாசிசம் என்று கூறுகின்ற அரசியல் வக்கிரம் வெளிப்படுகின்றது. புலிகளின் பாசிசம், அது கொண்டுள்ள சமூக பொருளாதார உள்ளடகத்தில் இருந்து தோன்றுவதே. இதற்கு பிரபாகரன் தலைமை தாங்க வேண்டிய அவசியம் கிடையாது, கருணாவும், தேனீயும் கூட இந்த சமூக பொருளாதார அரசியலில் பாசிசத்தையே முன்வைப்பர். இந்த நியதி இவர்கள் எவருக்கும் விதிவிலக்கல்ல.


நீங்கள் கூறுகின்றீர்கள் "பாசிசத்தை நிர்மூலமல்லவா செய்யவேண்டும்." என்று. ஆம் நிச்சயமாக, ஆனால் எப்படி? இதற்கு எங்களதும் உங்களதும் வழிமுறைகள் முற்றிலும் வேறு வேறானது. இந்தக் கேள்விக்கு நீங்கள் நேரடியாக பதிலளிப்பது கிடையாது. தமிழ் மக்களுக்கு இதை சூக்குமமாக ஒளித்து ஓதி, அதை மறைத்து சதித்தனமாகத்தான் புகுத்துபவர்கள் நீங்கள். எப்படி இந்த புலிப்பாசிசத்தை நிர்மூலம் செய்வது என்று நீங்கள் பார்க்கின்றீர்கள் என்பதை முதலில் பார்ப்போம்.


இந்த வகையில் புலியை யார் அழித்தாலும், அழிக்க முயலுகின்ற அனைத்தையும் ஆதரிக்க வேண்டும் என்கின்றீர்கள். இந்தவகையில் புலியை அழிக்கும்


1. ஏகாதிபத்தியம்


2. இந்தியா


3. சிங்களப் பேரினவாதம்


4. இவற்றுக்கு கூலிக் குழுக்களாக செயல்படுவர்கள்


என அனைவரையும் ஆதரித்து, பாசிசத்தை ஒழிப்பதைப்பற்றி பேசுகின்றீர்கள்.


இதைத் தவிர உங்களிடம் சுயாதீனமாக பாசிசத்தை நிர்மூலம் செய்யும் வேறு எந்த அரசியல் வழியும் கிடையாது. இதுவே புலியெதிர்ப்பு கும்பலின் ஒரேயொரு அரசியல் சாரமாகும். இதில் இருந்து நாங்கள் முற்றிலும் வேறுபட்ட மாற்று வழியை வைக்கின்றோம்.


நாங்கள் புலிப் பாசிசத்தை நிர்முலமாக்க முன்வைக்கும் வழியென்ன? மக்கள் மட்டும்தான் புலியை தோற்கடிக்க முடியும் என்கின்றோம். மக்களுக்கு எதிரான, மக்கள் அல்லாத எந்த சக்திக்கு பின்னாலும் நாம் பாசிச ஒழிப்பில் ஒன்றுபடுவதை நாம் மறுதலிக்கின்றோம். அதுவே மற்றொரு பாசிசமாகவே இருக்கின்றது. மக்கள் தான் பாசிசத்தை ஒழிக்க முடியும் என்பது, பலருக்கு ஆச்சரியமான, அருவருப்பூட்டும் ஒரு விடையமாக உள்ளது. இது நடைமுறையில் சாத்தியமற்ற ஒன்று என்பதே, இவர்கள் சொல்ல முனையும் வாதங்களில் ஒன்று. இதனால் புலியை ஒழிக்க மக்கள் அல்லாத வழியை ஆதரிக்க வேண்டும் என்பதே, புலியெதிர்ப்பு கும்பலின் அரசியல் சாரமாக உள்ளது. இந்த வகையில் மக்களை சார்ந்து நின்று புலியை அழிப்பதை கோரும் அரசியலை, புலிகள் சார்பு என்று முத்திரை குத்த புலியெதிர்ப்பு கும்பல் முனைகின்றனர்.


புலிகள் முதல் புலியெதிர்ப்புக் கும்பல் வரை மக்கள் பற்றி கதைப்பதும், மக்களின் நலனில் இருந்து அவர்களை சிந்திக்க தூண்டுவது, வெறுப்புக்குரிய ஒன்றாக அவர்கள் முன் உள்ளது. மக்கள் தமது பிரச்சனைக்கூடாக, தமது சொந்த அதிகாரத்தை கைப்பற்றுவது என்ற விடையம் வெறுப்புக்குரிய ஒன்றாக பார்க்கப்படுகின்றது. இதனால் இதற்கு எதிரான வகையிலும், மக்களின் எதிரிகளுடன் சேர்ந்தும், தத்தம் அரசியலை முன்வைக்கின்றனர். இதுவே விடுதலைக்குரிய வழி என்கின்றனர். இதையே முற்போக்கு, மாற்றுக் கருத்து, ஜனநாயகத்தின் குரல் என பலவிதமாக புலம்புகின்றனர். மக்களைச் சார்ந்து நிற்காத இவர்களின் அரசியல், யாருடைய எந்த மக்களுடைய விடுதலையை பெற்றுத்தரும்?


மக்கள் மட்டும் தான் புலிகளை தோற்கடிக்க முடியும் என்ற எமது நிலைப்பாடு, உங்கள் நிலைப்பாட்டில் இருந்து முற்றிலும் வேறானது. புலிகளை மக்கள் தோற்கடிக்காமல், ஒரு நாளுமே ஏகாதிபத்தியமோ, பேரினவாதமோ அல்லது எந்த புலியெதிர்ப்பு சக்தியும் புலிகளை தோற்கடிக்க முடியாது. மக்கள் தான் புலிகளை தோற்கடிக்க வேண்டும். இந்த வகையில் தான், இன்று மக்கள் புலியை தோற்கடிக்கின்றனர். இது நாங்கள் வைத்த கருத்துக்களால் அல்லது உங்களுடைய புலியெதிர்ப்பு குதர்க்கங்களால் இவை நடக்கவில்லை. மாறாக புலிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவு, முற்றிலும் முரணிலைத் தன்மையை அடைந்துள்ளதால், புலிகளை மக்கள் தோற்கடித்துக் கொண்டிருக்கின்றார்கள். இது தன்னியல்பாக, அன்றாட புலி நிகழ்ச்சி நிரலின் மீது நிகழ்கின்றது. இங்கு கருணா முதல் பேரினவாதச் சக்திகளின் வெற்றி என்று பலராலும் கூறப்பட்டு, நம்பப்படும் அனைத்தும் மக்கள் தோற்கடித்த வெற்றிடத்தில் நிகழ்கின்றது. இதை மக்கள் விரோத பிற்போக்குவாதிகளின் ஆயுதங்களோ, கூலி கும்பல்களோ தீர்மானிக்கவில்லை. மாறாக மக்கள் புலிகளை தோற்கடித்துவிட்டதால், புலிகளின் இறுதி கிரிகைகள் நடக்கின்றது.


மக்கள் புலிகளை தோற்கடிக்கின்றனர் என்றால், மக்களுக்கும் புலிக்குமான உறவில் உள்ள பாரிய இடைவெளியால் நிகழ்கின்றது. இது தன்னியல்பாக நிகழ்வதால், மக்கள் தமது சொந்த அதிகாரத்தை பெறமுடிவதில்லை. இதனால் படுபிற்போக்கான புலியெதிர்ப்பு சக்திகள், இதைப் பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றுகின்றனர். உண்மையில் மக்களின் மற்றொரு எதிரி, புதிதாக மக்களை அடக்கியாள புலிக்கு பதிலாக வருகின்றனர். இதைத்தான் நீங்கள் ஜனநாயகம் என்று கூறி, நாயாக வாலாட்டி நக்குகின்றீர்கள். மக்கள் சந்திப்பது மறுபடியும் உங்கள் புதிய பாசிசத்தைத் தான்.


இந்த வகையில் மக்கள் தோற்கடிக்கும் புலிக்கு மாறாக, அந்த வெற்றிடத்தில் புகுந்து கொள்ளும் மக்கள் விரோத கும்பல்கள் புலியைப் போன்ற அல்லது புலியை விட மோசமான மற்றொரு பாசிட்டுக்களே.


தேனீ முதல் அனைத்து புலியெதிர்ப்புக் கும்பலும் பாசிச ஒழிப்பில் ஆதரிக்கும் பேரினவாத பாசிச அரசு, இலங்கையில் நடத்திய மனிதப்படுகொலை புலியை விட பலபத்து மடங்கு அதிகமானது. 1971 இல் 30000 சிங்கள இளைஞர்களை கொன்றது இந்த அரசு, 1989-1990 இல் 60 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் சிங்கள இளைஞர்களைக் கொன்றதும் இதே அரசு தான். இவை எல்லாம் யுத்த முனையில் கூட அல்ல. புலியைப் போன்ற படுகொலைகளே. இதே பேரினவாதம் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்திய படுகொலை, 20000 முதல் 40000 பேரைக் காவுகொன்றது. இப்படி ஒரு கொலைகார பாசிசக் கும்பல், புலிப் பாசிசத்தை ஒழிப்பது என்று கூறுவதும், அதை ஆதரிப்பதும் புலியெதிர்ப்பு அரசியல் விபச்சாரமாக உள்ளது.


உதாரணமாக அமைதி சமாதான காலத்தில் (கடந்த ஒரு வருடத்துக்கு முன்னமாக) புலிகள் 300 முதல் 1000 பேரைக் கொன்றனர் அல்லது கடத்திச் சென்றனர். இதன் பின்பான அமைதியும் சமாதானமும் கொண்ட யுத்த சூழல் காலத்தில், கடந்த ஒரு வருடத்தில் சிங்கள பேரினவாத பாசிசம் கடத்தி காணாமல் போனோர் தொகை 1000கும் மேலாகும். மோதலற்ற சூழலில், இனம் காணப்பட்டு பேரினவாத பாசிசத்தால் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் மேலாக உள்ளது. இதை எல்லாம் இன்று பேரினவாதம் தான் செய்கின்றது. இதை புலியெதிர்ப்புக் கும்பல் எதிர்ப்பதில்லை, மாறாக ஆதரிக்கின்றது. பாசிச ஒழிப்பின் நட்பு சக்தியின், இச் செயல்கள் தான் பாசிசத்தை ஒழிப்பதற்கான இவர்கள் முன் உள்ள ஒரே வழியாகும்.


புலியெதிர்ப்புக் கும்பலின் எந்த இணையம், அண்மைக்காலமாக நடக்கும் கடத்தல், மற்றும் கொலைக்காக அரசைக் குற்றம் சாட்டினர்? அரசின் கூலிக்கும்பலாக திரியும் கருணா முதல் பலரும் நடத்தும் கொலைகள், ஆள் கடத்தல்கள் கப்பம் போன்றவற்றை யார் சுட்டிக்காட்டி கண்டித்தனர்? இவர்கள் அதைக் கண்டிக்கவும், சுட்டிக்காட்டவும் மாட்டார்கள். இந்த பாசிச கொலைகார கும்பல்கள் நடத்தும் அரசியல் கொலை வெறியாட்டம், புலிப் பாசிசத்தை ஒழிக்கும் போராட்டத்தின் ஒரு அம்சமாக இவர்கள் முன் உள்ளது. இவர்கள் தான், இவர்களின் பாசிச ஒழிப்பில் துணை நிற்கும் சக்திகள் என்ற வகையில், அதை பாதுகாப்பது இவர்களின் அரசில் சாரமாகும்.


புலிப் பாசிசத்தை எப்படி ஒழிப்பது என்றால், இது போன்ற இனம் தெரியாத படுகொலைகள் மூலமும், புலிகளை கொல்லும் அரசையும் அதையொத்த கும்பல்களின் நடவடிக்கையை ஆதரிப்பதிலும் தான் இவர்களின் அரசியல் உள்ளது. இதை விட மாற்றாக என்னதான், புலிப் பாசிச ஒழிப்பு வேலைத்திட்டம் என்று இவர்களிடம் தனியாக உள்ளது?


புலிப்பாசிச ஒழிப்பில் உங்களுடைய இந்த அரசியல் வழியை நாங்கள் அங்கீகரிப்பது கிடையாது. அதேபோல் புலிக்கு பதில் மற்றொரு பாசிட்டுகள் வருவதையும் நாம் அங்கீகரிப்பதில்லை. இதை புலி ஆதரவாக அல்லது புலி சார்புள்ளதாக காட்ட முனைவது நகைப்புக்குரியது. கடந்த 25 வருடத்தில், 1980 முதலாகவே நாம் அல்லது நான் இந்த புலிப்பாசிசத்தை தொடர்ச்சியாக விமர்சித்தளவுக்கு, யாரும் இது வரை விமர்சித்தது கிடையாது. இந்த விடையம் தொடர்பாக 1990 க்கு பின் அண்ணளவாக 1000 கட்டுரைகளுக்கு மேல் எழுதியுள்ளேன். முக்கிய அனைத்து நடவடிக்கைகளையும் விமர்சனத்ததுக்கு உள்ளாக்கியுள்ளோம். நாங்கள் உங்களைப் போல் கனவு கண்டு திடீரென எழுந்தவர்கள் அல்ல.


திடீர் கனவு கண்டு எழுபவன் தான், மக்களை கண்டு கொள்வதில்லை. வாயில் வந்த மாதிரி உளறுவதே, இவர்களின் அரசியலாகும். இந்த அரசியல் உளறலைப் பார்ப்போம் "இதன் மூலம் நேரடியாகவே புலி எதிர்ப்பென்ற வகைக்குள் தங்களை அடக்க வேண்டாம் என்றும் கோருகின்றார்கள். அப்படியானால் இவர்கள் யார்? புலி எதிர்ப்புக்கும் புலி ஆதரவுக்கும் இடையிலிருப்பதாக கூறும் இவர்கள் யார்? புலி எதிர்ப்புக்கும் புலி ஆதரவுக்கும் இடையில் என்ன இருப்பதாக இவர்கள் கூற முற்படுகின்றனர்? ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் நடுவில் எந்தக்கருத்தோட்டத்தை புகுத்த விளைகின்றனர்?" ஏதோ புத்திசாலித்தனமாகவும், தர்க்கமாக விவாதிப்பதாகவும் எண்ணிக் கொண்டு, இப்படி உளற முடிகின்றது. சொந்த பாசிசக் கோட்பாட்டை இதைவிடவும் அழகாக யாரும் வைக்க முடியாது. இந்த பாசிசத்தை, இந்த மக்கள் விரோத நிலையை நாம் புரிந்து கொள்ள முனைவோம்.


"புலி எதிர்ப்புக்கும் புலி ஆதரவுக்கும் இடையில் என்ன இருப்பதாக" கேட்கின்றனர்? இதை இப்படியும் கூறலாம். புலி எதிர்ப்புக்கும் சிங்கள பேரினவாதத்துக்கும் இடையில் என்ன இருப்பதாக கருதுகின்றீர்கள்? உள்ளடக்க ரீதியாக இதைத்தான் வெளிப்படுத்துகின்றது. இந்தக் கேள்வியை புலியும் கேட்கமுடியும், புலி எதிர்ப்பும் கேட்க முடியும். பாவம் பரிதாபத்துக்குரியவர்கள். "புலி எதிர்ப்புக்கும் புலி ஆதரவுக்கும் இடையில் என்ன இருப்பதாக" கருதுகின்றனர் என்று கேட்பவர்கள் , அங்கு மக்கள் இருக்கின்றனர் என்பதை இவர்கள் காண்பதில்லை.


புலி எப்படி மக்களுக்கு எதிராக இருக்கின்றது என்பதை முதலில் இவர்கள் காண்பதில்லை. அந்த வகையில் மக்களின் நலனை உயர்த்தத் தவறுவதன் மூலம், இவர்கள் மக்களுக்கு எதிராக இருக்கின்றனர். இதனால் இடையில் என்ன இருக்கின்றது என்று தெரியாதது போல் கேட்கின்றனர். இடையில் மக்கள் இருக்கின்றனர் என்பதுவும், மக்களுக்காக போராடுவதையே நாங்கள் முன்னிலைப்படுத்தியும் நிற்கின்றோம்.


புலி ஆதரவு எப்படி மக்களுக்கு எதிராக இருக்கின்றதோ, அது போல் புலியெதிர்ப்பும் மக்களுக்கு எதிராக எதார்த்ததில் இருக்கின்றது. புலியெதிர்ப்பு மக்களுக்கு எந்த வகையில், எப்படி ஆதரவாக இருக்கின்றது என்பதைக் காட்டமுடியாது. அதனால் மக்கள் பிரச்சனையை அவர்கள் விவாதிக்க மாட்டார்கள். அதே புலி அரசியல், புலிக் கொள்கை, புலிக் கோட்பாடுகள், இதை விட வேறு எதுவும் இவர்களிடம் கிடையாது. இதை மேலும் விளங்கிக் கொள்ள, புலியெதிர்ப்பு என்பது, புலிக்கு எதிரான அனைத்தையும் சார்ந்து நிற்றலை குறிக்கின்றது. ஏகாதிபத்தியம் முதல் இலங்கை பேரினவாதம் வரையான அவர்களின் அரசியல் பொருளாதார பாசிச செயல்பாட்டை ஆதரிப்பதும், அதை நியாயப்படுத்துவதும், அதற்கு மண்டியிட்டு வாலாட்டுவதும் தான் புலியெதிர்ப்பு. இதற்கும் மக்களுக்கும் என்ன தொடர்பு?


மக்கள் நலனை முன்வைப்பதே எங்கள் கருத்துக்கள். இவ்விரண்டுக்கும் எதிராக உள்ளது. மக்கள் நலன் என்னவென்று சில மக்கள் விரோத புல்லுருவிகள் ஆச்சரியமாகவும், அதே நேரம் இது ஒரு அதிசயமானதாகவும் கேட்கின்றனர். மக்கள் நலன் என்பது என்ன? நான் எழுதிவரும் மற்றொரு கட்டுரையான, கருணா எப்படி மக்கள் விரோதி என்ற கட்டுரை, அதை தனியாக ஆராய்கின்றது. அப்போது அங்கு அதை அம்பலப்படுத்துவோம்.


"பாசிசத்தை நிர்மூலமல்லவா செய்யவேண்டும்." என்ற உங்கள் வாதத்தை எடுத்தால், ஏன் எதற்கு நிர்மூலம் செய்யவேண்டும்? இந்த கேள்விக்கான பதிலை நீங்கள் தர முடியாது. புலிப் பாசிசத்தை எதிர்கொள்வது என்பது, உங்கள் வீட்டுச் சொத்தல்ல. புலிப்பாசிசம் தமிழ் மக்களின் வாழ்வை அழிக்கின்றது. அது எப்படி அழிக்கின்றது. தமிழ் மக்களின் அரசியல் பொருளாதாரம் என அனைத்தையும் அழிக்கின்றது. இந்த வகையில் இந்த பாசிசத்தை எதிர்கொள்வது என்பது, மக்களின் வாழ்வுக்கான அடிப்படையாகும். பாசிசத்தை மக்கள் தான் எதிர்கொள்ள முடியும். தனிமனிதர்கள் இதில் ஒரு அங்கமே ஒழிய, இதற்கு வெளியில் மற்றொரு பாசிட்டுகளுடன் சேர்ந்து இதைக் களையப் போவதாக கூறுவதும், கட்டுரைகளை எழுதுவதும் மக்களுக்கு எதிரான ஒரு பாசிச எதிர்ப்புரட்சிதான்.


மக்களை விட்டுவிட்டு, மக்களை அவர்களின் வாழ்வு சார்ந்த விடையங்கள் மீது அணிதிரட்ட முயலாது, எப்படித்தான் இந்த புலியெதிர்ப்புக் கும்பல் பாசிசத்தை ஒழிக்கமுடியும். உண்மையில் மற்றொரு பாசிட்டுகளின் விபச்சாரத்துக்கு பாய் தான் விரிக்கமுடியும். கருணா என்ற பாசிச கும்பலுக்கும், ஜே.வி.பியின் இனவாதத்துக்கும், இது போன்ற மக்கள் விரோத செயல்கள் அனைத்துக்கும், அதாவது புலிகள் அல்லாத அனைத்துக்கும் மக்கள் அல்லாத அனைத்துக்கும் பாய்விரித்து விபச்சாரம் செய்வதைத் தான், பாசிச ஒழிப்பாக, ஜனநாயக குரலாக, மாற்றுக் கருத்தாக காட்ட முனைகின்றனர். மக்களுக்கு இதற்கு வெளியில் எதையும் இவர்கள் சொல்ல இருப்பதில்லை. இதனால் நாங்கள் தனித்துவமாக மக்கள் வாழ்வியல் பிரச்சனையை முன்வைக்கின்றோம்.


எமது பாசிச ஒழிப்பு என்பது, மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சனை ஊடாக அதைக் களைவதை முன்வைக்கின்றது. இந்த பாசிச ஒழிப்பு என்பது புலிப் பாசிசத்தை மட்டுமல்ல, அதற்குப் பதிலீடாக வர முனையும் புலியெதிர்ப்பு பாசிசத்தையும் ஒழிப்பதையும் கோருகின்றது.


"ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் நடுவில் எந்தக்கருத்தோட்டத்தை புகுத்த விளைகின்றனர்?" இது ஒரு நல்ல எடுப்பான தர்க்கம் தான். ஜனநாயகம் என்றால் என்ன? பாசிசம் என்றால் என்ன? என்ற கேள்வி இங்கு அடிப்படையாது. பாசிசம் என்பதை வெளிப்படையான ஒடுக்குமுறையைக் குறித்து மட்டும் காண்பது, அரசியல் தெரியாத அப்பாவித்தனமாகும். மக்களை அடக்கியாள பாசிசம் ஏன் எதற்கு ஒரு ஆளும் வாக்கத்துக்கு அவசியமாகின்றதோ, அதேபோல் இந்த "ஜனநாயகம்" ஆளும் வர்க்கத்துக்கு தேவைப்படுகின்றது.


"ஜனநாயகம்" ஒரு சமூக அமைப்பில் இருப்பதாக கூறும் போது, அங்கு "ஜனநாயகம்" மறுக்கப்படுவதாகவே அர்த்தம். அனைவருக்கும் "ஜனநாயகம்" இருந்தால், ஜனநாயகம் என்ற சொல் அர்த்தமிழந்து விடும். அதாவது "ஜனநாயகவாதி", "ஜனநாயக அரசு" என்று கூறுவது பைத்தியக்கார செயலாகிவிடும். "ஜனநாயகம்" மறுக்கப்படும் போது தான், "ஜனநாயகம்" இருப்பதாக பீற்றப்படுகின்றது. உண்மையில் "ஜனநாயகத்தை" அனைவருக்கும் மறுத்தல் தான் "ஜனநாயகம்" எனப்படுகின்றது . "ஜனநாயகம்" மீதான நெருக்கடி தான் பாசிசமாக மாறுகின்றது. "ஜனநாயகத்தை" பாதுகாப்பதாக கூறிக் கொண்டு அதை மறுக்கும் சமூக அமைப்பின் நெருக்கடிதான் பாசிசம். போலியான "ஜனநாயகத்தைக்" கொண்டு மக்களை சுரண்டி ஆளமுடியாது என்ற நிலையில் தான், பாசிசமாக வெளிப்படுகின்றது.


பாசிசம், "ஜனநாயகம்" பற்றி ஒரு தெளிவான உண்மை இது. இந்த இடத்தில் புலியெதிர்ப்புக் கும்பல் "ஜனநாயகத்தை" கொண்டுள்ளதா எனின் அதுவும் கிடையாது. அதுவும் பாசிசம் தான். புலியை பாசிசமாக இருப்பதாக கூறிக் கொண்ட, மற்றொரு பாசிசக் கும்பல் தான் புலியெதிர்ப்பு. புலியின் மக்கள் விரோத அரசியலையும், அதன் பொருளாதார கொள்கையையும் விமர்சிக்காது அதை முன்னெடுக்கும் யாரும், பாசிசத்தின் எடுபிடிகள் தான். புலியின் அதே கொள்கையைக் கொண்ட கும்பல் தான் புலியெதிர்ப்பும். புலிபாசிசத்தின் அனைத்துக்கும் தோற்றுவாயாக இருப்பது, அதன் அரசியல் பொருளாதார கொள்கை தான். இதையே கொண்டுள்ள மற்றவர்களுக்கு அதிகாரம் இல்லாமையால், அவர்களின் பாசிசம் அப்பட்டமாக வெளிப்படுவதில்லை. ஆனால் கருணா கும்பல் முதல் இந்தியாவின் கூலிப்படையாக இயங்கிய ஈ.என்.டி.எல்.எல், ஈ.பி.ஆர்.எல்.எப் முதல் பலரும் இதை ஏற்கனவே நிறுவியவர்கள். மக்களின் அன்றாட வாழ்வியல் போராட்டத்தில் இணங்கி நிற்காத யாரும், ஆயுதத்தை ஏந்தும் போது அவர்கள் பாசிட்டுகளாக இருப்பது அதன் சிறப்பு பண்பாகும்.


"தாங்கள் மாத்திரம்தான் ஏதோ அங்கீகாரம் பெற்ற "இடது" என்கின்ற நினைப்புடன்" என்ற வாதம், உள்ளடகத்தில் எம்மீது அதை ஏற்றுக்கொள்கின்றது. நாங்கள் விளக்கம் தரவேண்டிய அவசியம் கிடையாது. "இடது" குறைந்தபட்சம் ஏகாதிபத்திய மற்றும் அரசை எதிர்ப்பதை அடிப்படையாக கொண்டு, மக்களை சார்ந்து நிற்க முயல்தலாகும். இதைக் கொண்டிராத யாரும், தம்மை இடது என்று கருத முனைவது, கருதுவதும் மக்களின் முதுகில் குத்தும் கயவாளிப் பயல்களின் இழிந்த நடத்தையாகும்.


"புலிகளை திருத்த வேண்டுமென்று கருதும் இவர்கள்," என்கின்றனர். நாங்கள் உங்களைப் போன்ற சீர்திருத்த வாதிகள் அல்ல. மாறாக புரட்சியாளர்கள், அதாவது கம்யூனிஸ்ட்டுகள். இந்த அமைப்பினை முழுவதையும் மாற்றி அமைக்க விரும்புவர்கள். இதில் புலிகள் என்ன, யாராக இருந்தாலும், அனைத்து மக்கள் விரோதக் கருத்துகளையும் மறுப்பவர்கள். மக்கள் அதிகாரம், அதாவது உழைப்பவனுக்கு தான் அதிகாரம் என்ற அடிப்படையில், அனைத்து சமூகக் கொடுமைகளையும் மறுப்பவர்கள்.


புலிகள் திருந்த வேண்டும் என்று நாம் தவம் இருப்பதில்லை. உங்களைப் போல் புலிகள் அல்லாத பன்றிகளுக்கு நாய்களைப் போல் வாலைக் குழைப்பவர்கள் அல்ல. நாங்கள் புலிகளை விமர்சனம் செய்கின்ற போது, அந்த அமைப்பில் இணைந்துள்ள, அந்த கருத்தின் செல்வாக்குக்கு உட்பட்ட ஒவ்வொரு மனிதனின் சிந்தனையையும், மக்கள் நலனில் இருந்து பார்க்க கோருகின்றோம். மக்களை சமூக நோக்கில் இருந்து சிந்திக்கத் தூண்டுவதன் மூலம், அவர்களை மக்களின் பக்கம் வென்று எடுத்தல், மக்கள் சார்ந்து நிற்கும் உள் முரண்பாட்டை வளர்த்தல் போன்ற அரசியல் வழி மூலம், சரியான அரசியலுக்கு புலியை அல்ல அதன் ஒவ்வொரு உறுப்பினரையும் வென்று எடுக்க முனைகின்றோம். இதை சீர்திருத்தம் என்பதும், திருத்த முனைவதாக கூறுவதும் அரசியல் அபத்தம். இந்த வழியைத் தான் புலியெதிர்ப்பு மீதும் செய்கின்றோம். சமூகத்தின் அனைத்துக் கூறுகளிலும், அனைத்து முரண்பாடுகளிலும் ஒரு போராட்டத்தை நடத்துவதன் மூலம் தான், ஒரு மக்கள் இயக்கத்தை கட்டமுடியும்.


புலிகளை திருத்தவே இதை முன்வைப்பதாக நீங்கள் கூறுவதும் கருதுவதும், உள்ளடகத்தில் மக்கள் மீதும் சமூக உறுப்புகள் மீதான உங்கள் நம்பிக்கையீனத்தில் இருந்தும் பிறப்பதாகும். இன்று பாசிச ஒழிப்பின் பெயரில் பேரினவாதம், கடத்திச் செல்வதையும் கொன்று போடுவதையும் கண்டும் காணாது ஆதரிக்கின்ற நீங்கள், புலியில் 20000 உறுப்பினர்களை கொன்று ஒழிக்கும் பாசிச ஓழிப்பையே மறைமுகமாக முன்வைக்கின்றீர்கள். 20000 புலிகள் இறக்க வேண்டும் என்றால், குறைந்த பட்சம் ஒரு இலட்சம் தமிழ் மக்கள் இறக்க வேண்டும். இது உங்கள் பாசிச ஒழிப்பு வழி. நாங்கள் பாசிச ஒழிப்பில் புலி உறுப்பினர்களை அரசியல் ரீதியாக தெளிவுபடுத்தி வென்று எடுத்தல் என்ற வழியில், மக்களை அதிகாரத்துக்காக போராடுவதன் மூலம், தமது குழந்தைகளை பாசிசத்துக்கு எதிராக போராட வைப்பதன் மூலம் தான் பாசிசத்தை ஒழிக்கமுடியும்.


உங்களைப் போல் மக்களின் எதிரிகளான அரசிடமோ, அன்னிய சக்திகளிடமோ பாசிச ஒழிப்பை நாங்கள் முன்வைப்பவர்கள் அல்ல. சமூக இயக்கத்தின் அனைத்துப் போக்குகளையும் விமர்சிப்பதன் மூலம், அதில் சமூகத்தை சிந்திக்க வைப்பதன் மூலம், நடைமுறைப் போராட்டத்துக்கு வழிகாட்டுகின்றோம்.


"" "புலிகளை முற்று முழுதாக அழிப்பது என்பது தமிழ்த்தேசிய விடுதலைப்போராட்டத்தை முற்றுமுழுதாக அழிப்பதாகிவிடும்".. " என்ற வாதம், இதன் முன்பின் பகுதியை வெட்டிவிட்டு எடுத்துக்காட்டுவதாகும். புலிகளை அழிப்பது என்பது, பேரினவாதத்தை அழிப்பதுடன் தொடர்புடையது. ஒன்றை மட்டும் அழித்தல் என்பது, நடைமுறையில் சாத்தியமற்றது. இவை இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்கின்றது. இரண்டையும் அழிக்காது, ஒன்றை மட்டும் அழித்தல் என்பது, புலி மற்றும் புலியெதிர்ப்பின் அரசியலாக உள்ளது. புலி பேரினவாதத்தை அழிப்பதைப் பற்றி மட்டும் பேசுகின்றது. புலியெதிர்ப்பு புலியை அழிப்பதைப் பற்றி மட்டும் பேசுகின்றது. இவர்கள் பேச மறுப்பது, மக்களின் நலன்களுக்கு எதிரான அனைத்தையும் அழிப்பதைப் பற்றி. நாங்கள் இரண்டையும் பற்றியும், மக்களுக்கு எதிரான அனைத்தையும் அழிப்பது பற்றி பேசுகின்றோம்.


சரி இங்கு புலியை மட்டும் அழித்தல் என்பதில் கூட, தமிழ் பேசும் மக்களின் பிரச்சனையை கையிலெடுக்காது, அதை மறுத்து நிற்றல் என்பது புலியெதிர்ப்பு அரசியல் சாரமாகும். பேரினவாதத்தை அழித்தலை முன்னெடுக்காது, அந்த அரசியல் உள்ளடகத்தில் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கையை மறுத்து முதுகில் குத்துவதாகும். இந்த வகையில் தமிழ் மக்களின் நியாயமான விடுதலைப் போராட்டத்தை அழித்தலாகும். புலிகள் அழிகின்ற போது, அந்த இடத்தில் தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்தை முன்னெடுக்காதிருப்பதன் மூலம் , மக்கள் அதிகாரத்துக்கான போராட்டத்தை முன்னெடுக்காத நிலையில், தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை முற்றாக அழித்தலாகும். இதைத்தான் புலியெதிர்ப்பு செய்கின்றது. மக்கள் மேல் புலிக்குப் பதிலாக புதிய ஒடுக்குமுறையை உருவாக்குகின்ற அரசியல் செயலைத் தான் புலியெதிர்ப்பு செய்கின்றது.


இதை நியாயப்படுத்தும் நீங்கள் "தமிழ்த்தேசியத்தின் மீதான அளவற்ற காதலால் (தீவிர தேசிய வாதம்)" என்றால், அதை நாங்கள் மறுபவர்கள் அல்ல. புலிகள் தேசியத்தை என்றும் முன்னெடுத்தது கிடையாது. உங்களைப் போல், மற்றைய இயக்கங்களும் அதை முன்னெடுத்தது கிடையாது. தேசியவாதம் என்பது தமிழ் தேசியமாக இருந்தாலும் சரி, இலங்கைக்கான தேசியமாக இருந்தாலும் சரி, உள்ளடக்கத்தில் அது ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதை அடிப்படையாகக் கொண்டது. அதற்கு ஆதரவான சக்திகளை எதிர்ப்பதாக உள்ளது. இந்த வகையில் அந்த தேசியத்தை நாம் முன் வைப்பதில் தீவிரமானவர்கள் தான். இதை புலியென்று முத்திரை குத்துவது, அப்படி இட்டுக்கட்டுவது, உங்களுக்கே உரிய அரசியல் இழிதனமாகும்.


புலிப் பாசிசம் தேசியத்தின் எந்த சமூக கூறையும் கொண்டு இருக்கவில்லை. அதேபோல் புலியெதிர்ப்பு கும்பலிடமும் அது கிடையாது. அதாவது மக்களின் நலன் சார்ந்த கூறுகள் எதுவும் கிடையாது. அதேபோல் இந்த இரண்டு கும்பலிடமும், முரணற்ற ஜனநாயக பண்பும், அந்த அரசியலும் கூட கிடையாது. மாறாக ஏகாதிபத்திய சார்பு நிலையே இவர்களின் அரசியலாக உள்ளது. துரதிஸ்ட்டவசமாக இந்த ஏகாதிபத்திய கும்பல்களுடன், நாம் அரசியல் வாதம் நடத்த வேண்டியளவுக்கு, சமூக நலன் சார்ந்த அறிவுத் தளத்தில் அரசியல் தரம் தாழ்ந்து வீழ்ந்து மண்டியிட்டு கிடக்கின்றது.


இவர்கள் எடுத்துக் காட்டும் மற்றொரு வாதம் " "மக்கள் நலன், மக்கள் நலன்" எனக்கூறிவிட்டு, முழு இலங்கை மக்களினதும் விரோத இயக்கமான வேலுப்பிள்ளை பிரபாகரனை தலைமையாகக் கொண்ட புலிகளின் பிடிகளிலிருந்து மக்களை விடுவிக்கப்போராடும் ஜனநாயக சக்திகளைப்பார்த்து புலியெதிர்ப்பென்றும், இன்னும் சொல்லப்போனால் ஆதாரங்கள் எதுமில்லாமல் இலங்கை அரசு ஆதரவென்றும் பொய்க்கதைகள் புனைகின்றார்கள்." புலியெதிர்ப்பு கும்பல் "பிரபாகரனை தலைமையாகக் கொண்ட புலிகளின் பிடிகளிலிருந்து மக்களை விடுவிக்கப்போராடும் ஜனநாயக சக்திகளைப்பார்த்து" என்று தமக்குத் தாமே உருவாக்கிக் கொண்ட, கற்பனையில் இதைக் கட்டமைக்கின்றனர். புலியெதிர்ப்பு அணி மக்கள் நலன் கொண்ட சக்தியாக தம்மைக் கூறிக்கொள்வது வேடிக்கையானது. புலியைப் போன்ற அதே அரசியலைக் கொண்டதும், பல் இழந்ததுமான கிழட்டுப் புலிகள். அதே புலி அதிகாரத்துக்காக அலைகின்ற மக்கள் விரோதிகளே, இந்த புலியெதிர்ப்புக் கும்பல். "மக்களை விடுவிக்கப்போராடும் ஜனநாயக சக்திகளைப்பார்த்து" என்கின்றனர். எப்படி என்கின்றீர்களா? ஏகாதிபத்தியத்தினதும், பேரினவாதத்தினதும் கால்களை நக்கி மக்களை விடுவிக்கப் போகின்றார்களாம்.


நாங்கள் இதற்கு எதிரானவர்கள். ஒடுக்கப்பட்ட எந்த மக்கள் நலனை முன்னெடுக்கும் யாருடனும், அதில் எமக்கு முரண்பாடுகள் இருந்தாலும், அதை அங்கீகரிக்கத் தயாராகவுள்ளோம். மக்கள் நலன் என்ன என்று ஏகாதிபத்தியம் கூறுவதை கவ்விக் கொண்டு குலைக்கும், எந்த நாய்களுடனும் சமரசம் செய்துகொள்ள நாம் தயாராகவில்லை. மக்களின் எதிரிகள் தான், புலியெதிர்ப்பின் பின் உள்ள ஏகாதிபத்திய வேட்டை நாய்கள். மக்களின் எதிரிகளுடன் கூடிக் கும்மாளம் அடிக்கும் நீங்கள், எப்படி மக்கள் நலனுக்காக போராடமுடியும்? ஏகாதிபத்தியம் மக்கள் நலன் கொண்ட ஒன்றா என்ற கேள்விகளுக்கு முதலில் பதிலளியுங்கள். எல்லாவற்றையும் புலியாக பார்த்து, அதற்குள் அனைத்தையும் வகைப்படுத்துவது தான், உங்களது இழிந்து கந்தலாகிப் போன அரசியல். தமிழ் மக்களின் போராட்டம் வேறு, புலிகளினது போராட்டம் வேறு என்பதை இனம்பிரிக்க முடியாத புலியெதிர்ப்புக் கும்பல் எப்படித்தான் மக்களுக்காக போராடமுடியும். புலிக்கு எதிராக மக்களின் போராட்டத்தை முன்னெடுக்காத வரை, ஜனநாயகத்தின் கடைந்தெடுத்த எதிரிகள் தான் புலிஎதிர்ப்புக் கும்பலும்.


அடுத்த இந்தக் கும்பல் கண்டுபிடிக்கின்றது "ஆதாரங்கள் ஏதுமில்லாமல் இலங்கை அரசு ஆதரவென்றும் பொய்க்கதைகள் புனைகின்றார்கள்."ஆதாரம் உங்கள் கருத்துக்கள், செயல்கள், உங்கள் அரசியல் நடவடிக்கைகள் தான். பாசிச ஒழிப்பில் ஈடுபடுவதாக கூறும் இலங்கை அரசு மற்றும் ஏகாதிபத்தியத்தின் பின்னால், நீங்கள் அணிகட்டி நிற்பது மட்டும் போதுமானது. அவர்களின் கருத்தை முன்னிலைப்படுத்தி, அது சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுவது போதுமானது. உங்களுக்கும் அவர்களுக்கும் ஏதாவது நேரடி தொடர்புகள் உண்டா என்பது, இங்கு இரண்டாம் பட்சமானது. உங்கள் கருத்துத் தளம், பாசிச ஒழிப்பை முன்வைக்கும் உங்கள் வழிமுறை மட்டும் போதுமானது. மக்களை அணிதிரட்டி, அவர்களின் அதிகாரத்துக்காக போராடாத அரசியல் செயல்பாடுகள் உங்களையும் உங்கள் கும்பலையும் இனம் காட்டிவிடுகின்றது.


"இந்த மக்கள் நலன் அதிகாரிகள் வெறும் குழப்பல்வாதிகள். புலிகள் தொடர்பாகவும் இலங்கையிலுள்ள தேசிய இனங்களின் பிரச்சனை தொடர்பாகவும் சரியான நிலைப்பாடு எடுக்கத்தெரியாதவர்கள்." நல்ல வேடிக்கையான வாதம். குழப்பல்வாதிகள் என்பது, உங்கள் பார்வையில் சரியானதே. எதைக் குழப்புகின்றோம்? புலியெதிர்ப்பின் பெயரில் மக்கள் விரோத செயற்பாடுகளை விமர்சித்து அதை சிந்திக்கத் தூண்டுவதன் மூலம், பிற்போக்குத் தளங்கள் நொருங்குகின்றது. இதன் எதிர்வினைதான் இப்படி கூற வைக்கின்றது. புலியெதிர்ப்பின் பெயரில் கட்டப்படும் பொய்யை, அதன் மக்கள் விரோத கூறுகளை அம்பலப்படுத்தும் எமது சரியான நிலையைத் தான் இவர்கள் "வெறும் குழப்பல்வாதிகள்" என்று கூறுவதால், எமது சரியான நிலை தெளிவுபடுகின்றது.


"இலங்கையிலுள்ள தேசிய இனங்களின் பிரச்சனை தொடர்பாகவும் சரியான நிலைப்பாடு எடுக்கத்தெரியாதவர்கள்." என்கின்றனர். இதில் புலியெதிர்ப்பு நிலைப்பாட்டை நீங்கள் முதல் வையுங்கள். யார் தெளிவான நிலைப்பாட்டை எடுக்காதவர்கள் என்பது தெளிவாகும். எமது நிலைப்பாடு தெளிவானது. இது எமது எழுத்து முழுக்க செறிந்து காணப்படுகின்றது. உங்களைப் போல் இதை வெறும் வார்த்தையில் அலட்டி, மக்களின் முதுகில் குத்தி, காலத்துக்கும் நேரத்துக்கும் ஏற்ப அரசியல் பிழைப்பு நடத்துபவர்கள் அல்ல.


"இப்போது பாசிஸம் என்ற தடையை அகற்றாமல் இலங்கையிலுள்ள தேசிய இனங்களின் பிரச்சனை முற்றுமுழுதாக தீர்க்க முடியாது என்ற நிலைக்கு நாங்கள் வந்தடைந்துள்ளோம் என்பதே யதார்த்தம்."பாசிச தடையை மட்டுமல்ல, பேரினவாத தடையை அகற்றாமல் தேசிய இனப்பிரச்னையை தீர்க்கமுடியாது. இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டது. ஒன்றையொன்று சார்ந்து, ஒன்றில் மற்றொன்று தங்கி செயல்படுகின்றது. பேரினவாதமே மற்றொரு பாசிசம் தான். புலியெதிர்ப்பு அதனை இல்லை என்பதே அதன் அரசியலாகும். இலங்கையில் அதிகாரத்தில் பிரதானமாக இரண்டு பாசிச சக்திகள் உள்ளனர். ஒன்று அரசு, மற்றொன்று புலி. அரசுக்கு பின்னால் பல சிறிய குட்டி பாசிசப் புலிகள் உள்ளனர். அதிகாரப் பிரிவுகளாக இரண்டு பாசிச கூறுகளும், அதைவிட கருத்துத் தளத்தில் பாசிச கருத்துகளும், புலி, புலியெதிர்ப்புப் பேரினவாதம் என்று புளுத்துக் கிடக்கின்றது. இவை அனைத்தையும் ஒழிக்காது, தேசிய இனப்பிரச்சனையை முற்றுமுழுதாக தீர்க்க முடியாது. இதற்கு எதிரான போராட்டத்தை மறுப்பது, பாசிசத்தை பாதுகாப்பது தான்.


கொல்லைப்புறமாக பாசிசத்தை பாதுகாக்கும் வகையில் "இலங்கையிலுள்ள தேசிய இனங்களின் பிரச்சனையை தீர்ப்பதற்கான ஓரளவிற்கேனும் சாதகமான சூழலையே ஏற்படுத்தியுள்ளது. தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள இச்சாதகமான சூழலை, இலங்கையிலுள்ள தேசிய இனங்கள் நுகர முடியாமல் இருப்பதற்கும் புலிகளே காரணம்." என்கின்றனர்.


மக்களை ஏமாற்றுகின்ற, அதே நேரம் மோசடி செய்கின்ற ஒரு அரசியல் வாதம். பேரினவாத நிலையை தக்கவைக்க, முன்வைக்கின்ற குதர்க்கமான தர்க்கவாதம். புலிகள் இதற்கு தடையாக இருப்பதாக கூறுவது கடைந்தெடுத்த பேரினவாத மோசடி. புலிகளுக்கு வெளியில், ஏன் அந்த பாசிச பேரினவாதக் கும்பலால் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை, ஒரு தலைப்பட்சமாக முன்வைக்கமுடியாது யாரை ஏமாற்றுகின்றீர்கள்! உங்களுடைய விசுவாசமான நக்கிப்பிழைப்புக்கு ஏற்ப கதை சொல்வது, மிக மோசடித்தனமானது. தமிழ் மக்களுக்கு வெளியில், அவர்களுக்கு எதிராக எத்தனையோ ஒடுக்குமுறைகளை ஒருதலைப்பட்சமாக பேரினவாத அரசு கொண்டு வந்துள்ள்து இன்று தமிழ் மக்களுக்கு நியாயமான ஒரு தீர்வை முன்வைப்பதை புலிகள் எப்படி தடுக்கமுடியும். உங்களைப் போன்ற புல்லுருவிகள் வாழ்வதற்காக, இதையும் புலிகளின் பெயரில் சொல்லி நாயாக நக்குகின்றீர்கள் அவ்வளவு தான்.


"எந்தவொரு சமூகத்திலும் பிரதானமாக நிலவும் ஒரு கருத்தோட்டத்திற்கு எதிராக ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கருத்தோட்டங்களும், அவ்வாறான பல்வேறு வகைப்பட்ட கருத்தோட்டங்களை சீர்தூக்கிப்பார்க்கும் மேலும் பல கருத்தோட்டங்கள் நிலவுவது சர்வசாதாரணமானதே. ஆனால் தமிழ் சமூகத்தில் பிரதானமாக புலி எதிர்ப்பு, புலி ஆதரவென இரண்டு பிரதான கருத்தோட்டங்கள்தான் நிலவுவதாக இந்த மூன்றாம் பாதையாளர்களுக்குத் தெரிகின்றது. புலி எதிர்ப்பு, புலி ஆதரவு என்ற இரண்டையும் நிராகரித்து தமது மூன்றாம்பாதையை கவனத்திற்கொள்ளுமாறு, அவரவர்கள் தம்பாணியில் வேண்டுகோள் விடுக்கின்றார்கள். மூன்றாம்பாதையை நிராகரிக்கும் நாலாம் பாதையும், நாலாம்பாதையை நிராகரிக்கும் மேலும் பல நூறு, ஆயிரம் கருத்தோட்டங்களினூடாகவே சரியான கருத்தென்பதை நாம் வந்தடைய முடியும் என்பதை இந்த சித்தம் கலங்கியவர்கள் மறந்து விடுகின்றனர்." இந்த உங்களுடைய வாதம் உங்களுக்கு எதிராகவே மாறுகின்றது. எம்மை புலியென்று முத்திரை குத்தி செயல்படும் உங்கள் அரசியல், இதை மறுபடியும் உங்களுக்கு எதிராக நிறுவுகின்றது. புலி, புலியெதிர்ப்பு என்ற போக்கு, சில அடிப்படைக் கோட்பாடுகளைக் கொண்டு வரையறுக்கப்பட்டது. நாம் மூன்றாவது பாதை இதற்கு வெளியில் வைக்கும் பொது, நாலாவது பாதையைiயும் அதற்கு மேற்பட்ட பாதையையும் நாம் மறுக்கவில்லையே! வர்க்கங்கள் பலவாக உள்ள சமூக அமைப்பில், சமூக முரண்பாடுகள் பலவாக உள்ள அமைப்பில், பல்வேறு கருத்துகளும், அமைப்புகளும் நிலவுவது இயல்பானது. இதில் எந்த சந்தேகமும் எமக்கு கிடையாது. ஆனால் புலி, புலியெதிர்ப்பு என்ற இரண்டு பாதையும் மக்களுக்கு எதிரான அரசியலைக் கொண்டது என்பதும், அதுவே ஆதிக்கம் பெற்று மக்களுக்கு எதிராக உள்ளது என்பதுவும் சந்தேகத்துக்கு இடமற்றது.


"தேனீ இணையத்தளத்தின் அபரீதமான வளர்ச்சியையும் கடந்த ஆறு வருட காலத்தில் தமிழ் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தினையும் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் தொடர்ச்சியாக தேனீ மீது அவதூறுகளையும் வசைகளையும் பொழிந்து வருகின்றனர். புலிகளிலிருந்து புலி அல்லதாவர்களென தங்களைக் கூறிக்கொள்பவர்கள்வரை அவதூறுகளையும் வசைகளையும் பொழிவதில் முன்னிற்கின்றார்கள். தேனீயை வம்புக்கிழுத்து ஜனநாயகக்குரலினை மழுங்கடிக்கும் திட்ட அட்டவணையைக் கொண்டவர்களின் சூழ்ச்சிகளுக்கு தேனீ ஒருபோதும் பலியாகாது. தேனீயைப்போன்றே, தேனீயின் பல இலட்சம் வாசகர்களும் பண்பாடற்றவர்களின் கூச்சல்களை எளிதில் அசட்டை செய்துவிடுகின்றார்கள். தேனீயில் வெளியாகும் கருத்துகளுக்கு விமர்சனப்பண்புடன் தெரிவிக்கப்படும் எதிர்வினைகளுக்கு மாத்திரமே தேனீ பதிலளிக்க கடமைப்பட்டுள்ளது. திரும்பத்திரும்ப ஒரே விடயத்ததை வௌவேறு வசனங்களில் கூறுவது, சும்மா கிறுக்குவதுபோன்று எழுதுவது, திட்டு எழுத்துகள் போன்றவற்றுக்கு தேனீ ஒருபோதும் மதிப்பளியாது." இதுவும் உங்களுக்கு எதிராக மாறுகின்றது. புலியும் இதைத்தான் கூறுகின்றது. புலி இணையங்களும் இலட்சக்கணக்கான வாசகர்களும் உண்டு. இதில் இருந்து நீங்கள் எப்படி தர்க்க ரீதியாக வேறுபடுகின்றீர்கள். மக்களை மந்தைகளாக, அடிப்படை வாழ்வை சாராது உணர்வற்ற செம்மறிகளாக மாற்றி, அவர்கள் மீது செல்வாக்கு செலுத்தி இணையத்தை நடத்துவது, புலி மற்றும் புலியெதிர்ப்பின் அரசியலாகவுள்ளது. புலியைத் திட்டுவது, புலி அல்லாதவர்களை திட்டுவது இந்த இணையங்களின் அரசியலாக உள்ளது.


இவர்கள் கூறுவது போல் "தமிழ் மக்களுக்கு வெறுமனே இலங்கை அரசியல் நிலவரங்கள் தொடர்பான செய்திகளை வெளியிடுவது என்பதற்கும் அப்பால் இலங்கை அரசியல் பிரச்சனைகள் தொடர்பாக ஆழமான கருத்துக்களையும் கொண்டுசெல்ல வேண்டுமெனபதிலும் தேனீ முனைப்பாக செயற்பட்டு வருகின்றது. இலங்கையிலிருந்து புலம்பெயர் சமூகம்வரை மாற்றுக்கருத்துக் கொண்ட அனைவருக்குமே தேனீ களம் அமைத்துக் கொடுத்துள்ளது." இப்படி கூறும் இவர்கள், என்ன அரசியலை மாற்றாக முன்வைக்கின்றனர். புலிகளின் அரசியலை விமர்சிப்பது கிடையாது. புலிகளின் அரசியலை ஒத்த புலியெதிர்ப்பு அரசியல், எதையும் கேள்விக்குள்ளாகி விமர்சிப்பது கிடையாது. புலியெதிர்ப்பு அரசியலை முன்னிலைப் படுத்துகின்றது. புலியெதிர்ப்பு அரசியல் எது, அதுவல்லாதது ஏது என்பதை இவர்கள் முன் கேள்வியாக எழுப்புவோமாயின், இவர்களின் பூசி மொழுகிய அலட்டல் அம்பலமாகிவிடுகின்றது.


புலி, புலி சார்பு கருத்துக்கு கருத்துச் சுதந்திரம் என்ற அடிப்படையில் எப்படி இயங்குகின்றதோ, அதேபோல் புலியெதிர்ப்பு கருத்துக்கே கருத்துச் சுதந்திரம் என்பதையே புலியெதிர்ப்பு கொண்டுள்ளது. இதைத் தவிர, மாற்றுக் கருத்துக்களுக்கல்ல. மாற்றுக் கருத்து என்பது, பல வர்க்கங்களின் வேறுபட்ட கருத்தாகும். ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் கருத்துகளே, உண்மையான சமூகம் சார்ந்த கருத்தாகும். இந்த வகையில் நாம் எமது போராட்டத்தை தொடர்வது தான், மக்களின் உண்மையான விடுதலைக்கான ஒரேயொரு அத்திவாரமாகும்.


Thursday, March 1, 2007

சி.பி.எம்:துரோகிகளா? எதிரிகளா?

சி.பி.எம்:
துரோகிகளா? எதிரிகளா?



நாயோடு படுத்தவன் உண்ணியோடுதானே எழுந்திருக்க முடியும்? தரகுப் பெருமுதலாளிகளோடும் அந்நிய ஏகபோக நிறுவனங்களோடும் கூடிக் குலாவினால் இரத்தக் கறையோடுதானே தரிசனம் தரமுடியும்? ஆம்! கொலைகாரர்களாகக் காட்சி தருகிறார்கள், மே.வங்கத்தை ஆளும் "மார்க்சிஸ்டு'கள். உழைக்கும் மக்களின் அரசு என்று மார்தட்டிக் கொண்ட மே.வங்க "இடதுசாரி' அரசு இன்று இரத்தக் கவிச்சி வீசும் கொலைகார அரசாக நாடெங்கும் நாறுகிறது.


சிங்கூரைத் தொடர்ந்து இப்போது நந்திகிராமத்தில் அடக்குமுறை கொலைவெறியாட்டம். விளைநிலங்களை ஆக்கிரமித்து விவசாயிகளின் வாழ்வுரிமையைப் பறிக்கும் ஏகாதிபத்திய சேவைக்குப் பெயர் "தொழில் வளர்ச்சி'! அதை மூடிமறைக்க கோயபல்சையும் விஞ்சும் அண்டப்புளுகுகள்; தகிடுதத்தங்கள். பிணங்களின் மீதேறி சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நிறுவுவதில் புதுவேகம்; புதுமோகம்.


ஒருவரல்ல, இருவரல்ல; ஆறு பேர் கொலை. 15 முறை போலீசு துப்பாக்கிச் சூடு; தடியடி, கண்ணீர் புகை வீச்சு, 144 தடையுத்தரவு. ஆளும் வர்க்கக் கட்சிகளையே விஞ்சும் வண்ணம் "மார்க்சிஸ்ட்' கட்சி குண்டர்களின் வெறியாட்டம். வர்க்க விரோதிகள், மக்கள் விரோதிகள் என்று உழைக்கும் மக்களாலேயே குற்றம் சாட்டப்பட்டு காறி உமிழப்படுகிறது, மே.வங்க "இடதுசாரி' ஆட்சி. இதுதான் போலி கம்யூனிஸ்டுகள் ஆளும் மே.வங்கம்.


ஏற்கெனவே சிங்கூரில் டாடாவின் கார் தொழிற்சாலைக்காக 997.1 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து, போராடிய விவசாயிகளை ஒடுக்கி, சமூக பாசிஸ்டுகளாகிக் கொக்கரித்த "மார்க்சிஸ்டுகள்'. இப்போது அதேவழியில் ஹால்டியா வட்டாரத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நிறுவ மூர்க்கமாக இறங்கியுள்ளனர். சிங்கூரில் போராடிய மக்களையும் எதிர்த்தரப்பினரையும் ஒடுக்கியது போலவே, மிருகத்தனமான ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டால் எதிர்ப்புகளை முறியடித்து விடலாம் என்பதுதான் "மார்க்சிஸ்டுகள்' வகுத்துக் கொண்ட உத்தி. ஆனால் இந்த துரோகத்தனம் வெகுவிரைவிலேயே அம்பலப்பட்டு, மறுகாலனியாக்கத்தின் கீழ் போலி கம்யூனிஸ்டுகள் எடுத்துள்ள புதிய கைக்கூலி அவதாரம் நாடெங்கும் சந்தி சிரிக்கிறது.


மே.வங்கத்தின் ஹால்டியா வட்டாரத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நிறுவி மாநிலத்தைத் தொழில்மயமாக்கப் போவதாக "இடதுசாரி' அரசு அறிவித்துள்ளது. இச்சிறப்புப் பொருளாதார மண்டலம் 14,500 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது. இதில் 10,000 ஏக்கர் நிலம் இந்தோனேஷிய சலீம் குழுமத்துக்கும் 4,500 ஏக்கர் நிலம் ருயா குழுமத்துக்கும் தாரை வார்க்கப்படும். இச்சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்காக விளைநிலங்களைப் பறிகொடுக்கப் போகும் கிராமங்களில் ஒன்றுதான் நந்திகிராமம்.


விளைநிலங்களை ஆக்கிரமித்து விவசாயிகளின் வாழ்வுரிமையைப் பறிக்கும் இச்சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு எதிராகக் கடந்த நான்கு மாதங்களாக, இப்பகுதியில் நக்சல்பாரிப் புரட்சியாளர்கள் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு விவசாயிகளை அணிதிரட்டி வந்தார்கள். இதுதவிர, எதிர்த்தரப்பு ஓட்டுக் கட்சிகளும், ஜாமியத் உலேமாஐஹிந்த் எனும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பும், தன்னார்வக் குழுக்களும் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து வந்தன.


இப்பகுதியில் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ. 8 முதல் ரூ. 10 லட்சம் வரை வழங்கப்பட உள்ளதாக சி.பி.எம். கட்சியினரே வதந்திகளைப் பரப்பி வந்தனர். இத்தொகுதியின் "மார்க்சிஸ்ட்' எம்.பி.யான லக்ஷ்மண் சேத், ஏக்கருக்கு ரூ. 4.3 லட்சம் வரை கொடுக்க அரசு தீர்மானித்துள்ளதாகவும், நந்தி கிராமத்தில் பகுதியளவு நிலம் மட்டுமே கையகப்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.


இந்நிலையில், ஹால்டியா வளர்ச்சிக் குழுமம் நந்திகிராம வட்டார வளர்ச்சி அதிகாரி (ஆஈO) அலுவலகத்துக்கு ஜனவரி 2ஆம் நாளன்று, இப்பகுதியில் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நிறுவுவதற்கு நிலங்களைக் கையகப்படுத்த விரைவில் செயல்படுமாறு ஓர் அறிவிப்பை அறிக்கையாக அனுப்பியது. இது, நந்திகிராம வட்டார வளர்ச்சி அதிகாரியின் அலுவலக தகவல் பலகையிலும் ஒட்டப்பட்டது. இதைக் கண்டதும் நந்திகிராம மக்கள் கொதிப்படைந்தனர்.


மறுநாளில் நந்திகிராமத்தை அடுத்துள்ள கர்சக்ரபேரியா கிராமத்தின் பஞ்சாயத்து அலுவலகத்தில் அதிகாரிகள் கூட்டம் நடப்பதைக் கண்ட மக்கள், விளைநிலங்களைக் கையகப்படுத்தவே இக்கூட்டம் நடப்பதாகச் சந்தேகித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு முழக்கமிட்டு போராடினர். அவர்கள் மீது தடியடி நடத்தி வெறியாட்டம் போட்டது மே.வங்க போலீசு. ஆத்திரமடைந்த மக்கள் அப்பஞ்சாயத்து அலுவலகத்தை அடித்து நொறுக்கி, இரண்டு போலீசு வாகனங்களைத் தீயிட்டுக் கொளுத்தினர்.


அடுத்தநாளான ஜனவரி 4ஆம் தேதியிலிருந்து நந்திகிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதோடு, கிராமத்தைச் சுற்றி தடுப்பரண்களை எழுப்பிப் போராட்டத்தைத் தொடர்ந்தனர். சி.பி.எம். கட்சித் துரோகிகளின் வீடுகளை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்த கிராம மக்கள், இப்பகுதியிலுள்ள இரண்டு சி.பி.எம். கட்சிக் கிளை அலுவலகங்களையும் தீயிட்டுக் கொளுத்தினர்.


சோனாசுரா கிராமத்தில், ""நந்திகிராம நிலப்பாதுகாப்புக் கமிட்டி'' எனும் கூட்டமைப்பின் முன்னணியாளர்கள் கூடி போராட்டத்துக்குத் திட்டமிடுவதை அறிந்த சி.பி.எம். குண்டர்கள், அக்கிராமத்தை அடுத்துள்ள தெகாலி கிராமத்தில் இரகசியமாக அணிதிரண்டனர். ஜனவரி 6ஆம் தேதியன்று அதிகாலையில் சோனாசுரா கிராமத்துக்கு 250 பேருக்கும் மேலாகத் திரண்டு வந்த சி.பி.எம். குண்டர்கள். அக்கிராம விவசாயிகளது வீடுகளின் மீது குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தியதோடு, அலறியடித்துக் கொண்டு தப்பியோடிய மக்கள் மீது நாட்டுத் துப்பாக்கியால் சுட்டனர். இப்பயங்கரவாதத் தாக்குதலில் 6 பேர் கோரமாகக் கொல்லப்பட்டனர். சி.பி.எம். குண்டர்களின் கொலைவெறியாட்டத்துக்கு எதிராக ஜனவரி 8ஆம் நாளன்று எதிர்க்கட்சிகள் நடத்திய மாநிலம் தழுவிய கடையடைப்புப் போராட்டத்தின்போதும் போலீசு தடியடி நடத்தியதோடு, துப்பாக்கிச் சூடு நடத்தி அடக்குமுறை வெறியாட்டம் போட்டது.


இத்தனைக்கும் பிறகு, முழுப்பூசணிக் காயை சோற்றில் மறைத்த கதையாக, வீண் வதந்தியைப் பரப்பி திரிணாமுல் காங்கிரசாரும் நக்சல்பாரிகளும் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடுவதாகவும், கொல்லப்பட்டவர்கள் சி.பி.எம். ஆதரவாளர்கள் என்றும் கூசாமல் புளுகுகிறார் மே.வங்க சி.பி.எம். முதல்வர்.


ஆனால், கொல்லப்பட்டவர்கள் அனைவரும் போராடிய விவசாயிகள் என்று நந்திகிராம மக்கள் சாட்சியம ளிக்கின்றனர். அக்கட்சியின் எம்.பி.யாகிய லக்ஷ்மண் சேத், நந்திகிராமத்தில் நிலம் கையகப்படுத்த எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை என்று கோயபல்சையே விஞ்சும் வகையில் அண்டப்புளுகை அவிழ்த்துவிட்டார். சி.பி.எம். கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரான எச்சூரியும், கட்சியின் அதிகாரபூர்வ நாளேடுகளும் இதுதான் உண்மை என்று திரும்பத் திரும்ப வாந்தி எடுத்தன.


ஆனால், இது அண்டப்புளுகை விஞ்சும் ஆகாசப்புளுகு என்பதை மே.வங்க நாளேடுகள், லக்ஷ்மண் சேத் கையெழுத்திட்டு அனுப்பிய அறிக்கையையும், ஹால்டியா வளர்ச்சிக் குழுமம் வெளியிட்டுள்ள அறிவிப்பையும் படத்தோடு செய்தியாக வெளியிட்டு நாறடித்தன. அதன் பிறகே மே.வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, ஹால்டியா வளர்ச்சிக் குழுமம் தன்னிச்சையாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும், அதை உடனே ரத்து செய்யுமாறு ஆணையிட்டுள்ளதாகவும் இப்போது பசப்புகிறார். முழுமையான விவரங்களை வெளியிட்டு விவசாயிகளின் ஒப்புதலோடு மட்டுமே நிலம் கையகப்படுத்தப்படும் என்றும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் உபதேசம் செய்கிறார்.


விவசாயிகளின் ஒப்புதலோடு நிலம் கையகப்படுத்தப்படுமா, ஒப்புதல் இல்லாமல் செய்யப்படுமா என்பதல்ல பிரச்சினை. சிறப்புப் பொருளாதார மண்டலம் எனும் மறுகாலனியாக்கச் சூறையாடலை சி.பி.எம். கட்சி ஆதரிக்கிறதா, எதிர்க்கிறதா என்பதுதான் மையமான கேள்வி.


நேற்றுவரை சிறப்புப் பொருளாதார மண்டலத்தை எதிர்ப்பதாகவும், பின்னர் மனிதமுகம் கொண்ட சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நிறுவப் போவதாகவும் நாடகமாடிய சி.பி.எம். இப்போது, இதர ஓட்டுக் கட்சிகளை எல்லாம் விஞ்சும் வகையில் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டு சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நிறுவுவதில் வெறியாக இருக்கிறது. நேற்றுவரை உழைக்கும் மக்களின் அரசாகச் சித்தரிக்கப்பட்ட மே.வங்க "இடதுசாரி' அரசு. இன்று மே.வங்க உழைக்கும் மக்களாலேயே காறி உமிழப்படுகிறது. பிரபல நாவலாசிரியரான மகாஸ்வேதா தேவி, ""இது பாசிஸ்டு அரசு'' என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறார், மேதாபட்கர். அருந்ததிராய், நீதிபதி சச்சார் என அறிவுத்துறையினரின் கண்டனத்துக்கு ஆளாகி மே.வங்க போலி கம்யூனிஸ்டு அரசு தனிமைப்பட்டுப் போயுள்ளது.


தரகுப் பெருமுதலாளி டாடா கார் தொழிற்சாலை நிறுவுவதற்காக, சிங்கூரில் விளைநிலங்களை ஆக்கிரமித்து, போராடிய மக்களை மிருகத்தனமாக ஒடுக்கிய மே.வங்க இடதுசாரி அரசு, போராட்டங்கள் வலுக்கத் தொடங்கி மம்தா பானர்ஜி தொடர் உண்ணாவிரதம் இருந்தபோது, சிங்கூர் விவகாரம் பற்றி அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சு வார்த்தை நடத்தி இணக்கமாக முடிவை எட்ட விழைவதாக அறிவித்தது. ஆனால், அந்த வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டு டாடா கார் தொழிற்சாலைக்கான கட்டுமானப் பணிகளைத் தொடங்கிவிட்டது. இதற்கெதிரான மீண்டும் போராடிய மக்களைக் கைது செய்து சிறையிலடைத்துள்ளது. இவையெல்லாம் மாநிலத்தின் தொழில் வளர்ச்சியைச் சீர்குலைக்கும் செயல் என்று குற்றம் சாட்டும் சி.பி.எம். கட்சியினர், தமது கட்சி ஊழியர்களை வைத்து எதிர்போராட்டம் ஊர்வலம் என்று மூர்க்கமாக இறங்கிவிட்டனர்.


மறுகாலனியாக்கத்தின் கீழ், புரட்சி சவடால் அடித்துக் கொண்ட சந்தர்ப்பவாதிகளாகவும் துரோகிகளாகவும் வலம் வந்து கொண்டிருந்த போலி கம்யூனிஸ்டுகள், இப்போது மறுகாலனியாக்கத்துக்கு விசுவாசமாகச் சேவை செய்யும் எதிரிகளாக புதிய பரிணாமத்தை எட்டியுள்ளார்கள். இதுவரை போட்டு வந்த போலி முற்போக்கு போலி கம்யூனிச முகமூடிகள் அனைத்தையும் கழற்றி எறிந்துவிட்டு, ஏகாதிபத்தியங்களுக்கும் தரகுப் பெருமுதலாளிக்கும் தொண்டூழியம் செய்வதில் இதர ஓட்டுக் கட்சிகள் அனைத்தையும் விஞ்சி விட்டார்கள் என்பதை சிங்கூர் நந்திகிராம விவகாரங்கள் நிரூபித்துக் காட்டிவிட்டன.


நாற்பதாண்டுகளுக்கு முன்பு மே.வங்கத்தில் கிளர்ந்தெழுந்த நக்சல்பாரி பேரெழுச்சியானது போலி கம்யூனிஸ்டுகளின் துரோகத்தைத் திரைகிழித்துக் காட்டியது. இன்று அதே மே.வங்கத்தில் தொடரும் சிங்கூர் நந்தி கிராம மக்களின் போராட்டங்கள், போலி கம்யூனிஸ்டுகளை உழைக்கும் மக்களின் எதிரிகளாக அடையாளம் காட்டிவிட்டது. போலி கம்யூனிஸ்டு கட்சிகளிலுள்ள புரட்சியை நேசிக்கும் அணிகள் உடனடியாகக் கலகத்தில் இறங்கி, சமூக பாசிஸ்டுகளாகச் சீரழிந்துவிட்ட துரோகத் தலைமையைத் தூக்கியெறிய வேண்டும். அதன்மூலம் மார்க்சிய லெனினியத்தைப் பற்றிப் பாதுகாத்து, மறுகாலனியாக்கத்தை வீழ்த்தும் மகத்தான புரட்சிக்குத் தோள் கொடுக்க முன் வரவேண்டும்.


· பாலன்

தனியார்மயமாக்கும் ஆரம்ப சுகாதார மையங்கள்

உலக வங்கி உத்தரவு :


தனியார்மயமாக்கும் ஆரம்ப சுகாதார மையங்கள்

பொதுமக்களுக்கு வழங்கும் அனைத்து சேவைகளுக்கும் அரசாங்கம் உரிய கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது, இந்தியா போன்ற ஏழை நாடுகளின் மீது உலக வங்கி திணிக்கும் நிபந்தனைகளுள் ஒன்று. இக்கட்டளைக்குக் கீழ்படிந்துதான், குடிநீர், மின்சாரம், போக்குவரத்து என அரசால் வழங்கப்பட்டுவரும் அனைத்து விதமான சேவைகளின் கட்டணங்களும் மெல்ல மெல்ல இலாபம் ஈட்டுவதை நோக்கி உயர்த்தப்பட்டு வருகின்றன;அரசாங்க மருத்துவமனைகளில் நுழைவுக் கட்டணம் வசூலிப்பது; கட்டணம் கட்டும் சிகிச்சை பிரிவை (pay ward) உருவாக்குவது என மருத்துவ சேவையிலும் கூட வணிகமயத்தைப் புகுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதனின் தொடர்ச்சியாக, அரசு நடத்தி வரும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்திலும் வணிகமயம்/தனியார்மயத்தைப் புகுத்தும் ஒரு திட்டத்தை தி.மு.க. அரசு அறிவித்திருக்கிறது.


வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் கிராமப்புற ஏழைகள்; சமூக அடுக்கில் விளிம்பு நிலையில் வாழும் மக்கள் ஆகியோருக்கு எதிர்வரும் 2012ஆம் ஆண்டுக்குள் தரமான மருத்துவ வசதியைச் செய்து தரப்போவதாகக் கூறிக் கொண்டு, ""தேசிய கிராமப்புற நலவாழ்வு பணித் திட்டம்'' என்றவொரு திட்டத்தை, 2005ஆம் ஆண்டு மைய அரசு அறிவித்தது. கேட்பதற்கு சர்க்கரையாக இனிக்கும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, அரசு மருத்துவமனைகளின் எண்ணிக்கை கூட்டப்படும்; அங்கு வழங்கப்படும் மருத்துவ சேவை தரமானதாக மாற்றப்படும் என்றெல்லாம் நீங்கள் கற்பனை செய்து கொண்டால், அதில் வெந்நீரை ஊற்றுகிறது மைய அரசு. ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு நிதி ஒதுக்குவது; அவற்றை நிர்வகிப்பது ஆகிய பொறுப்புகளில் இருந்து அரசு விலகிவிட வேண்டும் என்பது தான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.


இத்திட்டத்தைத் தமிழகத்தில் செயல்படுத்துவதற்காக, ""ஆரம்ப சுகாதார நிலையங்களை நிர்வகிக்கும் பொறுப்பைப் பதிவு பெற்ற கூட்டுறவு சொசைட்டிகளிடம் ஒப்படைப்பதற்கு'' உத்தரவிட்டுள்ள தமிழக அரசு, அச்சங்கங்களுக்கு, ""நோயாளிகள் நலச் சங்கங்கள்'' என வசீகரமான பெயரைச் சூட்டியிருக்கிறது.


தண்ணீரைத் தனியார்மயமாக்கும்/வணிகமயமாக்கும் திட்டத்தை நிறைவேற்ற, ""தண்ணீர் பயன்படுத்துவோர் சங்கங்கள்'' உருவாக்கப்பட்டதை நினைத்துப் பார்த்தால், ""நோயாளிகள் நலச் சங்கங்கள்'' உருவாக்கப்படுவதன் பின்னுள்ள அபாயத்தைப் புரிந்து கொள்ள முடியும்.


ஆரம்ப சுகாதார நிலையங்களை நிர்வகிக்க உருவாக்கப்படும் கூட்டுறவு சொசைட்டிகளில், அரசு மருத்துவர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள், கிராமப் பஞ்சாயத்து உறுப்பினர்கள் மட்டுமின்றி, தனிநபர்களும், தனியார் நிறுவனங்களும் உறப்பினர்களாகப் பங்கு பெற முடியும்.


""ஒரு தனியார் நிறுவனம், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒரு லட்ச ரூபாயை நன்கொடையாகக் கொடுத்தால்; அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்திலுள்ள ஒரு வார்டை தத்து எடுத்துக் கொண்டால் அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களைப் பராமரிக்கும் செலவுகளை ஏற்றுக் கொண்டால், அத்தனியார் நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நபர், நிர்வாக உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளப்படுவார். 25,000 ரூபாய்க்கு மேல் நன்கொடையாகத் தரும் எந்தவொரு நபரும் இந்த சொசைட்டியின் துணை உறுப்பினராக (Associate Member)ச் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்'' என உறுப்பினர் பதவிக்கான ஏலத்தொகை சட்டப்பூர்வமாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


""ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படும் பகுதியின் நிலைமைக்கு ஏற்ப, அங்கு சிகிச்சை பெறுவதற்கு வரும் நோயாளிகளிடம் கட்டணம் (user fee) வசூலிக்கவும்; ஆரம்ப சுகாதார வளாகத்திற்குள்ளேயே, எம்.ஆர்.ஐ. மற்றும் சி.டி. ஸ்கேன், சோனோகிராபி போன்ற மருத்துவப் பரிசோதனைக் கருவிகளை தனியார் நிறுவனங்கள் நிறுவிக் கொள்ள அனுமதிக்கவும், அம்மருத்துவப் பரிசோதனைக்குரிய கட்டணங்களை நிர்ணயிக்கவும்; ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்களை நியமிக்கவும்; இரத்தப் பரிசோதனை, ஆம்புலன்ஸ் வண்டியை இயக்குவது போன்ற துணை மருத்துவப் பணிகளைத் தனியாரிடம் குத்தகைக்கு விடவும் நோயாளிகள் நலச் சங்கங்களுக்கு உரிமை அளிக்கப்படுவதாக தமிழக அரசின் ஆணை குறிப்பிடுகிறது. தனியார்மயம் என நேரடியாகக் குறிப்பிடாமல், தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் தந்திரம் தான் இது.


""கிராமப்புற ஏழை மக்களை அதிகம் பாதிக்கும் மலேரியா, காலரா, இரத்த சோகை, அயோடின் பற்றாக்குறை, கண் பார்வை பாதிப்பு போன்ற நோய்களுக்கு இவ்வருடம் முழுவதும் மருந்து கொடுக்க முடியாமல் திண்டாடும் ஆரம்ப சுகாதார நிலையங்களில், சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் போன்ற அதி நவீன மருத்துவப் பரிசோதனைக் கருவிகளை நிறுவுவது, அக்கருவிகளைத் தயாரிக்கும் சீமென்ஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பயன்படுமேயொழிய, ஏழை நோயாளிகளுக்குப் பயன்படாது; மேலும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்புப் பயிற்சிப் பெற்ற மருத்துவர்களை நியமிக்காமல், பரிசோதனை வசதிகளை மட்டும் ஏற்படுத்துவது ஏமாற்று வேலை'' என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் இந்த டாம்பீகத்தை அம்பலப்படுத்தியிருக்கிறது.


""ஒவ்வொரு நாடும், தனது குடிமக்களுக்கு மருத்துவசுகாதார வசதிகளைச் செய்து கொடுக்க, தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில், குறைந்தபட்சம் 5 சதவீதத் தொகையை ஒதுக்க வேண்டும்'' என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. ஆனால், இந்திய அரசோ, 1 சதவீதத்துக்கும் குறைவாகத்தான் (0.9%) மருத்துவ சேவைக்கு நிதி ஒதுக்குகிறது. இந்த அற்பத் தொகை ஒதுக்குவதைக் கூடக் கைகழுவி விட வேண்டும் என்ற நோக்கத்தோடுதான், ஆரம்ப சுகாதார மையங்களில் சிகிச்சைக் கட்டணம் அறிமுகப்படுத்தப்படுகிறது.


அரசு, கட்டாயஇலவச மருத்துவ சேவையை வழங்குவதற்குப் பதிலாக, ஐந்து நட்சத்திர மருத்துவமனைகள், மருத்துவக் காப்பீடு ஆகிய தனியார்மயத்திட்டங்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதுதான் தற்பொழுது இந்திய அரசின் மருத்துவக் கொள்கை. இதனை நøடமுறைப்படுத்தும் விதமாக, மருத்துவக் காப்பீடு திட்டத்திற்காக 54 கோடி ரூபாயை மானியமாக ஒதுக்கியிருக்கிறது, மைய அரசு. அரசு நன்றாக ஒத்துழைத்தால், மருத்துவக்காப்பீடு வியாபாரம், 2009இல் 25,000 கோடி ரூபாயாக அதிகரிக்கும் எனத் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் கணக்குப் போட்டுக் கொண்டு, பிணந்தின்னிக் கழுகுகளைப் போலக் காத்திருக்கின்றன.


மைய அரசு ஊழியர்களுக்காக நடத்தப்பட்டு வந்த மைய அரசு மருத்துவமனைகள் (CGHS) மூடப்பட்டு, அதற்குப் பதிலாக மைய அரசு ஊழியர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்குத் தனியார் மருத்துவமனைகளுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதேபோன்ற நிலைமை, மாநில அரசு நடத்திவரும் ""ஈ.எஸ்.ஐ.'' மருத்துவமனைகளுக்கும் வரக்கூடும்.


இதுவொருபுறமிருக்க, ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளிகள் நலச் சங்கங்களை மாநில அரசுகள் ஏற்படுத்தவில்லையென்றால், அவற்றுக்கு ஒதுக்கப்படும் நிதி உதவியை நிறுத்திவிடுவோம் என மைய அரசு மிரட்டி வருகிறது. தமிழக முதல்வர் கருணாநிதியும், மைய அரசிடமிருந்து 30 கோடி ரூபாய் நிதி உதவியைப் பெறுவதற்காகத்தான், நோயாளிகள் நலச்சங்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக நியாயப்படுத்தியிருக்கிறார்.


ஆட்சியைப் பிடித்தவுடனே சினிமா கழிசடைகளுக்குப் பல கோடி ரூபாய் வரிச் சலுகைகளை அறிவித்தார், கருணாநிதி. மைய அரசோ, முதலாளிகள் மைய அரசிற்குச் செலுத்த வேண்டிய 80,000 கோடி ரூபாய் வரிபாக்கியைத் தள்ளுபடி செய்ய நாள் பார்த்துக் கொண்டிருக்கிறது. இப்படி அவர்களிடம் தாராள மனதோடு நடந்து கொள்ளும் ஆட்சியாளர்கள், மக்களின் நல்வாழ்வுக்குச் செலவு செய்ய வேண்டும் என்றால், நிதிப் பற்றாக்குறை, கஜானா காலி என ஒப்பாரி வைத்து விடுவதோடு, மக்களைத் தனியார்மயம் என்ற மரணக் குழிக்குள்ளும் தள்ளிவிட்டு விடுகிறார்கள்!


· செல்வம்




Tuesday, February 27, 2007

தாய்மையை விலை பேசும் உலகமயம்

தாய்மையை விலை பேசும் உலகமயம்

புதிய வேலைவாய்ப்பு; இது, நீங்கள் இதுவரை அறிந்திராத புத்தம்புதிய வேலைவாய்ப்பு. இது ஒரு புதிய உற்பத்தித் துறை. இங்கு பணியாற்ற உயர்கல்வியோ பயிற்சியோ அவசியமில்லை. இளம் பெண்கள் ஓராண்டு காலத்தில் ரூ. 50,000 முதல் ரூ. 2 இலட்சம் வரை சம்பாதிக்கலாம்.


— இப்படியொரு விளம்பரத்துடன் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் பகிரங்கமாக அறைகூவி அழைக்கிறது. குஜராத்தின் மருத்துவ செயலாளர், இது புதிய வகைப்பட்ட தொழில்வேலைவாய்ப்பு என்றும், அனைவருக்கும் எப்போதுமே ஆதாயம் தரும் சூழல் நிலவுவதாகவும், எல்லா மாநிலங்களுக்கும் இதனைப் பரவலாக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கிறார். பெருநகரங்களில் இப்புதிய வேலைவாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு நாளேடுகளில் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. குறிப்பாக, மும்பை மற்றும் குஜராத்தின் ஆனந்த் நகரிலுள்ள பல தனியார் மருத்துவமனைகள் கிராமப்புறங்களுக்குச் சென்று இப்புதிய வேலைக்காக ஆட்களைத் திரட்டத் தொடங்கிவிட்டன.

அது என்ன புதிய வேலை வாய்ப்பு? தாய்மையையே வணிகமயமாக்கும் வாடகைத்தாய் என்பதுதான் இப்புதிய வேலைவாய்ப்பு!


குழந்தைப்பேறு இல்லாத வெளிநாட்டுத் தம்பதியினருக்காக, ஒரு இந்தியப் பெண் கருவைச் சுமந்து, பத்து மாதங்களில் குழந்தையைப் பெற்றுக் கொடுத்துவிட்டு, அதற்காக கணிசமான தொகையை வாங்கிக் கொள்வதுதான் வாடகைத்தாய் எனும் புதிய வேலைவாய்ப்பு.


""இன் விட்ரோ கருத்தரிப்புமுறை'' (IVF) எனும் புதிய தொழில்நுட்பம் மருத்துவ அறிவியலில் வளர்ச்சியடைந்துள்ளது. ஒரு பெண்ணின் கருமுட்டையையும், ஒரு ஆணின் விந்தணுவையும் தனித்தனியே சேகரித்து, அவற்றை உரிய முறையில் சோதனைக் குழாயில் கருத்தரிக்கச் செய்து, பின்னர் அக்கருவை பெண்ணின் கருப்பையிலிட்டு வளர்த்து தாய்மையடையச் செய்வதே இப்புதிய தொழில்நுட்பமுறையாகும். குழந்தைகள் இல்லாத உள்நாட்டுவெளிநாட்டுத் தம்பதிகளில், மனைவிக்கு தாய்மையடைய உடற்கூறு ரீதியாக வாய்ப்பில்லாத நிலையில், கணவன் தனது விந்தணுவைக் கொடுத்து வேறொரு பெண் மூலம் குழந்தைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு இத்தொழில் நுட்பத்தால் கிடைத்துள்ளது. இதைப் பயன்படுத்திக் கொண்டு, வாடகைத்தாய் எனும் புதிய வேலை வாய்ப்பை பல தனியார் நிறுவனங்கள் இந்திய ஆட்சியாளர்களின் பேராதரவோடு உருவாக்கியுள்ளன.


இதன்படி, வாடகைத்தாயின் கருமுட்டையும் உள்நாட்டுவெளிநாட்டுத் தந்தையின் விந்தணுவும் தனித்தனியே சேகரிக்கப்பட்டு, சோதனைக் குழாயிலிட்டு வளர்த்து பின்னர் வாடகைத்தாயின் கருப்பையிலிடப்படும்; வாடகைத்தாய் அக்கருவைச் சுமந்து குழந்தையைப் பெற்றுக் கொடுத்துவிட்டு, அதற்கீடாக உரிய தொகையைப் பெற்றுக் கொள்வார். இதுதான் ஆரவாரமாக அறிவிக்கப்பட்டு விளம்பரப்படுத்தப்படும் புதிய வேலைவாய்ப்பு.


தாய்மை அடைவது என்பது இதர வேலைகளைப் போன்றதல்ல; அது வேலைவாய்ப்புத் துறையுமல்ல. தாய்மை என்பது மிகவும் சிக்கலானது; உணர்ச்சிப்பூர்வமானது. அது தாயின் வாழ்வு முழுவதிலும் நினைவில் நிற்கக் கூடியது. தாய்மைக் காலத்தில் எண்ணற்ற ஹார்மோன்கள் உருவாக்கும் உணர்வுகள் தாயிடம் பெருந்தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பிரசவத்திற்குப் பின் கைக்குழந்தைக்கும் தாய்க்குமிடையிலான உறவு உணர்ச்சிகள் நிறைந்தது. வாடகைத்தாய் எனும் வியாபாரமானது, அறவியல் மதிப்பீடுகளுக்கு எதிராக இத்தகைய உணர்ச்சிபூர்வ உறவுகள் அனைத்தையும் வெட்டிச் சிதைத்து, தாயை வெறும் மனித எந்திரமாகச் சிதைத்து விடுகிறது.


இதுவொருபுறமிருக்க, அறவியல் மதிப்பீடுகளுக்கு அப்பாற்பட்டு, வாடகைத்தாயின் உயிருக்கும் உடலுக்கும் ஏற்படும் அபாயங்கள், குழந்தை பிறந்த பின்னர் ஏற்படும் உளவியல் மற்றும் உணர்ச்சிபூர்வ பாதிப்புகள் பற்றி இந்தப் புதிய வேலைவாய்ப்பு அக்கறை கொள்வதில்லை. மேலும், ஏழை நாடுகளில் பெண்களுக்கு பிரசவத்தின்போது சிக்கல்களும் அபாயங்களும் பெருமளவில் உள்ளன. மருத்துவசேவை என்பது ஏழை நாடுகளில் பெயரளவுக்கே உள்ளது. ஏழை நாடுகளில் நிலவும் வறுமையும், ஊட்டச்சத்து இல்லாமையும் தாய்மார்களுக்கு பிரசவ காலத்தில் பெரும்பாதிப்பை விளைவிக்கின்றன. இருப்பினும், இத்தகைய ஏழ்மை நிலையிலுள்ள பெண்கள்தான். பிழைப்புக்கான வேறுவழியில்லாத நிலையில் வாடகைத் தாய்களாகிறார்கள்.


தாய்மையை வியாபாரமாக்கும் இப்புதிய தொழிலை சுவீடன், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி முதலான பல மேற்கத்திய நாடுகள் தடை செய்துள்ளன. அனுமதிக்கப்பட்ட பல முதலாளித்துவ நாடுகளிலும் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. கருத்தரிப்பு முறையில் ஏற்பட்டுள்ள புதிய தொழில்நுட்பத்தை வணிகமயமாக்கக் கூடாது என்று வாடகைத்தாய்க்கு சம்பளம் கொடுப்பதை கனடா நாட்டு அரசு தடை செய்துள்ளது; சுய விருப்பத்தின் அடிப்படையில் ஒரு பெண் இதனை ஏற்பதை மட்டுமே அந்நாடு அங்கீகரித்துள்ளது. பிரிட்டனில் இத்தகைய விவகாரங்களைப் பரிசீலிக்க சிறப்புக் கமிட்டிகள் நிறுவப்பட்டு, அதன் ஒப்புதலின் அடிப்படையிலேயே வரம்புக்குட்பட்ட முறையில் வாடகைத்தாய் முறை அனுமதிக்கப்பட்டுள்ளது.


வாடகைத் தாய் முறையை அனுமதிக்கும் பல ஏழை நாடுகளில் கூட, கடுமையான விதிகளும் கட்டுப்பாடுகளும் உள்ளன. அர்ஜெண்டினா, தென் ஆப்பிரிக்கா முதலான நாடுகளில் ஒவ்வொரு வாடகைத்தாய் விவகாரத்தையும் பரிசீலிக்க சிறப்புக் கமிட்டிகள் நிறுவப்பட்டுள்ளன. ஆனால் இந்தியாவில் பெயரளவுக்குக் கூட விதிகளோ, கட்டுப்பாடுகளோ கிடையாது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR)பொதுவில் சில வழிகாட்டுதல்களை மட்டுமே கொடுத்துள்ளது. இவற்றைக் கொண்டு தாய்மையை வணிகமயமாக்கும் தனியார் மருத்துவ நிறுவனங்களையோ, வாடகைத் தாயை தேடி பேரம் நடத்தும் தரகு நிறுவனங்களையோ கட்டுப்படுத்த முடியாது; பாதிப்பு ஏற்பட்டால் தண்டிக்கவும் முடியாது.


குழந்தை பிறந்தபின், குறிப்பிட்ட காலத்திற்கு வாடகைத்தாயின் பொறுப்பில் குழந்தையை விடுவதற்குக் கூட விதிகளையும் கட்டுப்பாடுகளையும் இத்தகைய முறையை அனுமதிக்கும் நாடுகள் பின்பற்றுகின்றன. ஆனால் இந்தியாவில் இத்தகைய பிரச்சினைகள் குறித்த அக்கறையோ, வாடகைத் தாய்முறைக்கான விதிகளோ, கட்டுப்பாடுகளோ இல்லை. அறவியல் மதிப்பீடுகள், வாடகைத்தாயின் உடல்நலப் பாதிப்புகள், இத்தொழிலை முறைப்படுத்துவதற்கான சட்டங்கள், உணர்ச்சிபூர்வ பிரச்சினைகள் குறித்த முறைப்படுத்தல்கள் முதலான எதுவுமே இல்லை. சுருக்கமாகச் சொன்னால், வாடகைத் தாய்க்கு சட்டபூர்வ பாதுகாப்போ, பாதிப்புகளுக்கு நிவாரணமோ எதுவுமே இந்தியாவில் இல்லை. இவற்றைச் சாதகமாக்கிக் கொண்டு ஏழ்மையும் ஏழைகளும் நிறைந்த இந்தியாவில் வாடகைத்தாய் முறை வேகமாகப் பரவி வருகிறது.


இதற்கேற்ப தனியார் ஐந்து நட்சத்திர மருத்துவமனைகளும் தரகு நிறுவனங்களும் பெருகத் தொடங்கியுள்ளன. குறைந்த செலவில் சிகிச்சையும் குறைந்த விலைக்குப் பெண்களும் கிடைக்கும் என்ற விளம்பரங்களுடன் ""மருத்துவச் சுற்றுலா''க்களை நடத்தும் தரகு நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. குழந்தைப் பேறு இல்லாத வெளிநாட்டுத் தம்பதிகள் இந்தியாவுக்குப் படையெடுக்கின்றனர். வாடகைத் தாயிடம் ரூ. 50,000 முதல் ரூ. 2 லட்சம் வரை பேரம் பேசப்படுகிறது. அதாவது, குறைந்தபட்சம் 1000 அமெரிக்க டாலர். அதேசமயம், இதுபோன்ற வாடகைத் தாய் முறைக்கு அமெரிக்காவில் குறைந்தபட்சம் 20,000 முதல் 30,000 டாலர் வரை கொடுக்கப்படுகிறது. ஏழ்மை காரணமாகவும் கட்டுப்பாடுகள் இல்லாததாலும் இந்தியாவில் வாடகைத் தாய்க்கான ஒப்பந்தக்கூலி மிக மலிவாக உள்ளது. மேலும், இந்த வாடகைத்தாய், வெளிநாட்டு தம்பதிகள் போடும் எல்லா நிபந்தனைகளையும் ஏற்றுச் செயல்பட வேண்டிய கட்டாயத்துக்கும் ஆளாகிறார். கோடிகோடியாய் அந்நியச் செலாவணி கிடைக்கும் துறையாகச் சித்தரிக்கப்படும் மருத்துவச் சுற்றுலாத்துறை, இப்போது மறுஉற்பத்திச் சுற்றுலாத் துறையாக மாறிவிட்டது.

இதனால்தான், அடுத்த சில ஆண்டுகளில் 600 கோடி டாலர் அளவுக்கு வாடகைத்தாய் முறையில் வியாபாரம் ப


ருகும் என்று பெருமிதத்தோடு அறிவிக்கிறது, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம். ஏராளமாக அந்நியச் செலாவணி கிடைக்கும்; மருத்துவர்கள், தாதிகள், தொழில்நுட்பவாதிகள், பரிசோதனைக்கூடப் பணியாளர்கள் எனப் பலருக்கு வேலைவாய்ப்புப் பெருகும் என்று ஆளும் வர்க்கங்களும் மருத்துவத்துறையினரும் வாடகைத்தாய் தொழிலை ஆரவாரத்துடன் வரவேற்கின்றனர். ஏற்கெனவே நடந்துவரும் சிறுநீரக விற்பனைத் தொழிலை வாடகைத்தாய் தொழில் விஞ்சிவிடும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.


குஜராத்தின் ஆனந்த் நகரிலுள்ள அகான்க்ஷா கருத்தரிப்பு மையத்தின் தலைவரான டாக்டர் நயனாபடேல், கால் சென்டர் பி.பி.ஓ.க்களில் வெளிநாட்டு வேலைகளை ஒப்பந்த அடிப்படையில் செய்து தருவதைப் போல, வாடகைத்தாய் எனும் புதிய வணிகம் வேகமாக வளர்ந்து வருவதாகப் பெருமையுடன் குறிப்பிடுகிறார். வாடகைத் தாய்மார்களைக் கொண்டு வியாபாரம் செய்யும் இவர், 1970களில் ஆனந்த் நகரில் அமுல் நிறுவனம் நடத்திய வெண்மைப் புரட்சிக்குப் (பால் பெருக்குத் திட்டம்) பிறகு இப்போது இந்நகரில் வாடகைத்தாய் புரட்சி நடப்பதாகக் கூறுகிறார். மும்பையிலுள்ள மல்பானி கருத்தரிப்பு மையத்தின் டாக்டர் அஞ்சலி மற்றும் அனிருத்தா ஆகியோர், கடந்த ஈராண்டுகளில் தமது சிகிச்சை மையத்திற்கு வாடகைத்தாயைத் தேடிவரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக பூரித்துப் போகின்றனர்.


""அவன்அவள்அது'' கதைபோல இத்தொழில் இரகசியமாக நடைபெறுவதில்லை. கவர்ச்சிகரமான விளம்பரங்களுடன் வெளிப்படையாகவே நடக்கத் தொடங்கி விட்டது. புனே நகரிலுள்ள ஒரு கருத்தரிப்பு சிகிச்சை மையம், குழந்தையில்லா வெளிநாட்டுத் தம்பதிகளை அழைப்பதோடு, இளம் இந்தியப் பெண்களை இம்மையத்தின் உறுப்பினராகச் சேர்ந்து பயனடையுமாறு பல்வேறு சிறப்புப் பரிசுகளுடன் அழைக்கிறது. பல்வேறு தனியார் மருத்துவ நிறுவனங்களும் தரகு நிறுவனங்களும் ""நீங்கள் வாழ்நாள் முழுக்க சம்பாதிப்பதைவிட மிக அதிகமாகச் சம்பாதிக்க முடியும்'' என்று கிராமப்புறப் பெண்களை வெளிப்படையாக ஆசைகாட்டி அழைக்கின்றன. மகளின் உயர்கல்விச் செலவுகளை ஈடுகட்டுவதற்காக வாடகைத் தாயாகிய குஜராத்தின் வீணா ராவத், கடன் சுமையிலிருந்து மீள்வதற்காக வாடகைத் தாயாகிய மும்பையின் சேத்னா ஜாதவ் என ஏழைப் பெண்கள் வேறு வழியின்றி தமக்காகவும் தமது குடும்பத்துக்காகவும் தமது உடலை மறுஉற்பத்திக் கூடமாகப் பயன்படுத்திக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டு வருகிறார்கள்.


குழந்தையில்லா வெளிநாட்டுத் தம்பதிகள் இந்தியாவின் ஏழைக் குழந்தைகளைத் தத்தெடுத்து தமது வாரிசாக வளர்க்க முடியும். ஆனால், எனது இரத்தவழி வாரிசு என்ற ஆணாதிக்க சொத்துடைமை வர்க்கத் திமிரும் பணத்திமிரும் சேர்ந்து கொள்ள, அனைத்தையும் பணஉறவாக்கியுள்ள உலகமயம் இப்புதிய அடிமைத் தொழிலை ஏழை நாடுகளில் வேர்விட்டுப் பரவச் செய்துள்ளது. இந்திய ஏழைத் தாய்மார்கள் இந்த வக்கிரத் தொழிலின் கூலி அடிமைகளாக்கப்பட்டுள்ளார்கள்.


ஒரு வெளிநாட்டுத் தம்பதியினர், ஆண் வாரிசை எதிர்பார்த்து வாடகைத் தாயை ஒப்பந்தக் கூலியாக அமர்த்திக் கொண்டு, அத்தாய்க்கு பெண் குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தைக்கு யார் பொறுப்பு என்பதற்கான விதிகளோ, சட்டங்களோ இந்தியாவில் இல்லை. கருவிலுள்ள குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்று கண்டறிந்து, பெண் குழந்தை எனில் கருக்கலைப்பு செய்ய வாடகைத் தாயை நிர்பந்தித்தால் அல்லது ஒப்பந்தப்படி கூலி தர மறுத்தால் அதை விசாரிக்கவோ தண்டிக்கவோ எவ்வித சட்டப் பாதுகாப்பும் இந்தியாவில் இல்லை. மேலும், ஒரு வாடகைத் தாய் எத்தனை முறை இவ்வாறு செயற்கை முறையில் கருத்தரிக்கலாம், அதனால் தாயின் உடல்நலத்திற்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதைப் பற்றிய அக்கறையோ, விதிகளோ கட்டுப்பாடோ எதுவுமில்லை. வாடகைத்தாய் முறையை அனுமதித்துள்ள இதர ஏழைநாடுகளில் கூட, இவ்வாறு 2 முறை மட்டுமே கருத்தரிக்கலாம் என்று விதிகளும் கட்டுப்பாடுகளும் உள்ளன. ஆனால் இந்தியாவில் 5 முறை இவ்வாறு கருத்தரிக்க தாராள அனுமதி தரப்பட்டுள்ளது. அதற்கு மேலும் கருத்தரித்து அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் வாடகைத் தாய்மார்களுக்கு ஆட்சியாளர்கள் சிறப்புப் பரிசுகள் அளித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


ஏறத்தாழ நூறாண்டுகளுக்கு முன்னர் கும்பினி ஆட்சியின்கீழ் நமது முன்னோர்கள் இலங்கை, மலேயா, மொரீசியஸ் முதலான நாடுகளுக்குக் கட்டி இழுத்துச் செல்லப்பட்டு, பாம்பும் அட்டையும் கொடிய விலங்குகளும் நிறைந்த காடுகளில் தள்ளப்பட்டு, தோட்டத் தொழில் செய்யும் அடிமைகளாக்கப்பட்டார்கள். அது காலனியாதிக்கம். இன்று நம்நாட்டு இளம்பெண்கள் வாடகைத்தாய் எனும் மறுஉற்பத்தி அடிமைகளாக மாற்றப்பட்டு வருகிறார்கள். இது மறுகாலனியாதிக்கம். தொழில்நுட்பவாதிகள் ஏற்றுமதி, கூலித் தொழிலாளர்கள் ஏற்றுமதி என்று தொடங்கி இப்போது இந்தியத் தாய்மார்களின் கருவறையும் வர்த்தகப் பண்டமாக மாற்றப்பட்டு விட்டது. இதுதான் மறுகாலனியாக்கம் நாட்டுக்கு அளித்துள்ள "பரிசு'! இம்மறுகாலனியாக்கத்தை வீழ்த்தாமல் பெண் விடுதலை என்பது ஒருக்காலும் சாத்தியமில்லை என்பதை நாட்டுக்கு உணர்த்திவிட்டு, வாடகைத் தாய்மார்கள் நவீன அடிமைகளாக உழன்று கொண்டிருக்கிறார்கள்.

· குமார்

Sunday, February 25, 2007

மனித சமூக சாரத்தை மறுத்தலே உலகமயமாதல்


மனித சமூக சாரத்தை மறுத்தலே உலகமயமாதல்




01.கட்டுரையைப் புரிந்து கொள்வதற்குத்
தேவையான அடிப்படைத் தரவுகள்.


02.முன்னுரை


03.சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின்
முதிர்வே உலமயமாதலாகும்


04.சமூக உறவுகளின் முழுமையை
மறுப்பதே உலகமயமாக்கம்


05.தனிப்பட்ட நபர்களின் செல்வக் குவிப்பே,
உலகமயமாதலுக்கான சமூக
அடிப்படையை உருவாக்குகின்றது.


06. உலகளாவிய மூலதனங்களையும், மனித
உழைப்பையும் கைப்பற்றி ஒன்று குவிப்பதே
உலகமயமாதலுக்கான அஸ்திவாரம்.


07.உலகை முழுவீச்சில் சூறையாடவே
மூலதனங்கள் தமக்கிடையில்
ஒன்று சேருகின்றன்.


08.மூலதனத்துக்கு பைத்தியம் முற்றும் போது,
ஏகாதிபத்திய யுத்தங்கள் அரங்கேறுகின்றன


09.மனித உழைப்பு சீனாவில் உயர் வீதத்தில்
சுரண்டப்படுவதால், உலகளாவிய
மூலதனத்தையே அதிர்வுக்குள்ளாக்குகின்றது


10.தேசம் கடந்த பன்னாட்டு மூலதனங்கள்,
தேச எல்லைகளையே அழிக்கின்றன


11.மக்களின் சமூக வாழ்வைச் சூறையாடுவதே
சர்வதேச வர்த்தகமாகும்.
.


12.மனித உழைப்பு சார்ந்த உற்பத்திகள் மீது,
பன்னாட்டு நிறுவனங்களின் ஏகபோகம்.


13.மனித குலத்தை நலமடிப்பதற்காகக்
கட்டமைக்கப்பட்டதே உலகமயமாக்கம்.


14.இந்த நூலை எழுத உதவிய நூல்கள்