தமிழ் அரங்கம்

Sunday, October 16, 2005

தொடர் கொலைகளால்

யார் உண்மையான இலாபம் அடைகின்றனர்

மனித இனத்தில் உயிர்வாழும் ஆற்றல் என்பது, உயிர் வாழ்வதற்கான போராட்டத்துடன் ஆரம்பமாகின்றது. தமிழ் மக்களின் போராட்டம் கூட அப்படித் தான் தொடங்கியது. ஆனால் எமது போராட்டத்தின் இன்றைய நிலை என்ன? தனிமனித அதிகாரத்துக்காகவும், சமூக ஆதிக்கத்துக்காகவும் தொடங்கி இன்று தமிழ் மக்களிடம் பணத்தை சூறையாடல் என்ற எல்லைக்குள் எமது போராட்டமே சீரழிந்து கிடக்கின்றது. தமிழீழமே எமது இலட்சியம் என்று தொடங்கிய போராட்டம் தனது ஆன்மாவையே தொலைத்து, இன்று போராட்டம் என்பது பணம் திரட்டும் போராட்டமாக மாறிவிட்டது. எந்த அசைவும் இயக்கமும் பணம் திரட்டலை அடிப்படையாக கொண்டே இயக்கப்படுகின்றது.

தமிழ் மக்களின் போராட்டம் திசை மாறிய வரலாற்றின் ஒவ்வொரு கணமும், அது தனது சொந்த இலட்சியங்களை கைவிடுவதில் இருந்தே தொடங்கியது. இன்று தமிழ் மக்கள் உயிர்வாழ்வதற்கான போராட்டம் என்பதே, தமிழ்தேசியம் பேசும் தேசியவாதிகளின் துப்பாக்கி குண்டுகளில் இருந்து தப்பிப்பிழைக்கும் போராட்டமாக சீரழிந்து விட்டது. இரண்டு தனிமனிதர் சுதந்திரமாக நடக்கும் சமூக நிகழ்வுகளையிட்டு உரையாடவே முடியாது. அது கண்காணிக்கப்படுகின்றது. கதைப்பதை தடுக்கும் வகையில் மிரட்டப்படுகின்றது. இது மரண தண்டனைக்குரிய குற்றமாகவும் உள்ளது. இது எமது தேசத்தின் எதார்த்தம்;. இதற்காகவா நாம் போராடப் புறப்பட்டோம். இதற்காக மிகப் பெரிய தியாகங்கள் செய்யப்பட்டன.

இன்று மக்கள் உயிர்வாழும் போராட்டத்தில் தப்பிப்ழைப்பதற்காக, தமிழ் தேசியவாதிகளின் நெற்றிக் கண்ணில் இருந்து மறைந்து வாழவேண்டிய சமூக அவலம். இந்த சமூக அவலத்துக்கு வெளியில் யாரும் உயிர் வாழவில்லை. இதுவே தமிழ் தேசியம் மக்களுக்கு வழங்கும் சுதந்திரம். நக்கிப் பிழைக்கத் தெரிந்தவர்கள், சமூகத்தை மோசடி செய்யத் தெரிந்தவர்கள், சமூகத்தின் அவலத்தில் பிழைக்கத் தெரிந்தவர்கள் அனைவரும், பணத்தை சூறையாடும் தமிழ் தேசியத்துடன் வலிந்து ஒட்டிக் கொண்ட ஒட்டுண்ணியாக மாறி அதை பாதுகாக்க முனைகின்றனர். போராட்டத்தின் சிதைவு ஒட்டுண்ணிகளின் வாழ்வாகிவிட்டது.

இந்த சமூக விரோத ஒட்டுண்ணிகளிடமும், ஒட்டுண்ணிகளை தாங்கி அதன் வேரில் நிலைத்து வாழ கணவு காணும் புலிகளும், யாரைத்தான் சூறையாடுகின்றனர். தமிழ் மக்களைத் தான் என்பதை யாரும் மறுக்கமுடியாது. எதிர்நிலையில் இங்கு இழப்பவர்கள் யார் என்றால், தமிழ் மக்கள் தான். எந்தப் பாவமும் அறியாத எழை எளியதுகளையும். கைகட்டி வாய் பொத்தி நிற்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் அனைத்தையும் இழக்கின்றனர். தமது குழந்தைகளை, தமது சொந்த உழைப்பை, பாரம்பரிய சொத்துகளை எல்லாம் புலிகளிடம் அன்றாடம் இழப்பது தமிழ் பேசும் மக்கள் தான். புலியின் செல்வங்கள் அனைத்தும், தமிழ் மக்களிடம் இருந்து பறிக்கப்பட்டவை தான். புலியின் ஒட்டுண்ணிகளிடம் குவிந்து கிடக்கும் செல்வங்களும் கூட மறைமுகவழிகளில் மக்களிடம் இருந்து பெறப்பட்டவைதான். இன்று புலிகளை சார்ந்து வாழும் குடும்பங்கள் முதல் பல வழிகளில் உழையாது வாழும் அனைத்து செல்வங்களும் கூட மக்களிடம் இருந்து பிடுங்கப்பட்டவைதான்.

புலிகள் ஏழைகளையும் கூட விட்டுவைக்கவில்லை. எங்கும் சூறையாடலே தாரக மந்திரமாக அரங்கேறுகின்றது. இதை மீறுபவர்கள் அனைவரும் தேசத் துரோகியாக காட்டப்பட்டு கொல்லப்படுகின்றனர் அல்லது சித்திரவதைக்கு உள்ளாகின்றனர். கொன்றவனைக் கூட உரிமை கோர வக்கற்ற தேசிய வக்கிரம் இன்று கொலுவேற்றுள்ளது. முதுகெலும்பற்ற அரசியல் பேடைத்தனம்;, எங்கும் எதிலும் பணத்தைச் சூறையாடும் மாபியாப் போராட்டமாகிவிட்டது.

பணத்தைக் கொடுத்தவன் வாழ்க்கை பூராவும் சித்திரவதையை அனுபவிக்கத் தொடங்குகின்றான். கடன், குடும்ப வறுமை என்று தொடங்கும் உளவியல் சிக்கல் ஒரு பகுதினரை சிக்கி உருக்குலைகின்றது. இருப்பவன் கொடுக்கும் போது, கொடுத்த பணத்துக்காக புலிகளை ஆதரிக்கும் நிலைக்கு தாழ்ந்து போகின்றான். கொடுத்த பணத்தை ஏதோ ஒரு வழியில் மக்களிடம் இருந்து மீளப் பெறும் வழியில், தனக்கு துணையாக புலியை ஆதரித்து நிற்பது இயல்பாகிவிடுகின்றது.

மறுபக்கம் இந்த ஆதரவு பணம் திரட்ட தொடரும் கொலைகளுக்கு உடைந்தையாகி, மனித நாகரீகத்தையே அழிவுக்கும் நிலைக்கு கைகொடுக்கின்றது. இது பணம் கொடுத்தவனின் மற்றொரு உளவியல் சிக்கலுக்குள் சிக்கி விடுகின்றது. உளவியல் சித்திரவதை சமூகத்தின் போக்கில் நிரந்தரமான தலைவிதியாகி விடுகின்றது. உளவியல் பாதிப்பு கூடிய ஒரு பிரதேசமாக வடக்குகிழக்கு இன்று மாறி நிற்பதில் என்னதான் ஆச்சரியம் தான் இருக்க முடியும். இதை மேலும் ஆழமாக்கும் சிங்கள பேரினவாத ஆக்கிரமிப்பு, தமிழ் மக்களை வாழமுடியாத மன உளைச்சல் இன்றி உயிர்வாழ முடியாத நிலையை உருவாக்கி விடுகின்றது. அடிமைவாழ்வும், மனித உளவியல் நோய்க்குள் சிக்கிக் கிடப்பதும் தான் பிரபானிசம் தரும் விடுதலையாகிவிட்டது. மனிதனை ஆறுதல்படுத்தக் கூடிய எந்த ஆற்றலும் இந்த பிரபானிசத்துக்கு கிடையாது. பொலிஸ்காரன் நடேசன் அறிமுகப்படுத்திக்காட்டிய பிரபானிசம், பொலிஸ் பாணியிலானதே. அதற்கு மனித முகம் கிடையாது. மனிதாபிமானம் கிடையாது. கொல் கொன்று ஒழி. இதைவிட்டால் சிறையும் நீதிமன்றங்களும். இதற்கு வெளியில் சமூகம் பொது சிறைக் கூடாரமாகவே சுற்றி வளைத்து கழுத்தில் கைவைத்து நெரிக்கப்படுகின்றது. மூச்சு திணறும் சமூகத்தில் இருந்து ஆக்கத்துக்கான எந்த சமூக விடுதலையும் இன்று கிடையாது.

அதுவே தமக்கு சேவை செய்யத் தயாரற்ற அனைவரையும் கொன்று போடுதல் என்பது, தமிழ் தேசிய அகராதியில் உன்னதமான ஒழுக்கமாக செதுக்கப்படுகின்றது. ஆனால் அந்த ஒழுக்கத்தையே உரிமை கோரமுடியாத கோழைத்தனமான வசைபாடல்கள் மூலம் அனைத்தையும் விதாண்டவாதம் செய்கின்றனர்.

செய்த கொலையை நியாயப்படுத்த முடியாது கொலை செய்ய பல பெயர்களில் பல படையணிகள். சங்கிலியன் படை, வன்னியன் படை, எல்லாளன் படை என்று பற்பல படைகள். இதை மறுக்க அவர்களே கற்பனை செய்து கூறும் பல பெயர் கொண்ட பல குழுக்கள். ஒட்டுக் குழு, துணைப்படை என பல. அனைத்தும் அவர்களின் சொந்தக் கற்பனையே. அதாவது கொலையாளியே அனைத்தையும் கற்பனை செய்கின்றான்.

நாகரிக சமூக அமைப்பில் பொதுவாக தூக்கில் இடுபவனை தூக்கில் இட ஒரு கொலையாளி தேவை எப்படியோ, அதேபோல் ஒரு பாதிரியாரும் அங்கு பிரசன்னமாகின்றான். இங்கு தூக்கில் இடுபவன் பணியும், அதுபோல் பாதிரியார் பணி;யும் மக்களை அடக்கியாளத் தேவைப்படுகின்றது. அதாவது மக்களை அடக்கியாள தூக்கில் ஒரு கொலையாளி எப்படி தேவைப்படுகின்றானோ, அதே போல் மக்களின் சமூகக் கொந்தளிப்பை தணிக்க ஒரு பாதிரியாரும் தேவைப்படுகின்றான்.

இதுபோல் தான் இன்று கொலையும், கொலையை மறுக்க அல்லது நியாயப்படுத்த பல வண்ணக் கதைகளும் தேவைப்படுகின்றன. மக்களை அடிமைப்படுத்தி அடக்கியாள இரண்டும் புலிக்கு தேவையாக உள்ளது. இங்கு கொலை செய்ய கொலையாளியும், கொன்றதை நியாயப்படுத்த அல்லது திரிக்க பல வண்ண தூய்மைவாதிகளும் அரங்கில் நிறுத்தப்பட்டுள்ளனர். இரண்டையும் ஒரே இடத்தில் இருந்து தெளிவாகவே நாம் இனம் காணமுடியும். கொல்வதாக மிரட்டுவதையும், அதை மறுப்பதையும் நாம் இன்று, தமிழ் மக்கள் மத்தியில் தெளிவாக இனம் காணமுடியும். எதையும் புரட்டி திரித்து அராஜகம் செய்யும் அதிகாரத்தை துப்பாக்கி முனையில் செய்து காட்டுகின்றனர்.

ஒரு மனிதனை கொன்று விட்டு வந்து அதை நியாயப்படுத்தும் அர்த்தமற்ற வாதங்கள் செய்வது இல்லையென்றால் அதை மறுக்கும் வாதங்கள். கொன்றவனே அதை எதிர்த்து அராஜகத்தை கட்டவிழ்த்து விடுமளவுக்கு எங்கும் சிறு கும்பலே, மக்களின் பெயரில் தேசத்தையே எரிக்கின்றனர்.

மறுபுறம் முன்னைநாள் கொலைகார இயக்கங்கள், இன்று இலங்கை அரசின் கைக்கூலிகளாகி அரங்கில் நிற்கின்றனர். இன்று நடக்கும் 90 சதவீதமான கொலைகளை புலிகள் செய்யும் போது, அதற்கு பின்னால் ஒளிந்து நின்று 10 சதவீதமான கொலைகள் இவர்கள் நாசுக்காக செய்து விட்டு வந்து நியாயவாதம் பேசும் வக்கிரமும் அரங்கேறத்தான் செய்கின்றது. கொலையைக் கண்டிக்கும் போது இரு தரப்பும் பரஸ்பரம் தமது தரப்பு கொலையை பாதுகாக்கும் உரிமையை முகமூடி போட்டுக் கொண்டு, தமிழ் மக்களின் கழுத்தையே வெட்டியெதிய பின் நிற்பதில்லை.

இந்த நிலையில் நாட்டை ஆக்கிரமிக்கவும், தமிழ் மக்களின் தேசிய கோரிக்கைகளை புதைக்கவும் காத்திருக்கும் வல்லூறுக்கள் தேசத்தின் மேல் வட்டமிடுகின்றன. இதற்கு துணைபோகும் புலியெதிர்ப்புக் கும்பல் வல்லூறுக்களின் பின்னால் மறைந்து நின்று ஏதாவது எச்சம் கிடைக்குமா என்ற அங்கலாய்ப்புடன் அலைகின்றன.

இதற்கு துணைபோகும் உதிரிகளான ஒநாய்களும் புலிகளும் சேர்ந்து காட்டையே அழிக்கின்றன. எங்கும் அராஜகம். சமுதாயத்தின் அமைதியான இயல்பான வாழ்வு அன்றாடம் சிதைவுறுகின்றது. மனப்பயம், மன உளைச்சல் என்று உளவியல் நெருக்கடியில் தமிழ் இனம் அன்றாடம் மரணப் போராட்டத்தை நடத்துகின்றது.

இதை எல்லாம் எதற்காக செய்கின்றார்கள் என்று கேட்டால், பாய்ந்து குதறுகின்றன. தமிழீழம் எமது இலட்சியம் என்றவர்கள், அதை மறந்து பணம் திரட்டுவதே இலட்சியமாகிவிட்டது. இந்த நிலையில் இதற்காகவே ஏகபிரதிநிதித்துவம் வேண்டியும் தனித் தலைமை என்றும் கூறி, தமிழ் இனத்தின் அடிமைத்தனத்தை ஏற்று அங்கீகரிக்க உலகம் முன்வர வேண்டும் என்று கோருகின்றனர்.

இந்த நிலையில் தாம் எதற்காக கொல்லுகின்றோம் என்று கூற முடியாத வகையில் நியாயமற்ற கொலைகள். அதை மூடிமறைக்க, திசை திருப்ப விதவிதமான படைகளின் பெயராலும் எச்சரிக்கை. கொன்று விட்டு அதை மற்றவனின் பெயரில் சொல்ல பல பெயர்களில் படைகள். இந்த அரசியலை நியாயப்படுத்த நிதர்சனம் டொட் கொம் என்று பல. எல்லாம் அவனே. கொல்வதும் அவனே, அதை நியாயப்படுத்துவதும் அவனே. கொலையை மற்றவன் பெயரில் சொல்வதும் அவனே. பல பெயர்களை உற்பத்தி செய்து, அதை உண்மையானதாக நடமாடவிடுவதும் அவனே.

கொலையை நியாயப்படுத்தும் விதங்கள் கூட வக்கிரமானவை. இதற்கு அது பழிவாங்கல்கள், அது உட்கொலை என்று பல வண்ணக் கதையாடல்கள். ஆனால் தமிழ் மக்களுக்கு உண்மை என்ன என்பது தெரிந்து இருப்பதை இவர்கள் காண்பதில்லை. உலகத்துக்கும் கூட இந்த உண்மை பளிச்சென்று தெளிவாக இருப்பதை காண்பதில்லை. அடுப்படியில் பூனை களவாக கண்ணை மூடி பால்குடித்த கதை போல், புலிகள் பால் குடிக்க முனைகின்றனர். குடித்த பாலை மற்றவர்களுக்கு கொடுக்க முனைகின்றனர்.

இந்தக் கொலைகளினால் லாபம் பெறுவர்கள் யார். தமிழ் மக்களும் அல்ல. புலிகளும் அல்ல. நீண்டகால நோக்கிலும், குறுகிய கால நோக்கிலும் லாபம் பெறுபவர்கள் ஏகாதிபத்தியமும் ஏகாதிபத்திய தமிழ் கைக்கூலிகளுமே. அத்துடன் பேரினவாதமும், பேரினவாத தமிழ் கைக் கூலிக் குழுக்களும் தான்.

பிழைப்பு வாதிகளும், பொறுக்கித்தின்னிகளும், ஒட்டுண்ணிகளும், நக்கிபிழைப்போரும் இந்த கொலைகளை நியாயப்படுத்த அவர் அவர் இடத்தில் இருந்தபடி செய்யும் கருத்துக்கு அப்பால், அவர்களுக்கு என்ற ஒரு தனி அபிப்பிராயம் உண்டு. யார் உண்மையான கொலையாளி என்பதை தெளிவாக தெரிந்து கொண்டு, மக்களை முட்டாளாக்க முடியும் என்ற அவாவுடன் பினாற்றுகின்றனர். ஆனால் இவர்களால் தான் புலியின் அழிவு என்பதை, வரலாறு தெளிவாக அறைந்து சொல்லும். புலிகளின் அழிவு உறுதி என்று தெரிந்தவுடன் இந்தக் கும்பல் தான், ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளாகவும், பேரினவாதிகளின் எடுபிடிகளாகவும் களத்தில் முன்னணி வரிசையில் அணிவகுத்து நிற்பர். இவர்கள் சந்தர்ப்பத்துக்கும், நிலைமைக்கு ஏற்ப பிழைப்பவர்கள். இது புலிக்கு எதிராகவும் நிச்சயமாக மாறும். இதை உலக வரலாறு எங்கேயும் பொய்யாக்கியது கிடையாது. உண்மையான தியாகங்கள் அனைத்தையும் இவர்களே முன்னணியில் நின்று புதைகுழியில் இட்டு நிரப்புவர்.

1 comment:

Sri Rangan said...

இரயாகரன்,இன்றைய தமிழ் மக்களின் அவலதைப் பிரதிபலிக்கும் கட்டுரையாக மட்டுமில்லாது ,அது எவ்வண்ணம் நிறைவேறுகிறது,எவ்வாறு தோற்குமென ஆய்ந்து கூறுகிறீர்கள்!இன்றைய, இந்த இருள் சூழ்ந்த நமது மக்களின் வாழ்வானது, மிகக் கடுமையான பல்முனைத் தாக்கத்தால் இன்னுமின்னும் மோசமாகிறது.சிங்களப்பாசிச அரசும்,அவர்களின் தமிழ்க் கைக்கூலிகளுமாக ஒரு மகாப் பெரும் அடக்குமுறை ஜந்திரம் ஒருபுறம் ,மறுபுறமோ தமிழீழமெனுங் கோசத்தோடு பாரிய அடக்குமுறை ஜந்திரமாகப் புலிகள் மாறியுள்ளார்கள்!இதை எங்ஙனம் மக்கள் வெல்வார்கள்?இந்த நிமிடம்வரை கொலைகள் விழுகிறது,இனியிந்த நாடானது இராணுவச் சர்வதிகாரக் காட்டாட்சிக்குள் வந்துவிடுமெனச் சொல்லாது-இந்த நிலையை நமது நாடு என்றோ எய்துவிட்டதெனக் கூறமுடியும்.நல்லவொரு பதிவு,இரயா.