தமிழ் அரங்கம்

Friday, October 14, 2005

கொன்று குவிக்கும்

புலி அரசியல், மக்களை எங்கே அழைத்துச் செல்லுகின்றது.

நாம் உலகின் அங்கீகாரத்தையும், மக்களின் அங்கீகாரத்தையும் பெறவேண்டின் நிச்சயமாக மக்களின் சமூக பொருளாதார உறவுடன் உள்ளடங்கி சமூகம் சார்ந்த கோரிக்கைளை முன்வைக்க வேண்டும். ஆனால் உண்மையில் தமிழ் மக்களின் அடிப்படையான தேசியப் பிரச்சனைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. பேரினவாத கட்சிகள் அனைத்தும் தமிழ் மக்களுக்கு என்ன அரசியல் தீர்வை தாங்கள் முன்வைக்கின்றோம் என்பதை முன்வைக்காது பேரினவாத அரசியல் களத்தில் இறங்கி நிற்கின்றன. அமைதி சமாதானத்தைக் கொண்டு வருவோம் என்ற மக்களை ஏமாற்றும் அரசியல் கோசத்தைத் தவிர, அதை எந்த தீர்வின் ஊடாக என்பதை சொல்லாத பேரினவாதமே, இன்று வெற்றிகரமாக அரங்கேறுகின்றது.

மறுபுறம் தமிழ் மக்களின் பிரச்சனைக்கான தீர்வை பேரினவாத கட்சிகள் முன்வைக்க கோரும் அரசியல் யுத்த தந்திரத்தை, புலிகளும் அதன் எடுபிடி கூலிக்கும்பலும் மறுதலிக்கின்றது. சுயநலம் பிடித்த தமது அற்ப கோரிக்கைகளுடன் தமது அரசியல் செயல்பாட்டை மட்டுப்படுத்தி, மக்களுக்கு வழங்கும் பொருளாதார நிவாரணங்களை கொள்ளையடிக்கும் எல்லைக்குள் தமது அதிகாரம் என்ற கோரிக்கைக்கும், தமிழ் மக்களின் பிரச்சனையை குறுக்கிவிட்ட நிலை இன்று காணப்படுகின்றது. தமிழ் மக்களின் ஜனநாயகக் கோரிக்கைகள் பேரினவாதம் முன்னும், தமிழ் தேசிய குறுந்தேசியவாதிகள் முன்னும் காணமல் போய், அவை கந்தலாகிவிட்டன. தியாகத்துடன் தொடங்கிய போராட்டம் சுயநலன் சார்ந்த இராணுவ கும்பல்களின் குறுகிய போராட்டமாகவே சிதைந்து போனது.

இந்த நிலையில், அற்பத்தனமான சுயநலம் சார்ந்த குறுகிய நோக்கங்களுடன், புலிகள் விசர் பிடித்த நாயாகவே துப்பாக்கியும் கையுமாக அலைகின்றனர். இன்று வரி கொடுக்க மறுத்தாலும் மரணதண்டனை விதிக்கும் எல்லைவரை, எங்கும் எதிலும் ஒரு அராஜகம் நிலவுகின்றது. மட்டக்களப்பில் கருணா புலி மோதலைக் கடந்து, இன்று யாழ் குடா வரை ஒரு தலைப்பட்சமாக, படுகொலைகளை புலிகள் மீண்டும் துடிப்புடன் தொடங்கியுள்ளனர். இது எதிர் தரப்பில் பதிலடி கொலைகளை உருவாக்கும் சூழலை விரைவாகவே உருவாக்கி வருகின்றது.

இன்று தேசியத்தின் பெயரில் கொலை செய்யப்படும் வடிவங்கள், நோக்கங்கள் கூட மேலும் மேலும் அதீதமான மனித விரோதத் தன்மையுடையதாக மாறிச் செல்லுகின்றது. புலிகள் தமது அரசியல் நடவடிக்கையை இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருந்து விலத்தியவுடன், விரிவான தொடர் படுகொலைகள் தொடங்கிவிடுவதை வரலாறு மீண்டும் எடுத்துக் காட்டுகின்றது. மனிதப் படுகொலைகள் புலிகளுக்கு விருப்பமான புலி உணர்வாக இருப்பதும், அதை ரசிக்கும் ஒரு கூலிக் கும்பலைக் கொண்டு இதை நியாயப்படுத்துவதும் அன்றாட நிகழ்ச்சியாக எம்முன் உள்ளது. எமது சமூகம் மனநோய் பிடித்த வன்மமும் வக்கிரமும் கொண்ட, சுயநலத்தில் தன்னைத் தான் தகவமைத்து நிற்கின்றது. உலகம் இதற்கு எதிரான மனித உணர்வு சார்ந்து இருப்பதை, இந்த கிணற்றுத் தவளைகள் கண்டு கொள்ளாத வகையில் தமது சொந்த கிடுகுவேலியை வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றனர். ஆனால் சுனாமி பேரலை ஒன்று பொங்கி கரைகளில் நிற்பதை காணமறுக்கும் சமூக மூடர்களாக, எமது கைக்கூலிச் சமூகம் தமது கண்களை மூடி, காதைப் பொத்தி உணர்வை இழந்து, தனது சமூக மரணத்துக்காக கிணற்று பொந்துகளில் வரிசையில் நிற்கின்றன.

இதற்கு தலைமை தாங்கும் புலிகளின் அரசியலுக்கு, ஒரேயொரு அரசியல் மொழிதான் அதற்கு உண்டு. அது மனிதப் படுகொலை. தமிழ் மக்களை விரும்பியவாறு அடக்கியாளவும், அணிதிரட்டவும், கொள்ளையிடவும் உள்ள அரசியல் வழியே, படுகொலை அரசியல் தான். இதுவே புலிகளை அதிகாரத்தில் தக்கவைக்கின்றது. மக்களின் சமூக பொருளாதார வாழ்வுடன் ஒன்றுபடாத புலிகள் இயக்கம், அந்த மக்களின் பொருளாதாரத்தை சூறையாடுவதில் மட்டும் மொத்த அரசியல் நகர்வையும், அது சார்ந்த குறுகிய அரசியலையும் கொண்டுள்ளனர்.மக்களின் வாழ்வோ ஆழமான சமூகச் சிதைவைக் கண்டு வருகின்றது. இது பற்றி எந்தவிதமான சமூக அக்கறையும் இவர்களுக்கு இருப்பதில்லை. மக்களை அடக்கியாள தொடர் படுகொலைகளை தொடர்சியாக செய்வது அவசியம் என்பதே, பிரபானிசத்தின் சித்தாந்தம். இதைத் தான் அவர்கள், தமது தமிழ் தேசியம் என்கின்றனர். கொல், முடிந்தால் கொன்று குவி, இது புலித் தேசியத்தின் பிரபானிச சித்தாந்தமாக உள்ளது.

இப்படிக் கொல்வதன் மூலம் தமிழீழத்தை நீங்கள் அடைய முடியமென்றால், தமிழ் மக்களை வரிசையில் விட்டே சுட்டுக் கொல்லுங்கள். ஜெர்மனிய ஆரியர்களின் தூய்மையை பாதுகாக்க நாசிசத்தை சித்தாந்தமாக வரிந்து கொண்டு, பாசிசத்தை அடிப்படையாக கொண்ட கிட்லர் யூதர்களை இப்படித் தான் கொன்றான். இதன் மூலம் ஜெர்மனிய சமூகத்தை தூய்மைப்படுத்தி உலகை ஆள தகுதியாக்க முனைந்தது போல், நீங்களும் தமிழ் மக்களை வரிசையில் நிறுத்தி கொலை செய்யுங்கள். இதன் மூலம் தமிழீழத்தைப் பெறுங்கள். அதை விடுத்து அன்றாடம் சிறுக சிறுக கொன்று குவிக்கும் கொலை வெறியாட்டம், தமிழ் தாய்மையின் கருவறையை குதறிக் கிழிப்பது போன்றதே. நீங்கள் ஒன்று செய்யலாம், தமிழீழத்தின் பெண்களின் தாய்மைக்குரிய கருவறைகளை வெட்டியெறிந்து, புலிகளையே தூய்மையாக்க முடியும்;. பெண்கள் பால் கொடுக்காது இருக்க, அவர்களின் சொந்த மார்பகங்களை அறித்தெறியுங்கள். ஆண்கள் குழந்தையை உற்பத்தி செய்யும் ஆற்றலை வரிசையில் நிறுத்திவைத்து நலமடியுங்கள். அதை உங்களால் செய்ய முடியும். அந்தளவுக்கு உள்ளது உங்கள் வக்கிரம். கொலைவெறியுடன் கூத்தாடும் உங்களுக்கு இவைகள் எந்தமட்டில்.

இவர்களின் சமூக ஒழுக்கமோ கெடுகெட்டது. விபச்சாரிக்கு மரணதண்டனை, விபச்சாரனுக்கு சட்ட ஆலோசனையுடன் பாதுகாப்பை வழங்கும் தேசிய வக்கிரம். இவை எல்லாம் தேசியத்தின் பெயரில் அரங்கேறுகின்றது. சமூக நடத்தை நெறிகள், எந்தவிதமான நீதி நேர்மையுமற்ற வகையில், அனைத்தையும் புலிகள் என்ற இராணுவ கும்பலுக்கு சார்பாக வளைத்துப் போடுதல் தான், தமிழ் தேசியமாக காட்டப்படுகின்றது. மக்கள் வாய் பொத்தி, மௌனமாகவே தமது கடுமையான உழைப்பின் விளைவை புலிகளின் முன் சமர்ப்பித்து, உயிர் வாழும் உரிமைக்காக தம்மை வழிபடக் கோரும் புலித்தேசியமே இன்று எம்மண்ணில் அரங்கேறும் காட்சி படிமங்கள்.

புலிகள் மாறிவிட்டார்கள், அதோ பாருங்கள் என்று சிறகு கட்டி பறந்த புலி கூலிக் கும்பல்கள், இன்று நடப்பதை இட்டு மௌன விரதம் இருக்கின்றனராம். தமிழ் பத்திரிகைகள், புத்திஜீவிக் கும்பல்கள் என அனைத்தும், மக்களுக்கு எதிராக, கூலிக்கும் புகழுக்கும் மாரடிக்கும் சமூகவிரோத கும்பலாக சீரழிந்துவிட்டது.

உண்மையில் புலிகளின் கொலைப் பட்டியலில் அன்றாடம் மடிந்து போகும் உயிர்களின் மீதான புலித் தீர்ப்புகள் சார்ந்த குற்றங்கள், உண்மையின் பாலானவையல்ல. மாறாக புலிகளின் சொந்த நடத்தைகள் ஏற்படுத்திய அதிர்வில் ஏற்பட்ட பிரதிபலிப்புகளின் மேல் தான், படுகொலை அரங்கேறுகின்றது. புலிகள் தாம் வலிந்து சமூகத்துடன் முரண்படும் அவர்களின் அன்றாட நடத்தைகளே, தன்மானம் உள்ளவர்களின் அதிருப்;திக்கு உள்ளாகின்றது. இதை எதிர்க்கின்ற ஒரு ஜனநாயக செயல்பாட்டின் போதே, அதை எதிர்கொள்ள முடியாத அரசியல் கோழைகளான புலிகள், இதன் மீதான படுகொலைகளை அன்றாட நிகழ்ச்சி நிரலாக்கிவிட்டனர். அன்றாட செய்திகளில் கொலைகள் இல்லாது இருப்பின், சூரியனே உதிக்க மறுக்கின்றது. தமிழீழத்தில் சூரியன் அஸ்தமித்து இருண்டுவருகின்றது. இன்று ஒன்று இரண்டு மூன்றாக படுகொலைகள் நாளாந்தம் பெருகிச் செல்லுகின்றது. மக்களின் மேலான இந்த துர்நடத்தைகள் மூலம், பயப்பீதியை விதைத்து, அதன் மேல் பிரபானிச சித்தாந்தம் கொலுவீற்றிருக்கின்றது. இதன் மூலம் மக்களின் உழைப்பை திருடி, பெரும் சொத்துகளை குவித்து புலிகள் வயிற்றை வளர்கின்றனர் என்றால், இதற்கு எதிரான புலியெதிர்ப்பு வாதிகளும் கூட இதைச் சொல்லித் தான் தமது வயிற்றை வளர்க்கின்றனர்.

பாவம் மக்கள். மக்கள் வாழ்விழந்து இந்த அரசியல் கூத்தில் தத்தம் உயிர்களையும், தமது உழைப்பு சார்ந்த பொருட்களையும் இழந்து, வாய்பொத்தி கைகட்டி வாழ்வதே பிரபானிசத்தின் சித்தாந்த உள்ளடக்கமாகும். இதைத் தான் பொலிஸ்காரன் நடேசன் தனது சொந்த தொழில் சார்ந்த தேசிய மொழியில், பிரபானிசம் என்று மிகவும் உள்ளக் கிளர்ச்சியுடன் அறிவித்தார். பொலிஸ்காரன் நடேசன் கூறியது போல், இது அனைத்து தமிழ் சமூகக் கூறிலும் அன்றாடம் மனித சிந்தனைத் தளத்தை ஆட்டிப்படைக்கும் இயக்க கூறாக மாறிவிட்டது. புலி பிரபானிசத்தின் கொலைகள் அற்ற நாட்கள், அதை சர்ந்து வாழும் லும்பன் பிழைப்புவாத ஆதரவாளர்களுக்கு மிகவும் சோர்வான நம்பிக்கை தகர்ந்த நாட்களாக மாறிவிடுகின்றது. ஒரு மனநோய்க்குரிய மனித பிழற்சி கண்ட, மனித விரோத வெறி அவர்களையே ஆட்டிப்படைக்கின்றது.

இந்தக் கும்பல் தமிழ் மக்களின் அடிப்படையான ஜனநாயகக் கோரிக்கைகள் எல்லாம், தமிழ் சமூகத்தில் இருந்தே துடைத்தெறிந்த நிலையில் குதிராட்டம் போடுகின்றனர். எஞ்சியிருக்கும் சமூகக் கூறுகளையும், அதன் சமூக வேர்களையும் அழிப்பதற்காக தொடர் படுகொலைகளை நடத்துகின்றனர். மனித விரோதத் தன்மை அதிகரிக்க அதிகரிக்க, சொந்த இராணுவ கட்டமைப்பு பலவீனமாவது அன்றாட நிகழச்சியாகிவிட்டது. சொந்த உள் படுகொலைகளையும் தாண்டி, முரண்பாடுகள் மேலும் நுட்பமாகி கூர்மையடைகின்றன. மறுபுறம் தமது இந்த கொலைவெறி இராணுவ கும்பல் நலன்களை கட்டிப்பாதுகாக்க உதவிய, சுயமான பங்களிப்பு என்ற சமூக உணர்வு ஓட்டமே அடியோடு தகர்ந்து போயுள்ளது. மக்களுக்கும் இந்த புலி இராணுவ கும்பலுக்கும் இடையில் உள்ள இடைவெளி அதிகரித்தே வந்துள்ளது. தமது சொந்த நடத்தைகளே, தமது இராணுவ கும்பலுக்கு ஆட்களை பெறுவது மேலும் சிரமமானதாகி விடுகின்றது.

இதன் ஒரு அங்கமாகவே மிகவும் பின்தங்கிய சமூக அறிவு மட்டத்தில் உள்ள, இளம் பெண்களை முதலில் அணிதிரட்ட முடிந்தது. ஆணாதிக்க அமைப்பில் பெண்ணின் அடிமைநிலையால், இயல்பாகவே பின்தங்கிய அறிவு மட்டத்தினை உடைய பெண்களை புலிகள் தமக்கு சார்பாக பயன்படுத்தினர். பெண்களை தமது இராணுவ கும்பல்வாத செயலுக்காக பெருமெடுப்பில் அணிதிரட்டினர். இதுவும் வாழ்க்கை அனுபவம் மற்றும் பொதுவான சமர்ச்சீரான நிலையால், தொடர்ந்தும் இந்த இராணுவ கும்பல்வாத அரசியலுக்கு அணிதிரட்டும் பாதை முட்டுக்கட்டைக்கு உள்ளானது. இதை அடுத்து குழந்தைகளின் அறியாப் பருவத்தையும், கவர்ச்சிகரமான மயக்கத்தையும் பயன்படுத்தி தமது இராணுவ கும்பல்வாத அரசியலுக்கு ஏற்ற கூலிக் கும்பலாக குழந்தைகளை மாற்றியமைத்தனர். இந்த குழந்தைகளின் அரசியல் அறிவே நாலு தூசணம் தான். இதைவிட்டால் எந்த பொது அறிவும் கிடையாது. இந்த குழந்தைகளுக்கு சமூக வாழ்வுடன் ஒன்றிப் போன எந்த வாழ்வியல் உணர்வும், உணர்ச்சியும் கிடையாது. உணர்ச்சியற்ற பொம்மைகள் போல், கீயை முறுக்கிவிட்டால் கொலை வெறியாட்டத்தில் மூழ்கி எழக்கூடியவர்களாகவே, இவர்களை பிரபானிசம் உற்பத்தி செய்து குவித்துள்ளது. கொல் முடிந்தவரை கொல், இது அவர்களுக்க தெரிந்த நாலு தூசணத்துடன் உச்சாடனம் செய்யும் அதியுயர் தேசிய சித்தாந்தாமாகும்.

மக்களின் சமூக உழைப்பை சூறையாடி ஆடம்பரமாக வாழும் மேற்கத்தைய மனப்பாங்குடன் கூடிய லும்பன் உணர்வுடன், வெறிபிடித்து உறுமுகின்றனர். எந்நேரமும் துப்பாக்கி வேட்டுகளை தீர்க்கும் மனவுளைச்சல் சார்ந்த ஒரு உணர்வுடன், கூண்டில் அடைத்து கிடக்கும் வெறிகொண்ட ஒரு விலங்காகவே இந்த குழந்தைகளை பிரபானிசம் உற்பத்தி செய்துள்ளது. மறுபுறம் சமூகம் தனது குழந்தையை இட்டு கொண்ட பயப்பீதி, இயல்பாகவே தமது சொந்தக் குழந்தைகளை, இந்தப் புலி இராணுவ கும்பல் நெருங்காத வண்ணம் அதீதமான கண்காணிப்பை கொண்ட தற்காப்பை அடைந்தது. இது இயல்பாகவே குழந்தைகளை ஆயுதபாணியாக்கும் பிரபானிச சித்தாந்தம் தடைப்பட்டு, புலி இராணுவ கும்பலுக்கு ஆட்களை சேர்ப்பதில் புதியதொரு நெருக்கடி உருவானது.

வெறிகொண்டு அலையும் புலி இராணுவ கும்பல், இதில் இருந்து மீள பலாத்காரமாகவே குழந்தைகளை கடத்திச் சென்று இராணுவ மயமாக்கும் திட்டத்தை இன்று அமுல்படுத்தியுள்ளனர். எங்கும் கட்டாய இராணுவ பயிற்சி என்ற பலத்காரமான செயல் நடத்தைகள், இன்றைய எதார்த்தமான செய்தியாக உள்ளது. இதையே மக்கள் புரட்சி என்று பிரபானிச சித்தாந்தம் வரையறுக்கின்றது. கட்டாய பயிற்சி முறைக்கு, குழந்தைகளை கடத்திச் செல்லுதல், இன்று புலியின் அரசியல் நடத்தை நெறியாகியது. புலிகளின் அரசியலில் இதுவும் ஒன்றாகிவிட்டது. புலியின் அரசியல் என்பது வரி அறவிடல், குழந்தையை கடத்துதல், படுகொலைகளை செய்தல், மக்களை கண்காணித்தல், வன்முறையை சூழ்ச்சியாகவே தூண்டுதல், பொய்களை உற்பத்தி செய்து விதண்டாவாதமாக்குதல், இதைத் தாண்டி புலிக்கு என்று வேறு அரசியல் கிடையாது.

அமைதி சமாதானம் என்ற புலிகள் வரையறுப்பது இதைத்தான். தாம் விரும்பியவாறு சுதந்திரமாக இதைச் செய்யும் உரிமையை, அங்கீகரிப்பதைத் தாண்டி வேறு எதுவுமல்ல. இதற்கு ஒரு அரசியல் அதிகாரத்தைக் கோருகின்றனர். இதையே தமிழீழத்துக்கான முதற்படி என்கின்றனர்.

இதுவே பேரினவாதத்துக்கு மிகவும் இனிப்பான ஒரு விடையம். தமிழ் மக்களுக்கு எதிராக பேரினவாதம், எதை காலகாலமாக செய்ய நினைத்ததோ அதை புலிகள் நடைமுறைப்படுத்தி இருப்பதையிட்டு பேரினவாதம் மகிழ்;ச்சியில் திளைக்கின்றது. தமிழ் மக்களின் சமூக பொருளாதார வாழ்வு புலிகளின் நடைமுறை ஏற்படுத்தும் ஆழமான பாரிய சிதைவு, பேரினவாதத்தின் ஆதிக்க மனபான்மைக்கு இனிப்பான ஒரு வெற்றிதான். இதன் மூலம் தமிழ் மக்கள் மீள முடியாத வரலாற்று சிதைவைச் சந்தித்துள்ளனர். புலிகள் என்ற இராணுவக் கும்பல் தமிழ் மக்களின் வாழ்வையே இன்று சூறையாடும் நிலையில், இயல்பாகவே இலங்கையில் சிங்கள இனம் மேன்மை பெற்ற ஆதிக்க இனமாக மாறிவிட்டது. இது பல தளத்தில் நிகழ்ந்துள்ளது.

இது எண்ணிக்கையில், பொருளாதார பலத்தில், சமூகக் கூட்டில், பண்பாட்டில் என எங்கும் தமிழ் சமூகத்தை விடவும், மிகவும் மேன்மை பெற்ற ஒன்றாகவும், பலம் பொருந்திய ஒன்றாக மாறிவிட்டது. மலையக, முஸ்லிம் மக்கள் கூட தமிழ்மக்களின் வாழ்வை விட மேன்மை பெற்ற, ஒரு சமூக அடிப்படையை அடைந்துள்ளனர். உண்மையில் புலியின் சமூக நடத்தை நெறிகள் எங்கும் எதிலும், தமிழ் இனத்தின் சுய அடையாளத்தை அழித்து வருகின்றது. தமிழ் மக்களின் சமூக இருப்பின் அழிவு, புலி இராணுவ கும்பலின் சுகபோகமான வாழ்வுமுறையாக பரிணமிக்கின்றது. இதற்காகவே வெறிகொண்ட மனித விரோதநடத்தை நெறிகள் மேலும் மேலும் கூர்மையாகின்றது.

அமைதி சமதானம் என்று, எதை எங்கு நோக்கிலும், அங்கு அதில் புலிகளின் மனிதவிரோத நடத்தையே மேன்மை பெற்ற போக்காக உள்ளது. தனது சொந்த மக்கள் விரோதத் தன்மையிலான போக்கையிட்டு, எந்தவிதத்திலும் அலட்டிக் கொள்ளாத கூலி இராணுவ குணாம்சத்தை பெற்றுவிடுகின்றது. இதற்கு தலைமை தாங்கும் பிரபானிச சித்தாந்த தலைமை, தனது குறுகிய சொந்தப் பாதுகாப்பு என்ற குறுகிய வேலிக்குள் மேலும் மேலும் பதுங்கிக் கொள்கின்றது. தனது சொந்த நடத்தையால் மக்களையிட்டு ஏற்படும் அச்ச உணர்வு, இயல்பாகவே அனைத்தையும் எதிரியாக காண்பதும் சித்தரிப்பதும் அன்றாட போக்காகிவிடுகின்றது. கண்ணை மூடிக்கொண்டு கண்ணில ;படுவதை எல்லாம் சுட்டுப் பொசுக்கி, தமது சொந்த பிரபானிச சர்வாதிகார கனவில் மிதக்கின்றது. காலகாலமாக அவர்கள் திண்டு குடித்து வளர்ந்த இராணுவப் பாதை, எந்தவிதமான மாற்றமும் இன்றி அனைத்தையும் இராணுவ வழியில் காண்கின்றது. இதுவே கூலி இராணுவத்துக்குரிய கண்ணோட்டத்தை பெற்றுவிட்டது. கூலி பிரச்சாரக் கும்பல், கூலி புத்திசீவிக் கும்பல் என்று எங்கு திரும்பிலும், எதிலும் கூலித்தனம் காணப்படுகின்றது.


விரிவான கட்டுரைக்கு http://tamilcircle.net/news/europ.htm

No comments: