தமிழ் அரங்கம்

Sunday, September 24, 2006

நூல் அறிமுகம்: ஈழம் : சமர் புரியும் உண்மைகள்!

நூல் அறிமுகம்:
ஈழம் : சமர் புரியும் உண்மைகள்!

லக வரைபடத்தை உற்றுப் பார்த்தால் நாதியற்று நடுக்கடலில் வெட்டி வீசியெறியப்பட்ட இதயத்துண்டாய் நம் கண்ணில் படுகிறது இலங்கைத் தீவு.


""விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள இராணுவத்திற்கும் சண்டை, புலிகள் தமிழகத்தில் ஊடுருவல்'' என்ற பூச்சாண்டியைத்தவிர செய்தித்தாள்கள் வேறு எதையும் சொல்வதில்லை. புலிகளின் தமிழகத்து ஆதரவாளர்களோ புலிகளின் போர் முறையை வியந்து சிங்கள இராணுவம் திணறல், கடல் புலிகள் சாகசம், எட்டிவிடும் தூரத்தில்தான் ஈழம் என்று புலிப்பாணி சோதிடர்களாய் பொழிப்புரை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.


ஆனால் நடப்பது என்ன? சிங்களப் பேரினவாதத்தின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எழுந்த ஈழத்தமிழர்களின் தேசிய இனப் போராட்டம் திசை விலகி சிங்கள இனவெறி அரசு, விடுதலைப்புலிகள் இரு தரப்புமே அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்களின் மேற்பார்வையின் கீழான ஒரு இழுபறிச் சண்டையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இரு தரப்பு இலக்குகளுமே ஏகாதிபத்தியங்கள் நிர்பந்திக்கும் திசையில் இழுத்துச் செல்லப்படுகின்றன. இந்தப் புரிதலின் வெளிப்பாடுதான் இருதரப்புமே நார்வே தூதுக்குழு முன்னிலையில் செய்து கொண்ட "புரிந்துணர்வு' ஒப்பந்தங்களும், புலிகளின் "இடைக்கால தன்னாட்சி அதிகாரங்களும்'.


புலிகளின் போக்கை விமர்சனம் இன்றி ஆதரிக்காதவர்கள் அனைவரும் இனத்துரோகிகளென்று கூறி ஈழத்தமிழர்களுக்கான அரசியல் உரிமையை மறுத்தும், மாற்று அரசியல் கருத்தாளர்களைப் புலிகள் படுகொலை செய்தும் வரும் சூழலில், ஈழத் தமிழர்களின் தேசிய நலனும் ஒட்டு மொத்த இலங்கையுமே அன்னிய ஆக்கிரமிப்பாளர்களான ஏகாதிபத்தியங்களிடம் அடகு வைக்கப்படுவதைக் கண்டித்து ஒரு குரல் கேட்கிறது.


புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழரான பி.இரயாகரன் அவர்கள் எழுதியிருக்கும் மூன்று நூல்கள் சிங்கள அரசின் இன ஒடுக்குமுறை மற்றும் அதற்கு எதிரான ஈழத் தமிழர் போராட்டத்தின் முழுப் பரிமாணத்தையும், வர்க்க உள்ளடக்கத்தையும், தெளிவுபடுத்துவதில் சிறப்பான பங்காற்றுகின்றன.


1. இலங்கை: யுத்தத்தின் பரிணாமமும், உலகமயமாக்கலின் படையெடுப்பும்


ஈழத் தமிழர்களின் தேசிய இனப் போராட்டம் சிங்கள இனவெறிக்கு பதிலடியான யுத்தமாக பரிணமித்து, பிறகு ஏகாதிபத்தியங்களின் உலகமயமாக்கல் நலனுக்கு உட்பட்டவையாக மாறியதை இந்நூல் புள்ளிவிபரங் களோடும், இலங்கையின் நிகழ்வுகளோடு தொகுத்தும் கூறுகிறது. யாழ்ப்பாணத்தையே மையப்படுத்தி ஆய்வு செய்யும் நூல்களுக்கு மத்தியில், ஈழத்தின் உழைக்கும் மக்கள், மலையகத் தமிழர்கள், சிறுபான்மையினர் உள்ளிட்டோரின் வாழ்க்கைப் போராட்ட இனப் பிரச்சினையைப் பொருத்தி விவாதிக்கிறது இந்நூல்.


""யாழ்ப்பாணத்தின் அற்ப பூர்சுவா கனவுகளையே இயக்கம் தலைமை தாங்குகிறது. மலையக மக்கள், முசுலீம் மக்கள், பின் தங்கிய பிரதேச மக்கள், தாழ்த்தப்பட்ட மக்களின் நலன்கள் என எதைப் பற்றியும் கவலைப்படாத போராட்டம். (பக்.16)'' இப்படி கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் அனைத்திலும் ஈழத்தமிழர்களிலேயே பெரும்பகுதியினரைப் புறக்கணித்த வரலாற்றை நூல் அடுக்கடுக்காக விவரிக்கிறது.


சிங்கள இனவெறியையும் ஏகாதிபத்தியங்களையும் எதிர்க்கும் புரட்சிகரக் குழுக்களைக்கூடச் செயல்பட அனுமதிக்காத புலிகள், தன்னார்வக் குழுக்களை மட்டும் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்திருப்பதை அம்பலப்படுத்துகிறார் நூலாசிரியர். ஐரோப்பிய யூனியன் 8.8 லட்சம் டாலரை வழங்கியுள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கி முதல் அமெரிக்கா ஈறாக அனைவரும் பணத்தை வாரி வழங்குகின்றனர். ஏகாதிபத்திய நிதி உதவியில் இலங்கையில் 3000 தன்னார்வக் குழுக்கள் செயல்படுகின்றன.'' (பக். 104)


உலகமயமாக்கலின் அதிகாரத்தின் கீழ் நடைபெறும் யுத்தத்தின் சகலவிதமான தேசவிரோத நடவடிக்கைகளையும் இனங்காட்டுவதோடு, ஒரு தேசத்தின் நலன்களைப் பாதுகாக்கும் அரசியல் யுத்தத்தின் அவசியத்தையும் வலியுறுத்துகிறது இந்நூல். (பக். 111)


2. ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் கீழ் இலங்கை


சிங்கள இனவெறிஅரசு, விடுதலைப் புலிகள், தமிழின விரோதக் குழுக்கள், தனிநபர் அராஜகவாதிகள் ஆகிய அனைவருமே ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிந்து போவதைச் சொல்கிறது இந்நூல். ""சமாதானமா? யுத்தமா? என்பதை மையமான பொருளாக்கிய ஏகாதிபத்தியம் விரிவாகவே களமிறங்கியுள்ளது. புலிகளுக்கும், அரசுக்கும் பின்பக்கமாகக் கைகள் இறுகக் கட்டப்பட்ட நிலையில் சமாதானம் பற்றி மூலதனம் உத்தரவுகளை இடுகிறது... (பக். 5)''


""உதாரணமாக 2002இல் பட்டியலிடப்பட்ட 208 கம்பெனிகள், முதல்கால் பகுதியில் பெற்ற நிகர லாபம் 390 கோடி ரூபாயாகும். சென்ற வருடத்துடன் ஒப்பிடும்போது 85 சதவீதம் அதிகமாகும். உண்மையில் சமாதானம் அமைதி என்பதை வெளிநாட்டு மூலதனமே தனக்கு இசைவாகப் பயன்படுத்தியுள்ளது. (பக்.5)''


""2003 (ஜனபிப்) தை மாதம் இலங்கைத் துறைமுகத்துக்குள் 22,258 கப்பல்கள் வந்தன. இது வழமையை விட 12 சதவீதம் அதிகமாகும். ஏற்றி இறக்கிய கொள்கலன்கள் 1,46,737 ஆகும்.


அமெரிக்க பினாமியான நார்வே மத்தியஸ்தம் மூலம் ""இடைக்கால தன்னாட்சி அதிகாரம்'' என்று ஏகாதிபத்தியங்கள் முன் புலிகள் செய்திருக்கும் சமாதானம் என்பதும் எப்படி மக்கள் நலனுக்கு எதிராக உள்ளது என்பதை பக்.170இல் தொடங்கும் அத்தியாயங்கள் விவரிக்கின்றன. புலிகளின் பொருளாதாரக் கொள்கை, மக்களிடம் வரி அளவிடும் முறை, தேசிய உற்பத்தியின் சூறையாடல் போன்ற விவரங்கள் ஈழத்தைச் சுற்றிப் பார்க்கப் போய் வரும் தமிழகத்து "புலிச்சுற்றுலா' நபர்களின் நூல்களில் மறைக்கப்படும் உண்மைகளாகும்.


"".... மூன்றாவது தமிழீழத் தேசிய விளையாட்டு விழாவை புலிகள் 20.2.2004 அன்று கிளிநொச்சியில் நடத்தினர். அந்தத் தேசிய விழாவில் கொக்கோ கோலா விளம்பரங்கள், புலிக் கொடியை விட பெரிய அளவில், புலிக்கொடியின் பின்னணியில் வடிவ மைக்கப்பட்டிருந்தது. (பக்.112)''


""இனச்சண்டையில் பாட்டாளியாவது வர்க்கமாவது, அதெல்லாம் நடக்காது. களத்தில் நின்று பார்த்தால்தான் புரியும்'' என்று வர்க்க ஒற்றுமைக்கு எதிராக வக்கணை பேசுகிறார்கள் வவுனியா கைடுகள். ஆனால், பன்னாட்டுக் கம்பெனிகளுடன் வர்க்க ஒற்றுமை கொள்வது மட்டும் சாத்தியம் என்பதைத் தமது ஏகாதிபத்திய சேவையின் மூலம் புரிய வைத்திருக்கிறார்கள் புலிகள்.


""அண்மையில் பிரபாகரனின் மகன் வெளிநாடு சென்று கல்வி கற்க இலங்கை அரசின் ஊடாக கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) எடுத்த செய்தி மெதுவாக கசிந்துள்ளது. இதுவரை புலிகள் இதை மறுக்கவில்லை. யுத்தத்தை மிகக் கேடாகப் பயன்படுத்தி தமிழ் மக்களுக்கு... மண்ணெண்ணையை விற்று மக்களையே கொள்ளையடித்து கோடீசுவரனான ஆளும் கட்சியின்... மகேஸ்வரன்... பிரபாகரனின் மகளின் கடவுச்சீட்டை நேரடியாக பெற்றுக் கொடுத்ததாக, தகவல் கசிகிறது. இவன் இந்துக் கோயில்களின் தர்மகர்த்தாவாகவும், சாராயக் கடைகளின் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும் ரவுடியாகவும் இருக்கிறான்... (பக்.36)


இப்படி இனவெறி அரசுடனும் மக்கள் விரோதிகளுடனும் கூடத் தரகுத் தமிழ்த் தேசியம் உடன்பட்டுப் போகும்போது, ஏகாதிபத்திய "உதவிகள்' கசக்கவா செய்யும்? இதனை விரிவாகப் பட்டியலிடுகிறது மூன்றாவது நூல்.


3. இலங்கை: இயற்கைப் பேரழிவு, தேசத்தின் சீரழிவு


சுனாமியால் கடும் பாதிப்புக்குள்ளான இன்னொரு நாடான இந்தோனேசியாவை விட அதிகமாக ஏகாதிபத்திய நாடுகள் இலங்கையில் வந்து குவிந்து, உதவி, கடன் வழங்குவது ஏன்? அது இலங்கையின் இயற்கை வளங்களைப் பங்கு போடத்தான் என்பதை ஆதாரங்களுடன் அம்பலம் செய்கிறது இந்நூல்.


சிங்கள இனவெறி அரசு மற்றும் புலிகள் சுனாமி நிதியைப் பெறுவதற்கு ஏகாதிபத்தியங்களிடம் தேசிய நலன்களை அடகு வைத்தது பற்றியும், கண்டு கொள்ளப்படாத முசுலீம் மக்கள் மற்றும் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட மக்களின் நிலைமைகள் பற்றியும், ஜே.வி.பி.யின் இனவாதத்தையும், சுனாமியைச் சாக்கிட்டு நுழைந்த ஏகாதிபத்திய தன்னார்வக் குழுக்கள் செய்யும் குடி கெடுக்கும் வேலைகளையும், இயற்கையின் பாதிப்பிலும் நாட்டை ஏகாதிபத்தியங்களிடம் மீள் அடகு வைக்கும் அரசியல் நிகழ்ச்சிகளையும் போதிய விவரங்களுடன் புரிந்து கொள்ள இந்நூல் வழிசெய்கிறது.


நூலாசிரியர் சமூக நடவடிக்கைகளை விட்டு ஒதுங்கி "கள ஆய்வு' செய்து கருத்துக்களை வண்ணம் குழைக்கும் நுண்மான் நுழைபுலம் கொண்ட வெறும் ஆய்வாளரல்ல. ஈழத்து அரசியல் களத்தில் மார்க்சியலெனினிய சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டு மக்களிடம் அரசியல் வேலை செய்தவர். இயக்கமாய் இயங்கியவர். அந்தக் காரணத்துக்காகவே புலிகளின் சித்திரவதை முகாமில் தண்டனைக்கு உள்ளானவர். மாற்று அரசியல் பேசும் உரிமையும் உயிர் வாழும் உரிமையும் மறுக்கப்பட்ட நிலையில், புலம் பெயர்ந்தாலும் வர்க்க நலன் பெயராமல் ஈழத்தை நோக்கியும், சர்வதேசப் பாட்டாளி வர்க்க உணர்வுடனும் இயங்கிக் கொண்டிருப்பவர்.


இம்மூன்று நூல்களும் இலங்கை, ஐரோப்பா மற்றும் தமிழகத்தில் பரவலாக அறிமுகமாகியிருந்தாலும், கம்யூனிச அரசியலுக்கு எதிரான காய்ச்சலால், இனவாதிகளாலும், அராஜகவாதிகளாலும் இருட்டடிப்பு செய்யப்படுபவை. இனப் பிரச்சினையைப் பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டத்தில் பார்க்க விரும்புவோர்க்குத் துணை புரிபவை.


இலங்கை: யுத்தத்தின் பரிணாமமும் உலகமயமாக்கலின் படையெடுப்பும்


ரூ. 40.00


ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் கீழ் இலங்கை


ரூ. 70.00


இலங்கை: இயற்கைப் பேரழிவு தேசத்தின் சீரழிவு


ரூ. 150.00


ஆசிரியர் : பி. இரயாகரன்.


வெளியீடு : சமர், பிரான்சு.


தமிழகத்தில் நூல் கிடைக்குமிடம்:


கீழைக்காற்று வெளியீட்டகம்,


10, அவுலியா சாகிபு தெரு,


எல்லீசு சாலை,


சென்னை 600 002.


தொலைபேசி: 04428412367


அஞ்சலில் நூல் வேண்டுவோர் நூலின் விலையுடன் ரூ. 17.00 சேர்த்து M.O. செய்யவும்.

No comments: