தமிழ் அரங்கம்

Monday, September 25, 2006

இட ஒதுக்கீடு எதிர்ப்பு: ஆகாவென்றெழுந்தன பார், தவளைகள்!

இட ஒதுக்கீடு எதிர்ப்பு: ஆகாவென்றெழுந்தன பார், தவளைகள்!

நான் டெல்லியின் பிரபலமானதொரு பள்ளியில் படித்தேன். 12ஆம் வகுப்பு முடியும் வரை எனக்கு, நாம் நம்முடைய சாதியினால் அடையாளம் காணப்படுகிறோம் எனத் தெரியாது. மருத்துவக் கல்லூரியில்தான் சாதி எனும் நச்சுப் பாதையில் நான் நுழைக்கப்பட்டேன். அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் கட்டாயம் வழங்கப்பட வேண்டும். அதன்பிறகு திறமை அனைத்தையும் தீர்மானிக்கும். நலிந்த பிரிவினருக்குத் தேவைப்படுவது நல்ல பள்ளிகள்தானேயன்றி, இடஒதுக்கீடு போன்ற சலுகைகளல்ல.


சமீபத்திய பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டின் மூலம் மாணவர் சமூகத்தைப் பிரிக்க முயன்ற அரசின் முயற்சிகள் எங்களிடம் ஒரு ஆழமான காயத்தை உண்டாக்கி விட்டன. என் கல்லூரியில் படிக்கும் 120 மாணவர்களில் உள்ள 80 முற்பட்ட சாதி மாணவர்களும் எம்.பி.பி.எஸ். முடித்தவுடன் வெளிநாடு சென்றுவிட முடிவெடுத்திருக்கிறோம்.


இது எங்கள் நாடே அல்ல என்பது போல் நாங்கள் நடத்தப்படுகிறோம். இன்றைய இந்தியாவில், மேல்சாதிக் குடும்பத்தில் பிறப்பது ஒரு குற்றமாகி விட்டது.''


அபிஷேக் பன்சல், எம்.பி.பி.எஸ். மாணவர், "சமத்துவத்திற்கான இளைஞர்கள்' அமைப்பின் துவக்க உறுப்பினர். (வீக் ஆங்கில வார இதழில்)


12ஆம் வகுப்பு முடியும் வரை இந்த நாட்டில் சாதி என்ற ஒன்று இருப்பதே தெரியாமல் வளர்ந்த இந்த "பரிதாபத்திற்குரிய' கான்வென்டுத் தவளையைப் போன்ற தவளைகளின் ஒப்பாரி, கடந்த இரு மாதங்களாக தொலைக்காட்சிப் பெட்டிகளின் வாயிலாக நாட்டையே செவிடாக்குமளவிற்குப் பேரிரைச்சலாய் ஒளிபரப்பப்பட்டது.


இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (ஐ.ஐ.டி), இந்திய மேலாண்மைக் கழகம், இந்திய அறிவியல் கழகம், 20 மையப் பல்கலைக் கழகங்கள், ஆறு மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில், பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அர்ஜுன் சிங் அறிவித்த நாளிலிருந்து கூச்சலும், கூப்பாடும் ஆரம்பமானது. அர்ஜுன் சிங் அங்கிள் ரொம்ப மோசம், நாங்கள் மன்மோகன் சிங் அங்கிளிடம் பேச வேண்டும் என்று அடம் பிடித்தன "காம்ப்ளான்' குழந்தைகள். அப்படி இப்படி இழுத்து, பிறகு, மன்மோகன் அங்கிளும் மேலோட்டமாய்க் கைவிரித்து விட, "சமத்துவத்திற்கான இளைஞர்கள்' என்ற பெயரில் டெல்லி, மும்பை முதலிய மாநகரங்களின் மேல்சாதி மருத்துவக் கல்லூரி மாணவர்கள், இடஒதுக்கீடு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தத் துவங்கினார்கள். மும்பையில் நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில் போலீசு தடியடி நடத்தியது. சூடு பிடிக்கும் வகையில் விற்கக் கூடிய விசயம்தான் என்பதாலும், தங்கள் சொந்த வர்க்கசாதிப் பாசத்தாலும், என்.டி.டி.வி, சி.என்.என் ஐ.பி.என் முதலான ஆங்கில செய்தித் தொலைக்காட்சிகள், வெறியோடு உருமி அடிக்கத் துவங்கியதில் ஆகாவென்றெழுந்தன ஆவேசமுற்ற தவளைகள்.


அகில இந்திய மருத்துவக் கழக மருத்துவர்களும், தரகு முதலாளிகளும், பத்திரிக்கைகளும், தகவல் தொழில்நுட்ப ஊழியர்களும் ஜோதியில் கலக்க, டெல்லியில், உண்ணாவிரதம் துவங்கியது. இடஒதுக்கீடு அமலுக்கு வந்தால், தாங்கள் செருப்பு தைக்கத்தான் போக வேண்டும் என்பதாக, ஷý பாலிஷ் போடுதல், தரையைக் கூட்டுதல் போன்ற "போராட்டங்களை' நிகழ்த்தினார்கள். தற்கொலைக்கு அனுமதி கேட்டு குடியரசுத் தலைவரிடம் மனு கொடுத்தார்கள் "போராளிகள்'. இறுதியில் பதினெட்டுப் பட்டிக்கும் நாட்டாமை சுப்ரீம் கோர்ட்டு, மருத்துவர்களை வீட்டுக்கு அனுப்பலாம் என செல்லமாய் கடிந்து கொண்ட பின்னால்தான் ஆரவாரம் அடங்கியது.


இதுநாள் வரை யார் போராடுகிறார்கள், எதற்காகப் போராடுகிறார்கள் என்பது குறித்து சிறிதும் அக்கறையின்றி "போக்குவரத்துக்கு' இடையூறு பண்ணுவதாக தொழிலாளர்களின் ஊர்வலத்தை சகட்டுமேனிக்கு திட்டித் தள்ளியவர்கள், தாங்கள் ரகளை செய்தபொழுது, ஊரே ஸ்தம்பிக்க வேண்டுமென்று குட்டிக்கரணம் போட்டார்கள்.


இவற்றையெல்லாம் மீறி, இப்போராட்டம் பிசுபிசுத்துப் போனதற்குக் காரணம், 1990 மண்டல் எதிர்ப்பில் முன்நின்ற மேல்சாதிக் கட்சிகளான காங்கிரசும், பா.ஜ.க.வும் தற்பொழுது அடக்கி வாசிப்பதுதான்.


தென்மாநிலங்களில் திராவிட அரசியல் காரணமாக, தமிழகத்தில் 69 சதவிகிதமும், ஆந்திரத்தில் 49.5, கர்நாடகம் மற்றும் கேரளாவில் 50 என மாநில கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்ட போதும், கடந்த ஐம்பது ஆண்டுகளாக மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு அமல்படுத்தப்படவில்லை. இந்த இடஒதுக்கீடு எதிர்ப்பு ஆரவாரத்தின் விளைவாக, தற்போதைய இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமென்றும், எனவே மேல்சாதி மாணவர்கள் பாதிக்கப்படமாட்டார்களென்றும், 2007 ஜூன் முதல் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.


இடஒதுக்கீட்டின் அடிப்படையையே கேலிக் கூத்தாக்கும் இம்முயற்சியை எதிர்க்காமல், சமூகநீதிக் கட்சிகள் மவுனம் காக்கின்றன.


கடந்த ஐம்பதாண்டுகளில், இந்த நாட்டில் "இடஒதுக்கீடு' மக்கள் மன்றத் தில் விவாதிக்கப்பட்ட அளவிற்கு, வேறு எந்த தலைப்பும் விவாதிக்கப்பட்டதில்லை. மாற்றுக் கருத்துக்களை விவாதிக்கும் ஜனநாயகம், காஷ்மீர் பிரச்சினை, நக்சல்பாரி எழுச்சி, இசுலாமியர் மீதான வன்கொடுமைகள் உள்ளிட்ட வேறு எந்தத் தலைப்பிற்கும் "வழங்கப்பட்டதில்லை'. ஆயினும் கூட புளித்துப் போன "தகுதி, திறமை, சமத்துவ'வாதங்கள் மீண்டும் மீண்டும் மேல்சாதி உயர் நடுத்தர வர்க்கத்தால் முன்வைக்கப்படுகின்றன.


இந்தத் திடீர் சோசலிசத் தவளைகளின் வாதத்தின் சாரம் இதுதான்:


""அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் "தகுதி'யின் அடிப்படையிலான, சமமான போட்டியின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும். தகுதியின் அடிப்படையில் வாய்ப்புகள் வழங்கப்படாவிட்டால், கல்வியின் தரம் குறைந்து, திறமையற்றவர்கள் உருவாகி விடுவார்கள்.''


சமமானவர்களுக்கு இடையில்தானே சமமான போட்டி நிலவ முடியும் என நாம் சொன்னால், "உலகம் தெரியாதவன்' என அவர்கள் சிரிக்கக் கூடும். ஏனெனில், இந்தச் சமமான போட்டிக்கான சமத்துவக் கோட்பாட்டில்தான் உலகமயமே அடங்கியிருக்கிறது. அது எப்படிப்பட்ட சமமான போட்டி? கோகோ கோலாவோடு காளிமார்க் சோடா மோதும் சமமான போட்டி. சாரத்தில் அமெரிக்கா இராக்கிற்கு வழங்கிய "ஜனநாயகத்தை'ப் போன்றது அம்பிகள் முன்வைக்கும் "சமத்துவம்'.


2000 ஆண்டுகளாக பிறப்பின் அடிப்படையில் "தகுதி' தீர்மானிக்கப்பட்ட நாட்டில், இன்று "தகுதி', மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டும் இருக்க வேண்டுமாம். சமமான போட்டியின் அடிப்படையில் இருக்க வேண்டுமாம்.


இவர்கள் மூச்சு வாங்கப் புலம்புவதென்ன? இவர்களை விட ஐந்து மார்க் குறைத்து வாங்கியவர், சாதி அடிப்படையில் சீட் பெறுகிறார் என்றால் அங்கே தகுதி அடிபடுகிறதாம். ஆனால், இவர்களை விட ஐம்பது மார்க் குறைத்து வாங்கியவர், சில லட்சங்களைக் கொடுத்து சீட் வாங்கினால் அது மட்டும் தப்பில்லையாம். "தகுதி'யைத் தூக்கிப் போட்டு மிதிக்கும் நிர்வாக ஒதுக்கீட்டு முறையைப் பற்றி மட்டும் இவர்கள் மறந்தும் வாய் திறப்பதில்லை. 2 லட்சம் கொடுத்து, ஒரு எருமை மாட்டைச் சேர்த்து விட்டால் கூட, அதையும் வகுப்பில் உட்கார வைத்து, பாடம் நடத்தி பட்டம் வாங்கித் தரக்கூடிய தனியார் சுயநிதிக் கல்லூரிகளின் பகற்கொள்ளையைக் குறித்து இவர்கள் யாரும் இப்படி இரத்தம் கொதிக்கக் குமுறுவதில்லை. ஏனெனில் அதுவும் கூட இவர்களுடைய தகுதிகளில் ஒன்றுதான். வரி கட்டுவதால் இவர்களுக்கு தேசபக்தி வருவதைப் போல, காசுக்கு வாங்கினால்தான் கல்வி தரமாக இருக்கும் என்பதும் இவர்களது நம்பிக்கை. எனவே, கல்வியின் மேம்பாட்டிற்காக அல்ல, மனதில் கமழும் மேல் சாதிய வன்மம் தான் இவர்களை இவ்வாறு வெறி கொள்ளச் செய்கிறது. சூத்திரனும், பஞ்சமனும் பிறவியிலேயே அறிவற்றவர்கள் என்ற மனுதர்மத் திமிர்தான் இவர்களது "அறவியல்' ஆவேசத்தின் ஆதார சுருதி.


மேலும், மத்திய உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் போன்றவை நாட்டிலேயே தலைசிறந்த வல்லுனர்களை உருவாக்குபவை. அதாவது ஆகமக் கோவில்களைப் போல ஆகப் புனிதமானவை. எனவே, அங்கே "தரத்தில்' பேச்சுக்கே இடமில்லை என்கிறார்கள். அது ஏன் அங்கே மட்டும் பேச்சுக்கே இடமில்லாத "தரம்' நிலவ வேண்டும்? மக்களின் வரிப்பணத்தை கோடியாக கோடியாகக் கொட்டி நடத்தப்படும் ஐ.ஐ.டி.யிலும், ஐ.ஐ.எம்.மிலும் இருந்து தான் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கில் "தரம் வாய்ந்த', "திறமையான' பொறியாளர்களும், மேலாண்மைப் பட்டதாரிகளும் அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். எய்ம்ஸ்ல் படித்த தகுதி வாய்ந்த மருத்துவர்கள்தான் முடித்த கையோடு அமெரிக்காவிற்குப் பறக்கிறார்கள்.


ஆய்வுகளின்படி 2001இல் மட்டும் ஐ.ஐ.டி.யில் படித்த 25,000 பேர் அமெரிக்காவில் பணியாற்றி வந்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள இந்தியர்களில் 34 சதவிகிதம் பேர் ஐ.ஐ.டி.யில் படித்தவர்கள். 1980 வரை உள்ள கணக்கின்படி, எய்ம்ஸ்ல் படிக்கும் மருத்துவர்களில் 85 சதவிகிதம் பேர் வெளிநாடுகளுக்குச் சென்று விடுகிறார்கள். ஆனால் மாநில நிறுவனங்களில், இடஒதுக்கீட்டில் படித்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மருத்துவர்களில் பலர், தங்கள் மண்ணோடும் மக்களோடும் தொடர்புடையவர்கள் இந்த நாட்டு மக்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கிறார்கள்.


ஆக, ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம்., எய்ம்ஸ்இல் இடஒதுக்கீடு வந்து, "தரம்' குறைந்து விட்டால் என்னவாகும்? அமெரிக்க, ஐரோப்பிய எசமானர்களுக்குச் சேவை செய்வதற்கான வாய்ப்பை இந்தியக் கூலிப் பட்டாளம் இழந்து விடும். மொத்தத்தில், தாங்கள் தேசத்துரோகம் செய்வதற்கான வாய்ப்பை இழந்து விடுவோம் என ஆதங்கப்படுகிறார்கள் மேல்சாதி இளைஞர்கள். நியாயமான கவலைதான் இல்லையா? சரி, "இடஒதுக்கீடு வேண்டாம், ஆனால் படித்து முடித்த பிறகு குறைந்தபட்சம் 10 வருடம் இந்தியாவில்தான் வேலை செய்ய வேண்டும்' என்று சட்டம் கொண்டு வந்தால் என்னவாகும்? இடஒதுக்கீடு எதிர்ப்புப் போராளிகளெல்லாம் மறுநாளே இந்த நிறுவனங்களை விட்டு வெளியே வந்து விடுவார்கள். எனவே, இவர்கள் "தரம், தராதரம்' என்பதெல்லாம் பகல்வேடம். அமெரிக்க, ஐரோப்பிய எடுபிடிகளாக வாழ்வதையே தங்கள் வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டு கட்டிய மனக்கோட்டைகளில் இடஒதுக்கீட்டினால் ஓட்டை விழுந்து விடுமோ என்ற பீதியில்தான் இவர்களது "சமத்துவத்திற்கான வேட்கை' ஊற்றெடுக்கிறது.


மேலும் இத்தகைய இடஒதுக்கீடு திட்டங்களெல்லாம் ஓட்டு வங்கியை மனதிற்கொண்டு செய்யப்படும் அரசியல் என்று கூக்குரலிடுகிறார்கள். இவர்கள் ஓட்டுவங்கி என்று குறிப்பிடுவது, இவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட அமெரிக்க வேலையும், ஹ_ண்டாய் கார்களும், பிட்சா கார்னர்களும், டிஸ்கொதேக்குகளும், ஷாப்பிங் மால்களும் நிரம்பிய உலகமய இந்தியாவில் நுழைய முடியாத இந்த நாட்டின் 83 சதவிகித மக்களைத்தான். தாங்கள் கனவு காணும், தாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் "ஒளிரும் இந்தியாவில்', தங்களுடைய பார்ப்பன ஆன்மாவிற்கும், தங்கள் பன்னாட்டு முதலாளிகளுக்கும் ஒத்து வராத அரசியல் அனைத்தும் இவர்களுக்கு ஓட்டுச் சீட்டு அரசியலாகப்படுகிறது. தங்கள் எசமானவர்களின் முன்னேற்றத்திலேயே தங்கள் முன்னேற்றம் அடங்கியுள்ளதை உணர்ந்த மேற்குலக அடிமைகள் இவர்கள். எனவேதான், தரம் இவர்களுடைய தாரக மந்திரமாகிறது.


அரசியல் என்ற சொல்லே இவர்களுக்கு வேப்பங்காயாகக் கசக்கிறது. அதனால்தான், அனைத்தும் அரசியலுக்கு அப்பாற்பட்டிருக்க வேண்டும் என ஒவ்வோர் தருணத்திலும் இவர்கள் கதறுகிறார்கள். இந்த நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்படுவது அரசியல் இல்லை. இந்த நாட்டின் நிலம், நீர், ஆகாயம் என அனைத்தும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு ஏலம் விடப்படுவது அரசியலுக்கு அப்பாற்பட்டது. ஆனால், இடஒதுக்கீடு மட்டும் அரசியலாம்!


சில "அரசியலுக்கு அப்பாற்ப்பட்ட' அறிவாளிகள், இடஒதுக்கீட்டின் பலன்கள் எல்லோரையும் சென்றடைவதில்லை என மடக்குகிறார்கள். ஏற்கெனவே அச்சலுகையை பயன்படுத்தி முன்னுக்கு வந்தவர்களே மீண்டும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். எனவே, இடஒதுக்கீடு பொருளற்றதாகி விட்டதென்கிறார்கள். ஆனால், மேல்சாதிகளிலும் கூடத்தான் உயர்வர்க்க, செல்வாக்குடையவர்கள் ஆதிக்கம் நிலவுகிறது. இந்த நாட்டின் முக்கியப் பதவிகளில் வீற்றிருப்போர் பட்டியலை எடுத்துப் பாருங்கள், மேல்சாதிகளில் உள்ள உயர்வர்க்க கும்பல் அப்பதவிகளில் ஆக்கிரமித்திருப்பதை அறிய முடியும். வழங்கப்படும் நியாயத்தின் முழுமையை, பாதிக்கப்பட்டவர்கள் தான் ஆலோசிக்க வேண்டும். ஆனால், அதையும் கூட இவர்கள்தான் தீர்மானிக்க வேண்டுமாம். அது சரி, இவர்கள் பிறவியிலேயே அறிவாளிகளாயிற்றே!


இறுதியில் பார்ப்பன எழுத்தாளர் அசோகமித்திரனைப் போல, இந்த நாட்டில் பிறந்ததே குற்றம், மேல்சாதிக் குடும்பத்தில் பிறந்தது அதைவிடப் பெரிய குற்றம் என ஒப்பாரி வைக்கிறார்கள். ஐயன்மீர், உங்கள் சோபாக்களிலிருந்து எழுந்து சற்றே வெளியே வாருங்கள். நீங்கள் வியந்தோதும் உலகமயம் கடந்த பத்தாண்டுகளில் கோடிக்கணக்கான தொழிலாளர்களை வீதிக்கு வீசியெறிந்து விட்டது. ஆந்திராவில் மட்டும் 3000க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மடிந்து விட்டார்கள். அவர்கள் குடும்பங்கள் நடுரோட்டில் நிற்கின்றன. இந்த நாட்டில் விவசாயியாகப் பிறந்த குற்றத்திற்காக குடும்பம் குடும்பமாக நாடோடியாக அலைகிறார்கள். அளவுக்கு மீறி வருத்தப்படாதீர்கள், திமிறிக் கொண்டிருக்கும் மக்கள் கண்ணில் பட்டால் உங்கள் கன்னங்கள் சிவந்து விடும்.


2006இன் இடஒதுக்கீடு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை வழக்கமான மேல்சாதிக் கொழுப்பு என்று மட்டும் வரையறுக்க முடியாது. 1990 மண்டல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகான இப்பத்தாண்டுகளில் மேல்சாதிகளிலிருந்து உருவாகியுள்ள உலகமயத்தின் செல்லப் பிள்ளைகள், தங்களுடைய இருப்பை ஆணவத்தோடும், ஆவேசத்தோடும் உணர்த்த தலைப்பட்டுள்ளனர் என்பதையே தற்போதைய நிகழ்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. உதாரணமாக, மும்பையில் நடந்த இடஒதுக்கீடு எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று, உயர் வர்க்க பார்ட்டிகளையும், நிறுவன கண்காட்சிகளையும் நிகழ்த்தும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு நிறுவனத்தின் (ழூதிழூணவ ட்ச்ணச்ஞ்ழூட்ழூணவ ஞிணிட்ணீச்ணதூ) பொறுப்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. போராட்டம் கூட "புரொஃபசனலாக' (தொழில் திறமையோடு) நடத்தப்பட்டுள்ளது.


"தனியார்மயம், தாராளமயம், உலகமயம்' என்ற விவாதத்திற்கு அப்பாற்பட்ட மூன்று சொல் தாரக மந்திரம், இந்த நாட்டின் பெரும்பான்மை மக் களை அன்றாடம் அவர்களது வாழ்க்கையிலிருந்து பிய்த்தெறிந்து கொண்டிருக்கிறதென்றால், இன்னொருபுறம் இந்நாட்டின் தரகு முதலாளிகளுக்கும், உயர் நடுத்தர வர்க்கத்திற்கும், கடந்த 50 ஆண்டுகளில் அவர்கள் காணக் கிடைக்காத, காணத் தவித்த வாழ்க்கையையும், வளத்தையும் வழங்கிக் கொண்டிருக்கிறது. மெக்காலே உருவாக்கிய கல்வி முறையிலிருந்து, உடலால் இந்தியர்களாகவும், உள்ளத்தால் அமெரிக்க, ஐரோப்பியர்களாகவும் வாழும், நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் இந்திய உயர் நடுத்தர வர்க்கம், உலகமயமாக்கத்தின், தகவல் தொழில்நுட்பப் புரட்சி யுகத்தின் "தரம் வாய்ந்த' தேவைகளை கனகச்சிதமாக நிறைவு செய்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் குவியும் லட்சக்கணக்கான கார்களையும், விதவிதமான நுகர்பொருட்களையும், வாங்கிக் குவிப்பவர்கள் இவர்கள்தான். அடுக்குமாடிக் குடியிருப்புகளும், நவநாகரிக சலூன்களும், மசாஜ் பார்லர்களும், ரிசார்ட்டுகளும் கொழித்துக் கொண்டிருப்பது இவர்களால்தான். எம்.டி.வி., எஸ்.எஸ். மியூசிக், ரேடியோ மிர்ச்சியின் டார்கெட் ஆடியன்ஸ் இவர்கள்தான். மொத்தத்தில், இந்த 2 சதவீத இந்தியர்களின் இந்தியா ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.


மேல்நோக்கி விரைந்து கொண்டே இருக்கும் இந்த உலகமய இந்தியர்களின் மகிழ்ச்சியான தவளை வாழ்க்கையில், சமூக "அக்கறையை' அவ்வப்பொழுது ஒரு காபியைப் போலப் பருகிக் கொள்கிறார்கள். இணையத் தளங்களிலும், எஸ்.எம்.எஸ்.ஸிலும், இவர்களுடைய முத்தான "முற்போக்கு'க் கருத்துக்கள் பரவி விரிகின்றன. இந்த தேசத்தின் மண்ணோடும், மக்களோடும் உணர்ச்சிபூர்வமான எந்தத் தொடர்பும் அற்ற இவர்கள் இலஞ்சத்தை ஒழிக்க வேண்டும், படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும், தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும், இலவசம், மானியம் என்ற பேச்சே கூடாது என தங்கள் எசமானர்களும், அவர்களது கைத்தடி ஊடகங்களும் உருவாக்கிய கருத்துப் பொந்துகளுக்குள் உலா வருகிறார்கள்.


இந்தக் கருத்துக்களை உதிர்க்கும் போதெல்லாம் "குடிமகன்' என்ற அடையாளத்தை அணிந்து கொள்கிறார்கள். இந்தக் குடிமகன் அடையாளம் இவர்களுக்குப் பாதுகாப்பாகவும், வாயளப்பதற்கும் ஏற்றதாக இருக்கிறது. எல்லா சண்டப் பிரசண்டமும் செய்து விட்டு, குடிமகன் என்ற முறையில் என் கருத்தைச் சொன்னேன், அவ்வளவுதான் என அறிவை நிரூபித்த திருப்தியோடு தனது தவளை வாழ்க்கையை கவலையின்றித் தொடர வசதி செய்து தருகிறது. இத்தனை அறிவோடும், ஆற்றலோடும் தாங்கள் இருக்கையில், தங்களை சில முட்டாள்கள் ஆட்சி செய்வது, இவர்களுக்குச் சகிக்கவொண்ணாததாக இருக்கிறது. எனவே, உலகமய இந்தியர்களின் கனவு நாயகனுக்கான தேடல் தொடர்கிறது.


அவன் யார்? மணிரத்தினத்தின் "ஆய்த எழுத்து' மைக்கேல் (சூர்யா நடித்த வேடம்)தான். படித்த, அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்த, ஸ்டைலான, சிவப்பான, அரசியலுக்கு வரும் ஹீரோ. "ரங் தே பசந்தி' முன்வைத்த "அரசியலுக்கு அப்பாற்பட்ட' ஜாலியான ஆனால் புத்திசாலி ஹீரோக்கள். கோடிகளைக் குவிப்பதற்காக அமெரிக்காவில் குடியேறி, பிறகு இந்திய ஜனநாயகத்தை உய்விப்பதற்காகத் தாயகம் திரும்பி "லோக் பரித்ரான்' என்ற அமைப்பை உருவாக்கிய ஐ.ஐ.டி. மாணவர்கள்.


மெல்ல வளர்ந்து இப்பொழுது, பார்ப்பனிய ஆன்மாவும், உலகமய முகமும் கொண்ட ஒளிரும் இந்தியா தலைவிரிகோலமாக ஆடிக் கொண்டிருக்கிறது. இக்கோர ஆட்டத்தை இரண்டாயிரம் வருடப் பொறுமையோடு சகித்துக் கொண்டிருக்கிறார்கள் உண்மை இந்தியாவின் மக்கள். அந்தப் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாய் உடைபட்டுக் கொண்டிருக்கிறது. மொத்தமாய் உடைபடும் நாளில், அது கற்பனை செய்ய இயலாத கொடுங்கோபம் கொள்ளும். அன்று அழுகுணி வாதங்கள் எடுபடாது. சமத்துவம் அதன் உண்மையான பொருளில் நடைமுறைக்கு வரும்.


பால்ராஜ்


எதிர்ப்பு அல்ல, வக்கிரம்!


"இடஒதுக்கீடு எதிர்ப்பு' என்ற பெயரில் பார்ப்பன மேல்சாதி வெறி மாணவர்கள் அடித்த வன்முறைக் கொட்டத்துக்கு சில மாதிரிகள் இதோ: இடம்: ஒரு மருத்துவக் கல்லூரி.


வகுப்புக்குள் நுழையும் ஒவ்வொரு மாணவனையும் அவர்கள் தடுத்து நிறுத்துகிறார்கள். ""நீ கோட்டா (கிதணிவச்) மாணவனா?'' என்று கேட்கிறார்கள். பலர் "இல்லை' என்கிறார்கள். ஒருவரிடம் விசாரிக்கிற மாணவன், ""டேய் நீ கோட்டா மாணவன்தான், பொய் சொல்றியே, எனக்குத் தெரியும்'' என்று சொல்ல, மற்றவர்கள் அவனைப் பார்த்துக் கேலிசெய்து ""ஹோ'' என்று கத்துகிறார்கள்.


வகுப்பறைக்குள் விரிவுரையாளர் நுழைகிறார். பல மாணவர்கள் கைகளில் கருப்புப் பட்டை அணிந்திருப்பதைப் பார்க்கிறார். உடனே அவர் அம்மாணவர்களைப் பார்த்துச் சொல்கிறார்: ""அப்படீன்னா நீங்கள் எல்லா இடஒதுக்கீட்டையும் (கோட்டா) எதிர்க்கிறீங்க. சரி, ஒன்று செய்ங்க, எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி.யில ஒரு பொண்ண கல்யாணம் கட்டிக்குங்க, கோட்டா கெடச்சிடும்'' என்று அந்த மாணவர்களைப் பார்த்து நமட்டுச் சிரிப்போடு சொல்கிறார். விரிவுரையாளரின் "போதனை'யைக் கேட்ட ஒரு பெண் அருகிலிருந்த ஒரு எஸ்.சி. மாணவியைப் பார்த்துக் கேட்கிறாள்: ""ஏய், உனக்கு ஒரு அண்ணன் இருந்தால் சொல்லுடீ, அவனைக் கட்டிக்கிறேன், எனக்கும் கோட்டா கிடைக்கும்.''


பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அவர்களது நண்பர்களிடமிருந்து நக்கலாக எஸ்.எம்.எஸ். செய்திகள் வந்து கொட்டுகின்றன் மாதிரிக்குச் சில: ""ஓர் அறிவிப்பு: இன்றிலிருந்து எஸ்.சிஃஎஸ்.டி மாணவன் 4 ரன் எடுத்தால் 8 ரன்னுக்குச் சமம். அவன் 50 ரன் எடுத்தாலே போதும், 100 ரன் அடிச்சதுக்குச் சமம்.''


விடுதியில் இருந்த மாணவர்கள் இடஒதுக்கீட்டை எதிர்த்து 5 நிமிடங்கள் "கரண்ட் கட்' செய்ய முடிவு செய்தார்கள். சில மாணவர்கள் இந்தக் கேலியை, அவமரியாதையைச் சட்டை செய்யவில்லை. உடனே எதிரணி மாணவர்கள் "கோட்டா', "இடஒதுக்கீடு' என்று சொற்கள் வரும் பாட்டைக் கோரஸாகப் பாடி மற்றவரை எரிச்சல் ஊட்டுகின்றனர். இதனால் அவமானம் அடைந்த மாணவர்கள் அடுத்தநாள் "கோட்டா எதிர்ப்பு ஊர்வலத்தில்' கலந்து கொள்வதாகத் தெரிவிக்கின்றனர். (ஆர்ப்பாட்டத்துக்கு ஆள் சேர்க்க இப்படியும் ஒரு வழி).


நாட்டில் உள்ள வேறு கல்லூரிகளிலும், இதே நிலைமைதான். சில இடங்களில் இன்னமும் படுமோசம். ""படிப்பாளி''யான, ""அறிவு நிரம்பிய'' மேல்சாதி வெறிகொண்ட மாணவரின் ""சமஉரிமைக்கான'' போராட்டத்தின் அழகு இதுதான்.


ஆதாரம்: தி இந்து, "ஓபன்பேஜ்'


No comments: