தமிழ் அரங்கம்

Sunday, September 23, 2007

சூறையாடலுக்குச் சேது சமுத்திரத் திட்டம்!அரசியல் லாவணிக்கு இராமன் பாலம்!

சூறையாடலுக்குச் சேது சமுத்திரத் திட்டம்!அரசியல் லாவணிக்கு இராமன் பாலம்!

மன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையில் ஆதாம் பாலம் என்றும் ராமன் பாலம் என்றும் அழைக்கப்படும், கடலுக்கடியில் கிடக்கும் மணல்திட்டுகளை வெட்டி எடுக்கும் பணி சேது சமுத்திரத் திட்டத்திற்காக ஆரம்பித்திருக்கும் இவ்வேளையில், இந்துவெறி பார்ப்பன கும்பல் ""ராமர் கட்டிய பாலத்தை இடிக்காதே!'' என ஓலமிட ஆரம்பித்துள்ளது.

பா.ஜ.க., விசுவ இந்து பரிசத் போன்ற மதவெறிக் கூட்டத்துடன் சுப்பிரமணிய சாமியும், பார்ப்பன ஜெயலலிதாவும் அறிக்கை மேல் அறிக்கை விடுகின்றனர். பதிலுக்கு தி.மு.க. கூட்டணியில் இருந்தும் பதில் அறிக்கை என இராமன் பாலம் விவகாரம் சூடேறியுள்ளது.


""தொன்மையான வரலாற்றுச் சின்னமாகவும் மக்களின் நம்பிக்கைக்கு ஆதாரமாகவும் விளங்கும் பாலம்'' என்று இல.கணேசன் மணல்திட்டைக் காப்பாற்றத் துடிப்பதைக் கேட்பவர்கள், திட்டப்பணி நடைபெறும் பாதை எண்6 வழியாக (ஆதாம் பாலம்) கால்வாய் வெட்டச் சொன்னதே முந்தைய பா.ஜ.க. அரசின் திருநாவுக்கரசர் தலைமையிலான அமைச்சகம்தான் என்பதை மறந்து விடவேண்டும்.

""ஆங்கிலேயர்கள் வரைந்த படங்கில்கூட ராமர் பாலம் இருந்தது. தற்போது இடிக்கப்படும் பாலத்தின் கற்களை இரகசியமாக கப்பலில் எடுத்துச் செல்கின்றனர். பிரதமரும் ஜனாதிபதியும் உடனே தலையிட வேண்டும்'' என்று ஊளையிடும் ஜெயா மாமியின் அ.தி.மு.க.தான், 2001 தேர்தல் அறிக்கையில் ""ஆதாம் பாலத்து மணலை அகற்றி கால்வாய் அமைக்கப்படும்'' என்று கூறியதை மறந்து விடவேண்டும்.

தயானந்த சரஸ்வதி எனும் இந்துவெறி சாமியார் ""ராமேஸ்வரம் கடல் பகுதியில் உள்ளது இயற்கையான பாலமல்ல. கி.பி. 15ஆம் நூற்றாண்டு வரை அப்பாலத்தில் மக்கள் சென்று வந்தனர்'' என்று சொல்கிறார். அப்படியென்றால் 11ஆம் நூற்றாண்டில் ராஜராஜ சோழன் ஏன் அப்பாலத்தைப் பயன்படுத்தாமல் கடற்படையை ஏவி ஈழம் வென்றான்? என்று அவரை யாரும் கேட்கப் போவதில்லை.

சொல்லி வைத்த மாதிரி எல்லோரும் ""அமெரிக்காவின் நாசாவே வெளியிட்டிருக்கும் செயற்கைக் கோள் படத்தில் ராமர் பாலம் இருக்கிறது'' என்கிறார்கள். நாசாவின் இணையதளமோ, கடலில் நடக்கும் இயற்கை மாற்றத்தால் உண்டான மணல்திட்டுக்களே அவை; அங்கு மனிதனால் உருவாக்கப்பட்ட எவ்விதமான கட்டிடங்களும் இல்லை எனச் சொன்னதையும், நாசா சொன்ன மணல் திட்டுக்களைப் பாலம் எனத் திரித்தவர்கள் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர்தான் என்பதையும் அவர்களிடம் யாரும் இடித்துரைக்கப் போவதில்லை.

இலங்கைக்கு செல்ல, கடலைக் கடக்க பாலம் கட்டிய ராமன், பாம்பனில் இருந்து ராமேஸ்வரம் வரை எப்படிப் போனான்? புஷ்பக விமானத்திலா?
அப்படியென்றால் அதிலேயே இலங்கைக்கும் சென்றிருக்கலாமே?""ராமன் பாலத்துக்கு 15 லட்சம் வருச வரலாறுண்டு'' என்று ஜெயாவும், பா.ஜ.க.வும் சொல்கிறார்கள். ஆனால், மனித இனம் உருவாகியே 5 லட்சம் ஆண்டுகள்தானே ஆகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்திலே மலைகள் ஏதும் இல்லையே! பாலம் கட்ட பெரும்பாறைகளுக்கு ராமன் என்ன செய்தான்? கரசேவை நடத்திக் கல் வரவழைக்க அன்றைக்கு அத்வானி போன்றவர்கள் இல்லையே!

இவ்வளவு "பழமையான' பாலத்தைக் காக்க, ஏன் இவர்கள் ஆண்ட 6 ஆண்டுகளில் தொல்பொருள் சின்னமாக அதனை அறிவிக்கவில்லை? உமாபாரதி சுரங்கத்துறை அமைச்சராக இருந்தபோது அப்பகுதியில் 21 மீட்டர் வரை தோண்டிப் பார்த்தும் கட்டிடங்கள் ஏதும் தென்படாததாலா?

உண்மையில் பாக் நீரிணைப்பில் பாலம் இருந்ததா? கடலியலாளர்கள் ஜெயகரன், ""நூறாண்டுகளுக்கு 1 மீட்டர் வரை கடல் மட்டம் உயர்ந்து வருவதால் 5000 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்நாட்டுடன் தரையால் இணைக்கப்பட்டிருந்த இலங்கை, தீவாகிப் போனது'' என்பதைப் பல ஆதாரங்களுடன் சொல்கிறார். (ஆதாரம்: குமரி நில நீட்சி, ஜெயகரன்).
இதேபோல ஆஸ்திரேலியாவுக்கும் பாப்புவாநியூகினி தீவுக்கும் இடையிலும் சிங்கப்பூர் மலேசியா இந்தோனேசியாவுக்கும் இடையிலும் நிலப்பகுதிகளை கடல் விழுங்கி வெண்மணற் திட்டுகள் அமைந்துள்ளன. அவற்றை எவரும் ராமன் பாலம் அல்லது இலட்சுமணப் பாலமாகக் கருதுவதில்லை.

இலட்சக்கணக்கான வருடங்கள் என்ன, 5000 வருடத்துக்கு முன்னர் வெறும் தரையில் நடந்தே போய்விடக்கூடிய இடத்துக்கு பாலம் கட்டப்பட்டது என்றால் ஒன்று கட்டியவன் கூமுட்டை. அல்லது இதை நம்புபவன் கேணை.

பா.ஜ.க. உண்மையிலேயே இத்திட்டத்தை எதிர்க்கிறதா என்றால், இல்லவே இல்லை. அவர்கள் 5000 வருடங்களுக்கு முன்னர் ராமன் கட்டியதாகக் கூறப்படும் பாலத்தை இடிப்பதை மட்டுமே எதிர்க்கின்றார்களே தவிர, சேதுக்கால்வாய் திட்டத்தை எதிர்க்கவில்லை. "எண்ணெய் தடவாமல் தலை சீவ முடியுமா?' எனக் கருணாநிதி கேட்டால் "எண்ணெய் தடவாமலே தலை சீவுவதுதான் ஃபேசன்' எனக் கூறும் இல.கணேசன் மாற்று வழியில் தோண்டச் சொல்கிறார்.

கருணாநிதி, தன் கூட்டணியை வைத்தே "சேது சமுத்திரத் திட்டப் பாதுகாப்புக் குழு' ஒன்றை உருவாக்கி, "சேதுக்கால்வாய் போன்றவற்றை நிறைவேற்றவே தி.மு.க. தனிநாடு கேட்டதாகவும், மைய அரசே என்னென்ன வேண்டும் சொல்லுங்கள் எனக் கேட்டதும், தனிநாடு கொள்கையைக் கைவிட்டு இந்தியாவில் இருந்து கொண்டே சேதுக்கால்வாய் வெட்டலாமென்று பிரிவினையைக் கைவிட்டதாகவும்' புத்தம் புது திரைக்கதை ஒன்றைச் சொன்னார்.

ராமதாசோ ""இத்திட்டம் நிறைவேற்றி முடிக்கப்பட்டால் தமிழகத்தில் தொழில்வளம் பெருகும். வணிகம் வளர்ச்சி அடையும். பல துறைமுகங்கள் ஏற்பட்டு வேலை வாய்ப்புகள் பெருகும்'' என்று கற்பனையைத் தூண்டிவிடுகிறார். மார்க்சிஸ்ட் கட்சியின் சீத்தாராம் யெச்சூரியோ சிறந்ததொரு தரகு முதலாளியின் வார்த்தைகளிலேயே ""உலக அளவில் கப்பல் போக்குவரத்தில் மிகப் பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இத்துறையில் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு இணையாக இந்தியாவும் முன்னேற வேண்டும் என்றால், இது போன்ற திட்டங்கள் அவசியம்'' என்கிறார்.

துறைமுகங்கள் வளருவதால் வேலை வாய்ப்பு பெருகும் என்பது கடைந்தெடுத்த பொய்யாகும். சேதுக்கால்வாய் திட்டம் வருவதற்கு முன்னரே 80களில் தூத்துக்குடி துறைமுகத்தில் வேலை செய்து வந்த ஆயிரக்கணக்கான டி.எஸ்.ஏ. தொழிலாளர்களை துறைமுக நவீனமயமாக்கம் இன்று வீதிக்கு எறிந்து விட்டது. துறைமுகங்கள் முழுக்க கணினிகளால் இயக்கப்படுகின்றன. 1990களுக்குப் பின்னர் பின்பற்றப்படும் மக்கள் விரோதப் பொருளாதாரக் கொள்கையால் பல லட்சம் சிறுதொழில்கள் அழிந்துவிட்டன.

கிராமங்களின் கைவினைஞர்களும், விவசாயிகளும் பெருநகரங்களை நோக்கி படையெடுக்கின்றனர். ஏற்கெனவே இருந்த வாழ்வை அழித்து விட்டு சேதுக்கால்வாய் மூலம் தொழில் பெருகும், வணிகம் பெருகும் என்று சொல்வதில் கடுகளவும் பொருளில்லை."தமிழனின் கனவுத் திட்டம்' என்று சொல்லப்படும் சேதுசமுத்திரத் திட்ட கால்வாய்க் கனவையே பிரிட்டிஷ்காரன்தான் உருவாக்கினான். 1860களில் பஞ்சங்களை உருவாக்கிய வெள்ளை ஏகாதிபத்தியம் பருத்தி, அவுரி போன்றவற்றையும் தேக்கு போன்ற மரங்களையும் விரைவாய்க் கொண்டு செல்ல வடிவமைத்த திட்டத்தை "தமிழனின் கனவு'த் திட்டம் என்று சொல்வதே அடிமைப் புத்தியாகும். அன்று பிரிட்டனால் நிறைவேற்ற முடியாமல் போன இந்தத் திட்டத்தை, இன்று உலக நிதி மூலதனம் நிறைவேற்றக் கிளம்பியுள்ளது.

இத்திட்டத்தின் ஆதரவாளர்கள் ""சேதுவால் நம்நாடு மட்டுமல்ல. தென் கிழக்காசிய நாடுகளும் கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள நாடுகளும் பயன்பெறும்; வணிகமும் தொழிலும் பெருகும்; அன்னிய முதலீடு அதிகரிக்கும்; அந்நியச் செலாவணி அதிகரிக்கும்; ஏற்றுமதி அதிகரிக்கும்; துறைமுகங்களின் சரக்குக் கையாளும் திறன் அதிகரிக்கும்'' என்று சேதுவின் உண்மை நோக்கத்தை சொல்லி விடுகிறார்கள். சென்னைக்கு அருகில் ஹோண்டாவும், ஹூண்டாயும் பல கோடி அந்நிய முதலீட்டில்தான் வந்தன. எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது? அவர்கள் கார்களை ஒருங்கிணைத்து சென்னை துறைமுகம் மூலமாகத்தான் ஏற்றுமதி செய்கின்றனர். இதன்மூலம் துறைமுகத்தில் வேலை வாய்ப்பு பெருகியுள்ளதா? இல்லவே இல்லை.

உலகில் அருகி வரும் கடல் ஆமைகள் முட்டையிடும் பகுதி என்றும் பவளப் பாறைகள் செறிந்த பகுதி என்றும் உயிரியலாளர்களால் போற்றப்படும் மன்னார் வளைகுடாவை ஏகாதிபத்தியம் சேதுக்கால்வாய் திட்டத்தின் மூலம் தனது கோரப்பசிக்குப் பலியாக்கி வருகின்றது. ஏகாதிபத்தியத்திற்காகப் போடப்படும் சேதுக்கால்வாயின் மைய நோக்கத்தைப் பற்றி யாரும் யோசிக்க விடாமல் இருக்கவே ஓட்டுக் கட்சிகள், ராமன் பாலம் கட்டினானா? இல்லையா? என்ற பட்டிமன்றத்தில் இறங்கியுள்ளன.· கவி

5 comments:

அசுரன் said...

Well timed publication of the article

வவ்வால் said...

//1860களில் பஞ்சங்களை உருவாக்கிய வெள்ளை ஏகாதிபத்தியம் பருத்தி, அவுரி போன்றவற்றையும் தேக்கு போன்ற மரங்களையும் விரைவாய்க் கொண்டு செல்ல வடிவமைத்த திட்டத்தை "தமிழனின் கனவு'த் திட்டம் என்று சொல்வதே அடிமைப் புத்தியாகும்.//

இந்தியாவில் இருப்பு பாதைகளை வெள்ளைக்காரன் தான் போட்டான் அதுவும் கூட அவனுக்கு விரைவாய் தளவாடங்களை கொண்டு செல்ல , வணிகத்திற்காகத்தான் அதுவும் அடிமைத்திட்டம் என இந்தியாவில் ரயில் போக்குவரத்தை எடுத்து விடலாமா?

பா.ஜ.கவினரின் கோமாளிக்கூத்துக்களை விடுங்கள். அதை எல்லாம் கேட்டால் கற்காலத்திற்கு தான் போகணும்.

//வணிகமும் தொழிலும் பெருகும்; அன்னிய முதலீடு அதிகரிக்கும்; அந்நியச் செலாவணி அதிகரிக்கும்; ஏற்றுமதி அதிகரிக்கும்; துறைமுகங்களின் சரக்குக் கையாளும் திறன் அதிகரிக்கும்'' என்று சேதுவின் உண்மை நோக்கத்தை சொல்லி விடுகிறார்கள்.//

அப்படி நடந்த்தால் தான் என்ன, அதுவும் வளர்ச்சி தானே. சரி கால்வாய் வேண்டாம் என சொல்ல நீங்கள் சொல்லும் காரணம் என்ன?

//உலகில் அருகி வரும் கடல் ஆமைகள் முட்டையிடும் பகுதி என்றும் பவளப் பாறைகள் செறிந்த பகுதி என்றும் உயிரியலாளர்களால் போற்றப்படும் மன்னார் வளைகுடாவை ஏகாதிபத்தியம் சேதுக்கால்வாய் திட்டத்தின் மூலம் தனது கோரப்பசிக்குப் பலியாக்கி வருகின்றது//

இது உண்மை என உங்களுக்கு யார் சொன்னது , கடல் ஆமைகள் முட்டைகளை கடலில் பொறிக்காது , கடற்கரை மணலில் பொறித்து வைக்கும் , மணல் சூட்டில் தானாக குஞ்சுகள் பொறித்து கடலுக்கு செல்லும். அதை விட அந்த பகுதியில் கடல் ஆமைக்கள் எல்லாம் அதிகம் கிடையாது!

கடலில் மீன் பிடிப்பதால் கூட தான் கடல் வளம் பாதிக்கப்படுகிறது அதனால் தான் வருடத்தில் இரண்டு மாதங்கள் மீன் பிடிக்கதடை எல்லாம் போடுகிறார்கள் , ஆனால் அதற்காக ஒரே அடியாக மீன் பிடித்தல் தடை செய்யப்படுகிறதா.

சேது சமுத்திர கால் வந்து விட்டு் போகட்டுமே! எதற்கு பா.ஜ கவினை போல கவைக்கு உதவாத வாதங்களை வைக்கிறீர்கள்!

தமிழரங்கம் said...

சேது சமுத்திர திட்டத்தின் பெயரில் ஒருபுறம் ஏகாதிபத்திய நலன்கள், மறுபுறம் இந்துத்துவ பார்பனிய நலன்கள். பார்பனிய குறுகிய நலனகள், ஏகாதிபத்திய நலன்களுக்கு விரரோதமாக போது, குழைக்கும் ஏகாதிபத்திய விசுவாச நாய்கள்.

இப்படி இதில் வவ்வால், வவ்வலாக தொற்றிக்கொண்டு தொங்க முனைகின்றார். ரயில் பாதை பொட்டது இந்தியாவை கொள்ளை யடிக்கத் தான். இந்தியா மக்களுக்காக அலல் இன்று அப்படித்தான். அதற்காக ரயில் பாதையை எடுத்துவிடலாமா என்று கேட்பது அற்ப புத்தியைக் காட்டகின்றது.

இன்றைய கல்வி கொள்கை பிழை என்பதலோ, அது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வியை வழங்க மறுப்பதலோ, பள்ளிகளை இடிக்க கோருபவாகள் அல்ல நாம். அது உங்களைப் போன்ற முட்டாள்களின் சொந்த வழியாகும். மனித உழைப்பை அழிப்பதுக்கு பதில், அதை மக்களுக்காக மாற்றுபவர்கள் நாங்கள். எமது போராட்டம் என்பது எதுவாக இருந்தாலும், அது இயற்கைக்கும், மக்களுக்கும் சார்பானதாக இருக்க வேண்டும்.

அதிக சரக்கை எற்றி இறக்கினால் அது வளர்ச்சியல்ல. மக்கள் பட்டினி கிடப்பது அதிகரிக்கின்றது என்று அர்த்தம். நீ அதிகம் திண்டடால், மக்கள் அதிகம் உண்ணுகின்றார்கள் என்று அர்த்தமல்ல. அமெரிக்காவில் அதிக கறுப்பின அடிமைகள் கொண்டு செல்வத்தை பெருக்கியதால், அதை வளர்ச்சி என்பவன் யார் என்றால், மற்றவனின் உழைப்பை சூறையாடித் தின்னுகின்ற போக்கிரிகள் தான்.

தொங்குகின்ற வவ்வால், கடல் ஆமை கரையில் முட்டை போட கடல் இருக்க வேண்டும். கடலையே சூறையாடும் உங்கள் நலன்களுக்கு, கரை பற்றியும் கரை சூடுபற்றி விளக்கம் அவசியமற்றது.

சேது சமுத்திர திட்டம் அதன் கடல் வளத்தை அளித்து, கரைக்கு செல்லும் ஆமையின் இயக்கை தன்மையே இல்லாதாக்கின்றது. சுரண்டும் புத்தி என்ன சொல்லுது, அதிக ஆமை இல்லை என்று கூறவைக்கிறது. இதன் மூலம் அதை அழிப்பதையே நியாயப்படுத்துகின்றது. என்ன வக்கிரம். அதிகம் ஆமை இலலை என்று யார் சொன்னது. கடலை நம்பி வாழும் மீனவர்கள் சொன்னார்களா!

மக்களுக்கு இல்லாத, மக்களை அழிக்கின்ற எந்தத் திட்டத்தை நாங்கள் எதிர்ப்போம். மக்களின் வாழ்வுடன் ஒன்று கலந்தே எங்கள் நலன், மூச்சு அனைத்தும்.

வவ்வால் said...

என்னை முட்டாள் என்று யாரும் சொன்னால் வருத்தம் இல்லை ஆனால் அதனை உம்மை போன்ற ஒரு முட்டாள் சொல்வது தான் வருத்தமாக இருக்கிறது! :-))

முதலில் கடலில் பவளப்பாறையில் ஆமை முட்டை போடும் என்று சொன்னது யார் அய்யா? அந்த தவறை திருத்தக்காணோம்.

அந்தப்பகுதி கடல் வாழினங்களைப்பற்றி நன்கு அறிந்தவரா நீங்கள்? அங்கு கடல் ஆமைகள் எல்லாம் அதிக எண்ணிக்கையில் இல்லை. இன்னும் சொல்லப்போனால் அங்கு அதிக மீன் வளம் இல்லை என சொல்லித்தான் தமிழக மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையைத்தாண்டி போய் இலங்கை ராணுவத்திடம் குண்டடிப்படுகிறார்கள்.

கடல் ஆழம் இல்லாத இடங்களில் அதிகம் மீன் கிடைக்காது , கோடியக்கரை போன்ற இடங்களுக்கு போனால் கடலில் அலை அடிக்கும் போதே மணல் பிறண்டு வரும், கடல் நீரே கலங்கலாக பழுப்பு நிறத்தில் தான் இருக்கும். அவ்வளவு ஆழம் குறைவு.

ஆனால் palk strait பகுதி வேறு சில கடல் வாழ் உயினங்களின் வளர்ச்சிப்பிரதேசமாக இருக்கிறது.அதுவும் கூட தூத்துக்குடிக்கு அருகே தான் , அங்கு தான் கால்வாய் முடிகிறது.எனவே அதிகம் பாதிப்பு இருக்காது.

சுற்று சூழல்பாதிப்பு என்பது சேது சமுத்திரக்கால்வாய் வரவிடக்கூடாது என்பதற்காக செய்யப்படும் அரசியல்களில் இதுவும் ஒன்று! எந்த திட்டத்திலும் சுற்று சூழல் பாதிப்பு இருக்கத்தான் செய்யும் அதன் தாக்கம் மிக குறைந்த அளவு இருக்கிறதா எனப்பார்க்க வேண்டும்.

உண்மை நிலவரம் தெரியாமல் பிறர் சொன்னதை கிளிப்பிள்ளை போல ஒப்பிக்கும் உங்களைப்போன்றவர்களுக்கு எது தான் புரியும்!

தமிழரங்கம் said...

"உலகில் அருகி வரும் கடல் ஆமைகள் முட்டையிடும் பகுதி என்றும் பவளப் பாறைகள் செறிந்த பகுதி என்றும் உயிரியலாளர்களால் போற்றப்படும் மன்னார் வளைகுடாவை ஏகாதிபத்தியம் சேதுக்கால்வாய் திட்டத்தின் மூலம் தனது கோரப்பசிக்குப் பலியாக்கி வருகின்றது." முதலில் கட்டுரை திரித்துவிட்டு புலம்பவது என். இதில் இரண்டு விடையம் உண்டு. ஒன்று அருகி வரும் ஒரு ஆமை இனம் பற்றியது. இரண்டவது பவளப்பாறை பற்றியது. அதைத்தான் கட்டுரை கூறுகின்றது. 'உலகில் அருகி வரும் கடல் ஆமைகள் முட்டையிடும் பகுதி என்றும் பவளப் பாறைகள் செறிந்த பகுதி என்றும்" கட்டரை இரண்டு வௌ;வெறு விடையத்தை கூறுகின்றது. இதை புரிந்து கொள்ளாத முட்டாள், மணலில் மூட்டையிடுவது பற்றி விடைத்தை திரித்து பேசுவது அற்பத்தனம்.

மீனவர்கள் அதிக மீன் இல்லை என்பது, எற்றுமதி சந்தைக்கே ஒழிய மக்களின் தேவையின் அடிப்படையில் அல்ல. சரி மீன் அதிகம் இல்லை என்பதால் இருப்பதை அழிப்பது எப்படிப்பட்ட முட்டாள் தனம். உலகில் அழிவதை அழிப்பது தான் ஏகாதிபத்திய எடுபிடிகளிள் கொள்கை. அழிவதை பாதுகாப்பது தான் எம் கொள்கை. இதில் சமரசம் கிடையாது.

கால்வாய் எதற்கு. மக்களுக்காக! இல்லையே. யார் கொள்ளை அடிக்கத்தான். எங்கு வெட்டினாலும் அது மக்களுக்கு எதிரானது தான். கடல்வாழ் மக்களின் வாழ்வுக்கு வேட்டு வைப்பது தான்.