தமிழ் அரங்கம்

Wednesday, March 12, 2008

"பொருளாதார மறுசீரமைப்பைக் கோரும்" ஆணாதிக்கமும் "தலித் ஆணாதிக்கத்தை" எதிர்க்காத பெண்ணியமும்

"பொருளாதார மறுசீரமைப்பைக் கோரும்" ஆணாதிக்கமும் "தலித் ஆணாதிக்கத்தை" எதிர்க்காத பெண்ணியமும்

ழைய சரக்குகள் மக்கள் முன், பெறுமானம் இழந்து அம்பலமாகிப் போக புதிய சரக்குகளை தேடிச் செல்லும் வியாபாரிகளைப் போல அ.மார்க்ஸ் "தலித் பெண்ணியம் ஒரு விவாதத்தின் முன்னுரை"64 என்ற கட்டுரையை "இருள்வெளி" என்ற இருண்ட மக்கள் விரோத, மார்க்சிய விரோத பாரீஸ் மலரில் எழுதியுள்ளார். அக்கட்டுரையில் சாந்தால் மொஃபேயின் மேற்கோள்களை, தலைப்புக்குக் கீழ் தடித்த எழுத்தில் போட்டே தனது ஆணாதிக்க கட்டுரையைத் தொடங்குகின்றார்.

நாம் அந்த மேற்கோள்களைப் பார்ப்போம். "பெண்ணியங்களில் பலவகை என்பது தவிர்க்க முடியாதது. இவற்றில் "உண்மையான" பெண்ணியத்தை தேடுவதென்பது கேலிக்குரியது."4 என்று கூறுவதன் மூலம் ஆணாதிக்கத்திற்கு எதிரான ஓரே ஒரு பெண் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி கேவலப்படுத்துகின்றார். அதாவது, பெண்ணியத்தை வரையறுக்க முடியாது என்கின்றார். இதைப்போல் வறுமையை ஒழிக்கக் கோரும் உண்மையான போக்கை தேடுவது கேலிக்குரியது என்கின்றார்.

வறுமை ஒழிப்புப் பலவகை என்பதால் உண்மையான வறுமை ஒழிப்பை தேடுவது என்பது கேலிக்குரியது என்கின்றார். இது சாதிக்குள், மதத்திற்குள் உண்மையான விடுதலையைத் தேடும் போது, உண்மை கேலிக்குரியது என்கின்றார்.

வறுமைக்குக் காரணம் அதிக பிள்ளை பெறுவதே என்பதால் கருத்தடையை முன்வைக்கின்றனர் ஒருசாரார், மறுசாரார் தொழிலாளர்களின் உழைப்புப் போதாது என்கின்றனர். இன்னும் ஒரு பிரிவு முதலாளிக்கு வரி கூடியதால் சம்பளம் கொடுக்க முடியவில்லை என்கின்றனர் இதனால் வறுமை என்கின்றனர் ஏகாதிபத்தியம் சொத்தை உலகமயமாக்கி குவிப்பதால் வறுமை ஒழியும் என்கின்றனர் தலித்துகள் சாதி ரீதியாக அணிதிரளுவதால் வறுமை ஒழியும் என்கின்றனர் சிலர் சந்தையில்லை எனவே சந்தை பிடிக்க யுத்தத்தை நடத்தி சந்தையைப் பிடித்து வேலை கொடுத்து ஏழ்மையை ஒழிப்போம் என்கின்றனர் நாசிகள் வெளிநாட்டவரை துரத்தினால் மக்களின் வறுமை ஒழியும் என்கின்றனர் சிங்கள அரசு தமிழனை ஒடுக்கினால் சிங்களவர் வறுமை ஒழியும் என்கின்றனர் இந்திய இந்துகள் முஸ்லீமையும், தாழ்த்தப்பட்டோரையும் அடக்கி ஒடுக்கி தாழ்த்தினால், இந்துகளின் வறுமை ஒழியும் என்கின்றனர் இப்படி வண்ண வண்ண கலரில் பல வறுமை ஒழிப்புகள் முன்வைக்கப்படுகின்றது. எனவே இவைகளில் உண்மையான வறுமை ஒழிப்பை, உண்மையான பெண்விடுதலையைத் தேடுவது கேலிக்குரியது என சாந்தால் மொஃபே போல் அ.மார்க்ஸ் முன் வைத்து, இதைப் பிரயோகிக்க எல்லாச் சுரண்டல் பேர்வழிகளின் வழியில் கைகோர்த்தபடி வெட்கம் இன்றி, சுரண்டும் மக்களின் போராட்டங்களை கேலிசெய்கின்றார்.

வறுமை ஒழிப்பு என்பது ஒரே ஒரு வழியில் சுரண்டலை ஒழிப்பதில் தொடங்கி தேவைக்கு ஏற்ப பகிர்வதால் மட்டும் சாதிக்க முடியும். இதற்கு வெளியில் எந்த ஒழிப்புக் கோசமும் வறுமையை பாதுகாக்கும் செயல் தந்திரங்களே. உண்மையான வறுமை ஒழிப்பு என்பது வர்க்கப் போராட்டத்தில் மையப்படுகின்றது. இதுபோல் பெண் விடுதலை என்பது உண்மையான பெண் ஒடுக்கு முறைக்கான சமுதாயக் காரணத்தில் இருந்து தான், உண்மையான பெண்ணியம் கண்டு கொள்ளப்படுகின்றது. பெண் ஏன் ஒடுக்கப்பட்டாள் என்ற அடிப்படைக் காரணத்தை கண்டு எதிர்த்துப் போராடாத அனைத்து வகை வண்ணப் பெண்ணியச் செயற்பாடுகளும், ஆணாதிக்கத்தை தக்க வைக்கும் செயல் தளத்தில் அ.மார்க்ஸ் வைப்பது போல் முன்வைப்பவை தான்.

உலகில் உள்ள எல்லாவற்றையும் மனிதன் பகுத்தாய்வு செய்யவும், அதன் மூலம் தனக்கு இசைவாக பயன் படுத்தவும் முடியும். இதன் அடிப்படையில் மட்டும் தான் நாம் பயன் படுத்தும் பொருள் முதல், அனைத்து நோய்களைத் தீர்ப்பது வரை, வான் வெளிப் பயணங்கள் என அனைத்தும் பொது உண்மைகள் மீது தான் (உண்மையை அறியாத மனிதர்கள் இருக்கும் வரை, கருத்துமுதல்வாதம் இந்த அமைப்பை பாதுகாக்கும். மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட போதும் சரி, இன்று தொலைக்காட்சி முதல் அணைத்து தனிச்சொத்துரிமை சமூக இலக்கியம் ஈறாக இதையே செய்கின்றது. இதைத் தான் கோட்பாட்டில் அ.மார்க்ஸ் நியாயப்பத்துகின்றார்.) மனித உயிர் வாழ்க்கை செயற்பாடுகள் கட்டமைக்கப்பட்டுள்ளது. இவை சமூக இயக்க முரண்பாடுகள் மீதும் விதிவிலக்கின்றி பொருந்தி உள்ளன. அ.மார்க்ஸ் சரி அவரின் எடுகோள் சரி உண்மையை மறுப்பின், அது பொய்கள் மீது கட்டியமைப்பவையாகவே இருக்கும். உண்மையை மறுத்த செயற் தளம் சமூக இயக்கத்தைத் தடுக்கவும், ஆணாதிக்க செயல் தளத்தைப் பாதுகாக்கவும் (இது ஏகாதிபத்திய அமைப்பை தவிர்க்க முடியாது தக்க வைக்கிறது), நமது வாழ்வியல் பயன்பாட்டு செயல் தளத்திற்கு முரணாக கோட்பாட்டை முன் தள்ளுகின்றனர். இது மக்களின் அறியாமை மீது சவாரி செய்வதாகவும், அறியாமையை மேலும் அதிகரிக்க வைக்க, இச்சமூக அமைப்பின் நனவுகளின் பிரதிபலிப்பாக உள்ளது.

கட்டுரையை மேலும் ஆராய்வோம். "பின் அமைப்பியல், பின் நவீனத்துவம் முதலிய சிந்தனைகள் "சாராம்சம்" என்பதைக் கேள்விக்குள்ளாக்கி இருக்கின்றன."64 அதாவது ஒன்றுக்கும் சாராம்சம் இல்லை என்ற அ.மார்க்சின் கண்டுபிடிப்பு நகைப்பிற்குரியது. இது பொருளை மறுத்து கருத்தை முதன்மைப் படுத்துகின்றது. ஏன் "தலித் பெண்ணியம்" கட்டுரை ஒரு சாராம்சத்தைக் கொண்டுள்ளது. அது தலித் பெண்ணியத்தை பேசுவதாக பாசாங்கு செய்கிறது. இது உண்மைக்கு வெளியில் பொய்யை அடிப்படையாக கொண்ட சாராம்சத்தை வெளிப்படுத்துகிறது. சாராம்சம் இன்றி ஒரு படைப்பு படைப்பாக இருக்க முடியாது. இது அ.மார்க்சுக்கும் விதிவிலக்குக் கிடையாது.

ஓவ்வொரு பொருளும் தனக்கிடையில் வேறுபட்ட சாராம்சத்தை கொண்டுள்ளது. ஒரே பொருளில் பலவகையில் பொதுவான சாராம்சம் உள்ளது. இதுபோல் ஒரு பொருளின் வேறுபட்ட சராம்சமும் உள்ளது. இவை இடைவெளியில் வேறுபட்டு ஏற்றத் தாழ்வுக்கான காலம், சூழல்,--- என அனைத்துடன் தொடர்புடையதாக உள்ளது. (உ-ம்)மாக பெண்ணியத்தை எடுத்தால் நாட்டுக்கு நாடு, நகரத்துக்கு நகரம், கிராமத்துக்கு கிராமம், வீட்டுக்கு வீடு, நபருக்கு நபர் மீதான ஒடுக்கு முறை வடிவங்கள் மாறுபட்டுக் காணப்படுகின்றது. இது பொருளாதாரம், கலாச்சாரம், சூழல்,-- --புறச் சூழல் சார்ந்த சிந்தனை என அனைத்துடனும் தொடர்புடையதாகக் காணப்படுகிறது. இதனால் ஆணாதிக்கப் பொதுச் சாராம்சம் இல்லாமல் போய்விடுகின்றதா? இல்லை மாறாக ஆணாதிக்க ஒடுக்கு முறை உலகில் பொதுவானதாக, பொதுவான சாராம்சம் கொண்டதாகக் காணப்படுகிறது. எனவே ஒரு பொருள் ஒரு நிகழ்ச்சியை ஆராய்வது என்பது சாராம்சத்திற்கு உட்பட்டது. இதற்கு வெளியில் பொருள் பொருளாகவே இருக்க முடியாது. பொருள் இருப்பதாயின் பொது உண்மையும் அதற்குள் நீடிக்கின்றது. பொருள் என்ற உண்மை இல்லை எனின் பொருள் இல்லை. அதேபோல் சிந்தனையும் இல்லை. இருக்கு என்றால் அது கருத்து முதல்வாதமாக உள்ளது.

வாழைப்பழத்தை எடுத்தால், வேறுபட்ட பல இனங்கள் இருந்த போதும், வாழைப்பழம் என்பது பொதுவான சாராம்சத்தை நிர்ணயிக்கின்றது. அது ஒரு பொது உண்மையைக் கொண்டுள்ளதால் தான் அது வாழைப்பழமாக இருக்கின்றது. இது போல் ஆணாதிக்கம் பொதுவான சாராம்சத்தை அடையாளப்படுத்துகின்றது. இதனால் இது ஒரு பொது உண்மையை பிரதிபலிக்கின்றது. ஏகாதிபத்தியமும் அதன் நிறுவன அமைப்புகள், கோட்பாடுகள் தான் மனிதன் என்ற பொதுச் சாராம்சத்தை நிராகரிக்கின்றன. இதன் மூலம் மனிதன் என்ற பொது உண்மையை மறுத்து இனம், நிறம், சாதி, பெண், வர்க்கம்--- என பல தளத்தில் பல சாராம்சத்தில் பொதுவை மறுத்து ஒடுக்குகின்றன. இதன் மூலம் இயற்கையிலும் செயற்கையிலும் மனிதன் உயிர் வாழும் நியதியையும் சாராம்சத்தையும் மறுத்து, அதன் உண்மையை பொய்யாகக் காட்டி, கேலி செய்து, ஒட்டுமொத்தமாக சாராம்சத்தை தமது நலனுக்கு பயன்படுத்தி அழிக்கின்றனர்.

ஒரு பிரச்சினையின் அடிப்படையான சாராம்ச உண்மையை மறுத்து, பிரச்சினைக்கு ஆயிரம் காரணம் கூறி திசை திருப்பும் பொய்கள் தான், இன்றைய ஏகாதிபத்திய அமைப்பின் நீடிப்பிற்கான ஒரே ஒரு நிர்ணயமான பாதுகாப்பை வழங்குகிறது.

வறுமைக்குக் காரணம் மனித உழைப்பைச் சுரண்டி, பொருட்களை தேவைக்கு ஏற்ப பகிரப்படாது சுரண்டுவதுதான் பொதுவான உண்மையும் பொதுவான சாராம்சமாகும். ஆனால் இதை மறுத்து "ஒருமித்த அடையாளத்துடன் நாம் வாழ்வதில்லை"64 என்று கூறிக் கொண்டு வறுமைக்குக் காரணம் அதிக இனப்பெருக்கம், போன பிறப்பில் செய்த பலன் விதி, உழைப்பு போதாது, சந்தை இல்லை ---- என அடுக்கடுக்காக அடுக்கி வைக்கும் பல காரணகாரியங்களை கூறி, பொதுவான சாராம்சம் இல்லை எனக் கூறிய படி, உண்மைகளை மறுத்து பொய்களை முதன்மைப் படுத்தி ஏகாதிபத்திய நலனைத் தக்க வைக்க, அச்சமூக அமைப்பைப் பாதுகாக்கும் கடுமையான இடைவிடாத முயற்சியின் விளைவு தான், சாராம்சம் இல்லை என்றும் உண்மை கிடையாது என்று கதையளப்பதாகும்.

இந்த நோக்கத்திற்காக அ.மார்க்ஸ் எடுத்து வைக்கும் அடுத்த வாதத்தைப் பார்ப்போம். "---- தொழிலாளியில் சாராம்ச முற்போக்குத் தன்மை ஆட்டம் காண்கிறது--- சாராம்ச அடையாளங்களின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட அரசியல் சமூகங்களில் பிடிக்குள் அகப்படாமல் அழுத்திக் கொண்டு வெளியே நிற்கும் எச்ச சொச்சங்கள், மிச்சம், மீதிகள் (சுநஅயin னநசள) தங்கள் குரலை இன்று மேலெழுப்பத் தெடங்கியுள்ளனர்."64 என்று மேலெழுப்புவதை ஆராய்வோம்.

சாராம்சம் இல்லை என்ற மோசடிக்கு வெளியில் இலங்கையில் இன ஒடுக்கு முறைக்கு எதிரான தமிழ் மக்களின் எதிர்ப்பு, சாராம்சத்தில் ஜனநாயகத்துக்கு சார்பானது தான். இந்தியாவில் இந்துப் பார்ப்பனிய பாரதீய ஜனதாவிற்கு எதிரான போராட்டம், ஜனநாயகத்தை சாராம்சமாக கொண்டது. 2ம் உலக யுத்தத்தில் நாசிகளுக்கு எதிரான ஒன்றுபட்ட போராட்டம், மனித குல விடுதலையை சாராம்சமாகக் கொண்டது. யப்பான் சீனாவை ஆக்கிரமித்த போதோ, வியட்நாம் மக்கள் அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்த அனைத்து போராட்டத்திலும், ஒரு மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்ட ஏகாதிபத்திய எதிர்ப்பு சாராம்சத்தை கொண்டு இருந்தது.

ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்ட சாராம்சம் என்பது முற்போக்கு என எங்கும் எதிலும் உண்டு. ஒடுக்கும் பிரிவுகள் மக்கள் மீதான அடக்குமுறையில் எங்கும் எப்போதும் பிற்போக்கு சாராம்சம் இருக்கும். இன்றிருக்கும் அதிகார பிற்போக்கு சாராம்சத்தை பாதுகாக்க மட்டும் தான், சாராம்சம் இல்லை என்று கதையளத்து முன்தள்ளுகின்றனர். இது உண்மையை மறுத்து பொய்யை உண்மையாகக் காட்ட முனைகிறது. இன்று சாராம்சம் இரு தளத்தில் கட்டி அமைக்கப்படுகின்றது. இங்கு இரு தளத்தில் சாராம்சம் உள்ளதுடன், அது செயல்படும் செயல் தளத்தில் முற்போக்கு, பிற்போக்கையும், உண்மையையும், பொய்யையும் கோடு பிரிக்கின்றது.

ஏன் தலித்திய ஒன்றிணைப்பு என்பது ஒரு பொது சாராம்சத்தில் நின்று கோரும் தன்மையையும், பின் அ.மார்க்ஸ் அதையே மறுத்து சாராம்சம் இல்லை என மறுக்கும் பொய்மையுடன் கூடிய ஏமாற்றும், ஒரு மோசடிக்காரனின் கைவந்த குத்துக்கரணம் தான்.

இந்திய பார்ப்பனிய இந்து என்ற பிற்போக்கு சாராம்சத்தை எதிர்த்த பெரியார் இந்துக்கும், மதத்துக்கும், மொழி ஆதிக்கத்துக்கும் எதிரான முற்போக்கு சாராம்சத்தை கட்டியெழுப்பினார். இப்படி அம்பேத்கார் முதல் இன்று வர்க்கப் போராட்டம் வரை உழைக்கும் மக்கள் என்ற பொதுச் சாராம்சத்தில், அனைத்து மனித ஒடுக்கு முறைக்கு எதிரான பொதுச் சாராம்சத்தில், ஒன்று இணைக்கும் களத்தில் போராட்டமும் அணிதிரட்டலையும் செய்கின்றது. இதை மறுக்க மட்டும் தான் சாராம்சம் இல்லை என்று கதைவிட்டு கதையளக்கின்றனர்.

ஓரு தொழிலாளி வேறுபட்ட சாதிகளின் பிரதிநிதியாக இருந்தாலும், இங்கு சாதிக்கு எதிரான போராட்டம் சாதிக்கெதிரான முற்போக்கு சாராம்சத்தில் மட்டும் தான் ஐக்கியத்தை பாட்டாளி வர்க்கம் கோருகின்றது. இங்கு எதிலும் முரண்பாடு இருப்பதில்லை. இது ஆண் பெண் என அனைத்து சமூக முரண்பாடுகளிலும் பாட்டாளி வர்க்கம் முன்வைத்து பொது சாராம்சத்தில் போராடுகிறது. பாட்டாளி வர்க்கம் மனிதப் பிளவுகளைக் கடந்த பொதுச் சாராம்சத்தை பண்பாடு, பொருளாதாரம், கலாச்சாரம்,....... என அனைத்திலும் கோருகின்றது. இது உண்மையை அடிப்படையாகக் கொள்கிறது. இதை மறுத்து பொய்யை பிரதிபலித்த படி சாராம்சம் இல்லை என்று கூறுவதன் மூலம் மனிதப் பிளவுகளை நிரந்தரமாக நிலைநிறுத்த, இந்த சமூக அமைப்பைத் தொடர, இருக்கும் ஏகாதிபத்திய நுகத்தடியைப் பற்றிப் பிடிக்க முன்வைப்பதே சாராம்சம் மறுத்த, உண்மையை மறுத்த கோட்பாடு, செயல் தள முயற்சியாக உள்ளது.

சுரண்டலுக்கும், சமூக ஒடுக்கு முறைக்கும் எதிரான முற்போக்கு பொது பெரும்பான்மை சாராம்சத்தை எதிர்த்து, சுரண்டும் பிற்போக்கு சாராம்சத்தை முண்டு கொடுக்க நியாயப்படுத்தி அரும்பாடுபடுவது சுரண்டும் வர்க்க சேவைக்காக தான், சாராம்சம் இல்லை என்பதன் மூலம், சிறுபான்மை தனிநபர் சாராம்சத்தை பாதுகாக்க, தனிநபர் உரிமையின் பெயரில் பொதுவான சாராம்சம் இல்லை என்பதன் மூலம், தனிநபர் சமூக அமைப்பை இது சாராம்சத்தில் ஏகாதிபத்தியமாக உள்ளது என்பதை மூடிமறைக்கின்றனர். உலகமயமாதல் மூலதனக் குவிப்பில் சிறுபான்மை பிரிவின் நலன்களை ஜனநாயகமாக்க முனையும் போக்கில், சிறு தத்துவங்களை சமூகத்தின் முன் தள்ளிவிடுகின்றது. அந்த எலும்பை கவ்விப் பிடித்தபடி தான் நாய்கள் அதற்கு விசுவாசமாக குரைக்கின்றன.

இதற்காக அ.மார்க்ஸ் கூறும் அடுத்த வரிகளை நாம் மேலும் பார்ப்போம். ""பெண்" என்றால் யார்? "பெண்" என்கின்ற சொல்லின் பொருள் என்ன? எந்த ஒரு சொல்லிற்கும் பொருள் என்பது தனித்துவமான பண்பையும் பிரித்து வரையறுத்துக் காட்டுவதல்ல"64 என்பதன் மூலம் பெண் மீது உலகளவில் உள்ள பொதுவான ஆணாதிக்கத்தை மறுக்கும் போதே, இதன் மூலம் ஆணாதிக்கத்தைப் பாதுகாக்க வெட்கம் இன்றி விபச்சாரம் செய்யக் கோருகிறார்.

உலகளவில் பெண் என்ற அடையாளப்படுத்தல், ஆணுக்கு உட்பட்ட (இனவிருத்தி வேறுபாட்டைத் தவிர்த்து) சுரண்டல் ஆணாதிக்கம் தான். இங்கு ஆணாதிக்க ஒடுக்குமுறை வேறுபாடு சமுதாயப் பொருளாதார, கலாச்சார, பண்பாட்டு பண்பியல் வேறுபாடுகள் (ஏற்றத் தாழ்வுகள்), பெண் மீதான ஆணாதிக்க பொது சராம்சம் மீது சீர்திருத்தத்தை, விட்டுக் கொடுப்பை மட்டும் வழங்கி உள்ளது. ஆனால் பெண் எந்த சமுதாயத்திலும் வேறுபாடின்றி அதே ஆணாதிக்க ஒடுக்கு முறைக்குள் மாற்றமின்றி, அதேநிலையில் பண்பியல் மாற்றத்துடன் நீடிக்கின்றனர்.

தனிச்சொத்துரிமையிலான சுரண்டலால் உருவான ஆணாதிக்கம், பெண்ணை ஒடுக்கி சுரண்டும் வழியில் உலகில் எந்த இனமும், சமூகமும் பின் நிற்பதில்லை. இங்கு ஏற்படும் வேறுபாடு சமுதாய ஏற்றத் தாழ்வுகளால் பண்பியல் ரீதியில் மட்டும் மாறி உள்ளது. தொடர்ந்து நிகழும் சமூக எழுச்சிகள் போராட்டங்கள் பெண்களுக்கு சீர்திருத்தத்தை வழங்கி வந்தன என்பதற்கு அப்பால், பெண்விடுதலையைத் தந்து விடவில்லை. அதாவது ஆணியத்தை பெண்ணியமாக்கிவிடவில்லை. பாட்டாளிவர்க்கப் புரட்சிகள் இதை ஒழித்துக் கட்டும் போராட்டப் பாதையை தொடர்ந்து முன்னெடுத்துச் சென்ற நிலையில், மீண்டும் அதை ஆணாதிக்க சுரண்டல் சமுதாயத்திடம் போராட்டத்தை இழந்து போனதும் மீண்டும் வர்க்கப் போராட்டப் பாதையை முன்னெடுக்கவும், பாதுகாக்கவும், போராடவும் முனைவதன் மூலம் பெண்கள் மீதான ஆணாதிக்கத்தை ஒரேயடியாக உலகில் ஒழித்துக் கட்ட பாட்டாளி வர்க்கம், வர்க்கப் போராட்டத்தினூடாக போராடுகின்றது.

இதை மறுத்து அ.மார்க்ஸ் எடுத்து வைக்கும் கூற்றை நாம் பார்ப்போம். " "சொல்" என்பது ஒரு தனித்துவமான பொருளுடன் தீர்மானகரமான உறவைக் கொண்டுள்ளது என்பதைக் காட்டிலும் சிக்கலான பல பண்புகளின் வலைப்பின்னலாக அது விரிவு பெறுகிறது என்பதே சரியாகும்."64 என்று, சொல்லையே பொருளின் மீது மறுப்பதன் மூலம் பொதுமையை, கருத்துமுதல்வாத நிலையில் மறுக்கின்றார். நான் கற்பு பற்றிய விவாத்ததில் எடுத்தாண்டவை இங்கும் பொருந்தும்.

இதையே இன்னுமொரு நூலில் அ.மார்க்ஸ்தான் தேசியத்தை கற்பிதம் என்றார். தேசியவிடுதலைப் போராட்டம் தான் தேசத்தை உருவாக்குகின்றது என்றார். ஆனால் தேசம் முன்கூட்டியே இருப்பதை மறுத்து, அதில் இருந்தே போராட்டம் தொடங்குகின்றது என்பதை மறுப்பது அடிப்படையிலேயே கருத்தமுதல்வாதமாகும். இது இயங்கியலின் வரலாற்று வளர்ச்சி விதிகளை மறுக்கின்றது. பொருள் முன்கூட்டியே தோன்றுவதும் அதில் இருந்தே அடுத்த கட்ட பாய்ச்சல் நிகழ்வது இயங்கியல் ஒழுங்காகும். இதை மீறமுடியாது. இதை மறுத்து தேசியத்தை கற்பிதமாக கூறுவது, ஏகாதிபத்திய பொருளாதார அமைப்பை ஏற்றுக் கொள்வதில் இருந்து உதிக்கின்றது. பூ வருமுன்பு விதை பெறமுடியாது. கீழ் உள்ளது போல், வசனம், மக்கள் பேச முன் வசனம் மொழியில் வரமுடியாது. ஆனால் இது பின் ஒழுங்கமைக்கப்படுகின்றது. அது முந்திய வடிவிலும், திரிந்த வடிவிலும் கூட மாற முடியும். பூ விதையாக மாறும் போது இயங்கியல் ஒழுங்கிலும், பூவை பித்தெறியும் போது திரிந்த வடிவிலும் மாறுகின்றது, மாற்றப்படுகின்றது. தேசிய விடுதலைப் போராட்டம் இருக்கும் தேசத்தில் இருந்து அரசை உருவாக்குகின்றது. அல்லாது திரிந்த வடிவில் தரகாக துரோகம் செய்யமுடியும். இதுபோல்தான், கற்பு பற்றிய வாதங்களும். பெண் தனது பாலியல் நடத்தை மீதான சொந்த தெரிவை தெரிந்த போதே கற்பு பொருள் வடிவம் பெறுகின்றது. ஆனால் ஆணாதிக்கத்தால் முதிர்ச்சி பெற்ற போது கற்பின் அர்த்தம் திரிவுறுகின்றது. இதனால் பொருளில் திரிபடைந்து மாற்றம் காண்கின்றது. அதே நேரம் பழையது தொடர்ந்து இருப்பதை மறுக்கின்ற போது, பெண்ணின் சுதந்திரத் தெரிவை மறுப்பதை அடிப்படையாக்குகின்றது. கற்பு மொழிக்கு முன்னமே யதார்த்தத்தில் இருக்கின்றது. அதன் பின்புதான் மொழி வருகின்றது. இந்த மொழி திரிபடைவது பின்னால் நிகழ்கின்றது. ஆனால் பலர் இயங்கியலின் உட்கூறைக் கண்டு கொள்ள முடியாத இயங்கியல் மறுப்பாளராக இருக்கின்றனர். எங்கெல்ஸ் இயங்கியல் வளர்ச்சியை மறுப்பது பற்றி கூறிய கருத்துகள் இந்த இடத்தில் சிறப்பாக பொருந்துகின்றது. " "வசனம்" என்ற சொல் தோன்றுவதற்கு நெடுங்கால முன்பே அவர்கள் வசனம் பேசியது போன்று."117 எனக் குறிப்பிட்ட போதே வசனம் முன் கூட்டியே மக்களால் பேசப்பட்டது. வசனம் வந்த பின்பு அதன் அர்த்தம் மாறிவிடுவதில்லை. அது எந்த மொழியில் இருந்தாலும் பொருந்தும். உண்மையில் இந்த சொல் என்பது கற்பனையானதல்ல. சொல் என்பது பொருளைக் குறித்து அடையாளப்படுத்துவதுதான். பொருளை அடையாளப்படுத்துவது என்பது மக்களிடையே இருந்த தூரம், காலம், சூழல்... போன்ற இயற்கையின் விளைவாலும், சேர்க்கையான உழைப்பின் ஏற்றத்தாழ்வான வளர்ச்சியாலும் ஒரு பொருளைக் குறித்து அடையாளப்படுத்தல், மொழியின் உச்சரிப்பில் வேறுபட்டாலும் அதன் அடையாளப்படுத்தல் ஒன்றையே குறிக்கின்றது. இந்த ஒன்றைக் குறித்த அடையாளப்படுத்தலை வந்தடைந்த பாதை வேறுபட்டு, அதன் விரிவான அர்த்தம் மற்றும் பயன் பாட்டின் தன்மை வேறுபாடுகள் இருந்த போதும் பொருள் குறித்த அடையாளப்படுத்தல் பொது சாராம்சத்தில் ஒன்றையே குறிக்கின்றது. இது உலகில் காணப்படும் பல்வேறு ஒரே பொருளுக்கும் பொருந்தும். உதாரணமாக நெல் இனத்தை எடுத்தால் அதில் பலவகையானவை, பலதன்மையுடன் இருந்த போதும் அது ஒன்றைக் குறித்து நெல்லாகின்றது. இதன் பொதுச் சாராம்சம் இதை தெளிவாக நிர்ணயிக்கின்றது. எங்கெல்ஸ்சின் இந்த வளர்ச்சி விதியை விளக்கும் போது ".. எனவே நிலைமறுப்பு நிலைமறுக்கப்படல் என்பது யாது? மிகவும் பொதுவான, இந்தக் காரணத்தால் மிகவும் பரந்த செயல்விளைவுடைய மற்றும் முக்கியமான இயற்கை, வரலாறு, சிந்தனை ஆகியவற்றினுடைய வளர்ச்சியின் விதியாகும். ... ..இயங்கியல் இயற்கை, மனித சமுதாயம், சிந்தனை ஆகியவற்றினுடைய இயக்கம் மற்றும் வளர்ச்சியின் பொது விதிகளைப் பற்றிய விஞ்ஞானமே தவிர வேறு எதுவுமன்று."117 இதை மறுத்தே பெண் என்ற சொல்லின் பொதுச்சாராம்சத்தை கொச்சைப்படுத்தமுடிகின்றது.

பல சிக்கலான செயல்களின் தொகுப்பில் தான் பொருள் உண்டாகின்றது, நிலைக்கின்றது, நீடிக்கின்றது, மாறுகின்றது, சிதைகின்றது, மீளவும் உருவாகின்றது. ஓரு பொருள் ஒரு இயக்கம் என அனைத்தும் சிக்கலான பல இயக்கங்களின் விளைவுகளாகத் தான் நடந்தன, நடந்து கொண்டிருக்கின்றன. இது தொடர்ந்து மாறிக் கொண்டுள்ளது. இது பொருளின் பொதுத் தன்மையை எந்த நிலையிலும் (அது வினாடியாக இருந்தாலும் நீடித்த பல கோடி வருடங்கள் ஆனாலும்) கொடுக்கின்றது. வளிமண்டலத்தை எடுத்தால் ழு2இ N2இ ஊழு2 ...... போன்ற வாயுக்கள் ஊடான ஒரு பொது உண்மையை, அது சார்ந்த சாராம்சத்தை பூமி எங்கும் கொண்டு உள்ளது. சுரண்டலை எடுத்தால் உழைப்பைச் சுரண்டும் பொதுச் சாராம்ச உண்மை, உலகெங்கும் பொதுவாக உள்ளது. பெண்ணை எடுத்தால் ஆணாதிக்க சுரண்டல் சாராம்ச உண்மை உலகளவில் பொதுவாக உள்ளது. சாதியை எடுத்தால் சாதி ஒடுக்கு முறையுடன் கூடிய சுரண்டல், சாதி உள்ள நாடுகளில் பொதுவாக உள்ளது. இது எல்லா இயக்கத்திற்கும், பொருளிற்கும், சிந்தனைக்கும் பொதுவான உண்மையானதாக உள்ளது. இது மாற்றத்துடன் புதிய சாராம்சத்தை தொடர்ந்து பிரதிபலிக்கின்றது. தொடர்ந்தும் மாற்றத்துக்குள்ளாகின்றது.

மாறுபட்ட சூழல் பண்பாடு கலாச்சாரம், பொருளாதாரம், மதம், ....... என நீண்ட இடைவெளியில் ஏற்பட்ட பிளவுகள் இடைவெளிகள் வர்க்கப் போராட்ட வரலாற்றின் வழியே கடக்கப்பட முடியும், கடக்கப்படும். ஆனால் முதலாளித்துவ அமைப்பில் இது சாத்தியமில்லை. இதை லெனின் குறிப்பிடும் போது "ஆடவர் மகளிர் என்றோ, சமயம், வருண இனம், தேசிய இனம் எவ்வித வேறுபாடும் இல்லாத குடிமக்கள் சமவுரிமையை முதலாளித்துவ ஜனநாயகம் எங்கும் எப்போதும் வாக்களித்திருந்த போதிலும் என்றுமே செயல்படுத்தவில்லை, மூலதனத்தின் மேலாதிக்கம் காரணமாக செயல்படுத்தமுடியவில்லை."108 இங்கு இந்த வேறுபட்ட பிளவுகளில் காணப்படும் பொதுத் தன்மையும், குறித்த தன்மையும் ஒன்றிணைந்து செயல் தளத்தில், வர்க்கப் போராட்ட மூலம் எல்லா இடைவெளிகளையும் கடக்க கோரிப் போராடுகிறது. ஆனால் இந்தப் பிளவு முதலாளித்துவத்தில் இருந்து ஏகாதிபத்தியமாக உருவான போது ஆழமாகியது. இதை பாதுகாக்கவே சாராம்சம் இல்லை என்றும், மொழியின் வேறுபாடுபற்றியும், பெண்ணின் ஒடுக்கமுறை ஓரே தன்மையற்றவை என பலவிதமாக கூறவேண்டியுள்ளது.

இதை மறுக்க எடுத்து வைக்கும் அ.மார்க்சின் எடுகோள்களைப் பார்ப்போம். "பெண்ணை ஒரு குறிப்பான பண்புக்குரியவளாகக் காட்டுவதைக் காட்டிலும் சிக்கலான பல பண்புகளின் வலைப்பின்னல்களாக பார்ப்பதே சரியானதாக இருக்கும். ........ உடற் கூறு அடித்தள வாதத்தின் அடிப்படையில் பெண்ணுறுப்புகள் உள்ளவர்களை எல்லாம் ஒரே மாதிரியாக பெண்கள் எனப் பார்ப்பது அவர்கள் அனைவரின் அனுபவங்களையும் பொதுமைப் படுத்த முடியாது....... அப்படியானால் பொதுமைக் கூறுகளோடு வித்தியாசங்கள் உண்டு எனப் பார்க்கலாமா? அப்படிப் பார்ப்பது என்பது பின் ஏதோ ஒரு வடிவில் உடற் கூறு அடிப்படையிலான பொதுமைகளைப் பிரதானப் படுத்தி வித்தியாசங்களைப் புறக்கணிப்பதில் தான் முடியுமென்றார் ...... எனவே வெள்ளைப் பெண்ணுக்கும் கறுப்பு பெண்ணுக்கு இடையிலான பொதுமைக் கூறுகளைக் காட்டிலும் வித்தியாசங்களே முக்கியம்"64 என்கின்றார்.

பொதுமைகளை விட வித்தியாசங்களே முக்கியம் என்கின்றார். நாசிகள் ஆரிய இனம் எனக் கூறி மக்களின் பொதுமையை மறுத்து வித்தியாசத்தைப் பேண ய+த மற்றும் இனங்களை அழித்ததும், அதே வித்தியாசங்களை பெண்ணுக்கும் வைக்கின்றனர். அதாவது நாசிகள் இன்று கறுப்பு இனத்தவர்களுக்கு எதிராக எதை வைக்கின்றனரோ அதையே அ.மார்க்ஸ் கறுப்பு இனத்தின் பெயரில் நாசியாக முன்வைக்கின்றார்.

பார்ப்பனிய சதிராட்ட வானரங்கள் தொட்டாலே தீட்டு என்று கூறி, பொதுமையை மறுத்து வித்தியாசங்களை முதன்மைபபடுத்தி எதனால் சாதியமைப்பைப் பாதுகாக்கின்றனரோ, அதையே மறுதளத்தில், பார்ப்பனியதில் தலித் என முன்வைத்து வித்தியாசங்களைப் பேண முயல்வதன் மூலம், பார்ப்பனியத்தை பாதுகாக்க முனைகின்றார். பார்ப்பனியம் மனிதர்களுக்கு இடையில் பொது சாராம்சம் இல்லை, வித்தியாசமே அடிப்படையானது என்று உருவாக்கிய சாதிப் படிநிலையை, பின்பக்க வழியாக அ.மார்க்ஸ் கோட்பாட்டில் புகுத்துகின்றார். பெண்களும், ஆண்களும் பொதுமைப்பட்ட சமூகமாக மாறுவதற்கு பதில், பெண்களின் வித்தியாசங்கள் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதன் ஊடாக ஆணாதிக்கத்தை மறைமுகமாக தக்க வைக்கின்றனர். இது எப்பொழுதும் பெண்ணை ஆணிடமிருந்து விலகக் கோருகின்றது. பொதுவாக அராஜகவாத கோட்பாட்டு நடைமுறையாக சீரழிகின்றது. ஏகாதிபத்திய பெண் நுகர்வுக் கண்ணோட்டத்தில் ஆணிடமிருந்து விலகிவிடுவதை பிரதானப்படுத்தி குடும்பம் சிதறுகின்றது.

தலித் பெண்ணியத்தை கூறும் போது, தலித்தியத்தில் உள்ள வித்தியாசங்கள் முதன்மையானவை என்பதால், சாதிக் கட்டமைப்பு தலித்தியத்தினுள் இருப்பது அவசியம் என உயர்த்தி, தலித்தில் சாதிக் கடத்தலை நிராகரிக்க, பின் நவீனத்துவ பார்ப்பனியத்தை கோட்பாடாக முன் தள்ளுகின்றனர்.

வெள்ளை கறுப்பு பெண்களுக்கிடையில் வித்தியாசங்களே முக்கியத்துவம் என்கின்றனர். பொதுமை கிடையவே கிடையாது என்கின்றனர். ஆணாதிக்கம் என்பது பொதுமையாக கிடையாது என்கின்றனர். வெள்ளை நாசிகள் எதைச் சொல்லுகின்றனரோ அதை கறுப்பு நாசிகள் சார்பாக முன்வைப்பதன் மூலம் நாசிச, பாசிச அமைப்பை பாதுகாக்க நாயாகக் குரைக்கின்றனர். கறுப்பு வெள்ளை இணைவும், அதன் பொதுமைக் கூறும், நாசிச பாசிச இனத் தூய்மை வாதத்திற்கு எதிரானது. இது நிறத்தைக் கடந்த பொதுமைத் தன்மையில் வெள்ளையின பாசிச நாசிச சமூக அமைப்பை தகர்க்கின்றது. வித்தியாசங்கள் வெள்ளையினக் கோட்பாட்டின் அதாவது, ஆதிக்க இனக் கோட்பாட்டின் அல்லது பிற்போக்கு வர்க்கத்தின் அடிப்படையான கோரிக்கையாக யதார்த்தத்தில் இருக்கின்றது.

தலித் பெண்கள் மற்றப் பெண்கள் உடன் பொதுவான ஆணாதிக்கத்திற்கும் குறிப்பான ஆணாதிக்கத்துக்கும் எதிராக இணைந்து போராடுவது மட்டும் தான், உலகளவில் ஆணாதிக்கத்தையும் மற்றைய சமூக அவலங்களையும் கடக்க உள்ள ஓரே பாதையாகும். இதை மறுத்து வித்தியாசங்களை முதன்மைப் படுத்தி பின்நவீனத்துவ பார்ப்பனியத்தை முன் வைத்து, ஆணாதிக்க அமைப்பை உலகில் நீடிக்க வைப்பதன் ஊடாக, ஏகாதிபத்திய ஆணாதிக்க அமைப்பை தொடர காணும் கனவுகளின் புலம்பலே இவை.

பெண் மீதான ஆணாதிக்க பொது ஒடுக்குமுறையை மூடிமறைத்த படி பெண்ணின் உறுப்பினூடாக அடையாளம் காண்பதாக கூறமுயல்வது ஏன்? பெண் உறுப்பு பொதுமையான சாராம்சத்தை வெளிப்படுத்திய போதும், அவை முதன்மையானவையல்ல. மாறாக பெண் மீதான ஆணாதிக்கம் முதன்மையானவையாகும். பெண் ஒடுக்குமுறை பாலியல் ரீதியில் மட்டும் கையாளப்படுவதில்லை. அதாவது பெண் உறுப்பில் மட்டும் ஆணின் வன்முறை நிகழ்வதில்லை. மாறாக மனித இயக்கம் முழுவதிலுமே பெண் மீதான ஆணாதிக்க கூறுகள் ஆழமாக வன்முறையைக் கையாளுகின்றது. இதன் பொதுவான பண்பு உலகளவில் விதிவிலக்கின்றி பொதுவாக உள்ளது. பெண் மீதான ஒடுக்குமுறையை பெண்ணுறுப்பில் இருந்து அடையாளம் காண்பது என்பது, பெண்விடுதலையை மறுத்து பாலியலை விபச்சாரமாக்குவதாகும். பெண் எப்படி அடிமையாக்கப்பட்டாள் என்ற வரலாற்று உண்மையை கவனத்தில் கொள்ளாத ஆய்வுகள், கருத்துகள் அற்பத்தனமான நோக்கம் கொண்டவை. இங்கு ஆணாதிக்க சுயநலமும், ஒருபகுதி பெண்களும் தமது சொந்த வக்கிரத்தை தீர்த்துக் கொள்வதற்க்கான பாதையை உள்ளடக்கிய கோரிக்கையாக உள்ளது.

அடுத்து இதற்காக அ.மார்க்ஸ் புலம்புவதைப் பார்ப்போம். "மார்க்சியம் பெண்ணியல் பாலியலுக்குரிய முக்கியத்துவத்தை அளிப்பதில்லை எனத் தீவிர பெண்ணியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்."64 மார்க்சியம் மட்டும் தான் பாலியல் பிரச்சினையை சரியாக ஆய்வு செய்தது, செய்கிறது என்பதை மறுத்து ஏகாதிபத்திய விபச்சாரத்தை அங்கீகரிக்க கோருவதே இந்த விதண்டாவாதமாகும். தீவிரப் பெண்ணியவாதிகள் (யார் இவர்கள் எப்படி ஆணாதிக்கத்தை ஒழிக்க உள்ளனர். மர்மமான இந்த தீவிரப் பெண்ணியல் வாதிகளை யாருக்கும் தெரிவதில்லை) ஏகாதிபத்திய பொருளாதார மாற்றத்திற்கு இசைவாகப் பாலியலை, நுகர்வுப் பண்பாட்டில் அரங்கேற்றுகின்றனர். இதை மார்க்சியம் விமர்சிப்பதால் தான் பாலியலுக்குரிய முக்கியத்துவத்தை மார்க்சியம் மறுப்பதாகக் குற்றம் சாட்டுகின்றனர். இந்த தீவிர பெண்ணியல் வாதிகள் யாரும், தாம் எப்படி ஏகாதிபத்திய பெண்ணியத்தில் இருந்து வேறுபடுகின்றோம், என்று சொல்லத் தெரியாதவர்கள்.

ஏகாதிபத்திய சந்தைப் படுத்தலுக்கு இசைவாக பெண்ணை விளம்பரப் படுத்தும் நுகர்வுப் பெண்ணியம், ஏகாதிபத்திய ஆணாதிக்க உலகத்திற்கு பெண்களை நிர்வாணமாக்கி, பெண்களை பாலியல் பிண்டங்களாக மாற்றுகின்றது. இந்த பாலியல் பிண்டங்களாக பெண்களை மாற்றுவதையும், அதைக் கோரும் பெண்களையே பெண்ணியத்தின் தீவிரப் பெண்ணியமாக கூறும் ஏகாதிபத்தியம் முதல் அ.மார்க்ஸ் வரை, ஆணாதிக்க வக்கிரங்களை கோரவும் பாதுகாக்க கோருவதுடன், அதை மேலும் பெண்ணிய கோசத்தின் பின்னால் வளர்த்து எடுக்கின்றனர்.

பொதுவில் இந்த தீவிர பெண்ணியல் வாதிகள் ஏகாதிபத்திய பெண்ணிய சீரழிவை அடையாளப்படுத்தி எதிர்ப்பதில்லை. ஏகாதிபத்தியத்தின் மற்றைய கூறுகள் மீது எதிர்ப்பதாக பாசாங்கு செய்வதன் மூலம், சொந்த ஏகாதிபத்திய பெண்ணியத்தில் எதிர்ப்பதற்கு எதுவுமற்றவர்களாகிவிடுகின்றனர். இவர்களின் எதிர்ப்பு என்பது நிலப்பிரபுத்துவ மற்றும் முதலாளித்துவ எச்ச சொச்சத்தில் மீது மையப்படுகின்றது. இயற்கையின் பெண் நிலை மீதான வாழ்வியலை காணமறுக்கும் இவர்கள், ஏகாதிபத்திய சீரழிவை பெண்ணியமாக எப்போதும் முன்னெடுக்கின்றனர். இவை பொதுவாக அராஜகவாத பெண்ணிய கோசமாக எழுகின்றது. அராஜகவாதம் தனிநபர் மீதான அதீதமான கற்பனைகளில் எழுகின்ற போது, சமுதாயத்தில் இருந்து அன்னியப்பட்டு விலகி தனிநபர் சுதந்திரமான விடுதலையை நாடுகின்றது. இது சமுதாயத்தில் இருந்து விலகிச் செல்லும் போது சமுதாய எல்லைக்குள்ளான சீரழிவுக்கும், இதன் கற்பனையான மானசீகமான விடுதலைக்கும் இடைவெளி அறவே நீங்கிவிடுகின்றது. ஏகாதிபத்தியப் பெண் தனிநபர் சுதந்திரமான ஜனநாயகத்தில் விபச்சாரத்தை பாலியலாக வந்தடையும் போது, அராஜகவாத பெண்ணியல் சமுதாயத்தில் இருந்து விலகி அராஜகவாத தனிநபர் சுதந்திரத்தில் ஏகாதிபத்திய சீரழிவை தமது நடத்தையாக்கின்றனர். இரண்டு பிரிவும் சாராம்சத்தில் சமூக சுதந்திரத்தை மறுத்து தனிநபர் சுதந்திரத்தை உயர்த்திப் பிடிக்கின்றனர். இதனடிப்படையிலேயே இரண்டு பிரிவும் தமது கோட்பாட்டை கட்டமைக்கின்றது.

மேலும் அ.மார்க்ஸ் கூறுவதைப் பார்ப்போம். "வெள்ளை இனத்தவர்கள் மத்தியிலுள்ள ஆண்-பெண் உறவும் கறுப்பர்கள் மத்தியில் உள்ள ஆண்-பெண் உறவும் ஒரே மாதிரியாக இல்லை என்பதால் கறுப்பர்கள் மத்தியில் ஆண்-பெண் உறவை பகுப்பாய்வு செய்வதற்கு தனித்துவமான பெண்ணியப் பகுப்பாய்வுகள் தேவையாகின்றன."64 என்ற கண்டு பிடிப்பை ஆராய்வோம்.

ஆண்-பெண்ணை, வெள்ளை-கறுப்புக்கள் மட்டுமா பிரிகின்றது. இல்லை மாறாக கறுப்பு, வெள்ளை நிறத்துக்குள் பலவேறுபாடுகள் உள்ளன. இது தலித்துக்குள் பலவாக உள்ளது. ஆகவே இந்த வேறுபட்ட உறவு முறைக்கான சமூகக் காரணங்கள் தனித் தனியான ஆய்விற்குரியவை. இதற்கு முன் ஆண்-பெண் இடையில் உள்ள ஆணாதிக்க உறவு என்பது உலகில் விதிவிலக்கின்றி பொதுவான சாராம்சத்தால், அதன் உள்ளடக்கத்தால் கட்டி அமைக்கப்பட்டவை. இயற்கையின் தேர்ச்சியில் உருவான உறவு முறை, ஆரம்பத்தில் ஆபிரிக்காவில் ஒரே இடத்தில் இருந்து மனிதன் உலகெங்கும் சிதறி வாழும் நிலைக்கு மூதாதையர்கள் ஆவர்.

பூமியின் ஒரே நிலத் தொடர்ச்சிகள் பூமியில் மேல் பட்டை மீதான தொடர்ச்சியான இடப்பெயர்ச்சியால் கடலால் பிளந்து சென்றது முதல், மனிதனின் உழைப்பு மற்றும் அறிவியல் தேடல் கண்டுபிடிப்புகள் வாழ்க்கைப் போராட்டத்தில் பிரிந்து சென்ற நீண்ட வரலாற்றுக்கிடையில் தான் மொழி, நிறம், பண்பாடு, கலாச்சாரம், பால் ஒடுக்குமுறை........ என அனைத்து இடைவெளிக்கும் அடிப்படையாக அமைந்தது. இருந்த போதும் உலகில் சுரண்டலும், ஆணாதிக்க சமூக அமைப்பும் எங்கும் எல்லா இடமும் ஒரே மாதிரியானதாக, ஒரே காரணியால் கட்டி அமைக்கப்பட்டதை சமூக விஞ்ஞானம் பொருளாதாரம் தெளிவாக இனம் காட்டி நிறுவுகின்றது.

இன்று இடைவெளியைக் கடக்கும் போராட்டம் இரு தளத்தில் மட்டும் நடக்கின்றது. இது பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தின் ஊடாகவும், ஏகாதிபத்திய உலகமயமாதல் ஊடாகவும் (இங்கு ஏகாதிபத்தியம் பிளவுகளை விதைத்த தொடர்ச்சியில்) நேர் எதிர் தன்மைகள் நடந்தவண்ணமுள்ளது. இதை யாரும் இந்த இரு போராட்ட எதிர் தளத்துக்கு வெளியில் தடுக்கவோ மாற்றவோ முடியாது. இதற்கு இடையில் மட்டுமே தான், எப்படி நகர்த்துவது என்பதில் போராட்டம் நடக்கின்றது. இடைவெளியைக் கடக்க முனையும் போக்கில் ஏகாதிபத்தியம் சிலவற்றில் தனது அதிகாரத்துக்காக செய்ய, இதற்கு எதிராக பாட்டாளி வர்க்கம் சர்வதேசிய கண்ணோட்டத்தில் உலகில் எல்லா இடைவெளியையும் கடக்கப் போராடுகின்றது.

இன்று ஆண் பெண் உறவில் உலகில் உள்ள எல்லா ஒடுக்குமுறை செயல் தளம் மீதும், குறிப்பாக ஆணாதிக்க செயல் தளமீதான போராட்டத்தை பாட்டாளி வர்க்கம் முன்னெடுத்து இதை ஒழித்துக் கட்ட சர்வதேச பாட்டாளிவர்க்கத்திடம் கோருகின்றது, போராடுகின்றது. இதற்கு வெளியில் எந்த பெண்ணியமும் உலகளவில் ஆணாதிக்கத்தை தகர்க்க கோரவில்லை. இது ஆணாதிக்க உலகை தக்க வைக்க பகுதிக் கோரிக்கைக்குள் முடக்கி விடுகின்றது.

இதை மறுத்து அ.மார்க்ஸ் வைக்கும் அடுத்த பொன் மொழியைப் பார்ப்போம். "கறுப்பு பொதுப்புலம், வெள்ளைப் பொதுப் புலத்தின் அளவு ஆண் தன்மையானதாக (அயளஉடெiநெ) இல்லை"64 என்கின்றார். இருக்கும் சமூக அமைப்பில் இதை நேர் எதிராக திசை திருப்புகின்றார். பெண்கள் மீதான ஆணாதிக்க செயற்பாடுகள் வெள்ளைப் பெண்ணை விட கறுப்புப் பெண் மீது அதிகமானது. இதை மறுத்து கறுப்பு பெண்மீது ஆணாதிக்கம் குறைவு என்கின்றார். இதன் பின் கூட ஏகாதிபத்திய நலனும், நஞ்சும் எஞ்சியுள்ளது. ஏன்?

பொதுவாக வெள்ளை பெண்கள் வாழும் நாடுகளின் முதலாளித்துவப் புரட்சிக்குள்ளும், அதன் பின்னான ஏகாதிபத்திய தளத்திற்குள்ளும் தனிமனித நுகர்வுச் சுதந்திரத்திலும் பெண்கள் பெற்ற ஜனநாயக உரிமைகளை, முதலாளித்துவ புரட்சி நடக்காத நிலப்பிரபுத்துவ மதவாத அடிப்படை கொண்ட கறுப்புப் பெண்கள் வாழும் நாடுகளின் ஆணாதிக்கம் கொடூரமானது, காட்டுமிரண்டித்தனமானது. அதை மறுப்பதன் மூலம் குறைந்த பட்சம் முதலாளித்துவ புரட்சியை கோருவதை ஏகாதிபத்தியம் போல், இந்த அ.மார்க்ஸ் கும்பல் விரும்புவதில்லை.

கறுப்புப் பெண் முன் வெள்ளை இனத்தை விட நீ அதிக ஜனநாயகத்தை சலுகைகளை ஆணாதிக்க வாதிகள் இடம் பெற்றுள்ளாய் என்பதன் ஊடாக, வெள்ளை இனப் பெண் பெற்ற ஜனநாயக உரிமைமீது சேறுவீசுவதும், அவர்களின் போராட்ட அனுபவங்கள் கோட்பாடுகளை தூற்றி வீசவும் செய்யும் முயற்சி தான் இந்தமாதிரி புலம்பித் திரிவதாகும்.

பொதுவில் வெள்ளைப் பெண்கள் அனுபவிக்கும் உரிமைகளை கறுப்பு இனப் பெண்கள் அனுபவிக்க முடியாத, ஏகாதிபத்திய தலைமையிலான பொது ஒடுக்கு முறையில் கறுப்பினப் பெண்கள் சிக்கி உள்ளனர். ஏகாதிபத்திய நாட்டுப் பெண் பெற்ற உரிமையில், ஜனநாயக உரிமையும் நுகர்வு ஜனநாயகமும் என இரண்டும் ஒன்றுடன் ஒன்று பிணைந்துள்ளது. ஏகாதிபத்தியம் கறுப்பு பெண்ணிடம் நுகர்வு ஜனநாயகத்தை திணித்தும் (வாங்கும் சக்தியை மறுத்துபடி), ஜனநாயக உரிமையை பறித்தும் தனது அதிகாரத்தை பாதுகாக்கின்றது. கறுப்பு இனப் பெண் வெள்ளை இனப் பெண் அனுபவிக்கும் ஜனநாயக உரிமையை குறைந்த பட்சம் பெறுகின்ற போது, ஏகாதிபத்திய அமைப்பு தகர்ந்து போகும் என்ற உண்மையினால், வெள்ளை இனப் பெண்ணை விட கறுப்பு இனப் பெண் அதிகமாக உரிமை பெற்றுள்ளாள் என்று கதையளக்க வேண்டி உள்ளது. கறுப்பு இனப் பெண்கள் குறைந்த பட்ச ஜனநாயக உரிமையை கோரிப் போராடுவதைத் தடுக்க, ஏகாதிபத்தியத்தில் உள்ள ஆணாதிக்க அமைப்பை தக்க வைக்க, சமூகத்தையே தலைகீழாகக் காட்டுவது அவசியமாகிறது. இதைக் கவ்வி விளக்க நாலு நாய்கள் கிடைக்காமலா போய்விடும் என்ற நம்பிக்கையுடன் புறப்பட்டுள்ளார் அ.மார்க்ஸ்.

வெள்ளை இனப் பெண்களை விட கறுப்பு இனப் பெண்கள் அதிகளவு ஆணாதிக்க நிலப்பிரபுத்துவ கட்டுப்பாட்டுக்குள் வாழ்கின்றனர். இதை மறுக்கும் கபடம் நகைப்பிற்குரிய ஆணாதிக்கமாகும். பொதுவாக கறுப்பு வெள்ளை இனத் தொழிலாளர்கள், கூலிகள் எப்போதும் மற்றைய பெண்களை விட அதிகமாக சுயாதீனமாக, ஆண்களுக்கு நிகரானவர்களாக உள்ளனர். ஏனெனில் சொந்த உழைப்பும், போராடும் குணாம்சமும், இயற்கையை சார்ந்து இருத்தலும் இவர்கள் வாழ்கையில் உள்ளதால் இது இயல்பாகவே உள்ளதுடன், மற்றைய பெண்களுக்கு தலைமை தாங்கி விடுகின்றனர். இதை மறுத்து அ.மார்க்ஸ் எடுத்து வைப்பதைப் பார்ப்போம். "கறுப்புப் பெண்கள் தமது விடுதலைக்காக வெள்ளைப் பெண்களை நம்பியிருக்க முடியாது"64 என்கின்றனர். அருமையிலும் அருமையான ஏகாதிபத்திய விசுவாசம். கறுப்பு வெள்ளை என பிளக்கும் நாசிகள், பாசிஸ்டுக்கள், இனவாதிகள், ஆணாதிக்க வாதிகள் போல் பேசுகின்றனர். பெண் விடுதலை என்பது கறுப்பு வெள்ளை இனம் கடந்த போராட்டம் தான், ஆணாதிக்கத்தில் இருந்து பெண்ணை விடுவிக்கும். ஒன்று பட்டு பெண்ணைப் பிளந்து, ஆணாதிக்கத்துக்கு எதிரான ஒட்டு மொத்தப் போராட்டத்தை மறுப்பதன் மூலம், மனிதனின் ஒட்டு மொத்த விடுதலைக்கு போராடுவதை மறைமுகமாக மறுத்து, ஆணாதிக்கத்தை தக்க வைக்க முனைவதாகும். ஓரு வெள்ளை இனப் பெண் நிறவாதத்தை காக்கும் எல்லா நிலையிலும் கறுப்பு இனப் பெண் வெள்ளை நிறப் பெண்ணை அங்கீகரிக்க முடியாது. இது போல் கறுப்பு இனப் பெண் நிறத்தைக் காக்கும் போது வெள்ளை இனப் பெண், கறுப்பு நிறப் பெண்ணை அங்கீகரிக்க முடியாது. இதற்கு மாறாக வெள்ளை, கறுப்பு பெண்ணின் இணைவு தமக்குள் உள்ள விசேட ஒடுக்கு முறையையும் எடுத்து இணைத்துப் போராட வேண்டும்.

இது சுரண்டல், இனம், மதம், சாதி,..... கடந்து அதற்கு எதிரான போராட்டத்தில் தான் சாத்தியமாகின்றது. இதை மறுப்பது என்பது காலனிய வாதிகள் எதை தமது ஆட்சிக்காக பிளவுகளை ஏற்படுத்தி பிளந்து ஆண்டார்களோ, ஆளுகின்றார்களோ, அதை அ.மார்க்ஸ் உலக மயமாதலுக்கான ஏகாதிபத்திய உலகுக்காக விசுவாசமாக பிரகடனம் செய்கின்றார் அவ்வளவே.

இதற்காக எடுத்து இயம்பும் வரிகளை பார்ப்போம். "கறுப்புப் பெண்களைப் பொறுத்த மட்டில் "பெண்" என்பது அவளது முழு அடையாளமாக இருக்க முடியாது."64 என்கின்றார். நகைப்பிற்குரிய வாதங்கள், எடுகோள்கள். ஆபிரிக்கா, ஆசிய, ....... எங்கும் ஆணாதிக்கமுள்ள கறுப்பு நிறப் பெண்கள் பெண்களாக இல்லையா? அப்படியாயின் அவர்கள் கற்பிதமாகவா உள்ளனர். முதலில் பெண் என்ற பொருளை மறுப்பதன் மூலம், அவன் மீதான் ஒடுக்கு முறையை மறுத்து, கறுப்புப் பெண்ணை கேலி செய்யும் ஏகாதிபத்திய அமைப்புப் போல், வெட்கம் இன்றி பெண் இல்லை எனக் கேலி செய்கின்றனர். இங்கு பெண் என்ற அடையாளமே ஆணாதிக்கம் சார்ந்ததே.

மூன்றாம் உலகில் உள்ள கறுப்பு நிற பெண்கள் மீதான ஆணாதிக்க ஒடுக்கு முறையை மறைக்க, அதற்கு எதிரான போராட்டத்தைத் தடுக்க முனைவதன் மூலம், இப்போராட்டம் தவிர்க்க முடியாது ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இயல்பாக எழும் என்பதால், அதைத் தடுக்க கறுப்புப் பெண்ணை ஆணாதிக்கமுள்ள பெண்கள் அல்ல என்கின்றனர். பின்நவீனத்துவ தமிழ் தலித் சாக்கடைகள் இப்படி ஏகாதிபதியத்துக்காக நாய்வால் ஆட்டி முதுகு முறிய உழைக்கும் கோட்பாடு, அலட்டாமல், புலம்பாமல் ஒடுக்குபவர்களுக்கு எதிரான அடக்கப்பட்ட மக்களின் போராட்டத்தை சிறுமைப்படுத்தும் கனவுகளின் வெளிப்பாடு தான் இவை.

தலித் பெண்ணை ஆணாதிக்க அமைப்புக்குள் தொடர வைக்க முன்வைக்கும் அ.மார்க்சின் வாதத்தைப் பார்ப்போம். "ஒரு தலித் பெண்ணுக்கு "பெண்" என்ற நிலையைக் காட்டிலும் "தலித் பெண்" என்ற நிலையிலேயே அடையாளம் காட்டப்படுகிறது."64 என்கின்றார். இப்படிப் பார்த்தால் தலித் பெண்ணை பள்பெண், நளப்பெண், சக்கிலியப்பெண், ......... எனப் பிளந்து அல்லவா ஆராய வேண்டும். அதைவிட்டுவிட்டு தலித் பெண் எனப் பொதுமைப்படுத்தும் சதிதான் என்னவோ? தலித் பெண் என்பதைக் காட்டிலும் அவரவர் ஒடுக்கு முறை வேறுபட்டது அல்லவா? ஆனால் ஏகாதிபத்தியத்தின் வெளுத்துப் போன பின்நவீனத்துவ தலித் கோட்பாட்டுக்கு திடீர்ரென இடையில் பிழைப்புக்கு ஏற்றவாறு குத்துக் கரணம் அடிப்பது ஏன் எனக் கொஞ்சம் ஆராய்ந்தால், அந்த ஏகாதிபத்திய நோக்கத்தை இனங் கண்டு கொள்ள முடியும். "பெண்" ஆணாதிக்கத்துக்கு எதிரான ஒடுக்கு முறையில் பெண்ணாக அடையாளம் காண்கின்றாள். இப் பெண் தனக்குமேல் உள்ள ஆணாதிக்க ஒடுக்கு முறையை இனம் கண்டு, அதை எதிர்த்து போராட பெண்நிலைவாத நோக்கில் அணிதிரள்கின்றாள். இது சுரண்டல், இனம், மதம், சாதி, மொழி, ......... என அனைத்து ஒடுக்கு முறையையும் எதிர்த்து, பெண்ணாக, பெண்நிலை வாதமாகக் கட்டி அமைத்து ஆணாதிக்கம் மீது ஒட்டு மொத்த வெற்றிக்காக போராடுகின்றனர். இதை மறுத்த அனைத்தும் விதிவிலக்கின்றி தவிர்க்க முடியாது ஆணாதிக்கத்தை கட்டமைக்கின்றது. ஏனெனின் ஒட்டுமொத்த ஆணாதிக்கத்தை எதிர்க்காத அனைத்துக் கோட்பாடும் நடைமுறையும், தமக்குள் தமது நலனுக்குள் சீர்திருத்தத்தைக் கோருகின்றது.

அடுத்து ஆணாதிக்கத் தகவமைப்பை பார்ப்போம். "தலித் பொதுப்புலம் ஆண் சார்பற்றது எனச் சொல்ல முடியாதெனினும் இதிலும் மேற்சாதிப் பொதுப்புலத்தினளவு ஆண் சார்புத் தன்மை இல்லை எனலாம். ....... தலித் பெண்ணியம் சாதியத்தையும் பார்ப்பனியத்தையும் ஆணாதிக்கத்திற்கு இணையான இலக்குகளாகக் கொள்வது தவிர்க்க முடியாது."64 என தலித் ஆண்களின் ஆணாதிக்கத்தைப் பாதுகாக்க அதனூடாக இச்சமூக அமைப்பை முண்டு கொடுக்க குரல் கொடுக்கின்றார். இதற்குடாக எதைப் பாதுகாக்கின்றார் எனப்பார்ப்போம். ஆந்திராவில் "தொம்மரா", "போகாம்" சாதியைச் சேர்ந்த பெண்களை, (தலித்) அதே சாதியைச் சேர்ந்த ஆண்கள் சந்தை அமைத்து ஏலம்விடுகின்றனர். ஒருவருட ஒப்பந்தில் ஏலம்விடப்பட்ட 10000 இளம் பெண்கள் மும்மை, ஆந்திராவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட பின், மீளவும் அச்சமூகத்துக்குள் திரும்பிவிடுகின்றனர். பணமுதலைகளால் நடத்தப்படும் இந்த ஏலம், வறுமையில் வாடும் மக்களின் துயரத்தை விபச்சாரமாக்கிவிடுகின்றனர். இதுபோல் மத்திய பிரதேசத்தில் விற்க்கப்பட்ட பெண்கள் வைப்பாட்டியாகவும், மீளவும் விபச்சாரத்துகாக விறக்கப்படுகின்றனர். (இதழ்-2-4,1999)46 உண்மையான சாதிக்குள்ளான ஆணாதிக்க யதார்த்தம் நிர்வாணமாக பளிச்சிட்டு இருக்கும் போது, தலித் ஆணாதிக்கத்தை அ.மார்க்ஸ் மூடிமறைப்பதன் மூலம், கோட்பாட்டு விபச்சாரத்தை மனவெட்கமின்றி அதே தரகு தனத்தில் செய்கின்றார்.

தலித் ஆணாதிக்கம் இல்லை என்று கூறும் அளவிற்கு, ஒப்பீட்டில் கூறியபடி மோசடி செய்கின்றார். சமுதாயப் பண்பாடு, கலாச்சாரம், பொருளாதாரம், சூழல்....... போன்றவற்றில் காணப்படும் ஏற்றத் தாழ்வான ஆணாதிக்க வேறுபாடுகளை ஒப்பீட்டளவில் மறுத்து, ஆணாதிக்கத்தை தக்க வைக்கும் முயற்சி உண்மையில் ஏகாதிபத்தியத்தைப் பாதுகாக்க வர்க்கப் போரை மறுத்துரைக்கும், கோட்பாடு உருவாகும் முயற்சியில் முன் வைப்பது தான்.

ஆணாதிக்கம் என்பதும் அதன் அச்சாணி என்பதும் பெண்களை சுரண்டுவதில் அதாவது தனிச் சொத்துரிமையில் இருந்து தொடர்கிறது. இது பெண்களை அடிமையாக்கியதுடன், பாலியலை நுகர்வுக்குரிய பண்டமாக மாற்றியதும் என்பது உலகளவில் பொதுத்தளத்தில் பொது உண்மையாக, பெண் மீதான ஒடுக்கு முறையாக உள்ளது. ஏற்றத் தாழ்வான சமூக அமைப்பில் உள்ள மாறுபட்ட குறிப்பான ஆணாதிக்க ஒடுக்கு முறையைக் கொண்டு, பொதுவான ஆணாதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தை மறுப்பது என்பது, ஏற்றத் தாழ்வுக்குள் குளிர் காய்ந்து அதில் பிழைக்க முனையும் கோட்பாடுகள், செயல் தளங்கள் உண்மையில் மக்களை ஏமாற்றி அதில் ஆணாதிக்கத்தை தக்க வைத்து பாதுகாப்பது தான்.

தலித் பெண்கள் சாதியையும், பார்ப்பனியத்தையும் ஆணாதிக்கத்திற்கு இணையாகக் கொள்வது என்பது, தலித் பெண்கள் ஆணாதிக்கத்திற்கு எதிராக போராடுவதை மறுப்பதாகும். தலித் பெண்களின் ஆணாதிக்க ஒடுக்கு முறையை சாதியத்திற்குள்ளும், பார்ப்பனியத்திற்குள்ளும் மூடி மறைத்து ஆணாதிக்க அமைப்பை பாதுகாக்க கோருவதன் மூலம், உண்மையில் இச் சமூக அமைப்பை பாதுகாப்பதன் மூலம் நனவாக பார்ப்பனியத்தையும், சாதியையும் பாதுகாக்க முனைவதாகும்.

இதில் சாதியத்தை, பார்ப்பனியத்தை ஆணாதிக்கத்துடன் ஒப்பிடுவது என்பதும் ஒரு பூர்சுவா குடும்பத்தில் ஆண் பெண் போராடுவது போல் ஆணாதிக்கத்துடன் சமரசம் கண்டு போராடத் தூண்டுவதும், ஆணாதிக்க எதிரியாக பிரகடனம் செய்யாத வகையில் காணக் கோருவதன் மூலம், சாதி என்ற கட்டமைப்பை பார்ப்பனியம் வரையறுத்த வகையில் சமூகத்தை வாழக் கோருவதாக உள்ளது. ஆணாதிக்கத்துக்கு மாற்றாக சாதியை வைப்பது என்பது இருக்கும் ஆணாதிக்க உலகைத் தக்க வைப்பதுமாகும். ஆணாதிக்கம் தகராத வரை சாதியமும் தகராது.

அடுத்து ஆணாதிக்க அமைப்பை பாதுகாக்க வைக்கும் வரிகளைப் பார்ப்போம். "இந்திய மரபுத்துவத்திற்கு உரிய பெண்ணியம் என்ற கருத்தை இன்று இந்துத்துவத்திற்கு உயர்த்திப் பிடிப்போர் முன்வைக்கின்றனர் பாரதீய ஜனதாக் கட்சியின் பெண்கள் பிரிவாகிய "மகினமோர்ச்சா" சேர்த்து மிருதுனா சின்கா சொல்லுது, "இந்தியப் பாரம்பரியம் முன் வைத்து ஏற்றுக் கொண்ட பாலியல் சமத்துவத்தை மீட்டுத் தருவதென பாரதீய ஜனதாக் கட்சி சபதமேற்கிறது ...... மேற்கில் வளர்ந்து வரும் பெண் விடுதலை இயக்கங்களில் இருந்து நாங்கள் கோட்பாட்டளவில் வேறு படுகின்றோம், சமூகத்திலும் பொருளாதாரத்திலும் ஒரு வகையான மறுசீரமைப்பை நாங்கள் கோருகின்றோம்."64 என்கின்றார் அ.மார்க்ஸ். மேற்கு நாட்டு பெண் விடுதலையில் இருந்து கோட்பாட்டளவில் வேறுபடுவதாக (அதை என்ன எனச் சொல்ல வக்கில்லாமல் போகிறது) கூறிக் கொண்டு பாரதீய ஜனதா பெண்விடுதலைக்கு மேள தாளத்துடன் அங்கீகாரம் வழங்குகின்றார் அ.மார்க்ஸ். வாழ்க பார்ப்பனியப் பெண்ணியம். இந்த ஆணாதிக்க பார்ப்பனியம் பெண்ணியத்தை மறுப்பது என்பதும், வரையறுப்பது என்பதும் கேலிக்குறியது எனக் கூறி ஆணாதிக்க ஏகாதிபத்தியத்திற்கு நியாயம் கற்பிக்கின்றனர்.

பார்ப்பனிய ஆணாதிக்கத்தை முன்வைக்கும் மிருதுளா சின்காவின் கோரிக்கையை எப்படி விமர்சிக்க முடியும். ஏனெனின் பெண்ணியத்தை வரையறுப்பது கேலிக்குரியது, எனவே நாம் அதை பாதுகாக்க வேண்டும் என்கின்றார், பார்ப்பனிய கோட்பாட்டாளர் அ.மார்க்ஸ்.

பாரதிய ஜனதா வைத்தாலும், அமெரிக்கா ஜனாதிபதி கிலிங்ரனின் மனைவி வைத்தாலும் கோட்பாட்டளவில் வேறுபாடு உண்டு. ஆனால் அந்த ஆணாதிக்கத்தை மறுத்து, எதிர்த்து பெண்ணியத்தை நிலை நிறுத்த மாட்டோம் என்கின்றார். ஏனெனின் பெண்ணியத்தை வரையறுப்பது கேலிக்குரியது அல்லவா? உச்சரித்தால் போதும் அங்கீகரிப்போம் வாருங்கள் என அழைக்கின்றார் துரோகத்தை அரங்கேற்றி ஏகாதிபத்தியத்தை வாழவைப்பதற்கு.

தலித் பெண்ணியம் தலித் போன்ற கோசங்களின் பின் இவர்கள் "பொருளாதாரத்தில் ஒருவகையான மறுசீரமைப்பைக் கோருகிறோம்"64 என்பதன் ஊடாக பராதிய ஜனதாக் கட்சி வைக்கும் பெண்ணிய கோசத்தை அச்சொட்டாகவே முன்வைக்கின்றார். இந்த ஏகாதிபத்திய ஆணாதிக்க பார்ப்பனியச் சாதிய சமூகத்தில் மாற்றம் இன்றி பொருளாதாரத்தில் சலுகைகளை பார்ப்பனியத்திடம் கேட்டு பெறுவதை கோருவது, கறுப்பு வெள்ளை தலித் கோசங்களின் பின் முன்வைக்கும் அருவருக்கத் தக்க ஏகாதிபத்திய அருவருடித்தனமாகும்.

இந்த மாதிரி சுரண்டும் பன்றித் தனத்தை தெளிவாகக் காட்டியபின், மார்க்சியத்தை எதிர்ப்பதில் வியப்பேதும் இல்லை. மார்க்சியம் மட்டும் தான் உண்மையில் மக்களின் பிரச்சினையை பொருளாதாரச் சலுகைக்குப் பின் தேடாது, அவர்கள் விடுவிக்கும் போராட்டத்தில் தியாகத்தின் ஊடாகப் போராடுகின்றது.

இருக்கும் ஏகாதிபத்திய ஆணாதிக்க பார்ப்பனிய சாதிய அமைப்பை தலைகீழாக்க சமூகத்தை மார்க்சியம் கோரும் போது, அதை சேறடித்து சலுகைக்காக, பிழைப்புக்காக போராட விளையும் கூட்டம், பாட்டாளி வர்க்கம் போராடுவதை அங்கீகரிக்க மறுத்தும், மார்க்சியத்தை அந்த மக்களுக்கு எதிரானதாகக் காட்ட எல்லா வண்ணக் கோட்பாடுகளையும் மீள மீள முன்வைக்க முயல்வதைத் தான், மேற்கூறிய கோரிக்கைகள் தலித்தியத்தின் பின் எழுவதைக் காணமுடியும். அந்த வகையில் சில பொருளாதார சலுகைக்காக பார்ப்பனிய மந்திரி சபைகளிலும், கட்சிக் கூட்டுகளிலும் சொந்த சலுகைகளை முன்நிறுத்தி நாய் பிழைப்பு பிழைக்கும் நபர்கள் இந்த தலித் கோட்பாட்டின் தனிச்சொத்துரிமையின் உற்பத்தியே ஒழிய வேறு ஒன்றும் அல்ல.

இதற்காக எடுத்து வைக்கும் அடுத்த வரிகளை ஆராய்வோம். "தலித் பெண்ணியம் இத்தகைய இந்துத்துவப் பெண்ணியத்தில் இருந்து விலகி நிற்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. அயோத்தி தாசரும் அம்பேத்காரும் முயற்சித்ததைப் போல தலித் பெண்ணியமும் இந்திய மரபு என்பதை வைதீக வேர்களிலிருந்து அல்லாமல் பவுத்த, சைவ வைதீக மரபில் தேட முயலும், அம்பேத்கார், பெரியார், ப+லே வழியில் நின்று சாதியம் பார்ப்பனியம், ஆணாதிக்கம் ஆகியவற்றை எதிர்க்கும், தலித் ஆணை அது தன் எதிரியாக நிறுத்தாமல் உயர்சாதி ஆணாதிக்க சமூகத்தை அது தனது இலக்காகக் கொள்ளும்"64 என தலித் ஆணாதிக்கத்தைத் தக்க வைக்க பெண்ணியப் போராட்டங்களை தடுத்து நிறுத்த, தலித் ஆணாதிக்கமும் கிடையாது போராட்டமும் கிடையாது என்கின்றார்.

தலித் ஆணிய சலுகைகளை விட்டுக்கொடுத்து, உயர்சாதி ஆணியத்தை எதிர்த்துப் போராடக் கோரும் ஜனநாயக விரோத அரசியல், உண்மையில் ஒட்டு மொத்த ஆணாதிக்கத்தை தக்க வைக்கத்தான். அ.மார்க்ஸ் தலித் ஆணாதிக்கத்துடன் சமரசம் கண்டு, தலித் பெண்களை எட்டி உதைக்கும் ஆணாதிக்க சுரண்டல் தலித்தியம் அந்த மக்களுக்கே எதிரானது. ஏனெனில் தலித் தனக்குள் உள்ள சுரண்டும் வர்க்கத்தை எதிர்ப்பதில்லை. தனக்குள் உள்ள சாதி ஒடுக்கு முறையை எதிர்ப்பதில்லை. தனக்குள் உள்ள ஆணாதிக்கத்தை எதிர்ப்பதில்லை. இப்படி தலித்துக்குள் உள்ள சுரண்டும் வர்க்க, ஆளும் வர்க்க ஆணாதிக்க சாதிப் பிரிவுகளின் சலுகையில் எழும் கோட்பாடு, போராட்டம் எப்படி அந்த மக்களை விடுவிக்கும். என கொஞ்சம் யோசித்தால் இதன் நோக்கம், இந்த உலகை களங்கம் இன்றி சலுகைக்குள் பாதுகாப்பது தான் கோருகின்றது.

தலித் பெண்ணியம் தனக்கு மேல் உள்ள தலித் ஆணாதிக்கத்தை எதிர்ப்பதில் தான் எழமுடியும். இது தனக்குள் உள்ள சுரண்டல், சாதி ஒடுக்கு முறை என அனைத்தையும் எதிர்த்து, மற்றைய பிரிவு ஒடுக்கப்பட்ட மக்களுடன் இணைந்து தான் எழமுடியும்.

தலித்துக்குள் ஒரு பார்ப்பனியப் பிரிவும், பிழைக்கும்சுரண்டல் பிரிவும், தமது சலுகைகளை தனித்துவமாகப் பெற எழும் கோட்பாடுகள் இயக்கங்கள் அற்ப சலுகைகளை வீசி எறிந்து, ஒட்டுமொத்தமாக சூறையாடுவதே எஞ்சம்.

கோட்பாட்டுச் செம்மல் அ.மார்க்ஸ் சலுகைக்காக என வைக்கும் கோட்பாடு, தலித் ஆணாதிக்கத்தை எதிர்த்து அல்ல, சுரண்டலை எதிர்த்து அல்ல, உள் சாதி ஒடுக்கு முறையை எதிர்த்து அல்ல என்ற ரீதியில், இதற்கு வெளியில் எந்த தலித் பிரிவும், எந்தப் போராட்டக் கோட்பாட்டையோ, வழியையோ, நடைமுறையையோ வைக்க முடியாது.

தலித்துக்குள் தலித் முதலாளிக்கு சலுகை, தரகு முதலாளிக்கு சலுகை, ஆணாதிகத்துக்கு சலுகை, நிலப்பிரபுத்துவச் சலுகை, உயர்சாதிச் சலுகை என்று நீளும் கோட்பாட்டு வரையறைகள் உண்மையில் பாட்டாளி வர்க்கம் எதை மறுத்துப் போராடுகின்றதோ, அதன் மீது அதற்கு நேர் எதிராக முன்வைத்து நிலை நிற்கிறது. பாட்டாளி வர்க்கம் தலித்துக்குள் இச் சலுகைகளை ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக நின்று மறுக்கின்றது.

இதை மறுத்து அம்பேத்கார் வழியில் போராடக் கோருகின்றார். இந்திய மரபை வைதீக மரபில் இருந்தல்ல பௌத்த, சைவ, வைதீக மரபில் தேட வேண்டும் எனக் கூறி, மற்றொரு வைதீக மரபில் மக்களை மீளவும் மூடிப் போட்டு வைக்க விரும்புகின்றார். இதற்கு பெரியாரைக் கொண்டு வரும் முரண்பாட்டுக்குப் பதில் அளிக்க வேண்டியது இல்லை என நம்புகின்றார். பெரியாரின் போராட்டம் மொத்த சமயக் கருத்து முதல் வாதத்திற்கு எதிரானது. அம்பேத்கார் கருத்து இதற்கு நேர் எதிரானது.

இப்படி முரண்பாட்டை முன்வைக்கும் கோட்பாடு இடியப்பச் சிக்கலை மாறிமாறிப் பேசுவதால் யாருக்கும் புரிவதில்லை, விளங்குவதுமில்லை என நம்புகிறார். பெயர்களை உச்சரிப்பது நாய்ப்பிழைப்பிற்கு அவசியமாகிறது. இதன் மூலம் தலித், தலித் பெண்ணிய மோசடிகளை அரங்கேற்ற முடியும் என்ற கனவுகள் பெயர்களால் நனவாக்க முனைகின்றார்.

இதேயே மேலும் முரண்பாட்டின் சிக்கலில் முன்வைப்பதை ஆராய்வோம். " "தலித்" என்றும் உரிமையைப் பயன்படுத்தி ஒரு தலித் ஆண், தலித் பெண்ணின் மீது ஆதிக்கம் செலுத்துவதை அது ஏற்றுக் கொள்ளாது ........ "தீண்டாமை" என்கின்ற சொல்லாடலைப் பயன்படுத்தி ஒரு தலித் ஆண், தலித் பெண்ணுக்கு எதிரான சலுகையைக் கோர முடியாது."64 இது யாராவது கேள்வி கேட்டாலும் இல்லை எனச் சொல்ல, விரும்பியவாறு, மறுவாசிப்பு, மறுவிளக்கம் சொல்ல முன்வைத்த மோசடியாகும்.

வெள்ளையில் இருந்து கறுப்பைப் பிளந்து, கறுப்பில் தலித்தைப் பிளந்து அங்கு படிப்படியாக ஒடுக்கு முறையில்லை எனக் கூறிய ஆய்வுரைகள், பின் போராட்டம் உள்ளே இல்லை எனப் பிரகடனம் செய்து, பின் சலுகை கோர முடியாது என கதையளக்கிறார்.

தலித் ஆண் தலித் பெண் மீது ஆதிக்கம் செலுத்த முடியாது எனக் கூறும் அ.மார்க்சின் கோட்பாடு தலித் ஆணை தனது எதிரியாக நிறுத்தாது எனக் கூறினார். இது எப்படிப் பொருந்தும் என விளக்க வேண்டியது இல்லை என நம்புகின்றார். இதைச் சொல்லிப் பிழைத்தால் போதும் என்பதே அரசியல் நிலை.

குழப்பம், இடியப்பச் சிக்கல், இதன் இறுதி முடிவு இருக்கும் அமைப்பை அசையாது பாதுகாக்கும் மறு வாசிப்பு செய்து ஒரு நாய்க் கூட்டத்திற்கு வழிகாட்டுவது தான் இதன் செயற்களம்.

மார்க்கியம் ஆணாதிக்கத்தை எதிர்த்து மறுத்து, ஆணாதிக்கத்தைப் புரட்டிப் போடுகின்றது. இதை மறுத்து மறுசீரமைப்பை நாங்கள் (தலித்-தலித் பெண்ணியம்) பொருளாதாரத்தில் கோருகின்றோம் என்பது, நாம் இனி எதை எனக் கூறத் தேவை இல்லை. இது இருக்கும் சமூக அமைப்பை, சலுகை பெற்று பாதுகாப்பதே.

தலித் பெண்ணியம், தலித்தியம், மற்றும் அனைத்துக் கோட்பாடுகளும், இதைத் தூக்கிப் பிடிக்கும் எல்லோரும் இதற்குள் தான் தமது அரசியல் பிழைப்பை தொடர்கின்றனர். இதை நாம் வேரறுக்க வேண்டும் இது தான் எம்முன் எஞ்சியுள்ளது.


No comments: