தமிழ் அரங்கம்

Thursday, August 28, 2008

கேளிக்கைப் பூங்காக்களாகும் ஏரிகள் தனியார்மயத்தின் மகிமை

இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறையின் தலைநகராகக் கருதப்படும் பெங்களூருவின் சிறப்பே அதன் ஏரிகள்தான். சில ஆண்டுகளுக்கு முன்னர் கூட இந்நகரில் நூற்றுக்கணக்கான ஏரிகள் இருந்தன. ஆனால் அந்நிய தரகு முதலாளிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்த நகரை மொய்க்கத் தொடங்கிய சில ஆண்டுகளிலேயே, இந்த ஏரிகளின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணும் அளவிற்குச் சுருங்கி விட்டது.

ஏரிகளை ஆக்கிரமித்து, தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள், வணிகவளாகங்கள், ""கோல்ப்'' மைதானங்கள், மேட்டுக்குடி குடியிருப்புகள் போன்றவை ரியல் எஸ்டேட் கொள்ளையர்களால் உருவாக்கப்பட்டு, பெரும்பாலான ஏரிகள் காணாமல் போய்விட்டன. எஞ்சிய ஏரிகளோ தூர்வாரப்படாமல் கழிவுநீர் தேங்கி குப்பைக் கூளங்களாய்க் கிடக்கின்றன. இவை கர்நாடக அரசின் கண்களை உறுத்தியவுடன், அவற்றைச் சுத்தம் செய்து பராமரிக்கத் தன்னால் முடியாது என நொண்டிச்சாக்கு சொல்லி, தற்போது அவற்றைத் தனியாருக்கு விற்க ஆரம்பத்துள்ளது.

இவ்வாறு விற்கப்பட்ட ஏரிகளில் ஒன்றுதான் நாகவரா ஏரி. பெங்களூரு நகரின் முக்கியமான ஏரிகளில் ஒன்றான இந்த ஏரி தற்போது ""லும்பனி கார்டன்'' என்னும் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஏரி தங்கள் வசம் வந்தவுடன் அந்நிறுவனத்தினர் ஏரியைச் சுற்றித் தடுப்புச்சுவர் எழுப்பி யாரும் ஏரிக்குள் நுழையா வண்ணம் தடுத்துவிட் டதோடு, ஏரிக்குள் நுழைய 30 ரூபாய் நுழைவுக்கட்டணமும் வசூலிக்க ஆரம்பத்துள்ளனர். அது மட்டுமன்றி, ஏரிக்குள் வெளிநாடுகளில் உள்ளதைப்போல நீர் மேல் ஓடும் ஸ்கூட்டர்கள், அதிவேகப் படகுகள், ""காபி டே'' போன்ற நட்சத்திர உணவகங்கள், மிதக்கும் உணவகங்கள், நவீன சிறுவர் விளையாட்டுக்கள் எனப் பல அம்சங்கள், அவற்றிற்கெனத் தனித்தனியே கட்டணங்கள் என்று மக்களின் பொதுப் பயன்பாட்டிலிருந்த அந்த ஏரி முழுவதையும் லாபம் தரும் பொழுது போக்குப் பூங்காவாக (""தீம் பார்க்'') மாற்றிவிட்டனர்.

No comments: