தமிழ் அரங்கம்

Sunday, December 18, 2005

ஆணாதிக்க ஒழுக்கக்கேட்டை கோருவதா பெண்ணியம்? பகுதி 5

குஷ்புவை குதறும் பார்ப்பானிய தலித் ஆண்டைகள்

குஷ்பு கூறிய உலகமயமாதல் ஆணாதிக்க நுகர்வுக் கருத்தை, நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க ஆண்டைகள் கண்ணோட்டத்தில் எதிர்க்கும் பார்ப்பானியமயமாதல் அரங்கேறியது. திருமாவளவனின் தலித் விடுதலைச் சிறுத்தைகளும், பாட்டாளி மக்கள் கட்சியும் பார்ப்பானிய கண்ணோட்டத்தில், இதையே தமது சொந்த அரசியலாக்கினர். படுபிற்போக்கான நிலப்பிரபுத்துவத்தின் ஆணாதிக்க சமூகக் கூறுகளை தோண்டியெடுத்து, உசுப்பிவிட்டதன் மூலம், பார்ப்பானிய மயமாக்கலை தமது அணிக்குள் வேகம் கொள்ளவைத்தனர். இதை கடந்தகாலத்தில் மார்க்சியம் தெளிவாக அம்பலப்படுத்தி வந்தது.

தலித்துகள் என்றும், பிற்படுத்தப்பட்ட சாதிகளாக உள்ள இந்த சமூக பிரிவுகளிடையே நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க பார்ப்பானிய கூறுகள், ஆதிக்கம் பெற்ற ஒன்றாக கடந்த வரலாற்றில் இருந்ததல்ல. அங்கு தாம் சொந்தமாக உழைத்து வாழும் ஆணும் பெண்ணும், சுயமான தெரிவுடன் கூடிய அதிகமான சுதந்திரத்தையே தக்கவைத்திருந்தனர். இதையே தகர்க்கும் போராட்டம் தான், இந்த எதிர்ப்பின் அரசியல் சாராம்சமாகும். இவர்களின் பாலியல் சுதந்திரம் என்பது, குஷ்பு வகையறாக்களின் நுகர்வு உடல் சுதந்திரமல்ல. மாறாக இயல்பாக இணைந்து வாழும் சுதந்திரம்.

இந்த நிலையில் தமது சொந்த குறுகிய தலித் சாதி அரசியல் முட்டுச் சந்தியில் திணறும் போது, குறுகிய வக்கிரங்களை எப்போதும் அரங்கேற்றுகின்றனர். உண்மையில் தலித்துகளின் மீதான சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக போராடப் போவதாக கூறி சாதிய ரீதியில் அணிதிரண்ட போது, சாதிய எதிர்ப்பு முதன்மை பெற்ற ஒரு அம்சமாக இருந்தபோது, போர்க்குணமிக்க சாதியெதிhப்பு போராட்டங்களை நடத்தினர். ஆனால் சாதிய எதிர்ப்பு போராட்டம் காட்டிக் கொடுக்கப்பட்டு, தனக்கு கீழ்பட்ட சாதிகளை ஒடுக்கும் ஒடுக்குமுறை அதிகரித்த போது, குறுகிய அரசியலில் ஒடுங்கி சாதிய அரசியலில் சங்கமித்து விடுகின்றது. பார்ப்பானிய சாதி அரசியல் எதைச் செய்ததோ, அதைத்தான் விடுதலைச் சிறுத்தைகள் செய்கின்றனர்.

பாராளுமன்ற சாக்கடைக்குரிய கதிரைப் போராட்டத்தை நடத்தும் அளவுக்கு சிதைந்தபோது, தலித்தின் பெயரில் சிலர் மக்களை ஏமாற்றி வாழ்தல் என்பது அரங்கேறுகின்றது. குறிப்பாக இதைக் காட்டித் தம்மைப் பாதுகாக்க, பார்ப்பானியமயமாதல் அவசியமாகிவிடுகின்றது. இந்த சமூக அமைப்பில் ஆளுமையுள்ள ஒரு சமூக நிறுவனமாக, பார்ப்பானிய கோட்பாடு உள்ளது. இதையே தலித்துகள் என்று கூறிக் கொள்ளும் இவர்கள் தமதாக்குகின்றனர். தனக்கு கீழ்ப்பட்ட சாதிகளை ஒடுக்குவதன் மூலம், தான் உயர்ந்த நிலையை அடைதல் என்ற பார்ப்பானிய கோட்பாடே தலித்தியமாகி, அதுவே இன்று கொலுவேறுகின்றது. பார்ப்பானிய ஆணாதிக்க நிலப்பிரபுத்துவ சமூகக் கூறுகளை, தமது சொந்த சாதியின் வாழ்க்கை முறையாக ஏற்க வைப்பதன் மூலம் தான், தனது சமூகத்தை குறுகிய தமது சொந்த பிற்போக்கு தளத்தில் தக்கவைக்க முடியும் என்ற பார்ப்பானிய நரித்தந்திரத்தை தலித்துகள் என்று கூறிக் கொள்வோர் தமதாக்கியுள்ளனர். இதை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உத்திரபிரதேச மாயவாதி வரை நாம் காணமுடியும்.

உலகமயமாதல் அமைப்பில் பார்ப்பனியம், தன்னை அதன் அதிகார பிரிவின் உறுப்பாக்கி வருகின்றது. உலகமயமாதலில் அதிகாரம் தனியார் சொத்துரிமை என்ற அமைப்பு நோக்கி முழுமையாக நகருவதால், அரசு கட்டமைப்புகளில் பார்ப்பான் வகித்த ஆதிக்கம் படிப்படியாக குறைகின்றது. மாற்றம் என்பது அரசு உலகமயமாதலின் எடுபிடிக் கருவியாகின்றது. பார்ப்பான் உலகமயமாதல் தனியார் அமைப்புகளின் உச்சத்தில் அமர்ந்து, நாட்டை ஆளத் தொடங்கியுள்ளான். இந்த நிலையில் அரசு அதிகார மையங்களில் இருந்த இடைநிலைப் பதவிகள் காலியாகின. இதை இடைப்பட்ட சாதிகள் தமக்கு இடையில் நிரப்பும் போட்டியில் தான், தலித் எழுச்சிகள் நடந்தன. அது பூர்த்தியான நிலையில், தலித் அரசியல் முட்டுச் சந்தியில் வந்து தேங்குகின்றது.

இதே போன்று கிராமப்புறங்களில் நிலத்திலும் கூட, புதிய நிலப்பிரபுத்துவம் இடைப்பட்ட சாதிகளின் வடிவில் ஏற்படுகின்றது. அதிகாரத்தை பெற்ற புதிய தனிச்சொத்துரிமை சாதியப் பிரிவுகளின் எழுச்சி, இறுதியாக பார்ப்பனிய மயமாகின்றது. இதனால் பார்ப்பானியம் விட்டுச் சென்ற சில பார்ப்பானிய கடமைளை அதே சாதி ஒழுங்கில் பேண, இடைப்பட்ட சாதிகளின் பிரதிநிதிகள் பொறுப்பேற்கின்றனர். இதனால் அவை சாதிய அரசியல் மூலம் ஆதிக்கம் பெறுகின்றனர். சொந்தச் சாதியை முதலில் பார்ப்பானியமயமாக்கி, அடிமட்ட சாதிகளை பார்ப்பானிய உள்ளடகத்தில் ஒடுக்கத் தொடங்குகின்றனர்.

குஷ்பு விவகாரத்தில் இந்த பார்ப்பானிய சிந்தாந்தம் பிரதிபலிப்பது என்பது ஆச்சரியமானதல்ல. இந்த தலித் அரசியல் பார்ப்பானியமயமாதல் எப்போதோ நடந்துவிட்டது. இதை மார்க்சியவாதிகள் தொடர்ச்சியான விமர்சனம் மூலம், அம்பலப்படுத்தி வந்துள்னனர். இதை ஆதரித்தவர்கள், அதில் பங்கு வகித்தவர்கள் திடீரென இதைக் கண்டு புலம்புவதும், திடீரென கொப்புவிட்டு பாய்ந்து குஷ்புவின் பின்னால் கும்மியடிப்பதும் பார்ப்பானியத்தின் மற்றொரு பக்கம்தான். இது ஆணாதிக்கம் கூட. இந்தியாவில் இருந்து பாரிஸ் வந்த மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ரஜனி பாரிஸ் இலக்கியச் சந்திபில் துல்லியமாக பாய்விரிக்கும் தரகு விபச்சாரத்தை இப்படித் தான் அரங்கேற்றினார்.

பாரிஸ் இலக்கிய சந்திப்பு, உலகமயமாதலின் ஒழுக்கக்கேட்டுக்கு பாய்விரித்தது.

பாரிஸ் இலக்கியச் சந்திப்பு மக்கள் விரோத சந்திப்பு தான் என்பதை, ரஜனியின் உலகமயாதலை ஆதரித்து ஆற்றிய விபச்சார கருத்துரையாடல் மீண்டும் அம்பலமாக்கியது. இதன் போது ஏகாதிபத்திய உலகமயமாதலுக்காக, தரகு கும்பலாக சீரழிந்து தனது கடைகோடியில் நின்றே ரஜனி வக்காலத்து வாங்கினார்.

வழக்கறிஞர் ரஜனி வழக்கறிஞர் என்பதாலோ என்னவோ, பொய்யை உண்மையாகவும் உண்மையை பொய்யாகவும் உருட்டிப் பிரட்டிய ஒரு பொய்யைப் போல், இலக்கியத்தையே அரசியலையே புரட்டிக் காட்டினார். கேட்டுக் கொண்டு இருந்தவர்கள் தமது வழக்கை அவரிடம் ஒப்படைத்த திருப்தியில், வாய்பிளந்து எதிர்பின்றி கேட்டுக் கொண்டிருந்தனர். நாம் அதில் கலந்துகொள்ளாத போதும் கூட, இது எமது கற்பனையல்ல. அதுவே அங்கு நிகழ்ந்தது. இதை யாரும் எந்தக்கொம்பனாலும் மறுக்க முடியாது. அரசியல் ரீதியாக சமூகத்தைப் புரிந்து கொள்ள வக்கற்றுப் போன, புலம்பெயர் இலக்கியவாதிகள், இதற்கும் தரம்தாழ்ந்து சோரம் போவது இயல்பானது தான்;. உலகமயமாதலின் விசுவாசிகளாக அவர்கள் மாறியதில் ஆச்சரியம் எதுவுமில்லை. இது நாம் முன்கூட்டியே இவர்களைப் பற்றி கடந்தகாலத்தில் கூறி வந்ததுதான். புலியெதிர்ப்பு அரசியல் ஏகாதிபத்தியத்தின் எடுபிடிகளாக எப்படி சிதைந்து சீரழிந்து பலம்பெற்று வருகின்றதோ, அப்படித்தான் பெண்ணியம் தலித்தியம், இலக்கியம் என எங்கும் அரங்கேறுகின்றது.

வழக்கறிஞர் என்ற சமூகத் தகுதியுடன், தலித் என்ற கொம்புடன், பெண் என்ற உடல் அடையாளத்துடன் தான், தனது தொழில்முறை உத்தியை இலக்கியச் சந்திப்பில் கையாண்டார். இந்த வழக்கில் ஒரு உண்மையைத் திரித்தபடியே, அரசியல் விபச்சாரத்தை அரற்கேற்றினார். இந்தியாரூடே கருத்துக் கணிப்பைக் கூட திரித்து, அதன் மேல் பொய்யை கூறிய போது அரங்கத்தின் அறிவின்மை எந்த சலசலப்பையும் கூட ஏற்படுத்தவில்லை.

1.இந்த ஆய்வு பணக்கார மேட்டுக்குடி பெண்களிடம் எடுக்கப்பட்டது என்ற உண்மை திரிக்கப்பட்டது. அதில் இருந்து தனது உலகமயமாதல் கருத்துகளை தெளித்தார்.

2.மேட்டுக்குடி பெண்களிடமே எடுக்கப்பட்ட புள்ளிவிபரத் தரவுகள் மீது துணிச்சலாகவே பாரிஸ் இலக்கிய ஜாம்பவான்களின் அறிவின்மை மீது, ஒரு பொய்யை உமிழ்ந்தார். மேட்டுக்குடி நகர்புற பெண்களே, திருமணத்துக்கு முன் உறவு கொள்வது தவறு என்று 71 சதவீகித பெண்களும், கன்னித் தன்மையுடன் வாழவேண்டும் என்று 66 சதவீகிதமான பெண்களும் கருத்துகளை வெளியிட்டு இருந்தனர். இதில் சென்னையில் 82 சதவீகிதமான மேட்டுக்குடி பெண்கள் கன்னித் தன்மையுடன் வாழவேண்டும் என்று கூறி இருந்தனர். (புதிய ஜனநாயகம் நவம்பர் இதழைப் பார்க்க ) இதை வழக்கறிஞர் தனது வழக்காடும் பொய்யுடன், திருப்பி மறுபக்கமாக கூறியே தமது முழு ஆய்வுரையையும் நியாயப்படுத்தினார். இதையே ரி.பி.சி ஆய்வாளர் சிவலிங்கம் 15.12.2005 ரி.பி.சியில், குஷ்புக்கு ஆதரவாக அரசியல் விவாதத்தின் போது புகுத்தினார்.

ரஜனி உலகமயமாதல் அமைப்பை ஆதரிப்பது பெண்களின் கடமை, தலித்துகளின் கொள்கையாக இருக்க வேண்டும் என்றார். தலித்துகள் தமிழ் படிக்க கூடாது, ஆங்கிலம் படிக்க வேண்டும் என்றார். நான் டில்லியில் தமிழிலா வழக்காட முடியும் என்றார். தலித்துகள் உலகமயமாதலை ஆதரிப்பதன் மூலம் தான், சாதியை ஒழிக்க முடியும் என்றார். தமிழ் என்பதும், தேசியம் என்பதும் பாசிசம் என்றார். அது இந்துப் பண்பாடு என்றார். இப்படி உலகமயமாதலுக்காக தரகராக வாலாட்டி குரைத்தார்.

மேலும் அவர் உலகமயமாதல் உடல் சார்ந்த பாலியலே பெண்ணியம் என்றார். பெண் விடுதலைக்குரியதே உலகமயமாதல் என்றார். இதன் சாராம்சத்தில் தான் குஷ்புக்கு ஆதரவாக கும்மியடித்து, தலித் பெண்ணியம் பற்றி அனைத்து வக்கிரமும் அரங்கேறியது.

தலித் மக்களின் சாதிய துயரங்களையும், பெண்களின் மேலான ஆணாதிக்க கொடூரங்களைச் சொல்லி தனது உலகமயமாதல் அரசியலை அரங்கேற்றினார். உதாரணமாக புலிகள் பேரினவாத சிறிலங்கா அரசின் கொடூரத்தை சொல்லி, தமது பாசிச அரசியலைச் செய்வது போல் உலகமயமாதலுக்காக வரிந்து நின்றார். உலகமயமாதல் செய்யும் சமூக விரோதக் கொடூரங்களை பற்றி எதையும் சொல்லவில்லை. அப்படி எதுவும் இல்லை என்பதே அவர் முன்வைக்கும் கருத்தின் சாரமாகும்.

உலகமயமாதலை ஆதரித்த தனது தர்க்க நியாயவாதத்தில் உலகமயமாதல் வந்ததால் தானே 500 ரூபாவுக்கு கைத்தொலைபேசி வந்தது என்கின்றார். 10000 ரூபாவுக்கு கம்யூட்டர் வந்தது என்கின்றார். ஆகவே தாராளமயத்தை நாம் ஆதரிக்க வேண்டுமென்கின்றார். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தனியார் மயமாகமல் தொலைபேசி இருந்து இருந்தால், இது சாத்தியமில்லை என்கின்றார். மக்களின் உழைப்பில் உருவான அரசு சொத்துகளை, தனியார் மயமாக்க முனையும் போது அரசுதுறை நட்டத்தில் இயங்குகின்றது, திறமையின்மை, சேவைக்குறைபாடு, அதிகார வர்க்கத்தின் கெடுபிடி என்று பலவாக கூறும் உலகமயமாதல் சதியாளர்களின் வழியில் இவர், சந்தை மலிவை படம்பிடித்துக் காட்டுகின்றார்.

ஏழை எளிய மத்தியதர வர்க்கம் இதனால் தான் இதைப் பெறமுடிகின்றது என்றார். எதார்த்தத்தின் மீதான திரிபும், முன்னால் இருப்பவர்கள் செம்மறிகள் என்பதால் துணிச்சலுடன் கூடிய வக்கிரம் வெளிப்பட்டது. வழக்காடும் வழக்கறிஞரே மலிவான கம்யூட்டர், மலிவான கைத்தொலைபேசி பற்றி பேசி உலகமயமாதலை ஆதரிக்கும் வக்கிரத்தை நீங்கள் அரங்கேற்றுகின்றீர்கள். வழக்கறிஞரே நீங்கள் ஆதரிக்கும் உலகமயமாதலால் மலிவாக தலித்துக்கு ஒரு நேர உணவைக் கூட வழங்க முடியுமா? இந்த உலகமயமாதலால் சுத்தமான நீரை, தேவையான உணவை, வாழ்வதற்கு ஏற்ற ஒரு குடியிருப்பை வழங்க முடியுமா?. ஒரு நாளுமே முடியாது. இருப்பதையே புடுங்குகின்றது இந்த உலகமயாதல். இதை சுட்டிக்காட்டி தலித்துக்காக, பெண்ணியத்துக்காக போராட வேண்டிய ஒருவர், உலகமயமாதலுக்காக பாய்விரித்து தரகு தொழில் செய்ய நினைத்ததே இலக்கியச் சந்திப்பில் அரங்கேறியது. தலித் வாழ்வுடனும், ஆணாதிக்க பெண்ணுடனும் தொடர்பற்ற தொலைபேசியைப் பற்றியும், கம்யூட்டரைப் பற்றியும் முன்னாள் இருப்பவன் முட்டாள் என்பதால், பாலசிங்கத்தின் மாவீரர் உரையைப் போல் புதிர்விட முடிகின்றது.
தலித் அல்லது பெண் கம்யூட்டரை வாங்கி அதை கரைத்தா குடிகின்றது. தொலைபேசியை வாங்கி பார்ப்பனருடன் தலித்துகள் விவாதம் செய்ய பயன்படுத்துவதா? அல்லது இந்திய பெண்களின் சீதனம் போல், அவற்றை வைத்து புலம்புவதா? பயன்பாடு கடந்த எதுவும், பொருள் என்ற அடிப்படையில் அனைத்தும் குப்பைதான். தலித்துக்கு, இந்திய ஆணாதிக்க பெண்ணுக்கு கம்யூட்டரும், கைதொலைபேசியும் குப்பை தான். ஆனால் தரகுத் தொழில் பார்க்கும் உங்களுக்கு அப்படி அல்ல.

இந்தியத் தலித்துக்கும் இந்தியப் பெண்ணுக்கும் அவர்கள் வாழும் நிலையில், இவை அவசியமற்றவை. பயன்பாடற்ற அனைத்தும், உலகெங்கும் இது பொருந்தும். இதைவிட தேவைகள் வேறானவை. நீங்கள் கூறிய மேட்டுக்குடி பெண்ணியல்வாதிகளின் நுனிநாக்கு ஆங்கிலம் போல், கம்யூட்டரும் தொலைபேசியும் அவர்களுக்கு மட்டும் பயன்படக் கூடியவை.
மறுபக்கத்தில மலிவான கம்யூட்டர், மலிவான தொலைபேசிக்கு பின்னால் மனிதனின் உருத்தெரியாது அழித்து செல்லும், மற்றொரு மனித வரலாறு உண்டு. எப்படி மலிவாக முன்பைவிட அதிக லாபத்துடன் சாத்தியமாகின்றது. இதை உற்பத்தி செய்யும் உழைப்பின் கூலிக் குறைப்புத்தான் இதற்கான காரணம். கடந்த காலத்தில் தொழிலாளி வர்க்கம் பெற்றவற்றை இழக்கின்ற போது, சந்தையில் உங்களைப் போன்றவர்கள் நுகரும் பொருட்கள் மலிகின்றது. மலிவான வரைமுறையற்ற பாலியல் நுகர்வை இதுவே கோரத் தொடங்குகின்றது.

இன்றைய பொருட்களின் மலிவின் பின்னால் சீனத் தொழிலாளி வர்க்கம், தனது வாழ்க்கையை இழந்து இதை உற்பத்தி செய்கின்றது. ஐரோப்பிய தொழிலாளர் வர்க்கம் தனது வேலைகளை இழந்து வீதிக்கு வருவதன் மூலம் இது சாத்தியமாகியுள்ளது. நவீன தொழில் நுட்பம் சார்ந்த இலத்திரனியல் சார்ந்த உற்பத்தியில், 70 சதவீகிதத்துக்கு அதிகமான உற்பத்தியை சீனத் தொழிலாளி வர்க்கம் உற்பத்தி செய்கின்றது. ஆனால் சீனத் தொழிலாளர் வர்க்கத்தின் அடிமைத்தனம், இந்தியத் தொழிலாளி வர்க்கத்தை விட மிக மோசமாகி வருகின்றது. இதனால் உங்களுக்கு சந்தையில் அவை மலிவாக கிடைக்கின்றது. பார்ப்பானியம் தலித்தைக் கொண்டு எப்படி சுகபோகமாக வாழ்ந்தனரோ, அப்படித்தான் உங்களைப் போன்ற உலகமயமாதல் அருவடிகளுக்கு இது உதவுகின்றது.

இந்த மலிவான கதையின் பின்னால் நுகர்வுக் கலாச்சாரத்தை திணித்து, பணம் அறிவிடும் உலகமயாதல் கத்துவட்டி முறை கிராமப்புற கத்துவட்டியை விட விடக்கொடூரமாக அரங்கேறுகின்றது. 500 ரூபா தொலைபேசியின் பின்னால் இதற்குள் ஒரு கதை அடங்கியுள்ளது.
அடுத்து உலகமயமாதல் எப்படி தலித்துக்கு சாதகமானது. உலகில் வறிய ஏழை மக்கள் என்ற பிரிவில் இந்தியாவில் உள்ள 25 கோடிக்கு மேற்பட்ட தலித்துகளும் அடங்குவர். ஆபிரிக்க ஏழைகளின் நிலையில் தலித்துகள் உள்ளனர். உலகமயமாதல் என்பது செல்வத்தைப் பகிர்வதில்லை. மாறாக இருப்பதையும் புடுங்குவதுதான். இது மேட்டுக்குடிகளிடம் மட்டுமின்றி, அடிமட்ட ஏழைகளையும் கூட புடுங்குகின்றது. ஏழை என்பவன் நாட்டில் உள்ளவனிடம் தொழில் செய்து பிழைக்கின்றான். அவனை உலகமயமாதல் அழிக்கும் போது, அவனிடம் தொழில் செய்பவன் கஞ்சிக்கே வழியில்லாது போகின்றான். உலகமயமாதல் கம்யூட்டரைத்தான் உற்பத்தி செய்யும். சந்தையில் வாங்கும் திறனுள்ளவனுக்கே உற்பத்தி செய்யும். வாங்க வழியற்ற ஒருவனுக்கு ஒருநாளுமே உற்பத்தி செய்யாது. ஒரு டொலரைக் கூட ஒருநாள் பெற முடியாதவனுக்கு எதையும் உற்பத்தி செய்வதில்லை. இது சந்தை விதி. இது நுகர்வின் விதி. ஒரு டொலரை பெற முடியாத தலித், பெண்கள் மற்றும் குழந்தைகளின் கதியையிட்டு இந்த தரகு வழக்கறிஞர் ரஜனிக்கு எந்த சமூக அக்கறையும் கிடையவே கிடையாது.

உலகமயமாதல் ஏழையிடம் இருப்பதையும் புடுங்கவே செய்கின்றது. உதாரணமாக 1989-1999 க்கும் இடையில், ஒரு நபருக்கு 1.5 முதல் 1.8 சதவீகிதம் என்ற அளவில் உலகில் உற்பத்தி அதிகரித்தது. ஆனால் இந்த பத்து வருடத்தில் 80 க்கு மேற்பட்ட நாடுகளில் இருந்ததை விட குறைந்து வந்துள்ளது. 50 நாடுகளில் ஒவ்வொரு வருடமும் குறைந்து வருகின்றது. இது யாரைத் தாக்கும். ஏழை எளிய மக்களைத் தான். இதில் தலித் விதிவிலக்கல்ல. பெண்கள் விதிவிலக்கல்ல. வறுமையில் ஏழைகள், தலித்துகள், பெண்கள், குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதுவே உண்மை.

ஏழைகள், தலித், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இன்னுமொரு புள்ளிவிபரத்தைப் பார்ப்போம். ஏகாதிபத்தியங்கள் 1960இல் இருந்து 1989 க்கும் இடையிலான காலத்தில் தனது பங்கை 70.2 சதவீகிதத்தில் இருந்து 82.7 சதவீகிதமாக அதிகரிக்கும் வண்ணம் பெரும் சூறையாடலை மூன்றாம் உலக நாடுகள் மீது நடத்தியது. இதே காலப் பகுதியில் 20 சதவீகிதம் தான் மிக வறிய (ஏழைகளைக் கொண்ட) நாடுகள், உலக வருமானத்தை தாம் பெற்ற 2.3 சதவீகிதத்தை இழந்து 1.4 சதவீகிதமாக குறைந்து போனது. மனித அவலமே ஜனநாயகமாகி, சமூகத் தேவையைக் கூட பூர்த்திசெய்ய முடியாத எல்லைக்குள் கையேந்தி பிழைக்கவே உலகமயமாதல் மனித இனத்தை வழிகாட்டியது. இப்படி பல புள்ளிவிபரம் உள்ளது. பொய்யை உண்மையாக காட்டி, உண்மையை பொய்யாக கூறி வாழ்க்கையை ஒட்டும் தொழில்முறை ரஜனி, சமூகம் பற்றி வழிகாட்டுவது முரணிலையில் தான்.

இதில் இருந்து தான் தேசிய எதிர்ப்பு முன்வைக்கப்பட்டது. தேசியம் என்பது பாசிசம் என்று கூறியபடி, புலியையும் ராதாஸ் வகையறாக்களையும் காட்டி பினாற்றியே இவற்றை அரங்கேற்றினார். தேசியம் என்பது ஜனநாயகம் என்பதே அதன் சரியான அரசியல் உள்ளடக்கம். இதை திரித்து தேசியத்தை நிலப்பிரபுத்துவ மற்றும் உலகமயமாதல் எல்லைவரை எடுத்துச் சென்று, வக்காலத்து வாங்குவது நிகழ்ந்தது. தேசியத்தை பாசிசக் கூறு என்பவர்கள், உலகமயமாதலை பாசிசக் கூறு அல்ல என்கின்றனர். உண்மையில் இதனை நிறுவ தமிழ் பண்பாடு என்பது, இந்து பண்பாடு என்கின்றார். பார்ப்பானியம் எதைச் சொல்லுகின்றதோ, அதை இவர்கள் கிளிப்பிள்ளை போல் சொல்ல முனைகின்றனர். பெரியார் எதை வேறுபடுத்த போராடினாரோ, அதை ஒன்றாக்கிவிட முனைகின்றார். அதாவது பெரியாரை மறுவாசிப்பின் பெயரில், தமது உலகமயமாதல் நோக்கில் திரித்து புரட்டவே முனைகின்றனர். இந்து பண்பாடு வேறு, தமிழ் பண்பாடு வேறு. இதை மறுத்து உலகமயமாதல் பண்பாட்டை மாற்றாக வைக்கின்றனர்.

பெரியாரைச் சொல்லியே தமது உலகமயமாதல் ஆணாதிக்க பாலியல் வக்கிரத்தை அரங்கேற்ற முனைகின்றனர். பெரியார் நிலபிரபுத்துவ ஆணாதிக்க வாதங்களுக்கு பதிலடியாகவே, சமூகத்தை அதிர்ச்சிகுள்ளாக்கும் வகையில் இவற்றை எதிர்மறையில் பயன்படுத்தியவை தான் பாலியல் பற்றிய அவரின் வாதங்கள். அதை அவர் சமூக வாழ்வியல் முறையாக கொள்ளும்படி பெண்களுக்கு கூறவில்லை. ஆணின் ஆணாதிக்க சமூக நடத்தை நெறியை மறுதலித்தே, அதை கிண்டல் செய்தே முன்வைத்தவரே ஒழிய அதை ஆதரித்தல்ல. அதே ஆணாதிக்கத்தை பெண்ணை கைக்கொள்ளும்படி கோரவில்லை. ஆணின் ஆணாதிக்க வாதத்தை எதிர்நிலையில் அதிர்ச்சிக்குள்ளாக்கிய வாதங்கள் தான். கடவுள்களின் ஆண் பெண் பாலியல் வக்கிரங்களையும், அவர்களின பலதார மண முறைகளையும், ஆண் பெண் கடவுள் வேறுபாடின்றி அதை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் அதன் வரலாற்றின் வேரில் இருந்து எள்ளிநகையாடியவர்.

இதை திரித்து உலகமயமாதல் பெண்ணிய வக்கிரத்துக்கு திரித்து காட்டுவதில் முனைப்பு பெறுவதே பொதுவாக நிகழ்கின்றது. பெரியார் உலகமயமாதல் ஆணாதிக்கத்துக்கு பெண் சரிந்து செல்லும் சீரழிவை நியாயப்படுத்தும் எந்த கோட்பாட்டை அவர் முன்வைக்கவில்லை. அத்துடன் பெரியார் மார்க்சியவாதியல்ல. சமூக முரண்நிலையுடன் ஒரு ஜனநாயகவாதி என்ற எல்லைக்குள் தான் கருத்துரைத்தவர்.

அடுத்த ஒரு தர்க்கம் முன்வைக்கப்பட்டது. திருமணத்துக்கு முன்னம் பெண்கள் பாலியல் உறவு கொள்வதில்லையா? அப்படி தன்னிடம் உறவு கொண்ட பெண்கள் வழக்காட வருகின்றனர். இது உலகமயமாதல் பெண் சீரழிவை எப்படி நியாயப்படுத்த, எந்த வகையில் தர்க்க ரீதியாக சரியானது. கணிசமான பெண்களை திருமணத்துக்கு முன் பாலியல் ரீதியாக உறவு கொள்ளும் வகையில், அனைத்தையும் பாலியலாக அல்லவா உலகமயமாதல் புகட்டுகின்றது. வீதியில் செல்லும் பெண்ணை புணரக் கோரும் சினிமா முதல் காட்சி வகைப்பட்ட உளவியலும், எழுத்துவகைப்பட்ட துண்டுதல்கள் என எங்கும் எதிலும் இதுவே உள்ளடகமாக உள்ளது. இப்படி உருவாகிவிட்ட, பெண் திருமணத்தின் முன் பாலியல் உறவு கொள்கின்றாள் என்று அடித்து வைத்து வாதிடுவது அபத்தம். முதலில் இந்த சூழல் ஏன் உருவாக்கப்படுகின்றது. இரண்டாவது உறவு கொள்ளும் பெண்கள் யாருடன், எந்த நிலையில் உறவு கொள்கின்றனர். இதன் பின்னனி என்ன? ஏன் பின்னால் நீதிமன்றம் வருகின்றாள். ஏன் கருவை அழிக்கச் செல்லுகின்றனர். ஏன் தற்கொலை செய்கின்றனர்? ஏன் வாழ்வை இழந்து நடைப் பிணம் ஆகின்றனர்? இப்படி பல கேள்விகள் உண்டு.

பாலியல் ரீதியான அத்துமீறிய நடத்தை நெறிகள் பெண் விடுதலையல்ல. அதாவது திருமணத்தின் முன் உறவு கொள்வது, கன்னித் தன்மை தேவையற்றது என்ற வாதங்கள் எவையும் பெண்விடுதலையல்ல. இது நாகரீகமான கமூக்கமான விபச்சாரத்தை உருவாக்குகின்றது. பல பெண்கள் இதை நம்பி தமது சொந்த வாழ்வை ஆணாதிக்கத்திடம் இழக்கின்றனர்.
அடுத்து தரகு பார்க்கும் வாதத்துக்கு ஏற்ப, பாலியலை விரும்பியவாறு யாருடனும் உறவு கொள்வது சரியென்றார். இதற்கு தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் உள்ள பாலியல் உறவுமுறையையே திரித்துக் காட்டினார். அதன் போது இதை மிகக்; கொச்சையாக கேவலமாக திரித்து வருணித்தார்.

தாழ்த்தப்பட்ட பெண்கள் தன்னுடன் வாழும் ஆணின் நடத்தைகள், வாழ்வியல் முறைகள் பிடிக்கவில்லை என்றால் சுதந்திரமாக அதைக் கைவிட்டு வாழும் சுதந்திர முறையை திரித்தார். வேறு ஒருவனுடன் படுக்கும் சுதந்திரம் கொண்ட, உடல் பாலியல் வாழ்வை நடைமுறையில் வாழ்க்கையில் கொண்டிருப்பதாகவே பினாற்றினர். சமூகத்தில் உள்ள ஜனநாயகக் கூறை, கொச்சைத்தனமாக தமது சொந்த உலகமயமாதல் நோக்குக்கு ஏற்ப திரித்து, அந்த சொந்த வக்கிரத்தையே பெண்ணிய புரட்சியாக காட்டினார். இப்படி பற்பல.

உலகமயமாதல் நோக்கில் மார்க்சியத்தையே சேறடிக்க முனைந்தார். மார்க்சியத்தை கொச்சைப்படுத்த, மார்க்சியத்தை கைவிட்ட முதலாளித்துவமாக சிதைந்த சீரழிந்துள்ளவர்களின் நடத்தை மீது தன்னை வக்கிரப்படுத்தினார். மார்க்சியத்துக்கு சேறு அப்பிய படி வாழ்க உலகமயமாதல் என்றார். கொக்கக்கோலாவை தலித் மக்கள் குடிப்பதன் மூலம் தான், சாதி ஒழியும் என்றார். இப்படி பல.

அவர் இதற்கு எல்லாம் ஆதாரமாக கொண்டது, உலகமயமாதலை திருப்பிப் பெறமுடியாது என்ற எடுகோள்தான். இந்த அடிப்படையான அரசியல் வாதமே பார்ப்பனிய அரசியல் தான். சாதியத்தை இந்திய சமூக அமைப்பில் இருந்து திருப்பிப் பெறமுடியாது என்ற பார்ப்பானிய வாதம் எப்படியோ, அப்படித் தான் இந்த உலகமயமாதல் பற்றிய வாதமும். இது போல்தான் ஆணாதிக்கமும் திருப்பிபெற முடியாதவையல்ல. இங்கு திரும்பிச் சொல்லுதல் என்பதல்ல, அதைத்தையும் தலைகீழாக மாற்றி அமைத்தல் என்பதே புரட்சி. ஏகாதிபத்திய உலகமயமாதல் ஆதரவு தரகு பினாமிக்கு இது தெரியவில்லை. மக்கள் ஒரு புரட்சியை செய்தால், புரட்சி செய்த மக்கள் தமக்கு தேவையான பொருளாதார அமைப்பை அமைத்தே தீருவர். இது தான் புரட்சி. இது தான் பெண்ணியம். இதைத் திருப்பி பெறமுடியாது என்ற வரட்டு வாதங்களால், எவையும் தீர்மானிக்கப்படுவதல்ல.

பின்குறிப்பு : இப்படி பற்பல நீண்ட தரகுப் புலம்பல்கள். கட்டுரையின் விரிவு அஞ்சி இத்துடன் இதை நிறுத்திக் கொள்கின்றேன். நீங்கள் இதைபற்றி எழுதி விவாதித்தால், மேலும் விவாதத்ததை நாம் நடத்தமுடியும்.

மற்றும் இதைப் புரிந்த கொள்ள

1.பொருளாதார மறுசீரமைப்பைக் கோரும் ஆணாதிக்கமும் தலித் ஆணாதிக்கத்தை எதிர்க்காத பெண்ணியமும்

2.பெண்ணின் போராடும் உரிமை பெண்ணின் உயிரைக் காட்டிலும் அடிப்படையானது.

3.பெண்ணின் கட்டற்ற சுதந்திரமும், காதல் சுதந்திரமும் ஒரு விபச்சாரமே!

4.பெண் கோருவது வரைமுறையற்ற புணர்ச்சியை அல்ல! பெண் கோருவது வாழும் உரிமை மீதான சுயநிர்ணயத்தையே!

5.பெண்ணின் கற்புரிமையை பாதுகாக்கும் போராட்டத்தில், உருவகமான ஆணாதிக்க ~~கற்பு என்ற அடித்தளத்தை தகர்ப்பது எப்படி?

6.பொழுது போக்கு ஊடகம் வழியில் ஆணாதிக்கம்

7.பெண்ணின் கற்புரிமையை ஏமாற்றி நுகர்வது

8.பாலியல் தெரிவுகளும் வாழ்க்கையும்

9.இயல்பான புணர்ச்சித் தெரிவுகள்

10.இலக்கியமும் பாலியலும்

1000 பக்கங்கள் கொண்ட 70 தலைப்பிலான பெண் சார்ந்த பல கட்டுரைகள் நூல் பகுதியில் உள்ளது. இதைவிட உலகமயமாதல் பற்றிய கட்டுரைகளும் உள்ளன.

1 comment:

Anonymous said...

Rayakatan,enthaamaliyil elankaiyai maranthu vidatheerkal.enrum alukiya pennin pinathai kandu piddithularkal.netumpenpulijinuelumppukkoodai kandullarkal.