தமிழ் அரங்கம்

Sunday, November 18, 2007

தேசம் நெற்றும் எனது மொழியும்

பி.இரயாகரன்
18.11.2007

தேசம்செற் ஆசிரியர் இது 'பரந்துபட்ட தமிழ்மக்கள் நாகரீகம் எனக் கருதும் மொழிநடை" இல்லை என்கின்றார். நாலாம்தர அரசியல் பொறுக்கி ஒன்று கூறுகிறது, இது சாதி ஆணாதிக்க பாலியல் மொழி என்கின்றது. உயிர்நிழல் அக்கா வசந்தன் பெயரில் வந்து 'ரயாகரன் உமது பிரச்சினைக்குப் போய் ஒரு நல்ல சைக்கியாட்றிஸ்டைப் பாரும்." என்கின்றது. ஆலோசனைக்கு நன்றி. நாவலன் மற்றொரு தளத்தில் மொழிபற்றி விவாதிக்க முற்படுகின்றார்.

நாலாம்தரமான இணைய அவதூறு அரங்கில், நாவலன் தொட்ட விடையத்தை விவாதிக்க வேண்டியது தற்போதைக்கு அவசியமில்லை. நாலாம் தரமானவனை, நாலாம்தரமான எல்லையில் வைத்து, அம்பலப்படுத்திக் காட்ட வேண்டியுள்ளது.

நாங்கள் ஒரு அரசியல் மொழியைக் கையாளுகின்றோம். அதை நீங்கள் கூறுவது போல் சைக்கோவாக இருக்கலாம், ஆணாதிக்க சாதி மொழியாக இருக்கலாம், பரந்துபட்ட தமிழ் மக்களின் மொழி அல்லாததாகவும் இருக்கலாம். நீங்கள் சொல்வதில் உள்ள உள் முரண்பாட்டைக் கடந்து, அதுதான் என்று எடுப்போம்.

சரி இதைச் சொல்லும் நீங்கள் யார்? என்ன நோக்கத்தோடு இதை சொல்லுகின்றீர்கள்? நீங்கள் எதைப் பாதுகாக்க இதைச் சொல்லுகின்றீர்கள்? இவை இன்றி, இவை அனைத்தும் அவதூறுகள் தான். அரசியல் உள்நோக்கம் கொண்டவை தான். நீங்கள் யாராகவும் எவராகவும் இருக்கலாம். நாங்கள் சொல்லி வருவதே சரியானது என்பது உறுதியாகிவிடுகின்றது.

எம்மை இப்படி குற்றம் சாட்டும் நீங்கள், உங்களை அரசியல் ரீதியாக வெளிப்படுத்தாது சொல்வதில் என்ன அர்த்தம் உண்டு? என்ன அறிவு நேர்மை உண்டு? உங்களுக்கே அது தவறாகப் படவில்லையா? நீங்கள் கூறியது சரி என்றால், உங்களை நாங்கள் எங்கே எந்த கருத்தின் ஊடாக பார்ப்பது? எந்த வழியில் நீங்கள், இதில் நேர்மையாக உள்ளீர்கள் என்று நாம் எப்படித் தேடுவது?

தேசம்நெற் தமிழ் மக்களுக்கு கருத்தை எடுத்துச் செல்லுகின்றது என்றால், அந்த நபர்களின் சரியான பக்கத்தையுமல்லவா எடுத்துச் செல்லவேண்டும் எங்கே அவை? இதை விடுத்து மோசமான அவதூறாக வடிப்பதை, தேசம்நெற் எடுத்துச் செல்வது அதன் அரசியல் அறநெறி தொடர்பான விடையம். அதையே நாம் விபச்சாரம் என்கின்றோம்.

மொழியில் அல்லது நடைமுறையில் நாங்கள தவறானவர்கள் என்றால், அதை சொல்லும் அவர்கள் எங்கே ஒளிந்துள்ளனர். எதன் பின் உள்ளனர். அதை அரசியல் ரீதியாக சொல்லாமல், இனம் காட்டாது தேசம் நெற் செய்வது அரசியல் விபச்சாரம் தான். அவதூறு பொழிபவன் தன்னை அரசியல் ரீதியாக நிச்சயமாக காட்டியேயாகவேண்டும். இல்லாதவரை அவை அவதூறு தான். தம்மை இனம் காட்டல் என்பது இதுதான். தனிநபர் அவதூறை குற்றச்சாட்டை வைக்கும் போது, வெளிப்படையாக நபர் தன்னை அடையாளம் காட்டி வைக்கவேண்டும். எப்படி அரசியலுக்கு வெளியில் தனி நபர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டை வைப்பது தவறோ, அப்படித்தான் தன்னை வெளிப்படுத்தாது அவதூறை எழுதுவது அதை இணையத்தில் அனுமதிப்பது வரை அவதூறு தான். தேசம் நெற்றின் யோக்கியதை இப்படி மூக்கு முட்ட நாறுகின்றது.

உயிர்நிலை அக்கா புனைபெயரில் சொல்கின்ற முகம் தெரிந்தால், தனிநபரைத் தாக்குவோமாம். வசந்தன் அக்காவுக்கு விளங்கவில்லை போலும். இது தான் பலரின் நிலையும் கூட. இதில் இரண்டு விடையம் உண்டு.

1. உங்கள் அரசியலை வைக்காது ஏன் தலைமறைவாக திரிகின்றீர்கள். ஏன் அவதூறுக்குள் குந்தியிருந்து பேலுகின்றீர்கள். இது உங்களுக்கு வெட்கமாக இல்லை. அது இருந்தால் தானே.

2. பொதுத்தளத்தில் தம்மை அடையாளப்படுத்தி வருவது. இல்லாது எப்படி பொது வேலை செய்வது. அவதூறு தான் செய்யதான் முடியும். அரசியல் செய்ய முடியாது.

இந்த இடத்தில் இனம் தெரியாத கொலையாளிகள் தான், தமிழ் மக்களை நாள்தோறும் கொல்லுகின்றனர். உங்களுக்கும் அவர்களுக்கு நடத்தையில் அரசியலில் என்ன வேறுபாடு? இதற்கு உதவும் தேசம் நெற் நேர்மை என்னவென்பது!

வசந்தன் அக்கா கூறுவது போல், தனிநபரை தாக்குகின்றோம் என்று எடுப்போம். தனிநபரை எனின், எதை எப்படி எங்கே தாக்கினோம். அதைச் சொல்லுங்கள். ஏன் அதைச் சொல்ல முடிவதில்லை. தலித் மாநாட்டை பொது அரசியல் தளத்தில் தானே விமர்சித்தோம். புலியெதிர்ப்பை பொது தளத்தில் தானே விமர்கின்றோம். புலிகளை பொது தளத்தில் தானே விமர்சிக்கின்றோம். நாங்கள் நீங்கள் செய்வது போல், பிரபாகரன், தமிழ்ச்செல்வன் என்று அரசியலுக்கு வெளியில் விமர்சிப்பது கிடையாது. அது உங்கள் வழி.

எமது விமர்சனத்தில் தனிநபர் பாத்திரம் ஏன், எப்படி வருகின்றது. தனிமனிதன் ஒரு அரசியல் ஊடாக தன்னை முன்னிலைப்படுத்தாத நேர்மையற்ற ஒரு தளத்தில் எப்படி விவாதிப்பது. எதை, எந்த அரசியலை விவாதிப்பது. உதாரணமாக ஜெயபாலன், சேனன், அசோக், சிவலிங்கம் .. எப்படி விமர்சிப்பது. தங்கள் அரசியல் என்னவென்று வைக்கின்றார்களா? சொல்லுங்கள் எப்படி அவர்களை விவாதிப்பது. பெயரைக் குறிப்பிட வேண்டிவருகின்றது. அவர்கள் மூடிமறைத்த அரசியல் போக்கை அம்பலப்படுத்த வேண்டியுள்ளது. இதைவிட வேறு எந்த வழியும் கிடையாது. அவர்களின் அரசியல் என்பது பொதுவாகவே சந்தர்ப்பவாதத்தை அடிப்படையாக கொண்ட சுத்துமாத்து.

நாங்கள் ஈ.பி.ஆர்.எல்.எவ், புளட்டை விமர்சிகும் போது அமைப்பை விமர்சிக்கின்றோம். ஈ.என்.டி.எல்.எவ், ஈ.பி.டி.பியை விமர்சிக்கும் போது, அதன் தலைவர்கள் ஊடாகவும் விமர்சிக்கின்றோம். முதல் இரண்டும் தலைவர்களை முன்னிலைப்படுத்தல் இன்றி இயங்குகின்றது. இரண்டாவது தலைவர்கள் இன்றி இயங்காது. அது எப்படி வெளிப்படுகின்றதோ, அதையொட்டி விமர்சிக்கின்றோம்.

தனிமனிதர்கள் தமது அரசியலை மூடிமறைத்துக் கொண்டு, தம்மை முனைப்பாக்கி இயங்கும் போது, நபர்களை எமது விமர்சனத்தில் கொண்டு வருகின்றோம். உதாரணமாக புலியெதிர்ப்பு சிவலிங்கத்தை பெயர் குறிப்பிட்டும், ராம்ராஜ் பெயர் மூலமும் வானொலி மூலமும், தேனியை இணையம் மூலமும் விமர்சிக்கின்றோம். இங்கு தேனீ ஜெமினியை விமர்சிக்கவில்லை. இங்கு இணையம் முனைப்பாக உள்ளதே ஒழிய, நபர் அல்ல. நாம் இதை திட்டமிட்டு செய்வதில்லை. இயல்புணர்ச்சியில் கருத்தின் ஊடாக அடையாளம் கண்டு விமர்சிகின்nறோம்.

இப்படி சமூக இயக்கத்தை வெளிப்படுத்தும் வடிவம் ஊடாக நாம் அணுகுகின்றோம். இங்கு தனிநபர் அல்லது அமைப்புகள் எதுவாக இருந்தாலும், அது எந்த வடிவில் வருகின்றதோ அந்த வடிவில் அணுகுகின்றோம். நாங்கள் அரசியலுக்கு வெளியில் தனிநபரை தாக்கியது கிடையாது. தனிநபரின் பின்னுள்ள அரசியலையை விவாதிக்கின்றோம், அம்பலப்படுத்துகின்றோம்.

உதாரணத்துக்கு நாவலன் தொட்ட விடையத்தையே எடுப்போம் 'உதாரணமாக சிவலிங்கம் அவர்களை ரயாகரன் பொறுக்கி என்று விமர்சித்திருந்தார். சரி, சிவலிங்கம் ரயாகரனின் விமர்சனத்தை ஏற்றுக் கொண்டாலும் தான் பொறுக்கி என்று ஏற்றுக்கொள்ள மாட்டடார். அவர் பொறுக்கியுமல்ல." இது நாவலனின் அரசியல்.

நாங்கள் சிவலிங்கத்தை பொறுக்கியாகப் பார்க்கின்றோம். அவர் விமர்சனத்தை ஏற்றுக்கொண்டால், பொறுக்கித் தனத்தைக் கைவிட்டவராவர். அது ஒரு பக்கம் இருக்கட்டும். நாம் சிவலிங்கத்தை நாவலன் பார்ப்பது போல் தனிநபர் ஊடாக பார்க்கவில்லை. அவரின் பின்னுள்ள அரசியல் ஊடாக பார்க்கின்றோம்.

தனிப்பட்ட சிவலிங்கம் யாராகவும் இருந்துவிட்டுப் போகட்டும். அவர்களை நாம் பொறுக்கி என்று விமர்சிக்கவில்லை. ஆனால் அரசியல் சிவலிங்கம் நல்ல மனிதனாக இருக்கலாம். பழக இனிமையானவராக இருக்கலாம். நல்ல பண்புள்ளவராக இருக்கலாம். மற்றவரை மதிப்பவராக இருக்கலாம். அவரின் நல்ல பண்பாடுகள் எதையும் நாங்கள் மறுக்கவோ, இழிவுபடுத்தவோ வரவில்லை.

எதை நாம் பொறுக்கித்தனம் என்கின்றோம். அவரின் அரசியலைத் தான். இந்த அடிப்படையில் தான் அனைவரையும் அணுகுகின்றோம். சோபாசக்தி எனக்கு உயிர்நிழலில் கல்வெட்டை வெளியிட்டவர். இன்று அவரை அரசியல் ரீதியாக பார்த்து, பல்வேறு முரண்பாடுகள் இருந்த போதும் கூட தோழமையாக அணுகுகின்றோம். வணக்கத்துக்கு அப்பால், நாம் பேசிக்கொள்வதே கிடையாது. நாம் அணுகுவது அரசியல் ஊடாக மட்டும் தான்.

சைக்கோக்கள் என, நீங்கள் உங்கள் அரசியல் வங்குரோத்தை மூடிமறைக்க கூறலாம், ஆனால் எமது அரசியல் அணுகுமுறையில், தனிநபருக்கு என்று பாத்திரம் கிடையாது. அனைத்தையும் அரசியல் ஊடாக பார்க்கின்றோம்

எமக்கு மனநோய் என்று தேசம்நெற்றில் எழுதுவது, தேசம்நெற்றுக்கு விருப்பமான மொழியாகின்றது. என்ன நுட்பம். 1985 இல் பல்கலைக்கழக ராக்கிங்கை தனித்து நின்று எதிர்த்தபோது, எனக்கு மனநோய் என்று நோட்டீஸ் அடித்த பல்கலைக்கழக மாணவர்கள், அதை ஈழநாட்டு பத்திரிகையில் பிரசுரிக்க வைத்தனர். இன்று தேசம்நெற் பிரசுரிக்கின்றது. இப்படி பிரசுரிக்கும் தேசம்நெற், மன நோயாளர்களைப் பற்றி கீழ்த்தரமாக எழுதி தாக்க அனுமதிப்பது மனித நாகரீகமோ. 'ரயாகரன் உமது பிரச்சினைக்குப் போய் ஒரு நல்ல சைக்கியாட்றிஸ்டைப் பாரும்." என்று கூறுவதில் என்ன அர்த்தம் உண்டு? உங்கள் அரசியலைப் போலவே இருக்கின்றது.

சிவலிங்கத்தின் அரசியல், புலியெதிர்ப்புக்கே உரிய பொறுக்கி அரசியல் தான். நல்ல மனிதனாக இருந்துவிட்டு போகட்டும். அரசியலில் அதை செய்யாத வரை, அது பொறுக்கி அரசியல்தான். இதை விளங்கிக் கொள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபாவை எடுங்கள். 1979-80 களில் பேராதனிய பல்கலைக்கழகத்தில் நான் சந்தித்த போதும், பின்னால் அவர் சுட்டுக்கொல்லப்பட்ட வீட்டில் அடிக்கடி அமைப்பு சார்பாக சந்தித்தபோதும் சரி, நல்ல மனிதன். மற்றவனுக்கு முன்வந்து உதவுவதில், மற்றவர் பிரச்சனையைப் புரிந்து கொள்வதில், இயக்க தலைவர்களுக்குள் தலைசிறந்தவர் தான். என்ன இருந்தும் அரசியல் ரீதியாக, படுமோசமான கைக்கூலி. இதை விரிவாக்கி சொல்வது தவறா? ஏன் டக்கிளஸ் கூட 1984-1985 சந்தித்த போதும், மற்றவர் அனுபவத்தில் கூட பழகுவதற்கு ஏற்றவர்தான். அரசியல் ரீதியாக நாம் எப்படிப் பார்ப்பது. இவர்களது அரசியல் பண்பாடற்றது, மனித நாகரீகமற்றது. கூலித்தன்மை கொண்டது. மக்களை ஒடுக்குவது. இதுதான் சிவலிங்கத்தின் அரசியல்.

நீங்கள் அரசியல் ரீதியாக இவர்களை தோழர் என்று கூறுவதற்கு உள்ள உரிமையை போல், நாங்கள் அரசியல் பொறுக்கி என்று கூறுவது எப்படித் தவறு.

கிட்லர் கூட பழக இனிமையானவர், அன்பானவராக கூறுகின்றனர். அவரின் நாயைக் கூட காட்டுகின்றனர். நாங்கள் எப்படி அழைப்பது. எம் முன்னுள்ளது அரசியல். நபருக்கு வெளியில் அவர் வைக்கும் அரசியல் தான் எமது அளவுகோல்.

இங்கு சிவலிங்கம் பொறுக்கி அரசியலை செய்யவில்லை என்று யாராலும் நிறுவ முடியாது. அதை நாங்கள் அரசியல் ரீதியாக விவாதிக்கத் தயார். இப்படித் தான் நாம் அணுகுகின்றோம் யாரையும் அரசியல் ரீதியாக தவறாக இனம் காட்டியிருந்தால் அதை வைத்து விவாதியுங்கள்.

இதைச் செய்யாதவரை, மொழி பற்றி, சைக்கோ பற்றி நீங்கள் கூறுவது அவதூறகின்றது. நாம் சொல்வது சரியாகின்றது.

அடுத்து நாம் பாவிக்கும் சொற்கள், அரசியல் நடைமுறையில் கிடையாதா? அதை அரசியல் நடைமுறையில் பயன்படுத்த முடியாதா? சொல்லுங்கள். முடிந்தால் விவாதியுங்கள். உங்கள் நாகரீக பண்பாட்டுக்கு, ஒளித்து நின்று கல்லெறிவது தேவைதானோ.

இராமன் ஒளித்து நின்று வாலியைக் கொன்றது போல், அம்பைவிட்டு கொல்லவா கனவு காண்கின்றீர்கள். இராமன் பார்ப்பனிய ஆட்சியை நிறுவியது போல், நீங்கள் எந்த அரசியலுக்காக அம்புவிடுகின்றீர்கள்.

நாவலன் கூற வரும், மேற்கில் பயன்படுத்தும் இயல்பான பாலியல் சொற்கள் போல் இது தூசண சொற்களல்ல. தமிழில் தூசணம் என்பது இரகசிய மொழி, அது சிலரால் சில நோக்கில் பயன்படுத்தப்படுவது.

நாம் பாவிக்கும் சொற்கள் வாழ்வில் வழக்கில் உள்ளவை. வாழ்வில் அனைவரும் இயல்பாக பயன்படுத்தும் சொற்கள். மக்கள் தமது எதிரிகளை, எதிரியை அடையாளப்படுத்த பயன்படுத்தும் வழக்குச் சொற்கள். தமிழ் அகராதிகளில் கூட விளக்கம் உண்டு. தமிழ் அகராதிக்கு வெளியில் நாம் பேசமுற்படவில்லை. நாம் பயன்படுத்தும் இடம், சூழல் மிக முக்கியமானது. மக்களின் அரசியல் எதிரிகளை இதன் மூலம் நாம் சுட்டி நிற்கின்றோம்.

மக்கள் அப்படி அடையாளம் கண்டு வழங்கும் சொற்களை, அரசியல் நடைமுறையில் பொருத்திக் காட்டுகின்றோம். நீங்கள் பழகும் வட்டம் இதற்குள் இருப்பதால், உங்களுக்கு சங்கடமாக இருக்கலாம். பொது சமூகத் தளத்தில் அல்ல.

புலியை எதிர்த்தால் முற்போக்கு, இடதுசாரி என்று நாங்கள் கருதுவதில்லை. கடைந்தெடுத்த வலதுசாரியமும், பாசிசமும் இங்கும் உண்டு. அவர்களை நாம் தோலுரிக்கின்றோம். வேறு யார் தான் செய்வது.

ஆணாதிக்க சொல், சாதியச் சொல் என்று, அடிப்படை எதுவுமின்றி குசுவிக்காட்டும் நீங்கள், மொழியே ஆணாதிக்க சாதி சுரண்டல் மொழி தான் என்பதை காண மறுக்கின்றீர்கள். மொழியைப் பிரித்து அதை காண முடியாது. அதைப் பயன்படுத்தும் நோக்கில், வெளிப்படுத்தும் வடிவில்தான் அதை காண வேண்டும். இதற்கு மேல் இதை நாலாம்தரமான எல்லைக்குள் விவாதிக்க வேண்டிய அவசியம் கிடையாது.

No comments: