தமிழ் அரங்கம்

Saturday, December 8, 2007

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...1 -2

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...1 -2

உண்மை – குஜராத் 2002 எவர்கள் இதனைச் செய்தார்களோ அவர்களின் வார்த்தைகளிலிருந்து....

- ஆசிஸ் கேத்தன்.


கூட்டுச் சதியாளர்கள் மற்றும் கலவரக்காரர்கள்

அஹமதாபாத், வதோதரா மற்றும் சபர்கந்தாவில் இனஅழிப்புச் செய்திடத் திட்டமிட்டோர் இன்னும் செயல்படுத்தியவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள். முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் விஹெச்பி-பஜரங்தள்காரர்களால் கலவரங்கள் மிகத் துல்லியமாகத் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது.

மேலோட்டம்:

சபர்மதி விரைவுத் தொடர் வண்டியின் S-6 பகுதி தீக்கிரையாக்கப்பட்டத் தினம் கோத்ராவிற்கு நரேந்திர மோடி வருகைத் தந்தார். முஸ்லிம்களை நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்ற முதல் சைகையை, சங்க்பரிவாரங்களுக்கு அவருடைய குமுறல் சுட்டிக்காட்டியது.

அன்றிரவே, பிஜேபி மற்றும் சங்க்பரிவார மேல்மட்டத் தலைவர்கள் அஹமதாபாத், வதோதரா மற்றும் கோத்ராவில் சந்தித்து, மாநிலம் முழுவதும் முஸ்லிம்கள் மீதுத் தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விடப் பச்சைக் கொடி காட்டினார்கள்.

தாக்குதல் நடத்துபவர்களைக் கலவரத்திற்குப் பின் சட்டத்திலிருந்து எப்படிப் பாதுகாப்பது என்கிற தந்திர சூழ்ச்சிகள் திட்டமிடப்பட்டது. இது பற்றியத் தகவல்கள் பிரபல்யமான வக்கீல்களுக்கு முன்னறிவிப்பு செய்யப்பட்டு, உயர் போலீஸ் அதிகாரிகளின் உத்திரவாதமும் பெறப்பட்டது. மோடி நேரடியாக பக்கபலமாக இருப்பதாக தொண்டர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

குஜராத் மேல்ஜாதி மக்களிடம் ஆழமாக ஊடுருவியுள்ள ஹிந்துத்வாக் கொள்கையில் தாழ்த்தப்பட்ட இனமக்களையும் முழுமையாக இணைத்துக் கொண்டுச் செல்ல, சங்க்பரிவாரம் சில ஆண்டுகளாகவே செயல்பட்டு வருகிறது. அவர்களிடையே இவ்விணைப்பைப் பற்ற வைக்கும் மிக அவசியமான நெருப்புப் பொறியை கோத்ரா சம்பவம் அளித்தது.

ஆரம்பத்திலிருந்தே, காவல் துறையினரும் காவி கட்சியினர் போல வன்முறைக் கும்பலுடன் மிக அதிகமான சந்தர்பங்களில் ஒன்றிணைந்தே செயல்பட்டனர். எந்த அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்ய முயன்றனரோ அவர்களதுக் கைகள் கட்டப்பட்டன. அஹமதாபாத் மாநகர முன்னால் காவல் ஆணையர் பி.சி. பாண்டே என்பவர் வன்முறை கும்பலுடன் காவல்துறையினர் கைகோர்த்துச் செயல்படுவதை முன்னின்று நடத்தியதோடு, இளம் அதிகாரிகள் தனது செயல்பாடுகளுக்கு முழுமையாக இணங்கிக் கட்டுண்டு நடப்பதையும் உறுதிப்படுத்தினார்.

சங்க்பாரிவாரங்கள் தாங்களே, குண்டுகள் முதல் துப்பாக்கிகள், சூலாயுதங்கள் வரை அனைத்து ஆயுதங்களையும் தயாரித்து வினி்யோகம் செய்தோ அல்லது சங்பரிவார் தொடர்புகள் மூலமாக இந்தியாவின்

பல்வேறு பகுதிகளிலிருந்தும் கடத்தியோ கொண்டுவந்தார்கள். ஏராளமான துப்பாக்கிகள் மற்றும் குறுவாள்களை, பஜ்ரங்தள் மற்றும் விஹெச்பியினர் ஏற்கனவே பதுக்கி வைத்திருந்தனர்.

அஹமதாபாத்தின் சந்துகளிலும், சபர்கந்தாவின் கிராமங்களிலும், வதோதராவின் சுற்றுவட்டாரங்களிலும் இரத்த வெறிப்பிடித்த வன்முறை கும்பல்களை பிஜேபி மற்றும் சங்க்பரிவார் தலைவர்களே வழிநடத்திச் சென்றனர். ஆங்காங்கே நடைபெற்ற வன்முறைகளுக்கு காலல்துறையே பாதுகாப்பாக நின்றது.

பிஜேபி சட்டமன்ற உறுப்பினர் மாயாபென் கொட்னானி, அஹமதாபாத்திலுள்ள நரோடா சுற்றுவட்டாரங்களில் நாள் முழுவதும் வண்டியில் சுற்றிக் கொண்டே வன்முறை கும்பல்களை இயக்கிக் கொண்டிருந்தார். இதே செயலையே குல்பர்க் பகுதியில், விஹெச்பி தலைவர்களான அதுல் வைத் மற்றும் பாரத் தெலி செய்துக் கொண்டிருந்தனர். இவர்களில் எவருமே சிறைச்சாலையில் ஒரு போதும் அடைக்கபடவில்லை.

'தீ'யே கலவரக்காரர்களின் கைகளில் மிக விருப்பமான ஆயுதமாக இருந்தது. இறந்தவர்களைத் தீயில் தகனம் செய்வது இஸ்லாத்தில் இல்லை என்பதே, எரிக்க வேண்டும் என்ற இவர்களுடைய வெறிக்கு உந்துதலாக இருந்தது. பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணைத் தாராளமாகப் பயன்படுத்தபட்டதோடு, பாதிக்கபட்டவர்களிடம் இருந்த வாயு உருளைகளும் கூட எரிப்பதற்குப் பயன்படுத்தபட்டன.

நரோடா பாட்டியாவிலுள்ள ஹிந்துக்களிடமிருந்து 23 கைத்துப்பாக்கிகளைப் பெற்றதாக பாபு பஜ்ரங்கி தெரிவித்தான். இவன் உயிர் இழப்பு குறித்த எண்ணிக்கைகளை, விஹெச்பியின் பொதுச் செயலாளர் ஜெய்தீப் படேலை 11 முறை அழைத்துச் சொன்னதோடு, முன்னாள் உள்துறை இணை அமைச்சர் கோர்தன் ஜதாபியாவிற்கும் தகவல் சொன்னான்.

நானாவதி கமிஷன் முன்பு அரசின் சட்ட ஆலோசகராகச் சென்ற அரவிந்த் பாண்ட்யாவே மோடியை பூஜிப்பவராக இருப்பதோடு, நீதிபதி ஷாவை 'தங்களுடைய ஆள்' என்பதாகவும் கூறினார். 1984ல் சீக்கிய எதிர்ப்புக் கலவரம் குறித்த நானாவதியுடைய சுய கூற்றே இன்றுவரை தூசிபடிந்துப் போயுள்ளது.

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...2


ஆரவாரமில்லாத இருட்டடிப்பு:

தந்திரமாகச் சூழ்ச்சிகள் செய்வதுடன் திட்டமிட்டு கையாளக் கூடியத் தலைவர்கள், அதிகாரிகள், ஆலோசகர்கள் இருந்தனர். கற்பழித்து, கொலை செய்து, கொள்ளையடித்து எனக் கட்டளைகளை முறையாகச் செய்து முடிக்கக் கூடியவர்களும் இருந்தனர். இந்த இனப்படுகொலை ஒரு சோதனை முயற்சியே.

கோத்ரா சம்பவத்திற்குப் பின் குஜராத்தில் நடந்த வன்முறைகள் இயல்பாகவே உருவானவைகள் அல்ல. மாறாகத் தூண்டுதல்களால் நடத்தப்பட்ட வன்முறைகளே. இவ்வன்முறைகள் சதி செய்யப்படாமலோ, திட்டமிடப்படாமலோ, குறிவைக்கப்படாமலோ நடந்த ஒரு வகுப்புக் கலவரமல்ல. இது திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட படுகொலைகள். இது ஒரு இன அழிப்பாகும்.

குஜராத்திலுள்ள நகர்புறங்கள் மற்றும் கிராமங்களில் முஸ்லிம்கள் வசிக்கும் சுற்றுப்புறங்கள் தெளிவாக இனம் காணப்பட்டுத் தந்திரமாக மிகச் சாதுரியமாகத் திட்டமிடப்பட்டுத் தாக்கப்பட்டது. முஸ்லிம்கள் எங்கிருந்தாலும் சரி, எவ்வழியானாலும் சரி, அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்னும் ஒரே குறிகோளோடு, ஹிந்துக்களிலுள்ளப் பல்வேறு பிரிவினரும் ஒன்றிணைந்தனர். தெஹல்காவின் உண்மை கண்டறியும் நிகழ்வின் போது, குற்றம் சாட்டப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லிம்களைக் கொல்லும் முறையில், உயிரோடு எரிப்பதையே அதிக விருப்பமுடையதாகத் தெரிவித்தனர். ஏனெனில் இறந்தவர்களை எரிப்பது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதல்ல.

பிப்ரவரி -27, கோத்ராவில் சபர்மதி விரைவு இரயில் தீக்கிரையாக்கப்பட்டு மூன்று நாட்களுக்குப் பின், குஜராத்தின் பிஜேபி அரசாங்கம் மக்கள் பார்வையிலிருந்து முழுமையாக மறைந்து கொள்ள, ஹிந்து அமைப்புகளிலுள்ள ஆயுத கூலிப்பட்டாளங்கள் அரசு நிர்வாகத்தைக் கையில் எடுத்துக் கொள்ள வழிவிடப்பட்டது. மூன்று நாட்கள் எவ்வித சட்டஒழுங்கும் இல்லாத அராஜகமான சூழ்நிலை முழுமையாக நீடித்தது. ஹிந்து அமைப்புகளான VHP,RSS, பஜ்ரங்தள், கிஷான் சங், ABVP, BJP ஆகியவற்றிலிருந்து கொள்கை வெறியுடையத் தொண்டர்களைக் கொண்டக் கொலைப் பட்டாளங்கள் அமைக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் மசூதிகளும், தர்காக்களும் தகர்க்கப்பட்டு நிர்மூலமாக்கப்பட்டது. அஹமதாபாத்தில் மட்டும் முஸ்லிம்களின் மார்க்கத்தலங்கள் 73ம், சபர்கந்தாவில் 55ம், வதோதராவில் 22 இடங்களும் தீக்கிரையாக்கப்பட்டது.

குஜராத்திற்கு மிகப்பெரும் அவமானத்தை உருவாக்கியவர்கள் இரு வகையானவர்கள். அவர்களில் மிகச் சாதுரியமாக, எவ்வித தடுமாற்றமுமில்லாமல் தந்திரமாக திட்டமிடக்கூடியவர்களும், இரகசியமாக சதி செய்யக் கூடியவர்களும் இக்கொடூர மனிதவர்க்க படுகொலைச் சம்பவங்களின் போது பின்னாலிருந்து சதி திட்டங்களைத் தீட்டினார்கள். இன்னும் ஹிந்துத்வா என்று சொல்லப்படும் காவிப் பட்டாளக் கும்பல்கள், மிக மோசமான வெறி நோக்கத்தோடு கொள்ளையடித்தல், கற்பழித்தல், கொலை செய்தல் என எல்லாவிதமான அரக்கத்தனத்தையும் நடத்தினர். அச்சம்பவத்தில், வன்முறையாளர்களுக்கு உற்சாகமும் துணிவும் உண்டாக்கும் வகையில் திட்டம் தீட்டியத் தலைவர்களும் களத்தில் இறங்கிப் படுகொலைகளில் பங்கெடுத்தனர்.

அஹ்மதாபாத்: மனிதவர்க்கத்தின் படுகொலை தலைநகரம்!

நரோடா, குல்பர்க், கலுபூர், தரியாபூர் ஆகிய இடங்களில், கொலைகார வன்முறை கும்பல் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு வெறியுடன், சங்க்பரிவாருடைய ஒவ்வொரு கட்டளையையும் நிறைவேற்றியது.

குஜராத் இனப்படுகொலையில், மிகப் பயங்கரமாக திகிலடையச் செய்யும் படுகொலைகள், அஹமதாபாத்திலுள்ள நரோடா கவ்ன் மற்றும் நரோடா பாட்டியா ஆகிய இடங்களில் நடைபெற்றவைகளாகும். பஜரங்தள் உள்ளுர் தலைவனான பாபு பஜ்ரங்கி என்பவனே இக்கோர வன்முறைகளின் முக்கிய சதிகாரர்களில் ஒருவனாவான். கோத்ராவில் சபர்மதி தீஎரிப்புச் சம்பவம் வெளியான உடனேயே, படுகொலைகள் செய்வதற்குரியத் திட்டங்களை உடனடியாக இவன் தீட்டினான். பிப்ரவரி -27 மாலையிலிருந்தே, துப்பாக்கிகளும், எரி பொருள்களும் சேகரிக்கப்பட்டதோடு, விஹெச்பி மற்றும் பஜ்ரங்தளில் இருந்து தேர்ந்தெடுக்கபட்டவர்களைக் கொண்டு பஜ்ரங்கி ஒரு கலவரக் குழுவை உருவாக்கினான். குற்றச் செயல்களில் பிரிசித்தி பெற்ற

இனமாகிய சாரா சமுதாயத்திலுள்ள மக்களும் இவ்வன்முறை குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டார்கள். அவர்களில் சுரேஷ் ரிச்சர்ட், பிரகாஷ் ரதோட் என்ற இருவருடன் தெஹல்கா பேசியபோது, "முஸ்லிம்களைக் கொல்வதின் மூலம் ஹிந்து மதத்திற்கு தாங்கள் பெரும் சேவையாற்றுவதாக நம்புகிறோம்" என இவ்விருவரும் கூறினார்கள். இவ்வாறு நம்ப வைக்கப்பட்டார்கள்.

பிப்ரவரி 28, 2002 அன்று பஜ்ரங்கி, கொலைகள் செய்யக் கூடிய வன்முறை கும்பலை நரோடா பாட்டியா மற்றும் நரோடா கூவுனிலுள்ள ஒடுக்கமான சந்துக்களில் முன்னோடியாக வழி நடத்திச் சென்றான். அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், டாக்டருமான மாயாபென் கோடனி என்பவன், எதைப்பற்றியும் பொருட்படுத்தாத வகையில் வன்முறையாளர்களைத் தூண்டிக் கொண்டிருந்தான். கோடானி நரோடா முழுவதும் நாளெல்லாம் சுற்றி வலம் வந்தவனாக, வன்முறையாளர்களிடம் முஸ்லிம்களைத் தேடிப் பிடித்து வேட்டையாடி அவர்களைக் கொல்லவும் ஊக்கமூட்டிக் கொண்டிருந்தான் என தெஹல்காவின் ரகசிய உளவு கேமராவில் பதிவாகியுள்ள ரிச்சர்ட் மற்றும் ரதோட் ஆகிய இருவரும் கூறினார்கள். கோடானியின் நம்பிக்கைக்குரியத் தளபதியும் பிஜேபின் உறுப்பினருமான பிபின் பன்ஜல் என்பவனும், வெறியோடு ஆயுதம் தாங்கிய தனது ஆதாரவாளர்களுடன் அங்கு வந்திருந்தான். பஜ்ரங்கியும், மாநில விஹெச்பி பொதுச் செயலாளரான ஜெய்தீப் பட்டேலும் இப்படுகொலை சம்பவங்கள் நடந்தேறிய நேரம் முழுவதும் தொலைபேசியுடன் உரையாடிய வண்ணம் இருந்தனர். ஆனால் பட்டேல் சதித் திட்டத்திலும் பங்கெடுத்தானா? என்பது பற்றி பஜ்ரங்கி ஏதும் தெரியப்படுத்தவில்லை. இருந்தாலும், படுகொலைகளின் எண்ணிக்கை குறித்த விபரங்கள் அவ்வப்போது பட்டேலுக்குத் தகவல் சொன்னதாகக் கூறினான். நரோடா காவுன் படுகொலை வன்முறையின் போது உயிர் தப்பியப் பலரும், நரோடா வன்முறை கும்பலுக்கு பட்டேல் தான் தலைவனாக இருந்தான் எனத் தெரிவித்தனர்.

நன்றி பதிவர்: இறை நேசன் http://copymannan.blogspot.com/2007/11/1.html

No comments: