தமிழ் அரங்கம்

Monday, December 3, 2007

தமிழ் தேசியம் என்பது வேறு, புலித்தேசியம் என்பது வேறு

பி.இரயாகரன்
03.12.2007

புலியெதிர்ப்போ இதை ஒன்றாகவே பார்க்கின்றது. புலிகளும் கூட இதை ஒன்றாகவே காட்டுகின்றனர். மார்க்சியவாதிகள் இதை வேறுவேறாக காண்கின்றனர். இதனால் மட்டும் தான், மார்க்சியவாதிகள் மக்களைச் சாhந்து நிற்க முடிகின்றது. தனிப்பட்ட நான் என்ற தனிமனித தனமல்ல, மக்களைச் சார்ந்து நிற்பது. இரண்டும் வேறு என்ற அடிப்படையிலான அரசியல் அம்சம் தான், மக்களைப் பற்றி எம்மை பேச வைக்கின்றது.

இரண்டும் ஒன்று என்ற அம்சம், மக்களைப்பற்றி சிந்திக்க வைப்பதில்லை. இதுவே எதார்த்தமான உண்மை. தேசியத்தை புலிகள் ஊடாகப் பார்க்கின்ற புலியெதிர்ப்பு வாதம், இரண்டும் பிரதான மக்கள் விரோத நிலையை இயல்பாகவே எடுக்கின்றது.

1. மக்களின் உண்மையான தேசியத்தை முன்னெடுக்க அது தானாகவே மறுக்கின்றது.

2. மக்களையும் புலிகளையும் ஒன்றாக்கி, மக்களை எதிர் நிலைக்கு தள்ளிவிடுகின்றது.

இதற்குள் தான் இன்று புலியெதிர்ப்பு அரசியல் உள்ளது. இல்லையென்று யாராலும் சொல்ல முடியாது, நிறுவவும் முடியாது.

ராகவன் பேசும் புலியெதிர்ப்பு அரசியலைப் பாருங்கள் 'தமிழ் சிங்கள தேசியவாதம் இரண்டும் அதன் அரசியல் தளத்தில் ஒன்றல்ல. ஆனால் கருத்தியல் நோக்கில் ஒன்றாக இருக்கிறது. சிங்கள தேசியவாத கற்பிதத்தின் அதே தளத்தில் தான் தமிழ் தேசியவாதமும் கட்டப்பட்டிருக்கிறது. தேசியம் கற்பிதம் என்பதற்கான கருத்து தேசிய இனமாக கற்பனை பண்ணுவதே. தமிழன் என்பதற்கான அடையாளம் என்பது என்ன என்பதை ஆழ்ந்துநோக்கினால் அது புரியும். சாதிய படிமுறையை கற்பிதம் என கூறுவது அபத்தம். சாதி உருவாக்கப்பட்டது. ஆனால் அது கற்பிதமல்ல." என்கின்றார்.

'அரசியல் தளத்தில் ஒன்றல்ல. ஆனால் கருத்தியல் நோக்கில் ஒன்றாக இருக்கிறது" இது என்ன? கருத்துக்கு வெளியில் அரசியல், அரசியலுக்கு வெளியில் கருத்து. அபத்தத்திலும் அபத்தம். இதையே திரோக்கியம் பேசும் தேசம்நெற் சேனனும் சொன்னார்.

என்ன அரசியல் ஒற்றுமை. இதையே சேனன் ராகவனுடன் உடன்படுவதாக கூறினார். 'சிங்கள தேசியவாத கற்பிதத்தின் அதே தளத்தில் தான் தமிழ் தேசியவாதமும் கட்டப்பட்டிருக்கிறது" என்பது, தேசியத்தை கொச்சைப்படுத்துவது. இங்கு சிங்கள தேசியம் உருவாக்கப்படவில்லை. சிங்கள பேரினவாதம் தான் உருவாக்கப்பட்டது. கற்பித்தல் என்ற வார்த்தையே தவறானது. இல்லாத ஒன்றை கற்பித்தால் மட்டும் தான், அது கற்பிதம். சிங்கள பேரினவாதம் கற்பிக்கப்படவில்லை, மாறாக அது சமூக பொருளாதார பண்பாட்டு கூறுகளாகவே எதார்த்தத்தில் உள்ளது. இதில் இருந்து முற்றாகவே சிங்கள தேசியம் வேறுபட்டது. சிங்கள தேசியம் என்பது, தமிழ் தேசியத்துக்கு எதிரானதாக இருப்பதில்லை. மாறாக அது இலங்கை தேசியமாக பரிணாமிக்கும்.

அது உள்ளடக்க ரீதியாக ஏகாதிபத்திய எதிர்ப்புத் தன்மை கொண்ட தேசியமாகவே அமையும். உண்மையான தேசியம், தமிழ் சிங்கள ஐக்கியத்தைக் கொண்டுவரும். சரியான தமிழ் தேசியம் கூட, சிங்கள மக்களின் உரிமைகளையும் அங்கீகரித்து தனது போராட்டத்தை அவர்களுடன் சேர்ந்து வலுப்படுத்தும். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் ஒரு நிலையில் தான், இனங்களுக்கு இடையில் ஐக்கியம் என்பது இயல்பானதாக அமையும். இல்லாத தளத்தில், அங்கு இன ஒடுக்குமுறை தான் இருக்கும்.

'தமிழ் தேசியவாதமும் கட்டப்பட்டிருக்கிறது. தேசியம் கற்பிதம் என்பதற்கான கருத்து தேசிய இனமாக கற்பனை பண்ணுவதே" என்பதே தவறானது. சிங்கள பேரினவாதம், தமிழ் தேசிய வாதத்தை உருவாக்கவில்லை. மாறாக தமிழ் இனம் ஒரு தேசமாக, தேசியமாக இருந்தனர், இருக்கின்றனர் என்பதே உண்மை. தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமாக இருந்தனர். ராகவன் கூறுவது போல் 'தேசிய இனமாக கற்பனை பண்ணுவதே" என்பது, இல்லாத பொய்மைகள் மேல் அல்ல. வெறும் கற்பனையாக, எதுவுமற்ற பொய்மைகள் அல்ல. மாறாக தமிழ் இனம் தேசமாக, தேசிய இனமாக இருந்தனர், இருக்கின்றனர் என்பதே உண்மை. ஒரு நாட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட இனங்கள் சேர்ந்து இருக்கமுடியும் என்ற எல்லைக்குள் வாழ்ந்தவர்கள் தான், தமிழ் மக்கள். இப்படி இணங்கி வாழமுடியாதவாறு சிங்கள பேரினவாதம் நிர்ப்பந்தித்த போதுதான், சிறுபான்மை தேசியவாதமாக ஒரு போராட்டம் மேலெழுகின்றது. இது கற்பிதமாக கட்டமைக்கப்பட்டதல்ல. குறிப்பாக பிரபாகரனின் கற்பனையான கற்பிதமல்ல.

இதுபோல் சிறுபான்மையினத்தின் கற்பனையோ, கற்பிதமோ அல்ல. மாறாக ஒடுக்குமுறைக்கு எதிரான மக்களின் போராட்டம்.

ராகவன் கூறுவதைப் பாருங்கள் 'சாதிய படிமுறையை கற்பிதம் என கூறுவது அபத்தம். சாதி உருவாக்கப்பட்டது. ஆனால் அது கற்பிதமல்ல." இந்த வாதம் புலியெதிர்ப்பின் மொத்த அரசியல் தளத்தையும், நகைச்சுவையாக்கி விடுகின்றது. தேசியம் கற்பிதம் என்றால், சாதியமும் கற்பிதம் தான். சாதியம் உருவாக்கப்பட்டது என்றால், தேசியமும் அப்படி உருவாக்கப்பட்டது தான். சாதியம் கற்பிக்காது உருவாக்கப்பட்டது என்றால், சாதியத்தை பாதுகாக்கின்ற சராத்தையே அரசியல் ரீதியாக பிரதிபலிக்கின்றது.

இங்கு கற்பிதம் என்பதும், உருவாக்கப்பட்டது என்பதும், அரசியல் ரீதியாக கேலிக்குரியது. யாரும் எதையும் கற்பிக்கவோ, உருவாக்கவோ முடியாது. மாறாக அவை பொருள் வகைப்பட்ட சமூக உறவுகளால் ஆனது. இது திடீரென யாரும் உருவாக்கவோ, கற்பிக்கவோ முடியாது. அது போல் நீக்கவும் முடியாது.

சாதியம் என்ற பொருளாதார உறவுகள் உருவான பின்பு தான், அது சாதியமாகின்றது. தேசியம் என்ற பொருளாதார உறவுகள் உருவான பின்பு தான், அது தேசியமாகின்றது. இது இயல்பான சமூக பொருளாதார முரண்பட்ட சமூக ஒட்டத்தில் உருவாகின்றது.

இதை வெற்றிடத்தில் கற்பிக்கவும் முடியாது. இதை வெற்றிடத்தில் உருவாக்கவும் முடியாது.

1 comment:

sukan said...

உங்கள் கட்டுரையை படித்ததில் மகிழ்ச்சி.

//'தமிழ் சிங்கள தேசியவாதம் இரண்டும் அதன் அரசியல் தளத்தில் ஒன்றல்ல. ஆனால் கருத்தியல் நோக்கில் ஒன்றாக இருக்கிறது. சிங்கள தேசியவாத கற்பிதத்தின் அதே தளத்தில் தான் தமிழ் தேசியவாதமும் கட்டப்பட்டிருக்கிறது. தேசியம் கற்பிதம் என்பதற்கான கருத்து தேசிய இனமாக கற்பனை பண்ணுவதே. தமிழன் என்பதற்கான அடையாளம் என்பது என்ன என்பதை ஆழ்ந்துநோக்கினால் அது புரியும். சாதிய படிமுறையை கற்பிதம் என கூறுவது அபத்தம். சாதி உருவாக்கப்பட்டது. ஆனால் அது கற்பிதமல்ல."//

தேசியவாதம் என்பது எப்போதும் கற்பிதமாக முடியாது. அது கருத்து ரீதியாக மட்டுமின்றி உணர்வு ரீதியாகவும் வாழும் ஒன்று.

தான் இன்ன தேசிய இனம் என்பது வாழும் பிரதேசம் பேசும் மொழி போன்ற வாழ்வியல் தேவைகளை பூர்த்தி செய்யும் தேவைசார்ந்த விடயங்களின் இருப்பு மீதான நம்பிக்கை சார்ந்தது. அதை கற்பிதம் என்பதற்குள் அடக்கி விட முடியாது.

சாதியின் தேவைகள் என்பது தேசியவாதத்தின் தேவைகளுடன் சரிசமனான தேவையாக அக புற நிலைகளில் இருக்க முடியாது மாறாக அவற்றில் ஆதிக்கம் செலுத்த முடியும்.

தமிழனுக்குள் சாதி இருக்கலாம் சாதிக்குள் தமிழன் இருப்பது என்பது அக புறநிலையில் சமன் படாது. தமிழனை வெள்ளாளன் என்று அடயாளப்படுத்த முடியாது. தமிழன் வாழும் பிரதேசத்தை வெள்ளாளன் வாழும் பிரதேசம் என்று அடயாளப்படுத்த முடியாது மாறாக அவன் ஆதிக்கம் செலுத்தும் பிரதேசம் எனலாம் அதே நேரம் என்னுமொரு சாதி அடிமைப்பட்டிருக்கும் பிரதேசம் எனலாம் இருந்தும் அதை வலுப்படுத்த இருசாதிகளோ அல்லது இரு தட்டு வர்க்கபிரிவின் பிரச்சனைகள் மட்டும் இருப்பதில்லை.

புறநிலையில் இருந்து தமிழினத்தை நோக்கும் போது தமிழினம் என்றுதான நோக்க முடியும் அகநிலையில் தமிழனுக்குள் சாதியம் வலுவாக இயங்கிக்கொண்டிருக்கும்.

இந்த புறநிலை என்பது சாதாரணமான ஒன்று அல்ல. சிங்களம் என்பது புறநிலை. சிங்களம் தமிழன் என்றுதான் நோக்குகின்றது. புறநிலையில் சிங்களம் தமிழன் என்று நோக்கும் போது அகநிலையில் உள்ள முரண்பாட்டு நிலைகளை மேவிக்கொண்டு தமிழ் தேசியவாதம் மேன்நிலைக்கு வருகின்றதை யதார்த்தத்தில் காண்கின்றோம்.

ராகவனின் குறிப்பிட்ட கருத்து அகநிலையில் உள்ள முரண்பாட்டு இயக்கத்தை தமிழினத்துக்கு அடயாளப்படுத்த முற்படுகின்றது. தேசியவாதம் ஒரு கற்பிதம் என்பதினூடாக அகபுற நிலைகளில் இனத்தின் இயங்கு சக்தியை நிர்மூலமாக்கவே இது வழிசெய்யும். இந்த நிர்மூலத்துக்குகள் அகநிலை முரண்பாடுகளுக்கு விடுதலைகிடைக்காது ஏனெனில் அப்படி ஒரு தேவை இருப்பதற்கு இனம் இருக்காது.

அகநிலையில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு அவசியம். அந்த தீர்வுக்காக புற நிலையில் உள்ள பூதங்களின் வாய்குள் சென்றுவிட முடியாது.