தமிழ் அரங்கம்

Wednesday, April 2, 2008

நெல்லுக்கு ஆதாரவிலை பிச்சையல்ல, உரிமை!


நெல்லுக்கு ஆதாரவிலை
பிச்சையல்ல, உரிமை!

கோதுமைக்குத் தரப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலையை, ஒரு குவிண்டாலுக்கு ரூ. 1,000/ என உயர்த்தி நிர்ணயித்திருக்கும் மைய அரசு, நெல் விலையை நிர்ணயிப்பதில் மாற்றந்தாய் மனப்போக்குடன் நடந்து கொண்டுள்ளது. 199495 ஆண்டு வரை, நெல்லுக்கும் கோதுமைக்குமான குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிப்பதில் எவ்வித வேறுபாடும் இருந்தது கிடையாது. அதன்பிறகு, அவற்றின் ஆதரவு விலைகளை நிர்ணயிப்பதில் வேறுபாடு காட்டப்படுவது தொடங்கி, இன்று இந்த விலை வேறுபாடு ரூ. 255/ ஆக அதிகரித்து விட்டது.

இந்த ஆண்டு ஒரு குவிண்டால் சன்னரக நெல்லுக்கான ஆதரவு விலை ரூ. 675/; மோட்டாரக நெல்லுக்கான ஆதரவு விலை ரூ. 645/ என்றுதான் மைய அரசால் நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு மேல் ஊக்கத் தொகை வழங்கவும் மறுத்துவிட்டது, மைய அரசு. தமிழக விவசாயிகள் ஒரு குவிண்டால் நெல்லுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ. 1,000/ தர வேண்டும் எனக் கோரி வருவது தி.மு.க.வுக்குத் தெரிந்திருந்தும் கூட, மைய அமைச்சரவை நெல்லுக்கு மிகவும் குறைவாக ஆதரவு விலையை நிர்ணயித்ததை அக்கட்சி எதிர்த்துப் பேசவில்லை.

தமிழக விவசாயிகள் மைய அரசின் இந்த முடிவை எதிர்த்துப் போராட்டத்தில் இறங்கிய பிறகு, தமிழக முதல்வர் மு.க., மைய அரசுக்குக் கடிதம் எழுத, அதனைத் தொடர்ந்து, மைய அரசு ஏதோ பிச்சை போடுவது போல, இரண்டு தவணைகளில் ஆதரவு விலையை ரூ. 100/ உயர்த்தி, சன்னரக நெல்லுக்கு ரூ.775/ மோட்டா ரக நெல்லுக்கு ரூ.745/ என விலை நிர்ணயம் செய்தது.

இதற்கு மேல் மைய அரசிடமிருந்து ஒரு பைசாகூடப் பெயராது எனத் தெரிந்து கொண்ட மு.க., தமிழக நெல் விவசாயிகளின் அதிருப்தியைப் போக்குவதற்காக, கூடுதல் ஊக்கத் தொகையாக ஐம்பது ரூபாய் தமிழக அரசின் சார்பில் அளிக்கப்படும் என அறிவித்திருக்கிறார்.

ஒரு குவிண்டால் நெல்லுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ. 1,000/ தர வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை, அநியாயமானதோ, தான்தோன்றித்தனமானதோ அல்ல. விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் பற்றி ஆராய்வதற்காக வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையில் மைய அரசினால் அமைக்கப்பட்ட தேசிய கமிசன் ஒரு குவிண்டால் நெல்லுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ. 1,400/ தரப்பட வேண்டும் எனப் பரிந்துரை செய்திருக்கிறது. கோதுமை உற்பத்திக்கு ஆகும் செலவைவிட, நெல் உற்பத்திக்கு ஆகும் செலவு அதிகமானது என்பதை மைய அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது. இதற்குப் பிறகும், மைய அரசு நெல் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கத் துணிகிறது என்றால், மன்மோகன் சிங் கும்பலை எதைக் கொண்டு அடிப்பது?

இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த வே.துரைமாணிக்கம் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டியின் பரிந்துரையின் படியும்; தமிழக வேளாண்மைத் துறையின் கணக்கீட்டின்படியும் ஒரு ஏக்கர் நிலத்தில் நெல் உற்பத்தி செய்வதற்கு ஆகும் சராசரி செலவு ரூ. 14,689/ என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விளைச்சல் நன்றாக இருந்தால் ஒரு ஏக்கர் நிலத்தில் அதிகபட்சமாக 1,800 கிலோ மகசூல் கிடைக்கும். இம்மகசூல் அனைத்தையும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு விற்றால் கூட ரூ.14,300/ லிருந்து ரூ.15,000/ வரைதான் கிடைக்கும். நெல்லை விற்றுக் கிடைக்கும் வரவு, உற்பத்திச் செலவை ஈடுகட்டக்கூடப் போதாது என்றால், விவசாயிகள் நெல் விவசாயம் பார்ப்பதைவிட, நிலத்தைத் தரிசாகவே போட்டு விடலாம்.

இந்தியாவில் 4.4 கோடி ஹெக்டேர் பரப்பளவில் விளையும் நெல் மகசூல் அனைத்தையும் மைய அரசே கொள்முதல் செய்வது கிடையாது. தமிழகத்தில் விளையும் நெல்லில் காணப்படும் ஈரப்பதத்தைக் காட்டியே, தமிழக விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதைத் தட்டிக் கழித்து வருகிறது, மைய அரசு. எனவே, நெல் விவசாயிகளுக்குத் தங்களின் விளைச்சலைத் தனியாரிடம் விற்பதைத் தவிர வேறுவழியில்லாமல் போய் விடுகிறது. விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யும் தனியார் கமிசன் ஏஜெண்டுகள், குறைந்தபட்ச ஆதரவு விலை கொடுத்து வாங்குவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. எனவே, நடைமுறையில் நெல் விவசாயிகளுக்கு ஏற்படக்கூடிய நட்டம், புத்தக மதிப்பீட்டைவிட அதிகமாகவே இருக்கும்.

கந்துவட்டிக் கடனில் மூழ்கிப் போன விவசாயிகளின் எண்ணிக்கையில், தமிழகம், இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. வேளாண் விளைபொருட்களுக்குக் கட்டுப்படியாகக் கூடிய விலை கிடைக்காமல் இருப்பதனால்தான், விவசாயிகள் கடன் சுமையில் இருந்து மீள முடியாமல் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போகிறார்கள். தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த நெல் விவசாயிகள், குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ. 1,000/ தர வேண்டும் எனக் கோருவதையும், அதற்காகத் தமிழக விவசாயிகள் போராடுவதையும் இந்தச் சூழ்நிலையில் இருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், மைய அரசின் வேளாண்துறை அமைச்சர் சரத்பவாருக்கோ, தமிழக நெல் விவசாயத்தின் அரிச்சுவடி கூடத் தெரியவில்லை.

""நெல்லுக்கு மைய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையை பஞ்சாப் விவசாயிகள் வரவேற்றுள்ளனர்'' எனத் தமிழக விவசாயிகளிடம் கூறி தமிழகத்தையும், பஞ்சாபையும் எதிரெதிராக நிறுத்தியிருக்கிறார், சரத்பவார். அதற்குத் தமிழக விவசாயிகள், ""பஞ்சாபில் கோதுமை, நெல் என இரண்டு பயிர்கள். ஒன்று இல்லாவிட்டாலும், ஒன்றில் கிடைப்பதால் மகிழ்ச்சியாக உள்ளார்கள்'' எனப் பதிலடி கொடுத்துள்ளனர்.

""தமிழ்நாட்டில் மூன்று போகம் நெல் சாகுபடி நடப்பதாக''க் கூறித் தனது முட்டாள்தனத்தை வெளிக்காட்டிக் கொண்ட சரத்பவார், ""விவசாயத் துணைத் தொழில்களான கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபட்டால், நல்ல வருமானம் கிடைக்கும்'' என்ற "அரிய' ஆலோசனையை எடுத்துக் கூறி பிரச்சினையை திசை திருப்பியிருக்கிறார்.

""மீன் வளர்க்க மின்சாரத்துக்கு எங்கு போவது? யூனிட் 6 ரூபாய் வசூலிக்கிறார்கள். இலவசமாக மின்சாரம் கிடைக்குமா?'' என விவசாயிகள் கேட்டதில் மூக்குடைந்து போன அமைச்சர், ""நீங்கள் இப்படிக் கூடுதல் விலை கேட்டால், குறைந்த விலைக்கு எப்படி அரிசி கொடுக்க முடியும்?'' எனக் கேட்டு, விவசாயிகளைப் பொதுமக்களின் வில்லனாகக் காட்ட முயலுகிறார்.

ஒரு குவிண்டால் நெல்லுக்கு 250 ரூபாய் கூடுதலாகக் கொடுப்பதை மறுப்பதற்கு ஆயிரத்தெட்டு காரணங்களை அடுக்கும் சரத்பவார், புளுத்துப் போன கோதுமையை, அந்நிய நாடுகளில் இருந்து அநியாய விலைக்கு இறக்குமதி செய்வதற்கு எவ்விதத் தயக்கமும் காட்டியதில்லை. இந்த இறக்குமதியை எதிர்த்து வந்த கோதுமை விவசாயிகளின் கோபத்தைத் தணிப்பதற்காகத்தான், கோதுமையின் ஆதரவு விலையை ரூ. 1000/ என மைய அரசு அறிவித்திருக்கிறது.

""நெல்லுக்கு ஆதரவு விலை ரூ.1000/ கொடுத்தால், மக்களுக்குக் குறைந்த விலையில் எப்படி அரிசி கொடுக்க முடியும்?'' எனக் கேட்கிறார் சரத்பவார். ஆனால், பிரதமர் மன்மோகன் சிங்கோ, ""மக்களுக்குக் குறைந்த விலையில் அரிசியையும், கோதுமையையும் ஏன் வழங்க வேண்டும்?'' எனக் கேட்கிறார். ""மைய அரசு மக்கள் நலத் திட்டங்களுக்காக ரூ. 1 இலட்சம் கோடி ரூபாய் மானியமாக வழங்குவதாகவும்; இம்மானியம் முழுமையாக மக்களைச் சென்றடையவில்லை என்பதால், இம்மானியங்களை விரைவில் ஒழித்துவிட வேண்டும்'' என்ற அரிய ஆலோசனையை சமீபத்தில் கூறியிருக்கிறார், மன்மோகன் சிங்.

மூட்டை பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்தச் சொல்லும் முட்டாள்தனம்தான் இது. பொது மக்களுக்கு ரேசன் கடைகளின் மூலம் மானிய விலையில் அரிசியும், கோதுமையும் வழங்கத் தேவையில்லை என்றால், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கொடுத்து, நெல்லையும், கோதுமையையும் மைய அரசு வாங்க வேண்டியதில்லை என்பதுதான் பொருள்.

""மானியங்களை அடியோடு ஒழிக்க வேண்டும்'' என்ற பொருளாதாரக் கொள்கை ஆட்சியில் இருக்கும்வரை, கோதுமைக்கு ரூ.1,000/ கிடைத்துவிட்டது எனக் கோதுமை விவசாயிகள் நிம்மதியடைந்து விடவும் முடியாது; இன்றில்லாவிட்டால் நாளை, நெல்லுக்கும் 1,000 கிடைத்துவிடும் என நெல் விவசாயிகள் காத்துக் கிடக்கவும் முடியாது.

தாராளமயம் விவசாயிகளின் கழுத்துக்குக் கத்தியாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது. தமிழக அரசு நடத்தி வந்த நெல் கொள்முதலை முந்தைய அ.தி.மு.க. ஆட்சி கைவிட்டதற்கும்; தற்போதைய தி.மு.க. ஆட்சி அதனை மீண்டும் கொண்டுவர மறுப்பதற்கும் தாராளமயம்தான் காரணம்.

தமிழகத்தில் முன்பு 70 இலட்சம் ஏக்கரில் நடந்துவந்த நெல் சாகுபடி தற்பொழுது 55 இலட்சம் ஏக்கராகச் சுருங்கி விட்டதாகக் கூறப்படுகிறது. நெல்லுக்குக் கட்டுப்படியாகக் கூடிய விலை கிடைக்கவில்லை என்றால், நெல் சாகுபடி பரப்பு மேலும் சரிந்து வீழ்வதைத் தடுக்க முடியாது. தமிழக மக்களின் ஆதார உணவுப் பயிரான நெல் சாகுபடியைப் பாதுகாக்க வேண்டும் என்றால், அந்நிய மூலதனத்திற்காக பாரம்பரிய உணவுப் பயிர் விவசாயத்தைக் புறக்கணிக்கும் தாராளமயத்தை எதிர்த்துப் போராடுவது தவிர்க்க முடியாதது!

·ரஹீம்

1 comment:

ஏகலைவன் said...

வணக்கம் தோழரே!,

இப்பதிவிற்கு சற்றும் சம்பந்தமில்லாத மறுமொழியாக இது இருக்கலாம், ஆனால் இது நமக்கு வெகுவாக சம்பந்தப்பட்டதாகவும் இருப்பதனால் இதனை இப்பதிவில் வைக்கிறேன். நீங்கள் இதனை பதிப்பிக்கவேண்டிய அவசியம் இல்லை.

முன்டாசுக்கவிஞன் என்று உணர்ச்சிப் பெருக்குடன் நம் முன் உருவகப்படுத்தப்பட்ட பாரதியை, அவனது அந்த முன்டாசுக்குள் மூடிவைக்கப்பட்டிருந்த பார்ப்பனக் குடுமியையும், தேசிய விடுதலை பாடல்கள் என்ற போர்வைக்குள் அவன் மறைத்துவைத்திருந்த‌ ஆரிய விடுதலைப் புராணங்களையும் அனைவருக்கும் திறந்துகாட்டியவர் வே.மதிமாறன். இது நடைபெற்று சுமார் 7 ஆண்டுகள் கடந்துவிட்டது. அதற்கு இதுவரை சரியான விமர்சனங்கள் எதுவும் முன்வைக்கப்படாத மந்தமான சூழ்நிலையே இருக்கிறது.

ஆனாலும், இன்னும் பாரதியின் துதிபாடல்கள் நின்றபாடில்லை. அது ஏதோ பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் கும்பலால் நிகழ்த்தப்படுகிறது தொலைந்து போகட்டும் என்று விட்டுவிடவும் முடியவில்லை. ஏனென்றால் அதை நிகழ்ததிக்கொண்டிருப்பது முற்போக்குக் கூடாரம். இரட்டை வேடமே தனது கொள்கையாக வடித்து வைத்துக்கொண்டு போலிக் கம்யூனிசம் பேசித்திரியும் சி.பி.ஐ/எம் கட்சிகளும் அதன் வெகுஜன அமைப்புகளான த.மு.எ.ச. போன்ற அமைப்புகளும் இதனை முன்னின்று நடத்திக்கொண்டிருக்கின்றன.

மதிமாறனுடைய ''பாரதி'ய ஜனதா பார்ட்டி'' நூலைப்பற்றிய மதிப்பீடுகளைச் செய்யாமலேயே, அந்நூலுக்கான கண்டனக் கூட்டங்களையும் நடத்தி தன்னுடைய பார்ப்பன சேவகத்தை செவ்வனே செய்துமுடித்தன த.மு.எ.ச.வின் பெருந்தலைகள்.

இப்போதும் கூட ஒரு நூல் வெளியீட்டுவிழாவில் த.மு.எ.ச.வின் ஆதவன் தீட்சன்யாவிடம் இதுகுறித்தான ஒரு கேள்வி முன் வைக்கப்பட்டது. "பாரதி குறித்த உங்கள் மதிப்பீடு என்ன?" என்பதுதான் அந்த கேள்வி. கீற்று என்ற இணையதள நிர்வாகி மிணர்வா என்பவர் இந்தக் கேள்வியை சில நூறுபேர் குழுமியிருந்த அந்தச் சபையில் வைத்தார்.

அதற்கு அவர் அளித்த பதிலின் சாரம் இதுதான் "நாங்கள் பாரதிதாசனை விமர்சித்து கட்டுரையொன்றை எமது 'புதுவிசை'யில் வெளியிட்டுவிட்டோம்" என்பது அவருடைய பதில். (இன்னும் நான் முழுமையாக வாசிக்கவில்லை, பிறகு சொல்கிறேன் என்றெல்லாம் நிறைய சப்பைக்கட்டுகளும் அவரது பதிலில் இடம்பிடித்திருந்தன) பாரதியைப்பற்றிக் கேட்டால் பாரதிதாசனைக்காட்டுவதுதான் இவர்களது முற்போக்கா?

மாபெரும் தலித் எழுத்தாளர் என்று தன்னைத்தானே சொல்லிக்கொள்ளும் இந்த முற்போக்கு வேடதாரி, பாரதியை ஆதரிக்கிறாரா, எதிர்க்கிறாரா, என்று கூட சொல்லமுடியாத இரட்டைநிலையில் இருந்து கொண்டு சாதியத்திற்கு எதிராக எதைக் கிழித்துவிடமுடியும்? என்பதுதான் நமது கேள்வி.

சரி அவரது 'புதுவிசை'யில் இதுகுறித்து எழுதப்பட்டுள்ளதுதான் என்ன? இந்த விவாதம் மீண்டுமொருமுறை தொடங்கப் பட்டுள்ளது என்னுடைய வலைதளத்தில். தாங்களும் இதில் கலந்து கொண்டு விவாதிக்க அழைக்கிறேன்.

நன்றி!
தோழமையுடன்,
ஏகலைவன்.