தமிழ் அரங்கம்

Thursday, April 3, 2008

அதிகார வர்க்கத்தைப் பணிய வைத்த மக்கள் போராட்டம்

அதிகார வர்க்கத்தைப் பணிய வைத்த மக்கள் போராட்டம்

ஞ்சாவூரில், மருத்துவக் கல்லூரி சாலையிலிருந்து மானோஜிப்பட்டி, ஈஸ்வரி நகருக்குச் செல்லும் அனைத்து சாலைகளும் பாதாள சாக்கடைத் திட்டத்திற்காகத் தோண்டப்பட்டு கடந்த மூன்றரை ஆண்டுகளாகச் சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாகிக் கிடக்கின்றன. அடித்தள உழைக்கும் மக்கள் வாழும் இப்பகுதியிலிருந்து வேலைக்குச் செல்வோர், வியாபாரத்துக்குச் செல்வோர், பள்ளிகல்லூரிகளுக்குச் செல்வோர், ""மினி'' பேருந்துகள், ஆட்டோக்கள் என எப்போதும் பரபரப்பாகக் காணப்பட்ட இச்சாலைகள் இப்போது வெறிச்சோடிக் கிடக்கின்றன. மழைக்காலங்களில் வெளியுலகத் தொடர்பின்றி இப்பகுதி தனித்தீவாகத் தத்தளிக்கிறது.

உலக வங்கியிடம் கடன் பெற்று செயல்படுத்தப்படும் இப்பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவடைந்துவிட்டதாக அறிவித்து அமைச்சர் ஸ்டாலினை வைத்து திறப்பு விழாவும் நடத்தி விட்டது, தஞ்சை நகராட்சி. ஆனால், மேட்டுக்குடியினர் வாழும் பகுதிகளில் மட்டும் சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளனவே தவிர, அடித்தள மக்கள் வாழும் பகுதிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன.

சாலை சீரமைக்கப்படாததால் இரண்டு கி.மீ. தூரம் சுற்றிச் சென்று அல்லற்பட்ட மானோஜிப்பட்டி மக்கள், கையெழுத்து இயக்கம் நடத்தி மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையர், அமைச்சர்கள் என அனைவருக்கும் மனு கொடுத்து ஓய்ந்து போயினர். பின்னர் அதிரடியாக நாற்று நடும் போராட்டத்தை நடத்தி, கவனத்தை ஈர்த்துப் பார்த்தனர். அதிகாரிகளோ போதிய நிதியில்லை என்று சொல்லியே தொடர்ந்து இழுத்தடித்து வந்தனர். இப்பகுதியில் இயங்கும் ம.க.இ.க; பு.மா.இ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள், இளைஞர்களை அணிதிரட்டி சாலை மறியல் போராட்டம் நடத்த ஏற்பாடுகளைச் செய்து வந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகளும் இதர அமைப்புகளும் இதில் இணைந்து கூட்டியக்கமாக முன்னேறியது.

இக்கூட்டியக்கத்தின் மூலம் தெருமுனைக் கூட்டங்கள், துண்டுப் பிரசுரம்சுவரொட்டிகள் , ஆட்டோ பிரச்சாரம் என முழுவீச்சில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு சாலை மறியல் போராட்டத்துக்கு மக்கள் அணிதிரட்டப்பட்டனர். இப்பிரச்சார இயக்கத்தின் வீச்சையும் மக்களின் பேராதரவையும் கண்டு அரண்டு போன மாவட்ட போலீசு கண்காணிப்பாளர், சாலைமறியல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்ளூர் தொலைக்காட்சிகள் மூலம் எச்சரித்தார். உளவுத்துறை போலீசார் போராட்டத்தை நிறுத்தச் சொல்லி முன்னணியாளர்களை மிரட்டிப் பார்த்தனர்.

இவற்றையெல்லாம் துச்சமாக மதித்து, திட்டமிட்டபடி 19.1107 அன்று சாலை மறியலுக்காக உழைக்கும் மக்கள் பேரணியாகப் புறப்பட்டு முன்னேறியதும், கைது செய்ய வந்த போலீசு, பெரும் மக்கள் திரளைக் கண்டு பீதியடைந்து, அதிகாரிகளை அழைத்து வந்து பேச்சு வார்த்தை நடத்தியது. விண்ணதிரும் முழக்கங்களுடன் போர்க்குணத்தோடு அணிதிரண்ட மக்கள்திரளிடம் மண்டியிட்ட அதிகார வர்க்கம், உடனடியாக கிராவல் மண்கொட்டி சாலைகளைச் சீரமைப்பதாகவும், ஜனவரி 30ஆம் தேதிக்குள் தார்ச்சாலைகளை அமைப்பதாகவும் போராட்டக் குழுவினரிடம் எழுத்துபூர்வமாக உறுதியளித்தது. அதன்படி நகராட்சி, மறுநாளே சாலை சீரமைப்புப் பணிகளை தொடங்கியது.

மக்கள் திரளின் போர்க்குணமிக்க போராட்டங்களின் மூலமே எருமைத் தோல் அதிகார வர்க்கத்தை அடிபணிய வைக்க முடியும் என்பதை மானோஜிப்பட்டி மக்களின் போராட்ட வெற்றி மீண்டும் நிரூபித்துக் காட்டுகிறது.

பு.ஜ. செய்தியாளர்கள், தஞ்சை.

No comments: