தமிழ் அரங்கம்

Thursday, May 22, 2008

மக்கள் சக்தி எழுந்தது! சிறப்புப் பொருளாதார மண்டலம் வீழ்ந்தது!

கோவா என்றாலே கடற்கரை, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், கொண்டாட்டங்கள் என்றுதான் நமக்கு அடையாளம் காட்டப்படுகிறது. இந்த முதலாளித்துவச் சித்தரிப்புக்கு மாறாக, இனிமேல் கோவா என்றால் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை விரட்டியடித்த மாநிலம் என்றுதான் நாம் அடையாளம் காண வேண்டும்.

நமது நாடு முழுவதும் இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கெதிராக (சிபொம) இங்கொன்றும் அங்கொன்றுமாகப் போராட்டங்கள் நடைபெற்று வரும் வேளையில், கிராம மக்கள், படித்த நடுத்தர வர்க்கம், பொறியாளர்கள், கிறித்துவ சபை, ஊடகங்கள் என அனைவரும் ஓரணியில் இணைந்து போராடி இந்த வெற்றியைப் பெற்றுள்ளனர். அம்மாநிலத்தில் இதுவரை அனுமதியளிக்கப்பட்ட அனைத்து சி.பொ.ம.க்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், அங்கீகரிக்கப்பட்ட 7 சி.பொ.ம.க்களின் அங்கீகாரமும் இரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன், இனிமேல் சி.பொ.ம.வைப் பற்றிப் பேசவேமாட்டோம் என மாநில அரசை உறுதியளிக்க வைத்திருக்கிறது, இம்மக்கள் எழுச்சி.

உள்ளூர் மக்கள் அனைவரும் சி.பொ.ம. விரோதி மஞ்ச் என்னும் அமைப்பின் கீழும், படித்த நடுத்தர வர்க்கத்தினரும் தொழில் வல்லுநர்களும் கோவா பச்சாவ் அபியான் (கோவாவைக் காப்போம் இயக்கம்) எனும் அமைப்பின் கீழும் திரண்டு போராடினார்கள்.

இப்போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்கள் வெர்னா என்னும் கிராமத்தைச் சேர்ந்த சார்லஸ் பெர்னாண்டஸ், மாண்டிரோ மற்றும் லுத்தோலிம் எனும் கிராமத்தைச் சேர்ந்த ஆலன் ஃபல்லேரியா ஆகிய மூவரும் பொறியாளர்கள். இவர்களுடன் பீட்டர் காமா எனும் ஒப்பந்தக்காரரும் இணைந்து சி.பொ.ம.வை எதிர்த்து இயக்கத்தை நடத்தியுள்ளனர்.
.

No comments: