தமிழ் அரங்கம்

Friday, May 23, 2008

சரப்ஜித் சிங்குக்கு ஒரு நீதி, அப்சல் குருவுக்கு வேறொரு நீதியா?

இந்தியாபாக். இடையேயான உறவு சாண் ஏறினால் முழம் வழுக்கும் வழுக்குப்பாறை போன்றது. உப்புப் பெறாத விசயத்தைக்கூட ஊதிப் பெருக்கி, முட்டல்மோதல் நிலைக்குக் கொண்டுவந்து நிறுத்துவதில் இரு நாட்டு ஆளும் கும்பலும் கை தேர்ந்தவர்கள். அப்படிப்பட்டவர்களுக்கு ""செண்டிமென்டை''த் தூண்டிவிடக் கூடிய பிரச்சினை கிடைத்தால், சும்மா விட்டு விடுவார்களா?


சரப்ஜித் சிங் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர், கடந்த 17 ஆண்டுகளாக பாக்.சிறையில் தூக்குத் தண்டனைக் கைதியாக அடைபட்டுக் கிடக்கிறார். பாக்.இல் உள்ள லாகூர், ஃபைசலாபாத், கஸுர் ஆகிய மூன்று நகரங்களில் 1990 ஆம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்புகளில் 14 பேர் கொல்லப்பட்டனர். சரப்ஜித் சிங்கை பாக். எல்லைக்குள் வைத்துக் கைது செய்த போலீசார், அவருக்கும் இந்தக் குண்டு வெடிப்புகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் குற்றஞ்சுமத்தி, இந்த வழக்கில் அவருக்குத் தூக்குத் தண்டனையும் வாங்கிக் கொடுத்தனர். சரப்ஜித் சிங்கின் மீதான குற்றச்சாட்டு பாக். உச்சநீதி மன்றத்திலும் "நிரூபிக்கப்பட்டு', தூக்கு தண்டனையும் உறுதி செய்யப்பட்டது. பாக். அதிபரால் அவரது கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டு, ஏப்ரல் 1அன்று அவரது தண்டனையை நிறைவேற்றப் போவதாக அறிவிக்கப்பட்டது.

சரப்ஜித் சிங்கைத் தூக்கிலிடும் தேதி திடீரென முடிவு செய்யப்பட்டதற்கு பின்னே, சில வக்கிரமான உண்மைகள் உண்டு. பாக். சிறையில் தூக்கு தண்டனைக் கைதியாக அடைபட்டுக் கிடந்த, இந்தியாவைச் சேர்ந்த காஷ்மீர் சிங்கை மன்னித்து, விடுதலை செய்து, கடந்த மார்ச் 3 அன்று இந்தியாவிற்கு அனுப்பி வைத்தது, பாக்.அரசு. காஷ்மீர் சிங் 35 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறையில் அடைபட்டுக் கிடந்ததால், அவரின் விடுதலையை இரண்டு தரப்புமே, நல்லெண்ணத்தின் அடையாளமாகத் தூக்கி வைத்துக் கொண்டாடின. காஷ்மீர் சிங் இந்தியாவிற்குள் காலடி எடுத்து வைத்த மறுநாளே, தான் பாகிஸ்தானுக்குள் சட்ட விரோதமாக நுழைந்து இந்தியாவிற்காக உளவு பார்த்த உண்மையைப் போட்டு உடைத்தார். இது, இந்தியாவிற்கு தர்ம சங்கடத்தையும், பாகிஸ்தானுக்கு எரிச்சலையும் ஏற்படுத்தியது.
.